பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 7

Gal oya வில் சிங்களர்களைப் பெருமளவில் குடியேற்றி அப்பகுதியில் இன விகிதாச்சாரத்தை வெகுவாக மாற்றிய பிறகு சிங்களருக்கென்று தனித் தொகுதி ஒன்றை உருவாக்கினார்கள். இதன் மூலம் தர்மத்திற்குப் புறம்பாக நாடாளுமன்றத்தில் சிங்களக் குரல் ஒன்று கூடுதலாக ஒலிக்க வழி செய்தனர். கிழக்குப் பிராந்தியத்தில் ஏழு தொகுதிகள் இருந்தன. 1959 தேர்தலுக்காக அம்பாறை மற்றும் Nintavur தொகுதிகள் மொத்தம் ஒன்பது இடங்களாக உயர்ந்தது. மட்டக்களப்பு மற்றும் பொட்டுவில் தொகுதிகளில் இருந்த சிங்களப் பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து அம்பாறைத் தொகுதியை உருவாக்கினார்கள்.



சிங்களக் குடியேற்ற என்பது Gal oya திட்டத்தோடு நின்று விட்ட ஒற்றை நிகழ்ச்சியல்ல. தமிழ் தேசத்தின் கிராமப் புறங்களில் சிங்களக் குடியானவர்களைக் குடியமர்த்தி அவற்றிற்கு சிங்களப் பெயரைச் சூட்டினார்கள். புதிதாக பார்க்கிறவர்களுக்கு அந்தப் பகுதிகள் எல்லாம் சிங்களப் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்குவதே அதன் நோக்கம். இப்படிச் செய்வதன் மூலம் கிழக்குப் பிராந்தியம் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதி கிடையாது. அங்கே சிங்களர்களும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளனர், வேண்டுமென்றால் பெயர்களைப் பாருங்கள் அவை சிங்களத்தில் உள்ளன என்று வாதிடலாம். 'அரிப்பு' என்ற பெயர் தாங்கிய தமிழ்க் கிராமத்திற்கு Serunuwara என்ற சிங்கள சூட்டப்ப்பட்டது. கல்லாறு Somapura என்றானது. நீலப்பள்ளைக்கு Nilapola, பூநகர் என்ற ஊருக்கு Mahindapura, திருமண்காவாய் என்ற பெயருக்கு Dehiwatte எனப் பல உதாரணங்களைக் காட்டலாம்.



சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது சேனநாயகா என்றாலும் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் தாம் எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தாலும் 'தேசத் தந்தை' வகுத்த பாதையில் அவரை விட வேகமாகவே நடந்தனர். சாலமன் பண்டாரநாயகா காலத்திலும் காலனியாக்கம் நடந்தது. அவரது மனைவி சிறீமாவோ 1960 இல் பிரதமராக இருந்த போது 'முதலி குளம்' என்ற தொன்மையான ஊருக்கு Morawewa என்று பெயரிட்டு Morawewa திட்டத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பு சிங்கள மக்கள் அறவே இல்லாத இந்த ஊரில் நடந்த 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 9271 பேரில் 5101 பேர் சிங்களர் என்ற அளவுக்கு இன விகிதாச்சாரமே தலைகீழாக மாறியது.



திருகோணமலை மாவட்டத்தை சிங்களமயமாக்கும் முயற்சியும் இன்னொரு பக்கம் நடந்தது. 1972 இல் நொச்சிக்குளம் என்ற அருமையான தமிழ்ப் பெயர்கொண்டு விளங்கிய ஊர் Nochiyagama வாக உருமாறியது. சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சிங்களர் பரவினர். தமிழ்க் கிராமங்களைச் சுற்றிலும் முற்றுகை அமைப்பது போல பல இடங்களில் ஊரைச் சுற்றியுள்ள அரசு நிலங்கள் சிங்களர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தக் கொடுமை கிழக்குப் பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் மலையகத்திலும் நடந்தேறியது. எப்போதெல்லாம் கொழும்பில் அரசியல் பதற்றம் நிலவுகிறதோ அப்போதெல்லாம் முற்றுகைக்கு ஆளான இந்தக் கிராமங்கள் தாக்குதலுக்கு ஆளாகும்.



1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தொகுதி உருவானதைப் போல திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள விகிதாச்சாரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அங்கும் கூட 1976 இல் Seruwila சிங்களத் தொகுதி ஒன்று பிரித்தெடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் இப்படியெல்லாம் திட்டமிட்டு இன விகிதாச்சாரத்தை மாற்றியதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கும் மாகாணங்கள் தமிழர் தேசத்தின் பாரம்பரியப் பகுதி என்ற வரலாற்று உண்மையைக் கற்பனைவாதமாக உருவகம் செய்து கேலிக்குள்ளாக்கி மறுப்பது சுலபமாகியது. அதாவது வரலாற்று ரீதியாக அமைந்திருந்த தமிழர் தேசத்தின் எல்லையை சிங்களர்கள் படிப்படியாக உள்நோக்கித் தள்ளி அந்த எல்லையைச் சுருக்கினர். அதைத் தவிர மூன்று முக்கியப் பாதிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்தனர். முதலாவதாக பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழ்ந்து வந்த மண்ணின் இன விகிதாச்சாரம் மாறியது. இரண்டாவதாக தமிழர்களுக்கு முறையாகக் கிடைத்திருக்க வேண்டிய வளமான விவசாய நிலப்பரப்பு சுருக்கப்பட்டது. மூன்றாவதாக நாடாளுமன்றத்தில் அவர்களது பிரதிநிதித்துவம் குறைந்தது.



ஏற்கனவே குறிப்பிட்டது போல உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று திருகோணமலைத் துறைமுகம். அது தமிழர் பாரம்பரியப் பகுதியில், அதுவும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் நகரமாக இருப்பது சிங்களர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் எந்த அளவிற்கு அதை சிங்களமயமாக்க முடியுமோ அந்த அளவிற்கு சிங்களமயமாக்கினார்கள்.



இதற்கிடையில் குடியுரிமைச் சட்டத்தின் போது தன் அமைச்சர் பதவியைத் துறந்த சுந்தரலிங்கம், தேசியக் கொடி தொடர்பான சர்ச்சையில் ஆலோசனை சொல்வதற்காக அமைக்கப்பட்ட குழு அதே கொடியைத் தொடருவதென்று 1951 இல் முடிவு செய்த போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அக்டோபரில் வவுனியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.



சிங்கள வட்டாரங்களில் இதை விட முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் அந்த வருடம் அரங்கேறியது. உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும், அவையின் தலைவராகவும் பதவி வகித்து அரசாங்கத்தில் D.S.சேனநாயகாவுக்கு இரண்டாம் நிலையிலிருந்த சாலமன் பண்டாரநாயகா பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது சிங்கள மகா சபையை அப்படியே அதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார்.



1952 இல் குதிரைச் சவாரி செய்த போது அவரது பருமனைத் தாங்காத குதிரை கீழே விழுந்து சேனநாயாகாவும் கீழே தள்ளியது. மூர்ச்சையான முதல் பிரதமர் அதன் பிறகு கண் விழிக்கவே இல்லை. அவர் காலியானதும் அவரது மகன் டட்லி சேனநாயகா பிரதமர் ஏனார். அப்போது முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுளும் முடிவுக்கு வந்து இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.



தேர்தல் பிரச்சாரத்தின் போது டட்லி சேனநாயகா, "இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் பிரித்துக் கொடுக்காவிட்டால் சிலோனுக்கு அரிசி தர மறுக்கிறது" என்று இந்தியாவின் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டி சிங்கள மக்களிடமிருந்த இந்திய எதிர்ப்பு உணர்வையும், இந்தியாவுக்குச் சேர்ந்த மக்கள் என்று பிரச்சாரம் செய்து மலையகத் தமிழர் மீதான் எதிர்ப்பு உணர்வையும் மேலும் தூண்டினார். மேலும் ஆழமான சிங்களப் பகுதிகளில் செய்த பிரச்சாரத்தில் தனது கட்சி தொண்டமான்களையும், ராஜசிங்கங்களையும் (இவர்கள் சிலோன் இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களான இவர்களை ஒரேயொரு சட்டம் போட்டு) பேனா முனையில் நாடாளுமன்றத்திற்கு நுழைய விடாமல் தடுத்துள்ளது என்று பெருமையுடன் பேசி ஓட்டுக் கேட்டார்.



ஆம், வாக்குரிமையை பறிக்கப்பட்ட காரணத்தினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதித்தது. கடந்த தேர்தலில் ஏழு இடங்களை வென்ற சிலோன் இந்திய காங்கிரஸ் இந்தத் தேர்தலின் போது 'நாடட்டற்றவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. அந்த ஏழு தொகுதிகளின் சார்பில் சிங்களர்கள் உறுப்பினராயினர். நாடாளுமன்றத்தில் 67 சதவீதம் இருந்த சிங்களர் பலம் 73 சதவீதமாக உயர்ந்தது. டட்லி சேனநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சி வென்றது.



தமிழரசுக் கட்சி முதன் முறையாக தேர்தலைச் சந்தித்தது. சிங்களர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்த பொன்னம்பலம் செல்வநாயகத்தின் செல்வாக்கின் முன் தாக்குப்பிடிக்க இயலவில்லை. தமிழர் தாயகப் பகுதியில் தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்றது.



தீர்க்கப்படாமல் அந்தரத்தில் விடப்பட்ட மலையகத் தமிழர்களின் நிலையைத் தீர்மானிக்கும் விதமாக 1953 ஜூன் மாதம் இலண்டனில் நடைபெற்ற எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவின் போது இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சிலோன் பிரதமர் டட்லி சேனநாயகாவும் சந்திதுப் பேசினார்கள். நான்கு இலட்சம் பேருக்கு சிலோன் குடியுரிமை தருவதாகச் சொன்ன டட்லி, இந்தியா மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினார். மீதமுள்ளவர்களின் தலையெழுத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்தார். ஆனால் நேரு இந்த அம்சங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று இலட்சம் பேரைத் திரும்ப ஏற்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் கருதினார். மலேயா, பர்மா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் ஒன்னேகால் கோடி இந்தியக் கூலிகள் இருந்தனர். சிலோனிலிருந்து மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற்ற மற்ற நாடுகளும் இந்தியர்களை வெளியேற்றினால் என்ன செய்வது?



பேச்சுவார்த்தையை முடித்து விட்டு டட்லி சேனநாயகா சிலோன் திரும்பியதும் தெற்காசிய வரலாற்றின் இருண்ட பக்கங்களை 1980 களில் எழுதப் போகும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போட்ட பட்ஜெட் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியை உண்டாகியது. அந்த பட்ஜெட்டில் உணவுப் பொருள் மீதான மானியத்தை நீக்கி அரிசியின் விலையை மூன்று மடங்கு உயர்த்தினார். மக்களின் எதிர்ப்பு டட்லிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் உடல்நிலை காரணமாகவும் 1953 அக்டோபரில் அவர் பதவி விலகினார். ஜான் கொத்தலவாலா பிரதமரானார்.



மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு நேரு விடுத்த அழைப்பை ஏற்று ஜான் கொத்தலவாலா 1954 ஜனவரியில் டில்லிக்குப் புறப்பட்டார். சிலோன் அரசுப் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போது தொண்டமான் உள்ளான சிலோன் இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் டில்லியில் இருந்தனர். பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரு நிர்வாகம் இவர்களைக் கலந்தாலோசித்தது. இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதை இரண்டே வாக்கியங்களில் சுருங்கக் கூறி விடலாம்.



1. இது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோருக்கான புதிய பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் அனைவர் பெயரும் சேர்க்கப்படும். இந்தப் பட்டியல் அடிக்கடி புதுப்பிக்கப்படும். அப்படி பட்டியலில் பெயர் இல்லாதோர் கள்ளத்தனமாகக் குடியேறியவராகக் கருதப்படுவார்.

2. குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் இரண்டு வருடத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும்.



நிம்மதிப் பெருமூச்சுடன் சிலோன் திரும்பிய தொண்டமான் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தொண்டமான், "இந்த ஒப்பந்தம் வெற்றியடைய வேண்டுமானால் சிலோன் அரசு டெல்லிப் பேச்சில் காட்டிய வேகத்தை செயலிலும் காட்ட வேண்டும்" என்று கூறினார். ஆனால் அவரது நிம்மது வெகு நாள் நீடிக்கவில்லை.



இரு பிரதமர்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற தீர்மானத்தை எதிர்க் கட்சித் தலைவர் சாலமன் பண்டாரநாயகா நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். உடன்படிக்கையில் படி உருவாக வேண்டிய புதிய பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதில் நிர்வாகிகள் காட்டிய மெத்தனமும், சுணக்கமும் இந்தியாவைக் கவலையடையச் செய்தது. இந்திய வம்சாவழி மலையக மக்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கே சிலோன் ஆர்வம் காட்டியது. அந்த ஆர்வம் "இப்போது புத்தர் இந்த நாட்டிற்கு வந்தால் கூட அவரையும் (இந்திய வம்சாவழி என்று சொல்லி) நாடு கடத்தி விடுவார்கள்" என்று சுந்தரலிங்கம் கூறுமளவுக்கு இருந்தது.



மலையகத் தமிழர் நாடகம் ஒரு புறம் நடக்க சிங்களர்-பூர்வீகத் தமிழர் முரண்பாட்டு அரசியல் இன்னொரு பக்கம் நடந்தது. 1954 ஏப்ரலில் இங்கிலாந்து ராணியும், மன்னரும் சிலோனுக்கு வந்தனர். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரச வம்சத்தினர் யாருன் இந்தத் தீவுக்கு வந்ததில்லை என்பதால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. எலிசபெத் ராணி தனது 28 ஆவது பிறந்த நாளை சிலோனில் கொண்டாடினார். அவர் சிலோன் பாராளுமன்றத்தில் உரையாற்றியதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது அச்சிட்ட உரையின் தமிழாக்கத்தை விநியோகிக்கத் தவறினார். இதை சுந்தரலிங்கம் வன்மையாகக் கண்டித்தார்.



பிரிட்டிஷ் ராணி சிலோனின் இருந்த போது சிங்கள இனத்தின் ஆதிக்க எண்ணத்தை உலகுக்கு உணர்த்தும் இன்னொரு காரியமும் நடந்தது. இரு மாதங்களுக்கு முன்னர் கவர்னர் சோலிஸ்பெரி விபத்தில் காயப்பட்ட தன் மனைவியைக் காண இங்கிலாந்து சென்றார். ராணியார் பயணித்த சமயம் தலைமை நீதிபதியாக இருந்த வெள்ளைக்காரர் ஆலன் ரோஸ் என்பவரும் சிலோனின் இல்லை. எனவே தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருந்த நாகலிங்கம் என்ற தமிழர் தற்காலிக கவர்னர் ஜெனரலாகவும் கடமையாற்றினார். அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் சிலோன் குடிமகன் என்ற பெருமைக்குரியவர். இங்கிலாந்து மகாராணி வந்திருக்கும் போது ஒரு தமிழர் கவர்னராக, ராணியின் பிரதிநிதியாகக் காட்சியளிப்பதை சிங்கள ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ள இயலவில்லை. எனவே ஆலிவர் குணதிலகே என்ற சிங்களரை கவர்னர் ஜெனரலாக நியமிக்குமாறு கோரி பிரிட்டிஷ் அரசியாரின் ஒப்புதலைப் பெற்றனர்.



இதற்கிடையில் ஜனவரியின் பண்டித நேருவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் சிலோன் அரசு அக்கறை காட்டவில்லை. சிலோன் அரசாங்கம் தான் உடன்படிக்கையில் ஒப்புக்கொண்ட விஷயங்களை நிறைவேற்றத் தவறியது. 1954 ஜனவரி உடன்பாடு வெற்றியடையாமல் போனதன் விளைவாக அக்டோபரில் மீண்டும் ஒரு இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியான கூட்டறிக்கை இரு தரப்பு நிலைப்பாட்டிலும் முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்தது. ஆன போதும் அந்த முரண்பாட்டிற்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. மலையகத் தமிழர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வு காண்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பு கை நழுவிப் போனது. நாடற்றவர் என்ற அடையாளத்துடன் நாதியற்ற அம்மக்கள் தொடர்ந்தனர்.



கமல்ஹாசனும், ஜாக்கி சானும் பிறந்த அந்த 1954 ஆம் ஆண்டில் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சியும் நவம்பர் 26 அன்று நடந்தது. பிற்காலத்தில் சிங்களர், தமிழர், முஸ்லிம் மக்கள் என இலங்கைத் தீவில் வாழும் அத்தனை மக்கள் இல்லங்களிலும் வேறுபட்ட காரணங்களுக்காக உச்சரிக்கவிருக்கும், கொழும்பு மற்றும் சென்னைப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பை ஏற்படுத்தப் போகும் 'பிரபாகரன்' என்ற பெயரைத் தாங்கிய குழந்தை இலங்கையின் வடக்குக் கரையோரம் பருத்தித்துறைக்கும், காங்கேசன் துறைக்கும் இடையேயுள்ள வல்வெட்டித்துறை என்ற ஊரில் பிறந்தது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 6

தேசியக் கொடி விவகாரத்தில் தம் இன ஆதிக்கத்தை நிலை நாட்டிய சேனநாயகா அரசு சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் கீழ்த்தரமான குடியுரிமைச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தச் சட்டம் சோல்பெரி கமிஷனின் அடிப்படையில் வாக்குரிமைமை பெற்றிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்த வாக்குரிமையும், தேர்தலில் நிற்கும் உரிமையையும் நிராகரித்தது. ஆறு வருடத்திற்கு முன்னர் இந்திய வம்சாவ்ழைத் தொழிலாளர்கள் இலங்கையை விட்டுப் போகக் கூடாது என்று மன்றாடிய அதே சிலோனில் அந்தத் தொழிலாளர்கள் அந்நியர் ஆயினர்.



தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். அமைச்சரவையில் அங்கம் வகித்த சுந்தரலிங்கம் மசோதாவுக்கு அரசில் அங்கம் வகிக்கிற காரணத்தால் ஆதரித்து வாக்களித்தார். ஆனால் அது தொடர்பான விவாதத்தில் கலந்த்துகொள்ளவில்லை. தமிழ் காங்கிரஸ் சார்பில் S.J.V. செல்வநாயகம் மசோதாவை எதிர்த்துப் பேசினார். சேனநாயகா மலையகத் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி என்று முறையிட்டார். தற்போது பூர்வீகத் தமிழர்களை அவர் நேரடியாகத் தாக்கவில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சிங்கள ஆதிக்கத்தை சிலோனின் அதிகரித்து பூர்வீகத் தமிழர்களை மறைமுகமாகப் பாதிக்கும் சட்டமென்று சாடினார்.



மிகவும் உணர்ச்சிசப்பட்ட நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி, "இப்போது நீங்கள் தமிழர்களில் பலவீனமான பிரிவினரை அடிக்கிறீர்கள், மலை நாட்டுத் தோட்டங்களில் குளிரில் நடுங்கியபடி அல்லலுற்று உங்கள் செல்வத்தைப் பெருக்கும் அப்பாவிகளை அடிக்கிறீர்கள். உங்களது அடுத்த இலக்கு நாங்கள்தான். எங்களை அடிக்கும் போது எங்கள் நிலைப்பாடு என்னவென்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். மொழி சம்மந்தமான அடுத்த சட்ட மசோதா வரும் போது அது தெரியும்" என்று கதறி அழுதார்.



