பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 18

இளைப்பாறும் நேரத்திலாவது
- ஷைலஜா


வாழ்க்கைத்துணையாகத்தான்
வரவில்லை
வழித்துணையாகவாவது
வந்துவிடு

இளைப்பாறும் நேரத்திலாவது
இனியவாழ்வு என்ன என்பதைக்

காணவேண்டும்

தாயின் இடுப்பைநனைக்கும்
சின்னகுழந்தையின்
ஈரத்துணிமாதிரி
உன் நினைவுகள்

சிறுவாட்டில்
சேர்த்துவைத்த
சில்லறைகளாய்
பழகியபொழுதின்
புன்னகைகள்

மனச்செடியில்தினமும்

வளர்ந்து

உன் அருகாமையில்

மலரத்துடிக்கும்
நேச அரும்புகள்

காற்றுவயலில்
அறுவடைக்குக்
காத்திருக்கும்
கவிதைப்பயிர்கள்
இளைப்பாறும் நேரத்திலாவது
இனியதுணையாக வந்துவிடு!

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 7

இருக்கை
- ஹரன் பிரசன்னா


எனக்கு முன்னுள்ள இருக்கையில்
முதலில் ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்ந்தது
பின்பு ஒரு பெருநோய்க்காரன் வந்தமர்ந்தான்
ஒரு விபசாரி வந்தமர்ந்தாள்
யோகி போல் வேடமணிந்த
சிறு குழந்தை ஒன்றமர்ந்தது
யாருமற்ற பெருவெளியில்
தனித்திருக்கும்
அவ்விருக்கையில்
நான் சென்று அமர்ந்தபோது
என் வெளியேறுதலுக்காகக்
காத்திருக்கிறது பெருங்கூட்டம்

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 17

புரட்சித் திருமணம்

- மோ. கணேசன்


திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...
மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!

மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!

சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?

மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?

அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!

சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!

இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!

சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...



--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்

"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"

முதலாமாண்டு நிறைவு விழா

http://panbudan.blogspot.com/

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 6

துடுப்புகளற்ற படகு

- ஹரன் பிரசன்னா


அமைதியற்ற நதியொன்றில்

பயணம் செய்து வந்தவன்

படகுகளை தந்துவிட்டுச் சென்றான்

மேலெங்கும் நீர் தெறித்துக் கடக்க

துடுப்புகளை வாங்க மறந்தேன்

நான் பயணத்தில் எதிர்கொண்ட பேரலைகள்

என்னை நனைத்துவிட்டுச் சென்றன

கரை மீள

படகுகளைப் பெற்றுக்கொண்ட புதியவன்

மறக்காமல் துடுப்புகளைக் கேட்டான்

ஆற்றின் ஆரவாரத்தை

துடுப்புகளின்றி எதிர்கொண்டவன் சொன்னேன்,

படகுகளும் அவசியமற்றவை.



குழந்தையின் வீடு

- ஹரன் பிரசன்னா


வீட்டின் கதவைத் திறந்ததும்

ஓடி வந்து கட்டிக்கொள்கிறது குழந்தை

ரத்தம் கேட்டு அலைந்துகொண்டிருந்த

பூனையொன்று ஜன்னல் தாண்டி ஓட

ஒரு மூலையில் பூக்கிறது

அதிமணம் கொண்ட மலர்

குழந்தை

முத்தமிடுகிறது

கழுத்தைக் கட்டிக்கொள்கிறது

காரணமே இன்றி சிரிக்கிறது, குதிக்கிறது.

அதன் நெற்றியை மெல்ல வருடுகிறேன்

குழந்தையையும் படைத்து

மிருகத்தையும் படைத்தவன்

குரூரனாக இருந்தாலும்

ஒரு மிருகம்

ஒரு குழந்தையை

பெற்றுக்கொள்ளுமாறு படைத்தவன்

கடவுளாகத்தான் இருக்கமுடியும்

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 16

மீட்சி
- ஷைலஜா


உறவினர்களிடம்
பேசும்போதெல்லாம்
ஊர்பேர்தெரியாதவர்களிடம்
பேசுவதாய்
உணர்கிறேன்
உன்னிடம் பேசும்போதோ
புதுப்புது உறவுகளைக்
காண்கிறேன்
இசையாய்நிறைகிறது
உன் காலடி ஓசை
தாலாட்டாய் நினைத்தே
உறங்கிவிடுகிறேன்
ஒவ்வொருநாளும்
உன் மௌனத்தில்
காலம் கரைகிறது
மீட்டுத்தர வருவாயா
விரைந்து?
தனிமைவீட்டில்
ஞாபகங்களே
வாசற்கோலங்கள்

உன் பார்வைக்குள்
அகப்பட்டுக்கொண்டபோதே
சிறைபிடித்துப்போனாய்!
விடுதலைவேண்டாம்
கூண்டுக்கிளிவாழ்க்கை
குதூகலமானதுதான்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 5

மூன்று பேர்
- ஹரன் பிரசன்னா



இந்தக் கதையை (கதையா, கட்டுரையா, கட்டுரைத் தன்மை அற்ற வெறும் அறிவியலா என்பது பற்றி போகப்போக நிறைய சொல்லியிருக்கிறேன், பொறுமை) மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பிக்கிறேன் என்பது எனக்கே புரிகிறது. சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் எதுவுமே அபத்தம் என்பது என் கருத்து. என்றாலும் இப்போது அப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல நாவல்களின் தொடக்கமும், சிறுகதைகளின் தொடக்கமும் இப்படி அபத்தங்களுடன் ஆரம்பித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன். இன்றைய அறிவியல் உலகத்தில் – அறிவியல் வந்துவிட்டது, இனி யாரும் இதில் அறிவியல் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது எனச் சொல்லிவைக்கிறேன். ஆனால் இது அறிவியல் புதினமா அறிவியல் நிகழ்வா எனத் தொடங்கக்கூடும். இவர்கள் எதில்தான் தலையிடாமல் இருந்தார்கள்? ஒரு அறிவியல் கட்டுரை எழுதும் ஒருவனுக்கு இந்நாட்டில் நிகழும் அநீதியைப் பற்றிச் சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது. இத்தனைக்கும், இது அறிவியல் யுகம்! சரி, நான் இதை ஒரு நிகழ்வாகச் சொல்கிறேன் எனவும் நீங்கள் அதை புனைவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்பு, வெகு முன்பு ஊமைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், ஒருவர் திரையின் முன்னே தோன்றி கதையை விவரிப்பாராம். (என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தைப் போட்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், அநீதி செய்யும் ஜூனியர்களுக்கு நான் இளப்பமா என்ன?) நம் மரபு பழைய எந்த ஒன்றையும் நிராகரிக்கக்கூடாது என்கிற கருத்தாக்கம் அடர்வு பெறுகிற சூழலில் நான் அதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது – அபத்தங்கள் இருக்கமுடியாது (-ஐ ஆரம்பித்து –ஐ முடித்துவிட்டேன். நான் சில கட்டுரைகளில் இதைத் தவிர்த்திருக்கிறேன். கட்டுரை எடிட்டர் கடுமையாகக் கோபப்படுவார். இந்த அறிவியல் கட்டுரையில் (பிராக்கெட்டுக்குள் பிராக்கெட், :) ஸ்மைலியும் உண்டு, ஏனென்றால் அறிவியல் உலகமல்லவா!) அறிவியல் புனைகதையில், அறிவியலில், அறிவியல் கட்டுரையில் (சே, ஏதோ ஒரு எழவில், Hereafter 'அறிவியல் கட்டுரை/கதை' will be referred as 'எழவு') எடிட்டருக்குக் கோபப்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பிராக்கெட் முடிக்கப்படாத, - முடிக்கப்படாத கோபங்கள் இருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது பிராக்கெட்டை ஏற்கெனவே முடித்துவிட்டேன், முதல் பிராக்கெட்டை முடித்துவிடுகிறேன்) என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் நாம் அந்த அபத்த மரபை மட்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக்கொண்டே இருந்தோம்.

என் பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். என்னால் ஒரு விஷயத்தை ஒரு விஷயமாக மட்டும் சொல்லமுடியாது. அது முதல் பிரச்சினை. (இரண்டாவது பிரச்சினை என்ன என்பதை, முதல் பிரச்சினை தீர்ந்த பின்னர் சொல்கிறேன்.) இதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். அக்காலங்களில் திண்ணைப் பேச்சு என்று ஒன்று உண்டு என்று சொல்வார்கள். அதுவே பின்னர் மின்னஞ்சல் பேச்சாகப் பரிமாணம் பெற்றது. அந்த திண்ணைப் பேச்சின் எச்சமே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் பேசுவதால் எனக்கு வயதாகிவிட்டது என்றும், அறிவியல் பற்றிப் பேசுவதால் விஞ்ஞானி என்றும் நீங்கள் யூகித்திருக்கலாம். நாந்தான் சொன்னேனே, அறிவியல் உலகில் ஏன் அபத்தங்கள் இருக்கக்கூடாது என்று.

அக்காலங்களில் பாட்டிக் கதை என்று சொல்வார்கள். நானும் என் பணிக்காலத்தில் நடந்த ஒரு கதையையே உங்களிடம் சொல்லப்போகிறேன். இதுவரை சொன்னது ஒரு முன் தயாரிப்பு. உடலுறவில் முத்தம், தடவுதல் போன்ற முன் தயாரிப்பைப் போன்றதே இதுவும். பாட்டிக் கதையில் எடுத்த எடுப்பில் ஒருவர் கதைக்குள் செல்வதில்லை. 'ஒரு ஊர்ல ஒரு' என்கிற பிரயோகம் பன்னெடுங்கலாமாக இருந்தது என்று வாசித்திருக்கிறேன். அது வெறும் 'ஒரு ஊர்ல ஒரு' இல்லை. ஒரு முன் தயாரிப்பு. நான் மரபை மீட்டெடுக்கிறேன். இந்த 'எழவிலும்' நீங்கள் அதை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


நம் பழங்காலத்துத் திரைப்படங்கள் ஆரம்பிக்கும்போது ஒருவித மங்கல இசை வருமே, அது போன்ற ஒரு மங்கல இசையை நினைத்துக்கொள்ளுங்கள். நான் அந்த மூன்று பேரையும் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

ஒருவன் பெயர் வினோத். இன்னொருவன் பெயர் ஜீவன். மூன்றாமவன் பெயர் கண்ணையன். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) முன்பு வெளிவந்த தமிழ் தினசரிகளில் இப்படி வந்ததை நீங்கள் இந்நேரம் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும்.) இந்த மூவரால்தான் பிரச்சினை.

விஷயம் சின்ன விஷயம்தான் என்றார் மேத்யூ. அவர்தான் தலைமை விஞ்ஞானி. நிரலியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பார் என்றார். ஒன்றும் புரியவில்லையா? முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென பிரச்சினைக்குள் செல்லும் வழக்கம் செத்துவிட்ட இன்றைய யுகத்தில், அதையும் ஒரு மரபெனக் கருதி புதுப்பிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.


நான் நிரலியை முழுக்கப் பரிசோதித்தேன். துல்லியமாக இருந்தது. பிரச்சினைகளே இல்லை. மேத்யூவிடம் சொன்னேன். 'தாயோளி' என்றார். அவர்தான் எனக்கு இதுபோன்ற பழம் தெறிகளைக் கற்றுக்கொடுத்தது. அவர் சொல்லச் சொல்லத்தான் பழம் வார்த்தைகளையும், பழம் பழக்க வழக்கங்களையும் பற்றி தேடத் துவங்கினேன். இதனாலேயே என் கட்டுரைகள் பெருமளவில் கவனிக்கப்பட்டன. மரபு ரீதியான விஷயங்கள் இன்றைய நிலையில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், நான் அவற்றை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, அவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமாகவே அதை வாசித்தவர்கள் கண்டடைந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் மரபை மீட்டுவதன்மூலம் நான் அவர்களை மிக எளிதில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படித்தான் மேத்யூவைப் பின்னுக்குத் தள்ளி, எடிட்டரின் திட்டோடு, அதிக ராயல்டியையும் பெறத் தொடங்கினேன்.


மீண்டும் மூன்று பேர் பிரச்சினை. 'நல்லா பாத்தியா' என்றார் மேத்யூ. தவறுகள் இருந்தால் அதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார் மேத்யூ என்பது எனக்குத் தெரியும். நான் நிரலிகளைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், அதில் தவறுகள் இல்லையென. இருந்தாலும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். என் மூளை எல்லாவற்றையும் உபயோகித்தேன். ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. அந்த மூன்று பேரும் அப்படித்தான் இருந்தார்கள். எப்படி? முன்பு கொசு என்கிற ஒரு உயிரினம் இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதை விரட்ட ஒரு கொசுவர்த்தி என்கிற ஒரு விஷயமும் இருந்தது. அதற்கு சுருள் சுருளான ஒரு வடிவமும் இருந்தது. அதைப் போன்ற ஒரு சுருள் வடிவத்தைப் பின்னோக்கிய நினைவுக்கு ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதி பழைய படங்களில். அதைக் கிண்டல் செய்து, அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த கொசுவர்த்திச் சுருளைச் சுற்றிக் காண்பிப்பார்கள். (எப்படி நான் ஆரம்பித்த இடத்திற்கு வரப்போகிறேன் என்பது எனக்கே குழப்புகிறது!) அப்படி நீங்கள் ஒரு கொசுவர்த்தியையும் அது உங்கள் கண்முன் சுற்றுவதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆம், உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப்போகிறேன்.


மிக வெற்றிகரமான விழாவாக அதை அறிவித்தார் மேத்யூ. மனிதனை ரோபோவாக மாற்றிக் காண்பித்ததில் உள்ள தடைகளையெல்லாம் எளிதாகக் கடந்ததற்காக அவருக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. (பாரத் ரத்னாவின் பெயரை இந்திய ரத்னா என்று மாற்றி, மரபை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக மீண்டும் அதை பாரத் ரத்னா என்று மாற்றினார்கள். இதுவரை இது தெரியாதவர்கள் அவர்களது பொது அறிவைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். உபரித் தகவல், திண்ணைப் பேச்சு இப்படித்தான் பொதுஅறிவில் ஆரம்பிக்கும்!) அன்றிரவு நடந்த பார்ட்டியில் சில சந்தேகங்களை நான் கிளப்பினேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. இந்த சந்தேகங்களுக்காக நிறைய முறை பாராட்டியிருக்கிறார் மேத்யூ. அதைவிட அதற்காகத் திட்டியுமிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


நான் கேட்ட சந்தேகம் மிக எளியது. இந்த ரோபோவாக மாறிய மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் மேத்யூ. ஏனென்றால் நிரலியில் அவை ஒன்றுக்கொன்று எதிரியாக உணரும் நிரலி சேர்க்கப்படவில்லை என்றார். எங்கும் அன்பு, எங்கும் சகோதரத்துவம், எங்கும் அமைதி என்று (தொப்பை குலுங்க, பிரெஞ்சு தாடி விரிய கண்ணாடியின் வழியே காணும் கண்களுடன் சிரித்தார் மேத்யூ என்று எழுதியிருப்பார் சுஜாதா என்னும் ஓர் எழுத்தாளர். அவரே தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. 2000மாவது வருடங்களில் நிறைய எழுதி தள்ளியிருக்கிறார். அறிவியல் கதைகளின் முன்னோடி. அவர் செய்த அபத்தங்கள் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது உங்களுக்கு இன்னொன்று புரிந்திருக்கும், அபத்தத்தில் தொடரும் எதுவும் அபத்தத்திலேயே முடியவேண்டியதில்லை என.) அலுங்காமல் குலுங்கால் சிரித்தார் மேத்யூ. ஏனென்றால் அவருக்குத் தொப்பை இல்லை, பிரெஞ்சு தாடி இல்லை. (இலக்கிய வகை காவியம் ஆகவேண்டுமென்றால் அறுசுவை இருக்கவேண்டும் என்கிற தியரி நீண்ட நாளாக இருந்தது. அதை அடியொட்டி இப்போது உங்களுக்கு நகைச்சுவையை வழங்கிவிட்டதாக நம்புகிறேன். மீதி ஐந்து சுவைகளை இக்கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை எழுதப்போகும் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ தருவார். பொறுத்திருங்கள்.)



