பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 4

நிழல்மனங்கள் - சிறுகதை
- ஷைலஜா


நடுநிசியில் போன் 'க்ரீங்க்ரீங்' என்றது. படுக்கையை ஒட்டிய டீபாயில் அது இருந்ததால் தூக்கம் கலைந்து சுதாரித்து ராமதுரை எழுந்துபோய் ரிசீவரை எடுப்பதற்குள், அந்த அறையின் அமைதியைக் கிழிப்பது போல பலமுறை ஒலித்தது.
"ஹலோ?' என்றான் தூக்கக்கலக்கக் குரலுடனேயே, ஒருகை ரிசீவரைப்பிடித்தாலும் இன்னொரு கை சுவற்றில் சுவிட்சைத் தட்டியது. அறையில் வெளிச்சம் பரவியது.

"அதிகம் பேச நேரமில்ல..சொல்லிவை உன் தர்மபத்தினிகிட்ட,. இது மாதிரி எங்களை பத்திரிகையில கன்னாபின்னான்னு எழுதிக்கிட்டே போனா கூடிய சீக்கிரம் உன் பொண்டாட்டி கழுத்தை நடு ரோட்ல சீவிப்போட்டுடுவோம்னு? சொர்ணாம்பாபேட்டை ரவுடிங்ககிட்டயே சவால் விடுறாளா பிரபல பத்திரிகை நிருபர் வர்ஷா ராமதுரை? ஹ ..அது நடக்காதுன்னு சொல்லத்தான் உன் வீட்டு நம்பரை தேடிக்கண்டுபிடிச்சி போன் செய்யுறேன்,.ஆம்மா.."

அதட்டலாய் கூறிவிட்டு எதிர்முனை இணைப்பை துண்டிக்கவும் ராமதுரை,"ஹலோஹலோ யாரது,,யார் நீங்க?" என்று கேட்டுவிட்டு எரிச்சலாய் ரிசீவரைக்கீழே வைத்தான்.

ராமதுரை எதிர்பார்த்ததுதான். என்றாவது ஒருநாள் இப்படி மிரட்டல் வருமென்று சில்நாட்களாகவே ராமதுரை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தான் இப்போது அவன் பயந்ததுபோலவே ஆகிவிட்டது. சட்டென படுக்கையில் வர்ஷாவைத்தேடினான். அங்கு அவள் இல்லை.சுவர்கடிகாரத்தைப் பார்த்தான். மணி, பன்னிரண்டைத் தாண்டி இருந்தது.

'இன்னுமா வர்ஷா வரவில்லை?' தனக்குள் கேட்டுக்கொண்டவன்
படுக்கையில் தலையணைக்குகீழே இருந்த செல்போனை எடுத்தான்.

எண்களை அழுத்திவிட்டுக்காதில் வைத்துக்காத்திருந்தான்
திரும்பத்திரும்ப ;சுவிச்டு ஆஃப்' என்றே தகவல் வந்தது.

'புல்ஷிட்' என்று கத்தினான்.

திரும்ப வந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்.

டில்லியில்மாலை ஐந்துமணிக்குப்பிடித்திருக்க வேண்டிய விமானம் ரத்தாகிவிடவும், இரவு பதினோருமணிக்கே அடுத்த விமானத்தில் டிக்கட் கிடைத்து அதில் பயணம் செய்துகொண்டிருந்தாள் வர்ஷா. தாமதத்தை ராமதுரைக்கு போனில் தகவல் கொடுக்க நினைத்தும், இடைவிடாத பத்திரிகைக்காரர்களின் போன் அழைப்புகளில் அது இயலாமல் போய்விட்டது.

சென்னை வந்ததும் விமான நிலையத்திலிருந்து வாடகைக்காரில் ஏறும் முன்பு போன் செய்தாள், விவரம் கூறியவளுக்கு
"ம்"என்றுமுறைப்பாய் பதில் வந்தது.