யூத மக்களின் குடியுரிமையை ஹிட்லர் பறித்த போது உலகின் எல்லாம் நாகரீக தேசங்களும் அதைக் கண்டித்தன. ஜெர்மனியின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தனக்கிருப்பதாக ஹிட்லர் சொன்னார். இந்த நாட்டின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்க எத்தனிக்கும் முயற்சி, அதற்கான இந்தச் சட்டம் எல்லாமே சரியானதா என்ற கேள்வியைக் கருத்தில் நிறுத்த வேண்டுமென்று செனட்டர் நடேசன் வாதிட்டார்.



மசோதா மீதான் இரண்டாம் சுற்று விவாதம் நடந்துகொண்டிருந்த போது வவுனியா தொகுதி சுயேட்சை வேட்பாளரும், அமைச்சருமாகிய சுந்தரலிங்கம் வெளிநடப்புச் செய்தார். சேனநாயகா அதற்கு விளக்கம் கேட்டார். ஆனால் சுந்தரலிங்கமோ விளக்கம் தராமல் மந்திரி பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். (இந்த சுந்தரலிங்கத்திடம்தான் சோல்பெரி பின்னொரு நாளில் தமிழர்களுக்கென்று தனி மாநிலத்தை அரசியல் யாப்பில் பரிந்துரைக்காமல் விட்டது தன் தவறென்று குறிப்பிட்டார்) ஆனால் ஜனநாயம் என்பது எண்ணிக்கை விளையாட்டு. பெரும்பான்மை சிங்களர்களை உள்ளடக்கிய சிலோன் நாடாளுமன்றம் சிரமமில்லாமல் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. விடுதலையின் போது மூன்றில் ஒரு பங்கு என்றிருந்த தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒன்று என்று குறையும் அளவுக்கு அதன் பாதிப்பு இருந்தது.



மலையகத் தமிழரின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது இந்தியாவில் பெரும் கண்டனத்தைச் சம்பாதித்து. 1949 இல் சிலோனின் 61 சதவீத ஏற்றுமதி வருவாயை தேயிலை சாகுபடி ஈட்டித் தந்தது. அதற்குக் காரணமாக இருப்பது மலையகத் தமிழர்கள். அவர்களுக்குப் பெரும் அநீதி இழைத்த போது கண்டனம் எழுவது நியாயமானதே. எனவே எதையாவது செய்து அந்தக் கண்டனத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்திய-பாகிஸ்தான் குடியுரிமைச் சட்ட மசோதா விவாதத்திற்கு வைக்கப்பட்டது. முந்தைய சட்டத்தைப் போலவே இந்தச் சட்டத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. "இந்தியக் குடியுரிமைச் சட்டமல்ல; இது இந்தியரை வெளியேற்றும் சட்டம்" என ஹிந்து பத்திரிக்கை குற்றம் சாட்டியது. எதற்காக?



இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் குடியுரிமை பெறுவதற்கு சில தகுதிகளை இந்தச் சட்டம் நிர்ப்பந்தித்தது. திருமணமானவர்கள் தொடர்ச்சியாக ஏழு வருடமும், மணமாகாதவர்கள் தொடர்ச்சியாக பத்து வருடமும் இலங்கையில் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8,50,000 பேரில் 1,45,000 பேருக்கு மட்டும் சிலோன் அரசு குடியுரிமை வழங்கியது. ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிற மக்களின் விண்ணப்பத்தை நிராகரித்து அந்தரத்தில் விட்டது. அதுவும் அந்த விண்ணப்பப் படிவங்கள் 1962 வரை ஓசையில்லாமல் உறங்கிய பிறகு இந்த அவலம் நிகழ்ந்தது.



ஜி.ஜி.பொன்னம்பலம் மலையகத் தமிழரின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய கயமைத்தனத்தால் வெகுண்டெழுந்த SJV செல்வநாயம் 1949 டிசம்பர் மாதம், "இன்றைக்கு அவர்களுக்கு (மலையகத் தமிழர்களுக்கு) நடப்பது நாளைக்கு நமக்கு நடக்கும்" என்று கூறி தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தனி அரசியல் இயக்கம் கண்டார்.



போது சிலோனின் கவர்னர் ஜெனரலாக சோல்பெரி பிரபு இருந்தார். சிலோன் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்திருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு மேலே இங்கிலாந்து மகராணியின் சார்பில் பெயரளவில் இயங்குவது கவர்னர் ஜெனரலின் வேலை. அந்தப் பதவியில் இருந்த சோல்பெரி யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தார். அவரைக் கண்டித்து தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவித்தது.



சோல்பெரி வரையறுத்த, 'சிலோனில் ஒரே ஒரு அரசாங்கம், அதனிடம் மட்டுமே எல்லாக் காலத்திலும் குவிந்திருக்கும் அதிகாரம்' என்ற அரசியல் கட்டமைப்பு எப்போதுமே பெரும்பான்மைச் சிங்களர்களை ஆட்சியில் அமர்த்தும். அது ஒரு போதும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிறைவேற்றாது என்று செல்வா உணர்ந்திருந்தார். எனவே கட்சியின் தொடக்க மாநாட்டில் இந்தியாவில் உள்ளது போல - மத்திய அரசாங்கம் ஒன்றும், மாநில அரசாங்கங்களும் உள்ளடங்கிய - சமஷ்டி (ஆங்கிலத்தில் ஃபெடரல்) அமைப்பை உருவாக்கி தமிழர் வாழும் பகுதிகளை சுய நிர்வாகம் செய்யப் போராடுவதே கட்சியின் நோக்கம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் காரணத்தினால் தமிழில் தமிழரசுக் கட்சி என்றழைக்கப்பட்ட இக்கட்சி ஆங்கிலத்தில் ஃபெடரல் பார்ட்டி என்றழைக்கப்பட்டது.



ஃபெடரல் அமைப்பை அவர் கோரியதற்கு முக்கியமான காரணம், தமிழர் வாழும் பகுதியின் நிலங்களில் சிங்களப் பெரும்பான்மை அரசு சிங்களர்களைக் குடியமர்த்தி அந்தப் பிரதேசங்களில் இன விகிதாச்சாரத்தையே மாற்றி வந்ததாகும். மாநில அரசு என்ற ஒன்றிருந்தால் தன் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியங்களை அதுவே பராமரிக்கும். உதாரணமாக கேரளாவின் தரிசு நிலங்களை குஜராத்தி மக்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுக்கும் அதிகாரத்தை டெல்லியில் ஒரு குஜராத்தி பிரதமராக வந்தாலும் இந்தியாவின் ஃபெடரல் அமைப்பு தருவதில்லை. ஆலப்புழா என்ற மலையாளப் பெயர் கொண்ட ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு குஜராத்தி மொழியில் எதாவது ஒரு பெயர் வைத்து குஜராத்திகளைக் குடியமர்த்தி காலப் போக்கில் கேரளாவின் இன விகிதாச்சாரத்தில் குஜராத்திகளின் எண்ணிக்கையைக் கூட்டி, குரஜாத்திகள் குவிந்திருக்கும் கேரளப் பகுதியைத் தனி மாவட்டங்களாகவும், சட்ட மன்றத் தொகுதிகளாகவும் பிரித்து கேரள சட்டசபையில் குரஜாத்திகளை உள்ளே நுழைத்து, அதன் பிறகு கேரளா மலையாளிகளின் பூர்வீக இருப்பிடம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று வாதிட்டால் அது எவ்வளவு அநியாயமாக இருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள். சிங்கள அதிகார வர்க்கம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களை நிகழ்த்திக்காட்டுவதற்கென்றே அவதரித்திருந்தது.



சேனநாயகா ஆட்சியில் 1956 இன் போது சிங்களர் பெரும்பான்மையாக உள்ள Walawe பள்ளத்தாக்கில் நீர்ப் பாசனத் திட்டம் நிறவேற்றச் சொல்லி கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றினால் Empilipitiya and Ambalantota முதலிய சிங்களப் பகுதிகள் புதிய குடியமர்வுகளை உள்வாங்கும். அதை சேனநாயகா விரும்பவில்லை. சிங்களவர்களை கிழக்க்குப் பிராந்தியத்தில் குடியமர்த்தும் ஹிட்லரின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 'தேசத் தந்தை' என்று சிங்கள மக்களால் போற்றப்படும் D.S.சேனநாயகா உண்மையில் இனப் பிரச்சினையின் முக்கியக் காரணமாகிய நில ஆக்கிரமிப்புத் திட்டத்தின் தந்தையாகவே திகழ்கிறார்.



கிழக்குப் பிராந்தியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இடம் பெயருமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். சிலோன் படிப்பளை ஆறு 'கால் ஓயாவாக' (Gal Oya) மாறி தமிழர்களில் இடத்தில் சிங்களர்களைக் கொணர்ந்து அமர்த்தியது. மக்களும், மக்களின் பூர்வீகமான இடங்களுமே சிறுபான்மை இனத்தின் பாதுகாப்பிற்கு ஆதாரமான தூண்கள் என்று கருதிய செல்வநாயம் ஏற்கனவே மலையகத் தமிழர்களின் வாக்குரிமையும், குடியுரிமையும் பறிபோன போது மக்கள் மீதான தாக்குதலில் சிறுபான்மை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் தமிழர் சார்பாகப் பேசும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கண் முன்னே தேய்வதைக் கண்டு அஞ்சினார். மேலும் கால் ஓயா மற்றும் கந்தளைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் குடியேற்றம் துரிதமான போது தமிழரின் பாரம்பரிய நிலப் பரப்பும் தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டார். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற செல்வநாயகம் சுவர் இடிபடுவதைத் தடுக்கத் துணிந்தார். ஆனால், இந்தக் குடியேற்றம் காலப் போக்கில் அதிகமானதே ஒழிய குறைந்த பாடில்லை.



Gal oya திட்டத்தின் மீழ் 1,20,000 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன் வசதி பெற்றது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் அங்கே குடியேறின. அதே நேரம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு குடியேறிய தமிழர்கள் 1956 கலவரத்தின் போது விரட்டியடிக்கப்பட்டனர். பிறகு அமைதி திரும்பிய போது தங்கள் நிலங்களுக்கு மீண்டும் வந்து பயிரிட்டனர். ஆனால், அது வெகு நாள் நீடிக்கவில்லை. 1958 கலவரத்தின் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். பல பேரு திரும்பவே இல்லை. திரும்பி வந்து பார்த்தவர்கள் தமக்கென்று ஒதுக்கிய நிலத்தில் சிங்களர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். இத்தகைய இனச் சுத்திகரிப்பிற்குத் தெளிவாகத் திட்டமிட்ட சேனநாயகாவை தேசத் தந்தை என்று சொல்லித்தானே ஆக வேண்டும். நிராதரவாக நின்ற தமிழர்கள் வேறென்ன செய்ய, சிலோன் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து சிங்களத் தலைமை கருணை காட்டாதா என்று ஏங்கி எதிர்பார்ப்பதைத் தவிர?

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 5

சோல்பெரி அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும், அபிலாசைகளையும் கேட்டறிந்தார். சிங்கள, தமிழ் மக்களிடையே கனத்த முரண்பாடு நிலவுவதை உணர்ந்த போதும் அதற்கான தீர்வு எதையும் அவரது பரிந்துரையில் குறிப்பிடாமல் விட்டார். பக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தான் கோரிக்கை பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அதே மாதிரியான தீர்வை முன் மொழியாவிட்டாலும், மொழி வாரியான மாநிலங்களையும் அவற்றுக்கென்று சில அதிகாரங்களையும், அவற்றை உள்ளடக்கிய மத்திய அரசாங்கத்தையும் சோல்பெரி பரிந்துரைத்திருக்கலாம். இன்னொரு பக்கம் மலையகத் தமிழர்களின் நிலை குறித்து சோல்பெரி கமிஷன் தெளிவாக வரையறுக்கத் தவறியது. குடியுரிமை, வாக்குரிமை அனைத்தையும் சுதந்திர சிலோன் அரசு தீர்மானிக்கும் என்று கூறி நழுவிவிட்டது.



இந்த சோல்பெரி சுதந்திர சிலோனின் கவர்னர் ஜெனரலாக பிற்காலத்தில் பதவி வகித்தார். 1964 இல் சி.சுந்தரலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், "நான் பரிந்துரைத்த அரசியலமைப்பில் சிறுபான்மையிருக்குப் போதுமான பாதுகாப்பு இருந்ததாகப் பட்டது. ஆனால் இப்போது இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது போல மனித உரிமைகளைப் பேணும் ஷரத்து ஒன்றைச் சேர்த்திருக்கலாம் என்று உணர்கிறேன்" என மனம் வருந்தி எழுதினார்.



நல்ல கணவன் ஒருவன் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் இல்லாத போதும் மனைவியைக் கொடுமைப்படுத்த மாட்டான். ஆனால் கொடுமைக்காரப் புருஷன் என்னதான் சட்டம் போட்டாலும், "உங்க அப்பன் வீட்ல போய் வாங்கிட்டு வா" என்று நிர்ப்பந்திப்பான். சிலோன் சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள் கொடுமைக்கார புருஷனுக்கு ஒப்பானவர்கள் என்பது சோல்பெரி கமிஷனில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருந்த சட்டங்களையே குப்பையில் தூக்கி எறிந்ததன் மூலம் நிரூபித்தனர்.



1945 ஜூலை 11 ஆம் தேதி சோல்பெரி கமிஷன் தன் அறிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. ஜூலை 16 நடந்த பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போர் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி அட்லியின் தொழிலாளர் கட்சியிடம் தோல்வி கண்டது. தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கு சுயாட்சி உரிமை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் முன் வைத்திருந்தது. மேலும் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு ஐரோப்பிய வல்லரசுகளின் பொருளாதார நலன் காலனியாதிக்க நாடுகளைச் சார்ந்திருக்கவில்லை. மேலும் மூன்றாம் உலக நாடுகளான இவற்றின் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று போராடிக்கொண்டிருந்தனர். இவையெல்லாம் இந்தியாவின் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சகுனங்களாக அமைந்தன. இந்தியாவிற்கு சுதந்திரம் என்றால் சிலோனுக்கும் கிடைத்த மாதிரி!



இந்தியாவின் புதிய வைசிராய் மவுன்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு விடுதலை அளிக்கும் சிக்கலான காரியத்தைப் பல குழப்பங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் நடுவே இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு தேசங்களை உருவாக்கும் காரியத்தை 1947 ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் செய்து முடித்தார். அதற்கு முன்னதாகவே உலக அரசியலிலும், பிரிட்டிஷ் அரசின் போக்கிலும், பக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் உன்னிப்பாக அவதானித்த சிங்களத் தலைவர்கள் சுதந்திர சிலோன் தேசத்தை ஆள்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.



சோல்பெரி அரசியலமைப்பின் அடிப்படையில் சிலோனின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 செப்டம்பரில் நடப்பதாக இருந்தது. அப்போது சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. ஆனால் அதற்கான முதல் நடவடிக்கையாக இந்தத் தேர்தல் கருதப்பட்டது. அதைச் சந்திக்கும் நோக்கத்தில் D.S.சேனநாயகா அனைத்து சிங்கள அரசியல் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக 1946 ஏப்ரலில் ஐக்கிய தேசியக் கட்சி பிறந்தது. பொன்னம்பலம் ராமநாதனால் தொடங்கப்பட்ட சிலோன் தேசிய காங்கிஸ் மட்டும் கலைக்கப்பட்டது. சாலமன் பண்டாரநாயகா ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தாலும் தனது சிங்கள மகா சபையைக் கலைக்கவில்லை.



ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. தமிழர், சிங்களர் கலந்து வாழும் பகுதிகளில் சிங்களையே நிறுத்தியது. ஒரு தமிழ் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் இலட்சியத்துடன் மூன்று உறுப்பினர் தொகுதியாக வரையறுக்கப்பட்ட கொழும்பு மத்தியத் தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த சேனநாயகா அனுமதிக்கவில்லை. ஜவஹர்லால் நேரு ஆசியுடன் தொடங்கப்பட்ட சிலோன் இந்திய காங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியாக ஏழு உறுப்பினர்களை அனுப்பியது. அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



செப்டம்பர் 23, 1947 இல் D.S.சேனநாயகா இலங்கையின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவியேற்கும் முன்னர் கண்டி புத்த பற்கோவிலுக்குச் சென்று ஆசி பெறும் பாரம்பரியத்தையும் ஆரம்பித்து வைத்தார். 66 வயதான D.S.சேனநாயகாவின் அமச்சரவையில் 36 வயதான அவரது மகன் டட்லி சேனநாயகா மிக இள வயது அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் தந்தை வகித்த விவசாயம் மற்றும் நிலத் துறை அமைச்சகம் மகனுக்குப் போய்ச் சேர்ந்தது. வவுனியா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற சி.சுந்தரலிங்கத்திற்கும் அமைச்சர் பதவி கொடுத்து சிலோன் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் என்ற அவப்பெயர் வராமல் சேனநாயகா தவிர்த்தார்.



அடிப்படையில் மலையகத் தமிழர் என்றாலே ஆகாத சேனநாயகா பிரதமரான உடனே அவர்கள் மீது தன் பார்வையைத் திருப்பினார். 1947 டிசம்பரில் பாரதப் பிரதமர் நேருவும், சிலோன் பிரதமர் சேனநாயகாவும் இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்ப்பதற்காக சந்தித்துப் பேசினார்கள். முடிந்த அளவிற்கு மலையகத் தமிழர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பும் அவா அவருக்கிருந்தது. ஆனால் நேரு இந்த விஷயத்தில் தீர்மானமாக இருந்தார். எனவே "இந்தியர்கள் இங்கிருப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வோம். நாற்பது கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் ஏழு அல்லது எட்டு இலட்சம் மக்கள் கூடுதலாகச் சேர்வதால் என்ன நேர்ந்து விடப் போகிறது! ஆனால் அவர்களின்றி உங்களால் இருக்க முடியாதென்றால் அது கெளரவப் பிரச்சினை ஆகிறது. மற்ற குடிமக்களுக்குரிய எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்கவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.



தீர்க்கப்படாத இந்தச் சிக்கலோடு 1947 முடிந்தாலும் 1948 சிலோனுக்கு நல்ல செய்தியோடு விடிந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசு சிலோனுக்கு இந்தா பிடி என்று சுதந்திரத்தைக் கையில் திணித்தனர். அதற்கு முன்பாக சுதந்திர தேசத்தில் தேசியக் கொடியை வடிவமைக்கும் விவகாரத்தில் சிங்களர்களின் ஆதிக்க மனநிலை வெட்ட வெளிச்சமாகிறது.



1948 ஜனவரியில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர் நடேசன், இலங்கையின் தேசியக் கொடியை நிகழ்கால உலகின் சித்தாங்களை மனதில் வைத்து அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எனினும் பிப்ரவரி 4 சுதந்திரம் பெற்ற பின்னர் 19 ஆம் தேதி கொடியேற்றிய D.S.சேனநாயகா சிங்கள ராஜ்ஜியத்தின் கொடியையே ஏற்றினார். இந்தியக் கொடியைப் போன்ற மூவண்ணக் கொடி ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனை காற்றில் பறந்தது. சிங்களர்களுக்கு சிங்கம், தமிழரின் பாரம்பரியச் சின்னமான நந்தி, மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பிறை நிலவும் நட்சத்திரமும் சேர்ந்த ஒரு கொடியைத் தீர்மானிக்கலாம் என்று செல்வநாயம் கொண்டு வந்த தீர்மானம் குப்பைத் தொட்டிக்குப் போனது. சிங்களர் அல்லாத மக்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தாம் நினைத்ததையே பெரும்பான்மை சிங்கள இனம் சாதித்தது.