திடீரென மேத்யூ சொன்னார், 'நாம் மோத வைத்துப் பார்த்தால்தான் என்ன?' என்று. மீண்டும் முன்பொரு காலத்தில் என்று சொல்வதற்கு வருந்துகிறேன். என் 'எழவு' எதிரியான அநீதியாளர் ஜூனியர் மேத்யூ நான் எத்தனை முறை மரபு என்றும், முன்பொரு காலத்தில் என்றும் எழுதியிருக்கிறேன் என புள்ளி விவரங்களோடு வரக்கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. (இந்த வரி வரவில்லை என்றால் என் கட்டுரையில் சுரத்தே இல்லை என்று அர்த்தம் என்று எடிட்டர் அடிக்கடிச் சொல்லுவார்.)



சோதனை தொடங்கியது. முதலில் ஒரு நிரலியைச் சேர்த்தோம். மூன்று பேரில் ஒருவனைப் பணக்காரனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் படைத்தோம். மூன்றாமவனை பிச்சைக்காரனாக்கினோம். மூவருக்கும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான வரையறையை அளித்தோம். அவர்களின் கீழ்க்கோப எல்லையை குறைத்தோம். மூவரையும் இரவு ஒரே அறையில் அடைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் 'ரணகளம் ரத்தபூமியாக' மாறும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. உள்ளே பார்த்தபோது மூவரும் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறக்க நேரத்திற்கு முன்பாகச் சண்டை வந்திருக்கவேண்டும் என்பது எங்கள் நிரலியின் வரையறை. மேத்யூ மெல்ல நெற்றியைச் சுருக்கினார். சுருக்கங்கள் வழியே மெல்ல வியர்வை வழிந்து, பிரெஞ்சு தாடி இல்லாத அவரது ஒற்றை நாடியின் வழியே வழிந்து நெஞ்சில் சொட்டியது. மேத்யூ யோசித்தார், யோசித்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்.



மீண்டும் நிரலிகளையெல்லாம் என்னென்னவோ மாற்றினார். துப்பாக்கி, வெடிகுண்டு என எல்லாம் கொடுத்து ஒருவரை ஒருவர் பார்த்தாலே சுடவும், குண்டு எறியவும் நிரலி எழுதினார். ம்ஹூம். ஒன்றும் உதவவில்லை. மூவரும் இயல்பாகப் பேசிக்கொண்டார்கள். தூக்க நேரத்தில் சரியாக உறங்கத் தொடங்கினார்கள். சண்டை மட்டும் இல்லை.


மூன்று மனிதர்களும் இயல்பிலேயே ஆண்கள்தானா எனச் சோதித்தார். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஆணாக மாறிய பெண்ணாக இருந்தால், அதற்கான கூடுதல் நிரலியைச் சேர்க்க நினைத்திருப்பார் போல. ஆனால் இந்த நிரலி தேவையற்றது என்று ஏற்கெனவே நிராகரிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் யோசித்தார். இந்த நேரத்தில் ஒரு பழமொழி சொல்வதில், மரபை மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி எனக்கு. :) பசிச்சவன் பழங்கணக்கப் பார்த்தானாம்.


மூவருமே பிறப்பிலேயே ஆண்கள்தான் என்பதும் ஊர்ஜிதம் ஆயிற்று. அதற்கு மேலும் நெற்றியைச் சுருக்க வழியில்லை என்பதை மேத்யூ உணர்ந்துகொண்டு, வேறொரு மேனரிசமாக கன்னத்தில் கைவைத்துக்கொண்டார். இதை சரி பார்க்காமல் அவர் வாங்கிய பாரத் ரத்னாவைத் திரும்பக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருப்பார் என நினைக்கிறேன்.


இங்கே கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாருங்கள். இப்போது மேத்யூ நான் கண்டுபிடித்த பதிலை ஒட்டி பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அதில் அவர் எதிர்கொண்ட தகவல்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. 'இதை கவனிக்காம நாம நிரலி எழுதினதே தப்பு' என்று அவர் புலம்பியிருக்கவேண்டும். இன்றைக்கு மேத்யூ இல்லாத நிலையில், ஒன்றுமே தெரியாமல் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ என்னை எதிர்த்துக்கொண்டிருக்கிற வேளையில், இக்கட்டுரை என்னை பாரத் ரத்னாவாக்கும் என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.



மேத்யூ நெற்றியைச் சுருக்காமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நான் பழம் இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சில கல்வெட்டுக்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயம் எனக்குள் பிடிபட, கிட்டத்தட்ட மூன்று பேரையும் நோக்கி ஓடினேன். மேத்யூ நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் மூவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு அவர்களின் நிரலியை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த விஷயம் அதில் இல்லை. அந்த மூவரின் பூர்வத் தகவல்களைச் சேகரித்தேன். நான் நினைத்தது சரியாக இருந்தது.


மேத்யூவிடம் சொன்னேன். 'உங்கள் பாரத் ரத்னாவிற்குப் பிரச்சினை இல்லை.'


'அப்படியா?'


'ஆம், 'சண்டை போடு' என்கிற பழைய நிரலியுடன், ஒரே ஒரு நிரலியை மட்டும் சேர்க்கிறேன், என்னாகிறது பாருங்கள்' என்றேன். மூவரின் நிரல்களிலும் ஒரேஒரு நிரலியை மட்டும் சேர்த்தேன். அவர்கள் அந்த வரையறையை ஏற்றுக்கொள்ளச் செய்தேன். ஒரு அறைக்குள் அடைத்தோம். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, அடிதடி சத்தம். சரியான சண்டை. நாங்கள் நிரலியில் சேர்க்காத கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகிறதோ என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்தது.


மேத்யூ ஆச்சரியம் பொங்க, 'என்ன செய்தாய்' என்றார்.


'நீங்கள் ஜாதியை மறந்துவிட்டீர்கள். அவர்கள் மூவரும் ஒரே ஜாதி. அதை மாற்றினேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதி என்று வைத்தேன். பிரச்சினை தீர்ந்தது' என்றேன்.


இதை மரபின் மீட்சியாகப் பார்க்கவேண்டுமா, அல்லது தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டுமா எனத் தெரியாமல் மீண்டும் நெற்றியைச் சுருக்கிய மேத்யூவின் முகம் என் கண்முன்னே இன்னும் இருக்கிறது.


ஜூனியர் மேத்யூவிற்கு இதை சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஜாதியைச் சேர்ந்த மூன்று பேரை உன் நிரலியால் சண்டையிட வை, நான் என் சொத்தையெல்லாம் உனக்கு எழுதி வைக்கிறேன். சவாலுக்குத் தயாரா சின்ன பையா?



-- சீவன், 24-11-2108


(பின்குறிப்பு: ஏய் எடிட்டர், இக்கட்டுரையில் ஏதேனும் கைவைத்தால், சில புதிய தெறிகளை உனக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன். கவனம்.)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 4

பூனையின் உயிர்த்தெழுதல்
- ஹரன் பிரசன்னா


எத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.

ஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.

முதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.

ஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.

ஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.

ஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து 'புஸி பாஸ் பாஸ்' என்று அழைத்தேன். சத்தமே இல்லை. இடையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், 'பூனை செத்துக் கிடக்குது.'

என் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் 'என்னாச்சுப்பா' என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு 'செத்துப்போச்சா' என்றான். என் மனைவி உடனே 'சாகலை. நாளைக்கு வரும்' என்று சொல்லி வைத்தாள்.

மறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் 'அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே' என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், 'பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை' என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் 'ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத' என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.

பின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.

லோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவே இல்லை.

வீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.

நான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், 'வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.' அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். 'அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க' என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். 'பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.' 'எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு' என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

பூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென்றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.

வீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். 'எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.

பூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் 'பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்' எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 15

அன்று அயோத்தி... இன்று அமர்நாத்...
- மோகனன்


அன்று...
அண்ணன் தம்பிகளாய்
வாழ்ந்த நம்மை
அந்நியர்களாக்கியது
அந்த அயோத்தி....
ஐயோ... தீ..!

இன்றோ...
அமர்நாத்..
அங்கு அமருவதற்கு கூட
அடுத்தவனிடம்
அனுமதி கோரும்
அவல நிலை..!

உயிரற்ற பொருள்களுக்காக
விலை மதிப்பற்ற பல
மனித உயிர்கள்
இனியும் பலியாக வேண்டுமா..?

மதி கெட்ட மனிதா...
மதங்கள் உங்களை
நெறிமுறைப்படுத்தவே..!
பலரின் குரல்வளைகளை
நெறிப்பதற்காக அல்ல..!

மதங்களை மறந்து
மனிதங்களை வளர்த்துப்பார்..!
அப்பொழுது புரியும்
மனிதத்தின் மகத்துவம்..!

அமைதிப் பூங்காவாய்
இருந்த நம் தேசத்தை
அய்யோத்தியின் பெயரால்
அமர்நாத்தின் பெயரால்
மதநெருப்பைக் கொண்டு
மீண்டும் ஐயோ... 'தீ'... யாக்கிவிடாதே..!

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - 2

காலச்சுமை
- சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா

- வா.மு.கோமு


எப்போ ஆரம்பிச்சுது என்பது பற்றியான பழைய ஏட்டுச்சுவடிகள் காணாமல் போய்விட்ட படியால், ஆதாம் ஏவாள் ஆப்பிளை கடிச்சுத் தின்னுட்டே, பாம்பு வடிவில் இருந்த சாத்தான் தன்னோட மரத்துல இருக்கிற ஜெர்ரி பழத்தையும் சாப்பிடச் சொல்லி கேட்க, ஏவாள் சரியென்று ஜெர்ரிப் பழத்தையும் சாப்பிட்டு விட, சாத்தான் எஸ்கேப் ஆகிவிட்ட நாளுக்கு பின் வந்த மார்கழி மாதத்தில் துவக்கப்பட்டதாக கருதப்படுகிற இந்த இதழ், பின் வந்த மாதங்களில் மாசா மாசம் காலம் தவறாமல் மிகச் சரியாக தேதி ஒன்றில், தற்போது உலகம் முச்சூடுமே, செவ்வாய் கிரகம் ஒன்னே ஒன்னு தான் பாக்கி என்கிற நிலையில், தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் கொஞ்சம் பேர்களிடம் மட்டுமே, பத்திகள், கதைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய சர்ச்சைகள் இப்படி மாத்தி மாத்தி, அந்தக் கொஞ்சம் பேர் மட்டும் சாவுறமுட்டும் எழுதி எழுதி எழுத்தார்வத்தை தீர்த்துக் கொள்ளும் பலவர்ண முக ஆளுமை கூட்டிக் கொண்ட இதழ் காலச்சுமை.


தோழர் பெரியசுவாமி, சுள்ளிமேட்டு ராமசாமியின் வெளிவராத படைப்புகளை அவிங்களே மண்டியைப் போட்டு எழுதிட்டுப் போனாப்பிடி, தேர்ந்த எழுத்துப் பொறியாளர்களை வைத்து எழுதச் செய்து, இதுவரை வெளிவராத படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து படைப்பு என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்து, தமிழில் பொறுக்கி எடுத்து வெளியிடும் இதழ். தமிழகத்தின் மீலை முடுக்கிலெல்லாம் இருக்கும் கிறுக்கு வெள்ள (சாராயம்) கடைகளிலும், மற்றும் எரிபொருள் விற்பனை நிலையங்களிலும், மிகப்பெரிய திருத்தளங்களிலும், பியூட்டி பார்லர்களிலும், பைனான்ஸ் நிறுவனங்களிலும், சுங்கச் சாவடிகளிலும் என்று திரும்பின பக்கமெல்லாம் கிடைக்கும் ஒரே பயங்கரமான மாத இதழ் காலச்சுமை.

வாரக்கூலி, தினக்கூலி, ஆபிஸ்கூலி, பென்சன் கூலிக்கு செல்லும் இலக்கிய ஆர்வலர்கள் காலச்சுமை இதழை மாதம் மாதம் தங்களின் அடையாள அட்டையை கிறுக்குவெள்ளக் கடைகளில் காட்டு மூன்று ரூபாய் குறைவாக கொடுத்து இதழை வாங்கிச் சென்று இந்தோனியாவில் குண்டுகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த சமயம் இடிபாடுகளுக்கிடையே கிளம்பிய மார்க்மன் என்கிற புயல் எழுச்சிக்கவிஞர் பற்றியும், அயல் தேசத்தில் அனாயசமாக சிறுகதைகளை புரட்டிப்போட்டு தலைக்கீழாக எழுதிய சிக்கின் சிறுகதை ஒன்றையும், மாக்மால் தீவில் சமூகத் தொண்டாற்றி அரசியலில் ஈடுபட்ட சகோதரி இர்பினின் கள்ளக் காதலர்களின் திருட்டுத்தனங்கள் பற்றியும், இப்படியான அயல் தேச சமாச்சாரங்களை தாங்கிய தமிழ் இதழான காலச்சுமை படித்து அமைதியாகக் கிடக்கும் மூளைக்குள் தீயைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

வாசகர்களுக்கான திட்டமாக முதலில் எங்களிடம் நேரடியாக ஒரு வருட சந்தாவை எங்களது அலுவலகத்தில் கட்டுபவர்களுக்கு, எங்களிடம் கைவசமுள்ள காதுகுத்து நிபுணரைக்கொண்டு உங்களுக்கு எறும்பொன்று கடித்து வைத்தாற் போன்ற சின்ன வலியுடன் துவாரமிட்டு, தொங்கட்டான் மாட்டி அனுப்பி வைக்கின்றோம். கூடவே மொட்டையையும் அடித்து விட விருப்பமுள்ளவர்கள் முன்னூறு ரூபாய்க்கு எங்கள் நிறுவன வெளியீடுகள் சிலவற்றை வாங்கி, மண்டைக்கு சந்தனமும் பூசிச் செல்லுமாறு பணிக்கிறோம்.

காலச்சுமை பதிப்பகத்தின் வெளியீடுகளை தமிழகத்தில் உள்ளவர்கள் வாசித்துப் பயன்பெற விரும்பினால், பதிப்பக முகவரிக்கு எந்த எந்த புத்தகங்கள் தேவை என்கிற தகவலையும், உங்களது முழு முகவரியையும் அனுப்பினால் போதுமானது. எமது நிறுவனத்திலிருந்து உங்கள் முகவரிக்கு புத்தகக் கட்டோடு ஒரு ஆள் நேரடியாகவே வந்து சேருவார். அவர் தான் எங்கள் நிறுவனத்தின் தங்கமகன். அவரிடம் புத்தகத்திற்கான விலையையும், பயணச் செலவையும் தந்து அனுப்பி வைக்க வேண்டுகிறோம். இந்த ஏ.பி.பி முறையானது காலச்சுமை பதிப்பகத்தாரிடம் மட்டுமே. இந்த ஏ.பி.பி முறையால் புத்தகம் எவ்விதத்திலும் தவறிவிடும் வாய்ப்பு இல்லை. இதில் வாசகர்கள் சந்தேகம் கொண்டால் டபுள் ஏ.பி.பி முறையை உறுதியாக நம்பலாம். அதில் தங்கமகன்கள் இருவர் உங்கள் இல்லம் தேடி வந்து, நீங்க வெளியூர் சென்றிருந்தாலும் வரும் வரை வீட்டுத் திண்ணையில் காத்திருந்து கொடுத்து வருவார்கள்.