அதுகோபம் என்று வர்ஷாவிற்கும் புரிந்தது. கல்யாணமாகிஐந்துவருடப்பழக்கத்தில் அவள் ராமதுரையை நிறையப்புரிந்து கொண்டிருந்தாள்.
பெண்பார்க்க வந்தபோதே தனிமையில் சந்தித்து தனக்குப் பத்திரிகைத் துறையில் மிகவும் ஆர்வம் என்பதால் ஜர்னலிசம் படித்ததாயும் பத்திரிகை நிருபராய் வேலைபார்ப்பதாகவும் வர்ஷா கூறியபோது ராமதுரை உடனேயே,"வாவ்!" என்றான்.

தொடர்ந்து," இந்தகாலத்துப்பெண்கள் சாஃப்ட்வேர்துறையில் ஆர்வமாய் இருக்கும்போது நீ மட்டும் இப்படி பத்திரிகைத்துறையில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பது எனக்கு எவ்வளோ பெருமையாய் இருக்கு தெரியுமா? ரியலி ஐ லை இட்"என்று புகழ்ந்தான்.

ஒரு உணர்ச்சிகரமான நேரத்தில் வெளிப்பட்ட உணர்ச்சிகரமான பேச்சு தான் மனதினின்று வந்ததல்ல அது என்பதை கல்யாணமான ஒரேவருஷத்தில் வர்ஷா புரிந்துகொண்டாள்.

வர்ஷாவின் திறமையை தன் வியாபாரத்தில் புகுத்திக்கொள்ள ராமதுரை விரும்பினான். ஆனால்வர்ஷா ," ராம்! உ ங்களோட வியாபாரத்துக்கு என்னைப்போல உள்ள பெண்களின் மூளைக்கு வேலை இல்லை…பிசினஸ் பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை சார்ந்தது.அதில் யுத்தி ஆதிக்கம் செய்யும் புத்தி அல்ல.ஆனா நான் பார்க்கும் பத்திரிகை நிருபர் வேலைல சாலஞ்ச் அதிகம்.

புதுப் புது கோணங்களில் எங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு இங்க உண்டு. செய்யும் தொழிலில் திறமைதான் இங்கே செல்வம்.
அந்த செல்வத்தை நான் பணி செய்யும் இடம் மதிக்கிறது எனக்கு அதுபோதும் " என்பாள்.

"வர்ஷா! உன் திறமையை கட்டின புருஷனுக்காக செலவழிக்கலாம் ஆனால் நீ செய்வதில்லை"

"நிரந்தரமாய் நீங்க ஒரு வியாபாரம் செய்யறீங்களா?உங்க குறிக்கோள் எ ப்படியாவது மல்டிமில்லினியர் ஆகணும். மார்பிளில்பிசினசிலிருந்து மணல் லாரிபிசினஸ்வரை எத்தனைவிதமான பிசினஸ் எல்லாம் செய்து பார்த்து ஏமாந்து இருக்கீங்க? உங்க பணத்தாசைக்கு என் தாய்மையை பலியாக்கிட்டீங்க…பணம் சேருகிறவரைக்கும் இந்தவீட்டில் மழலைசத்தம்கேட்கக்கூடாதுன்னு கட்டளை போட்டுருக்கீங்க.. நீங்க சொல்றதுக்கெல்லாம் நானும் தலைஆட்டிட்டு தான் இருக்கேன் இன்னும் என்னை என்ன செய்யச்சொல்றீங்க?"

"நீமட்டும் தோள் கொடுக்கறேன்னு சொல்லு இப்போவே புது பிசினஸ் ஒண்ணு தொடங்கிடறேன் வர்ஷா?'

"ஐயாம் சாரி ராம்! என் லட்சியம் இந்த பத்திரிகைநிருபர் தொழிலில் நல்ல பெயர் எடுப்பது.இதில் எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது இதை இழக்க நான் விரும்பவில்லை"

வர்ஷாவின் பிடிவாதம் ராமதுரைக்கு சமீபகாலமாக மிகவும் எரிச்சலை உண்டுபண்னுவதை அவளும் கவனித்துதான் வருகிறாள்.

கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவில் நுழைத்து திறந்து உள்ளே போனாள் வர்ஷா.

ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான் ராமதுரை.

வியப்புடன்,"தூங்கலயா ராம்?' என்று கேட்டாள் வர்ஷா.