சுதந்திரத்திற்குப் பிறகு தேசியக் கொடி குறித்து ஆலோசனை கூற அரசியல் குழு ஒன்றை அமைத்து, சிங்கக் கொடியே தொடரலாம் என்று ஊர்ஜிதப்படுத்தினார் சேனநாயகா. தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் சமாதானப்படுத்த ஓரிரு கோடுகளை மட்டும் கொடியில் சேர்த்தனர். மேலும் கடைசி கண்டி ராஜ்ஜியம் இந்தக் கொடியையே பயன்படுத்தியது என்றும், கடைசி கண்டி மன்னன் ஒரு தமிழன் என்றும், அதனால் இந்தக் கொடியை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் சிங்களத் தலைவர்கள் சப்பைக்கட்டு கட்டினர். ஆனால் 2,500 வருடத்திற்கு முன் எல்லாளனை வஞ்சகமாக வீழ்த்திய சிங்கள மன்னன் தன் இனத்தின் அடையாளமாகப் பறக்க விட்ட சிங்கக் கொடிதான் அது. அதானால்தான் அதெயே பின்பற்ற வேண்டுமென்று பிடிவாதமாக நின்றனர். பல இன, மொழி, மத மக்களை உள்ளடக்கிய தேசத்தின் ஒரு இனத்தின் மேன்மையைப் பறைசாற்றும் சின்னங்கள் அந்த தேசத்தின் ஒற்றுமைக்கே உலை வைத்து இன வெறுப்பை ஊட்டுவனவாகும். அந்தப் பாதையில் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மிடுக்குடன் தேசத்தை நடத்தினர்.



சிங்கள அதிகாரத்தைப் பிரதிபலிக்கும் சிலோன் தேசியக் கொடி தமிழ் மக்களிடையே தேசிய ஒற்றுமை உணர்வைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட இனம் என்ற உணர்வையே தோற்றுவித்தது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 4

1927 இல் சிலோனின் அரசியலமைப்பை ஆராயவும், புதிய அரசியல் நிர்ணய சபைக்கான பரிந்துரையை வழங்கவும் ஒரு சிறப்புக் கமிஷனை இங்கிலாந்து அனுப்பியது. மக்களிடம் இன ஒற்றுமை இல்லாமலிருப்பதை அந்த கமிஷன் கண்டறிந்தது. இனத் துவேஷம் சரியான மருந்தின் மூலம் குணமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த அக்கமிஷன் அந்தப் பிரச்சினைக்கான ஆணி வேரைக் கண்டறியாமல் ஆண்களுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் வாக்குரிமை என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றது.



மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். 1920-1930 வாக்கில் மலையகத் தமிழர்களை 'இந்திய வம்சாவழித் தமிழர்கள்' என்று சிங்களத் தலைவர்கள் அழைக்கத் துவங்கினர். அதாவது சிலோன் தீவிற்கும், மலையக மக்களுக்கும் தொடர்பில்லை என்பதே அவர்களது பிரச்சார உத்தியாகும். சேனநாயாகவின் அரசியல் எதிர்காலம் இந்தப் பிரச்சினையை மூலதனமாக்கி சிங்கள தேசிய உணர்வைத் தோற்றுவிப்பதைச் சார்ந்திருந்தது. அதாவது, ஆங்கிலேயரிடம் யார் போராடி விடுதலை பெறுகிறார்கள் என்பதை விடு சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிங்கள-புத்த உணர்வுகளின் காவலனாகக் காட்சியளிப்பது அவர்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பண்பானது. ஏனென்றால் இந்தியா விடுதலை அடையும் போது இலங்கைக்கும் கிடைத்து விடும், அதனால் சிங்கள மக்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பதை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயல்பட்டனர்.



1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கை மக்கள் தொகையில் 15.4 சதவீதத்தினர் மலையகத் தமிழர்களாக இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஈழத் தமிழர்களைக் காட்டிலும் கூடுதல். சிங்களர்களுக்கு அடுத்த படியாக மிகப் பெரிய சிறுபான்மை இனமாக அவர்கள் இருந்தனர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள் இவர்களுக்காக எதையும் செய்யவில்லை. கல்வி மறுக்கப்பட்டது. மாறாக ஏராளமான மதுக் கடைகளும், கோவில்களும் திறக்கப்பட்டன. மலையகத்தினுள் வெளியார் செல்லத் தடையாக இருந்த அத்துமீறம் சட்டம் 1957 வரை அமுலில் இருதது. இப்படியான பின்னணியில் மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்க சிங்களத் தலைவரகள் முயன்றதில் வியப்பில்லை.



மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிங்களர்களின் கோரிக்கைக்கு இணங்காத பிரிட்டிஷார் பிராந்தியப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தில் சோடை போனார்கள். சிங்களப் பிராந்தியங்களுக்கு அதிகமான தொகுதிகள் என்று ஒதுக்கி, 2:1 என்றிருந்த சிங்கள/தமிழ் பிரதிநிதித்துவத்தை 5:1 என்ற நிலைக்கு மாற்றும் துரோகத்தில் துணை நின்றனர். இதைக் கண்டு மனம் கலங்கி நொந்த சர் பொன்னம்பலம் ராமநாதன், "ஆபத்தான காலம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. Donougmore கமிஷன் தேசத்தை உருக்குலைக்கும் காரியத்தைச் செய்திருக்கிறது. தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு பேரழிவைச் சந்திப்பதற்கு முன்னர் கிளர்ந்தெழும் கூட்டம் ஒன்றை என் கண்ணுக்கு முன்னால் காண்கிறேன்" என்று வேதனையோடு தன் இறுதி உரையை நிகழ்த்தினார்.



கடைசியாக 1930 நவம்பர் 30 அன்று மரணமடைந்தார். ஒருங்கிணைந்த சிலோன் தீவு முழுமைக்கும், அதன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அவர்களது நலனுக்கும் தன் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றையும் அர்ப்பணித்து உழைத்த சிலோனின் முதலும், கடைசியுமான தேசியத் தலைவரான பொன்னம்பலம் ராமநாதனின் மரணம் ஆங்கில ஆட்சிக் கால சிலோன் வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.



பொன்னம்பலம் ராமநாதனின் மரணத்தின் போது தமிழர் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வெகு விரைவில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற சொக்க வைக்கும் பேச்சாளர் நிரப்பினார். ஏறத்தாழ அதே கால கட்டத்தில் 1931 வாக்கில் சிங்களர் மத்தியில் S W R D பண்டாரநாயகா என்ற பேச்சாளரும் உருவெடுத்தார். அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 1933 ஆம் ஆண்டு ஜெர்மெனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரின் தாக்கம் சிங்களத் தலைவர்களிடம் பெருமளவில் ஒட்டிக்கொண்டதை 1931 இல் வேளாண்மை மற்றும் நிலத் துறை (காணி) அமைச்சராகப் பொறுப்பேற்ற D.S.சேனநாயகா தன்னுடைய திட்டங்கள் மூலம் நிரூபித்தார். இந்த ஹிட்லரின் தாக்கம் அடுத்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் என்பது 1981 இல் யாழ்ப்பாண நூலகம் இரண்டு சிங்கள அமைச்சர்களின் மேற்பார்வையில் எரிந்து சாம்பலான நிகழ்வு எடுத்துக்காட்டியது.



டான் ஸ்டீபன் சேனநாயகா அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா? மிக எளிமையானது அவர் கணக்கு. ஆதாவது தமிழர் பாரம்பரிய நிலப் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை சிங்களர்களுக்கு வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்த வேண்டும். இவ்வாறு தமிழர் வாழும் பகுதிகளை காலப் போக்கில் சிங்களர்களைப் பரவச் செய்து, மூன்றில் இரண்டு பகுதி சிங்களர் வசம் என்றும் ஒரு பகுதி தமிழர் வசமென்றும் உள்ள நிலப்பரப்பை மாற்றி நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு சிங்களர் என்ற நிலைக்குக் கொணர்ந்து தமிழர்களுக்கென்று பெரும்பான்மையாக உள்ள பாரம்பரிய இடத்தை துடைத்தெடுப்பது. இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தமிழர் பெரும்பான்மையினராக இருக்க மாட்டார்கள். காலப் போக்கில் அவர்களுக்கென்று மக்கள் மன்றத்தில் பிரதிநிதித்துவம் அறவே அற்றுப் போகும்.



அதற்காக அவர் தொடங்கிய திட்டம்தான் படிப்பளை ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு கால் ஓயா (Gal-Oya) என்று சிங்களத்தில் பெயர் சூட்டி அந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்களர்களைக் குடியமர்த்தும் நூதனத் திட்டம். சிங்களர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அணை கட்டாமல் தமிழர் பிராந்தியத்தில் அபிவிருத்தித் திட்டத்தை அவர் தொடங்கியதற்கான அரசியல் காரணத்தைப் புரிந்துகொள்ள ராக்கெட் விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க வல்லுனர்களைக் கொண்டு கட்டிய இந்த அணைக்கு சேனநாயகா சமுத்திரம் என்ற பெயர் சூட்டப்ப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிங்களர் வந்தமர்வதற்கு வசதியாக அடித்து விரட்டப்பட்டனர்.



சிங்களரின் இந்தக் குடியமர்வுத் திட்டம் பல வடிவங்களில் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் அணைக்கட்டு, புதிய பாசனப் பகுதி உருவாக்கம் என்ற போர்வையில் நடந்த ஊடுருவல் காலப் போக்கில் அப்பட்டமாக நடந்தேறியது. தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அடுத்து வந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட பல உடன்படிக்கைகளில் (அவற்றை சிங்களத் தலைவர்கள் கிழித்துக் குப்பையில் போட்டது வேறு விஷயம்) சிங்களர்களாலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழர் பாரம்பரியப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் அவலம் இலங்கை சுதந்திரம் பெறும் முன்பே துவங்கியது.



யூதர் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களைத் துரத்தி விட்டு அல்லது கொன்று விட்டு ஜெர்மானியர்களைக் குடியேற்றி தன் ஆளுமையை விரிவாக்க முயன்றதன் அடியொற்றி சிங்களத் தலைவர்கள் தமது கொள்கையை வகுத்தனர். ஹிட்லர் கிழக்கு நோக்கி ஆஸ்திரியா, ஹங்கேரி என தன் விரிவாக்கலை நடைமுறைப் படுத்தினார். சிங்களர்களும் தங்கள் விரிவாக்கலைக் கிழக்கு நோக்கியே துரிதப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய நிலப் பரப்பா¡க இருந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்குப் பிராந்தியமே. அதன் மக்கள் தொகை விகிதாச்சாரம் தலை கீழாக மாறியது. கிழக்குப் பிராந்தியத்தை மூன்றாகப் பிரித்து சிங்களர்களுக்கு ஒன்று, தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று என 1986 ஆம் ஆண்டு சார்க் மாநாட்டின் போது ஜெயவர்த்தனே பேசுமளவுக்கு அரசு ஆதரவுடனான சிங்களக் குடியமர்வு தமிழர் நடந்தேறியது. நம் நாட்டில் ஆந்திராவின் புறம்போக்கு நிலங்கள் தமிழகத்து மக்களுக்கு வழங்கப்பட்டு அங்கே நாம் குடியேறி, ஒரு கால கட்டத்தில் ஆந்திராவின் மூன்றில் ஒரு பகுதி தமிழ் நாட்டுக்குச் சொந்தம் என்று சொன்னால் உதைக்க மாட்டார்களா?



சாலமன் பண்டாரநாயகா என்ற S W R D பண்டாரநாயகா சிங்கள மகா சபை என்ற சிங்களர்களுக்கான அரசியல் இயக்கத்தை 1936 இல் தோற்றுவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சியிலேயே தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்தார். வளர்ந்து வரும் இளைய தலைமுறைச் சிங்களத் தலைவர்கள் பலர் சபையில் துவக்க விழாவில் கலந்துகொள்ள வாந்திருந்தனர். அவர்களுள் D.S.சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகாவும் ஒருவர். அவரகள் அனைவரும் கூடியிருந்த போது சங்கள மகா சபை என்று பெயர் வைக்கக்கூடாது. சுதேசிய மகா சபை என்று பெயர் வைக்க வேண்டுமென்று பண்டாரநாயகா வாதிட 'சிங்கள' என்ற வார்த்தை இல்லாததை எதிர்த்து டட்லி சேனநாயகா உள்ளிட்ட பலரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இப்படியாக, அவர் வெளியேறிய பிறகு அந்த அமைப்பின் பெயரை சிங்கள மகா சபை என்றே வைத்துக்கொண்டார் சாலமன்.



சிங்கள மகா சபையை ஆரம்பித்த போது சாலமன் பண்டாரநாயகா மாகாண கவுன்சிலராகவும், அமைச்சராகவும், சிலோன் தேசிய காங்கிரசின் முக்கியப் பிரமுகராகவும் விளங்கினார் என்பது கவனிக்கத் தக்கது.



தமிழ் பேசும் உறுப்பினர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 1939 இல் 15,000 இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடு கடத்தும் தீர்மானம் சிங்களர்களால் ஆட்சி மன்றத்தில் நிறைவேறியது. அதே வருடம் 8,000 இந்திய ரயில்வே ஊழியர்களை போக்குவரத்து அமைச்சகம் வீட்டுக்கு அனுப்பியது. அரசுப் பணியில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை D.S.சேனநாயகா நிறைவேற்றினார். சிங்களத் தலைவர்களின் தமிழ் வெறுப்பும், இந்திய வெறுப்பும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வெளிப்பட்டது.



மலையகத் தமிழர்களையும், இந்தியர்களையும் நாடு கடத்தும் சிங்களரின் நடவடிக்கை இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி பதவி வகித்தார். இந்திய காங்கிரசின் சார்பாக இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக பண்டித ஜவஹர்லால் நேரு பம்பாயிலிருந்து கிளம்பி சிலோன் ரத்னமாலா விமான நிலையத்தில் வந்திறங்கினார். சிங்கள அமைச்சரவையைச் சந்தித்தார். மலையகத் தமிழர் பிரச்சினையில் அவர்களத் இறுக்கமான நிலைப்பாடு நேருவைக் கவலைப்படுத்தியது. "(மலையகத்) தொழிலாளர்களைப் பொறுத்த வரை சிங்களர்கள் மற்றும் அவர்களது தலைவர்கள் குறுகிய கண்ணோட்டம் படைத்தவர்களாக உள்ளனர்" என்று ஒரு ஊர்வலத்தில் பகிரங்கமாகவே அவர் அறிவித்தார்.



ஜூன் 17, 1939 இல் கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் கனத்த இதயத்துடன் பேசிய நேரு, "நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு இந்தியனின் ஒற்றை ரோமத்தைக் கூட மற்றவர் தொடுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்றார். சிலோனிலிருந்து இந்தியா திரும்பிய நேரு அங்கே இந்திய வம்சாவழித் தொழிலாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு இனி மேல் சிலோனுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டது.



அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடும் அரசியல் இயக்கம் தேவையென உணர்ந்த நேரு அதற்கான வேலையை முடுக்கி விட்டார். பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் ஆசான் சத்தியமூர்த்தி மற்றும் பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்த வி.வி.கிரியும் 1939, செப்டம்பர் 7 அன்று மலையகத் தமிழர்களுக்காக 'சிலோன் இந்திய காங்கிரஸ்' என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மலையகத்தின் நிலவரம் இவ்வாறு இருக்க பொன்னம்பலம் ராமநாதனின் மறைவால் பூர்வீகத் தமிழர்களின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிய ஜி.ஜி.பொன்னம்பலம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 1944 ஆகஸ்ட் மாதம் சிலோன் தமிழர் காங்கிரஸைத் தோற்றுவித்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார். இதற்கிடையில் காலனியாதிக்க நாடுகளுக்கு சுதந்திரம் அளிப்பதை பிரிட்டிஷ் அரசு பரிசீலித்து வந்தது. அப்படி ஒரு சூழல் எழும்போது அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில், சிலோன் தமிழர் காங்கிரஸ் உருவாகி ஒரு மாத காலத்திற்குள் சோல்பெரி பிரபு தலைமையில் ஒரு கமிஷன் சிலோனில் வந்திறங்கியது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 3

1912 ஆம் வருடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் மாபெரும் துக்ககரமான சம்பவம் ஒன்று நடந்தது. மூழ்காத கப்பல் என்ற பெயருடன் மேட்டுக்குடி மக்களை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற டைட்டனிக் கப்பல் கடலில் கவிழ்ந்து வரலாற்றில் இடம் பெற்றது. ஆனால் அன்றிலிருந்து சரியாக மூன்று வருடம் ஆறு வாரம் கழித்து மே 28, 1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் உருவான சிங்கள-முஸ்லிம் கலவரம் ஆங்கிலப் பேரரசிற்கு டைட்டானிக் மூழ்கியதைக் காட்டிலும் பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.



சிலோன் தீவு ஆங்கிலேயரின் நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட முதலாவது பெரிய இனக்கலவரம் இதுவே ஆகும். இன்னும் சொல்லப் போனால் அன்று வரை பிரிட்டிஷ் காலனி தேசங்களிலேயே அது போன்ற கலவரம் உண்டானதில்லை. பிற்பாடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட உயிர்ச்சேதம் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது வேறு கதை. இருந்தாலும் இலங்கையைப் பொறுத்த மட்டில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் என்ற மூன்று சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழும் சூழலில் அன்று தொடங்கிய இனவெறுப்பு 93 ஆண்டுகள் கடந்து பிறகும் கூட இன்று வரை தணிந்த பாடில்லை.



புத்த ஜெயந்தியை பெளத்த சிங்களர்கள் கண்டியில் ஊர்வலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் 1815 இல் Kandyan Convention மூலம் தமிழ் மன்னன் விஜயராஜசிங்கனின் அரசை வீழ்த்திய நிகழ்ச்சியின் நூற்றாண்டு விழாவையும் சேர்த்து புத்த ஜெயந்தியை விமரிசையான ஊர்வலமாகக் கொண்டாட சிங்களத் தலைவர்கள் திட்டமிட்டனர். ஆயினும் முஸ்லிம் மசூதி முன்னர் அமைதியாகச் செல்லவேண்டும் என்றும், மசூதிக்கு 100 அடி முன்பே வாத்தியங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த அரசுப் பிரதிநிதி உத்தரவிட்டிருந்தார். மேளதாளத்துடன் நள்ளிரவு ஊர்வலம் மசூதியை நெருங்கிய போது நிலைமையைச் சமாளிப்பதற்காக போலீஸ் அதிகாரி வேறு வீதி வழியாக அவர்களை விலகிச் செல்லுமாறு பணித்தார். இதை மசூதிக்குள்ளிருந்து கண்டு குதூகலித்த இஸ்லாமியர்கள் கை தட்டி மகிழ்ந்தனர். சிங்களர்களுக்கும் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டியெழுப்ப அது போதுமாகவிருந்தது. மாற்றுப் பாதை வழியாகப் பயணிக்க நினைத்தவர்கள் மசூதியை நோக்கி விரைந்தனர். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஆறு கான்ஸ்டபிள்களும் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இரு பிரிவினரும் கற்களையும், சீசாக்களையும் மாறிமாறி வீசினர். அமைதியைப் பரப்ப அவதரித்த புத்த பிரான் பிறந்த நாளில் ஒரு இனக் கலவரம் அங்கே வெடித்தது. சிலோன் தீவின் ஒன்பது மாகாணங்களில் ஆறு மாகாணங்களுக்கு இந்தக் கலவரம் பரவியது.



சுமார் 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து நாசமானது. ஒட்டு மொத்தமாக 140 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற ஆங்கில அரசாங்கம் ராணுவ அடக்கு முறைச் சட்டத்தைப் பிற்ப்பித்து எண்ணற்ற சிங்களர்களைச் சிறையில் தள்ளியது. சுமார் 4,500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது சிலோன் தீவின் சட்ட மன்றத்தில் அங்கம் வகித்த 21 உறுப்பினர்களின் 'படித்த சிலோன்காரர்' என்ற பிரிவில் ஒரே உறுப்பினராக சர் பொன்னம்பலம் ராமநாதன் என்ற தமிழர் இருந்தார். சிங்களர்கள் செய்தது தவறுதான் என்ற போதிலும் அவர்களை நியாயமற்ற முறையில் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து இங்கிலாந்து வரை சென்று வாதாடினார். அந்தச் சமயத்தில் இங்கிலாந்திற்கும், ஜெர்மனிக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அதனால் தேவையில்லாமல் உருவான இந்த இனக்கலவரத்தைச் சரியான முறையில் பிரிட்டிஷ் அரசு விசாரிக்கத் தவறியது. உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கம் கலவரத்தைத் தூண்டிய சிங்கள வெறியர்களைக் கைது செய்த அதே நேரம் அரசாங்கத்தை எதிர்த்த அத்தனை பேரையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழி தீர்த்தது. ஆங்கில ஆதிக்கத்திலிருக்கும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் அக்கறை கொண்ட ராமநாதன் விடுதலை உணர்வைத் தட்டியெழுப்புவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதைக் கருதினார். சிறைப்பட்ட சிங்களை விடுவிக்க உதவியதில் ராமநாதனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி விடுதலையானவர்களில் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகப் பிற்காலத்தில் வரப் போகும் D.S.சேனநாயகாவும், இலங்கையில் முதல் எக்சிக்யூட்டிவ் அதிபர் 'குள்ள நரித்தன' ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசியில் ஆசானாக விளங்கிய அலக்சாந்தர் ஏகநாயகே குணதிலகேவும் அடக்கம்.



ஆனால் ராமநாதனின் கணிப்பு இரண்டு கோணத்தில் தவறியது. முதலாவதாக ஒன்றுபட்ட சிலோன் தீவின் பிரஜைகளாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவது அவரது எண்ணம். ஆனால் சிங்கள மக்கள் மனதில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த வெறுப்பு 'ஆங்கில எதிர்ப்பு உணர்வை' தூக்கிச் சாப்பிட்டது. சிங்கள, புத்த உணர்வுகள் விழித்தெழுந்தன. மற்றொரு பக்கம் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடு ஏற்படவும் இந்நிகழ்ச்சி காரணமாக அமைந்தது. அநியாயமான முறையில் சிங்களர்கள் தம்மைத் தாக்கிக் கொன்ற போது, நியாயமாக தம் பக்கம் சாயாது பெரும்பான்மை சிங்களர்களுக்குப் பரிந்து பேசுவதாக சர் ராமநாதனை முஸ்லிம் சமுதாயம் கருதியது. அச்சமுதாயம் தன்னை தமிழர் அல்லாத ஒரு பிரிவினராகவே உணரத் தொடங்கியது. ஆக, ஒரு பக்கம் சிங்களர்களின் வலுவான இன உணர்வு, மறு பக்கம் முஸ்லிம்கள் தனியாகப் பிரிந்து நிற்றல் என இந்த இரண்டுக்கும் மத்தியில் சிலோன் தேசிய உணர்வை உருவாக்குவதற்கு ராமநாதன் முயன்றார்.



ஆங்கிலேயரை வெளியேற்றிவிட்டு சிலோன் மக்கள் தம்மைத் தாமே ஆளவேண்டும் என்ற நோக்கில் 1917 இல் அவர் சிலோன் சீர்திருத்த லீக் என்ற அமைப்பை நிறுவினார். ஏகாதிபத்திய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துப் போராடி அவர் தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த முயற்சியில் அடுத்த கட்டமாக இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய தேசிய காங்கிரசைப் போல 'சிலோன் தேசிய காங்கிரசை' 1919 இல் தோற்றுவித்தார். அதன் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைத் தீவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முதல் தேசியத் தலைவர் ஆனார். ஆனால் சிங்கள மக்களிடம் ஆங்கில அடக்கு முறைக்கு எதிரான சிலோன் தேசிய உணர்வைக் காட்டிலும் சிங்கள இன உணர்வு மேலாக இருந்தது.



1920 ஆம் ஆண்டு ஜேர்ஸ் பெரிஸ் என்ற சிங்கள் சிலோன் தேசியக் காங்கிரசின் தலைவராவத்தற்கு ராமநாதன் வழிவிட்டார். அந்த வருடம் பிராந்திய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. கொழும்பில் வசித்த ராமநாதன் கொழும்பு தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் சிலோன் காங்கிரசில் சிங்களர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். வேறு வழியில்லாமல் சிங்களர் ஒருவர் கொழும்பில் போட்டியிடும் வகையில் அவரது மனுவை விலக்கிக்கொண்டார். மேலும் அவர் எந்த சிலோன் தேசிய காங்கிரசை அவர் உருவாக்கினாரோ அந்த சிலோன் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிலோன் மக்களின் விழிப்புணர்வுக்கா அர்ப்பணித்த அவர் எழுபது வயதைக் கடந்திருந்தார். கொழும்பில் அவரைப் போட்டியிட அனுமதிக்காத சிங்கள அரசியல்வாதிகள் நடப்பது பிராந்திய உறுப்பினர்களைப் பிரதிநிதிப்படுத்தும் தேர்தலல்ல, மாறாக இனப் பிரதிநிதித்துவத்துகான தேர்தல் என்பதை நீருபித்தனர்.



சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி மீதும், புத்த மதம் மீதும் பற்று இருக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து அவர்களின் கலாச்சார உணர்வுகளை மீட்டெடுக்க பல காலம் உழைத்தவர் ராமநாதன். ஆங்கில ஆட்சியின் போது மேற்கத்திய மோகத்தில் திளைத்திருந்த சிங்களருக்கு சுய மரியாதையை ஏற்படுத்தி அவர்தம் கலாச்சாரத் தொன்மையை மீட்டெடுக்கும் காரியத்தைச் செய்தார். 1886 இல் பெருமளவில் நிதி திரட்டி சிலோனின் முதல் பெளத்தக் கல்லூரியான அனந்தா கல்லூரியை நிறுவினார். சிங்களம் பேசுவதைத் தவிர்த்து சக சிங்களரிடம் கூட ஆங்கிலத்தில் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிருந்து மீள்வதற்கு மக்களுக்கு மொழிப்பற்றை ஊட்டினார். "ஒவ்வொரு சிங்களனும், தமிழனும் இந்த நாட்டில் நடைபெறும் தேசிய உணர்வு அழிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். பாரம்பரியம் மிக்க தமது மொழியைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும். தன் மொழியை உதாசீனம் செய்வதும், தனது பெருமிதம் மிக்க மொழியைப் பேச முன் வராதிருப்பதுமான சிங்களன் உண்மையான சிங்களனாக இருக்க முடியாது" என்று பேசினார்.



மேலும் 1904 ஆம் ஆண்டு அதே அனந்தா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிங்களம் பேசுவதைக் கேவலமாகக் கருதிய மேட்டுக்குடி சிங்களர்களை நோக்கி, "சிங்களரின் உதடுகள் சிங்கள மொழியைப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? தன் தாய் மொழியைப் பேச விரும்பாத மக்களைக் கொண்ட தேசத்தை தவறுகளிலிருந்து எழச் செய்து, சீர்திருத்தி, விழிப்புணர்வுள்ள பிரதேசத்திற்கு முன்னேற்றுவது எப்படி?" என்று வினவினார். இந்த உரை சிலோன் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.



எனினும் ஆங்கில ஆட்சியின் போது சுயாட்சிக் கோரிக்கை முதலில் எழுந்தது தமிழர்கள் மத்தியில்தான். ஒட்டுமொத்த சிலோனின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் உருவானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஹேண்டி பேரின்பநாயகம் போன்றோர் மகாத்மா காந்தியடிகள், கமலாதேவி அம்மையார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் பேச வைத்தனர்.



இப்படிப்பட்ட சூழலில் சிங்கள மக்களுக்கு இன உணர்வும், மொழிப்பற்றும் இருக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டு நாடு தழுவிய சுயாட்சிக் கோரிக்கையைத் தோற்றுவித்த ராமநாதனுக்கு சிங்களர்கள் தகுந்த பாடம் புகட்டினர். உண்மையான சிலோன் தேசியத் தலைமை என்ற நிலை மாறி சிலோன் தேசிய காங்கிரஸைக் கைப்பற்றிய சிங்களத் தலைமை என்றும், அதிலிருந்து வெளியேறிய தமிழர் தலைமை என்றும் இரு துருவங்களாகப் பிளந்து நின்ற அவலம் 1920 லியே அரங்கேறியது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 2

ஆங்கிலேயர்கள் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சமயத்தில் இன்னொரு வரலாற்றுத் திருப்பமும் ஏற்பட்டது. 1823 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 கூலிகளின் உழைப்பில் காஃபி பயிரிட்டு 600 பவுண்ட் சம்பாத்ததில் திடீர் கதாநயகன் ஆன வெள்ளை முதலாளி ஆரம்பித்து வைத்த திருப்பம் அது. மலிவான கூலிக்கு உழைக்கும் மக்களை இறக்குமதி செய்யும் வரலாறு தொடங்கியது. 1827 ஆம் ஆண்டு Sir Edwards Barnes என்ற ஆங்கில கவர்னர் கண்டி மலைப் பிரதேசத்தில் காஃபித் தோட்டங்களை நிர்மாணித்து அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்களை வரவழைத்தார். இந்த எண்ணிக்கை காலப் போக்கில் பன்மடங்கு பெருகியது.



மலைப் பிரதேசத்தைச் சீர்திருத்திச் செப்பனிட்டு பயிரிடுவதற்கு ஏற்றதாக மாற்றுகிற கடினமான வேலையில் ஈடுபட உள்ளூர்ச் சிங்கள மக்களுக்கு முதுகு வளையவில்லை. அதனால் இந்தியாவில் நிலவிய வறுமையைப் பயன்படுத்தி, வஞ்சகமில்லாமல் உழைக்கிற இந்தியர்களை ஆங்கிலேய எஜமானர்கள் தருவித்தனர். இந்தியாவாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் யாவுமே ஒரே பேரரசின் கீழ் உள்ள காரணத்தினால் எல்லா இடத்திலும், எல்லோரும் அடிமைகள் என்ற அடிப்படையில், அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் என்ற எதார்த்தத்தில் அவர்களும் கண்டிக்குப் புறப்பட்டனர்.



இலங்கைக்குத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையும், அங்கே அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் எதிர்த்து இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதாபிமானிகள் குரல் எழுப்பினர். அதன் விளைவாக பிரிட்டிஷ் இந்திய அரசு 1839 இல் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் சில அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை அரசும், தோட்ட முதலாளிகளும் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக 1847 இல் இத்தடையை பிரிட்டிஷ் இந்திய அரசு நீக்கியது. மலையகத் தோட்டங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா அடிக்கடி தலையிட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை உத்திரவாதப்படுத்த முனைந்தது. மருத்துவ வசதிச் சட்டம், கல்வி சகாயச் சட்டம், தொழிலாளர் சட்டம், சம்பளச் சட்டம் ஆகியவை 1912 முதல் 1927 வரை இலங்கை அரசினால் நிறைவேற்றுவதை இந்தியா உறுதிப்படுத்தியது.



மனிதர்கள் முன்பு செல்லாத அடர் காடுகளை நோக்கிய மலையக மக்களின் காலடியும், அந்தக் காட்டைப் பண்படுத்திய கைகளும் இல்லாவிட்டால் அங்கே தோட்டங்கள் உருவாகியிருக்காது. கடுமையான சூழலுக்குள் தம் உடலை நிலத்தில் உரமாக்கியபடிதான் இலங்கையின் முதல் ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் உற்பத்தியை உருவாக்கினார்கள். அவர்கள் கால் படதா, கை தொடாத, உடல் விதையாகாத மலையகம் எதுவுமில்லை. இந்த மண்ணை வளமாக்கிய போது இறந்தவர்களில் எண்ணிக்கை கணக்கற்றது. 1926 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டளைச் சட்டம் ஒன்றின் படி ஆரம்பத்தில் மலையகம் வந்தவர்களின் 100 க்கு 40 பேர் சூழல் சார்ந்து இறந்ததை உறுதி செய்கின்றது. 1841 க்கும் 1849 க்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவீதத்தினர் துர்மரணம் எய்தியதாக கொழும்பு அப்சர்வர் தனது பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. (1980 முதல் இலங்கையில் நடந்து வரும் விமானத் தாக்குதல்களும், நிலக் கண்ணி வெடிகளும் நிரம்பிய ரத்த மயமான இனப்போரினால் இறந்த மக்களைக் காட்டிலும் இந்தத் தொகை அதிகம்) 1837 ஆம் வருடம் 4,000 ஏக்கராக இருந்த காஃபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராகப் பெருகியது. இதற்கிடையில் 1860 இல் தேயிலை பயிரிடுதல் சிறு அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1870 களில் பூச்சிகள் தாக்கி காஃபி பயிருக்குப் பெரும் சேதம் விளைவித்த போது அவை ஒட்டுமொத்தமாக தேயிலைத் தோட்டங்களாக மாற்றம் கண்டன. 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.



அதற்கு முன்பாக சிலோனின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல வேலைகளில் இந்த மக்கள் ஈடுபட்டனர். பாலங்கள், சாலைகள், இருப்புப் பாதை நிர்மாணம் ஆகியவற்றில் இவர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. காஃபி மற்றும் தேயிலை சாகுபடி மூலம் ஈட்டப்பட்ட ஒவ்வொரு காசிலும், அவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் முன்னேற்றங்களின் பின்னாலும் மலையக மக்களின் வரலாறு ஓசையின்றிப் பதிந்திருக்கிறது. உலகெங்கும் பருகிய மற்றும் பருகும் காஃபி மற்றும் தேநீரின் சுவையில் இந்த மக்களின் இரத்தத்தின் வெப்பமும், வியர்வையின் கசப்பும் கலந்திருக்கின்றது. இந்தத் தகவல்களை எல்லாம் எதற்காக இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால், இத்தகைய அளப்பரிய தியாகம் செய்து இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, அந்தத் தீவின் ஏற்றுமதிக்கு மாபெரும் தூணாக விளங்கும் தேயிலை சாகுபடியை உருவாக்கிய மலையக மக்களுக்குப் பிற்காலத்தில் எத்தகைய துரோகம் இழைக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான்.



ஆக இலங்கையின் தற்போதுள்ள தமிழர்களை பாரம்பரிய ஈழத் தமிழர்கள் என்றும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'இந்திய வம்சவழித் தமிழர்கள்' என்றும் பெரும்பான்மை சிங்களர்கள் வகைப்படுத்துகின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வடகிழக்குப் பகுதியான தமிழர்களில் பாரம்பரிய நிலப்பகுதியில் வசிக்கிற அதே வேளை இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு நடுவில் மலையகத்தில் வசிக்கின்றனர். இது தவிர இலங்கையில் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தாய் மொழியாக தமிழே இருந்த போதும் தங்களைத் தனியான கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு இனக் குழுவாகவே உணர்கின்றனர். இப்படி இலங்கைத் தீவில் உள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று தனித்தனியே பிரித்துப் பேசி விட்டு மண்ணின் மைந்தர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சிங்கள இனம் எது?



சிங்கம் ஒன்று இளவரசி ஒருத்தியோடு உடலுறவு கொண்டு அதன் மூலம் தோன்றிய இனம்தான் சிங்கள இனம் என்று சிங்களப் புராணங்கள் ஒரு பக்கம் கூறினாலும், சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 486 ஆம் ஆண்டு சிங்கள இனம் உருவானதாகத் தெரிவிக்கின்றனர். மொட்டையடித்து நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசன் கி.மு. 486 இல் தனது எழுநூறு ஆதரவாளர்களுடன் இலங்கைத் தீவில் வந்திறங்கினான். தமிழ் மன்னன் எல்லாளன் வீழ்வதற்க்கு முன்னூறு ஆண்டுகள் முன்னர் இது நடந்தது. மகாவம்சம் முதலிய பிராதனச் சிங்கள நூல்களே கூட விஜயன் வருகைக்கு முன்பே நாகர்கள், யாக்கர்கள் என்ற பெயரில் திராவிட அரசுகள் இலங்கைத் தீவில் இருந்ததை வேண்டா வெறுப்பாக உறுதி செய்கின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல சிங்கள மக்களைப் பொறுத்த வரை இலங்கைத் தீவைக் "கண்டுபிடித்தது" விஜயன்.



ஆக அசோகச் சக்கரவர்த்தி புத்த மதத்தைத் தழுவும் முன்னரே விஜயன் இலங்கைத் தீவை அடைந்து சிங்கள வம்சத்திற்கு வித்திட்டான். விஜயன் இலங்கையில் அடியெடுத்து வைத்து சிங்கள இனத்தை உருவாக்கிய 59 ஆண்டுகளுக்குப் பிறகு அசோகச் சக்கரவர்த்தியின் மைந்தன் மகிந்தன் புத்த மதத்தைப் பரப்புவதற்காக கி.மு.427 இல் இலங்கையை அடைந்தான். இவ்வாறாக புத்த மதம் இலங்கைத் தீவிற்கு அறிமுகமானது.



எது எப்படியோ, தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர் இலங்கையை ஒரே தேசமாகத் தைத்துக் கோர்த்தனர். பல மன்னர்கள், ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தையும் அவர்கள் அப்படித்தான் உருவாக்கினார்கள். ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு கனத்த வேறுபாடு இருந்ததை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் பல மொழி பேசுகிற, பல ராஜாக்களால் ஆளப்பட்ட, பல இன மக்களையும் ஒரே நிர்வாகக் குடையின் கீழ் கொணர்ந்தனர். மேலும் இந்து மதம் தேசம் முழுமைக்கும் பொதுவாக இருந்தது. அதே போல முஸ்லிம் மக்களும் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். ஆனால் இலங்கை அப்படியல்ல. அங்கு தமிழன் ஒருவனை பெளத்தனாகக் காண்பது அரிது. அதே போல சிங்களவனில் ஒருவன் கூட இந்து கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரு ராஜ்ஜியங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டே இருந்தன. சிங்கள வரலாறு நெடுகிலும் தமிழர்களை எதிரிகளாகவே சித்தரித்து வந்திருந்தது. இருவருக்கும் தனித்தனி மொழி, கலாச்சாரம், சமயம், ராஜ்ஜியம் என்று ஒன்றுகூட ஒத்து வராத முரண்பாடு. ஆங்கில ஆட்சியின் கீழ் ஒரே தேசமாக இலங்கை மாறினாலும் அந்த முரண்பாடு ஆழமாக ஓடிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும் என்று பின்னர் நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.



ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் பொழிலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கான அதன் பிராந்திய முக்கியத்துவமும், இங்கிலாந்திற்கும் ஏனைய ஐரோப்பாவிற்கும் புத்துணர்ச்சியளித்த சிலோன் தேயிலையின் தனித்துவமும் இலங்கைக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலப் பேரரசின் மணிமகுடமாக இந்தியா விளங்கியது. இலங்கையை 'இந்தியப் பெருங்கடலின் முத்து' என்று ஆங்கிலேயர் சொல்லி மகிழ்ந்தனர்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 2

கடைசி விருந்து
- சுகிர்த்தராணி


விதைகளற்ற பழுத்த கனி ஒன்று
என்னிடம் தரப்பட்டது

நீலவெளிச்சப் பின்னணியில் அதைப்பற்றிய
ரகஸியங்கள் என் காதில் ஓதப்பட்டதும்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வ தென்று
எனக்கு தெரியவில்லை
உன் நா வறட்சி அடையும்போது
வித விதமான சாறு பிழிந்து தரவேண்டுமாம்

பட்டாம்பூச்சியின் தாவலைப் போல
பிழிவதும் குடிப்பதும்
ஆரம்பத்தில்ல் கலையாக இருந்தது

பின்பு உறங்கும் வேளையில் கூட
உன் வாய் சாறு நிரம்பியதாகவும்
உனதொருகை குவளையை
இறுக்கியதாகவும் விளங்கின

காலாவதியான சுரங்கத்தின் உட்குடைவாய்
கனியின் பகுதிகள் பொலிவிழந்த பின்னும்
குடிப்பதற்குக் கேட்கின்றாய்

என்மீது உருண்ட திரண்ட
உன் பிரியத்தையே பிழிந்து தருகின்றேன்
அது விஷச்சாறாகவும் இருக்கலாம்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி 1

2007 அக்டோபர் 22ஆம் தேதி. எங்கிருந்து வந்தது என்று கணிக்க முடியாத விமானங்கள் இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமான அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த 18 விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் பெறுமான விமானங்களை இலங்கை அரசு இழந்தது. இலங்கை இராணுவம் இயலாமையின் வெளிப்பாடாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இருபது புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் காட்சிக்கு வைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.

உலகத்தையே மூக்கின் மீது விரலை வைக்கச் செய்த துணிகரமான இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் 'ஆபரேஷன் எல்லாளன்' என்று பெயரிட்டனர். யார் இந்த எல்லாளன்? அனுராதபுரத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஏன் அவன் பெயர் வைக்கவேண்டும்? அனுராதபுரத்திற்கும் எல்லாளனுக்கும் என்ன தொடர்பு?

இலங்கைத் தீவின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு இலங்கைத் தீவை 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட தமிழ் மன்னன்தான் 'எல்லாளன்'. கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை அவர் ஆட்சி புரிந்தார். இறுதியில் கி.மு. 161 இல் துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் எல்லாளனை வீழ்த்தினான். எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு தனது அரசிற்கு சிங்கக் கொடியை நிர்மாணித்துக்கொண்டான். தற்போதையை இலங்கைக் கொடியிலும் சிங்கம் உள்ளதைப் பற்றிய தனிக் கதை பின்னர் காத்திருக்கிறது. எல்லாளன் வீழ்ந்த காலம் தொட்டு அனுராதபுரம் சிங்கள அரசுகளின் தலைநகராகத் திகழ்ந்தது. இன்றைய வரலாறு, குறிப்பா சிங்கள வரலாறு, அனுராதபுரத்தை புராதனச் சிங்கள பவுத்தத் தலமாகப் பதிவு செய்கிறது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மாஹாநாமா என்ற புத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய மாகாவம்சம் என்ற புத்தப் புராண நூல் எல்லாளனை வில்லனாக அடையாளம் காட்டி மகிழ்ந்தது. சிங்களத்தை புத்த மதத்தின் பாதுகாவலனாகப் போற்றிப் புகழ்ந்து, தமிழ் மக்கள் மீதும் மன்னர்கள் மீதும் இந்து மத நம்பிக்கை மீதும் வெறுப்பை உமிழ்ந்து சிங்கள இனவாதத்தை உருவாக்கியதில் மாகாவம்சத்திற்கு முக்கியப் பங்குண்டு. அன்பையும், சகோதரத்துவத்தையும் போதித்த புத்த பிரானின் வழிவந்த துறவிகள் தங்கள் பிழைப்புக்காகவும், செல்வாக்கைத் தக்க வைப்பதற்காகவும் இனத் துவேஷத்தை விதைத்த அலவத்தை மஹானாமா அரங்கேற்றினார். சிங்கள பெளத்த இனவாதத்தின் வேர் மஹாநாமாவில் இருந்து ஆரம்பிக்கிறது.

மேற்கொண்டு பேசும் முன்பு தற்போதைய இலங்கையின் பிராந்தியங்களைப் பற்றிய சிறு அறிமுகம் தேவைப்படுகிறது. இந்தியாவைப் போல சமஷ்டி (ஃபெடரல்) அமைப்பு இலங்கையில் கிடையாது. சமஷ்டி அமைப்பிலே மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும். அதற்கென்று சில அதிகாரங்கள் உண்டு. அதைத் தவிர மாநில அரசுகளும் உண்டு. அவற்றுக்கென்று சில அதிகாரங்கள் உண்டு. நிலச் சட்டங்கள், கல்வி, மாநில அளவிலான வரிகள், பட்ஜெட், பிரத்யேக காவல் துறை என்று பல சுய நிர்ணய உரிமைகள் மாநிலத்திற்கு உண்டு. இந்தியா, அமெரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய சமஷ்டி அமைப்பைக் காண்கிறோம். ஆனால் இலங்கையில் நடைமுறையில் உள்ளது யூனிடரி சிஸ்டம். அங்கே சிங்களர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு அரசு மட்டும் கொழும்பு நகரில் இருந்து இயங்குகிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என்று பிராந்தியங்கள் உள்ளது போல இலங்கையில் கீழ்க்கண்ட 9 பிராந்தியங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன.

1. மத்திய மாகாணம்
கண்டி, Matale, Nuwara Eliya ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
2. கிழக்கு மாகாணம்
அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
3. வட மத்திய மாகாணம்
அனுராதபுரம், Polonnaruwa ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
4. வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது
5. வட மேற்கு மாகாணம்
Kurunegala, புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
6. Sabaragamuwa மாகாணம்
Kegalle, ரத்னபுரா ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
7. தெற்கு மாகாணம்
Galle, Hambantota, Matara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
8. உவா (Uva) மாகாணம்
Badulla, Moneragala ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
9. மேற்கு மாகாணம்
கொழும்பு, Gampaha, Kalutara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது

அனுராதபுரத்தில் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்தாலும் அவனால் வடக்குப் பிராந்திரத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இயலவில்லை. சொல்லப்போனால் 2,500 ஆண்டு கால இலங்கை வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்து வந்திருக்கின்றன. அதில் ஒரு அரசு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் அரசாகத் திகழ்ந்தது. பராக்கிரம பாபு என்ற சிங்கள மன்னன் காலத்தைத் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆண்டு வந்திருக்கின்றனர். 1972 க்கு முன்னர் சிலோன் என்று அறியப்பட்ட இலங்கை சங்க காலத்தில் 'ஈழம்' என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பத்தாம் நூற்றாண்டில் ராசராசச் சோழனிடம் பெளத்தத் துறவிகள் இலங்கையின் மணிமகுடத்தை அளித்து புத்த மதத்தைத் தழுவுமாறு வேண்டியதாகவும், அப்படி ஏற்றுக்கொண்டால் அவரை இலங்கையின் வேந்தனாக முடிசூட்டுவதாக உறுதியளித்ததாகவும், அரசியலும் சமயமும் தனித்திருக்க வேண்டுமென்று கூறி ராசராசன் மறுத்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது. மதம் கலந்த ஆட்சியை ராசராசன் தவிர்த்தாரே ஒழிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் நோக்கம் இல்லாமலில்லை. ராசராசனின் மைந்தன் ராஜேந்திரச் சோழனால் கி.பி. 1017 இல் சிங்கள மன்னன் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டு ஒட்டு மொத்த இலங்கைத் தீவும் சோழப் பேரரசின் அங்கமாக மாறியது.

1505 இல் போர்ச்சுக்கீசியர்கள் இலங்கைத் தீவிற்கு வந்த போது இலங்கையில் மூன்று அரசுகள் நிலவின. தெற்கே கோட்டி அரசும், மத்திய மலை நாட்டில் கண்டி ராஜாங்கமும், பரராஜசேகரன்(1469-1511) என்ற மன்னன் ஆட்சியில் யாழ்ப்பாணத் தமிழ் அரசும் இருந்தன. கோட்டி சிங்கள ராஜ்ஜியம் 1597 இல் போர்ச்சுக்கீசியரிடம் வீழ்ந்தது. அதே போர்ச்சுக்கீசியர்கள் 1619 இல் சங்கிலி குமாரன் என்ற மன்னனைத் தோற்கடித்துக் கடைசி யாழ்ப்பாண ஈழ அரசைக் கைப்பற்றினர். சங்கிலியனைத் தூக்கிலிட்டனர். யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் பரவலாக நம்பப்படுகிறது. கோவா போர்ச்சுக்கீசியக் காலனியாக விளங்கியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

போர்ச்சுக்கீசியரை விரட்டுவதற்காக ராஜசிங்கா II என்ற கண்டி மலை தேசத்து சிங்கள மன்னன் 1638 இல் செய்துகொண்ட உடன்படிக்கையின் பேரில் டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவிற்கு வந்தனர். வந்து கடலோரப் பகுதிகளான கோட்டி மற்றும் யாழ் அரசுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒல்லாந்தார் எனப்படும் டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்காக மாபெரும் கோட்டை ஒன்றைக் கட்டி எழுப்பினர்.

1795 இல் பிரிட்டிஷ் துருப்புகள் திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்கின. படிப்படியாக ஆங்கிலேயர் ஆதிக்கம் இலங்கையில் பரவியது. 1796 இல் டச்சுக்காரர் விரட்டியடிக்கப்பட்டனர். சூரியனே மறையாக மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் பிரிட்டிஷ்காரர்களுக்கு சின்னஞ்சிறு இலங்கைத் தீவின் மீது என்ன அக்கறை, அதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி நமக்கெல்லாம் எழுவது இயற்கை.

இலங்கை சின்னஞ்சிறு தீவாக இருந்த போதிலும் பூகோள முக்கியத்துவம் மிகுந்தது. பாரம்பரியத் தமிழர் பகுதியான கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, ஆழமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும். திருகோணமலைத் துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ, இந்தியப் பெருங்கடலே அவர்கள் வசம் என்று பிரெஞ்சு மாமன்னன் நெப்போலியன் ஒரு முறை கூறினார். பிற்காலத்தில் (1980 கள் மற்றும் அதன் பிறகு) அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கையோடு ராணுவ ரீதியாக உறவாடியதற்கு இதுவே முக்கியக் காரணம். 1987 இல் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உருவானதென்று சொல்லப்படுகிற ராஜீவ்-ஜெயவர்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கூட திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் நலனுக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகளின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்ற ஷரத்து முக்கியமானதாகும்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்தியா மிகவும் இன்றியமையாயது. பிரான்ஸ் இந்தியாவின் மீது படையெடுக்கக் கூடும் என்று அஞ்சிய இங்கிலாந்து டச்சுச்சாரர் வசமிருந்த இலங்கையைக் கைப்பற்றியது. இதைப் பற்றி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய இளையபிட் (Younger Pit), "நமது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு இலங்கையைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்துள்ள பிரிட்டிஷ் அடிமை நாடுகளுள் மிகவும் பயனுள்ள நாடு இலங்கையேயாகும்" என்று அவர் செம்மாந்து கூறினார். (இந்துமாக் கடலில் இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் இரண்டாம் உலகப் போரிலும் உணரப்பட்டது. அதைப் பின்னர் காண்போம்)

கடலோரப் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வீழ்ந்த போதிலும் கண்டி ராஜ்ஜியம் 1815 வரை நீடித்தது. கடைசி கண்டி மன்னனை சிங்கள அரசன் சொல்லி என்று வரலாறு திரிக்கப்படுவது சிங்கள இனவாதத்தின் அப்பட்டமான கயமைத் தனமாகும். கண்டி ராஜ்ஜியத்தின் கடைசி அரசனாக விக்ரமராஜசிங்கன் என்ற சிங்களப் பெயரில் தமிழ் மன்னரே ஆட்சி செலுத்தினார். அவருடைய இயற்பெயர் கண்ணுசாமி. சூழ்ச்சியின் காரணமாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் அகப்பட்டு தமிழகத்தின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1832 ஆம் ஆண்டு தனது 52 ஆவது வயதில் விக்ரமராஜசிங்கன் மரணமடைந்தார். கண்டி சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பிறகு இலங்கைத் தீவு முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு முன்பாகவே விக்ரம ராஜசிங்கனின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பெரும் செல்வாக்குப் படைத்த பத்து சிங்களப் பிரதானிகள் 1815 மார்ச் 2 அன்று Kandyan Convention என்ற பெயரில் கண்டி தேசத்தை ஆங்கிலேயருக்கு ஏகமனதாகத் தாரை வார்த்துத் தந்தனர். அவர்களில் பிற்காலத்தில் இலங்கையின் அதிபராகப் பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவின் கொள்ளுப்பாட்டன் ரத்வட்டே (Ratwatte) குறிப்பிடத்தக்கவர்.

கெப்பட்டிபொல திசாவ என்ற வீரன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக திரிக்கப்பட்ட நிகழ்கால வரலாற்றில் குறிக்கப்படுகிறான். ஆனால் இவன் 1819 ஆம் ஆண்டு புரட்சியின் போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி துரைசாமி என்ற தமிழனுக்கு முடிசூடவே போராடினான். இது வரலாற்றில் மறைக்கப்பட்டது.

சிங்கள வெறியர்களின் தமிழ் வெறுப்பு அவர்கள் ஆங்கிலேயரோடு செய்துகொண்ட Kandyan Convention இல் வெளிப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்கள் கண்டி ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்குக் கூட ஆங்கிலேயர் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட முரணான பின்னணியில் ஆங்கில ஆட்சியாளர்கள் 1833 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி கோல்புரூக்(Colebrooke) கமிஷனின் பரிந்துரையை ஏற்று இலங்கைத் தீவு முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தனர்.

அதற்கு முன்பு போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கண்டி தேசம் நீங்கலாக இலங்கைத் தீவின் பிற தமிழ், சிங்களைப் பகுதிகளைத் தம் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலும் வரலாற்று ரீதியாக மதம், மொழி, பாரம்பரியம், நிலப்பரப்பு என்று எல்லா வகையிலும் தனித்துவம் வாய்ந்த சிங்கள மற்றும் தமிழ் தேசங்களைத் தனித்தனியாகவே நிர்வகித்தனர். கி.மு. 200 ஆம் ஆண்டு கிரேக்கர்கள் தயாரித்த உலக வரைபடத்தில் 'அறியப்பட்ட உலகத்தின் தெற்கு முனை' என்ற பொருள் கொண்ட Taprobane எனும் கிரேக்க வார்த்தை மூலம் குறிக்கப்பட்ட இலங்கைத் தீவை ஒரே நிர்வாகத்தின் கீழ் 'சிலோன்' என்ற பெயரின் கீழ் கொண்டு வந்து 1833 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் வரவாற்றுத் திருப்பத்தை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்

செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்

உங்களில் பலருக்கு செல்லமுத்து குப்புசாமி பற்றித் தெரிந்திருக்கும். கரையோரம், பங்கு வணிகம் மற்றும் NEXT INDIA ஆகிய மூன்று வலைப் பதிவுகளைப் பேணி வருகிறார்.
http://karaiyoram.blogspot.com
http://panguvanigam.blogspot.com
http://nextindia.blogspot.com

இப்போது சத்தமில்லாமல் இயங்கும் பதிவர். அவரது வலைப்பதிவு career (அப்படி ஒன்று இருக்கிறதா?) இன் உச்ச கட்டமாக முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட 'அண்ணியின் அணைப்பில்' என்ற கதையைக் கூறலாம்.
http://karaiyoram.blogspot.com/2006/06/blog-post_30.html

ஷேர் மார்க்கெட்டில் நட்டமில்லாமல் இலாபம் ஈட்டுவது குறித்து அவர் எழுதிய 'இழக்காதே' புத்தகம் நவீனத் தமிழ் 'நான்பிக்ஷன்' எழுத்தில் மிக முக்கியமான மைல் கல். 2006 ஆம் வருடம் சென்செக்ஸ் 12 ஆயிரம் புள்ளியில் இருந்து 10 ஆயிரமாகச் சரிந்த போது எழுதிய இந்த நூல், 2008 இல் 21 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாகச் சுருங்கிய போதும் பொருத்தமான ஒன்றாகவே நிற்கிறது.

செல்லமுத்து குப்புசாமியின் இன்னொரு புத்தகம் 'வாரன் பஃபெட் - பணக் கடவுள்'. சிறு வயதில் பேப்பர் போட்டுச் சம்பாதித்த வாரன் பஃபெட் உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் ஆன கதையை, அவரது வாழ்க்கையை தெளிவாகப் பதிவு செய்திருக்கும் நூல்.

http://www.kamadenu.com/cgi-bin/authour_search.cgi?authname=Chellamuthu%20Kuppusamy

நமது பண்புடன் குழுமத்திற்காக ஈழப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியை ஏழு கட்டுரைகளில் ஒரு மினி-தொடராகத் தருகிறார்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 7

நாளை மற்றோரு நாளே - என் நினைவுகள்
- மோகன் தாஸ்


ஜி. நாகராஜன் பற்றி நான் முதலில் படித்தது. சு.ராவின் பிரமிள் பற்றிய நினைவோடையிலாகத்தான் இருக்கும். பின்னர் என் இலக்கிய வட்டம்(அல்லது உள்வட்டம்) பெரிதாக ஜி. நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' நாவல் பற்றி தெரியவந்தது. இந்த முறை பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த பொழுது சட்டென்று மனதைக் கவரும் விதமாக காலச்சுவடு ஸ்டாலில் இருந்த நாகராஜன் முழுத்தொகுப்பையும் வாங்கிவந்திருந்தேன். இது அவர் எழுதிய நாவல், குறுநாவல், சிறுகதைகள், கவிதைகள் முதற்கொண்டு ஜி. நாகராஜன் எழுதிய மொத்தத் தொகுப்பு. முதலில் பிரித்து வைத்து உட்கார்ந்தது, சுந்தர ராமசாமியின் - ஜி. நாகராஜன் பற்றிய நினைவோடை. அதற்கு காரணம் உண்டு, எல்லாம் பிரமிள் பற்றிய நினைவோடை படித்த காரணம் தான் மேலும் ஒரு காரணம் RP ராஜநாயஹம், சுரா ஜி. நாகராஜன் பற்றி எழுதியிருந்தைப் பற்றி சொன்னது. நினைவோடை படிக்க ஆரம்பித்த பொழுது சட்டென்று ஆரம்பமென்றில்லாமல் வானத்திலிருந்து குதித்த மாதிரி இருந்தது, பின்னர் தான் சு.ரா, ஜி. நாகராஜன் பற்றி சொல்லியிருந்த முதல் அரைமணிநேர கேசட் தொலைந்து போனதன் காரணமாக அப்படியிருந்தது என்று தெரியவந்தது. எத்தனைக்கெத்தனை நாசூக்காக சொல்லமுடியுமோ அத்தை நாசூக்காக சொல்லியிருந்தார் சு.ரா., ஜி. நாகராஜன் பற்றி. அப்படித்தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு தான் அதைப்பற்றி. பொதுவில் சொல்ல முடியாத எழுத்தில் கொண்டு வரமுடியாத கதைகளை பின் காலங்களில் இலக்கியவாதிகள் யாரையாவது சந்திக்கும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் ;).

நாவல் திருவாளத்தான் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ஒரு நாள் கதையை எப்படி நாவலாக எழுதிவிடமுடியும் கேள்வி எனக்கும் சட்டென்று எழுந்தது. ஆனால் வாழ்க்கையில் முன் பின் நகரும் ப்ளாஷ்பேக் உபயோகித்து நாவல் தன் லீலையைத் தொடர்கிறது. இந்த நாவலை நான் படிக்க ஆரம்பிக்கும் முன்பே தமிழின் மிக முக்கியமான நாவலில் ஒன்று என்ற விஷயம் எனக்குத் தெரிந்திருந்தது. எப்படி தமிழில் ஒரேயொரு நாவல் எழுதிய ஜி. நாகராஜனின் இந்த நாவல் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றானது என்கிற ஆச்சர்யம் இயல்பாகவே எழுந்தது. ஜி. நாகராஜன் எழுதியதே நாளை மற்றொரு நாள் என்கிற நாவலும் குறத்தி முடுக்கு என்கிற குறுநாவலும் தான். இதைத்தவிர்த்து சிறுகதைகளும் கொஞ்சம் கவிதைகளும் எழுதியிருந்தாலும். பெரிய அளவில் வந்தது என்றால் இந்த நாவலும் குறத்தி முடுக்கு மட்டும் தான். இந்த நாவலை தமிழில் வெளிவந்த நாவல்களில் உயரிய இடத்தில் வைக்க என் மனது இடம் தராவிட்டாலும் முக்கியமான நாவல்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

காட்சிகளின் அருமையான விவரிப்பையும் உண்மையையே எழுதியிருப்பதைப் போன்ற ஒரு உணர்வையும் நீங்கள் இந்த நாவல் முழுவதுமே உணர முடியும். ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு சட்டென்றூ நகரும் சாமர்த்தியம் அழகாய் கைக்கு வந்திருக்கிறது. நானறிந்த வரையில் நான் படித்த வரையிலும் சரி காமத்தை இத்தனை காதலுடன் உண்மைக்கு ரொம்பவும் நெருக்கமாய்ப் படித்ததது நினைவில் இல்லை. ஆனால் இந்த நாவலின் மூலமாய் ஜி. நாகராஜன் அதுவரை தமிழுக்கு பெரிதும் அறிமுகமாகியில்லாத தமிழகத்தின் இருண்ட பகுதிகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நாவல் எழுதப்பட்ட காலம் அந்த சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது.

"அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகாரமாகவோ தோன்றுகிறது"

தன் மீது பானையை எறிந்துவிட்டு ஓடிப்போன தன் மகனைப்பற்றி நாவலின் கதாநாயகன் நினைக்கும் பொழுது வரும் வரிகள் இவை. ஜி. நாகராஜன் வாழ்க்கையை தொடர்ச்சியாய் அதன் பாணியிலேயே சென்று படித்திருக்கிறார் என்றே எண்ண வைக்கிறது.

கந்தன் ஒரு ரௌடி, மீனாவின் மேல் காதல் கொண்டு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவளை மணந்து கொண்டு பின்னர் அதுவும் சரிவராமல் அவளையே மூலதனமாகப் பயன்படுத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவன். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை இத்தனை தூரம் நெருக்கமாக உணர்ந்து எழுதியிருக்கக்கூடிய சாத்தியம் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இந்த நாவலைப் பற்றி எழுதுவதற்கென்று நிறைய இருந்தாலும் விமர்சனம் என்று எழுதுவதற்காக படிக்கும் பொழுதே சேர்த்து வைத்த குறிப்புத்தாள் கவனச்சிதறலாக காணாமல் போனதால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் சுவாரசியமான நாவலொன்றைப் படிக்கும் திட்டமிருந்தால் நிச்சயம் நாளை மற்றொரு நாளே நாவலை நிச்சயமாகப் படிக்கலாம்.



குடிசைகளுக்கும் சாக்கடை விளிம்புக்கும் இடையே மூன்று அடி இருக்கும். அது நெடுகிலும் சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தது. கந்தனின் வீட்டையொட்டி, இந்த குறுகிய பகுதியில் ஒரு மூன்றுகல் அடுப்பின் மீது சிறிய பானையில் நீர் காய்ந்து கொண்டிருந்தது. அருகே ஒரு பெரிய பானையில் அரையளவுக்குத் தண்ணீர் இருந்தது.


கந்தன் குடிசைக்குள் நுழைந்தான். மீனா தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.


"துணியை வாங்கிட்டு வந்தாயா?" என்றான் கந்தன்

"உம், பெட்டியுள்ளாற இருக்கு" என்று சொல்லிக் கொண்டே மீணா நிமிர்ந்து நின்றாள். "உம், கூட்டு" என்றான் கந்தன்.


அவள் மீண்டும் குனிந்து பெருக்க ஆரம்பிக்கவும், அவன் அவள் பின்சென்று அவளைப்போலவே வளைந்து அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்தான்.


'உம். விடுங்க.. இப்பெல்லாம் என்ன, இப்படி காலே நேரத்துலே ?" கந்தன் சற்று விலகி நின்று கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டான்.


"அதுவும் கதவு வேறே தெறந்து கிடக்கு " என்று தொடர்ந்தாள் மீனா.


"கதவே வேணா அடச்சிடறேன்.." என்று சொல்லிக்கொண்டே கந்தன் கதவை அடைத்துத் தாளிட்டான்.


"ஆனா வெளிச்சம் இல்லாட்டி எப்படியோ இருக்கு " என்று சொல்லிக் கொண்டு, ஒரு தீக்குச்சியைக் கிழித்து

இரண்டு பொடி மெழுகுவர்த்திகளைக் கண்டுபிடித்து, மற்றுமொரு தீக்குச்சியைக் கிழித்து அவற்றைப் பற்றவைத்தான்.

ஒரு ஒரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவை திருதிருவென்று முழித்தன. ஆடைகளையும் தலைமுடியும் சரி செய்து

கொண்டிருந்த மீனா, "பட்டப் பகல்லே இது என்ன அட்டகாசம்..?" என்றாள்.


'உண்மையை சொல்லட்டுமா ? இன்னைக்குக் காலேலே நம்ம வீட்டு முன்னாலே ரெண்டு நாயிக ஒண்ணையொண்ணு விரட்டிக்கிடு

போச்சி.. " என்று சொல்லிவிட்டு கந்தன் சிரித்தான்.


"ஆமா, ஒடனே நெனப்பு வந்திரிச்சாக்கும்..? அன்னைக்கு ரெண்டு அணில்க, இன்னைக்கு ரெண்டு நாய்க.. " என்று சொல்லிக்கொண்டே

மீனா பாய் ஒன்றை எடுத்து உதறி அறையின் நடுவில் போட்டுவிட்டு அதன்மீது ஒரு தலையணையும் தட்டி போட்டாள். ஒரு மெழுகுவர்த்தி

அணைந்துவிட்டது. அதைப் பற்றவைத்துகொண்டிருந்த கந்தன், "அன்னைக்கு அந்த அணில்க எப்படி ? நாம் எவ்வளவு பக்கல்லே

போய் வேடிக்கை பார்த்தோம். எப்படி இரண்டும் ரொங்கிகி கிடந்திச்சு.. ?" என்று அணில்களை வியந்தான். அவன் அவளருகே

சென்று உட்காரவும் அவள். " நாமும்தான் ரொங்க்கிக் கிடந்திருக்கோம்.." என்று சொல்லிச் சிரித்தாள். அவன் சிரிக்கவில்லை.

அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டான். இருவரும் படுத்தனர்.


"நாய்க செய்யறது அசிங்கமில்லையா.. " என்றாள் அவள்.

"அபூர்வம். ஆனா அதுகளெக் கண்டா எல்லாருக்கும் பொறாமையா இருக்கும் போல.." என்றான் கந்தன்.

"யானைங்களெப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா.." என்று கேட்டாள் மீனா.

"ஆமா.. ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் தேயிலத் தோட்டத்துலே வேலை பார்த்தான். சுத்து

வட்டாரத்திலே யானைங்க வருமாம். போகுமாம். ஒரு நாளைக்கு யானை அலர்ற சத்தம் கேட்டிச்சாம். ....

ஒரு பெண்யானை ரெண்டு தேக்கு மரத்துக்கு ஊடே சிக்கிட்டு அலறிகிடு இருந்த்திருக்கு.. ஒரு ஆண் யானை தும்பிச்சங்கைனாலே

பெண் யானையைப் போட்டு இளுத்துக்கிட்டு இருந்திரிக்கு. ஆளுங்க பக்கத்துலே போகவும் ஆண் யானை அவுங்களே வெரட்டி

அடிச்சிதாம்.. கொஞ்சம் தலையைத் தூக்கிக்க.. முடியை எடுத்து பின்னாடி போட்டுக்க.. "


"அப்புறம்.. ?" என்று கேட்டாள் மீனா.

"ஆளுங்க தூரத்திலே இருந்துகிட்டே வேடிக்கை பாத்திருக்காங்க.. நாள் பூரா ஆண் யானை இளுக்கவும் பெண் யானை

அலறவுமா இருந்திருக்கு.."

"அய்யோ.. மெள்ள.." என்றாள் மீனா.

"சரி. மெள்ளத்தான். கதையை முளுக்க கேக்கலேயே ? அடுத்த நா காலேலேதான் அலறல் நின்னதாம். லைன் ஆளுங்க

என்னேண்ட்டுப் போய்ப் பார்த்திருக்காங்க. .பெண் யானை செத்துகிடந்தது. ஆண் யானையைக் காணேம்."

"கண்றாவி.. " என்றாள் மீனா.

"அப்ப மறந்திடு.. " என்றான் கந்தன்.

"எதெ. "

"யானைகளெ மறந்திடு. அணிகல்களெ நெனெச்சிக்க.."

கந்தன் மீனாவைத் தன் பக்கம் திருப்பி, முகத்தை அவளது மார்பில் புதைத்துக்கொண்டான்.

"ஆமா.. ஒண்ணு கேக்கணூம்ண்ட்டு தோணுது.. " என்றான் கந்தன்.

"என்ன..?"

"நைட்லே அக்கா வூட்டுக்கு கண்டவனெல்லாம் வர்றானே. அப்பவும் ரொங்கிக் கெடந்திருக்கயா..?"

"அக்கா.. வூட்டுக்கு கண்டவங்க எல்லாம் ஒண்ணும் வரதுல்லே, ஏகதேசமா டீஷண்ட்டானவங்கதான் வருவாங்க. அதுவும்

காலேஜு ஸ்டூட்ண்ட்ஸ் வந்தா குஸியா இருக்கும்.."

"எப்படி குஸியா இருக்கும்..?"

அய்யோ கடிக்காதீங்க.. வலிக்குது.." என்று இலேசாய் அலறினாள் மீனா.

"சரி.. சரி. கடிக்கலே.. எப்படி குஷியா இருக்கும்.. " என்று திரும்பிக் கேட்டான் கந்தன்.

"பஸ்ட் டிரிப்பா இருந்தா தொடறதுக்கு முன்னாடி டயர் பஞ்சர் ஆயிடும்.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உம்." என்றான் கந்தன்.

"பழக்கப்பட்ட பசங்க அந்த சினிமாக்காரி மாதிரி இருக்கே. இந்த சினிமாக்காரி மாதிரி இருக்க எம்பாங்க.."

"உம்."

"நாம இரண்டுபேரும் எங்காச்சும் ஒடிலாம்பாங்க செலர், போனவாரம்னு நெனக்கிறேன். ஒரு தம்பி என்ன சொல்லிச்சு தெரியுமா?

"உம்.. என்ன சொல்லிச்சு.."

"என்னெப் பொம்பளேன்னுட்டு நெனச்சிக்கிட்டு நீ ஆம்பிளே மாதிரி நடத்துக்கோனிச்சு.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உஹ¤ம்.."

"ஒரு வாட்டி ஒரு பெரிய மனுசன் வந்தான். பாத்தாலே பயமா இருந்துச்சு. முரடன் மாதிரி இருந்தான். என் காலே நல்லா சோப்புப்

போட்டுக் களுவிட்டு வரச் சொன்னான். அஞ்சு, பத்து நிமிஷம் என் காலே முத்தமிட்டு அளுதுக்கிட்டே ரூமை விட்டு வெளியே போனான்.

இருந்திட்டுப் போங்கன்னேன்.. 'பைத்தியக்காரத்தனம்'னு சொல்லிட்டு போயிட்டான்."

'அப்படியா..? சரி நல்லாப் படுத்துக்க.." என்றான் கந்தன், மீனாவின் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே.

"சமயத்திலே அந்தப் போக்கிரியெ கொன்னுப் போடுவோனானு தோனுது.. ஆனா. ஒன்னெத் தந்தானேனிட்டுத்தான் சும்மா இருக்கேன்."

என்றான்.

"அவர் சொந்தத்துல கார் வச்சிருக்காராமே..? "

"அவனுக்கென்ன? காரும் வாங்குவான்; ஏரோப்பிளேனும் வாங்குவான். எங்கிட்ட மட்டும் பத்தாயிரம் தாப்பாப் போட்டிருப்பானா?"


"பத்தாயிரம் இருக்குமா?"

"பின்னே? பதினெட்டு, பத்தொன்பது பெர்ற வீட்டே பத்துக்கு விக்க வச்சான். வீடு வாங்கின பார்ட்டிகிட்டேர்ந்து மூவாயிரமோ, நாலாயிரமோ வாங்கியிருப்பான். எங்கிட்டேர்ந்து வேற கமிஷண்ட்டு ஐந்நூறு வாங்கிட்டான்."


"நீங்க் அப்போ வெவரம் தெரியாதவரு.."

"அம்மாவும் போயிட்டாங்க.."

"சரியா இருக்கா..?"

அவள் தலையை அசைத்தாள்.

"தலையணை வச்சிட்டிருக்கியா ?"

"இல்லே. வேணுமா..?"

"வேண்டாம். சரியாத்தான் இருக்கு.."


சில நிமிடங்களுக்கு இருவரும் அவர்கள் பார்த்து ரசித்திருந்த அணில்கள் போலவே இருக்கின்றனர். இருவரிடத்தும் கட்டுப்பாடான தாள லயித்தோடு கூடிய இயக்கம். அசிங்க உணர்வே இல்லாத பரஷ்பர ஸ்பரிசங்கள். குடிசை பூராவுமே ஒரு வகையான விறைப்பு நிலவுகிறது. இருவர் உள்ளத்துள்ளும் சிறதளவு சிந்தனையும் இல்லை. சில நிமிடங்கள் செல்கின்றன. படிப்படியாக பொழுது விடிவது போல் இருவருள்ளும் தன்னுணர்வு தலையை உயர்த்துகிறது.


கொஞ்சமும் ஒசை ஏற்படுத்தாது கந்தன் எழுகிறான். மீனா கண்களை மூடி படுத்துக்கிடக்கிறாள். அவள் அருகே உட்கார்ந்துகொண்ட அவன் ஒரு சிகரெட்டைப் புகைக்கிறான். பிறகு மெதுவாக எழுந்திருந்து ஒரு அரை டிராயரை மட்டும் அணிந்துகொண்டு, ஒரு சோப்புக்கட்டியையும், ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு குளிக்க வெளியே வரத் தயாராகிறான். அவளிடமிருந்து ஒரு விசும்பல் கிளம்புகிறது. நின்று பார்க்கிறான். மீனாவின் மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் அவள் கன்னங்களை நனைக்கிறது. விம்மல் அழுகையாக மாறுகிறது.


"என்னங்க சந்திரனை தேடிக் கண்டுபிடிக்க வேண்டாங்களா ?" என்று உளறுவதைப்போல் அவள் கேட்கிறாள்.

"நாம் தேடாத இடமா..? " என்கிறான் அவன். "நாலு வருஷமாயிரிச்சே..! "

"உம்.."

"ஒங்களுக்கு சந்திரன் நெனெப்பே வரதில்லையா..?"


கந்தன் பதிலளிக்காது கதவை திறந்துகொண்டு, வெளியே போய்ப் பல் விளக்கிக் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன் குளித்து முடியும்வரை ஒப்பாரி போன்ற அழுகை அவன் காதுகளில் விழுந்துகொண்டிருக்கிறது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 6

கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
- மோகன் தாஸ்
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 5

செம்மீன்

செம்மீன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், என் நினைவுகளை மீட்டிப் பார்த்தால் விவேக்கின் நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் பாடல் வரிகளை நண்பர்களிடம் கேட்க அவர்கள் சொல்லித்தான் முதலில் அறிமுகம் ஆகியிருக்கவேண்டும். "கடலினக்கர போனோரே காணாத கர போனோரே" பாடல் மூலமாய் பின்னர் இன்னொரு படத்தில் மும்தாஜை கரெக்ட் செய்யும் பொழுது பாடும் "மானஸ மரூ". தொடக்கம் இதுதான். பின்னர் சந்திரமுகியில் வரும் பிரபுவின் அத்தை கேரக்டர் தான் செம்மீன் ஷீலா என்று சொல்ல; என்ன தாண்டா சொல்றீங்க செம்மீன் செம்மீன் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் நெம்பர் 40 ரெட்டைத் தெரு படிக்கும் பொழுது 'பொலிடிகலி கரெக்ட்'(அட இதை விட முடியலை) எழுதிய மூன்று பக்கங்கள் கொஞ்சம் போல் என்னை செம்மீன் படத்தை நோக்கித்தான் திருப்பியிருக்கவேண்டும். நான் யூடியூபில் கடலினக்கர பாடலைக் கேட்டேன், உடன் வேலை செய்யும் மல்லு நண்பர்கள் படத்தைப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள், தகழியின் நாவலைப் பற்றி நான் கேட்கவில்லை ;). இடைப்பட்ட காலத்தில் செம்மீன் நாவலை சுரா மொழிபெயர்த்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஜேஜே, மற்றும் புளியமரம் வந்து கொஞ்சம் பயமுறுத்தியதால் சரின்னு விட்டுவைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் பத்ரி இதைப்பற்றி எழுதியதும் பெங்களூர் புத்தகக்கண்காட்சியில் காலச்சுவடு தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒரு பதிப்பகமும் வராமல் போனதும் நான் செம்மீனை வாங்கி வந்திருந்தேன்.(தோட்டியின் மகனும் தான்).

ப்ராஜக்ட் தன் முடிவை எட்டிய ஒரு வாரக்கடைசியில் கொடுமைக்கென்று ஞாயிறு காலை மின்சாரத்துக்கு தடா போட்டுவிட்ட பெங்களூருக்கு ஒரு ஓ போட்டுவிட்டு செம்மீனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். பொன்னியின் செல்வன் படித்த காலங்களில் மனதில் ஓடி மறைந்தது, பரீக்குட்டியும் கறுத்தம்மாவும் பழனியும் இறந்து போக சோகத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அல்சூர் போய் பானிபூரி சாப்பிட்டு வந்தேன். முன்பெல்லாம் இது போன்ற துக்கங்கள் வாரக்கணக்கில் மனதில் தங்கி நீண்ட ஒரு நடையையோ அல்லது இதை மட்டுமே யோசித்துக் கொண்டு தூங்காமல் வெறுமனே படுத்துக் கொண்டிருக்கும் நிலையையோ தான் உருவாக்கும். இப்பொழுதெல்லாம் ப்ராஜக்ட் பற்றிக் கவலைப்படவே நேரம் பத்தலை, பரீக்குட்டிக்காகவும் கறுத்தம்மாவிற்காகவும் வருத்தப்பட, வருத்தம் மீதமில்லை என்பதால் ஒரு நாளுடன் போனது. பத்ரி பதிவு பற்றி சொன்னேனே முதல் பத்தி மட்டும் படித்துவிட்டு அய் சுரா மொழிபெயர்ப்பு நல்லாயிருக்கும் போலிருக்கே பத்ரி படிச்சு முடிச்சேன்னு சொன்னாரே(அவர் ஜேஜே பற்றியோ புளியமரம் பற்றியோ எழுதி நான் படித்ததில்லை :() அதை ஒரு நல்ல சகுனமாக(ஹிஹி) எடுத்துக் கொண்டு விட்டிருந்தேன், படித்து முடித்ததும் 'நினைவுகளை' எழுத கூகுளை சர்ச்சிய பொழுது வந்து விழுந்த பக்கத்தில் திரும்பவும் பத்ரி தான் முதலில் இருந்தார். மீண்டும் ஒரு முறைப் போய்ப் பார்த்தேன், கதையை சுருக்கமா எழுதியிருக்கார். நாவல் படிக்க விரும்பாதவங்க கதை மட்டும் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் அங்கே படிக்கலாம். எனக்கு அத்தனை ஆக்கப்பூர்வமா(;)) எல்லாம் எழுத வராது.

தடுமாற வைக்காத மொழி, சட்டென்று கடற்கரை ஒன்றிற்கு அருகில் வாரக்கணக்கில் இருந்ததைப் போன்ற உணர்வை 100 பக்கங்களைத் தாண்டும் பொழுது உணரமுடிந்தது. தகழியின் எழுத்தை நல்ல விதமாக சுரா மொழிபெயர்த்திருக்கிறார். நாவல் சட்டென்று தொடங்குகிறது, நாம் உணறும் முன்னால் நாவலின் முடிச்சும் விழுந்து முடிக்கிறது. முதல் மூன்று நான்கு பக்கங்களில் முடிச்சைப் போட்டுவிட்டு கழட்டு கழட்டென்று கழட்டுகிறார் தகழி நாவல் முழுவதும் ஆனால் அந்த அளுப்பு உண்மையில் தட்டுவதில்லை என்பது தான் முக்கியம். செம்பன்குஞ்சு, சக்கி, கறுத்தம்மா, பரீக்குட்டி, பஞ்சமி, பழனி என்று உருவாக்கப்பட்டதும் சட்டென்று மனதில் பதிந்து விடும்படியான விவரணை தேவையான அளவிற்கு.

கறுத்தம்மாவைப் பற்றி - "எத்தனை எடுப்பாக இருக்கிறது அவளுடைய மார்பகம்! கணத்துக்குக் கணம் எத்தனை வளர்ச்சி! பார்வையை அங்கே குவிக்கையில் பரீக்குட்டிக்குத் தன் நரம்புகள் முறுக்கேறுவது போலிருக்கிறது. அந்த உணர்விலிருந்து தான் சிரிப்பு மூண்டதோ! அவள் ஓர் ஒற்றை வேட்டிதான் கட்டியிருந்தாள். அதுவும் மெல்லியதாகவே இருந்தது."

பரீக்குட்டி - "நிஜாரும் மஞ்சள் சொக்காயும் அணிந்து, கழுத்தில் பட்டு உருமாலும் சுற்றி, குஞ்சம் தொங்கும் தொப்பியும் அணிந்து கொண்டு, தன் வாப்பாவின் கையில் தொங்கியவாறு பரீக்குட்டி முதன்முதலில் கடற்கரைக்கு வந்தது கறுத்தம்மாவிற்கு நல்ல ஞாபகம் தான்."

செம்பன்குஞ்சு - "இப்பொழுது செம்பன்குஞ்சு மற்றவர்களின் தோணிகளில் வேலைக்குச் சென்று வருகிறான். அதற்கான கூலியும் பெற்று வருகிறான். முதலில் துடுப்புத் தள்ளும் வேலை பார்த்தான், இப்போது சுக்கான் பிடிப்பவனாக உயர்ந்துவிட்டான் செம்பன்குஞ்சுவுக்கு வாழ்க்கை லட்சியம் ஒன்று உண்டு எனவே கிடைக்கிற காசை வீணாக்கமாட்டான். அவன் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கிறது. எனினும் தோணியும் வலையும் வாங்குவதற்கு அது போதாது"

சக்கி - "சக்கி அந்தப் பருவத்தைக் கடந்து வந்தவள் தான். சக்கி, கறுத்தம்மாவின் பிராயத்தில் இருந்த காலத்திலும் அந்தக் கடற்கரையில் கிட்டங்கிகளும், கிட்டங்கிகளில் சின்ன முதலாளிகளும் இருந்திருக்கலாம். கரையேற்றிப் போட்டிருக்கும் தோணியின் மறைவில் நின்றவாறு சின்ன முதலாளிகள் சக்கியையும் கலகலவென்று வாய்விட்டு சிரிக்கும்படி செய்திருக்கலாம்."

சின்ன சின்ன விவரணைகள் அழுத்தமாக நம் மனதில் பதியச் செய்துவிடும் சாத்தியம் தகழியை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கிறது. சிக்கல் இல்லாத நடை கைவசப்பட்டிருக்கிறது, தகழி வழி சுராவிற்கு. மனிதர்களை அந்த நிலத்தை, அங்கே இருக்கும் பாகுபாடுகளை அவர்களுடைய ஒழுக்கப்பாடுகளை அவர்கள் தாங்கள் கட்டுப்படுவதாய் நினைக்கும் தத்துவப் பேருண்மைகளை சிக்கலில்லாமல் பதியச் செய்துவிடுகிறார் தகழி. ஆனால் எல்லாப்பொழுதுகளில் அதில் உண்மை/உண்மையாக எத்தனை இருக்கக்கூடும் என்பதையும் கதை சொல்லி மூலம் உணர்த்திவிடுகிறார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் பேனாவை எடுத்துக் கொண்டு ஏகதேசமாக தகழி - கதை சொல்லியாகப் - பேசுவதை நாவல் முழுவதும் பார்க்கமுடியும். ஒருமுறை படித்துவிட்டு நாவலைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து மீண்டும் புரட்டிப் பார்க்கும் பொழுது கண்ணில் படுகிறது. உண்மையில் முதல் முறை படிக்கும் பொழுது இந்த இடையீடு அப்படித் தெரியவில்லை. நாவல் தனக்கான ஒரு கதைசொல்லியைக் கொண்டிருக்காமல் நாவல் எழுதுபவர் அதாவது எழுத்தாளர் கதை சொல்லியாக வரும் இவ்வகை நாவல் கொஞ்சம் அலுப்பூட்டக்கூடும் மற்ற இடங்களில் ஆனால் ஒரு தேர்ந்த கதை சொல்பவரிடம் கதை கேட்ட அனுபவமாக இந்தப் படித்த அனுபவம் இருக்கிறது.

பரீக்குட்டிக்கும் கறுத்தம்மாவிற்கும் இடையில் காதல் எங்கே எப்படி உண்டாகி பரீக்குட்டி கறுத்தம்மாவையே நினைத்து ஏங்கி பாடல் பாடிக்கொண்டு நிற்கும் நிலைமை வந்ததென்பதற்கு பெரிய ப்ளாஷ்பேக் இல்லை. சின்ன வயதில் இருந்து தோழர்கள், வயதாகி இருவரும் பருவம் எய்தியதும் காதல் சாதாரணமாக வரக்கூடியது தான் மறுக்கவில்லை ஆனால் பரீக்குட்டி அளவிற்கான காதல் சாத்தியப்படுமா தெரியவில்லை. ஒருவேளை எதிர்ப்பென்பது இருக்கும் பொழுது இயல்பாய் தோன்றிவிடும் ஈர்ப்பைப் போல் இந்தக் காதல் என்று கொள்ளலாம் தான். கறுத்தம்மாவிற்கு பரீக்குட்டி மேல் இருப்பது காதலா, பாசமா இல்லை முதலாளி பக்தியா என்று பட்டிமண்டபத் தலைப்பொன்று வைக்கலாம், இதில் கறுத்தம்மா பரீக்குட்டி மீது கொஞ்சம் பொஸஸிவ்வாக இருப்பது மட்டும் இல்லையென்றால் நிச்சயமாக காதலுக்கான லிங்க் அறுப்பட்டு இருக்கிறதென்றே சொல்லலாம். நான் கொண்ட காதல் அனுபவங்கள் கூட இப்படித்தான் காரணம் இல்லாமல் சொல்ல முடியாததாய் விளக்க முடியாததாய் பொஸஸிவ்னெஸ் இல்லாததாய் வந்தா வரட்டும் போனா போகட்டும் ரேஞ்ச் வகையறா. இதனால் கூட என்னால் ஆசிரியர் சொல்லவரும் அளவிற்கான காதலைப் பார்க்கமுடியவில்லை. கறுத்தம்மா விஷயம் நாவலாசிரியர் கூட அத்துனை வற்புறுத்துவதில்லை, அவளிடம் பழனியைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கும் பொழுது அவள் தான் இங்கிருந்தால் பரீக்குட்டியுடன் சேர்ந்து கெட்டது செய்துவிடுவோம் என்று பயப்பட்டு முதலாளிக்கு பணம் கொடுப்பதானால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள். பருவ உணர்ச்சி தூண்டியபடி இருவரும் இருப்பதுவும் எங்கே கொஞ்சம் ஆசுபாசமாய் இருந்துவிட்டால் கெட்டது நடந்துவிடும் என்று கறுத்தம்மா முதற்கொண்டு சக்கி வரை நினைப்பதில் பெரிய பொய்யில்லை என்று தான் எனக்குப் படுகிறது. காதல் இல்லாமலா கறுத்தம்மா பரீக்குட்டியுடன் படுத்துவிடும் ஆபத்தைப் பற்றி யோசிக்கிறாள் என்கிற விஷயத்தில் இந்தப் பக்கமிருந்தும் லிங்க் ஓக்கே என்றாலும், அத்தனை வலுவாகயில்லை அதுவும் நாவலே இவர்களின் காதலை மய்யப்படுத்தி எனும் பொழுது.

இந்தக் காதலை விடுத்து நாவல் கட்டமைக்கும் ஒரு களமான கடற்கரைக் கிராமம், அவர்களது வலி சந்தோஷம் துக்கம் பசி எல்லாம் நாம் கூடயிருந்து பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்குகிறது. காலநிலையைப் பொறுத்து மாறும் அவர்களுடைய நிலைமை, மீன் கிடைக்காத காலங்களில் அவர்கள் படும் பாடு - அங்கே வந்து விழும் வட்டிக்குவிடும் கும்பல், அதில் விழுந்து தோணிகளை இழக்கும் அளவிற்கு போய்விடும் காலம். எல்லாம் நாவலில் கதாப்பாத்திரங்களின் மூலம் காட்சியாய் ஓடுகிறது. ச்ச எப்படா செம்பன்குஞ்சு ஒரு தோணி வாங்குவான் என்ற ஏக்கம் நமக்கும் இயல்பாய் வந்துவிடுகிறது. ஆஹா கஷ்டப்பட்ட சக்கி இனிமேல் தோணியில் இருந்து வரும் காசை வைத்து சந்தோஷமா இருப்பாள் என்றும், கறுத்தம்மா சக்கி இருவரும் சேர்ந்து பரீக்குட்டிக்கு அவர்கள் வாங்கியப் பணத்தை தந்துவிடணும் என்றும் அடடா பழனிக்கு இப்படி ஆய்டுச்சே என்றும் கவலைப்படும் வகையில் மனதை ஆர்ப்பரிக்கிறது கட்டமைக்கப்பட்ட கதாப்பாத்திரங்களின் சூட்சமம். பெண்களின் கற்பு நிலையைப் பற்றிய பெருங்கதைகள் உருவாகி, இருந்து, நிலை நிறுத்தப்பட்ட விஷயங்களையும் அதை அப்படியே நம்பி வாழ்ந்து வரும் மக்களையும் நாம் இந்த நாவலில் காண்கிறோம்.

கறுத்தம்மாவின் மீது சந்தேகப்பட்டு பழனியை தங்கள் தோணியில் இருந்து விலக்கிவிடும் நிலையில் தொடர்ச்சியாக இதைப்பற்றி கட்டப்பட்டு வந்த கதைகளும் அவர்களின் நம்பிக்கையின் வீரியமும் நம்முன்னால் விரிகிறது. ஆனால் கதைசொல்லியின் 'இந்த வகையறா நம்பிக்கைகளின்' மீதான எண்ணம் 50:50 ஆகவே நாவம் முழுவதும் கடைசி பக்கங்களைத் தவிர்த்து இருப்பதை காணலாம். கடைசியில் பரீக்குட்டி வந்து கறுத்தம்மாவை சந்தித்து அவர்களின் ஆலிங்கனம் முடிவதும் பழனி சுறா ஒன்றை வேட்டையாட முயன்று அதில் தோற்று இறந்து போவதும். எனக்கு நேரடியாய் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் சொல்லப்படாமல் விட்டிருப்பதாகவே பட்டது முதல் வாசிப்பின் பொழுது. ஆனால் கதையாசிரியரின் மனதில், நிலைநிறுத்தப்பட்டிருந்த கோட்பாடுகள் எப்படியோ ஒரு வழியாய் நமக்குள்ளும் அந்த கோட்பாடுகளைத் திணிக்க வருகின்றனவா என்ற சந்தேகம் வராமலில்லை. கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் கூட இறந்து போய்விடுகிறார்கள், மூவரின் பிணங்களும் கரை சேர்கின்றன. நாவல் முழுவதும் இந்தக் கோட்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கதையாசிரியர் மறுத்து வந்துள்ளதை நாவல் படிப்பவர்கள் உணரமுடியும்.

மோகமுள் யமுனா அளவிற்கு கறுத்தம்மாவை மனதில் நிலைநிறுத்தமுடியாமல் போனதற்கான காரணம் என்னவாகயிருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். யமுனாவைத் தேடியலைய நினைத்த எண்ணம் கறுத்தம்மாவைப் பற்றி நினைக்கும் பொழுது வந்தாலும் அத்தனை வீரியமில்லாமல் இருப்பதற்கான காரணம் என்னவாகயிருக்கமுடியும். நினைத்துப் பார்க்கிறேன், கறுத்தம்மாவினைப் பற்றிய விவரணைகள் குறைவாக உணர்ந்ததாகயிருக்கலாம் தி.ஜா உயர்த்திப் பிடித்ததைப் போலில்லாமல் கறுத்தம்மாவின் பிம்பங்கள் தகழியால் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் அந்தக் கடற்கரைக் கிராமத்தை காணும் ஆவல் மேலெழுகிறது, தகழி எந்தக் கடற்கரையை முன்வைத்து இந்தக் கதையை நகர்த்தினார் அவர் மனதில் உருவாகியிருந்த பரீக்குட்டி கறுத்தம்மா எப்படிப்பட்டவர்கள். இந்தக் கதைக்கு இப்படியொரு முடிவை உத்தேசிக்க காரணம் என்ன என்ற கேள்விகள் எழாமல் இல்லை. நாவல் எழுதப்பட்ட காலத்தை முன்னிறுத்தி ஒரு நல்ல நாவல் என்று சொல்லலாம் தான், சுந்தர ராமசாமியின் மொழிப்பெயர்ப்பு நல்ல பணியைச் செய்திருக்கிறது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 4

பின்புத்தி உணர மறுத்த உண்மையைப் பற்றிய சில குறிப்புகள்
- மோகன் தாஸ்


பெண்களைப் பற்றிய என் நிலைப்பாடு எப்பொழுதும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. கோ-எஜுகேஷன் பள்ளிகளில் ஆரம்பித்த பெண்களின் மீது உண்டான காரணமேயில்லாத பொறாமையாகட்டும், பெண் என்ற காரணத்தினாலேயே நிறைய இடங்களில் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த சலுகைகளால் வந்த கோபமாகட்டும் அதிக காலம் தாக்குப்பிடிக்கவில்லை. தற்சமயங்களில் அந்நாட்களைப் பற்றிய எண்ணங்கள் புன்னகையை மட்டுமே வரவழைக்கின்றன. கல்லூரிப் பருவம் அவிழ்த்த பல ரகசியங்களில் உடைந்து போன பிறகான மிச்ச சொச்ச நிலைப்பாடுகளும் திருமணத்திற்குப் பிறகு சிதறிப்போனது. கடைசி வரையில் தொற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கான பொதுப்புத்தியைப் பற்றிய சிந்தனைகள் கூட அகிலாவினுடனான இந்த ஆறாண்டுகால மணவாழ்வில் கடற்கரைக்குச் சென்று வந்த பிறகு கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் மணலைப் போல் எங்கோ ஒரு மூளைக்கு தூக்கி எறியப்பட்டிருந்தது. ஆனால் அது தவறோ என்று நான் மறுபரிசீலனை செய்ய நினைக்கும் அளவிற்கு வந்ததற்கும் அகிலாவே முழுக்காரணம்.

ஒரு மாதமாகவே அகிலாவுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தாலும் பிரச்சனையை நானாக வேட்டிக்குள் விட்டுக்கொள்ள விருப்பமில்லாமல் மௌனமாகவே இருந்தேன். பவானியாவது பரவாயில்லை கொஞ்சம் பெரிய பையன் குந்தவைக்கு இன்னும் இரண்டு வருஷம் கூட ஆகலை, அவளையும் அம்மாவிடம் ரூமில் விட்டுவிட்டு பெட்ரூமிற்கு தனியாக வரத்தொடங்கியிருந்தாள். அம்மாவுமே கூட என்னை தப்பா நினைத்திருக்கலாம்.

தாம்பத்தியத்திற்கான தேவை இல்லையென்று சொல்லாவிட்டாலும் அதற்காக அகிலாவை நச்சுப் பண்ணியது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அவளுடைய இயல்பான ஆர்வமும் எங்களுக்கிடையில் இந்த விஷயத்தில் பெரிய ஈகோ பிரச்சனை இல்லாததும் சுலபமான தாம்பத்ய உறவை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சில நாட்களாக அவளை யாரோ இல்லை அவளேயோ கட்டாயப்படுத்துவதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு. இப்படியே போய்க்கொண்டிருந்த ஒரு வாரத்தின் கடைசியில் இரவில் சட்டென்று விழித்தவனுக்கு பக்கத்தில் படுக்கையில் அகிலா தூங்காமல் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து பயந்தே போனேன்.

"ஏம்மா என்னாச்சு தூங்கலையா? அழுதுக்கிட்டிருக்யா என்ன?" என்று கேட்டதும்

"அதெல்லாம் ஒன்றுமில்லை..." என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது அவள் வார்த்தைகளால் திருப்தியடையாமல் அவளை நெருங்கி கன்னத்தை தொட்டுப் பார்க்க அவள் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.

"என்னாடி இது?"

அவளிடம் பதிலில்லை

"உடம்பு வலிக்குதா?" அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் பதிலெதுவும் சொல்லாமல் முறைத்துப் பார்த்தவள் சில நிமிடங்களில் குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்.

அவளை இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன்

தோளில் முகம் புகைத்தவள்

"உங்களுக்கு இப்பல்லாம் என்னைக்கண்டா பிடிக்கிறதில்லை?" காதுக்குள் குசுகுசுத்தாள். அந்த அறையில் சுவருகளுக்கு கூட கேட்டுவிடாமல் சொல்ல நினைத்திருப்பளோ என்னவோ? அவள் சொன்னது அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். அவளுடைய அழுகை கட்டுப்படுத்த முடியாததாய் ஆனது.

திருமணம் ஆன புதிதில் சண்டை போட்டு இருவரும் பிரிந்திருந்த பொழுதும் அவள் பெரிதாய் அழுததில்லை. நாங்கள் இருவரும் தவறு செய்திருந்தாலும் அவள் அதற்கான தன் பங்கு தண்டனையாய் என்னைப் பிரிந்து இருக்கும் கடும் முடிவை எடுத்திருந்தாள் இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் பொங்குகின்ற காதலோடு தூரத்தில் இருந்து கவனித்தோம். சின்ன ஊடல்தான் அது. அவள் எனக்கானவள் என்றும் என்னைத் தவிர இன்னொருத்தரை அவள் முன் காலத்தில் விரும்பியிருந்தாள் என்ற ஒரு எண்ணம் கூட கோபமாகிய காரணம் அது. என்னைப் பற்றி மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வது எத்தனை தூரம் எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்ததோ அதே அளவு மனவருத்தம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் என்னைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாத பொழுதும் வந்தது. ஆனால் மற்றவர்கள் என்னைச் சரியாக உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதில் நான் காட்டிய ஆர்வத்தில் சிறிதளவு கூட என்னைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நம்பியவர்களிடம் நான் காட்டவில்லை. ஏனென்றால் அது போலித்தனமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தேன். அகிலாவைப் பற்றி தெரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட ப்ரயத்தனத்தைப் போல் அவளும் செய்வாள் என்றே நினைத்தேன்.

அவளுக்குப் பிடித்த சிறுசிறு விஷயங்களைக் கூட கவனித்து ஆனால் கவனிக்காதது போல் நான் செய்துவந்தது அவளுக்குத் தெரிந்தேயிருக்கவேண்டும். அந்தச் சமயங்களில் அவள் மனம் அடையும் பூரிப்பு சிறுநகையாக உதட்டோரத்தில் காட்டிக்கொடுத்துவிடும். உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த சிலர் தொடர்ச்சியாக என்னைத் தவறாகப் புரிந்துகொண்டபொழுது சரி இவ்வளவுதான் இவர்கள் என்று விட்டுவிட்டு நகர்ந்ததைப் போல் என்னால் அகிலாவைக் கடக்க முடியாததற்கும் அவளே தான் காரணம். அவள் நான் மாட்டிக்கொள்ளும் முகமூடிகளைத் தாண்டி என்னைத் தேடுபவளாகயிருந்தாள், பல சமயம் கையும் களவுமாக முகமூடிகள் கழற்றப்பட்டு அவள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஏன் இத்தனை நாடகம் எதற்காக இப்படி ஒளிந்து மறைந்து விளையாடுவது நாமாக நம்மை வெளிக்காட்டினால் என்ன? என்பது போல் நிறைய கேள்விகளுடன் அவள் எப்பொழுது தயாராகயிருப்பாள். எனக்குப் புரிந்திருந்தால் சொல்லித்தானிருப்பேன் ஆனால் உண்மையில் எனக்கே ஏன் அப்படி என்று புரியவில்லை; என்னை நானாகச் சொல்லிக்கொள்ளாமல் மற்றவர்களாய் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எதுவும் மனநோயுடன் சம்மந்தப்பட்டதா என்ற கேள்விமட்டும் தூரத்தில் தொக்கி நிற்கும். ஆனால் வாழ்க்கை இதனால் சுவாரசியமாயிருப்பதாகப் பட்டதெனக்கு. திருமணத்திற்குப் பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அகிலா இந்த விஷயத்தில் என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருந்தாள். அதனால் அவளுடைய சமீபத்திய நடவடிக்கைகள் கோபத்தை வரவழைக்காமல் என்னில் வருத்தத்தையே அதிகம் வரவழைத்தது.

எனக்கும் அவள் என்னிடம் அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை போட்டு உடைத்துவிட்டாள் தேவலை என்றிருந்தது ஆனால் வழமை போல் நல்லதொரு நாளுக்காக நான் காத்திருந்தேன். என் உறக்கம் பெரும்பாலும் நீண்டதாக இடையில் விழிப்பு இல்லாததாக முழுமையானதாகவே இருந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அமைந்த மனைவியின் காரணமாகவும் மாற்றம் எதுவும் இருந்தது கிடையாது; இரவு பாத்ரூம் ஒரு தடவை போய்விட்டு வந்து படுத்தால் காலை ஆறு ஆறரை மணிவரை அசத்திக்கொண்டு வரும் தூக்கத்தின் மீது அகிலாவிற்கே கூட பொறாமை உண்டு. 'போன ஜென்மத்தில் நீங்க புண்ணியம் செஞ்சிருக்கணும் இப்படி தூங்குறதுக்கு' என்று அடிக்கடி சொல்வாள். அன்று உலகதிசயமாய் நான் தூக்கத்தில் இருந்து இடையிலேயே எழ அகிலா அழுது கொண்டிருந்தது தெரிந்தது, நான் எழுந்தது அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது. வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஆனால் சிறிது நாட்களாகவே அவள் என்னிடம் நடத்திக் கொண்டிருந்த நாடகம் கொஞ்சம் அவளைத் தூண்டிப் பார்த்திருக்க வேண்டும். கேவலாகத் தொடர்ந்த அழுகை என் தோள்களில் முடிந்தது. நான் முழுவதுமாய் முடியக் காத்திருந்தேன்.

"என்ன பிரச்சனை உனக்கு?" அவளை அருகில் இழுத்து ஆறுதல்படுத்தியபடி கேட்டேன்.

"உங்களுக்கு என்னைப் பிடிக்கலை!" என் கேள்விக்கான பதில் அதுவா இல்லை ஒரு ஸ்டேட்மென்ட் விடுகிறாளா உண்மையில் புரியவில்லை.

"புரியல..." என்றேன்.

"கொஞ்ச நாளாவே உங்களுக்கு என்னைப் பிடிக்கல, நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா சொல்லிடுங்கோ. என்னால உங்களைப் பிரிஞ்சி இருக்கவே முடியாது..." அவளுடைய வார்த்தைகளில் ஒரு தேர்வேயில்லை வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு உண்மையிலேயே பயங்கரக் குழப்பமாகயிருந்தது.

"என்னாம்மா சொல்ற நீ உண்மையிலயே புரியல. எதைச் சொல்றதுன்னாலும் தெளிவா சொல்லு" என்றேன்.

கொஞ்சம் நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள். மறுபக்கம் திரும்பி,

"உங்களுக்கு இன்னொரு பொண்ணொட தொடர்பிருக்கு!"

கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன், இதுவரையில் என்னைப் பற்றி அகிலா சொன்னதில் மிகப்பெரிய பழி இதுவாகத்தான் இருக்கமுடியும். என் முகமூடிகளைக் கழட்டிவிட்டு என்னையறிந்த ஒருத்தியாய் தான் என்னால் அவளை உணரமுடிந்திருந்தது. அவளை அப்படி என்னைத் தவறாக நினைக்க வைக்கும் படி நான் என்ன செய்திருந்தேன் என்ற யோசனை பெரும்பாலும் பூஜ்ஜியத்தில் முடிவடைந்தது. உண்மையில் என்னால் கண்டுணர முடியாத எல்லைக்கு வெளியே இந்த விஷயங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளால் அப்படி ஒரு வார்த்தையை எப்படி சொல்ல முடிந்தது என்ன திமிர் இருக்கும் என்ற எண்ணம் பின்னால் வந்த அவள் அப்படி நினைக்கும் படி நான் நடந்து கொண்டிருந்தால் அவள் இதை என்னிடம் சொல்ல எத்தனை சிரமப்பட்டிருப்பாள் என்பதை உணர்ந்ததும் கொஞ்ச காலமாய் எங்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்த வலை விலகுவதாய் உணரமுடிந்தது. வலையைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தாலும் எதனால் அப்படி ஒரு வலை எங்களைச் சூழ்ந்தது என்று புரியாததால் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தேன்.

நான் சூழ்நிலையை வியந்தபடி உட்கார்ந்திருக்க, மெதுவாய் எழுந்து போய் பீரோவைத் திறந்தவள். கைகளில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள், ஏற்கனவே நான் கண்ணாடி வேறு; கண்ணாடி போடாமல் பகல் நேரத்திலேயே எதுவும் தெரியாதென்பதால் எதுவாயிருந்தாலும் அருகில் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு அவள் கொண்டு வந்து காண்பித்த பொருள் மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அவளுடைய தலைமுடிதான் அது.

"இது உங்க சட்டையில் இருந்தது. சத்தியமாய் இது என் முடியில்லை! அப்ப யாரோடது."

வாய் திறக்க முடியாத மௌனத்தால் கட்டப்பட்டவன் போல் அயற்சியடைந்து போய் நான், நிச்சயம் அகிலாவிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி சந்தேகப்படும் அளவிற்கு அகிலா எப்பொழுது ஆனால் என்பது எனக்கு ஆச்சர்யத்தையும் அதே சமயம் மிகுந்த வருத்தத்தையும் வரவழைத்தது. அவளை சமாதானப்படுத்தும் வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை.

"என்ன அகிலா இது! நீயா இப்படி கேக்குற?"

இன்னமும் விசும்பிக் கொண்டுதானிருந்தாள்.

"சொன்னேன்ல இது என் முடி கிடையாது, எம்மேலாணை என் குழந்தைகள் மேல்..." சொல்லவந்தவள் முடிக்காமல் நிறுத்தினாள்.

"சரிடி இது உன்னோடதாவே இல்லாம இருக்கட்டும். அதுக்காக என்னைச் சந்தேகப்படுவதா?" கேள்விக்கு பதில் சொல்லாமல் திரும்பவும் பீரோவிற்கு நடந்தாள். அடுத்து என்ன மேட்டர் என்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன். என் ஃபேவரைட் சட்டையுடன் வந்தாள்.

"மோந்து பாருங்க!" சத்தியமாய் அப்படி ஒரு அகிலாவை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. இந்தக் கணத்தை இப்படியே மறந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படிச் சந்தேகப்படும் தோரணையுடனான அகிலாவின் முகம் என் மனதில் பதிந்துவிடக்கூடாதென்று நினைத்தவனாய் வேறு பக்கம் தலையை திருப்பினேன்.

"ஹ்ம்ம்ம்" என்று அழைத்தவள் கைகளில் திணித்தாள், அனிச்சையாய் நான் சட்டையை முகர்ந்து பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"இது நானோ நீங்களோ உபயோகப்படுத்துற செண்ட் கிடையாது. வேற செண்ட் அதுவும் பொண்ணுங்க உபயோகப்படுத்துறது!"

எனக்கு தலையைச் சுற்றுக் கொண்டு வந்தது, என்னிடம் எதுவும் விளையாடுகிறாளா என்று கூட நினைத்தேன் ஆனால் சில காலமாய் அவள் இருந்த மனநிலை அப்படி இருக்கவே முடியாது என்று சொல்லியதால் என்னதான் பிரச்சனையா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப சொல்லுங்க என்ன விஷயம் போய்க்கிட்டிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? இரண்டு குழந்தைகள் பிறந்ததும் கழட்டி விடணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?" அவள் கண்கள் இன்னொரு முறை மழை பொழியக்கூடிய மேகமாய் திரண்டு இருளத் தொடங்கியது.

ஒரு அறை விடலாம் என்று நினைத்தேன் நான், "அகிலா ஸ்டாப் இட். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? லூசாய்ட்டியா நீ?" என்றதும் என் கைகளில் இருந்த சைட்டையைப் பிடுங்கியவள் அதன் பாக்கெட்டில் இருந்து ஒரு பில் எடுத்து என்னிடம் நீட்டினாள். "அப்ப இதுக்கு என்ன சொல்றீங்க. இப்படி ஒரு பட்டுப்புடவை எனக்கோ உங்கம்மாவுக்கோ நீங்க வாங்கலை. அப்ப யாருக்கு வாங்கினது இது."

கைகளில் திணிக்கப்பட்ட பில் ஒரு மாதத்திற்கு முன்னர் நான் 10,000 ரூபாய்க் கொடுத்து பட்டுப்புடவை வாங்கியதாய்ச் சொன்னது ஆமாம் பில் என் பெயரில் தான் இருந்தது. ஆனால் நான் அகிலாவை விட்டுவிட்டு இந்த ஆறுவருடங்களில் பொருட்கள் வாங்கியதில்லை அதுவும் மிக நிச்சயமாய் பட்டுப்புடவை. கடையின் பெயரைப் பார்த்ததும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் என்ன நடந்திருக்க முடியும் என்கிற வழிக்கு என் நினைவுகள் என்னை அழைத்துச் சென்றன. சட்டென்று அனல்மழை பொழிய சூழ்ந்திருந்த மேகம் விலகியதைப் போன்ற உணர்வு. எனக்கு கொஞ்சம் சிரிப்பாய்க் கூட வந்தது என்னால் நடந்திருக்கக்கூடிய அனைத்தையும் ஒருவாறு ஊகிக்க முடிந்ததும்.

அவளை அருகில் அழைத்தேன், நெருங்கி வந்தவளை அருகில் உட்கார வைத்துவிட்டு, மெதுவாய்ச் சிரித்தபடி.

"நான் தோத்துட்டேன் அகிலா, நான் தோத்துட்டேன் அதுவும் உன்னால." சொல்லிக் கொண்டிருந்த என்னை அவள் அழுதபடியே ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

நான் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் என் அலுவல பெண் தோழியொருத்தி, தன் கணவர் மீதிருக்கும் சந்தேகத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது திமிராய் என் மனைவி என்னைச் சந்தேகப்படவே மாட்டாள். நாங்க இரண்டுபேரும் அப்படி இப்படி என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். அவள் அப்படியிருக்கவே முடியாது பெண்கள் என்றால் தங்கள் கணவனைப் பற்றிச் சந்தேகப்படாமல் இருக்கவேமுடியாது என்று சொன்னவள் என்னிடம் அதை நிரூபித்துக் காட்டுவதாய் பெட் கட்டினாள். அவள் தான் இப்படிச் செய்திருக்கவேண்டும் என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தேன். நம்புவதைப் போல் இல்லாததால் சட்டென்று அவளை தொலைபேசியில் அழைத்தேன், நடு இரவு தான் ஆனால் வேறு வழியில்லை அகிலா சந்தேகப்படுவதை விடவும் எனக்குப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்று நினைத்தேன்.

நடு இரவு தொலைபேசி அழைப்பை எடுத்தவளிடம் என்றுமில்லாத அளவிற்கு புன்னகை மறுமுனையில் கேட்டது.

"என் பெண்டாட்டி சந்தேகப்பட்டுட்டா நான் தோத்துட்டேன் நீயே பேசு!" என்று சொல்லி அகிலாவிடம் கொடுத்தேன். திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த அகிலா பேசமாட்டேன் என்று சொல்லி நழுவ நினைத்த பொழுதும் அவளிடம் சாமர்த்தியமாய் திணித்தேவிட்டேன்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், இவள் இந்தப் பக்கம் சிரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு அதைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது. மாதக்கணக்கில் அவள் முகத்தில் சிரிப்பையே நான் பார்த்ததில்லை. இவள் இந்தப் பக்கம் பேசும் வார்த்தைகளை வைத்து அவள் அந்தப்பக்கம் சொல்லும் விஷயத்தை ஊகிக்க முயன்று கொண்டிருந்தேன்.

"ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னுமில்லை உண்மையில் சந்தேகமெல்லாம் படலை சும்மா கேட்டுக்கிட்டிருந்தேன் அவர் உளருறார்." என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி புன்னகைத்தவாறு.

"சரிங்க ஒன்றும் பிரச்சனையில்லை" என்று சொல்லி வைத்தாள். வேகமாய் என்னிடம் வந்தவள் என் நெஞ்சில் குத்தியபடி.

"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல, ச்ச கடைசியில் இப்படி ஆய்டுச்சே!" என்று ரொம்பவும் வருத்தப்பட்டாள். அந்த ஒரு மாதமாய் அவளிடம் இருந்த முகம் இல்லை இது, அவளால் நடிக்க முடியாது எனக்கு நன்றாய்த் தெரியும். உண்மையிலேயே தன் புருஷனை இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டதாய் வருத்தப்பட்டதாகவே தெரிந்தது.

"அந்தம்மா சொல்லுது நான் பார்த்த இந்த மூணு விஷயம் இருக்கில்லையா இது மாதிரி நிறைய ட்ரை பண்ணினாங்களாம். பாருங்க நான் கடைசியில் இந்த மூணு விஷயத்தில் விழுந்துட்டேன். அந்தம்மா சொன்னிச்சு நான் முன்ன பண்ணினதுக்கு விழுந்துடுவேன்னு நினைச்சாங்களாம், ஆனால் முடி விஷயம் எல்லாத்தையும் விழ வைச்சிடும்னு தெரியும்னு சொன்னாங்க. நானும் அந்த முடி விஷயத்தில் ஆரம்பிச்சி தான் மத்த இரண்டையும் கண்டுபிடிச்சேன். சாரிங்க. உங்களை அப்படி நினைச்சிருக்கக்கூடாது தப்புதான்." உண்மையில் வருத்தப்பட்டாள்.

நான், "ஏய் இங்கப்பாரு என்னா சும்மா வருத்தப்பட்டேன்னு சொல்லி சரிபண்ணிடலாம்னு பார்க்கறியா! அதெல்லாம் சரிப்படாது இதுக்கு சரியான உபகாரம் செய்தாகணும். நான் மூணாவது ஒரு ப்ராடக்ட் தயார்ப்பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..." என்றபடி ஆரம்பிக்க,

"ஆளைப்பாரு இந்தியாவுக்கு இரண்டே பெரும் பாரம் மூணாவதாம்ல. கனவு காணுறதை விட்டுட்டு மரியாதையாத் தூங்கப்பாருங்க நாளைக்கு ஆபீஸ் போகணும்ல" கண்டிப்புடன் சொல்லியபடி எழுந்து வந்து உட்கார்ந்திருந்த என் 'பெரிய' நெற்றியில் முத்தமொன்று வைத்தாள் பழைய 'ஹவில்தார்' மனைவி அகிலா.

PS: ரப் நே பனா தி ஜோடி படம் பார்த்துவிட்டு வந்து படம் பற்றிய நினைவுகளை எழுதியதும் சட்டென்று இதைப் போன்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதிய ஞாபகம் இருந்ததால் தேடிப்பார்த்தேன். அகிலா ப்ராஞ்செய்ஸ்க்காக எழுதி முடிக்கப்படாமலும் பதிவிடப்படாமலும் இருந்த இந்தக் கதையை பண்புடனுக்காக இப்பொழுது அனுப்பி வைக்கிறேன்.