பண்புடன் குழுமத்தின் சித்திரைத் திருநாள் சிறப்புப் போட்டிகள்

அன்பினிய நண்பர்களே,

முகமன்களும் வாழ்த்துகளும்!!

"வாழ்வின் மறக்க முடியா நிகழ்வு" என்ற தலைப்பில் வெளியில் சொல்லக்கூடிய.. உங்கள் வாழ்வை புரட்டிப் போட்ட அல்லது உங்களால் மறக்க இயலாத அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நிகழ்ந்தவை அல்லது கேட்டறிந்த நிகழ்வை கதையாக, கட்டுரையாக, கவிதையாக எழுதி அனுப்புங்கள். சுதந்திரம் உங்களிடம்...புகுந்து ஆடுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: panbudanav@gmail.com

மின்னஞ்சலின் தலைப்பு படைப்பின் தலைப்பாக இருக்க வேண்டும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
மே 15, 2011 (ஐக்கிய அரபு நேரம் நள்ளிரவு 12 மணி வரை)

படைப்புகளுடன் “இந்த படைப்பு எனது சொந்த படைப்பாகும். முடிவுகள் வரும் வரை இந்தப் படைப்பை வேறு எந்த ஊடகத்திலும் வெளியிட மாட்டேன் என உறுதிகூறுகிறேன்” என்ற உறுதிமொழியும் இணைக்கப் பட வேண்டும்.

இந்த போட்டிக்கான முடிவுகள் 2011, ஜூன் 3ம் தேதி வெள்ளி இரவு அமீரக நேரம் 8 மணிக்கு முன்னதாக வெளியிடப்படும்.

போட்டிக்கான குழுவில் சுபைரும், ஜீவ்ஸும் இருப்பர்.

போட்டிக்கான படைப்புகளை மேலே குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பக் கூடாது.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.

போட்டிக்கான படைப்புகள் panbudan.blogspot.com வலைப்பூவிலும், குழுமத்திலும் இடப்படும்.

போட்டிக்கான பரிசுகள்

1. முதல் பரிசு - ரூ 500 மதிப்புள்ள புத்தகங்கள்
2. இரண்டாம் பரிசு - ரூ 300 மதிப்புள்ள புத்தகங்கள்
3. மூன்றாம் பரிசு - ரூ 200 மதிப்புள்ள புத்தகங்கள்

ஆறுதல் பரிசு - மூன்று பேருக்கு ரூ 100 மதிப்புள்ள புத்தகங்கள்

இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாருங்கள் வடம் பிடிப்போம்... சரித்திரத்தில் இடம் பிடிப்போம்.

தோழமையுடன்,
ஆசிப் மீரான்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 7

Gal oya வில் சிங்களர்களைப் பெருமளவில் குடியேற்றி அப்பகுதியில் இன விகிதாச்சாரத்தை வெகுவாக மாற்றிய பிறகு சிங்களருக்கென்று தனித் தொகுதி ஒன்றை உருவாக்கினார்கள். இதன் மூலம் தர்மத்திற்குப் புறம்பாக நாடாளுமன்றத்தில் சிங்களக் குரல் ஒன்று கூடுதலாக ஒலிக்க வழி செய்தனர். கிழக்குப் பிராந்தியத்தில் ஏழு தொகுதிகள் இருந்தன. 1959 தேர்தலுக்காக அம்பாறை மற்றும் Nintavur தொகுதிகள் மொத்தம் ஒன்பது இடங்களாக உயர்ந்தது. மட்டக்களப்பு மற்றும் பொட்டுவில் தொகுதிகளில் இருந்த சிங்களப் பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து அம்பாறைத் தொகுதியை உருவாக்கினார்கள்.



சிங்களக் குடியேற்ற என்பது Gal oya திட்டத்தோடு நின்று விட்ட ஒற்றை நிகழ்ச்சியல்ல. தமிழ் தேசத்தின் கிராமப் புறங்களில் சிங்களக் குடியானவர்களைக் குடியமர்த்தி அவற்றிற்கு சிங்களப் பெயரைச் சூட்டினார்கள். புதிதாக பார்க்கிறவர்களுக்கு அந்தப் பகுதிகள் எல்லாம் சிங்களப் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்குவதே அதன் நோக்கம். இப்படிச் செய்வதன் மூலம் கிழக்குப் பிராந்தியம் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதி கிடையாது. அங்கே சிங்களர்களும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளனர், வேண்டுமென்றால் பெயர்களைப் பாருங்கள் அவை சிங்களத்தில் உள்ளன என்று வாதிடலாம். 'அரிப்பு' என்ற பெயர் தாங்கிய தமிழ்க் கிராமத்திற்கு Serunuwara என்ற சிங்கள சூட்டப்ப்பட்டது. கல்லாறு Somapura என்றானது. நீலப்பள்ளைக்கு Nilapola, பூநகர் என்ற ஊருக்கு Mahindapura, திருமண்காவாய் என்ற பெயருக்கு Dehiwatte எனப் பல உதாரணங்களைக் காட்டலாம்.



சிங்களக் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது சேனநாயகா என்றாலும் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் தாம் எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தாலும் 'தேசத் தந்தை' வகுத்த பாதையில் அவரை விட வேகமாகவே நடந்தனர். சாலமன் பண்டாரநாயகா காலத்திலும் காலனியாக்கம் நடந்தது. அவரது மனைவி சிறீமாவோ 1960 இல் பிரதமராக இருந்த போது 'முதலி குளம்' என்ற தொன்மையான ஊருக்கு Morawewa என்று பெயரிட்டு Morawewa திட்டத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பு சிங்கள மக்கள் அறவே இல்லாத இந்த ஊரில் நடந்த 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 9271 பேரில் 5101 பேர் சிங்களர் என்ற அளவுக்கு இன விகிதாச்சாரமே தலைகீழாக மாறியது.



திருகோணமலை மாவட்டத்தை சிங்களமயமாக்கும் முயற்சியும் இன்னொரு பக்கம் நடந்தது. 1972 இல் நொச்சிக்குளம் என்ற அருமையான தமிழ்ப் பெயர்கொண்டு விளங்கிய ஊர் Nochiyagama வாக உருமாறியது. சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சிங்களர் பரவினர். தமிழ்க் கிராமங்களைச் சுற்றிலும் முற்றுகை அமைப்பது போல பல இடங்களில் ஊரைச் சுற்றியுள்ள அரசு நிலங்கள் சிங்களர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தக் கொடுமை கிழக்குப் பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் மலையகத்திலும் நடந்தேறியது. எப்போதெல்லாம் கொழும்பில் அரசியல் பதற்றம் நிலவுகிறதோ அப்போதெல்லாம் முற்றுகைக்கு ஆளான இந்தக் கிராமங்கள் தாக்குதலுக்கு ஆளாகும்.



1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தொகுதி உருவானதைப் போல திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள விகிதாச்சாரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அங்கும் கூட 1976 இல் Seruwila சிங்களத் தொகுதி ஒன்று பிரித்தெடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் இப்படியெல்லாம் திட்டமிட்டு இன விகிதாச்சாரத்தை மாற்றியதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கும் மாகாணங்கள் தமிழர் தேசத்தின் பாரம்பரியப் பகுதி என்ற வரலாற்று உண்மையைக் கற்பனைவாதமாக உருவகம் செய்து கேலிக்குள்ளாக்கி மறுப்பது சுலபமாகியது. அதாவது வரலாற்று ரீதியாக அமைந்திருந்த தமிழர் தேசத்தின் எல்லையை சிங்களர்கள் படிப்படியாக உள்நோக்கித் தள்ளி அந்த எல்லையைச் சுருக்கினர். அதைத் தவிர மூன்று முக்கியப் பாதிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்தனர். முதலாவதாக பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழ்ந்து வந்த மண்ணின் இன விகிதாச்சாரம் மாறியது. இரண்டாவதாக தமிழர்களுக்கு முறையாகக் கிடைத்திருக்க வேண்டிய வளமான விவசாய நிலப்பரப்பு சுருக்கப்பட்டது. மூன்றாவதாக நாடாளுமன்றத்தில் அவர்களது பிரதிநிதித்துவம் குறைந்தது.



ஏற்கனவே குறிப்பிட்டது போல உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று திருகோணமலைத் துறைமுகம். அது தமிழர் பாரம்பரியப் பகுதியில், அதுவும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் நகரமாக இருப்பது சிங்களர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் எந்த அளவிற்கு அதை சிங்களமயமாக்க முடியுமோ அந்த அளவிற்கு சிங்களமயமாக்கினார்கள்.



இதற்கிடையில் குடியுரிமைச் சட்டத்தின் போது தன் அமைச்சர் பதவியைத் துறந்த சுந்தரலிங்கம், தேசியக் கொடி தொடர்பான சர்ச்சையில் ஆலோசனை சொல்வதற்காக அமைக்கப்பட்ட குழு அதே கொடியைத் தொடருவதென்று 1951 இல் முடிவு செய்த போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அக்டோபரில் வவுனியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.



சிங்கள வட்டாரங்களில் இதை விட முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் அந்த வருடம் அரங்கேறியது. உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும், அவையின் தலைவராகவும் பதவி வகித்து அரசாங்கத்தில் D.S.சேனநாயகாவுக்கு இரண்டாம் நிலையிலிருந்த சாலமன் பண்டாரநாயகா பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது சிங்கள மகா சபையை அப்படியே அதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார்.



1952 இல் குதிரைச் சவாரி செய்த போது அவரது பருமனைத் தாங்காத குதிரை கீழே விழுந்து சேனநாயாகாவும் கீழே தள்ளியது. மூர்ச்சையான முதல் பிரதமர் அதன் பிறகு கண் விழிக்கவே இல்லை. அவர் காலியானதும் அவரது மகன் டட்லி சேனநாயகா பிரதமர் ஏனார். அப்போது முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுளும் முடிவுக்கு வந்து இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.



தேர்தல் பிரச்சாரத்தின் போது டட்லி சேனநாயகா, "இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் பிரித்துக் கொடுக்காவிட்டால் சிலோனுக்கு அரிசி தர மறுக்கிறது" என்று இந்தியாவின் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டி சிங்கள மக்களிடமிருந்த இந்திய எதிர்ப்பு உணர்வையும், இந்தியாவுக்குச் சேர்ந்த மக்கள் என்று பிரச்சாரம் செய்து மலையகத் தமிழர் மீதான் எதிர்ப்பு உணர்வையும் மேலும் தூண்டினார். மேலும் ஆழமான சிங்களப் பகுதிகளில் செய்த பிரச்சாரத்தில் தனது கட்சி தொண்டமான்களையும், ராஜசிங்கங்களையும் (இவர்கள் சிலோன் இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களான இவர்களை ஒரேயொரு சட்டம் போட்டு) பேனா முனையில் நாடாளுமன்றத்திற்கு நுழைய விடாமல் தடுத்துள்ளது என்று பெருமையுடன் பேசி ஓட்டுக் கேட்டார்.



ஆம், வாக்குரிமையை பறிக்கப்பட்ட காரணத்தினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதித்தது. கடந்த தேர்தலில் ஏழு இடங்களை வென்ற சிலோன் இந்திய காங்கிரஸ் இந்தத் தேர்தலின் போது 'நாடட்டற்றவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. அந்த ஏழு தொகுதிகளின் சார்பில் சிங்களர்கள் உறுப்பினராயினர். நாடாளுமன்றத்தில் 67 சதவீதம் இருந்த சிங்களர் பலம் 73 சதவீதமாக உயர்ந்தது. டட்லி சேனநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சி வென்றது.



தமிழரசுக் கட்சி முதன் முறையாக தேர்தலைச் சந்தித்தது. சிங்களர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்த பொன்னம்பலம் செல்வநாயகத்தின் செல்வாக்கின் முன் தாக்குப்பிடிக்க இயலவில்லை. தமிழர் தாயகப் பகுதியில் தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்றது.



தீர்க்கப்படாமல் அந்தரத்தில் விடப்பட்ட மலையகத் தமிழர்களின் நிலையைத் தீர்மானிக்கும் விதமாக 1953 ஜூன் மாதம் இலண்டனில் நடைபெற்ற எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவின் போது இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சிலோன் பிரதமர் டட்லி சேனநாயகாவும் சந்திதுப் பேசினார்கள். நான்கு இலட்சம் பேருக்கு சிலோன் குடியுரிமை தருவதாகச் சொன்ன டட்லி, இந்தியா மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினார். மீதமுள்ளவர்களின் தலையெழுத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்தார். ஆனால் நேரு இந்த அம்சங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று இலட்சம் பேரைத் திரும்ப ஏற்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் கருதினார். மலேயா, பர்மா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் ஒன்னேகால் கோடி இந்தியக் கூலிகள் இருந்தனர். சிலோனிலிருந்து மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற்ற மற்ற நாடுகளும் இந்தியர்களை வெளியேற்றினால் என்ன செய்வது?



பேச்சுவார்த்தையை முடித்து விட்டு டட்லி சேனநாயகா சிலோன் திரும்பியதும் தெற்காசிய வரலாற்றின் இருண்ட பக்கங்களை 1980 களில் எழுதப் போகும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போட்ட பட்ஜெட் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியை உண்டாகியது. அந்த பட்ஜெட்டில் உணவுப் பொருள் மீதான மானியத்தை நீக்கி அரிசியின் விலையை மூன்று மடங்கு உயர்த்தினார். மக்களின் எதிர்ப்பு டட்லிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் உடல்நிலை காரணமாகவும் 1953 அக்டோபரில் அவர் பதவி விலகினார். ஜான் கொத்தலவாலா பிரதமரானார்.



மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு நேரு விடுத்த அழைப்பை ஏற்று ஜான் கொத்தலவாலா 1954 ஜனவரியில் டில்லிக்குப் புறப்பட்டார். சிலோன் அரசுப் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போது தொண்டமான் உள்ளான சிலோன் இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் டில்லியில் இருந்தனர். பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரு நிர்வாகம் இவர்களைக் கலந்தாலோசித்தது. இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதை இரண்டே வாக்கியங்களில் சுருங்கக் கூறி விடலாம்.



1. இது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோருக்கான புதிய பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் அனைவர் பெயரும் சேர்க்கப்படும். இந்தப் பட்டியல் அடிக்கடி புதுப்பிக்கப்படும். அப்படி பட்டியலில் பெயர் இல்லாதோர் கள்ளத்தனமாகக் குடியேறியவராகக் கருதப்படுவார்.

2. குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் இரண்டு வருடத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும்.



நிம்மதிப் பெருமூச்சுடன் சிலோன் திரும்பிய தொண்டமான் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தொண்டமான், "இந்த ஒப்பந்தம் வெற்றியடைய வேண்டுமானால் சிலோன் அரசு டெல்லிப் பேச்சில் காட்டிய வேகத்தை செயலிலும் காட்ட வேண்டும்" என்று கூறினார். ஆனால் அவரது நிம்மது வெகு நாள் நீடிக்கவில்லை.



இரு பிரதமர்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற தீர்மானத்தை எதிர்க் கட்சித் தலைவர் சாலமன் பண்டாரநாயகா நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். உடன்படிக்கையில் படி உருவாக வேண்டிய புதிய பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதில் நிர்வாகிகள் காட்டிய மெத்தனமும், சுணக்கமும் இந்தியாவைக் கவலையடையச் செய்தது. இந்திய வம்சாவழி மலையக மக்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கே சிலோன் ஆர்வம் காட்டியது. அந்த ஆர்வம் "இப்போது புத்தர் இந்த நாட்டிற்கு வந்தால் கூட அவரையும் (இந்திய வம்சாவழி என்று சொல்லி) நாடு கடத்தி விடுவார்கள்" என்று சுந்தரலிங்கம் கூறுமளவுக்கு இருந்தது.



மலையகத் தமிழர் நாடகம் ஒரு புறம் நடக்க சிங்களர்-பூர்வீகத் தமிழர் முரண்பாட்டு அரசியல் இன்னொரு பக்கம் நடந்தது. 1954 ஏப்ரலில் இங்கிலாந்து ராணியும், மன்னரும் சிலோனுக்கு வந்தனர். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரச வம்சத்தினர் யாருன் இந்தத் தீவுக்கு வந்ததில்லை என்பதால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. எலிசபெத் ராணி தனது 28 ஆவது பிறந்த நாளை சிலோனில் கொண்டாடினார். அவர் சிலோன் பாராளுமன்றத்தில் உரையாற்றியதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது அச்சிட்ட உரையின் தமிழாக்கத்தை விநியோகிக்கத் தவறினார். இதை சுந்தரலிங்கம் வன்மையாகக் கண்டித்தார்.



பிரிட்டிஷ் ராணி சிலோனின் இருந்த போது சிங்கள இனத்தின் ஆதிக்க எண்ணத்தை உலகுக்கு உணர்த்தும் இன்னொரு காரியமும் நடந்தது. இரு மாதங்களுக்கு முன்னர் கவர்னர் சோலிஸ்பெரி விபத்தில் காயப்பட்ட தன் மனைவியைக் காண இங்கிலாந்து சென்றார். ராணியார் பயணித்த சமயம் தலைமை நீதிபதியாக இருந்த வெள்ளைக்காரர் ஆலன் ரோஸ் என்பவரும் சிலோனின் இல்லை. எனவே தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருந்த நாகலிங்கம் என்ற தமிழர் தற்காலிக கவர்னர் ஜெனரலாகவும் கடமையாற்றினார். அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் சிலோன் குடிமகன் என்ற பெருமைக்குரியவர். இங்கிலாந்து மகாராணி வந்திருக்கும் போது ஒரு தமிழர் கவர்னராக, ராணியின் பிரதிநிதியாகக் காட்சியளிப்பதை சிங்கள ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ள இயலவில்லை. எனவே ஆலிவர் குணதிலகே என்ற சிங்களரை கவர்னர் ஜெனரலாக நியமிக்குமாறு கோரி பிரிட்டிஷ் அரசியாரின் ஒப்புதலைப் பெற்றனர்.



இதற்கிடையில் ஜனவரியின் பண்டித நேருவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் சிலோன் அரசு அக்கறை காட்டவில்லை. சிலோன் அரசாங்கம் தான் உடன்படிக்கையில் ஒப்புக்கொண்ட விஷயங்களை நிறைவேற்றத் தவறியது. 1954 ஜனவரி உடன்பாடு வெற்றியடையாமல் போனதன் விளைவாக அக்டோபரில் மீண்டும் ஒரு இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியான கூட்டறிக்கை இரு தரப்பு நிலைப்பாட்டிலும் முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்தது. ஆன போதும் அந்த முரண்பாட்டிற்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. மலையகத் தமிழர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வு காண்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பு கை நழுவிப் போனது. நாடற்றவர் என்ற அடையாளத்துடன் நாதியற்ற அம்மக்கள் தொடர்ந்தனர்.



கமல்ஹாசனும், ஜாக்கி சானும் பிறந்த அந்த 1954 ஆம் ஆண்டில் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சியும் நவம்பர் 26 அன்று நடந்தது. பிற்காலத்தில் சிங்களர், தமிழர், முஸ்லிம் மக்கள் என இலங்கைத் தீவில் வாழும் அத்தனை மக்கள் இல்லங்களிலும் வேறுபட்ட காரணங்களுக்காக உச்சரிக்கவிருக்கும், கொழும்பு மற்றும் சென்னைப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பை ஏற்படுத்தப் போகும் 'பிரபாகரன்' என்ற பெயரைத் தாங்கிய குழந்தை இலங்கையின் வடக்குக் கரையோரம் பருத்தித்துறைக்கும், காங்கேசன் துறைக்கும் இடையேயுள்ள வல்வெட்டித்துறை என்ற ஊரில் பிறந்தது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 6

தேசியக் கொடி விவகாரத்தில் தம் இன ஆதிக்கத்தை நிலை நாட்டிய சேனநாயகா அரசு சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் கீழ்த்தரமான குடியுரிமைச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தச் சட்டம் சோல்பெரி கமிஷனின் அடிப்படையில் வாக்குரிமைமை பெற்றிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்த வாக்குரிமையும், தேர்தலில் நிற்கும் உரிமையையும் நிராகரித்தது. ஆறு வருடத்திற்கு முன்னர் இந்திய வம்சாவ்ழைத் தொழிலாளர்கள் இலங்கையை விட்டுப் போகக் கூடாது என்று மன்றாடிய அதே சிலோனில் அந்தத் தொழிலாளர்கள் அந்நியர் ஆயினர்.



தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். அமைச்சரவையில் அங்கம் வகித்த சுந்தரலிங்கம் மசோதாவுக்கு அரசில் அங்கம் வகிக்கிற காரணத்தால் ஆதரித்து வாக்களித்தார். ஆனால் அது தொடர்பான விவாதத்தில் கலந்த்துகொள்ளவில்லை. தமிழ் காங்கிரஸ் சார்பில் S.J.V. செல்வநாயகம் மசோதாவை எதிர்த்துப் பேசினார். சேனநாயகா மலையகத் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி என்று முறையிட்டார். தற்போது பூர்வீகத் தமிழர்களை அவர் நேரடியாகத் தாக்கவில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சிங்கள ஆதிக்கத்தை சிலோனின் அதிகரித்து பூர்வீகத் தமிழர்களை மறைமுகமாகப் பாதிக்கும் சட்டமென்று சாடினார்.



மிகவும் உணர்ச்சிசப்பட்ட நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி, "இப்போது நீங்கள் தமிழர்களில் பலவீனமான பிரிவினரை அடிக்கிறீர்கள், மலை நாட்டுத் தோட்டங்களில் குளிரில் நடுங்கியபடி அல்லலுற்று உங்கள் செல்வத்தைப் பெருக்கும் அப்பாவிகளை அடிக்கிறீர்கள். உங்களது அடுத்த இலக்கு நாங்கள்தான். எங்களை அடிக்கும் போது எங்கள் நிலைப்பாடு என்னவென்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். மொழி சம்மந்தமான அடுத்த சட்ட மசோதா வரும் போது அது தெரியும்" என்று கதறி அழுதார்.



யூத மக்களின் குடியுரிமையை ஹிட்லர் பறித்த போது உலகின் எல்லாம் நாகரீக தேசங்களும் அதைக் கண்டித்தன. ஜெர்மனியின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தனக்கிருப்பதாக ஹிட்லர் சொன்னார். இந்த நாட்டின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்க எத்தனிக்கும் முயற்சி, அதற்கான இந்தச் சட்டம் எல்லாமே சரியானதா என்ற கேள்வியைக் கருத்தில் நிறுத்த வேண்டுமென்று செனட்டர் நடேசன் வாதிட்டார்.



மசோதா மீதான் இரண்டாம் சுற்று விவாதம் நடந்துகொண்டிருந்த போது வவுனியா தொகுதி சுயேட்சை வேட்பாளரும், அமைச்சருமாகிய சுந்தரலிங்கம் வெளிநடப்புச் செய்தார். சேனநாயகா அதற்கு விளக்கம் கேட்டார். ஆனால் சுந்தரலிங்கமோ விளக்கம் தராமல் மந்திரி பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். (இந்த சுந்தரலிங்கத்திடம்தான் சோல்பெரி பின்னொரு நாளில் தமிழர்களுக்கென்று தனி மாநிலத்தை அரசியல் யாப்பில் பரிந்துரைக்காமல் விட்டது தன் தவறென்று குறிப்பிட்டார்) ஆனால் ஜனநாயம் என்பது எண்ணிக்கை விளையாட்டு. பெரும்பான்மை சிங்களர்களை உள்ளடக்கிய சிலோன் நாடாளுமன்றம் சிரமமில்லாமல் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. விடுதலையின் போது மூன்றில் ஒரு பங்கு என்றிருந்த தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒன்று என்று குறையும் அளவுக்கு அதன் பாதிப்பு இருந்தது.



மலையகத் தமிழரின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது இந்தியாவில் பெரும் கண்டனத்தைச் சம்பாதித்து. 1949 இல் சிலோனின் 61 சதவீத ஏற்றுமதி வருவாயை தேயிலை சாகுபடி ஈட்டித் தந்தது. அதற்குக் காரணமாக இருப்பது மலையகத் தமிழர்கள். அவர்களுக்குப் பெரும் அநீதி இழைத்த போது கண்டனம் எழுவது நியாயமானதே. எனவே எதையாவது செய்து அந்தக் கண்டனத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்திய-பாகிஸ்தான் குடியுரிமைச் சட்ட மசோதா விவாதத்திற்கு வைக்கப்பட்டது. முந்தைய சட்டத்தைப் போலவே இந்தச் சட்டத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. "இந்தியக் குடியுரிமைச் சட்டமல்ல; இது இந்தியரை வெளியேற்றும் சட்டம்" என ஹிந்து பத்திரிக்கை குற்றம் சாட்டியது. எதற்காக?



இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் குடியுரிமை பெறுவதற்கு சில தகுதிகளை இந்தச் சட்டம் நிர்ப்பந்தித்தது. திருமணமானவர்கள் தொடர்ச்சியாக ஏழு வருடமும், மணமாகாதவர்கள் தொடர்ச்சியாக பத்து வருடமும் இலங்கையில் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8,50,000 பேரில் 1,45,000 பேருக்கு மட்டும் சிலோன் அரசு குடியுரிமை வழங்கியது. ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிற மக்களின் விண்ணப்பத்தை நிராகரித்து அந்தரத்தில் விட்டது. அதுவும் அந்த விண்ணப்பப் படிவங்கள் 1962 வரை ஓசையில்லாமல் உறங்கிய பிறகு இந்த அவலம் நிகழ்ந்தது.



ஜி.ஜி.பொன்னம்பலம் மலையகத் தமிழரின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய கயமைத்தனத்தால் வெகுண்டெழுந்த SJV செல்வநாயம் 1949 டிசம்பர் மாதம், "இன்றைக்கு அவர்களுக்கு (மலையகத் தமிழர்களுக்கு) நடப்பது நாளைக்கு நமக்கு நடக்கும்" என்று கூறி தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தனி அரசியல் இயக்கம் கண்டார்.



போது சிலோனின் கவர்னர் ஜெனரலாக சோல்பெரி பிரபு இருந்தார். சிலோன் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்திருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு மேலே இங்கிலாந்து மகராணியின் சார்பில் பெயரளவில் இயங்குவது கவர்னர் ஜெனரலின் வேலை. அந்தப் பதவியில் இருந்த சோல்பெரி யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தார். அவரைக் கண்டித்து தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவித்தது.



சோல்பெரி வரையறுத்த, 'சிலோனில் ஒரே ஒரு அரசாங்கம், அதனிடம் மட்டுமே எல்லாக் காலத்திலும் குவிந்திருக்கும் அதிகாரம்' என்ற அரசியல் கட்டமைப்பு எப்போதுமே பெரும்பான்மைச் சிங்களர்களை ஆட்சியில் அமர்த்தும். அது ஒரு போதும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிறைவேற்றாது என்று செல்வா உணர்ந்திருந்தார். எனவே கட்சியின் தொடக்க மாநாட்டில் இந்தியாவில் உள்ளது போல - மத்திய அரசாங்கம் ஒன்றும், மாநில அரசாங்கங்களும் உள்ளடங்கிய - சமஷ்டி (ஆங்கிலத்தில் ஃபெடரல்) அமைப்பை உருவாக்கி தமிழர் வாழும் பகுதிகளை சுய நிர்வாகம் செய்யப் போராடுவதே கட்சியின் நோக்கம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் காரணத்தினால் தமிழில் தமிழரசுக் கட்சி என்றழைக்கப்பட்ட இக்கட்சி ஆங்கிலத்தில் ஃபெடரல் பார்ட்டி என்றழைக்கப்பட்டது.



ஃபெடரல் அமைப்பை அவர் கோரியதற்கு முக்கியமான காரணம், தமிழர் வாழும் பகுதியின் நிலங்களில் சிங்களப் பெரும்பான்மை அரசு சிங்களர்களைக் குடியமர்த்தி அந்தப் பிரதேசங்களில் இன விகிதாச்சாரத்தையே மாற்றி வந்ததாகும். மாநில அரசு என்ற ஒன்றிருந்தால் தன் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியங்களை அதுவே பராமரிக்கும். உதாரணமாக கேரளாவின் தரிசு நிலங்களை குஜராத்தி மக்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுக்கும் அதிகாரத்தை டெல்லியில் ஒரு குஜராத்தி பிரதமராக வந்தாலும் இந்தியாவின் ஃபெடரல் அமைப்பு தருவதில்லை. ஆலப்புழா என்ற மலையாளப் பெயர் கொண்ட ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு குஜராத்தி மொழியில் எதாவது ஒரு பெயர் வைத்து குஜராத்திகளைக் குடியமர்த்தி காலப் போக்கில் கேரளாவின் இன விகிதாச்சாரத்தில் குஜராத்திகளின் எண்ணிக்கையைக் கூட்டி, குரஜாத்திகள் குவிந்திருக்கும் கேரளப் பகுதியைத் தனி மாவட்டங்களாகவும், சட்ட மன்றத் தொகுதிகளாகவும் பிரித்து கேரள சட்டசபையில் குரஜாத்திகளை உள்ளே நுழைத்து, அதன் பிறகு கேரளா மலையாளிகளின் பூர்வீக இருப்பிடம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று வாதிட்டால் அது எவ்வளவு அநியாயமாக இருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள். சிங்கள அதிகார வர்க்கம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களை நிகழ்த்திக்காட்டுவதற்கென்றே அவதரித்திருந்தது.



சேனநாயகா ஆட்சியில் 1956 இன் போது சிங்களர் பெரும்பான்மையாக உள்ள Walawe பள்ளத்தாக்கில் நீர்ப் பாசனத் திட்டம் நிறவேற்றச் சொல்லி கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றினால் Empilipitiya and Ambalantota முதலிய சிங்களப் பகுதிகள் புதிய குடியமர்வுகளை உள்வாங்கும். அதை சேனநாயகா விரும்பவில்லை. சிங்களவர்களை கிழக்க்குப் பிராந்தியத்தில் குடியமர்த்தும் ஹிட்லரின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 'தேசத் தந்தை' என்று சிங்கள மக்களால் போற்றப்படும் D.S.சேனநாயகா உண்மையில் இனப் பிரச்சினையின் முக்கியக் காரணமாகிய நில ஆக்கிரமிப்புத் திட்டத்தின் தந்தையாகவே திகழ்கிறார்.



கிழக்குப் பிராந்தியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இடம் பெயருமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். சிலோன் படிப்பளை ஆறு 'கால் ஓயாவாக' (Gal Oya) மாறி தமிழர்களில் இடத்தில் சிங்களர்களைக் கொணர்ந்து அமர்த்தியது. மக்களும், மக்களின் பூர்வீகமான இடங்களுமே சிறுபான்மை இனத்தின் பாதுகாப்பிற்கு ஆதாரமான தூண்கள் என்று கருதிய செல்வநாயம் ஏற்கனவே மலையகத் தமிழர்களின் வாக்குரிமையும், குடியுரிமையும் பறிபோன போது மக்கள் மீதான தாக்குதலில் சிறுபான்மை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் தமிழர் சார்பாகப் பேசும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கண் முன்னே தேய்வதைக் கண்டு அஞ்சினார். மேலும் கால் ஓயா மற்றும் கந்தளைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் குடியேற்றம் துரிதமான போது தமிழரின் பாரம்பரிய நிலப் பரப்பும் தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டார். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற செல்வநாயகம் சுவர் இடிபடுவதைத் தடுக்கத் துணிந்தார். ஆனால், இந்தக் குடியேற்றம் காலப் போக்கில் அதிகமானதே ஒழிய குறைந்த பாடில்லை.



Gal oya திட்டத்தின் மீழ் 1,20,000 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன் வசதி பெற்றது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் அங்கே குடியேறின. அதே நேரம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு குடியேறிய தமிழர்கள் 1956 கலவரத்தின் போது விரட்டியடிக்கப்பட்டனர். பிறகு அமைதி திரும்பிய போது தங்கள் நிலங்களுக்கு மீண்டும் வந்து பயிரிட்டனர். ஆனால், அது வெகு நாள் நீடிக்கவில்லை. 1958 கலவரத்தின் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். பல பேரு திரும்பவே இல்லை. திரும்பி வந்து பார்த்தவர்கள் தமக்கென்று ஒதுக்கிய நிலத்தில் சிங்களர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். இத்தகைய இனச் சுத்திகரிப்பிற்குத் தெளிவாகத் திட்டமிட்ட சேனநாயகாவை தேசத் தந்தை என்று சொல்லித்தானே ஆக வேண்டும். நிராதரவாக நின்ற தமிழர்கள் வேறென்ன செய்ய, சிலோன் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து சிங்களத் தலைமை கருணை காட்டாதா என்று ஏங்கி எதிர்பார்ப்பதைத் தவிர?

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 5

சோல்பெரி அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும், அபிலாசைகளையும் கேட்டறிந்தார். சிங்கள, தமிழ் மக்களிடையே கனத்த முரண்பாடு நிலவுவதை உணர்ந்த போதும் அதற்கான தீர்வு எதையும் அவரது பரிந்துரையில் குறிப்பிடாமல் விட்டார். பக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தான் கோரிக்கை பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அதே மாதிரியான தீர்வை முன் மொழியாவிட்டாலும், மொழி வாரியான மாநிலங்களையும் அவற்றுக்கென்று சில அதிகாரங்களையும், அவற்றை உள்ளடக்கிய மத்திய அரசாங்கத்தையும் சோல்பெரி பரிந்துரைத்திருக்கலாம். இன்னொரு பக்கம் மலையகத் தமிழர்களின் நிலை குறித்து சோல்பெரி கமிஷன் தெளிவாக வரையறுக்கத் தவறியது. குடியுரிமை, வாக்குரிமை அனைத்தையும் சுதந்திர சிலோன் அரசு தீர்மானிக்கும் என்று கூறி நழுவிவிட்டது.



இந்த சோல்பெரி சுதந்திர சிலோனின் கவர்னர் ஜெனரலாக பிற்காலத்தில் பதவி வகித்தார். 1964 இல் சி.சுந்தரலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், "நான் பரிந்துரைத்த அரசியலமைப்பில் சிறுபான்மையிருக்குப் போதுமான பாதுகாப்பு இருந்ததாகப் பட்டது. ஆனால் இப்போது இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது போல மனித உரிமைகளைப் பேணும் ஷரத்து ஒன்றைச் சேர்த்திருக்கலாம் என்று உணர்கிறேன்" என மனம் வருந்தி எழுதினார்.



நல்ல கணவன் ஒருவன் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் இல்லாத போதும் மனைவியைக் கொடுமைப்படுத்த மாட்டான். ஆனால் கொடுமைக்காரப் புருஷன் என்னதான் சட்டம் போட்டாலும், "உங்க அப்பன் வீட்ல போய் வாங்கிட்டு வா" என்று நிர்ப்பந்திப்பான். சிலோன் சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள் கொடுமைக்கார புருஷனுக்கு ஒப்பானவர்கள் என்பது சோல்பெரி கமிஷனில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருந்த சட்டங்களையே குப்பையில் தூக்கி எறிந்ததன் மூலம் நிரூபித்தனர்.



1945 ஜூலை 11 ஆம் தேதி சோல்பெரி கமிஷன் தன் அறிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. ஜூலை 16 நடந்த பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போர் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி அட்லியின் தொழிலாளர் கட்சியிடம் தோல்வி கண்டது. தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கு சுயாட்சி உரிமை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் முன் வைத்திருந்தது. மேலும் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு ஐரோப்பிய வல்லரசுகளின் பொருளாதார நலன் காலனியாதிக்க நாடுகளைச் சார்ந்திருக்கவில்லை. மேலும் மூன்றாம் உலக நாடுகளான இவற்றின் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று போராடிக்கொண்டிருந்தனர். இவையெல்லாம் இந்தியாவின் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சகுனங்களாக அமைந்தன. இந்தியாவிற்கு சுதந்திரம் என்றால் சிலோனுக்கும் கிடைத்த மாதிரி!



இந்தியாவின் புதிய வைசிராய் மவுன்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு விடுதலை அளிக்கும் சிக்கலான காரியத்தைப் பல குழப்பங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் நடுவே இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு தேசங்களை உருவாக்கும் காரியத்தை 1947 ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் செய்து முடித்தார். அதற்கு முன்னதாகவே உலக அரசியலிலும், பிரிட்டிஷ் அரசின் போக்கிலும், பக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் உன்னிப்பாக அவதானித்த சிங்களத் தலைவர்கள் சுதந்திர சிலோன் தேசத்தை ஆள்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.



சோல்பெரி அரசியலமைப்பின் அடிப்படையில் சிலோனின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 செப்டம்பரில் நடப்பதாக இருந்தது. அப்போது சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. ஆனால் அதற்கான முதல் நடவடிக்கையாக இந்தத் தேர்தல் கருதப்பட்டது. அதைச் சந்திக்கும் நோக்கத்தில் D.S.சேனநாயகா அனைத்து சிங்கள அரசியல் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக 1946 ஏப்ரலில் ஐக்கிய தேசியக் கட்சி பிறந்தது. பொன்னம்பலம் ராமநாதனால் தொடங்கப்பட்ட சிலோன் தேசிய காங்கிஸ் மட்டும் கலைக்கப்பட்டது. சாலமன் பண்டாரநாயகா ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தாலும் தனது சிங்கள மகா சபையைக் கலைக்கவில்லை.



ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. தமிழர், சிங்களர் கலந்து வாழும் பகுதிகளில் சிங்களையே நிறுத்தியது. ஒரு தமிழ் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் இலட்சியத்துடன் மூன்று உறுப்பினர் தொகுதியாக வரையறுக்கப்பட்ட கொழும்பு மத்தியத் தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த சேனநாயகா அனுமதிக்கவில்லை. ஜவஹர்லால் நேரு ஆசியுடன் தொடங்கப்பட்ட சிலோன் இந்திய காங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியாக ஏழு உறுப்பினர்களை அனுப்பியது. அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



செப்டம்பர் 23, 1947 இல் D.S.சேனநாயகா இலங்கையின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவியேற்கும் முன்னர் கண்டி புத்த பற்கோவிலுக்குச் சென்று ஆசி பெறும் பாரம்பரியத்தையும் ஆரம்பித்து வைத்தார். 66 வயதான D.S.சேனநாயகாவின் அமச்சரவையில் 36 வயதான அவரது மகன் டட்லி சேனநாயகா மிக இள வயது அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் தந்தை வகித்த விவசாயம் மற்றும் நிலத் துறை அமைச்சகம் மகனுக்குப் போய்ச் சேர்ந்தது. வவுனியா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற சி.சுந்தரலிங்கத்திற்கும் அமைச்சர் பதவி கொடுத்து சிலோன் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் என்ற அவப்பெயர் வராமல் சேனநாயகா தவிர்த்தார்.



அடிப்படையில் மலையகத் தமிழர் என்றாலே ஆகாத சேனநாயகா பிரதமரான உடனே அவர்கள் மீது தன் பார்வையைத் திருப்பினார். 1947 டிசம்பரில் பாரதப் பிரதமர் நேருவும், சிலோன் பிரதமர் சேனநாயகாவும் இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்ப்பதற்காக சந்தித்துப் பேசினார்கள். முடிந்த அளவிற்கு மலையகத் தமிழர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பும் அவா அவருக்கிருந்தது. ஆனால் நேரு இந்த விஷயத்தில் தீர்மானமாக இருந்தார். எனவே "இந்தியர்கள் இங்கிருப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வோம். நாற்பது கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் ஏழு அல்லது எட்டு இலட்சம் மக்கள் கூடுதலாகச் சேர்வதால் என்ன நேர்ந்து விடப் போகிறது! ஆனால் அவர்களின்றி உங்களால் இருக்க முடியாதென்றால் அது கெளரவப் பிரச்சினை ஆகிறது. மற்ற குடிமக்களுக்குரிய எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்கவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.



தீர்க்கப்படாத இந்தச் சிக்கலோடு 1947 முடிந்தாலும் 1948 சிலோனுக்கு நல்ல செய்தியோடு விடிந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசு சிலோனுக்கு இந்தா பிடி என்று சுதந்திரத்தைக் கையில் திணித்தனர். அதற்கு முன்பாக சுதந்திர தேசத்தில் தேசியக் கொடியை வடிவமைக்கும் விவகாரத்தில் சிங்களர்களின் ஆதிக்க மனநிலை வெட்ட வெளிச்சமாகிறது.



1948 ஜனவரியில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர் நடேசன், இலங்கையின் தேசியக் கொடியை நிகழ்கால உலகின் சித்தாங்களை மனதில் வைத்து அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எனினும் பிப்ரவரி 4 சுதந்திரம் பெற்ற பின்னர் 19 ஆம் தேதி கொடியேற்றிய D.S.சேனநாயகா சிங்கள ராஜ்ஜியத்தின் கொடியையே ஏற்றினார். இந்தியக் கொடியைப் போன்ற மூவண்ணக் கொடி ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனை காற்றில் பறந்தது. சிங்களர்களுக்கு சிங்கம், தமிழரின் பாரம்பரியச் சின்னமான நந்தி, மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பிறை நிலவும் நட்சத்திரமும் சேர்ந்த ஒரு கொடியைத் தீர்மானிக்கலாம் என்று செல்வநாயம் கொண்டு வந்த தீர்மானம் குப்பைத் தொட்டிக்குப் போனது. சிங்களர் அல்லாத மக்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தாம் நினைத்ததையே பெரும்பான்மை சிங்கள இனம் சாதித்தது.



சுதந்திரத்திற்குப் பிறகு தேசியக் கொடி குறித்து ஆலோசனை கூற அரசியல் குழு ஒன்றை அமைத்து, சிங்கக் கொடியே தொடரலாம் என்று ஊர்ஜிதப்படுத்தினார் சேனநாயகா. தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் சமாதானப்படுத்த ஓரிரு கோடுகளை மட்டும் கொடியில் சேர்த்தனர். மேலும் கடைசி கண்டி ராஜ்ஜியம் இந்தக் கொடியையே பயன்படுத்தியது என்றும், கடைசி கண்டி மன்னன் ஒரு தமிழன் என்றும், அதனால் இந்தக் கொடியை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் சிங்களத் தலைவர்கள் சப்பைக்கட்டு கட்டினர். ஆனால் 2,500 வருடத்திற்கு முன் எல்லாளனை வஞ்சகமாக வீழ்த்திய சிங்கள மன்னன் தன் இனத்தின் அடையாளமாகப் பறக்க விட்ட சிங்கக் கொடிதான் அது. அதானால்தான் அதெயே பின்பற்ற வேண்டுமென்று பிடிவாதமாக நின்றனர். பல இன, மொழி, மத மக்களை உள்ளடக்கிய தேசத்தின் ஒரு இனத்தின் மேன்மையைப் பறைசாற்றும் சின்னங்கள் அந்த தேசத்தின் ஒற்றுமைக்கே உலை வைத்து இன வெறுப்பை ஊட்டுவனவாகும். அந்தப் பாதையில் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மிடுக்குடன் தேசத்தை நடத்தினர்.



சிங்கள அதிகாரத்தைப் பிரதிபலிக்கும் சிலோன் தேசியக் கொடி தமிழ் மக்களிடையே தேசிய ஒற்றுமை உணர்வைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட இனம் என்ற உணர்வையே தோற்றுவித்தது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 4

1927 இல் சிலோனின் அரசியலமைப்பை ஆராயவும், புதிய அரசியல் நிர்ணய சபைக்கான பரிந்துரையை வழங்கவும் ஒரு சிறப்புக் கமிஷனை இங்கிலாந்து அனுப்பியது. மக்களிடம் இன ஒற்றுமை இல்லாமலிருப்பதை அந்த கமிஷன் கண்டறிந்தது. இனத் துவேஷம் சரியான மருந்தின் மூலம் குணமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த அக்கமிஷன் அந்தப் பிரச்சினைக்கான ஆணி வேரைக் கண்டறியாமல் ஆண்களுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் வாக்குரிமை என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றது.



மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். 1920-1930 வாக்கில் மலையகத் தமிழர்களை 'இந்திய வம்சாவழித் தமிழர்கள்' என்று சிங்களத் தலைவர்கள் அழைக்கத் துவங்கினர். அதாவது சிலோன் தீவிற்கும், மலையக மக்களுக்கும் தொடர்பில்லை என்பதே அவர்களது பிரச்சார உத்தியாகும். சேனநாயாகவின் அரசியல் எதிர்காலம் இந்தப் பிரச்சினையை மூலதனமாக்கி சிங்கள தேசிய உணர்வைத் தோற்றுவிப்பதைச் சார்ந்திருந்தது. அதாவது, ஆங்கிலேயரிடம் யார் போராடி விடுதலை பெறுகிறார்கள் என்பதை விடு சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிங்கள-புத்த உணர்வுகளின் காவலனாகக் காட்சியளிப்பது அவர்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பண்பானது. ஏனென்றால் இந்தியா விடுதலை அடையும் போது இலங்கைக்கும் கிடைத்து விடும், அதனால் சிங்கள மக்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பதை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயல்பட்டனர்.



1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கை மக்கள் தொகையில் 15.4 சதவீதத்தினர் மலையகத் தமிழர்களாக இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஈழத் தமிழர்களைக் காட்டிலும் கூடுதல். சிங்களர்களுக்கு அடுத்த படியாக மிகப் பெரிய சிறுபான்மை இனமாக அவர்கள் இருந்தனர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள் இவர்களுக்காக எதையும் செய்யவில்லை. கல்வி மறுக்கப்பட்டது. மாறாக ஏராளமான மதுக் கடைகளும், கோவில்களும் திறக்கப்பட்டன. மலையகத்தினுள் வெளியார் செல்லத் தடையாக இருந்த அத்துமீறம் சட்டம் 1957 வரை அமுலில் இருதது. இப்படியான பின்னணியில் மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்க சிங்களத் தலைவரகள் முயன்றதில் வியப்பில்லை.



மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிங்களர்களின் கோரிக்கைக்கு இணங்காத பிரிட்டிஷார் பிராந்தியப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தில் சோடை போனார்கள். சிங்களப் பிராந்தியங்களுக்கு அதிகமான தொகுதிகள் என்று ஒதுக்கி, 2:1 என்றிருந்த சிங்கள/தமிழ் பிரதிநிதித்துவத்தை 5:1 என்ற நிலைக்கு மாற்றும் துரோகத்தில் துணை நின்றனர். இதைக் கண்டு மனம் கலங்கி நொந்த சர் பொன்னம்பலம் ராமநாதன், "ஆபத்தான காலம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. Donougmore கமிஷன் தேசத்தை உருக்குலைக்கும் காரியத்தைச் செய்திருக்கிறது. தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு பேரழிவைச் சந்திப்பதற்கு முன்னர் கிளர்ந்தெழும் கூட்டம் ஒன்றை என் கண்ணுக்கு முன்னால் காண்கிறேன்" என்று வேதனையோடு தன் இறுதி உரையை நிகழ்த்தினார்.



கடைசியாக 1930 நவம்பர் 30 அன்று மரணமடைந்தார். ஒருங்கிணைந்த சிலோன் தீவு முழுமைக்கும், அதன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அவர்களது நலனுக்கும் தன் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றையும் அர்ப்பணித்து உழைத்த சிலோனின் முதலும், கடைசியுமான தேசியத் தலைவரான பொன்னம்பலம் ராமநாதனின் மரணம் ஆங்கில ஆட்சிக் கால சிலோன் வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.



பொன்னம்பலம் ராமநாதனின் மரணத்தின் போது தமிழர் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வெகு விரைவில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற சொக்க வைக்கும் பேச்சாளர் நிரப்பினார். ஏறத்தாழ அதே கால கட்டத்தில் 1931 வாக்கில் சிங்களர் மத்தியில் S W R D பண்டாரநாயகா என்ற பேச்சாளரும் உருவெடுத்தார். அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 1933 ஆம் ஆண்டு ஜெர்மெனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரின் தாக்கம் சிங்களத் தலைவர்களிடம் பெருமளவில் ஒட்டிக்கொண்டதை 1931 இல் வேளாண்மை மற்றும் நிலத் துறை (காணி) அமைச்சராகப் பொறுப்பேற்ற D.S.சேனநாயகா தன்னுடைய திட்டங்கள் மூலம் நிரூபித்தார். இந்த ஹிட்லரின் தாக்கம் அடுத்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் என்பது 1981 இல் யாழ்ப்பாண நூலகம் இரண்டு சிங்கள அமைச்சர்களின் மேற்பார்வையில் எரிந்து சாம்பலான நிகழ்வு எடுத்துக்காட்டியது.



டான் ஸ்டீபன் சேனநாயகா அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா? மிக எளிமையானது அவர் கணக்கு. ஆதாவது தமிழர் பாரம்பரிய நிலப் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை சிங்களர்களுக்கு வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்த வேண்டும். இவ்வாறு தமிழர் வாழும் பகுதிகளை காலப் போக்கில் சிங்களர்களைப் பரவச் செய்து, மூன்றில் இரண்டு பகுதி சிங்களர் வசம் என்றும் ஒரு பகுதி தமிழர் வசமென்றும் உள்ள நிலப்பரப்பை மாற்றி நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு சிங்களர் என்ற நிலைக்குக் கொணர்ந்து தமிழர்களுக்கென்று பெரும்பான்மையாக உள்ள பாரம்பரிய இடத்தை துடைத்தெடுப்பது. இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தமிழர் பெரும்பான்மையினராக இருக்க மாட்டார்கள். காலப் போக்கில் அவர்களுக்கென்று மக்கள் மன்றத்தில் பிரதிநிதித்துவம் அறவே அற்றுப் போகும்.



அதற்காக அவர் தொடங்கிய திட்டம்தான் படிப்பளை ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு கால் ஓயா (Gal-Oya) என்று சிங்களத்தில் பெயர் சூட்டி அந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்களர்களைக் குடியமர்த்தும் நூதனத் திட்டம். சிங்களர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அணை கட்டாமல் தமிழர் பிராந்தியத்தில் அபிவிருத்தித் திட்டத்தை அவர் தொடங்கியதற்கான அரசியல் காரணத்தைப் புரிந்துகொள்ள ராக்கெட் விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க வல்லுனர்களைக் கொண்டு கட்டிய இந்த அணைக்கு சேனநாயகா சமுத்திரம் என்ற பெயர் சூட்டப்ப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிங்களர் வந்தமர்வதற்கு வசதியாக அடித்து விரட்டப்பட்டனர்.



சிங்களரின் இந்தக் குடியமர்வுத் திட்டம் பல வடிவங்களில் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் அணைக்கட்டு, புதிய பாசனப் பகுதி உருவாக்கம் என்ற போர்வையில் நடந்த ஊடுருவல் காலப் போக்கில் அப்பட்டமாக நடந்தேறியது. தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அடுத்து வந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட பல உடன்படிக்கைகளில் (அவற்றை சிங்களத் தலைவர்கள் கிழித்துக் குப்பையில் போட்டது வேறு விஷயம்) சிங்களர்களாலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழர் பாரம்பரியப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் அவலம் இலங்கை சுதந்திரம் பெறும் முன்பே துவங்கியது.



யூதர் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களைத் துரத்தி விட்டு அல்லது கொன்று விட்டு ஜெர்மானியர்களைக் குடியேற்றி தன் ஆளுமையை விரிவாக்க முயன்றதன் அடியொற்றி சிங்களத் தலைவர்கள் தமது கொள்கையை வகுத்தனர். ஹிட்லர் கிழக்கு நோக்கி ஆஸ்திரியா, ஹங்கேரி என தன் விரிவாக்கலை நடைமுறைப் படுத்தினார். சிங்களர்களும் தங்கள் விரிவாக்கலைக் கிழக்கு நோக்கியே துரிதப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய நிலப் பரப்பா¡க இருந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்குப் பிராந்தியமே. அதன் மக்கள் தொகை விகிதாச்சாரம் தலை கீழாக மாறியது. கிழக்குப் பிராந்தியத்தை மூன்றாகப் பிரித்து சிங்களர்களுக்கு ஒன்று, தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று என 1986 ஆம் ஆண்டு சார்க் மாநாட்டின் போது ஜெயவர்த்தனே பேசுமளவுக்கு அரசு ஆதரவுடனான சிங்களக் குடியமர்வு தமிழர் நடந்தேறியது. நம் நாட்டில் ஆந்திராவின் புறம்போக்கு நிலங்கள் தமிழகத்து மக்களுக்கு வழங்கப்பட்டு அங்கே நாம் குடியேறி, ஒரு கால கட்டத்தில் ஆந்திராவின் மூன்றில் ஒரு பகுதி தமிழ் நாட்டுக்குச் சொந்தம் என்று சொன்னால் உதைக்க மாட்டார்களா?



சாலமன் பண்டாரநாயகா என்ற S W R D பண்டாரநாயகா சிங்கள மகா சபை என்ற சிங்களர்களுக்கான அரசியல் இயக்கத்தை 1936 இல் தோற்றுவித்தார். அதன் தொடக்க நிகழ்ச்சியிலேயே தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்தார். வளர்ந்து வரும் இளைய தலைமுறைச் சிங்களத் தலைவர்கள் பலர் சபையில் துவக்க விழாவில் கலந்துகொள்ள வாந்திருந்தனர். அவர்களுள் D.S.சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகாவும் ஒருவர். அவரகள் அனைவரும் கூடியிருந்த போது சங்கள மகா சபை என்று பெயர் வைக்கக்கூடாது. சுதேசிய மகா சபை என்று பெயர் வைக்க வேண்டுமென்று பண்டாரநாயகா வாதிட 'சிங்கள' என்ற வார்த்தை இல்லாததை எதிர்த்து டட்லி சேனநாயகா உள்ளிட்ட பலரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இப்படியாக, அவர் வெளியேறிய பிறகு அந்த அமைப்பின் பெயரை சிங்கள மகா சபை என்றே வைத்துக்கொண்டார் சாலமன்.



சிங்கள மகா சபையை ஆரம்பித்த போது சாலமன் பண்டாரநாயகா மாகாண கவுன்சிலராகவும், அமைச்சராகவும், சிலோன் தேசிய காங்கிரசின் முக்கியப் பிரமுகராகவும் விளங்கினார் என்பது கவனிக்கத் தக்கது.



தமிழ் பேசும் உறுப்பினர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 1939 இல் 15,000 இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடு கடத்தும் தீர்மானம் சிங்களர்களால் ஆட்சி மன்றத்தில் நிறைவேறியது. அதே வருடம் 8,000 இந்திய ரயில்வே ஊழியர்களை போக்குவரத்து அமைச்சகம் வீட்டுக்கு அனுப்பியது. அரசுப் பணியில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை D.S.சேனநாயகா நிறைவேற்றினார். சிங்களத் தலைவர்களின் தமிழ் வெறுப்பும், இந்திய வெறுப்பும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வெளிப்பட்டது.



மலையகத் தமிழர்களையும், இந்தியர்களையும் நாடு கடத்தும் சிங்களரின் நடவடிக்கை இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி பதவி வகித்தார். இந்திய காங்கிரசின் சார்பாக இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக பண்டித ஜவஹர்லால் நேரு பம்பாயிலிருந்து கிளம்பி சிலோன் ரத்னமாலா விமான நிலையத்தில் வந்திறங்கினார். சிங்கள அமைச்சரவையைச் சந்தித்தார். மலையகத் தமிழர் பிரச்சினையில் அவர்களத் இறுக்கமான நிலைப்பாடு நேருவைக் கவலைப்படுத்தியது. "(மலையகத்) தொழிலாளர்களைப் பொறுத்த வரை சிங்களர்கள் மற்றும் அவர்களது தலைவர்கள் குறுகிய கண்ணோட்டம் படைத்தவர்களாக உள்ளனர்" என்று ஒரு ஊர்வலத்தில் பகிரங்கமாகவே அவர் அறிவித்தார்.



ஜூன் 17, 1939 இல் கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் கனத்த இதயத்துடன் பேசிய நேரு, "நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு இந்தியனின் ஒற்றை ரோமத்தைக் கூட மற்றவர் தொடுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்றார். சிலோனிலிருந்து இந்தியா திரும்பிய நேரு அங்கே இந்திய வம்சாவழித் தொழிலாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு இனி மேல் சிலோனுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டது.



அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடும் அரசியல் இயக்கம் தேவையென உணர்ந்த நேரு அதற்கான வேலையை முடுக்கி விட்டார். பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் ஆசான் சத்தியமூர்த்தி மற்றும் பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்த வி.வி.கிரியும் 1939, செப்டம்பர் 7 அன்று மலையகத் தமிழர்களுக்காக 'சிலோன் இந்திய காங்கிரஸ்' என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மலையகத்தின் நிலவரம் இவ்வாறு இருக்க பொன்னம்பலம் ராமநாதனின் மறைவால் பூர்வீகத் தமிழர்களின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிய ஜி.ஜி.பொன்னம்பலம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 1944 ஆகஸ்ட் மாதம் சிலோன் தமிழர் காங்கிரஸைத் தோற்றுவித்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார். இதற்கிடையில் காலனியாதிக்க நாடுகளுக்கு சுதந்திரம் அளிப்பதை பிரிட்டிஷ் அரசு பரிசீலித்து வந்தது. அப்படி ஒரு சூழல் எழும்போது அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில், சிலோன் தமிழர் காங்கிரஸ் உருவாகி ஒரு மாத காலத்திற்குள் சோல்பெரி பிரபு தலைமையில் ஒரு கமிஷன் சிலோனில் வந்திறங்கியது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 3

1912 ஆம் வருடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் மாபெரும் துக்ககரமான சம்பவம் ஒன்று நடந்தது. மூழ்காத கப்பல் என்ற பெயருடன் மேட்டுக்குடி மக்களை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற டைட்டனிக் கப்பல் கடலில் கவிழ்ந்து வரலாற்றில் இடம் பெற்றது. ஆனால் அன்றிலிருந்து சரியாக மூன்று வருடம் ஆறு வாரம் கழித்து மே 28, 1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் உருவான சிங்கள-முஸ்லிம் கலவரம் ஆங்கிலப் பேரரசிற்கு டைட்டானிக் மூழ்கியதைக் காட்டிலும் பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.



சிலோன் தீவு ஆங்கிலேயரின் நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட முதலாவது பெரிய இனக்கலவரம் இதுவே ஆகும். இன்னும் சொல்லப் போனால் அன்று வரை பிரிட்டிஷ் காலனி தேசங்களிலேயே அது போன்ற கலவரம் உண்டானதில்லை. பிற்பாடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட உயிர்ச்சேதம் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது வேறு கதை. இருந்தாலும் இலங்கையைப் பொறுத்த மட்டில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் என்ற மூன்று சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழும் சூழலில் அன்று தொடங்கிய இனவெறுப்பு 93 ஆண்டுகள் கடந்து பிறகும் கூட இன்று வரை தணிந்த பாடில்லை.



புத்த ஜெயந்தியை பெளத்த சிங்களர்கள் கண்டியில் ஊர்வலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் 1815 இல் Kandyan Convention மூலம் தமிழ் மன்னன் விஜயராஜசிங்கனின் அரசை வீழ்த்திய நிகழ்ச்சியின் நூற்றாண்டு விழாவையும் சேர்த்து புத்த ஜெயந்தியை விமரிசையான ஊர்வலமாகக் கொண்டாட சிங்களத் தலைவர்கள் திட்டமிட்டனர். ஆயினும் முஸ்லிம் மசூதி முன்னர் அமைதியாகச் செல்லவேண்டும் என்றும், மசூதிக்கு 100 அடி முன்பே வாத்தியங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த அரசுப் பிரதிநிதி உத்தரவிட்டிருந்தார். மேளதாளத்துடன் நள்ளிரவு ஊர்வலம் மசூதியை நெருங்கிய போது நிலைமையைச் சமாளிப்பதற்காக போலீஸ் அதிகாரி வேறு வீதி வழியாக அவர்களை விலகிச் செல்லுமாறு பணித்தார். இதை மசூதிக்குள்ளிருந்து கண்டு குதூகலித்த இஸ்லாமியர்கள் கை தட்டி மகிழ்ந்தனர். சிங்களர்களுக்கும் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டியெழுப்ப அது போதுமாகவிருந்தது. மாற்றுப் பாதை வழியாகப் பயணிக்க நினைத்தவர்கள் மசூதியை நோக்கி விரைந்தனர். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஆறு கான்ஸ்டபிள்களும் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இரு பிரிவினரும் கற்களையும், சீசாக்களையும் மாறிமாறி வீசினர். அமைதியைப் பரப்ப அவதரித்த புத்த பிரான் பிறந்த நாளில் ஒரு இனக் கலவரம் அங்கே வெடித்தது. சிலோன் தீவின் ஒன்பது மாகாணங்களில் ஆறு மாகாணங்களுக்கு இந்தக் கலவரம் பரவியது.



சுமார் 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து நாசமானது. ஒட்டு மொத்தமாக 140 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற ஆங்கில அரசாங்கம் ராணுவ அடக்கு முறைச் சட்டத்தைப் பிற்ப்பித்து எண்ணற்ற சிங்களர்களைச் சிறையில் தள்ளியது. சுமார் 4,500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது சிலோன் தீவின் சட்ட மன்றத்தில் அங்கம் வகித்த 21 உறுப்பினர்களின் 'படித்த சிலோன்காரர்' என்ற பிரிவில் ஒரே உறுப்பினராக சர் பொன்னம்பலம் ராமநாதன் என்ற தமிழர் இருந்தார். சிங்களர்கள் செய்தது தவறுதான் என்ற போதிலும் அவர்களை நியாயமற்ற முறையில் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து இங்கிலாந்து வரை சென்று வாதாடினார். அந்தச் சமயத்தில் இங்கிலாந்திற்கும், ஜெர்மனிக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அதனால் தேவையில்லாமல் உருவான இந்த இனக்கலவரத்தைச் சரியான முறையில் பிரிட்டிஷ் அரசு விசாரிக்கத் தவறியது. உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கம் கலவரத்தைத் தூண்டிய சிங்கள வெறியர்களைக் கைது செய்த அதே நேரம் அரசாங்கத்தை எதிர்த்த அத்தனை பேரையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழி தீர்த்தது. ஆங்கில ஆதிக்கத்திலிருக்கும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் அக்கறை கொண்ட ராமநாதன் விடுதலை உணர்வைத் தட்டியெழுப்புவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதைக் கருதினார். சிறைப்பட்ட சிங்களை விடுவிக்க உதவியதில் ராமநாதனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி விடுதலையானவர்களில் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகப் பிற்காலத்தில் வரப் போகும் D.S.சேனநாயகாவும், இலங்கையில் முதல் எக்சிக்யூட்டிவ் அதிபர் 'குள்ள நரித்தன' ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசியில் ஆசானாக விளங்கிய அலக்சாந்தர் ஏகநாயகே குணதிலகேவும் அடக்கம்.



ஆனால் ராமநாதனின் கணிப்பு இரண்டு கோணத்தில் தவறியது. முதலாவதாக ஒன்றுபட்ட சிலோன் தீவின் பிரஜைகளாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவது அவரது எண்ணம். ஆனால் சிங்கள மக்கள் மனதில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த வெறுப்பு 'ஆங்கில எதிர்ப்பு உணர்வை' தூக்கிச் சாப்பிட்டது. சிங்கள, புத்த உணர்வுகள் விழித்தெழுந்தன. மற்றொரு பக்கம் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடு ஏற்படவும் இந்நிகழ்ச்சி காரணமாக அமைந்தது. அநியாயமான முறையில் சிங்களர்கள் தம்மைத் தாக்கிக் கொன்ற போது, நியாயமாக தம் பக்கம் சாயாது பெரும்பான்மை சிங்களர்களுக்குப் பரிந்து பேசுவதாக சர் ராமநாதனை முஸ்லிம் சமுதாயம் கருதியது. அச்சமுதாயம் தன்னை தமிழர் அல்லாத ஒரு பிரிவினராகவே உணரத் தொடங்கியது. ஆக, ஒரு பக்கம் சிங்களர்களின் வலுவான இன உணர்வு, மறு பக்கம் முஸ்லிம்கள் தனியாகப் பிரிந்து நிற்றல் என இந்த இரண்டுக்கும் மத்தியில் சிலோன் தேசிய உணர்வை உருவாக்குவதற்கு ராமநாதன் முயன்றார்.



ஆங்கிலேயரை வெளியேற்றிவிட்டு சிலோன் மக்கள் தம்மைத் தாமே ஆளவேண்டும் என்ற நோக்கில் 1917 இல் அவர் சிலோன் சீர்திருத்த லீக் என்ற அமைப்பை நிறுவினார். ஏகாதிபத்திய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துப் போராடி அவர் தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த முயற்சியில் அடுத்த கட்டமாக இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய தேசிய காங்கிரசைப் போல 'சிலோன் தேசிய காங்கிரசை' 1919 இல் தோற்றுவித்தார். அதன் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைத் தீவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முதல் தேசியத் தலைவர் ஆனார். ஆனால் சிங்கள மக்களிடம் ஆங்கில அடக்கு முறைக்கு எதிரான சிலோன் தேசிய உணர்வைக் காட்டிலும் சிங்கள இன உணர்வு மேலாக இருந்தது.



1920 ஆம் ஆண்டு ஜேர்ஸ் பெரிஸ் என்ற சிங்கள் சிலோன் தேசியக் காங்கிரசின் தலைவராவத்தற்கு ராமநாதன் வழிவிட்டார். அந்த வருடம் பிராந்திய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. கொழும்பில் வசித்த ராமநாதன் கொழும்பு தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் சிலோன் காங்கிரசில் சிங்களர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். வேறு வழியில்லாமல் சிங்களர் ஒருவர் கொழும்பில் போட்டியிடும் வகையில் அவரது மனுவை விலக்கிக்கொண்டார். மேலும் அவர் எந்த சிலோன் தேசிய காங்கிரசை அவர் உருவாக்கினாரோ அந்த சிலோன் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிலோன் மக்களின் விழிப்புணர்வுக்கா அர்ப்பணித்த அவர் எழுபது வயதைக் கடந்திருந்தார். கொழும்பில் அவரைப் போட்டியிட அனுமதிக்காத சிங்கள அரசியல்வாதிகள் நடப்பது பிராந்திய உறுப்பினர்களைப் பிரதிநிதிப்படுத்தும் தேர்தலல்ல, மாறாக இனப் பிரதிநிதித்துவத்துகான தேர்தல் என்பதை நீருபித்தனர்.



சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி மீதும், புத்த மதம் மீதும் பற்று இருக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து அவர்களின் கலாச்சார உணர்வுகளை மீட்டெடுக்க பல காலம் உழைத்தவர் ராமநாதன். ஆங்கில ஆட்சியின் போது மேற்கத்திய மோகத்தில் திளைத்திருந்த சிங்களருக்கு சுய மரியாதையை ஏற்படுத்தி அவர்தம் கலாச்சாரத் தொன்மையை மீட்டெடுக்கும் காரியத்தைச் செய்தார். 1886 இல் பெருமளவில் நிதி திரட்டி சிலோனின் முதல் பெளத்தக் கல்லூரியான அனந்தா கல்லூரியை நிறுவினார். சிங்களம் பேசுவதைத் தவிர்த்து சக சிங்களரிடம் கூட ஆங்கிலத்தில் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிருந்து மீள்வதற்கு மக்களுக்கு மொழிப்பற்றை ஊட்டினார். "ஒவ்வொரு சிங்களனும், தமிழனும் இந்த நாட்டில் நடைபெறும் தேசிய உணர்வு அழிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். பாரம்பரியம் மிக்க தமது மொழியைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும். தன் மொழியை உதாசீனம் செய்வதும், தனது பெருமிதம் மிக்க மொழியைப் பேச முன் வராதிருப்பதுமான சிங்களன் உண்மையான சிங்களனாக இருக்க முடியாது" என்று பேசினார்.



மேலும் 1904 ஆம் ஆண்டு அதே அனந்தா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிங்களம் பேசுவதைக் கேவலமாகக் கருதிய மேட்டுக்குடி சிங்களர்களை நோக்கி, "சிங்களரின் உதடுகள் சிங்கள மொழியைப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? தன் தாய் மொழியைப் பேச விரும்பாத மக்களைக் கொண்ட தேசத்தை தவறுகளிலிருந்து எழச் செய்து, சீர்திருத்தி, விழிப்புணர்வுள்ள பிரதேசத்திற்கு முன்னேற்றுவது எப்படி?" என்று வினவினார். இந்த உரை சிலோன் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.



எனினும் ஆங்கில ஆட்சியின் போது சுயாட்சிக் கோரிக்கை முதலில் எழுந்தது தமிழர்கள் மத்தியில்தான். ஒட்டுமொத்த சிலோனின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் உருவானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஹேண்டி பேரின்பநாயகம் போன்றோர் மகாத்மா காந்தியடிகள், கமலாதேவி அம்மையார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் பேச வைத்தனர்.



இப்படிப்பட்ட சூழலில் சிங்கள மக்களுக்கு இன உணர்வும், மொழிப்பற்றும் இருக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டு நாடு தழுவிய சுயாட்சிக் கோரிக்கையைத் தோற்றுவித்த ராமநாதனுக்கு சிங்களர்கள் தகுந்த பாடம் புகட்டினர். உண்மையான சிலோன் தேசியத் தலைமை என்ற நிலை மாறி சிலோன் தேசிய காங்கிரஸைக் கைப்பற்றிய சிங்களத் தலைமை என்றும், அதிலிருந்து வெளியேறிய தமிழர் தலைமை என்றும் இரு துருவங்களாகப் பிளந்து நின்ற அவலம் 1920 லியே அரங்கேறியது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 2

ஆங்கிலேயர்கள் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சமயத்தில் இன்னொரு வரலாற்றுத் திருப்பமும் ஏற்பட்டது. 1823 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 கூலிகளின் உழைப்பில் காஃபி பயிரிட்டு 600 பவுண்ட் சம்பாத்ததில் திடீர் கதாநயகன் ஆன வெள்ளை முதலாளி ஆரம்பித்து வைத்த திருப்பம் அது. மலிவான கூலிக்கு உழைக்கும் மக்களை இறக்குமதி செய்யும் வரலாறு தொடங்கியது. 1827 ஆம் ஆண்டு Sir Edwards Barnes என்ற ஆங்கில கவர்னர் கண்டி மலைப் பிரதேசத்தில் காஃபித் தோட்டங்களை நிர்மாணித்து அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்களை வரவழைத்தார். இந்த எண்ணிக்கை காலப் போக்கில் பன்மடங்கு பெருகியது.



மலைப் பிரதேசத்தைச் சீர்திருத்திச் செப்பனிட்டு பயிரிடுவதற்கு ஏற்றதாக மாற்றுகிற கடினமான வேலையில் ஈடுபட உள்ளூர்ச் சிங்கள மக்களுக்கு முதுகு வளையவில்லை. அதனால் இந்தியாவில் நிலவிய வறுமையைப் பயன்படுத்தி, வஞ்சகமில்லாமல் உழைக்கிற இந்தியர்களை ஆங்கிலேய எஜமானர்கள் தருவித்தனர். இந்தியாவாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் யாவுமே ஒரே பேரரசின் கீழ் உள்ள காரணத்தினால் எல்லா இடத்திலும், எல்லோரும் அடிமைகள் என்ற அடிப்படையில், அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் என்ற எதார்த்தத்தில் அவர்களும் கண்டிக்குப் புறப்பட்டனர்.



இலங்கைக்குத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையும், அங்கே அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் எதிர்த்து இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதாபிமானிகள் குரல் எழுப்பினர். அதன் விளைவாக பிரிட்டிஷ் இந்திய அரசு 1839 இல் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் சில அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை அரசும், தோட்ட முதலாளிகளும் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக 1847 இல் இத்தடையை பிரிட்டிஷ் இந்திய அரசு நீக்கியது. மலையகத் தோட்டங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா அடிக்கடி தலையிட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை உத்திரவாதப்படுத்த முனைந்தது. மருத்துவ வசதிச் சட்டம், கல்வி சகாயச் சட்டம், தொழிலாளர் சட்டம், சம்பளச் சட்டம் ஆகியவை 1912 முதல் 1927 வரை இலங்கை அரசினால் நிறைவேற்றுவதை இந்தியா உறுதிப்படுத்தியது.



மனிதர்கள் முன்பு செல்லாத அடர் காடுகளை நோக்கிய மலையக மக்களின் காலடியும், அந்தக் காட்டைப் பண்படுத்திய கைகளும் இல்லாவிட்டால் அங்கே தோட்டங்கள் உருவாகியிருக்காது. கடுமையான சூழலுக்குள் தம் உடலை நிலத்தில் உரமாக்கியபடிதான் இலங்கையின் முதல் ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் உற்பத்தியை உருவாக்கினார்கள். அவர்கள் கால் படதா, கை தொடாத, உடல் விதையாகாத மலையகம் எதுவுமில்லை. இந்த மண்ணை வளமாக்கிய போது இறந்தவர்களில் எண்ணிக்கை கணக்கற்றது. 1926 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டளைச் சட்டம் ஒன்றின் படி ஆரம்பத்தில் மலையகம் வந்தவர்களின் 100 க்கு 40 பேர் சூழல் சார்ந்து இறந்ததை உறுதி செய்கின்றது. 1841 க்கும் 1849 க்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவீதத்தினர் துர்மரணம் எய்தியதாக கொழும்பு அப்சர்வர் தனது பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. (1980 முதல் இலங்கையில் நடந்து வரும் விமானத் தாக்குதல்களும், நிலக் கண்ணி வெடிகளும் நிரம்பிய ரத்த மயமான இனப்போரினால் இறந்த மக்களைக் காட்டிலும் இந்தத் தொகை அதிகம்) 1837 ஆம் வருடம் 4,000 ஏக்கராக இருந்த காஃபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராகப் பெருகியது. இதற்கிடையில் 1860 இல் தேயிலை பயிரிடுதல் சிறு அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1870 களில் பூச்சிகள் தாக்கி காஃபி பயிருக்குப் பெரும் சேதம் விளைவித்த போது அவை ஒட்டுமொத்தமாக தேயிலைத் தோட்டங்களாக மாற்றம் கண்டன. 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.



அதற்கு முன்பாக சிலோனின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல வேலைகளில் இந்த மக்கள் ஈடுபட்டனர். பாலங்கள், சாலைகள், இருப்புப் பாதை நிர்மாணம் ஆகியவற்றில் இவர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. காஃபி மற்றும் தேயிலை சாகுபடி மூலம் ஈட்டப்பட்ட ஒவ்வொரு காசிலும், அவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் முன்னேற்றங்களின் பின்னாலும் மலையக மக்களின் வரலாறு ஓசையின்றிப் பதிந்திருக்கிறது. உலகெங்கும் பருகிய மற்றும் பருகும் காஃபி மற்றும் தேநீரின் சுவையில் இந்த மக்களின் இரத்தத்தின் வெப்பமும், வியர்வையின் கசப்பும் கலந்திருக்கின்றது. இந்தத் தகவல்களை எல்லாம் எதற்காக இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால், இத்தகைய அளப்பரிய தியாகம் செய்து இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, அந்தத் தீவின் ஏற்றுமதிக்கு மாபெரும் தூணாக விளங்கும் தேயிலை சாகுபடியை உருவாக்கிய மலையக மக்களுக்குப் பிற்காலத்தில் எத்தகைய துரோகம் இழைக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான்.



ஆக இலங்கையின் தற்போதுள்ள தமிழர்களை பாரம்பரிய ஈழத் தமிழர்கள் என்றும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'இந்திய வம்சவழித் தமிழர்கள்' என்றும் பெரும்பான்மை சிங்களர்கள் வகைப்படுத்துகின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வடகிழக்குப் பகுதியான தமிழர்களில் பாரம்பரிய நிலப்பகுதியில் வசிக்கிற அதே வேளை இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு நடுவில் மலையகத்தில் வசிக்கின்றனர். இது தவிர இலங்கையில் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தாய் மொழியாக தமிழே இருந்த போதும் தங்களைத் தனியான கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு இனக் குழுவாகவே உணர்கின்றனர். இப்படி இலங்கைத் தீவில் உள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று தனித்தனியே பிரித்துப் பேசி விட்டு மண்ணின் மைந்தர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சிங்கள இனம் எது?



சிங்கம் ஒன்று இளவரசி ஒருத்தியோடு உடலுறவு கொண்டு அதன் மூலம் தோன்றிய இனம்தான் சிங்கள இனம் என்று சிங்களப் புராணங்கள் ஒரு பக்கம் கூறினாலும், சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 486 ஆம் ஆண்டு சிங்கள இனம் உருவானதாகத் தெரிவிக்கின்றனர். மொட்டையடித்து நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசன் கி.மு. 486 இல் தனது எழுநூறு ஆதரவாளர்களுடன் இலங்கைத் தீவில் வந்திறங்கினான். தமிழ் மன்னன் எல்லாளன் வீழ்வதற்க்கு முன்னூறு ஆண்டுகள் முன்னர் இது நடந்தது. மகாவம்சம் முதலிய பிராதனச் சிங்கள நூல்களே கூட விஜயன் வருகைக்கு முன்பே நாகர்கள், யாக்கர்கள் என்ற பெயரில் திராவிட அரசுகள் இலங்கைத் தீவில் இருந்ததை வேண்டா வெறுப்பாக உறுதி செய்கின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல சிங்கள மக்களைப் பொறுத்த வரை இலங்கைத் தீவைக் "கண்டுபிடித்தது" விஜயன்.



ஆக அசோகச் சக்கரவர்த்தி புத்த மதத்தைத் தழுவும் முன்னரே விஜயன் இலங்கைத் தீவை அடைந்து சிங்கள வம்சத்திற்கு வித்திட்டான். விஜயன் இலங்கையில் அடியெடுத்து வைத்து சிங்கள இனத்தை உருவாக்கிய 59 ஆண்டுகளுக்குப் பிறகு அசோகச் சக்கரவர்த்தியின் மைந்தன் மகிந்தன் புத்த மதத்தைப் பரப்புவதற்காக கி.மு.427 இல் இலங்கையை அடைந்தான். இவ்வாறாக புத்த மதம் இலங்கைத் தீவிற்கு அறிமுகமானது.



எது எப்படியோ, தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர் இலங்கையை ஒரே தேசமாகத் தைத்துக் கோர்த்தனர். பல மன்னர்கள், ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தையும் அவர்கள் அப்படித்தான் உருவாக்கினார்கள். ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு கனத்த வேறுபாடு இருந்ததை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் பல மொழி பேசுகிற, பல ராஜாக்களால் ஆளப்பட்ட, பல இன மக்களையும் ஒரே நிர்வாகக் குடையின் கீழ் கொணர்ந்தனர். மேலும் இந்து மதம் தேசம் முழுமைக்கும் பொதுவாக இருந்தது. அதே போல முஸ்லிம் மக்களும் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். ஆனால் இலங்கை அப்படியல்ல. அங்கு தமிழன் ஒருவனை பெளத்தனாகக் காண்பது அரிது. அதே போல சிங்களவனில் ஒருவன் கூட இந்து கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரு ராஜ்ஜியங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டே இருந்தன. சிங்கள வரலாறு நெடுகிலும் தமிழர்களை எதிரிகளாகவே சித்தரித்து வந்திருந்தது. இருவருக்கும் தனித்தனி மொழி, கலாச்சாரம், சமயம், ராஜ்ஜியம் என்று ஒன்றுகூட ஒத்து வராத முரண்பாடு. ஆங்கில ஆட்சியின் கீழ் ஒரே தேசமாக இலங்கை மாறினாலும் அந்த முரண்பாடு ஆழமாக ஓடிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும் என்று பின்னர் நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.



ஆனால், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் பொழிலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கான அதன் பிராந்திய முக்கியத்துவமும், இங்கிலாந்திற்கும் ஏனைய ஐரோப்பாவிற்கும் புத்துணர்ச்சியளித்த சிலோன் தேயிலையின் தனித்துவமும் இலங்கைக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலப் பேரரசின் மணிமகுடமாக இந்தியா விளங்கியது. இலங்கையை 'இந்தியப் பெருங்கடலின் முத்து' என்று ஆங்கிலேயர் சொல்லி மகிழ்ந்தனர்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 2

கடைசி விருந்து
- சுகிர்த்தராணி


விதைகளற்ற பழுத்த கனி ஒன்று
என்னிடம் தரப்பட்டது

நீலவெளிச்சப் பின்னணியில் அதைப்பற்றிய
ரகஸியங்கள் என் காதில் ஓதப்பட்டதும்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வ தென்று
எனக்கு தெரியவில்லை
உன் நா வறட்சி அடையும்போது
வித விதமான சாறு பிழிந்து தரவேண்டுமாம்

பட்டாம்பூச்சியின் தாவலைப் போல
பிழிவதும் குடிப்பதும்
ஆரம்பத்தில்ல் கலையாக இருந்தது

பின்பு உறங்கும் வேளையில் கூட
உன் வாய் சாறு நிரம்பியதாகவும்
உனதொருகை குவளையை
இறுக்கியதாகவும் விளங்கின

காலாவதியான சுரங்கத்தின் உட்குடைவாய்
கனியின் பகுதிகள் பொலிவிழந்த பின்னும்
குடிப்பதற்குக் கேட்கின்றாய்

என்மீது உருண்ட திரண்ட
உன் பிரியத்தையே பிழிந்து தருகின்றேன்
அது விஷச்சாறாகவும் இருக்கலாம்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி 1

2007 அக்டோபர் 22ஆம் தேதி. எங்கிருந்து வந்தது என்று கணிக்க முடியாத விமானங்கள் இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமான அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த 18 விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் பெறுமான விமானங்களை இலங்கை அரசு இழந்தது. இலங்கை இராணுவம் இயலாமையின் வெளிப்பாடாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இருபது புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் காட்சிக்கு வைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.

உலகத்தையே மூக்கின் மீது விரலை வைக்கச் செய்த துணிகரமான இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் 'ஆபரேஷன் எல்லாளன்' என்று பெயரிட்டனர். யார் இந்த எல்லாளன்? அனுராதபுரத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஏன் அவன் பெயர் வைக்கவேண்டும்? அனுராதபுரத்திற்கும் எல்லாளனுக்கும் என்ன தொடர்பு?

இலங்கைத் தீவின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு இலங்கைத் தீவை 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட தமிழ் மன்னன்தான் 'எல்லாளன்'. கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை அவர் ஆட்சி புரிந்தார். இறுதியில் கி.மு. 161 இல் துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் எல்லாளனை வீழ்த்தினான். எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு தனது அரசிற்கு சிங்கக் கொடியை நிர்மாணித்துக்கொண்டான். தற்போதையை இலங்கைக் கொடியிலும் சிங்கம் உள்ளதைப் பற்றிய தனிக் கதை பின்னர் காத்திருக்கிறது. எல்லாளன் வீழ்ந்த காலம் தொட்டு அனுராதபுரம் சிங்கள அரசுகளின் தலைநகராகத் திகழ்ந்தது. இன்றைய வரலாறு, குறிப்பா சிங்கள வரலாறு, அனுராதபுரத்தை புராதனச் சிங்கள பவுத்தத் தலமாகப் பதிவு செய்கிறது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மாஹாநாமா என்ற புத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய மாகாவம்சம் என்ற புத்தப் புராண நூல் எல்லாளனை வில்லனாக அடையாளம் காட்டி மகிழ்ந்தது. சிங்களத்தை புத்த மதத்தின் பாதுகாவலனாகப் போற்றிப் புகழ்ந்து, தமிழ் மக்கள் மீதும் மன்னர்கள் மீதும் இந்து மத நம்பிக்கை மீதும் வெறுப்பை உமிழ்ந்து சிங்கள இனவாதத்தை உருவாக்கியதில் மாகாவம்சத்திற்கு முக்கியப் பங்குண்டு. அன்பையும், சகோதரத்துவத்தையும் போதித்த புத்த பிரானின் வழிவந்த துறவிகள் தங்கள் பிழைப்புக்காகவும், செல்வாக்கைத் தக்க வைப்பதற்காகவும் இனத் துவேஷத்தை விதைத்த அலவத்தை மஹானாமா அரங்கேற்றினார். சிங்கள பெளத்த இனவாதத்தின் வேர் மஹாநாமாவில் இருந்து ஆரம்பிக்கிறது.

மேற்கொண்டு பேசும் முன்பு தற்போதைய இலங்கையின் பிராந்தியங்களைப் பற்றிய சிறு அறிமுகம் தேவைப்படுகிறது. இந்தியாவைப் போல சமஷ்டி (ஃபெடரல்) அமைப்பு இலங்கையில் கிடையாது. சமஷ்டி அமைப்பிலே மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும். அதற்கென்று சில அதிகாரங்கள் உண்டு. அதைத் தவிர மாநில அரசுகளும் உண்டு. அவற்றுக்கென்று சில அதிகாரங்கள் உண்டு. நிலச் சட்டங்கள், கல்வி, மாநில அளவிலான வரிகள், பட்ஜெட், பிரத்யேக காவல் துறை என்று பல சுய நிர்ணய உரிமைகள் மாநிலத்திற்கு உண்டு. இந்தியா, அமெரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய சமஷ்டி அமைப்பைக் காண்கிறோம். ஆனால் இலங்கையில் நடைமுறையில் உள்ளது யூனிடரி சிஸ்டம். அங்கே சிங்களர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு அரசு மட்டும் கொழும்பு நகரில் இருந்து இயங்குகிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என்று பிராந்தியங்கள் உள்ளது போல இலங்கையில் கீழ்க்கண்ட 9 பிராந்தியங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன.

1. மத்திய மாகாணம்
கண்டி, Matale, Nuwara Eliya ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
2. கிழக்கு மாகாணம்
அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
3. வட மத்திய மாகாணம்
அனுராதபுரம், Polonnaruwa ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
4. வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது
5. வட மேற்கு மாகாணம்
Kurunegala, புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
6. Sabaragamuwa மாகாணம்
Kegalle, ரத்னபுரா ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
7. தெற்கு மாகாணம்
Galle, Hambantota, Matara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது
8. உவா (Uva) மாகாணம்
Badulla, Moneragala ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது
9. மேற்கு மாகாணம்
கொழும்பு, Gampaha, Kalutara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது

அனுராதபுரத்தில் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்தாலும் அவனால் வடக்குப் பிராந்திரத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இயலவில்லை. சொல்லப்போனால் 2,500 ஆண்டு கால இலங்கை வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்து வந்திருக்கின்றன. அதில் ஒரு அரசு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் அரசாகத் திகழ்ந்தது. பராக்கிரம பாபு என்ற சிங்கள மன்னன் காலத்தைத் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆண்டு வந்திருக்கின்றனர். 1972 க்கு முன்னர் சிலோன் என்று அறியப்பட்ட இலங்கை சங்க காலத்தில் 'ஈழம்' என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பத்தாம் நூற்றாண்டில் ராசராசச் சோழனிடம் பெளத்தத் துறவிகள் இலங்கையின் மணிமகுடத்தை அளித்து புத்த மதத்தைத் தழுவுமாறு வேண்டியதாகவும், அப்படி ஏற்றுக்கொண்டால் அவரை இலங்கையின் வேந்தனாக முடிசூட்டுவதாக உறுதியளித்ததாகவும், அரசியலும் சமயமும் தனித்திருக்க வேண்டுமென்று கூறி ராசராசன் மறுத்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது. மதம் கலந்த ஆட்சியை ராசராசன் தவிர்த்தாரே ஒழிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் நோக்கம் இல்லாமலில்லை. ராசராசனின் மைந்தன் ராஜேந்திரச் சோழனால் கி.பி. 1017 இல் சிங்கள மன்னன் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டு ஒட்டு மொத்த இலங்கைத் தீவும் சோழப் பேரரசின் அங்கமாக மாறியது.

1505 இல் போர்ச்சுக்கீசியர்கள் இலங்கைத் தீவிற்கு வந்த போது இலங்கையில் மூன்று அரசுகள் நிலவின. தெற்கே கோட்டி அரசும், மத்திய மலை நாட்டில் கண்டி ராஜாங்கமும், பரராஜசேகரன்(1469-1511) என்ற மன்னன் ஆட்சியில் யாழ்ப்பாணத் தமிழ் அரசும் இருந்தன. கோட்டி சிங்கள ராஜ்ஜியம் 1597 இல் போர்ச்சுக்கீசியரிடம் வீழ்ந்தது. அதே போர்ச்சுக்கீசியர்கள் 1619 இல் சங்கிலி குமாரன் என்ற மன்னனைத் தோற்கடித்துக் கடைசி யாழ்ப்பாண ஈழ அரசைக் கைப்பற்றினர். சங்கிலியனைத் தூக்கிலிட்டனர். யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் பரவலாக நம்பப்படுகிறது. கோவா போர்ச்சுக்கீசியக் காலனியாக விளங்கியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

போர்ச்சுக்கீசியரை விரட்டுவதற்காக ராஜசிங்கா II என்ற கண்டி மலை தேசத்து சிங்கள மன்னன் 1638 இல் செய்துகொண்ட உடன்படிக்கையின் பேரில் டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவிற்கு வந்தனர். வந்து கடலோரப் பகுதிகளான கோட்டி மற்றும் யாழ் அரசுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒல்லாந்தார் எனப்படும் டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்காக மாபெரும் கோட்டை ஒன்றைக் கட்டி எழுப்பினர்.

1795 இல் பிரிட்டிஷ் துருப்புகள் திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்கின. படிப்படியாக ஆங்கிலேயர் ஆதிக்கம் இலங்கையில் பரவியது. 1796 இல் டச்சுக்காரர் விரட்டியடிக்கப்பட்டனர். சூரியனே மறையாக மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் பிரிட்டிஷ்காரர்களுக்கு சின்னஞ்சிறு இலங்கைத் தீவின் மீது என்ன அக்கறை, அதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி நமக்கெல்லாம் எழுவது இயற்கை.

இலங்கை சின்னஞ்சிறு தீவாக இருந்த போதிலும் பூகோள முக்கியத்துவம் மிகுந்தது. பாரம்பரியத் தமிழர் பகுதியான கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, ஆழமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும். திருகோணமலைத் துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ, இந்தியப் பெருங்கடலே அவர்கள் வசம் என்று பிரெஞ்சு மாமன்னன் நெப்போலியன் ஒரு முறை கூறினார். பிற்காலத்தில் (1980 கள் மற்றும் அதன் பிறகு) அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கையோடு ராணுவ ரீதியாக உறவாடியதற்கு இதுவே முக்கியக் காரணம். 1987 இல் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உருவானதென்று சொல்லப்படுகிற ராஜீவ்-ஜெயவர்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கூட திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் நலனுக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகளின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்ற ஷரத்து முக்கியமானதாகும்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்தியா மிகவும் இன்றியமையாயது. பிரான்ஸ் இந்தியாவின் மீது படையெடுக்கக் கூடும் என்று அஞ்சிய இங்கிலாந்து டச்சுச்சாரர் வசமிருந்த இலங்கையைக் கைப்பற்றியது. இதைப் பற்றி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய இளையபிட் (Younger Pit), "நமது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு இலங்கையைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்துள்ள பிரிட்டிஷ் அடிமை நாடுகளுள் மிகவும் பயனுள்ள நாடு இலங்கையேயாகும்" என்று அவர் செம்மாந்து கூறினார். (இந்துமாக் கடலில் இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் இரண்டாம் உலகப் போரிலும் உணரப்பட்டது. அதைப் பின்னர் காண்போம்)

கடலோரப் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வீழ்ந்த போதிலும் கண்டி ராஜ்ஜியம் 1815 வரை நீடித்தது. கடைசி கண்டி மன்னனை சிங்கள அரசன் சொல்லி என்று வரலாறு திரிக்கப்படுவது சிங்கள இனவாதத்தின் அப்பட்டமான கயமைத் தனமாகும். கண்டி ராஜ்ஜியத்தின் கடைசி அரசனாக விக்ரமராஜசிங்கன் என்ற சிங்களப் பெயரில் தமிழ் மன்னரே ஆட்சி செலுத்தினார். அவருடைய இயற்பெயர் கண்ணுசாமி. சூழ்ச்சியின் காரணமாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் அகப்பட்டு தமிழகத்தின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1832 ஆம் ஆண்டு தனது 52 ஆவது வயதில் விக்ரமராஜசிங்கன் மரணமடைந்தார். கண்டி சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பிறகு இலங்கைத் தீவு முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு முன்பாகவே விக்ரம ராஜசிங்கனின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பெரும் செல்வாக்குப் படைத்த பத்து சிங்களப் பிரதானிகள் 1815 மார்ச் 2 அன்று Kandyan Convention என்ற பெயரில் கண்டி தேசத்தை ஆங்கிலேயருக்கு ஏகமனதாகத் தாரை வார்த்துத் தந்தனர். அவர்களில் பிற்காலத்தில் இலங்கையின் அதிபராகப் பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவின் கொள்ளுப்பாட்டன் ரத்வட்டே (Ratwatte) குறிப்பிடத்தக்கவர்.

கெப்பட்டிபொல திசாவ என்ற வீரன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக திரிக்கப்பட்ட நிகழ்கால வரலாற்றில் குறிக்கப்படுகிறான். ஆனால் இவன் 1819 ஆம் ஆண்டு புரட்சியின் போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி துரைசாமி என்ற தமிழனுக்கு முடிசூடவே போராடினான். இது வரலாற்றில் மறைக்கப்பட்டது.

சிங்கள வெறியர்களின் தமிழ் வெறுப்பு அவர்கள் ஆங்கிலேயரோடு செய்துகொண்ட Kandyan Convention இல் வெளிப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்கள் கண்டி ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்குக் கூட ஆங்கிலேயர் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட முரணான பின்னணியில் ஆங்கில ஆட்சியாளர்கள் 1833 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி கோல்புரூக்(Colebrooke) கமிஷனின் பரிந்துரையை ஏற்று இலங்கைத் தீவு முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தனர்.

அதற்கு முன்பு போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கண்டி தேசம் நீங்கலாக இலங்கைத் தீவின் பிற தமிழ், சிங்களைப் பகுதிகளைத் தம் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலும் வரலாற்று ரீதியாக மதம், மொழி, பாரம்பரியம், நிலப்பரப்பு என்று எல்லா வகையிலும் தனித்துவம் வாய்ந்த சிங்கள மற்றும் தமிழ் தேசங்களைத் தனித்தனியாகவே நிர்வகித்தனர். கி.மு. 200 ஆம் ஆண்டு கிரேக்கர்கள் தயாரித்த உலக வரைபடத்தில் 'அறியப்பட்ட உலகத்தின் தெற்கு முனை' என்ற பொருள் கொண்ட Taprobane எனும் கிரேக்க வார்த்தை மூலம் குறிக்கப்பட்ட இலங்கைத் தீவை ஒரே நிர்வாகத்தின் கீழ் 'சிலோன்' என்ற பெயரின் கீழ் கொண்டு வந்து 1833 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் வரவாற்றுத் திருப்பத்தை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்

செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்

உங்களில் பலருக்கு செல்லமுத்து குப்புசாமி பற்றித் தெரிந்திருக்கும். கரையோரம், பங்கு வணிகம் மற்றும் NEXT INDIA ஆகிய மூன்று வலைப் பதிவுகளைப் பேணி வருகிறார்.
http://karaiyoram.blogspot.com
http://panguvanigam.blogspot.com
http://nextindia.blogspot.com

இப்போது சத்தமில்லாமல் இயங்கும் பதிவர். அவரது வலைப்பதிவு career (அப்படி ஒன்று இருக்கிறதா?) இன் உச்ச கட்டமாக முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட 'அண்ணியின் அணைப்பில்' என்ற கதையைக் கூறலாம்.
http://karaiyoram.blogspot.com/2006/06/blog-post_30.html

ஷேர் மார்க்கெட்டில் நட்டமில்லாமல் இலாபம் ஈட்டுவது குறித்து அவர் எழுதிய 'இழக்காதே' புத்தகம் நவீனத் தமிழ் 'நான்பிக்ஷன்' எழுத்தில் மிக முக்கியமான மைல் கல். 2006 ஆம் வருடம் சென்செக்ஸ் 12 ஆயிரம் புள்ளியில் இருந்து 10 ஆயிரமாகச் சரிந்த போது எழுதிய இந்த நூல், 2008 இல் 21 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாகச் சுருங்கிய போதும் பொருத்தமான ஒன்றாகவே நிற்கிறது.

செல்லமுத்து குப்புசாமியின் இன்னொரு புத்தகம் 'வாரன் பஃபெட் - பணக் கடவுள்'. சிறு வயதில் பேப்பர் போட்டுச் சம்பாதித்த வாரன் பஃபெட் உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் ஆன கதையை, அவரது வாழ்க்கையை தெளிவாகப் பதிவு செய்திருக்கும் நூல்.

http://www.kamadenu.com/cgi-bin/authour_search.cgi?authname=Chellamuthu%20Kuppusamy

நமது பண்புடன் குழுமத்திற்காக ஈழப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியை ஏழு கட்டுரைகளில் ஒரு மினி-தொடராகத் தருகிறார்