களைப்போடு சமையலற சென்று ஃப்ரிட்ஜினின்றும் பால் கவரை எடுத்துப்பிரித்துப்பாத்திரத்தில் கொட்டினாள்.காஸ் அடுப்பை பற்றவைத்து பாலைக்காய்ச்சி கொஞ்சமாய் சக்கரை சேர்த்து டம்ளரில் ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்," சூடா பால் குடிக்கிறீங்களா?" என்று கேட்டாள்.

"ஆமா …நானே கொதிச்சிட்டு இருக்கேன் இதுல சூடா பாலு வேற ஒரு கேடாக்கும்?"

கடுப்போடு சொன்னவன் அந்த மிரட்டல் போன் அழைப்பை விவரித்துவிட்டு," வர்ஷா!இந்த வேலையை நீ விட்டுத்தொலையேன்..பாதுகாப்பே இல்லாத வேலை! நேரம் காலம் கிடையாது.இதெல்லாம் பெண்களுக்கு ஏற்றதே இல்ல"என்றான்.

வர்ஷா பாலின் கடைசி சொட்டின் சக்கரை இனிப்பை நாவில் சுவைத்தபடி," ராம்! இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா? இதெல்லாம் குரைக்கிற நாய்கள், கடிக்காது கண்டிப்பாய்" என்று சொல்லி சிரித்தாள்.

"இவ்வளோ ரிஸ்க் எடுத்துஎதுக்கு இந்த உத்தியோகம்னு போனதடவை இங்க வந்த என் அப்பாகூட முணு முணுத்தாரு தெரியுமா?"

"உங்கம்மாவும்'இந்தவீட்லஎப்போதான் குழந்தை ஒண்ணு தவழப்போகுதோ?'ன்னுமுணு முணுத்தாங்க அதுவும் கேட்டுதா உங்களுக்கு ராம்?"

"வர்ஷா! உன் வேலை பத்தி பேசறப்போ குழந்தைவிஷயத்தை இங்க கொண்டு வராதே...இன்னும் மூணுவருஷத்துக்கு குழந்தை பேச்சேவரக்கூடாது இங்க. பணம்சேர்க்கணும் முதல்ல…அதுக்குவழிதேடிட்டு இருக்கேன் நான்"

ராமதுரைக்கு அவனைச்சுற்றித்தான் உலகம். அதுவும் ஒரு குறுகிய வட்டம் தான். சமூக அக்கறை என்பதே இல்லாதவன்.பணம் ஒன்றே குறிக்கோள். பங்களா கார் பண்ணைவீடு காபி எஸ்டேட் என்று தகுதிக்கு மீறிய கனவுகள். கனவு நனவாகிறவரைக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவன் கொள்கை.ஆரம்பத்தில் வர்ஷாவும் அவன் போக்கின்படி நடந்துகொள்ள நினைத்தாள் ஆனால் திரும்பத்திரும்ப வீடு பணி என்று ஒரே வட்டத்தில் சுழலும் ஒரேமாதிரியான வாழ்க்கையில் குழந்தையின் வரவு புத்துணர்ச்சியைக்கொடுக்கும் என்று நம்பினாள்.

வர்ஷா மௌனமாக இருக்கவும்," ஹலோ…மாத்திரையெல்லாம் ஒழுங்கா போட்டுக்கறேதானே? உன் வேலை மும்முரத்துல இப்படி வீட்டுக்கு மறந்து போய் நடு நிசிலவர்ர மாதிரி மாத்திரையையும் மறந்து தொலைக்கப்போறே?அதான் கேக்கறேன்"என்றான்.

"ராம்! அஞ்சு வருஷம் ஆச்சு…எனக்கும் வயசு முப்பது முடியப்போகுது..முதல் பிரசவம் முப்பது வயதுக்குள்ள நடந்தா சிக்கல் அதிகம் இருக்காதாம்… சின்ன வயசுல குழந்தைகளைப் பெத்துட்டா வயசான காலத்துல நிம்மதியா இருக்கலாம் ஆல்ரெடி நாம லேட் பண்ணிட்டோம்னு மனசு குறுகுறுக்குது பல நேரங்களில்…"

"என்னாச்சு உனக்கு? சராசரி குடும்பப்பெண் மாதிரி இன்னிக்கு டயலாக் விடறே?"