எங்களது சிறப்புத்திட்டதில் உங்கள் வீட்டின் பத்திரம், அல்லது நிலப்பத்திரம் அல்லது நகைகளை எங்களிடம் வைத்து, வருடம் வருடம் நாங்கள் வெளியிடும் வெளியீடுகளை முழுமையாக பார்சலாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் இதுவரை தமிழகத்தை சார்ந்த 3000 வாசகப் பெருமக்கள் இணைந்து, தங்களது சொத்துபத்துக்களை அளித்து, காலச்சுமை இதழை மாதம் தவறாமல் இலவசமாகப் பெற்று அறிவு வளர்ச்சியடைகிறார்கள். சொத்துபத்து இல்லாத அறிவுத் தேடல் விரும்பும் வாசகர்கள் தங்களது விரைகளில் ஒன்றை எங்களிடம் சமர்ப்பித்து திட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம். இத்திட்டத்திற்கான ஆள் பிடிப்புப் பணியில் இறங்குபவர் ஐந்து ஆட்களை இத்திட்டத்தில் இணைக்கும் பணியை செவ்வனே செய்து முடித்ததும், எங்களது செலவில் அவர் விரும்பும் வெளிநாட்டுக்கு ஒருவாரம் அனுப்பி வைக்கிறோம்.

காலச்சுமை 2008 வெளியீடுகள்

பதிமூன்று இரவுகளின் கதை (நாவல்)
கவிநி கமலா

நாவல் முழுவதும் ஒரு தனித்தீவில் நடைபெறுகிறது, வெளிநாட்டில் இப்படி ஒரு நாவல் வெளிவந்திருந்தால் நாவலாசிரியை தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டி நாடு விட்டு நாடு செல்ல வேண்டி இருந்திருக்கும். தமிழில் இந்த நிலை இதுவரை இல்லை. பின் நவீன பிரதிகளில் காணக்கிடைக்கும் உடல் சார்ந்த பொருட்கள் அவற்றின் பயன்பாடுகள் இந்தப்பிரதியில் கேலிக்கு உள்ளாக்கப்படுகின்றன. தனது பதிமூன்று கணவன்மார்களோடு தனித்தீவில் வசிக்கும் கமலா அவர்களை அடைந்த விதம் பற்றியும், அவர்களுடனான தமது பொழுது போக்குகள் பற்றியும் தேர்ந்த நாவலாசிரியை போன்று விவரித்துச் சொல்லும் .
முற்றிலும் தமிழுக்குப் புதிதாய் இருப்பதினால் நாம் சொக்கிப்போய் நாவலில் ஆழ்ந்து விடுகிறோம் . கவிஞியாக மட்டுமே அறியப்பட்ட கமலாவின் முதல் நாவல் என்பது படிப்போரை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கும் சங்கதி.

தனது கவிதைகளில் வாழ்வாதாரமான காமத்தை பேய் போல் எதிர்க்கொண்ட கமலா நவீன மனதின் அசலான பிரதிபலிப்பை தனது முதல் நாவலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
( முன்னுரையில் மு. ஹரிகிருஷ்ணன்)

புளியங்கா கவிதைகள்
ஜான் - ஜானி - ஜனார்த்தன்

கவிதை என்பது கண்டபடி எழுதுவது . கவிதைகள் வாசகனுக்காக எழுதப்படுவன அல்ல. வாசகனுக்கு எதற்காக கவிதைகள்? எனக்கேட்கும் ஜான் - ஜானி - ஜனார்த்தன். இம்மூவரின் ஏழாவது கவிதை தொகுப்பு புளியங்கா கவிதைகள். உடல் சார்ந்த கவிதைகளுக்காக
ஒரு தொகுப்பும் , கடல், கடல் வாழ் உயிரினங்களுக்காக தங்களது மூன்றாவது தொகுப்பும், வான் , வான் சார்ந்த நட்சத்திர கூட்டங்களுக்காக ஒரு தொகுப்பும் என பின் நவீன மூளைக்கட்டிகளை தங்களது மண்டையோட்டினுள் சிவப்பு நிறத்தில் ஆக்டோபஸ் வடிவத்தில் வடிவமைத்துக் கொண்டவர்கள் பழங்களின் வகைகளுக்காக ஆஸ்த்திரேலிய பழ வகையிலிருந்து ஜெர்மன் பழ வகைகள் வரை எழுதி விரித்து செல்லும் கவிதைகள் இந்த தொகுப்பில் நிறைந்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

மரமேஜை ஒன்றின் மீது பூசணிப்பழத்தை வைத்துக்கொண்டு மூவரும் இணைந்தும் , பின்னர் தனித்தனியாகவும் அவரவர் தாள்களில் பெண்களின் பின்புறங்களுக்கு இணையாக எழுதி வடிவமைக்கப்பட்ட கவிதைகள் தமிழின் ஆகச்சிறந்த அட்டகாடம் , ஏற்கனவே பல்வேறு இதழ்களில் வெளிவந்து பல்வேறு பழங்களின் வாசனைகளைக் கூட நுகர வைத்த கவிதைகள்.

ராசாத்தி
பி.கே. ராசாத்தியின் சரிதம்
கன்னடத்திலிருந்து தமிழில் கருப்பன்

குப்பத்தில் கிடந்த ராசாத்தி ஆதிக்க கரங்களின் பிடிகளுக்குள் சிக்கி சீரழிந்து சின்னாப் பின்னமானவர். சேற்றில் முளைத்த செந்தாமரை. வீரு கொண்டு எழுந்து ஆதிக்க சக்திகளின் வேர்களை கிள்ளி எறிந்த வரலாறு. ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்தவர்கள் படித்து நுகர, எழுச்சி பெற , தாலாட்டி , சீராட்டி, குளிப்பாட்டி பட்டுடுத்திப் பார்க்க வேண்டிய போராளி ராசாத்தி என்பதை யாரும் மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. ஒடுக்கப்பட்ட , தட்டி முறிக்கப்பட்ட, பிளாஞ்சு ,பிளாஞ்சென ப்ளாஞ்சப்பட்ட பிறகு தற்போதைய உரிமைக்குரலாகவும், சவுண்டு பார்ட்டியாகவும் எழுச்சியடைந்தவர் ராசாத்தி. வரலாறுகள் என்றுமே சோக நிழல் படிந்து கிடப்பது உண்மைதானே.

ஏற்கனவே கருப்பனின் மொழிபெயர்ப்பில் காலச்சுமை வெளியீடாக வந்த குப்பம்மா, மொழிபெயர்ப்பில் கருப்பனுக்கு ஏராளமான புகழை ஈட்டித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கன்னடத்தில் ராசாத்தி வயிறு எரிந்து போய் பேசிய கெட்ட வார்த்தைகளை தமிழ்படுத்த கருப்பன் சிரமப்பட்டு அப்படியே தமிழுக்கும் தருவித்திருக்கிறார். சரிதத்தை படிப்போர் வடிக்கும் கண்ணீர்த்துளிகளே அதற்கு சாட்சி.

கொய்யா பழத்தின் கதை ( நாவல் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980 ல் முதல் பதிப்பு வெளி வந்த போதே வாசக உள்ளங்களை கொள்ளையடித்து பின்னர் தமிழில் ஒரு ஆட்டு ஆட்டிய நாவல். ஒரு கொய்யா செடியில் பிஞ்சாகத்தோன்றி, பருத்து பச்சை நிறத்தில் காட்சியளித்து பின்னர் யெல்லோ வர்ணத்திற்கு உருமாறி, கடைசியில் காய்ந்து கருமை நிற ஓடாய் மாறி.., நாகரீக வளர்ச்சியில் அழிந்து போன கொய்யாவின் கதை ஆசிரியரால் நிதானமாக நகர்த்தப்பட தமிழின் கதை கூறல் முறை பயன்பட , நாவல் தமிழின் கிளாசிக் என்ற பட்டத்தை நிலையாக பிடித்துக்கொண்டது. இன்று நாவல் உலகில் வேர்பிடித்து பயங்கரமாய் நின்று விட்டது. கிஹிப்ரூ விமர்சகர் ஈஸ் கே சான் நோபல் பரிசை விட வேறு ஏதோ பெரியதாக இந்த நாவலுக்கு தரப்பட வேண்டும் என்கிறார். மெசபட்டோமியாவிலும் , யுவான் சுவாங்கிலும் வீட்டுக்கு வீடு படித்து மகிழும் ஒரே தமிழ் நாவல் இது. தற்போது மீண்டும் செம்மைப்படுத்தப்பட்டு அட்டையில் இரும்புத்தகடு கொண்டு கட்டமைக்கப்பட்டு செழுமையான மறு தயாரிப்பில் வந்திருக்கிறது.

ஓலை வேய்ந்த சாலை
குமரனின் தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகள்
தொகுப்பாளர் : சின்ன பெருமான்

குமரன் ஏகப்பட்ட கவிதைகளை எழுதியவர். கீ என்கிற தனியிதழை சிரமம் பாராமல் நடத்தியவர். கடன் தொல்லை காரணமாக உள்ளூர் ஏரிக்குள் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டவர். பூடகமாக கவிதைகள் எழுதியவரை வாழ வைக்காமல் விட்ட இந்த சமுதாயத்தை, அவர்பால் அன்பும் நேசமும் கொண்ட சமகால கவிஞர் கூட்டம் இன்னமும் சாடிக்கொண்டேயிருக்கிறது.குமரனின் கவிதைகளில் குப்பைகளை கழித்து தேர்வு செய்தவை இத்தொகுதியில். ஒவ்வொரு கவிதையயும் கிணற்றில் மூழ்கி மூழ்கி அடியாழத்தில் இருந்து பொக்கிஷம் தேடி எடுத்து வரும் நிலையில் சிரமத்துடன் படிமக் கவிதைகளை தேர்ந்தெடுத்ததாக களைப்பில் சின்ன பெருமாள் முன்னுரையில் கூறுகிறார். இதில் இதுவரை வெளிவராமல் இவரது கண்டெடுக்கப்பட்ட கவிதைகளும் அடக்கம். இவை நுட்பமும், படிமங்களோடே நகர்வதும் பின்னர் நொறுங்குவதுமான கவிதைகள்.

அணில்கள் ( சிறுகதைகள் )
சுள்ளிமேட்டு ராமசாமி

1980 லிருந்து 1998 அவரது இறப்புக்காலம் வரை எழுதிய பன்முக ஆளுமை மிக்க சிறுகதைகள், மொத்த சிறுகதைகளும் அடங்கிய கெட்டி அட்டை பதிப்பு.கால வரிசைக்கிரமமாக உன்னிப்பாய் ஊரே கூடி பிழைகள் திருத்தி பிழைகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட வொய்லெட் பதிப்பு. ஏற்கனவே 91 லிருந்து 95 வரையிலான இவரது சிறுகதைகள் முயல்கள் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டு தமிழ் வாசகப் பரப்பை பீதியுறச் செய்தது நினைவிருக்கலாம். இதுவும் போக அன்னாரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுதி விற்பனையில் பட்டையைக் கிளப்பியதும் வாசக நேசங்களுக்கு நினைவிலிருந்து அழிந்து போகாது. காலாகாலத்துக்கும் நின்று நிலைக்கும் தொகுப்பு அணில்கள். படிப்பாளிகள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய பதிப்பு.

இன்று ராத்திரி நான் நாசமாகலாம்:
ப்ரெஞ்ச் கவிதைகள்
தமிழில்: புலிகேசி

சர்ரியலிசத்திற்கும், சாம்பார் ரசத்திர்கும் பெயர் போன ப்ரெஞ்ச் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்க்க தனித்திறமையும் , தனித்த பேடித்தனமில்லாத தைரியமும் வேண்டும்,ப்ரெஞ்ச் கவிதைகளின் முன்னோடி கிட்ஷாவின் குழந்தைப் பாட்டிலிருந்து தற்போதைய இளைய தலைமுறை கவிஞரகள் வரை தேடிக் கண்டறிந்து புலிகேசி பழகு தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். புத்தக கண்காட்சிக்காக அவசரமாக தயாரிக்கப்பட்ட சாதா அட்டை சாதா பேப்பர் தயாரிப்பு.

யோனி
கவிதைகள் : கவிஞர் கமலா

வாழ்வின் துக்ககரமான பகுதிகளிலும் தன் காமம் பற்றி தாள்களில் எழுதிச்செல்லும் கவிஞி கமலாவின் மூன்றாவது தொகுப்பு.வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்
வெளிச்சத்தில் பொத்தல் விழுந்த ஆணுறைகளைப் பற்றி எழுதிக்குவிக்கும் கவி மனம் உலகின் எந்த மூலைகளில் உள்ள கவிஞிகளுக்கே இல்லாது, வெளி உலகத்தை உள்ளுக்குள்ளும் , உள் உலகை வெளியிலும் எழுதித் தீர்த்த கமலா சொற்களை
கலைத்துப் போட்டு கூட்டாகச்சேர்க்கும் பணியை ஒரு சாலைப்பணியாளரின் நேர்த்தியோடு செய்கிறார்.
கவிதைகளில் காமத்தையும் ஆடைகளற்ற நிர்வாணத்தையும் எப்படியோ யோனிகள் , முலைகள் என்று கவிதைக்கு கவிதை ஜம்மென வாசகங்கள் இடம் பெற்றால் சரி என்று ரசிப்பவர்களை கைநீட்டு காதலோடு அழைக்கின்றன் இவரது கவிதைகள்.
ஒளிந்திருந்து பேசிய கதைகள்
தொகுப்பு : தொப்புளான்

திருட்டுக் கொடுத்தவர்களின் புலம்பல்கள் , திருடு போன அலுமினிய தேக்ஸா,
குண்டான் பற்றிய பதிவுகள், கூடவே திருடியவர்களின் கொண்டாட்டங்கள் , சில்மிஷங்கள்.., கூடவே திருடுவதில் நடந்த பிழைகள் என இவைகள் பலவற்றையும் சேர்த்து மிக மிக சிரமப்பட்டு திருடிச்சேகரித்த சிறு சிறு திருட்டுக்கதைகள்.

இவைகள் எல்லாமே தமிழக கிராமங்களில் முன்பு பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடிய சமயத்தில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களின் சேகரிப்பு. தமிழில் இப்படி ஒரு தொகுப்பு வருவது இதுவே முதல் முறை. இவற்றை சேகரிக்க தொப்புளான் பயணப்பட்ட கிராமங்கள் எண்ணிலடங்காதவை.

சூனிய நிழல் ( நாவல்)
தோழர் பெரியசாமி

மொழியின் அடுக்குகள் சிதைவுற்று இசங்களின் போர்வைக்குள் சிக்காமல் வந்த தமிழின் முதல் குதிரைப் பிரதி. ஏற்கனவே ஆசிரியரின் சொந்த வெளியீடாக வந்த பிரதி பத்து வருடம் கழித்து அதே ஆளுமையுடன் ப்ளாஸ்டிக் தாள்களில் வருகிறது. தமிழில் அதிகம் பேசப்படாத நாவல்களில் ஒன்றான சூனிய நிழல் வெறுமைப் பாதையில் செல்லும் புத்தி தடுமாற்றமற்ற நாவலாக அறியப்பட்டிருக்கிறது.

சுள்ளிமேட்டு ராமசாமி 80 லிருந்து 95 வரை ( கட்டுரைகள் )

எழுத்துலகில் பலகாலம் கொடியைக் கட்டிப்பறந்து வாசக மனங்களை அபகரித்துக்கொண்டவர் சுள்ளிமேட்டு ராமசாமி. இவரைப் பற்றி ஏனைய எழுத்தாள பக்த சிரோமணிகள் எழுதிய ஞாபக அடிச்சுவடுகளின் தொகுப்பு. கூடவே இவரது மேடைப்பேச்சுகள், பேசலாம், எழுதலாம் என எழுதி வைத்த முக்கிய குறிப்புகள் எல்லாவற்றையும் சமயத்தில் காசு பார்த்து விடும் நோக்கில் கூட்டாக சேகரித்து வெளிவரும் அவசர பதிப்பு.

தோழர் பெரியசாமி
நினைவோடை : சுள்ளிமேட்டு ராமசாமி

ஆயிரத்தெட்டு பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் நட்புறவோடு இரண்டு சாமிகளும் பழகி உள்ளதை மூடி மறைக்காது திறந்து காட்டும் புத்தகம்.

என் வேதனைகள் ( பதிவு )
கனகா

சிவராமன் திரைப்படத் துறையில் நுழைந்து கலக்கி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தில்லான திரைப்படத்திற்கு வசனம் எழுதிய சிவராமன் நாயகியின் பெயரை கனகா என்று பயன்படுத்தி கதாநாயகனை விட்டு கனகா காபி கொண்டாடி , கனகா துணியை துவையடி,கனகா பெட்ரூம் வாடி என்று வசனங்களை அள்ளித்தெளித்ததால் சிறு பத்திரிக்கை இலக்கிய கூடாரத்தில் கவிதைகளை வீச்சோடு எழுதும் கவிஞி கனகா கொந்தளித்து எழுந்து வைக்கும் புகார்களும் , வாடி போடி என்பனவற்றால் தான் அடைந்த மன உளைச்சல்களையும் பதிவு செய்யும் சிறு புத்தகம். கூடவே காலச்சுமை ஆசிரியர்க்கு அளித்த நேர்காணலில் கதறக்கதற கொட்டிக் குவித்த கண்ணீர்த்துளிகள் இணைப்பாக.

ஏ.பி.பியில் வாங்குங்கள்

# காலச்சுமை பதிப்பக வெளியீடுகளை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுங்கள்

# உங்கள் தேவையையும் முகவரியையும் SMS அனுப்பினால் போதுமானது. போஸ்ட் ஆபிஸ் தேடிக்கொண்டோ , வங்கிகளை தேடிக்கொண்டோ இதற்காக வெய்யிலிலும் , மழையிலும் அலைந்து உடலை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

# புத்தகங்களை உங்கள் நண்பனாக பாவியுங்கள் சிரமம் இராது.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 14

ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' - விமர்சனம்
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,இலங்கை.


ஒருவர் தான் பார்த்த,கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.

ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.
பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே '

எனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...' கவிதைத் தொகுப்பு.

தொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..'
ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

ஆண்களை மயக்கும் மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

சுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா? சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

காலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

படுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

பழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா? உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா?

தொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
மீளவந்து உனைக் காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்

அம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

தொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .

உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!

என வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில் புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!

ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்

உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!

எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!

அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!

இதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.

அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

எனத்தொடரும் கவிதையானது ,

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

என மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.

அடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும்
தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில்
உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும்
கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட
எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

இப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,

இங்கெல்லாம் புரியாத மொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை
விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு
ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!

அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.

எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில்கரைந்தன.

யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:

தொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.

ஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச்சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன

நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்
திசைக்கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
கல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட
ஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை
பாழடைந்த படகுத்துறைகள்
காடடர்ந்த பயிர்நிலங்கள்
தலை கருகிய கற்பகத்தருக்கள்
தரைமட்டமாகிப்போன எங்கள் குடிமனைகள்
எல்லாம்
பேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்

இதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன

எனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.

இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

இதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின் உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

வனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்

காதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும் ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.

பின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.

எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

இதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.
அதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

'என்ன சொல்கிறாய் ?' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய் ?

'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.

என்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?

'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

நிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.

அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!

தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞnihருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?

போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.

நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!

எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?

ஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.

கொட்டும் மழையிலும் - அவள்
சிரித்துக்கொண்டிருப்பாள்
எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்
அவளது வேதனைகளை வெளிக்காட்டும்படியாக
அவளின் முகக்கோலம் அமைந்திருந்தால்
காணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்

என அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன ? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன ? இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.

அவளைத் தாங்கிநின்ற பூமியே !
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே !
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக

இதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்?' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்
கடல் நடுவே கைவிடப்பட்டிருப்பினும்
கரையேறி வந்திருப்பாள்
எவரின் தோட்டத்திலோ
குருவி விரட்டவும் காவல்புரியவும்
நிறுத்திவைக்கப்பட்ட பொம்மைச் சேவகியவள்

எனத் தொடரும் கவிதையானது

அவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்
அவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்
இதுவே அவளது
இன்றைய கதையும்
நாளைய கதையும்

என்பதோடு முற்றுப்பெருகிறது.

இக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக்கேட்டுக் கொள்கிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 3

ராமையாவின் குடிசை

- ஹரன்பிரசன்னா



நீண்ட நாள் நான் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த 'ராமையாவின் குடிசை' என்கிற ஆவணப் படத்தை பத்ரி தந்தார்.

ராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.

தனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.


01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

02. ஆரம்பக் காலம் முதலான பிரச்சினைகள் விளக்கப்பட்டு, அப்பிரச்சினை 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்பதன் தோற்றத்தோடு உச்ச நிலையை அடைவதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

03. தலித்துகள் இருக்கும் இடத்திற்குப் பிரச்சினை செய்ய வரும் பக்கிரிசாமி என்கிற, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான நாயுடுவின் ஆள் மரணம் அடைகிறார். இதற்குப் பழி தீர்க்கும் விதத்தில் தலித்துகள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 44 பேர் ஆளடையாளம் தெரியாமல் கரிக்கட்டையாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.

04. 44 பேர் இறந்ததார்கள் என்று தலித்துகள் தரப்பும், 42 பேர்கள் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பும் தெரிவிக்கிறது. 42 பேர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பெண் தனியாக இறந்து கிடந்ததைச் சேர்த்தால் 43 என்றும், பச்சிளம் குழந்தை ஒன்று கரிக்கட்டையாக இறந்து போயிருந்தால் அதன் தடமே கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் 44 என்றும் ஒருவர் சொல்கிறார். எனக்குப் பதறிவிட்டது.

05. கொல்லப்பட்ட 44 பேர்களில் பலர் குழந்தைகள், பெண்கள்.

06. நாயுடு ஒரு பெண் பித்தர் என்கிற விவரங்களை சில தலித்துகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாயுடுவின் உறவினர் இதை மறுக்கிறார்.

07. நாயுடுவின் உறவினர், சம்பவம் நடந்த அன்று செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர், நாயுடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள், தண்டனையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக வைத்து 'குருதிப்புனல்' நாவலை எழுதிய இந்திரா பார்த்தசாரதியின் ஒரு காட்சியில் தோன்றி, நாயுடுவை ஆண்மை இல்லாதவனாக வைத்ததன் பின்னணியைச் சொல்கிறார். ஒரு நாவலாசிரியராக அவர் நாயுடுவுக்குக் கொடுத்த ஒரு சிறந்த தண்டனை என்று நினைத்துக்கொண்டேன்.

08. ஒருவர் இது சாதிப் பிரச்சினை அல்ல, கூலிப் பிரச்சினை என்கிறார். இன்னொருவர் இதை சாதிப் பிரச்சினை என்கிறார். எனக்கென்னவோ இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருப்பதாகத்தான் தெரிகிறது, இந்த ஆவணப் படத்தைப் பார்த்த வரைக்கும்.

09. கூலி கேட்டுப் போராடும் தலித்துகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இதனை எதிர்த்து, நாயுடுவின் ஆள்கள் வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய வைக்கிறார்கள். உள்ளூர் கூலியாள்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க, போராட்டம் தீவிரமடைகிறது.

10. தலித்துகளை வேட்டையாட வரும் நாயுடுவின் ஆள்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டும் அராஜகம் செய்கிறார்கள். அதனைப் பார்க்கும் 13 வயதுச் சிறுவன் நந்தன், அதிலிருந்து 14 வருடங்கள் கழித்து நாயுடுவைப் பழி வாங்குகிறான்.

11. தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும், பக்கிரிசாமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலித்துகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

12. சி.என். அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் இச்சம்பவம் நடக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்பாக, கம்யூனிஸ்டுகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அண்ணாத்துரையின் அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாகத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின்னர் கருணாநிதி நேரில் சென்று எரிந்துபோன ராமையாவின் குடிசையைப் பார்வையிட்டிருக்கிறார் என்றும் தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

13. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தலித் மக்களின் கரிக்கட்டைத் தேகம் அடங்கிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. நம் கல்வியும் சமூகமும் நமக்குக் கற்றுத்தந்ததவை இவைதானென்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.

14. 1968ல் நடந்த இத்துயரச்சம்பவத்தை பெரியார் தீவிரமாகக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது இணையத்தில் கீழ்வெண்மணி + பெரியார் என்று தேடிப்பாருங்கள். கிடைக்கும் சுட்டிகளில் ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கள். அதற்குப் பின்பு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் நிச்சயமாக நீங்கள் வீரர்தான். இது ஒருபுறமிருக்க, எதையும் கடுமையாகக் கண்டிக்கும் பெரியார், கடுமையான செயல்கள்மூலம் எதிர்வினை புரியும் பெரியார், 44 தலித் மக்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் மென்மையாகத்தான் கண்டித்திருக்கிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

15. எந்த ஒரு பிரச்சினைக்கும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு எனக் கிளம்பும் பெரியார், 44 தலித்துகள் கொல்லப்பட்ட விஷயத்தில் குறைந்தது ஒரு பத்து பேர் குடுமியையாவது ஏன் அறுக்காமல் விட்டார் என்பதுதான் புரியவில்லை.

16. 44 பேர் இறந்தது உணவுக்காக என்று நினைக்கும்போது இச்சமூகம் குறித்த கேள்விகளே மிஞ்சுகின்றன.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - 1

தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது
- வா. மு.கோமு


" தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப்பிளந்து இரண்டு குழிகளிலும் அடக்கம் செய்து விட்டார்கள். காற்று சூழ்ந்திருக்கிறது , மதியத்தில் டைனோசர்கள் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன."

ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் புதியதாக ஏதாவது நாவலோ , சிறுகதைக்கொத்துக்களோ கிடைக்குமா என்று நான் தேடிக்கொண்டிருந்த சமயம்தான் என்று நினைக்கிறேன் அல்லது அப்படி தோணுகிறதோ என்னவோ , கடைக் கல்லாவின் முன் அமர்ந்திருந்த அதிகை நீண்ட நேரமாகவே என்னிடம் ஏன் ஒரே ஒரு கவிதை தொகுப்போடு கவிதை எழுதுவதை நிப்பாட்டிப் போட்டீனீர்கள்? என்று வினவ சென்னிமலை தோழர் ஒரு கணம் மனதில் பளீரென மின்னலிட்டு மறைந்தார்.

கவிதை நாயகிக்கு தொன்னூறுகளில் நிறையப்பேர் ஆடை அணிகலன் பூட்டி அழகுப் பார்த்த நேரத்தில் , கவிதைகளில் இருந்த ஆடை அணிகலன்களை களைந்து , கவிதை தன்னளவில் நிர்வாணமாகவே இருக்கட்டும் என எழுத ஆரம்பித்தவன் நான்.., பத்து , பனிரெண்டு வருடங்களாக எழுதியவற்றுள் இருபத்தி இரண்டு கவிதைகளை மட்டும் வாய்ப்பாடு சைசில் புத்தகமாக 2003 ல் கொண்டு வந்த சமயம் சென்னிமலை தோழருக்கு ஆசையுடன் முதல் பிரதியை நீட்டினேன். சமர்ப்பணம் யாருக்கு? புத்தகத்தோழர் ரகுவிற்கா? பேஸ் பேஸ்.., எல்லாஞ் செரி அவுரு ஈங்கூர்ல இருக்கிற மாதிரின்னா கொண்டி நீட்டி பாக்கச் சொல்லிட்டு , அப்புடியே சரக்கு வாங்கிட்டு வரச்சொன்னம்னா .., மளார்ன்னு சந்தோசத்துல ஏற்பாடு பண்ணுவாப்ல..., ஆளு வெளியில்ல இருக்குது! செரி முதல் கவிதை ஆஹா .., ஆஹா ரெண்டாவது மூனாவது த்தூக் கருமம் புடிச்ச எழவு எனச் சொல்லி புத்தகத்தை வீட்டு வாசலில் எறிந்தார் , இருந்தும் மளாரென ஓடிச்சென்று லுங்கியைத் தூக்கிவிட்டு உட்கார்ந்தார் வாசலில். அன்றோடு கவிதை எழுதுவதை நிப்பாட்டி விட்டேன் என்று அதிகை எழில்நிலவனுக்கு விளக்கிய சமயம் டெலிபோன் அழைக்கவே, அதிகை அதை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் எனது கைப்பேசியும் அழைக்கவே எடுத்து வணக்கம் என்றேன். எதிர்முனை வணக்கம் கிடக்கு கழுதை.., என்றார் நண்பர். சொல்லுங்க .., டவர் குறைவான இடத்துல இருப்பீங்க போலிருக்கு.., இருக்கிற எடமாப் பாத்து நின்னு பேசுங்க என்னுது ரிலையன்ஸாப் போச்சி.., டவுன்லதான் நிக்கேன்.., டவர் இருக்குது அப்பறம் போயிடுது.., ஒரே கூத்து இந்த டப்பிய வெச்சுட்டு.., ஹாங் இப்பக் கேக்குது சொல்லுங்க என்றேன். நண்பர் விசயத்தை சுருக்கமாக கூறக்கூற அதிர்ச்சியில் சிலையாய் நின்று போனேன். திருப்பூர்க்கும் , கூலிப்பாளையத்துக்கும் இடையில் பேசஞ்சர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது , பெட்டி விட்டு பெட்டி தாவுகையில் கை பேலன்ஸ் தவறி விழுந்து நொடியில் தோழர் இறந்து விட்டாராம். ரயில்வே போலிஸ் பாடியை போஸ்ட்மார்ட்டம் செய்து தைத்து சென்னிமலை அனுப்பி விட்டதாம். விசயம் அறிந்ததும் தோழர் தொடர்பான பதினேழு வருட நினைவுகள் சரமாரியாக என்னுள் பெருக்கெடுத்து ஓடின.

கைப்போனில் கதைச்சது யார் உங்களது பெட்டையா? என்றார் அதிகை. நான் மண்டையை இருபுறமும் ஆட்டி மறுத்து விட்டு மண்டையைப் பிடித்தபடி நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். தோழர் என்கிற மனிதரின் மறைவு பற்றிய செய்தியை அதிகைக்கு சொன்னதும் " தோழர் என்றால் ஆமிக்காரரோ? என்றார். ஒரு சில கவிதைகளையும், சிறுகதைகளையும், ஒரே ஒரு நாவலை மட்டுமே தமிழ் இலக்கியத்திற்கு தந்தவரை இலக்கிய உலகு எப்படிக்கேட்க வேண்டுமோ அப்படியே அச்சு அசல் கேட்டார், " ஒரு ரீ சாப்பிடுவோம் " என்றவரிடம் மறுப்பை உதிர்த்து விட்டு கடையை விட்டு கிளம்பினேன்.

தோழரை நேரில் சந்தித்து உரையாடிய எல்லா சந்தர்ப்பங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன, அவை பொக்கிஷங்களாக மனதில் பதுங்கி இருக்கின்றன. கடைசியான சந்திப்புகளில் தோழரின் மனம் சற்று பிறழ்ந்து இருப்பதை அடுத்தவர்கள் தெரியப்படுத்தியிருந்தாலும் இந்த மண்டைக்குள் வெறும் மசாலா மட்டுமே இருப்பதால் அப்படி தோன்றவில்லை.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் முதன் முறையாக ஈங்கூர் ரகுதான் என்னை சென்னிமலை சென்று தோழரைப் பார்த்து வருவோம் வாருங்கள் என்று அழைத்துப் போனார். முதன் முறையாக சென்னிமலை சென்றதும் அப்போதுதான்.

வீட்டில் அம்மாவிடம் சென்னிமலை செல்கிறேன் என்றதும்.., " இப்போதான் நல்ல புத்தி வந்திருக்கு என்றது. நல்ல புத்திக்கும் சென்னிமலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் ஏன்? என்றேன். சாமி கும்பிடத்தானே என்றதும் விளங்கியது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் நண்பரிடம் திருப்பதி போகிறேன் என்று சொல்லுங்கள் மொட்டை போடவா? என்பார்கள் அதுப்போலத்தான் இதுவும்.

கூட்டிப்போன நண்பர் ரகு இப்போது லக்னோவில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். மதிய சாப்பாட்டுக்கு பள்ளியில் இன்னமும் மணியடிக்கவில்லை, நேரம் இருக்கும் போல என்று காகங்கள் வேப்பையிலிருந்து பறந்து போகும் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர், இப்போது ஏதாவது எழுதுகிறிர்களா? என்று கேட்டால், ஏதுங்க அதுக்கெல்லாம் இப்போ நேரம்? கவிதை எழுதீட்டு இருந்தா ஊட்ல சோத்துக்கு குஞ்சி மணிய வாயில வெச்சிக்க வேண்டீதுதான் என்கிறார். சரிப்போயிச்சாட்டாது வாசிக்கிற பழக்கமாச்சிம் உண்டா? என்றால், வெலை என்னங்க ஒவ்வொண்ணும் ஒரு மாட்டுக்கன்னுக்குட்டி வெலை சொல்றான்.., அந்த காசுக்கு நாலு தீவனம் வாங்கி மாடுகளுக்குப் போட்டா அதுக தின்னாலாச்சும் ரெண்டு படி பாலு சேத்திக்கொடுக்கும் என்பார். நல்ல வேளை இப்பெல்லாம் யாரு கவிதை எழுதிட்டு இருக்காங்க செஞ்சிட்டு இருக்காங்க.., அப்படின்னெல்லாம் சொல்லவில்லை.

சென்னிமலை வண்டிப்பேட்டையில் இறங்கியதும் நண்பர் குமரன் சிலையைக் காண்பித்தார். அதை ஒரு பிரம்மாண்டத்தை பார்ப்பதைப்போலவோ , போராட்ட தியாகியைப் பார்ப்பது போன்ற உணர்வுடனோ அப்போது குமரனை பார்க்கவில்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கொடியை குமரன் காத்தது திருப்பூரில். சிலைக்கு பின்புறத்தில் துணிக்கடை,டீக்கடை
ஓட்டல் என்று இருந்தன. மற்றபடி நிறுத்தத்தில் பேரூந்து வருகைக்கு காத்து நின்றிருந்தவர்கள்
என சொற்ப கூட்டமே இருந்தது. நண்பர் திருப்பூரில் "ஓஷோ பேசன்ஸ்" என்ற பெயரில் சங்கீதா தியேட்டரை ஒட்டி மாடியில் கம்பெனி வைத்திருக்கையில் கட்டிங் மாஸ்ட்டராக தோழர் இவரிடம் நான்கு வருடங்கள் பணிபுரிந்தவர் என்பதால் ஏற்கனவே தோழர் வீட்டுக்குபலமுறை வந்து போனவர்தான்.

உத்துக்குளி சாலையில் என்னை மேடேற்றி கூட்டு வந்தவர் " பிராந்திக்கடை" கண்டதும் என்னைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு கடைக்குச் சென்றார். மூன்று கோட்டர் பாட்டில்கள் வாங்கி இடுப்பில் இரண்டையும், சைடு பாக்கெட்டில் ஒன்றையும் செருவிக்கொண்டு மறுபடி ஒரு முறை கண் சிமிட்டி விட்டு நடக்க ஆரம்பித்தவர் பின்னால் நடந்தேன். " இது எதுக்குங்க மணி பத்தரைதானே இருக்கும்? என்றேன். " நீங்க வேற.., நேரங்காலமெல்லாம் தோழருக்கு கெடையாது. அதும்மில்லாம சரக்கோடதான் அவுரு ஊட்டு வாசப்படியயே நாம மிதிக்கோனும், அப்படி போவலின்னா, இங்கெதுக்கு அப்புறம் என்னைப்பாக்க பஸ் ஏறி வரனும்? உங்கூட்டிலயே பொட்டாட்ட சிவனேன்னு கவுந்து படுத்துக் கெடக்க வேண்டீதுதான.., எனக்குனு வாச்சதுக ஒன்னு கூட சுத்தமில்லே என்றுதான் பேசுவாராம். ஒரு மனிதன் சீக்கிரம் சுடுகாடு அனுப்புவதற்கான ஏற்பாட்டோடு செல்வதாகத்தான் பட்டது அப்போது

"புடுங்கிக் கத்தை
கட்டிப் போடலாம்னுதான்
வர்றோம்
ஒன்னத்தீம் புடுங்க முடியாமயே
அடுத்தவன் வாயைப்
பாத்துட்டே போயிடறோம்". - வாழ்க்கை ( தோழர் 1993)

மாரியம்மன் கோவிலையொட்டி விஸ்தாரமான சந்து ஒன்று தெற்கே பிரிந்தது. மேற்குப் புறமாக புளியமரங்கள் நெட்டுக்கு நின்றிருந்தன. அந்த வீதியில் நண்பரும் நானும் செல்கையில் " கடக் கடக்" என்ற ஒலி ஒவ்வொரு வீட்டினுள்ளிருந்தும் கேட்டபடி இருந்தது. அவர்களெல்லாம் வீட்டுனுள்ளேயே கைத்தறி நெய்து கொண்டிருந்தார்கள் கொஞ்ச தூரம் வந்ததும் ஒரு வீட்டின் படலை உள்புறமாக தள்ளி நண்பர் உள் செல்ல நானும் சென்று படலை பழையபடி சாத்தினேன். வீட்டின் முன்புறம் பந்தக்காலில் சங்கிலியோடு கருத்த புஷ்டியான நாய் கட்டப்பட்டிருந்தது.

படலை நீக்கி உள்நுழைந்த சமயம் படுத்திருந்த அது விருட்டென எழுந்து எங்களை நோக்கி துடைச் சதையை கவ்வி இழுத்து விடுவது போலப் பாய்ந்து குரைத்து வந்தது. சங்கிலியின் தூரம் குறைவாக இருக்கவே கோபத்துடன் குரைத்து சங்கிலியை வேறு ஒரு கடி கடித்து உதறியது. எனக்கு நாய் என்றால் சிறு வயதிலிருந்தே பயம்தான். ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம் நாய்க்கடிப்பட்டு தொப்புள் சுற்றிலும் பத்து ஊசி போட்ட ஞாபகம் கருநாய்களைக்
கண்டால் ஞாபகமாகிவிடும்.

- டேய் மணி கம்முனிருக்க மாட்டே.., பன்னாட்டு சாஸ்த்தியாப் போச்சாட்ட இருக்குதே, ஊட்டுக்கு ஒருத்தரையுமே வர வுடமாட்டியா? " சத்தமிட்டபடி வெற்று மேலோடு லுங்கியை உதறிக்கட்டியபடி தோழர் வீட்டினுள்ளிருந்து வந்தார். ரகு கொஞ்சம் ஒதுங்கி , " வாயில்லாச் சீவனப்போட்டு கட்டி வெச்சு வளர்க்கிறீங்களே.., நாயமா தோழர்" என்றார்.

- நீங்க வேற அவுத்துட்ட சடுதிக்கி கெடையில் நிக்குதிங்றீங்களா? துரூவா பீக்காட்டுக்கு ஓடி வயித்த ரப்பீட்டு ஓடியாந்து ரோட்டும் பேர்லேயே நின்னுக்கும். போற வார வண்டிகள முடுக்கீட்டு மேக்கைக்கும் கிழக்கைக்கும் ஓடீட்டு என்ன ரவுசுங்றீங்க.

- நாயி ஜம்முனு இருக்குது வாலை வெட்டீட்டீங்ளே.., மொண்ணை வால் நாயின்னு ஆயிப்போச்சுங்களே.

- அது எங்கப்பன் பண்ண வேலை, வாலு சு?ண்டுக்குதுன்னு முன்னீல வெச்சு இது சிறுசா இருக்கப்பவே தறிச்சுப் போட்டாப்ல, வாலு சுருண்ட நாயிதான் ஊட்டுக்கு ஆகாதாம்ல. இதுக்கு கொசுவர்த்தி சுருள் கணக்கா மூணு சுத்து சுருள் இருந்துச்சு. அது கெடந்து சாட்டாது வாங்க உள்ளார. டீ வெக்கிலாம்னா ஊட்ல சனமே இல்ல. தலை ஏனோ வலிக்குதுடான்னு
எங்கம்மா சித்த முந்தித்தான் திண்ணைல நீட்டி கெடந்திச்சு. மளார்ன்னு நூலு போட டெக்சுக்கு போயிடுச்சு . சரி நாம வெக்கலாம்னா டீத்தூள் டப்பா எங்க கெடக்கோ .., சக்கரை டப்பாவுல இருக்கோ என்னமோ.., சரீங்க ரகு கூட ஆரவோ கூட்டிட்டு வந்திருக்கீங்களே .., பெரிய்ய எழுத்தாளரா? ஆடு திருடுன கொரவானாட்ட இருக்குற முழிய மாத்தச் சொல்லுங்க
நக்சலைட்டுனு புடிச்சிக்கொண்டி உள்ளார வெச்சு நிமித்தீருவான், அப்பறம் பஞ்சாயத்துக்கு நாமதான் படியேறனும், உக்கோருங்க இப்டி ஷோபாவுல. என்ன விஷயம்? எப்படி போயிக்கிட்டிருக்கு?


- பேசிட்டு இருக்கதான் வந்தோம் தோழர்.., மேற்படி வாங்கியாந்திருக்கேன், கொறிச்சுக்க ஏதாச்சிம் முறுக்கு, மிச்சர் ஊட்ல இருக்கா?


- இங்கென்ன மசுரா இருக்குது., வெறுஞ்சோறும் , டவரால துளி பண்ணக்கீரைய வணக்கி வச்சதுதான்.., வாரதுதான் வாரீங்க ஒரு நேந்தர்ஞ் சிப்ஸோ. வறுக்கியோ வாங்கியாந்திருந்தா பரக் பரக்குன்னு கொறிச்சிட்டே நாயம் போட்டு நொக்கு வாங்கியிருக்கலாம், சித்த சடவா இருக்குதுன்னு நீட்டி உட்டு இப்பத்தான் உழுந்தேன் பாயில.

இப்படி தொட்டதுக்கெல்லாம் எகத்தாளம் பேசும் மனிதனை வாழ்வில் முதலாகப் பார்த்த கணம் கொஞ்சம் அதிர்ச்சியாக எனக்கு இருந்ததுதான் என்றாலும், தோழருக்காக அவரின் நட்பை வேண்டி என் பங்கிற்கு வெளியே கடைத்தெருவிற்கு வந்து எதிர்ப்பட்ட கடை ஒன்றில் குச்சிக்கெழங்கு சிப்ஸ், நேந்தரஞ் சிப்ஸ், செவ்வாழை
ஆறு பழம் என வாங்கி ஓடி வந்தேன்.

உள்ளே அவர்கள் தரையில் பாய் விரித்து அமர்ந்து முதல் ரவுண்டை ஆரம்பித்திருந்தார்கள். நண்பர் தனது பேண்டை உருவி ஷோபாமீது போட்டு தோழரின் லுங்கி ஒன்றை அணிந்து கால்நீட்டி அமர்ந்திருந்தார். மூட்டாத லுங்கியை சுத்துப் போட்டு சொருவி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

- அந்த சுவத்துல மூனாவது சுவிட்சை தட்டி விடுங்க நண்பரே.., மேல காத்தாடி
சுத்தட்டும்.. உள்ளே நுழைந்த என்னிடம் தோழர் பீடி புகையும் விரலில் நீட்டி சொன்னார். நான் சுவிட்சைப் போட்ட சமயம் மின்சாரம் இல்லை போல.

என்ன ஒரு அட்டூழியம் பாருங்க ரகு,, ஒரு காத்தாடி கூட நமக்கு சதி பண்ணுது . மனுசன் நிம்மதியா இருக்குற நேரமே குடிக்கிர நேரம்தான், சரி வந்தா காத்தாடி சுத்தட்டும்.., நீங்க சரக்கு அடிப்பீங்களா நண்பரே! இதென்ன வாய்க்குள்ளார என்னேரமும் போண்டா கெடக்கறாப்பல உம்முனு இருக்கீங்க? கூச்சப்படாம ஒக்காருங்க. அதுகளை எல்லாம் நேர்ல பாத்துருக்கீங்ளா? என்றபடி தோழர் இரண்டு கைகளையும் நீட்டி பந்து பிடிப்பது போல பிடித்து உருட்டிக் காட்டினார்.
என்ன நண்பரே! புடிச்சு கசக்கிப் பாத்திருக்கீங்ளா? டியூப்லைட்டா இருப்பீங்க போலிருக்கே,, உங்களுக்கு எந்த ஊரு ?

ஈரோடு என்றேன்.

நண்பரே ஈரோடுங்கறது சரி ., ஈரோட்ல எந்த ஏரியா? ஏரியான்னு ஒன்னு இருக்கும்ல.

சூரம்பட்டில

சூரம்பட்டிலயா? அங்க பசக இருக்காங்க எதுனா பிரச்சனைன்ன என் கையில சொல்லுங்க, தட்டி லேப்பறதுக்கு அவிகளே போதும், துளி ஊத்திக்குங்க என்றவர் மூன்றாவது சில்வர் தம்ளரில் பாதி அளவு சரக்கு ஊற்றி , தண்ணீர் கலந்து எடுத்து நீட்டினார். ஒன்றுமே சொல்லாமல் வாங்கி வாயில் அன்னாந்து ஊற்றிக்கொண்டேன்.

அட நண்பரே, வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லியிர்ருந்தீங்னா மடக்குனு நானே ஊத்தியிருப்பேன்.., அது சரி நாங்க பொழங்கற சாதிதான் வாயை ஒட்டியே குடியுங்க.., அன்னாந்து இனி ஊத்துனீங்னா எனக்கு கேவலம். சரி உடுங்க.., ஏனுங்க ரகு நண்பர் என்ன எழுதிட்டு இருக்காரு.., கேட்டாவுது சொல்லுங்க.., ரொம்ப கூச்சப்படறாப்ல..என்றதும் உள்ளே துளி சரக்கு இறங்கி விட்ட வேகத்தில் , சிறுகதைகள் எழுதுவதையும் எப்போதாவது கவிதை எழுதுவதையும் தோழரிடம் கூறினேன்.

சிறுகதை எழுதிறீங்ளா? அடக்கொடுமையே .. அதுல நீங்க எழுதுறதுக்கு என்னத்த உட்டு வெச்சாப்ல அந்த புதுமைப்பித்தன் ? அதான் இந்தாங்கடான்னு எழுதி வச்சிட்டு போயிச் சேந்தூட்டப்லையே! இப்போது நண்பர்தான் எனக்கு உதவியாய் பேச்சை வளர்த்தார். அப்படி எப்படிங்க தோழர் நீங்க சொல்லலாம்! அது ஒரு காலக்கட்டம்தானே.

சரி சொல்லப்படாது தான் , சொன்னாத்தானே நான் தோழர். பேச்சு மட்டும் இல்லீன்னா நான் டுபுக்கு டோங்கிர் தோழர் ஆயிடுவேன். கதையின்னா ஒருத்தர் எழுதுனாப்லையே அஸ்வகோஷோ முட்டக்கோஷோ ஒருத்தரு.., புற்றில் உறையும் பாம்புகள் அதான்.., எழுதுனா அது மாதிரி ஒன்ன எழுதீட்டு அவராட்டவெ கதை எழுதுறத நீங்க நிப்பாட்டிக்கணும் நண்பரே.

அதுகள எல்லாம் தாண்டின எழுத்து என்னோடதுன்னு ஒரு நெனப்பு எனக்குள்ளார எப்பயும் ஓடிட்டே இருக்குங்க தோழர்.

ரகு இந்த நண்பர் ஒரு வாட்டியாவது எப்பாச்சிம் ஜெயிச்சுட்டு சாவட்டும் என்ன ஒரு நம்பிக்கை ஒலி ,ஒளி பாருங்க.., உங்க வாழ்க்கைய நீங்க தகிரீமா எழுதுங்க நண்பரே. பிரச்சனை வந்தா இந்த தோழர் முன்னாடி நிப்பான், நான் பாத்துக்கிறேன், இன்னொரு பெக் ஊத்திக்குங்க,, பத்தாம் நெம்பர் பீடி ஒன்னு பத்த வெச்சு ஊதுங்க என்றவர் என் முன் பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் நீட்ட மறுக்காமல் வாங்கி பற்ற வைத்து ஊதினேன்.

நண்பரே நாம இப்போ மசமசப்புல இருக்கம், பழம் எடுத்து புட்டுச்சாப்பிடுங்க . வெறும் சரக்கவே உள்ளார ஊத்துனீங்கன்னா கொடலு நாசமாப் போயி உங்களை நம்பீட்டு இருக்குற இலக்கியத்தை ஏமாத்திட்டு கெளம்பீடுவீங்க. குடிச்சா பரவாயில்ல.., வகுறு ரொம்ப சாப்பிடுங்க. உங்க கவிதையில ஒன்னு நீட்டமா இல்லாம பொட்டிக் கவிதை ஒன்னு சொல்லுங்க.., கேப்போம் வெக்கப்படாம பாட்டா வேணாலும் பாடுங்க, ரகு கூட்டிட்டி வந்திருக்கார்னா நீங்க பெரிய்ய ஆளாத்தான் இருக்கோனும்

" எல்லாம் உணர்ந்தவன் சொல்லிப்போனான்
எல்லாம் பொய் என்று - ஏனென்று கேட்க
நானாக உணர வேண்டுமாம். "

அடங் கொக்க மக்கா.., நீங்க மீறுன பொயட் நண்பரே, வெளையாட்டுக்கு சொல்லுலே .., என்ன பயங்கரம், " என தோழர் சொல்ல, ரகு என்னிடம் திரும்பினார் " தோழரே, பாராட்டிட்டாப்ல , நீங்க இனிமே தைரியமா எழுதலாம் . ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்ற மாதிரிதான்", என்றார்.

முதன் முதலாக ஒரு தாதா ரேஞ்சிக்கு இருக்கும் படைப்பாளியிடம் பாராட்டு பத்திரம் வாங்கவா நான் இங்கு வந்தது? கோவையில் எண்பதுகளின் கடைசியில் சுற்றிக் கொண்டிருந்த போது இதைத்தானே செய்துகொண்டு இருந்தேன். தெருச் சண்டையில் கலந்து மிதி வாங்கி , மிதி கொடுத்து ஒளிந்து ஒளிந்து திரிந்தவன் தானே, இந்த தோழரும் பயம் பீறிட எங்காவது ஓடி ஒளிந்திருப்பாரா? சோற்றுக்கு வழியில்லாமல் ஈரத்துணியை வயித்துக்கு கட்டிக்கொண்டு இரவையும் பகலையும் கழித்திருப்பாரா?

தோழர் நீங்க என்னை தட்டிக்கொடுக்கனும் , பாராட்டனும் , மேலும் எழுதத்தூண்டனும்னு உங்களை பார்க்க வரலை அதுமில்லாம உங்க வீட்டில மருந்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லை . புதுமைப்பித்தனை நீங்க வாசீத்தே இருக்க முடியாது" என்று உறுதியாக சொன்னேன். அதே சமயம் மின்சாரம் வந்து மேலே காத்தாடி சுழல ஆரம்பித்தது. தோழர் இரண்டு கால்களையும் விரித்து சுழலும் காத்தாடியையும் அண்ணாந்து ஒரு முறை பார்த்துப் பேசினார்.
நான் புதுமைப்பித்தனை படிச்சதில்லை, பாரதிய படிச்சதில்லை மார்க்சியமும் படிச்சதில்லை.., படிச்சேதான் ஆகோனுங்ற அவசியமும் எனக்கு இல்லை . எல்லாம் கேள்வி அறிவுதான். பத்து இடத்துல பத்து பேர் பேசியதை வெச்சுத்தான் நான் உறுதியா பேசுவேன். முடிஞ்ச மட்டிலும் தமிழ் இலக்கியத்தை யார்கிட்ட வேணாலும் காப்பாத்தச் சொல்லுவேன். சரி நண்பரே , நான் ஏதோ இலக்கியம்னு நெனச்சுட்டு எப்பாச்சிம் எழுதுறவன். என்னை சந்திக்க ஏன் வந்தீங்க ?

பார்த்து பேசீட்டு , கொஞ்சம் சரக்கு ஊத்தீட்டு கொண்டாட்டமா இருந்துட்டு போகலாம்னு தான் ரகு கூட்டி வந்தார். அதானே.., கொண்டாட்டத்துக்குத்தானே இப்ப ஊத்திக்கிட்டம்.., பத்தலை அப்படின்னா மறுக்காவும் வாங்கியாந்து குடிப்பம். என்ன இப்ப ? சரி நண்பரே எந்த நேரத்துல எழுதுவீங்க.., நானெல்லாம் தோணறப்ப எழுதுறதுதான்.. சில எழுத்தாளர்கள் டீயைக்குடிச்சிட்டே எழுதுறாங்களாம்.., சிலரு பாட்டுப்போட்டு கேட்டுட்டு , சிலரு தண்ணிய போட்டுட்டு.., இப்ப போன வாரம் கேள்விபட்டேன்.., ஒரு எழுத்தாளரு தன்னோட மனைவிய துணிகளை அவுக்கச்சொல்லி ரூம்ல அதுக்கும் இதுக்கும் நடக்கச்சொல்லீட்டு மூடு கெளம்பி எழுதுவாராமா.., நீங்க நகத்தை கொறிச்சுட்டே எழுதுவீங்களாட்ட இருக்குது.., ஒரு விரல்லயும் நகத்தைக் காணமே! பயங்கரமா எழுதுறேண்ட்டு விரலைத் தின்னு போடாதீங்க..

இந்த முதல் சந்திப்பை இத்தனை வருடம் கழிந்தும் நான் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு காரணம் என்று எதுவுமில்லை. ஏற்கனவே தோழர் பற்றியான குறிப்புகளை கவிதாசரண் மற்றும் சுகன் இதழ்களில் அவ்வப்போது வருடத்திற்கு ஒரு முறையேனும் அவரது மனப்பிறழ்வுகளையும் வாழ்க்கை மீதான ஆர்வத்தையும் முடிந்த அளவு பதிவு செய்திருக்கிறேன். இந்த படைப்புகளை என் வாயிலாகவே தோழர் கண்ணுற்றபோது " எதுக்கு இந்த வேண்டாத வேலை .., என்ன கொன்னே போட்டீயே என்னமோ பண்ணு .. ஆமா இப்படி குறிப்புகளா கதை எழுதுறீயே படிக்கறவிய என்னதான் சொல்றாக? யாருக்கு என்ன புரியப்போவுது. எனக்கே ஒன்னும் புரியல.. சின்னப்பொடுசு கொஞ்சம் லேட்டா ஊடு போனா என்ன சொல்லுது தெரியுமா? யம்மோவ அப்பன் சென்னிமலையிலேயே மல்லு குடிச்சுட்டு , இசியத் தின்னுட்டு வந்திடுச்சு.., அப்பன் சோத்தை எனக்குப் போடு" அப்பிடுங்குது . சரக்கடிச்சா கண்ணு இப்ப செவந்து கோவப்பழமாட்ட மின்னுதா மளார்னு கண்டுபுடிச்சுக்குது..,

அது பேசறதுக்கு நீ எழுதுறது எவ்வளவோ பரவாயில்ல போ" என்றார்.

மூத்த எழுத்தாளர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மறு நிமிசத்திலிருந்து பேரிதழ்கள் அவரது நினைவுகளை பலரிடம் எழுதி வாங்கிப் பெற்று மலர் வெளியிட்டு அஞ்சலி செய்கிறது, முன்பெல்லாம் ஏது இப்படி? சிற்றிதழ்கள் ஒரு கட்டம் கட்டி பெருந்தகையின் மறைவுக்கு அஞ்சலி என்று போட்டு விடுவார்கள். வந்து கொண்டிருந்த இதழ்களில் ஏதேனும் ஒன்று மட்டும் ரூபாய் 200 லிருந்து 300 க்குள் அன்னாரது புகைப்படம் ஒன்றை ப்ளாக் செய்து இதழின் முகப்பில் பதிந்திருக்கும்.இன்று அப்படி இல்லைதான். ஒரே எழுத்தாளரே எல்லா பேரிதழ்களிலும் இறந்த பெருந்தகை பற்றி வகை வகையாய் எழுதி வெளிவந்திருக்கும் . கிராமத்திலேயே சுற்றுவதால் இதற்கெல்லாம் பைசா வாங்கிக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

இப்படியான நினைவோடை என்று எனக்கு எழுதுவதாக இருந்தால் ஒரு கிங்க்பிசர் பீருக்காவுது வகைச்சல் பண்ணீட்டு எழுது , பீரை வாங்கி ஒடச்சு மூனு மூடிய நெலத்துல ஊத்தீட்டு அப்புறமா நீ ஏத்திக்க. ஆர், சண்முகசுந்தரத்தோட எழுத்து நம்ம மண்ணு எழுத்துதான், இன்னமும் அவரை பேசீட்டு இருக்காங்கள்ள, அது மாதிரி நீ செத்துட்டாலும் பத்து வருசத்துக்காவுது பேசுற மாதிரி ஒரு எழுத்து எழுதீட்டு செத்துப் போயிரு . கொள்கே, கோட்பாடு,இயம்னு யாரு பொறத்தாண்டியும் நீ போயிட்டீன்னா உன்னோட நீ என்ன நினைக்கிறியோ அதான் அங்க இருக்கனும் . ஒரு கோட்பாட்டாளர் எழுதினா உன்னோட வாசகர்கள் அதை எளிமையா கண்டுபுடிச்சி காறித்துப்பிடுவாங்க.., கவனமா இருக்கனும் குறிப்புகள்

1. தனியாக நடக்கும் போது எஸ்.பி,பியின் பாடல்களில் ஏதேனுமொன்றை பாடியபடி செல்வதும்,குழந்தைகளின் செய்கைகளை நின்று நிதானித்து பார்த்து
ரசிப்பதும், காற்றில் விரலால் " உலகம் " என்று எழுதிப்பார்ப்பதும் இவரது பழக்கங்கள். சுந்தர ராமசாமி இப்படி செய்வார் என்று ஜெயமோகன் உயிர்மையில்
எழுதியிருந்தார். காற்றில் " அ" போடுவது அவர் வழக்கமென்று,

2. சாருவின் கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் என்னிடம் கேட்டு வாங்கி எடுத்துச் சென்று வாசித்தவர் பின்னர் கூறுகையில் " இவுருக்கு தான்
சொல்றது தான் பெருசு.. கேட்டுக்கோ" அப்புடிங்ற நெனப்பு உள்ளுக்குள்ளார இருக்கு. இளையராஜாவை இவுருக்கு புடிக்காம போனது விளங்கலை,
மிகப்பெருசை சிறுசா சொல்றதும், ஒன்னுமில்லாததை ஊதிப்பெருசாக்கி காட்டறதுமே இவரு வேலையாட்ட இருக்கு. வாரா வாரம் ஒவ்வொரு கோனல் பக்கமா
படிச்ச திருப்தியா இருக்கும்னு நெனைக்கேன். ஒட்டுக்கா , ஓரேமுட்டா படிக்கறப்ப எரிச்ச வருது.

3. தோழருக்கு மிக பிடித்தமான திரைப்படம் " இம்சை அரசன் 23 ம் புலிகேசி" " புறாவுக்காக போரா? என்ன அக்கப் போராக இருக்கிறது ? யாரங்கே
யாரடா அங்கே.., என்கிற வசனங்களை நண்பர்கள் மத்தியில் கூறி சிரிப்பில் ஆழ்த்தியவர். என்னிடம் தனித்து அவர் கூறியது.., " எம்பட சின்ன பொடுசு
இன்னும் என்னைப்பார்த்து கேட்கும் .., " அங்கே என்ன தெரிகிறது?

4. தோழருடன் கடைசியாக சென்னிமலை அண்ணமார் திரையரங்கில் பார்த்த படம் சிவாஜி. இடைவேளை சமயத்தில் இருவரும் வெளியே சிகரெட் ஊதியபடி நின்றிருந்த
சமயம் ரசிகர் ஒருவர் சைசாக தோழரை நெருங்கி சன்னமாகப் பேசினார். அவர் கையிலும் சிகரென் புகைந்தபடி இருந்தது. " ஏனுங் ரஜினி சார் மொளகா திங்கறாரே
.., கிட்டக்காட்டறப்போ ரெண்டு மூனு மொளகா நெசமாலுந்தின்னுருப்பாருங்கல், அப்புறம் மொளகா மாதிரி முட்டாயி செஞ்சு தின்னிருப்பாப்ல அப்புடித்தானுங்?
என்றபோதும் தோழர் என் முகம் பார்த்து " முடியில" என்றபோது அவரது காது வழியாகவும் சிகரெட் புகை வந்தது.

5. நீ எப்பாச்சிம் இதை எழுது என தோழர் என்னிடம் சில சந்தர்ப்பங்களில் சிலவற்றை சொல்வார். இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒன்று ஞாபகம் வருகிறது.
தோழரின் நண்பர் தலையில் உருமாலைக் கட்டு கட்டிக்கொண்டு பீடி கையில் புகைய தன் பசுமாட்டை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார், " ஏங்க மாம்ஸ் மட்ட மத்தியானத்துல
மாட்டை இழுத்துட்டு போறீங்க..? என்று தோழர் வினவ " ஒன்னுமில்ல தோழர் மாட்டை பிங் பாக் பண்ண கூட்டிட்டு போறேன்" என்றிருக்கிறார்.( சினைக்கு காளையிடம் கூட்டிச்செல்வது) மற்றொரு நண்பர் தோழரிடம் புலம்பியது, :" என்ன நிம்மிதிய கலியாணம் பண்டி நானு கண்டேன் தோழர்.., இவளுங்கள பிங்பாங்க் திங்கட் கிழமை பண்ணனும்னா இந்த வாரம் திங்கக்கெழமைல இருந்து நைசு பண்ட வேண்டி இருக்குது என்னா ஒரு கேவலப் பொழப்பு பாருங்க " .

6. கடைசியான சந்திப்புகளில் , " மொகுடு முட்டீட்டுது , மொகுடி முட்டீட்டுது கெளம்பித்தான் ஆவோனுமாட்ட இருக்குது பொழப்பத் தேடி. " அப்படின்னு சொல்லிக்கொண்டேயிருந்தார்.
( கடன் எச்சாயிட்டுது)

7. டீ சாப்பிடும் போதெல்லாம் வறுக்கு ஒன்னு இருந்தா கொறிச்சுட்டே குடிக்கலாம் எனக்கூறி விட்டு என்னைப்பார்த்து சிரிப்பவர். வறுக்கிப்பிரியர், தோழருடன் பியர் அருந்தும் போது
அவர் கூறுவது இன்னம் காதில் ஒலிக்கிறது. " எட்டு வருசத்துக்கு முன்னால உங்க அப்பன் செத்தப்ப மறு வாரமே இன்னொரு எழவுக்கு உன் ஊடு வரனும்னுதான் நண்பர்கள் பேசினோம்.
நோவுல நீயும் போயிடுவே அப்படின்னு.., கடவுளு கெட்டிக்காரரு , உன்னைய பொழக்க வெச்சி பீரு குடிக்கவாவது உட்டு வெச்சிருக்காரு".

8. " மணல் கடிகை" ன்னு ஒரு புத்தகம் திருப்பூரை சுத்தி எழுதப்பட்டிருக்கு அப்புடின்னியே குடுத்திருந்தா படிச்சிருப்பன்ல . " என்ற தோழருக்கு " படிக்க கொடுத்தவரு அவசரம்னு வாங்கிட்டாரு அதுல திருப்பூரை பத்தி நாம புதுசா தெரிஞ்சிக்கிற அளவுக்கு ஒன்னுமில்ல தோழர் என்றேன். " இல்ல சொன்னியேன்னு கேட்டேன்" என்றவருக்கு கொடுத்திருந்தால் ஏடாகூடமாய் நடந்திருக்க வாய்ப்பு இருந்ததை சொல்லவில்லை, கடைசியா அவர் படித்த நாவல் இலக்குமி குமரனின் " அக ஒட்டு" , மோசமில்லை என்று ஒரே வரியில் கூறி கொடுத்துச்சென்றார். ஜே ஜே சில குறிப்புகள் படித்தவர் அதில் அநுபந்தம் 2ல் ஜேஜேயின் புத்தகங்கள், கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள், சந்நியாசிகள், நூல் நிலையங்களின் ஜன்னல்கள் இதெல்லாம் வந்திடுச்சா? வந்திருந்தா குடேன் படிக்க என்றார்.

9. தோழர் மறைவுக்குப் பிறகு பதினைந்தாம் நாள் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றிருந்த சமயம் அவரது துணைவியார் ஒரு துண்டுக்காகிததை கொண்டு வந்து என்னிடம் நீட்டினார். இந்த
நினைவுக்குறிப்பை எழுதும் இச்சமயத்தில் பத்திரப்படுத்தியிருந்த தாளை எடுத்து விரித்தேன், அவசரத்தில் அடித்து அடித்து எழுதிய கவிதை அது. எதை சொல்ல வர இதை எழுதினார் என்று தெரியவில்லை.

தோழரின் வெளி வராத இந்தக் கவிதையை நீங்களும் பாருங்களேன். எப்போதும் வந்து போகும் சின்னான் என்று தலைப்பிட்டிருக்கிறார் தோழர்.

சின்னான் தளவாய்பாளையத்துக்காரன்
எல்லா வீடுகளுக்கும் சென்று போய் வருவான்
இட்ட பணி அனைத்தும் முகம் சுணங்காமல்
செய்பவனுக்கு, அடுத்த வீட்டு சமாச்சாரங்களை
அடுத்தடுத்த வீடுகளுக்கு பறப்பி விடத்தெரியாது.
முசை பிடித்த நாயொன்றின் கடிபட்டு
தொப்புள் சுற்றி ஊசி போட்டவன்
ஒரு மாத இடைவேளைக்குப் பின் எனைக்
காண வந்தவன், முட்டுச்சேலை உள்ளதா
துவைத்துப் போட்டுப் போகிறேன் என்று !
அப்படிப்பட்ட பணி எதையும் அவனுக்கு
நான் இதுவரை கொடுத்ததுமில்லை.
ஏதோ ஞாவத்தில் தவறாக கேட்டுவிட்டேன்
என்றவன் நாய்களை கொல்வது
எளிதான காரியம் என்றான்.
பூனையாகட்டும் முயலாகட்டும் கழுத்தை
கையில் பிடித்து இறுக்கினாலே போதுமானது
என்ன கால்களால் கொஞ்சம் பிறாண்டும் என்றான்,
நாய்களை மரத்தில் கட்டி வைத்து
குண்டாந்தடியில் மண்டையில் ஒரு போடு
போட்டால் போதும் மரித்துவிடும் என்றான்
ஏன் இந்த கொலை வெறி என்றேன்.
நாய்கள் நம்மை கடிப்பதும்
நாம் நாய்களை கொல்வதும் வழக்கமாக
நடப்பதுதானே என்றவன்
குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டு
வாங்கி குடித்து, நாத்து நடும் வேலை
இருப்பதாய்க் கூறி விடைபெற்றான்.


(" தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது" சிறுகதை உயிர் எழுத்து வெளியீடாக வந்திருக்கும் தவளைகள் குதிக்கும் வயிறு தொகுதிக்காக புதிதாக எழுதி சேர்க்கப்பட்டது.)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 2


'ஒரு நண்பனின் கதை இது'
- ஹரன் பிரசன்னா


முன்குறிப்பு : இது கையறுநிலையில் எழுதப்பட்ட சுயபுலம்பல் மட்டுமே.
ஜெயகாந்தன் ஒருதடவை 'இறந்தவனைக் கண்டு அழும் மனிதன் ஒவ்வொருவனும் தன் இறப்பை அதில் கண்டே அழுகிறான்' என்ற ரீதியில் எழுதியிருந்தார். இதுகுறித்து நிறைய யோசித்திருக்கிறேன். இதில் எங்கோ உண்மையிருக்கிறது, ஆனால் அது சரியாகச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது.

நேற்று (17-11-2008) காலையே ஒரு மரணச் செய்தியாக, நண்பன் ஒருவனின் அகால மரணச் செய்தியாக, மிகப்பெரிய இடியைப் போல வந்திறங்கியது அச்செய்தி. என் வயதுதான். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 என்னுடன் படித்தான். நல்ல சிகப்பில், நிறைய முடியுடன், கொஞ்சம் பூசினாற் போல், மிக அழகாக இருப்பான். கல்லூரியில் பலர் இயற்பியல் எடுக்க, நான் மட்டும் வேதியியல் எடுத்தேன். அவன் மட்டும் கணிதம் எடுத்தான்.


நான் பத்தாம் வகுப்பு படித்தது மதுரையில். பதினொன்றாம் வகுப்புக்கு திருநெல்வேலியில் உள்ள மதிதா இந்துக்கல்லூரியில் சேர்ந்தேன். அங்கேதான் அவன் பரிச்சயம் ஆனது. எல்லா மாணவர்களும் தனித்தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவன்தான் முதன்முதலில் நான்கைந்து பேர் சேர்ந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியவன். அதேபோல், அந்த கூட்டம் அதிகமாகிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தவன். அவன் அம்மா அவனுக்கு விதவிதமாகச் செய்து தந்து அனுப்புவார்கள். ஒருகட்டத்தில் மதியம் வரை காத்திராமல் முதல் இடைவேளையிலேயே அதனை உண்ண ஆரம்பித்தோம். எங்கள் உணவிலிருந்து அவனுக்குத் தருவோம்.


உண்டுவிட்டு, மதிதா இந்துக் கல்லூரியைச் சுற்றி வருவோம். சும்மா செல்லாமல் கடலை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு போகலாம் என்று சொல்வான். வாழ்த்து அட்டை விற்கும் கடையில், காதலர்களுக்கான வாழ்த்து அட்டையைக் காண்பிப்பான். குறைந்த ஆடைகளில் உடலுறவுக்கு அழைக்கும்விதமாக ஆணும் பெண்ணும் அந்த வாழ்த்து அட்டைகளில் இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வருவோம்.


அவனுக்கு நெய்ச்சோறும் வெல்லமும் மிகவும் பிடிக்கும். யாராவது அதைக் கொண்டுவந்தால், அவன் கொண்டுவரும் சப்பாத்தி அல்லது பூரியைக் கொடுத்துவிட்டு அதை வாங்கிக்கொள்வான்.


நண்பர்களுக்குள் ஓட்டிக்கொள்வது என்பதைத் தொடங்கி வைத்தது அவன்தான். என்னுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று கட்சி மாறி, 'இப்ப உங்கட்சி இல்ல, அவங்கட்சி' என்று சொல்லி, அதுவரை எதையெல்லாம் சப்போர்ட் செய்தானோ அதையெல்லாம் எதிர்த்துப் பேசுவான். ஒவ்வொரு சமயம் வகுப்புக்குள் நுழையும்போதே, 'நான் இன்னைக்கு அவன் சைட்ல' என்று சொல்லிக்கொண்டே வருவான்.


மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில், எங்களில் யாரேனும் ஒருவர் தோள்மீது கைபோட்டு பேசிக்கொண்டே சென்று, ஏதேனும் மரத்தடிக்குக் கீழே சென்றவுடன், மரத்தடியில் கிளையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு ஓடுவான். அவன் ஓடிவிடுவான். இலைகளில் சேர்ந்திருக்கும் நீரெல்லாம் அவன் அழைத்துக்கொண்டு சென்ற நண்பன் மீது விழ, மற்ற நண்பர்கள் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார்கள்.


நாங்களெல்லாம் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருக்க, அவன் ஸ்டெஃபியின் மிகத் தீவிர ரசிகனாக இருந்தான். ஒவ்வொரு ஓபன் டென்னிஸின் பைனல்ஸ் ஸ்கோரையும் ஒப்பிப்பான். திடீரென்று ஒருநாள், தனக்கு இனிமேல் ஸ்டெபி கிராஃப் பிடிக்காது என்றும் மோனிகா செலஸ்தான் பிடிக்கும் என்றும் அறிவித்தான். அப்படி எப்படி மாறமுடியும் என்றால், அது அப்படித்தான் என்று சாதித்தான். அத்தோடு ஸ்டெபி கிராபிற்கு விளையாடவே தெரியாது என்றெல்லாம் சொல்லி திட்ட ஆரம்பித்தான். எங்களுக்கெல்லாம் தலை சுற்றியது.


தமிழை வாசிப்பதில் எனக்கும் அவனுக்கும் பெரிய போட்டியே நடக்கும். அவன் தொலைக்காட்சி, வானொலிகளில் வாசிப்பவர்கள் போல வாசிப்பான். ஏதேனும் ஓரிடத்தில் திடீரென்று திக்கினாலோ, நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தினாலோ நான் அவனைப் பார்த்துச் சிரிப்பேன். நான் வாசிக்கும்போது நான் எப்போதெல்லாம் தவறு விடுகிறேன் என்பதைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்திருப்பான்.


பள்ளிவாசம் முடிந்து நாங்கள் கல்லூரிக்குச் சென்றோம். எல்லாரும் பேசி வைத்து, இயற்பியல் என்றெழுதினார்கள், விண்ணப்பபடிவத்தில். நான் வேண்டுமென்றே வேதியியல் என்று எழுதினேன். இத்தனைக்கும் வேதியியலை விட இயற்பியலில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அவன் கணிதம் என்று எழுதினானா என்பது நினைவில்லை. ஆனால் அவனுக்குக் கணிதம்தான் கிடைத்தது.


ஒருவருடம்தான் கல்லூரியில் படித்தான். அதற்குள் ஸ்டாஃப் நர்ஸ் கோர்ஸ் கிடைத்துவிட்டது. ஹைகிரவுண்டில் சேர்ந்துவிட்டான். எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது. அவன் இதற்காக அழுதே விட்டான். ஆனாலும் எங்கள் நட்பு அறுந்துவிடவில்லை. அது வேறொரு புதிய பரிமாணத்துடன் கிளைத்தெழுந்து செழித்தது என்றே சொல்லவேண்டும்.


அவனுக்கு ஹைகிரவுண்டில் விதவிதமாக நண்பர்கள் அறிமுகமானார்கள். எல்லோரையும் எங்கள் நண்பர்களாக்கினான். வாராவாரம் நாங்கள் அவனைப் பார்க்கப் போவோம். அதுவரை பெண்கள், கிரிக்கெட், கிண்டல் என்றே பேசிக்கொண்டிருந்த நாங்கள், வயதின் வளர்ச்சியில், காமம், உடலுறவு என்று பேச ஆரம்பித்திருந்தோம்.


அவன் ஸ்டாஃப் நர்ஸாக இருந்ததால், இந்த விஷயங்களைப் பற்றி விதவிதமாகச் சொன்னான். ஸ்டாஃப் நர்ஸ் படிக்கும் பெண்களைப் பற்றிய அவன் மதிப்பீடு, டாக்டர்களுக்கும் அங்கு வேலை பார்க்கும் ஸ்டாஃப் நர்ஸ்களுக்குமான உறவு என்றெல்லாம் என்னென்னவோ சொல்லுவான். நாங்கள் எப்படி பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அவன் சொல்லுவதை நம்புவதா வேண்டாமா என்றெண்ணி பிறகு வேறு வழியில்லாமல் நம்புவோமோ அப்படித்தான் இதனையும் நம்புவோம். அவன் சொன்னவை ஏராளம். முதலிரவில் ஆண் பெண் கலவியில் ஏற்படும் பிரச்சினைகள், ('அது அத்தனை லேசுன்னு நினைக்காத..' என்றுதான் ஆரம்பிப்பான். நிறைய சொல்லுவான். அதையெல்லாம் இங்கே எழுதமுடியாது.) பெண்களின் பிரச்சினைகள், ஆணின் பிரச்சினைகள் என்றெல்லாம் விவரிப்பான்.


நாங்கள் எங்கள் நண்பர்களில் ஒருவன் வீட்டில் பிஎஃப் பார்த்தபோது, ஹைகிரவுண்டிலிருந்து வந்தான். ஸ்டாஃப் நர்ஸில் படிப்பவர்கள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பார்கள். இரவில் வார்டன் ஹாஸ்டலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவார். பிஎஃப் பார்க்க வருவதற்காகவே கள்ளச் சாவி செய்து திறந்து கொண்டு வந்திருந்தான். பி எஃப் பார்த்துவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு டவுணிலிருந்து ஹைகிரவுண்ட் நடந்து சென்றான்.


ஹாஸ்டல் வார்டன் ரொம்ப கேள்வி கேட்கிறாள் என்று, ஒரு கடிதத்தில் அவனே குங்குமம் மஞ்சள் என்றெல்லாம் தூவி, ஒரு தாயத்தையும் அதோடு சேர்த்து, உன் பெயருக்கு மந்திரித்துவிட்டோம், இனியும் உன் மாணவர்களுடன் விளையாடாதே என்று அவனே ஒரு போஸ்ட் அனுப்பி வைத்தான். அந்த வார்டன் அலறிவிட்டார் என்று சொன்னான். இப்படி நிறைய சொல்லுவான். செய்தானா என்றெல்லாம் தெரியாது.


திடீரென்று ஒருநாள் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான். நாங்கள் எல்லோரும் ஆர்வமாகக் கேட்டோம். பூர்வஜென்மத்து உறவு, அது இது, முத்தம் என்று என்னவெல்லாமோ சொன்னான். எல்லாம் கேட்டு முடித்து நாங்கள் கிளம்பும்போது, 'இன்னும் இருக்குல' என்று சொல்லி, அவன் காதலிக்கும் இரண்டாவது பெண்ணைப் பற்றியும் சொல்லத் தொடங்கினான். அப்போதும் அதே பூர்வ ஜென்மத்து உறவு, அது இது, முத்தம் எல்லாம் வந்தது. நான் கடுப்பாகிவிட்டேன். பின்பு என்னிடம் சத்தியமே செய்தான், இரண்டு பெண்களுமே அவனைக் காதலிப்பதாகவும், அவனுக்கு இரண்டு பெண்களையும் பிடித்திருப்பதாகவும். அவனுக்குப் பிறந்தநாள் வந்தால் இரண்டு சாக்லேட்டுகள், இரண்டு சட்டைகள் பரிசு வரும். சொல்லிச் சொல்லிச் சிரிப்பான். கடைசியில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவன் அம்மாவிடம் சொல்ல, அவன் அம்மா அவன் காதலை எவ்வித யோசனையுமின்றி ஒரே நொடியில் நிராகரித்தார். அவனும் உடனே அக்காதலை நிராகரித்துவிட்டான்.


எனக்கும் வேலை கிடைத்து, அவனுக்கும் வேலை கிடைத்து, எங்கள் நட்பு தொடர்ந்துகொண்டிருந்தது. மருத்துவமனைகளில் நடக்கும் காமகளியாட்டங்களை அவன் நிறைய சொல்லுவான். அதை வைத்து நான் ஒரு கதை எழுதினேன். (மீண்டும் ஒரு மாலைப்பொழுது.) Slept away என்பதை உருவாக்கி, அதை எல்லாருக்கும் சொல்லுவான். அந்த ஸ்டாஃப் நர்ஸ் நேத்து அவனோட ஸ்லெப்ட் அவே என்பான். பின்பு அவனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, சென்னைக்குப் போனான்.

நான் தூத்துக்குடியில் வேலையில் இருந்தேன். நான்கைந்து நாள் விடுமுறை கிடைத்தபோது அவனைப் பார்க்கப் போனேன். அங்கேயும் எங்கள் நண்பர்களோடேயே இருந்தான். எல்லாரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமாகப் பார்க்கப் போவோம். சோழிங்கர், வண்டலூர் பூங்கா, மெரீனா கடற்கரை என்று எல்லாம் பார்த்தது அவனோடுதான். எங்கே போனாலும் நாங்களே சமைத்துக்கொண்டு உணவெடுத்துக்கொண்டு போவோம். கைகளில் உருட்டித் தருவான் எல்லாருக்கும்.


போட்டோ எடுக்கும்போது இயல்பாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். வேண்டுமென்றே எல்லாரையும் செயற்கையாக நிற்கச் சொல்லி படமெடுப்பான். ஒரு புகைப்படத்தில் எல்லோரும் வரிசையாக ஒருவர் தோள்களில் ஒருகை வைத்திருக்க, ஓடும் ரயில்வண்டி போல, எல்லாரும் காலைத் தூக்கிக்கொண்டு, ஒரு கையால் கூவென ஊதிக்கொண்டிக்கும் போட்டோ இன்னும் நினைவிலிருக்கிறது.


எங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஒவ்வொருவராக திருமணம் நடக்க ஆரம்பித்தது. அவனுக்கும் திருமணம் ஆனது. நான் துபாயில் இருந்து திரும்பி வந்து, அவன் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பினேன். என் நம்பர் அவனுக்குத்தெரியாது என்பதால் கொஞ்சம் விளையாட ஆரம்பித்தேன். அவன் செய்த சேட்டைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லவும் கொஞ்சம் பயந்துவிட்டான். அவனது நண்பர்களிடம் சொல்லியிருப்பான் போல. ஒவ்வொருவராக என்னை அழைத்து நான் யார் என்று கேடகத் தொடங்கினார்கள். எல்லார் நம்பரும் என்னிடம் இருந்ததால், அவர்கள் எல்லோரிடமும் நான் விளையாடத் தொடங்கினேன். ஒருவாறாக அவனிடம் நாந்தான் என்று உண்மையைச் சொன்னபோது, 'நான்கூட முதல்ல ஒருத்திய லவ் பண்ணேன்ல, அவதான் மிரட்டுறாளோன்னு நினைச்சிட்டேன். என் பொண்டாட்டி மட்டும் உன் மெசேஜை பாத்தா, செத்தேன்' என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'எல்லாம் பொய்தானல, சும்மாதான சொன்ன?' 'உனக்கும் எனக்கும் தெரியும் பொய்யுன்னு, அவ பொய்யத்தான் மொதல்ல உண்மைன்னு நம்புவா' என்றான். ஒருவழியாக செட்டில் ஆகிவிட்டான் என்று சந்தோஷமாக் இருந்தது.


அவ்வப்போது தொலைபேசி. அவ்வப்போது சந்திப்பு. தன் மனைவி இரண்டாவதாக உண்டாகியிருக்கிறாள் என்றான். வாழ்த்து சொன்னேன். நேற்று காலை, நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவியை சிவகிரியில் பார்த்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு ஸ்கூட்டரில் காலை 3 மணிக்கு வந்திருக்கிறான். விபத்து நேர்ந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். எங்கள் நண்பர்கள் எல்லோரையும் பதைபதைக்கச் செய்துவிட்டது இம்மரணம்.


உண்மையில் நான் இது போன்ற மரணங்களில் என் மரணத்தின் மீதான பயத்தையே உணர்கிறேன் என்று நினைக்கிறேன். நேற்று முழுவதும் இருந்த பதட்டம் சொல்லி மாளாது. தேன்கூடு சாகரனின் மரணத்தைக் கேட்ட அன்றும் அப்படி பதற்றமாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்தியா வந்திருந்தபோதுதான் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருந்தோம். தேன்கூட்டில் சில போட்டிகள் நடத்தப்போவதாக எல்லாம் சொன்னார். அதே பதற்றம் நேற்றும் என்னைத் தேடி வந்தது.


மரத்தடியில் பாபு என்கிற நண்பர் எழுதிய கவிதை மிக முக்கியமானது. திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்புதான் இதனை வாசித்தேன். நேற்று இக்கவிதையே மனதுள் சுழன்று சுழன்று வந்தது.


அது



பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டியில்
எதிரணிக்காரன் வீசிய வேகப்பந்து
பின் மண்டையில் விசையுடன் தாக்கிச் சுருண்டபோது
எதிரே வந்து நின்று விரல் நீட்டி
எச்சரித்துவிட்டுப் போனது.

நெடுஞ்சாலை மோட்டார்சைக்கிள் பயணத்தில்
அசுர பாய்ச்சலுடன் வந்த வாகனத்துடனான மோதலை
மயிரிழையில் தவிர்த்து மணலில் சரிந்தபோது
காதருகில் உருமிவிட்டுச் சென்றது.

பெருநோய் பீடித்து மருத்துவமனையில்
உடல் வற்றிக்கிடந்த ஒரு மாதகாலமும்
படுக்கையருகில் அமர்ந்திருந்து
உற்றுப் பார்த்தபடி இருந்தது.

நள்ளிரவு உறக்கத்தில்
நெஞ்சுக்கூட்டுக்குள் இரும்புப் பந்தொன்று அடைத்து
மூச்சுத்திணறி வியர்த்து
நிராயுதமாய் சில நிமிடங்கள் போராடியபின்
இயல்புநிலை திரும்பியபோது
ஜன்னலில் நிழலெனப் பதுங்கி வெளியேறிற்று.

இதுவரை
வாய்த்த சந்தர்ப்பஙகளெல்லாம்
நழுவிப்போனதில்
மேலும் வன்மம் வளர்த்தபடி
எங்கிருந்து எப்போது
என் மீது பாய்ந்துவிடக் காத்திருக்கிறதோ -
அந்த மரணமென்னும் மிருகம்.


நான் எழுதுவதைக்கூட மரணம் வாசித்துக்கொண்டிருக்கலாம்.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 13

பெண் சிசுவின் கேள்வி
- மோகனன்


அம்மா... நீ உணர்ச்சிகளுக்கு
அடிமையாகாதே..?
அப்படி அடிமையானதால்
கருவாகி உருவாகி விட்டேன்
உன் கருவறையில்
பெண் சிசுவாய்...

என்னால் அப்பனை
அறியமுடியாது - ஆனால்
உன்னை நானறிவேன்
கருவறையில் மட்டும்...

பிறந்தது பெண் சிசு
என்பதால்
கல்லெறிவது போல்
என்னையும் முள்வேலியில்
எறிந்து விட்டாயே...
ஏனம்மா..?

பெண்ணாகப் பிறந்து விட்டால்
பொன், பொருளுடன்
ஆடவனிடம் தரவேண்டும்
என்ற சமூக கட்டிற்கு
பயந்துவிட்டாயா..?

இல்லை... தவறான முறைதனில்
தப்புத் தப்பாய் நீ செய்த
திரைமறைவு காரியங்கள்
உன்னை வெளிச்சத்தில்
கொண்டு வந்துவிட்டதே
என்ற வேதனையா..?

நான் செய்த பாவமென்ன...
நீ சிற்றின்பம் அடைய
நானன்றோ பெருந்துன்பத்திற்கு
ஆளாகியிருக்கிறேன்...

அரசுதான்
உன்போன்றோர்க்கு
ஆயிரம் முறை சொல்கிறதே
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள்
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள் என்று

அப்படி நீ செய்யாததால்
என்னையல்லவா
இன்று பாதுகாக்காமல்
கொல்லுகின்றாய்..?

இனியேனும் நீ இதுபோன்ற
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
அப்படி நீ அடிமையானதால்
இன்று என் உயிர்
மெல்ல மெல்ல ஊமையாகிக்
கொண்டிருக்கிறது
முள்வேலிகளின் பிடியில்...

இனியேனும் நீ
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
என் போன்றோர்
இந்த பாவ பூமியை
பார்க்காத பாக்கியமாவது
கிட்டும்...
(நீயன்றோ உத்தமத் தாய்)

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 12

இனிய கணங்கள்
- ஷைலஜா

இனிய கணங்கள்
எத்தனை விலை?
வாங்கக்காத்திருக்கிறேன்

வாழ்வுப்பாலையில்
நடந்துநடந்து
வண்ணங்களையெல்லாம்
இழந்துவிட்டேன்

வாழ்க்கை இத்தனை வறட்சியானதென்று
அறிந்திருந்தால்
பயணத்தையே
தொடங்கி இருக்கமாட்டேன்

பாலைமணலில்
பதிந்து நடக்கும்போது
தடுக்கி விழும் கணங்களிலெல்லாம்
துணையைத்தேடி
தவித்துப்போகிறேன்

துணையாருமில்லை
தோள்கொடுக்கவாவது
இனியகணங்கள் எனக்குக்
கிடைக்குமா?

இனிய சிலகணங்கள் போதும்
நீண்டுவிடவேண்டாம் அதுவும்

இனியகணங்களுக்கு
ஈடில்லாவிலையோ?
என்னால் வாங்க இயலுமோ?

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 6

வித்யா,ரோஸ் மற்றும் பக்கத்து வீட்டு திருநங்கை..
- அனிதா

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/b036f7e083b22f92/fa2d309df7eba461?lnk=gst&q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87+#fa2d309df7eba461

திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே
திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு
தெரிந்ததெல்லாம் அவர்கள் வடநாட்டு ரயில்களில் பிச்சை எடுப்பார்கள் என்றும்,
விபச்சாரம் செய்வார்கள் என்றும், கூவாகத்தில் திருவிழா நடத்துவார்கள் என்றும்
தான். அந்த செய்திகள் கூட இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை போலவோ குட்டை பாவாடை
அழகியின் நடுபக்க புகைப்படம் போலவோ வெறும் ஆர்வம் ஈர்ப்பவை. வலியறியாதவை.


போன மாதம் பெங்களூருவின் பிரதான சிக்னல் அருகே ஒரு திருநங்கை ஒரு காய்கறி
விற்பவளுடன் வெகு சகஜமாக பேசுவதை பார்த்தேன். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து,
சாயங்காலத்தில் ஊர் கதை பேசும் இரெண்டு பெண்களை போல அத்தனை இயல்பாக
பேசிக்கொண்டிருந்தார்கள். அவளும் ஊர் கதை பேசியிருக்க கூடும். விலைவாசிப்பற்றி
பேசியிருக்கக்கூடும். அரசியல் கூட பேசியிருக்கலாம்.


வித்யாவின் வலைப்பூவை எனக்கு சில மாதங்களுக்கு முன்பு யாரோ காட்டியபோது கூட
"இதை எழுதறது ஒரு அரவாணி" என்றார்கள். திருநங்கை எழுதுவதாலேயே கவனம் பெற்றது
அந்த வலைப்பூ. இன்று அவருக்கு பெரிதாய் உதவமுடியாவிடினும் அவரை சக
வலைப்பதிவராக, கருணை கண்ணோட்டம் தவிர்த்து இயல்பாய் ஏற்றுக்கொண்டிருக்கிறாகள்.
வலைப்பூ எழுதுபவர்கள் மத்தியிலும் புத்தகம் படிப்பவர்கள் மத்தியிலும்
வித்யாவால் இன்று அரவாணிகள் குறித்தான பார்வை ஆரோக்கியமாக மாறியிருப்பது உண்மை.
ஆனால் சமூகத்தில் இந்த வெளிச்சம் பரவிய இடங்கள் மிக மிக குறைவு.


திருநங்கைகளைப் பற்றி அதிகம் பரவ வேண்டிய இடங்கள் நம் குடும்பங்களும், நாளைய
மன்னர்கள் எனக் கூறப்படும் இளைஞர் சமுதாயத்திலும் தான். சீரியலிலும்,
கணினித்துறையிலும் கால் சென்டர்களிலும் முடங்கி கிடக்கும் இவர்களில் நிறைய
பேருக்கு நேரமிருப்பதில்லை, இருந்தாலும் படிக்கும் வழக்கமில்லை, படித்தாலும்
ஆங்கில மர்ம நாவல்களிலும் வார பத்திரிக்கை விட்டுகளிலும் தேங்கி விடுகிறார்கள்.
வாழ மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இவர்களைபோன்றவர்கள் மத்தியில்
திருநங்கைகள் பற்றிய பார்வைகளை மாற்றுவது மிகவும் தேவையான, அதே நேரம் மிக
கடினமான வேலையாகிறது.


வெளிச்சம் பரப்பும் மகிழ்ச்சியான அதிரடியான நிகழ்ச்சியாக துவங்கியிருக்கிறது
"இப்படிக்கு ரோஸ்". அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார் -
இது இங்கலிஷ் கூட பேசுதே என்று. அவள் பேசுவதும் தன்னை முன்னிறுத்தும் விதமும்
நான் வேற்று கிரகவாசி இல்லை, உங்களில் ஒருத்தி என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
தள்ளி நின்றே இத்தனை நாளும் இவர்களை பார்த்தவர்களுக்கு வரும் சந்தேகங்களும்
ஆச்சர்யங்களும் இருக்கத் தான் செய்யும்.. இருக்கட்டும். இது ஆரம்பம் தான்.


இந்த நிகழ்ச்சியில் அரவாணிகளின் கவலைகளை பகிர்ந்துக்கொள்வதில்லை. மாறாக, ரோஸ்
என்ற திருநங்கை சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களையும் விவாதிக்கிறாள், நேருக்கு
நேராய் கேள்விகள் கேட்கிறாள். ஆசுவாசபடுத்துகிறாள், நம்பிக்கையூட்டுகிறாள்.
சாவகாசமாக ஒரு திருநங்கையை பார்ப்பது, அவள் குரலை கேட்பது, அவளை உற்று
நோக்குவது என போதுமான அறிமுகங்கள் கிடைக்கின்றன. அவர்களை சாதாரண மனிதர்களாக
பார்க்க பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தடைகள் களைந்து மெல்ல
வெளிவருகிறார்கள். அந்த திருநங்கையின் மீதிருந்து கவனம் அகன்று அவள் பேசும்
விஷயத்திற்கு மெல்ல நகரத்துவங்கியிருப்பதை நிகழ்ச்சியை பார்க்கும் பலரும்
உணர்ந்திருப்பார்கள்.


நமக்கு நடக்காது என்ற மனோபாவம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான் மனத்தடைகளுக்கு
காரணம். மனத்தடைகளால் விளையும் குழப்பமும், குழப்பத்தால் பயம் விளைவதும்,
பயத்தால் திருநங்கைகளை வீட்டிலிருந்து புறக்கணிப்பதும் நிகழ்கிறது. வித்யாவின்
வீட்டாரோ ரோஸின் வீட்டாரோ அவர்களின் வளர்ச்சியிலும் துணிச்சலிலும் எத்தனை
பூரித்துபோவார்களென தெரியவில்லை.


ஒரு திருநங்கை உருவாகிறாளென அறிந்துக்கொள்வது அத்தனை கடினமல்ல. உடல்ரீதியான,
மனரீதியான குழப்பங்களால் நம் குழந்தை தனிமைபடுமேயானால் சில நாள் கவனம் குவித்து
கண்காணிக்கலாம். ஒரு பெண் பருவத்திற்கு வரும்போது பயப்படாதேம்மா இது ஒன்றும்
இல்லை சரியாகிடும் என்று சாதாரணமாக கவுன்ஸிலிங் செய்வதில்லையா?
பெற்றோருக்கு தெரியவில்லையெனில் திருநங்கையாக மாறுபவர்களுக்கென நிறைய
கவுன்சலிங் வழங்கபடுகிறது. இங்கு முதலில் நடக்க வேண்டியது பயம் களைதல்,
பெற்றோருக்கும், குழந்தைக்கும். பல வருடங்களாக தன்னை ஒரு பாலோடு இணைத்து
யோசித்த குழந்தைக்கு பால் மாறும்போது மிகுந்த பாதுகாப்பும், நம்பிக்கையும்
தேவையாயிருக்கும். மருத்துவரீதியாக குழந்தைக்கு என்னன்ன வேண்டுமோ செய்யலாம்.
விபத்தில் அடிபட்டு உயிருக்கு ஒரு குழந்தை போராடுமேயானால் எத்தனை செலவு
செய்தும் காப்பாற்றுவதில்லையா?


திருநங்கைகள் உருவாவதை தடுக்கமுடியாவிடினும் அவர்களை ஒரு குடும்பத்திலிருந்து
விலக்காமல் ஏற்றுக்கொள்வோமென்றால் அதுவே அவர்கள் வாழ்வை சீராக்குவதற்கான முதல்
முயற்சி. இப்பொழுது கணிணித்துறையில் எங்கும் ஜாதி பார்ப்பதில்லை. பாலின
பேதங்கள் இல்லை. ஆரோக்கியமாகவும் விரிவாயும் சிந்தித்தோமென்றால், திருநங்கைகளை
பக்கத்து கேபினிலோ, ரயிலுக்கு நம் முன்னே பயணசீட்டு எடுத்துக்கொண்டோ, கட்சி
ஊர்வலங்களிலோ, மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலோ குடும்பத்துடனோ நண்பர்களுடனோ
உறுத்தாமல் பார்க்க முடியலாம். காலம் மாறும்.