"நானும் சராசரி குடும்பபெண் தானே? பத்திரிகை நிருபர் வேலை என் தொழில் அவ்வளவுதான்.ராம்! பெண்மையின் நிறைவே தாய்மையில் தான். அந்த இனிய தருணம் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாதது!"

"லுக்வர்ஷா! விபரீதமாய் பேசாதே… இதெல்லாம் படிப்பறிவு இல்லாத பெண்கள் பேசும் பேச்சு"

"என் அம்மா படிக்கவில்லை பாட்டி படிக்கவில்லைதான் ஆனா ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் நினைவு கூறும் வகையில் வாழ்ந்தவர்கள். இந்த வாழ்க்கைப்பண்பையும் நெறியையும் எந்தப்பல்கலைக்கழகமும் அவர்களுக்குக் கற்றுத்தரவில்லை. அன்பு பண்பு பாசம் எல்லாமே படிப்பறிவு இல்லாதவர்களின் நடைமுறை வாழ்க்கையில் அதிகம் உண்டு.அவர்களை பரிகாசம் செய்யவேண்டாம்"

"்குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ரொம்ப செலவு செய்ய வேண்டி இருக்கு வர்ஷா..நம்ம காலம் மாதிரி இல்ல..படிப்புக்கு நோட் நோட்டா எடுத்து வைக்கணும்.அதிலும் பொண்ணு பொறந்தா அவ்வளோதான்….தலைல துண்டுதான்…தெரியாமயா இன்னமும் உசுலம்பட்டி மாதிரி இடங்களில் கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவைக் கொலை செய்யறாங்க எல்லாம் காரணமாத்தான்!"

ராமதுரை இப்படி எகத்தாளமாய் சொல்லவும் வர்ஷா புயலென சீறி நிமிர்ந்தாள் அதுவரை அவளிடம் குடிகொண்டிருந்த சாந்தம் மறைந்து, சட்டென கண் சிவந்துபோனது.உதடுகள் துடித்தன.

"பெண்குழந்தைகளைக் கேவலமாய்பேசும் உங்களை மாதிரி ஆண்கள் இருப்பதால் தான் இப்போ எங்க இனமே குறைஞ்சிட்டு வருது. பல குடும்பங்களில் இப்போதெல்லாம் பையன் ஜாதகங்களை வைத்துக்கொண்டு பெண்ணுக்குப்பேயாய் அலையறாங்களாம்.. இன்னும் கொஞ்ச நாள்ள பெண் இல்லாத பூமியாய் மாறினாலும் ஆச்சரியமில்லை. தாய் நாடு ,தாய் மொழின்னு சொல்லிட்டு பெண்களை நாய் மாதிரி நடத்தும் சில ஆண்களுக்கு புத்தி வந்தாதான் நாடு உருப்படும்."

"என்னடி என்னை நாய்ங்கறியா?" என்று கேட்டு வர்ஷாவின் கன்னத்தில் பளீரென அறைந்தான் ராமதுரை.

இதை சற்றும் எதிர்பார்க்காத வர்ஷா,அரண்டு போய் அப்படியே உட்கார்ந்துவிட்டாள் .
ராமதுரை உஷ்ணப்பார்வையோடு தூங்கப்போனான்.

சோபாவிலேயேசுருண்டுபடுத்துவிட்ட வர்ஷா அடிவாங்கிய அதிர்ச்சியில்அன்று 'அந்த' மாத்திரையை சாப்பிடவும் மறந்து போனாள்.
அதன் விளைவு அடுத்தமாதமே தெரிந்துவிட்டது.

ராமதுரைஅடித்த நாளிலிருந்து அவனோடு அதிகம் பேசாதிருந்த வர்ஷா,அன்று அந்த 'நல்ல செய்தி'யை அவனுக்குச் சொல்ல விரும்பினாள்
வீட்டிற்கு ஓடிவந்து ,"ராம் ..நான் கன்சீவ் ஆகி இருக்கேன்" என்றதும் பதறிப்போனான் ராமதுரை.

அவளருகில் வந்து வயிற்றில்கைவைத்தபடி,"இதைஅழிச்சிடு உடனே அபார்ஷன் செய்துகொள் ப்ளீஸ் ..ஏன்னாநான் புது பிசினஸ் ஆரம்பிக்கபோறேன் அதுக்கு பணம் நிறையவேணும்.. நீ கர்ப்பமாயிட்டா வேலைக்குப்போகமாட்டேன்னு முன்னமே சொல்லி இருக்கே..உன் வருமானமும் இந்தக்குழந்தையின் வரவால் போயிடும்.என் கனவும் நிறைவேறாது ப்ளீஸ் வர்ஷா இதைக் கலைச்சிடு .. தெரியாமநடந்த விபத்தா இதை நினைச்சி மறந்து இனி கவனமாய் இருக்கலாம் என்ன?' என்றான் கெஞ்சினான்.

அருகாமையில் அந்தமுகத்தில் தெரிந்த கோழைத்தனமும், குயுக்தி கொண்டபார்வையும், வர்ஷாவை மனம் உடைய வைத்தன.
வெறுப்பில் நெஞ்சு விம்மியது,"அடச்சே..உங்களுக்கு பணம் சம்பாதித்துப்போடவும் படுக்கை சுகத்துக்கும் தான் என்னைக்கல்யானம் பண்ணிக்கிடீங்களா? நானும் ரொம்ப பொறுமையாய் பல காலம் உங்களோடு எல்லாகாரியங்களுக்கும் துணையா இருந்தேன். நீங்க கைநீட்டி அடிச்சதையெல்லாம் கூட தாங்கிட்டு இருந்தேன்.. ஆ னா இப்போ வயிற்றுசிசுவை அழிக்கச்சொல்லும் உங்க கொடுமையான மனசு கண்டு என் ரத்தமே கொதிக்குது ..ச்சே..நீங்களல்லாம் ஒரு மனுஷனா?"

வர்ஷா வேகமாய் அறைக்குச்சென்றவள் கையில் பெட்டியோடு மறுபடி ஹாலிற்கு வந்தபோது ராமதுரை இவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு யாரிடமோ போனில் பிசினஸ் விவகாரத்தை உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.

வர்ஷா பெட்டியோடு வாசலுக்கு வரவும், சட்டென ஒரு போலீஸ் ஜிப் வந்து அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

வர்ஷா தயங்கி நிற்கையில் அதனின்றும் கிழே இறங்கிய இன்ஸ்பெக்டர் அவளிடம்," இது ராமதுரைவீடுதானேம்மா?' என்று கேட்டார்.

"ஆமாம்..நீ..ங்..க…?" தயக்கமாய் இழுத்தபடி கேட்டாள் வர்ஷா,

"அவரைக்கைது பண்ண வந்திருக்கோம்… வெளிநாட்டுக்கு விசா வாங்கித்தரேன்னு தன் பார்ட்னரோடு பலலட்சம் ரூபாய்களை பலபேரிடம்வாங்கி அப்பாவி மக்களை நல்லா ஏமாற்றி இருக்காரு இந்த அயோக்கியன்ராமதுரை.அவனோட பார்ட்னரை முதல்ல பிடிச்சி உள்ளதள்ளிட்டோம்..இப்போ இந்த ஆளைப்பிடிக்க வந்துருக்கோம்…ஆமா நீங்க யாரு?"

"நா..நானும் ராமதுரையால ஏமாற்றப்பட்ட பொண்ணு தாங்க.."

"இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்களும் இப்படி ஏமாந்துடறாங்க பாருங்க.."

இன்ஸ்பெக்டர் அருகிலிருந்த போலீஸ்காரரிடம் இப்படிச் சொல்லியபடியே வீட்டிற்குள் நுழையும்போது வர்ஷா ஒருக்கணம் அப்படியே அதிர்ந்து நின்றவள், அடுத்த கணமே தெருவில் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

0 பின்னூட்டங்கள்: