தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்
- நந்தா
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/6ef72f87eaf41bfc/b4b3ec78c1cd3017?lnk=gst&q=%E0%AE%AE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#b4b3ec78c1cd3017
மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு
பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும்,
விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள
"நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்" இந்த கட்டுரை இதற்கான மறு
பார்வையை எழுதச் சொல்லி எனக்குள் தூண்டியிருக்கிறது.
இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா ஒரு மோசமான சூழலால்
கட்டுண்டிருக்கிறது. இந்த, இந்த அபத்தங்கள் இப்போது ஆரம்பித்தது என்று
குறிப்பிட்டுச் சொல்லுபடியாய் இல்லாமல், தொன்று தொட்டு நெடுங்காலமாய்
இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. மறைமுகமாய் தமிழ் சினிமா, கலாச்சாரம்
என்ற சொல்லாடலை உபயோகப்படுத்தி, மெல்ல மக்களிடையே ஏற்படுத்தி
வைத்திருக்கும் கருத்தியல்களையும், அல்பத்தனமான உணர்ச்சிகளையும், இவை
எவற்றையும் விட, விகாரமாய் நிறுவி வைத்திருக்கும் கட்டமைப்புகளையும் நாம்
மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறோம். சொல்லப்போனால் இதுவே
வெகு தாமதம் தான். "Any how,It's better late than never".
யமுனா ராஜேந்திரனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பல
விஷயங்களைக் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ள வேண்டியவைதான். அது தமிழ் சினிமா
குறித்தான சரியான சொல்லாடல்கள் இல்லை எனும் கவலை, உலக சினிமா என்பதற்கு
தமிழ் சினிமா அறிவு ஜீவிகளின் புரிதல், திரைப்பட விழாக்களின் பின்னாலான,
வர்த்தக நோக்கம், திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின்
பின்னே நிலவும் அரசியல், என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.
இது குறித்தான அவரது புரிதல்களை அவர் வெளிப்படுத்தும் போது சினிமாவை
நேசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும், மேலதிகமாய் ஒரு கவலை ஏற்படும் என்பது
உண்மையே.
ஆனால் இவரது இந்த கட்டுரையில் ஒரு சில இடங்களில் மட்டும் நாம் முரண்பட
வேண்டி இருக்கிறது. "தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான
தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை." என்று ஆரம்பித்து, இன்று ஒரு
சிலரால் "தீவிர விமர்சகர்கள்" என்று கொண்டாடப்படுபவர்கள் மீதான இவரது
காட்டமான விமர்சனங்களைக் குறித்து பேசும் போது நாம் சற்றே மாறுபட
வேண்டியுள்ளது. அதற்குக் காரணங்களும் உள்ளது.
தமிழ் சினிமாவின் தற்போதைய அறுவறுப்பான சூழ்நிலைக்கு ஓர் முக்கிய காரணம்
சரியான விமர்சன சூழல் இல்லாததும் கூட. இன்றும் எங்கள் ஊர்களில் திரை
விமர்சனம் என்பது, சன் டீவியின் விமர்சனமாகவோ, குமுதம் அல்லது ஆ.வியின்
விமர்சனமாகவோ மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. சற்றே முன்னேறிய
அல்லது கணிணி வல்லுநர்களுக்கு மேலதிக வாய்ப்பாக இணையத்தில் ஆங்காங்கு
எழுதப்படும் பதிவுகள் மற்றும் ஏதேனும் பொழுது போக்குத் தளங்களின்
விமர்சனங்கள் (இதற்கும் ஆ.வி டைப் விமர்சனத்திற்கும் அதிக
வித்தியாசமில்லை) கிடைக்கிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு வெகு ஜன ஊடகங்களில் எழுதப்படும் திரை
விமர்சனங்கள், பல்வேறு அரசியல்களினடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன.
குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குநர் அல்லது கதாநாயகன்,
போன்றவர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊடகத்திற்குமிடையேயான
நட்புறவினடிப்படையிலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. உனக்கும்
வேண்டாம், எனக்கும் வேண்டாம் 100 க்கு 40 மார்க் போடறேன் எடுத்துக்கோ
என்ற தொனியில் எழுதப்படும் இத்தகைய விமர்சனங்களில் நிறைந்துள்ளப்
போலித்தனங்களைப் பார்க்கையில் ஒரு வித ரௌத்ரம் ஏற்படுகிறது.
அறந்தை நாராயணன் போன்றோ ஏற்படுத்திக் கொடுத்த விமர்சன சூழல், சமீப
காலங்களில்தான் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. சாரு, அ.ராமசாமி, எஸ்.ரா,
யமுனா, ப.திருநாவுக்கரசு, விஸ்வாமித்ரன், தியோடார் பாஸ்கரன்,வெங்கட்
சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, காஞ்சனை சீனிவாசன், பாமரன்,
பிஸ்மி,போன்ற விமர்சகர்களும், திலகவதி, செழியன் போன்றோரின் உலக சினிமா
பற்றிய நூல்களும் கொஞ்சமேனும் வாசகர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.
இவர்கள் ஒவ்வொருவரும் மார்க்சிய சார்பு, திராவிட சார்பு,அழகியல்
விரும்புபவர்கள், விளிம்பு நிலை பார்வையாளர்கள்,என ஒவ்வொரு தளங்களில்
இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களே. தான் சார்ந்த அரசியல்
சித்தாந்தங்கள் இவர்களது விமர்சனங்களிலும் எட்டிப்பார்த்துக்
கொண்டுதானிருகிறது.
அது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பராசக்தி குறித்த திராவிட பார்வையாகட்டும்,
அல்லது யமுனாவின் மார்க்சிய பார்வைகளாகட்டும் ஒவ்வொருவரும் தனது சார்பு
நிலையை வெளிப்படையாகவே தெரிவித்து கட்டுரைகளும், விமர்சனங்களும், எழுதிக்
கொண்டிருப்பவர்களே. இங்கே நெருடலே யமுனா இடது சாரி விமர்சனச் செயல்பாட்டை
ஒட்டு மொத்தமாய் முன் நிறுத்தி, பிற அரசியல் சார்புகளையும், காலச்சுவடு
எழுத்தாளர்கள் என்று சொல்லி தியோடார், அ.ராமசாமி போன்றவர்களயும், இன்ன
பிற காரணங்களுக்காக எஸ்.ரா, சாரு போன்றவர்களையும் எளிதில் புறம்
தள்ளுவதுதான்.
நிற்க. கருத்தியல் அடிப்படையில் இந்த விமர்சகர்கள் அனைவரும், எல்லா
படங்களுக்கும், வெகு ஜனநாயகமான, முன் மதிப்பீடுகளற்ற, நடு நிலை
விமர்சனங்கள் தான் எழுதி இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வர வில்லை.
இந்த விமர்சகர்களின் ஒரு சில விமர்சங்களில் நிலவும் தேவையில்லாத
காட்டமும், காட்சி ஊடகம் என்பதை மறந்து வெறுமனே தான் சார்ந்த அரசியல்
சார்பை முன்னிறுத்தி, வெறுப்பினை உமிழும் சில சந்தர்ப்பங்களையும் நாம்
அறிந்துதான் இருக்கின்றோம். இது யமுனாவிர்கும் பொருந்தும்.
தமிழ் சினிமா இப்போதிருக்கும் நிலையில், இவர்கள் செய்யும் சிறு சிறு
பிழைகளை புறம் தள்ளி, இவர்களனைவரிடமிருந்தும், மேலதிகமாய் இன்னும் அதி
தீவிர செயல்பாடுகளை வேண்டி நிற்கும் சூழ்நிலையில் நாம் நிற்கின்றோம்.
ஏனெனில் இப்போது (என்னைப் பொறுத்தவரை) நம் முன் விரவி நிற்கும் முக்கியப்
பிரச்சினை விமர்சனங்கள் எத்தகைய தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்பதே
அல்ல. அதை விட பூதாகரமாய் தமிழ் சினிமாவின் அவலங்களும், அறுவறுப்புகளும்
நம் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன தமிழ் சினிமா
சூழல் கட்டமைத்து விட்டது?? இதெல்லாம் சும்மா அளவுக்கதிகமாய்
மதிப்பீடுகளைக் குறைத்து கூறும் ஒரு முயற்சி என்று எவரேனும் சொல்லலாம்.
ஆனால் இப்படியாய் நாம் கூறுவதற்கும் ஆதாரங்களாய் சில இருக்கத்தான்
செய்கின்றன.
நடிகைகள் அல்லது சதை வியாபாரிகள்:
தமிழ் சினிமாவில் நடிகைகளை வெறும் நுகர்வுப்பண்டமாக மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வருவதை என்னால் ஒரு உச்சக்கட்ட அறுவறுப்பான ஒன்றாகவே
பார்க்க முடிகிறது. பெண்ணியம் குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்களும்
கேள்விகளும் எழுப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது உச்சகட்ட
பாக்கியமாய்,"கதாநாயகனிடம் திட்டுக்களோ, அடியோ அல்லது இலவசமாய் தமிழ்
கலாச்சரம் பற்றிய உபதேசங்களையும் வாங்கிக் கொண்டு, அவனது காலைச் சுற்றிக்
கிடப்பதே" தனது லட்சியமாய் கொண்டு வாழும் அழகு பொம்மைகளையே கதாநாயகிகள்
என்று தமிழ் சினிமா சூழல் நமக்கு ஒரு புனைவை ஏற்படுத்தி இருக்கின்றது.
சத்யராஜ், சிம்பு,தனுஷ்,விஜய்,சரத்குமார் போன்ற கதாநாயகர்களின் பல
திரைப்படங்களில் நாயகிகள் ஏதாவது ஒரு பாட்டில், நாயகனின் காலைச் சுற்றிக்
கட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். இதை மதிக்காத ஓர் தோரணையில் நாயகன்
படு அலட்சியமாய், எங்கேயோ பார்த்த படி காலை விரித்த படி நின்றுக்
கொண்டிருப்பான். இந்த இடத்தில் நாயகி தனது நடிப்புத் திறமைக்கு விடப்பட்ட
சவாலாய் கருதிக் கொண்டு எவ்வளவுக்கெவ்வளவு விரகதாபத்தை தனது முகத்தில்
காட்ட வேண்டுமோ அவ்வளவு தூரம் முயற்சித்து நடித்திருப்பார். மிஞ்சி
மிஞ்சிப் போனால் அவருக்கு அந்த படத்தில் இதை விட சிறந்த ஓர் நடிப்புத்
திறமையை வெளிப்படுத்தும் ஓர் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
"உங்களுக்கெல்லாம் அம்மான்னு ஒரு ஸ்தானம் இல்லைன்னா மரியாதையே இருக்காது"
என்று தனது காதலியைப் பார்த்து விஜய் ஒரு வசனத்தை பேசியிருப்பார். அப்படி
கோபப்பட்டு கேவலமாய் நினைக்கும் எந்த ஒரு பெண்ணையும் தனது காதலியாய்
அல்லது மனைவியாய் ஏற்றுக் கொள்ள ஓர் அடிமட்ட மடையன் கூட நினைக்க
மாட்டான். ஆனால் தான் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு பெண்ணிடம் இது
போன்று பல முறைகள் அந்த படத்தில் விளாசியிருப்பார். இந்த வசனம்
சொல்லப்பட்ட போது, தியேட்டரில் இருந்த பெரும்பாலான கல்லூரி மாணவன்களும்
மூச்சு விடாமல் ஆரவாரம் செய்தார்கள். தனது டார்கெட் ஆடியன்ஸை
திருப்திப்படுத்தும் பொருட்டு தனது பெரும்பாலான படங்களில் இது போன்ற ஒரு
சில சீன்களை தொடர்ச்சியாய் கையாண்டுக் கொண்டிருக்கிறார் விஜய். அவர்
நடித்த சிவகாசி படம் இதற்கு இன்னொரு உதாரணம். எல்லாரும் கூடியிருக்கும்
ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு பெண்ணை Humiliate செய்வது என்பது சத்தியமாய்
ஒரு பொறுக்கித் தனமான செயலே.எந்த ஒரு சுய மரியாதையுள்ள பெண்ணும், தன்னை
அசிங்கப்படுத்தும் அப்படி ஒருவனை விரோதியாய்தான் பார்ப்பாளேயொழிய அவனுடன்
கட்டிப் புரண்டு, காதல் செய்ய நினைக்க மாட்டாள்.
ஆனால் தமிழ் சினிமா நமக்கு சுய மரியாதையுள்ள மற்றும் படித்த பெண்களை
கர்வக்காரிகளாகவும், அகம்பாவம் மிக்கவர்களாகவும், ஏழைகளையும்,
முதியவர்களை மதிக்காத திமிர் பிடித்தவளாகவுமே நமக்கு அடையாளப்படுத்தி
வருகிறது. பாலிவுட்டுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு சிறந்ததாய் தற்போது
விளங்குவது நம் கோலிவுட்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்
சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில், "அய்யா நம்ம சின்னம்மா பட்டணத்துல
படிப்பை முடிச்சுட்டு நாளைக்கு வர்றாங்களாம்" என்று சொல்லும் ஓர் ஒற்றை
வரியைத் தொடர்ந்து தொடங்கும் கதாநாயகியின் அறிமுகம். அவரது அறிமுக
காட்சியில் ஒன்று அவர் ஏதேனும் ஒரு சிறுமியையோ, அல்லது ஓர் முதியவரையோ
கோபம் கொண்டு அறைவாள் அல்லது தனது காரை அரை நொடி கூட பிரேக் போடத்
தயங்குபவளாய் ஏதேனும் ஓர் கோழியையோ, ஆட்டையோ சாகடித்துச் செல்லும், ஓர்
அற்ப பிறவியாகவே காட்டி வருகிறது.
இப்போ எல்லாம் எங்கய்யா இப்படி படம் எடுக்கிறாங்க? அது எல்லாம் இப்போ
இல்லை என்று கூற நினைப்பவர்க்கு நான் சொல்ல வருவது இதுதான். படித்த
அல்லது தான் சார்ந்த துறையில் திறமை மிக்கவர்களாய் இருக்கும் பெண்களை
இவ்வாறு கர்வக்காரிகளாகவும் அல்லது ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் ஓர்
அகம்பாவக்காரிகளாவும் காட்டிக் காட்டியே தமிழ் சினிமா மக்களின் மனதில்
விதைத்த நஞ்சுக்கள் ஏராளம். வெகு நிச்சயமாய் இது பெண்கள் குறித்தான ஓர்
மறைவான கட்டமைவு ஏற்பட காரணமாய் இருந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் ஒரே ஒரு
வித்தியாசம்தான். வில்லன் "உன்னை கற்பழிக்கிறேன்" என்று சொல்லி
கற்பழிப்பான். கதாநாயகன் "உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொல்லி
கற்பழிப்பான். அவ்வளவே. உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவும் கொண்டுச்
செல்லப்பட வேண்டும் என்று சொல்லி அதனடிப்படையில் நிகழ்த்தப்படவேண்டிய புற
மாற்றங்களாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களில் முக்கியமானவை, 2 1/2 மணி
நேரச் சினிமா என்பதிலிருந்து மாற்றுதல், காட்சிகளை இடைவேளைக்கு முன்,
பின் என்று பிரிக்காமல், இடைவேளையற்ற சினிமாவாக மாற்றுதல், பாடல்களற்ற
சினிமாவை உருவாக்குதல் என்று பல்வேறு விஷயங்களை விமர்சகர்கள்
முன்வைக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சிகளில்லா சினிமாவை எவர் ஏற்றுக்
கொள்ளக்கூடும். தனக்கு பிடித்த நாயகியின் பல்வேறு தாபங்களையும், கணவனின்
முன் மனைவி கூட செய்ய யோசிக்கும் உடல் அசைவுகளயும், க்ளோசப் ஷாட்டில்
நாயகியின் அங்கங்களையும், காதல் விளையாட்டுகளையும் பார்த்து
கிளர்ச்சியுறும் கூட்டமாய், ஒரு சமூகத்தையே, தமிழ் சினிமா மாற்றி
வைத்திருக்கும் இந்த சூழலில், பாடல்களில்லாமல் திரைப்படங்களா????
"போங்கடா போய் பொழப்பைப் பாருங்கடா" என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கோபம்
கொள்ளக்கூடும்.
தமிழ் சினிமா, தனது ரசிகர்களுக்கு செய்த ஒரு பெரும் தொண்டு, அவர்களை
"விசிலடிச்சான் குஞ்சுகளாக" மாற்றி வைத்திருப்பதுதான். சந்திரமுகி
திரைப்படத்தில், ரஜினியைப் பார்த்து, நயன்தாரா "இப்போ பேசாம போ…. போ"
என்று ஒருமையில் பேசுவார். இந்த காட்சி வரும் போது தியேட்டரில் பாதி
பேருக்கு மேல் "ஏய்ய்ய்ய்ய்" என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். தனது
ரசிகர்களின் உச்ச கட்ட ரசனையை தெரிந்துதானோ என்னவோ, அவர்களை சமரசம்
செய்ய, ரஜினியும், நயனைப் பார்த்து அடுத்த காட்சியில் "போடி" என்று
சொல்லி விட்டுப் போவார். அதன் பின்பே எங்கள் ரசிகர்கள் தலைவர் பழி
வாங்கிட்டார் என்ற அல்ப உணர்ச்சியுடன் சமாதானமடைவார்கள். தமிழ் சினிமா
கட்டமைத்த இத்தகைய ரசனையான சூழலிற்கு வெகு நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.
தாலி, கற்பு,கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ் சினிமா பெண்களுக்கும்,
கதாநாயகிகளுக்கும் மட்டும் என்று கட்டமைத்திருக்கும் விதிகள் ஏராளம்.
தாலி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், பாதி இயக்குநர்கள் திரைப்படங்களே
எடுத்திருக்க முடியாது. இவர்கள் தாலியை வைத்து இன்னும் பம்பரம் விடாதது
மட்டும்தான் பாக்கி. நாயகி தனது தாலியை அவிழ்த்தெறியும் போது, அடிக்கின்ற
கடல் அலைகள் நின்று விடுகின்றது, கூடு திரும்பும் பறவைகள் பறப்பதை
நிறுத்தி விடுகின்றன, "அய்யோ ஒரு கோபத்தில் நான் தாலியை அவிழ்த்தெறிந்து
விட்டேனே" என்ற எண்ணத்தில் நாயகி கதறி அழுகின்றாள்….டேய் என்னதாண்டா
பிரசினை உங்களுக்கு?? நீங்க எல்லாம் நார்மலாவே படம் எடுக்க மாட்டீங்களா
என்று நாம் கதற வேண்டியதாயிருக்கிறது. நாயகியின் தொப்புளை வைத்து என்ன
என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்தது போல், தாலியை வைத்து எப்படி
எப்படி எல்லாம் செண்டிமெண்டுகளை உருவாக்கலாம் என்று இவர்கள் யோசித்து
வைத்திருந்திருக்கிறார்கள். அதன் உச்ச கட்டமாக குஷ்பூ ஒரு படத்தில்
தாலியால் ஒருவனை கொலையும் செய்கிறார்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கற்பழிப்பு என்பதற்கான
தண்டனையாய் நம் தமிழ் சினிமா கிராம பஞ்சாயத்துக்கள் வழங்கி வந்த
தீர்ப்பு, "கெடுத்தவன் பொண்ணைக் கட்டிக்கணும்". ஒரு பொண்ணை நமக்கு
பிடிச்சுப் போச்சுன்னா, அவளுக்காக அலைய வேண்டிய தேவையில்லை. காதல் கடிதம்
எழுதி, அவள் வரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
"உன்னைத் தவிர வேறொரு பொண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என்று வசனம்
பேசத் தேவையில்லை. ஏன் அவளுக்கு ஒரு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கக் கூட
தேவையில்லை. வேறு என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள், அவளைக் கெடுத்துடலாம்.
அது எப்படி அவ்வளவு சாதாரண விஷயமா? அவள் தனியே இருக்க வேண்டுமே அதற்கு
என்கிறீர்களா?? அடப் போங்க சார், கல்லூரி லைப்ரரி, ஊர் ஆத்தங்கரை,
சவுக்குத் தோப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது? அங்கே தாராளமாய் துரத்திப்
பிடித்துக் கற்பழித்துக் கொள்ளலாம். சுடுகாட்டுல கூட ஒண்ணு ரெண்டு பேரை
நீங்க பார்த்து விட முடியும். எங்கள் ஊர் தமிழ் சினிமாக்களில் வரும்
இத்தகைய இடங்களில் மட்டும் நாய் கூட கண்ணில் படாது. இங்க இன்னொரு
விஷயமும் இருக்கு, அந்த பொண்ணை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னீங்கன்னா ஊரே
ஒண்ணு கூடி அருவாளைத் தூக்கிட்டு வந்து உங்க காதலை எதிர்க்கும். மாறா
அவளைக் கற்பழிச்சுட்டேன் என்று சொல்லி விட்டீர்களானால், ஊரே ஒண்ணு கூடி
இருவரையும் சேர்த்து வைத்து விடும்.
கற்பழிப்பு என்ற சொல்லாடலின் மூலம் தமிழ் சினிமா தமிழ் பெண்களுக்கு ஒரு
மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ள்ளது. கற்பு கெட்டுப்
போச்சுன்னா அவ தற்கொலை செஞ்சுக்கணும். வீரம் வெளைஞ்ச மண்ணு படத்தில
விஜயகாந்த் "என் தங்கச்சி எவனாலோயோ கெடுக்கப்பட்டான்னு ஊர்
சொல்லக்கூடாதுடா" என்று சொல்லி வில்லனை அடித்து கெடுத்து, சாகடிக்கப்பட்ட
தனது தங்கையின் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லுவார். இந்த காட்சி
காட்டப்பட்ட போது, விஜயகாந்த், பார்வையாளர்கள், தியேட்டர் ஆப்பரேட்டர்,
தியேட்டருக்கு வெளியே, விளக்குக் கம்பத்தில் காலைத் தூக்கி சிறுந்ர்
கழித்துக் கொண்டிருந்த நாய் என எல்லாருமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்.
சரி இப்போ எல்லாம் இது போன்ற படங்கள் முற்றிலுமாய் குறைந்து விட்டனவே.
தமிழ் சினிமா ஒன்றும் அவ்வளவு மோசமான சூழலில் இல்லை. இது எல்லாம் உங்களை
மாதிரி, மசாலா படங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் பேசும் உளறல் என்று
எவரேனும் சொல்லலாம். காட்சியமைப்புகள்தான் மாறியிருக்கின்றனவே தவிர,
கட்டமைப்புகள் மாற வில்லை. இன்றும் ஹரி, பேரரசு பட நாயகர்களால், தமிழ்
பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என்று ஆரம்பித்து, நாயகியிடம்
அறிவுரை கூறும் வசனங்கள் இடம் பெறத்தான் செய்கின்றன. இதைச் சொல்ல ஆண்
என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் கதாநாயகனுக்கு. வேறெதுவும்
தேவையில்லை.
பெண்ணின் உடலை மையமாய் வைத்து விவாதங்களும், வன்முறையும், கலாச்சார
மாற்றங்களும் இங்கே தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்ணின்
உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு அவலம்
தொடர்ச்சியாய் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
உடலரசியலினடிப்படையில் இதைப் பார்க்கும் போது இதன் பின்னே நிலவும்
நுண்ணரசியலும், அவை நிறுவ முயல்வதும் நமக்கு புலப்படும். தன்னுடைய உடலை,
அங்கங்களை (exhibitionism) வெளிக்காட்டி ஒரு ஆணை தன் கட்டுப்பாட்டில்
கொண்டு வர முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், பெண் மறைமுகமாய், தன்னுடைய
உடல் கூறுகளை வெளிச் சொல்லி, "ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த, அவளது
உடலடிப்படையில் மேற்கொள்ளும் தீண்டல்களே போதும்" எனும் கட்டமைவை தமிழ்
சினிமா மறைமுகமாய் ஏற்படுத்தி இருக்கின்றது. அப்படி இல்லா விட்டால்,
நம்மால், நாயகியை நாயகன் உடலளவில் அசிங்கப்படுத்தும் காட்சிகளைப்
பார்த்து சுரணையில்லாமல் ரசித்துக் கொண்டிருக்க முடியாது.
தமிழ் சினிமாவில் திருமணத்திற்கப்புறம் நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கையை
சொல்லி விடுங்கள் பார்க்கலாம். இதன் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான
ஆதிக்க உணர்வுகளை, உடல் ரீதியான தமிழ் சினிமாவின் அவலத்தை எவரேனும்
புரிந்துக் கொள்ள மறுக்கிறோம் என்றால், நாமும் நமது சுய தேவைகளுக்காக
பெண்களை உபயோகப் படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று கருதும், ஓர்
அப்பட்டமான ஆதிக்கவாதிதான் என்றுதான் அர்த்தப் படுத்தத் தோன்றுகிறது
எனககு.
நமீதா,ஸ்ரேயா, மாளாவிகா, மும்தாஜ், ரம்யா, வேதிகா போன்ற இததகைய
கதாநாயகிகளைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வே வருகிறது. இன்னும்
ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இவர்கள் தமிழ் சினிமாவில் நாயகிகள்
என்று சொல்லிக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கலாம். திரைப்படம் சார்ந்த
விழாக்களில் முடியும் வரை குறைவான ஆடைகளை அணிந்துக் கொண்டுப் போய்,
கேமெராக்களை தன் பக்கம் திருப்புமாறு செய்யலாம். நடு நடுவே
அருவிக்கரையிலோ அல்லது வயல் வரப்பிலோ (எந்த இடமாய் இருந்தால் என்ன),
முழுதாய் வேட்டி சட்டையையோ, பேண்ட் சட்டையையோ அணிந்த நாயகனுடன்
பிகினியுடன் "எந்த மரத்துக் கட்டை நீ" என்பது போன்ற வரிகளுடன்
ஆரம்பிக்கும் பாடலுக்கு சிரித்த படியே நடனமாடலாம். உன்னை பார்த்து
பார்த்து சலித்து விட்டது என்று தமிழ் ரசிகர்கள் இன்னொரு கதாநாயகியிடம்
மையல் கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில், தெலுங்குப்படத்திற்கோ அல்லது
ஏதேனும் ஒரு தொழிலதிபரையோ பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம்.
இத்தனை வருடம் லைம் லைட்டிலேயே இருந்துக் கொண்டு திடீரென்று ஒரு வீடும்,
காரும் ஷாப்பிங்கும், சமையலறை வேலைகளும் மட்டுமே தனது உலகமாய்
மாறிப்போனதனலான உளவியல் மாற்றங்களை நாயகி சரிவர புரிந்துக் கொண்டால்,
அவருடைய மண வாழ்க்கையாவது நிம்மதியாயிருக்கும். இல்லையெனில் குடும்ப நல
கோர்ட்டுகளில் ஒரு வழக்கை அதிகப்படுத்தி இன்னும் சில நாள் மீடியாக்களின்
காமெராக்களில் வலம் வரலாம். பின்பு அக்கா வேடம், சின்னத்திரை நாயகி வேடம்
என்று தனது வாழ்க்கையை ஒரு முற்றுப் பெறா பயணமாகவே முடித்துக் கொள்ளலாம்.
ஆண்டுக்கு குறைந்தது மூன்று கதா நாயகிகளாவது தற்கொலை செய்து கொள்வதன்
பின்னாலான உளவியல் மற்றும் உடல் சார் பிரச்சினைகளை ஏனோ தமிழ் சினிமா
புறக்கணித்தே வந்துக் கொண்டிருக்கிறது.
இப்பொழுதெல்லாம், "எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்"
என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க
உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.
பி.கு: சினிமா விமர்சகர்கள் குறித்தான காட்டமான பார்வைக்கு மறுமொழியாய்
ஆரம்பித்த இந்த கட்டுரை நாயகிகளின் அபலைத்தனத்தில் வந்து
முடிந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிரம்பி இருக்கும் அபத்தங்களின்
ஆரம்பம்தான் இது.இன்னும் இதைத்தாண்டி விமர்சகர்களின் பல்வேறு சார்பு
நிலைப்பாடு குறித்தும், பெண்கள் பிரச்சினைகளைத் தவிர்த்து, பொது
வெளியில் தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கும் வேறு சில அற்பத்தனங்கள்
குறித்தும், கலாச்சார மற்றும் பாசிச உணர்வுகள் குறித்தும் தொடர்ச்சியாய்
அடுத்த பகுதியில் பேசுவோம்.
பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 5
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : சமூகம், திரை விமர்சனம், பண்புடன் மீள்பதிவுகள்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 4
குற்றங்களின் ஊற்றுக்கண் இந்துமதம்!
- லக்கிலுக்
ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது.
வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் சேலையை மறைத்து அவர்களை ஆடையில்லாமல் அலையவிட்ட கிருஷ்ணனை ஈவ்டீஸிங் கேஸில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமா? ஆற்றுக்குள் அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருந்த பாம்பை கொன்ற கிருஷ்ணன் மிருகவதை சட்டத்தின் படி குற்றவாளிதானே?
போர் செய்துகொண்டிருந்தபோது வாலியை மறைந்திருந்து பேடித்தனமாக கொலைசெய்த ராமனை தூக்கில் போட்டிருக்க வேண்டாமா? இராவணனிடமிருந்து மீண்டு வந்த சீதையை சிதையிறங்க சொன்ன ராமனை பெண்கள் சிறப்பு காவல்நிலையத்தில் புகார் செய்து முட்டிக்கு முட்டி தட்டியிருக்க வேண்டாமா?
உலகை சுற்றிவரும் போட்டியென்று அறிவித்துவிட்டு உலகை சுற்றிவந்த முருகனுக்கு பரிசு தராமல், சிவன் பார்வதியை சுற்றிவந்து குறுக்குவழியில் விநாயகன் பரிசினை தட்டிச் சென்றது ஊழலல்லவா? அந்த ஊழலுக்கு துணைபோன நீதிபதியல்லவா சிவன்?
அகலிகை மீது மோகம் கொண்டு அவரது கணவர் போல வேடம்புரிந்து அகலிகையை கற்பழித்த தேவேந்திரனை கற்பழிப்பு குற்றத்தில் உள்ளே தள்ளி காயடித்திருக்க வேண்டாம்? ரம்பை, மேனகை, ஊர்வசி என்று சூப்பர் பிகர்களை தன் அவையில் வைத்திருந்த இந்திரன் கன்னட பிரசாத்துக்கு ஒப்பானவனா இல்லையா?
திருவிளையாடல் என்று கூறி பலவேடங்கள் போட்டு பூமிக்கு வந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த சிவனை மோசடி வழக்கில் கைது செய்திருக்க வேண்டாம்? பொருட்குற்றம் கண்டறிந்த நக்கீரனை கொலைசெய்த கொலைகாரனல்லவா சிவன்?
தவம் கிடந்த விசுவாமித்திரனை உறவுக்கு அழைத்த மேனகை மீது விபச்சார வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?
சொல்லிக்கொண்டே போகலாம்...
இவ்வாறாக இந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் குற்றங்களும், ஊழலும், விபச்சாரமும், கற்பழிப்பும், கொலையும், கொள்ளையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை வாசித்தும், கேட்டும் வளரும் சமூகத்தில் குற்றங்கள் மலிந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்? கடவுளர்களே செய்திருக்கிறார்கள், நாங்கள் செய்வதற்கு என்ன? என்ற மனோபாவம் தானே மக்கள் மத்தியில் இருக்கும்? புராணங்களிலும், இதிகாசங்களிலும் இவ்வாறெல்லாம் இருப்பதால் அவை பெரிய குற்றமல்ல என்று அம்மதம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இயல்பிலேயே ஊறிவிடுகிறது.
தர்மம், நெறி, நியாயம் இவற்றையெல்லாம் மனிதருக்கு ஒன்று, கடவுளருக்கு ஒன்று என்று சித்தரித்திருப்பதே இந்து மதத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை. இம்மதத்தை பொந்து மதம் என்றழைப்பதே சாலப்பொருத்தம்.
பதிவு செய்தது : பண்புடன் at 2 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, சமூகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 3
சென்னை பை நைட்!
- லக்கிலுக்
'பாரிஸ் பை நைட்' என்பார்கள். அந்த லெவலுக்கெல்லாம் சென்னை எப்போதும் இருந்ததில்லை, எதிர்காலத்தில் மாறலாம். பத்து, பதினைந்து ஆண்டுகளாக சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. சென்னைவாசிகளுக்கு தூக்கம் முக்கியம். பத்து மணி ஆனாலே அலாரம் அடித்தது மாதிரி தூங்கப் போய்விடுகிறார்கள் அல்லது சன் டிவியில் பத்தரை மணிக்கு படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். கால் சென்டர்களிலும், பிபிஓக்களிலும், பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும், விளம்பரத்துறையிலும், அச்சுத்துறையிலும், இன்னும் சில துறைகளில் பணிபுரியும் கோட்டான்கள் தவிர்த்து மீதி அனைவருமே தூக்கப் பிரியர்கள். செக்யூரிட்டிகளும், காவலாளிகளும் கூட உட்கார்ந்த இடத்திலேயே இங்கு தூங்கிப் பழகியவர்கள்.
ஓவராக குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வழி தெரியாதவர்களும், வானமே கூரையாய் வாழ்பவர்களும் பிளாட்பாரங்களில் ஒதுங்கி வாழ்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலை பிளாட்பார தூங்குமூஞ்சிகளை நிறைய கண்டிருக்க முடியும். 'சென்னை ஈஸ் எ காஸ்மோபாலிட்டன் சிட்டி, நேஸ்ட்டி அக்லி சிடிசன்ஸ்' என்று முகஞ்சுளித்தவர்கள் புண்ணியத்தால் இப்போது அண்ணாசாலை பிளாட்பார்ம்கள் வெறிச்சோடிப் போயிருக்கிறது. கே.கே.நகர், வடபழனி பிளாட்ஃபார்ம்கள் பரபரப்பாகியிருக்கிறது.
தினமலரில் பணிபுரிந்த காலத்தில் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் கால அண்ணாசாலை பரபரப்புக்கும், இப்போதிருக்கும் அண்ணாசாலை பரபரப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அப்போதும் சரி, இப்போதும் சரி ஸ்பென்சர்ஸ்க்கு எதிரில் இருக்கும் காவல்நிலையத்தை தாண்டுவது அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். அப்போதாவது பரவாயில்லை "ப்ரெஸ்சுங்க" என்று மிதப்பாக சொன்னால் சலாம் விட்டு அனுப்பி வைப்பார்கள். இப்போது "ப்ரெஸ்" என்று சொன்னாலும் டவுசரைக் கயட்டி செக் செய்து தான் அனுப்புகிறார்கள். பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு போய்விட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை, மைக்கேல் ஜாக்சனை உச்சபட்ச ஒலியில் அலறவிட்டுப் பறக்கும் நவீனரக கார்கள் வெற்றிகரமாக நிரப்புகின்றன. இரவுகளில் டூவீலர் மாதவன்கள் லேன் மாறி ஓட்டுவது உயிருக்கு ஆபத்து.
பிலால் இருந்தவரை நைட்டு ஒரு மணிக்கெல்லாம் கூட பிரியாணி சுடச்சுட கிடைக்கும். பிலால் இல்லாத குறையை அண்ணாசாலை மசூதிக்கு எதிரிலிருக்கும் ஒரு ஹோட்டல் சரிகட்டுகிறது. மதுரையில் அதிகாலை ஒரு மணிக்கு கூட இட்லி கிடைக்கும் என்பார்கள். சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம். பாண்டிபாஜார் டீலக்ஸை மட்டும் நம்பிப் போகலாம். தெருவோர பிரியாணி கடைகளும், கையேந்தி பவன்களும் கூட குடிகாரர்கள் தொல்லையாலும், போலிஸின் அதிகாரத்தாலும் பத்தரை மணிக்கே மூட்டை கட்டிவிடுகிறார்கள்.
கமிஷனர் சேகர் பதவி ஏற்றாலும் ஏற்றார், பலராம் நாயுடுவுக்கு வந்த சிக்கல்கள் மாதிரி சிக்கலோ சிக்கல். பிரஸ்மீட்களில் கம்பீரமாக முழங்கினாலும் சைக்கோ கொலைக்காரன் தண்ணி காட்டினான். போதாக்குறைக்கு பெங்களூர், ஆமதாபாத் குண்டுவெடிப்புகள் போலிசாருக்கும், சென்னைவாசிகளுக்கும் பீதியையும், பேதியையும் சமவிகிதத்தில் கொடுத்திருக்கிறது. பெண் போலிசாரை நைட் ரவுண்ட்ஸில் முன்பெல்லாம் காணமுடியாது. ஆள் பற்றாக்குறை போலிருக்கிறது. பெண் போலிசாரும் ஆங்காங்கே "வாயை ஊது!" என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பையை நோண்டி டிபன்பாக்ஸை திறந்து பார்க்கிறார்கள். குண்டுகள் கடத்த டிபன்பாக்ஸ் தான் சவுகரியம் போலிருக்கிறது.
சில நாட்கள் முன்பு நீண்டநாள் கழித்து சென்னையை இருசக்கர வாகனத்தில் ஒரு ரவுண்டு அடிக்க முடிந்தது. சைக்கோ பீதி, வெடிகுண்டு பயம் இதையெல்லாம் நேரில் காணும் ஆவல். பண்ணிரண்டரை மணிவாக்கில் தேவி தியேட்டருக்கு அருகிலிருந்து கிளம்பியவன் அண்ணாசாலை காவல்நிலையத்தை தவிர்க்க வேண்டி (வாயை ஊத சொல்லிட்டாங்கன்னா சங்காச்சே?) லெப்ட் அடித்து மணிகூண்டை அடைந்தேன். இடதுபுறம் திரும்பி ராயப்பேட்டை மருத்துவமனை வழியாக போயிருக்க வேண்டும். அங்கிருக்கும் ராயப்பேட்டை காவல்நிலையத்தை தாண்டிச் செல்லவேண்டுமென்ற விதி இருந்ததால் நேராக திருவல்லிக்கேணிக்கு வண்டியை விட்டேன். ராயப்பேட்டையில் மாட்டினால் உடனடியாக ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று டிரிங் & ட்ரைவ் சர்ட்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். பீச் ரோட்டில் பொதுவாக ஓவர்ஸ்பீடாக வருகிறானா என்றுதான் பார்ப்பார்கள், நார்மல் ஸ்பீடில் செல்பவனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் பீச் ரோடை தேர்ந்தெடுத்தேன்.
முன்பெல்லாம் இரவுகளில் பீச் ரோட்டில் ஆட்டோ ரேஸ் நடக்கும். போலிஸ்காரர்களின் நெருக்கடியால் பீச் ரோட்டில் நடந்த ரேஸ் இப்போது சாந்தோமில் இருந்து சத்யா ஸ்டுடியோ வரை நடக்கிறதாம். அதிவேக கொலைவெறி ஆட்டோக்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் சாந்தோமில் இருந்து ரைட் அடித்து மயிலைக்கு வந்தேன். மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனை தவிர்க்க தினகரனுக்கு முன்பாக வந்த ஏதோ ஒரு சந்தில் நுழைந்து கபாலீஸ்வரர் கோயிலை தொட்டு, குளத்தை சுற்றி மந்தைவெளியை நோக்கி வண்டியை முறுக்கினேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. மேற்கு மாடவீதியும், வடக்கு மாடவீதியும் சந்திக்கும் சந்திப்பில் போலிஸ் செக்கப். ஒரு பெண் போலிஸ் சுறுசுறுப்பாக வண்டி டாக்குமெண்டுகளை டார்ச் அடித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு ஃபோர்டு ஐகானில் இருபதுகளில் ஆறு பேர் அதிவேகமாக வந்து பிரேக் அடித்து நின்றார்கள். 'கண்களிரண்டால்' பாட்டை சத்தமாக அதிரவிட்டிருந்தார்கள். டிரைவர் சீட்டில் இருந்தவர் காரிலிருந்தபடியே டாக்குமெண்ட்களை காட்டினார். "வாயை ஊதுங்க" என்று சொன்னதுமே "டாக்குமெண்ட்ஸ் சரியா இருக்கில்லே? அப்புறம் எதுக்கு வாயை ஊதச்சொல்றே?" என்று ஒருமையில் போலிஸ்காரரை கேட்டதுமே, கோபமடைந்த போலிஸ்காரர் வண்டிச்சாவியை பிடுங்கிக் கொண்டுப் போனார்.
பயத்தில் ஹெல்மெட்டை கழட்டாமலேயே டாக்குமெண்ட்ஸை காட்டினேன். "பாலிசி பேப்பர் வர ஒரு வாரமாகும். இன்சூரன்ஸ் ரிசீப்ட் மட்டும் இருக்கு" என்று சொல்லிவிட்டு என் கம்பெனி ஐடெண்டிகார்டை காட்டினேன். நல்ல வேளையாக அந்த பெண் போலிஸ் வாயை ஊத சொல்லவில்லை. மாணிக்சந்தையும், பாஸ் பாஸையும் சரிவிகிதத்தில் மிக்ஸ் செய்து போடுபவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவன். ஃபோர்டு ஐகான் காரரிடம் "பேரு சொல்லுங்க சார்!" என்றவாறே நகர்ந்தார் அந்த பெண் போலிஸ். "நான் அட்வகேட்" என்று ஃபோர்டு சொல்ல, "பேரை தான் கேட்டேன், ப்ரொபஷனை கேட்கலை!" என்று கடித்துக் கொண்டிருக்க நூறு ரூபாய் மிச்சமான குஷியில் வண்டியைக் கிளப்பினேன்.
இரண்டாண்டுகளுக்கு முன்புகூட மந்தைவெளி பஸ்ஸ்டாண்டை சுற்றி நிறையப் பேர் பிளாட்பார்ம்களில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது வெறிச்சோடியிருக்கிறது. அடையார் பிரிட்ஜ் அமைதியாக இருந்தது. வழியெங்கும் பிளாட்பார்ம் வாசிகளை எங்கேயுமே காணமுடியவில்லை. மத்திய கைலாஷை தவிர்க்கவே முடியவில்லை. சாதாரண நேரத்திலேயே அங்கே வசூல்ராஜாக்கள். இரவில் சொல்லவும் வேண்டுமா?
பத்து கார்கள், இருபது டூவீலர்கள் மடக்கப்பட்டிருந்தன. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்தவாறே பைக்கை ஓரம் கட்டினேன். கார்களின் டிக்கிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ப்ரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த போலிஸ்காரர் ஒருவர் ஹெல்மெட்டையெல்லாம் கழட்ட சொல்லவில்லை. "ஐடெண்டி கார்டு மட்டும் காட்டு, குடிச்சிருக்கியா, ஆர்சி புக் இருக்கானெல்லாம் கேட்கமாட்டேன்" என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஐடெண்டி கார்டை காட்டியதுமே நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.
சென்னையில் ஒரு பிரச்சினை. பதினொரு மணிக்கு மேல் தம் அடிப்பதற்கும், பாக்கு போடுவதற்கும் பொட்டிக்கடைகளே இருக்காது. ரெகுலர் தம்மர்கள் பாக்கெட்டாக வாங்கி ஸ்டாக் செய்துகொள்வார்கள். திருட்டு தம்மர்கள் பாடு தான் திண்டாட்டம். ஏதாவது பொட்டிக்கடை இருந்தாலாவது லூசில் வாங்கி அடிக்கமுடியும். தரமணி ரோட்டில் டிசிஎஸ் அருகே இருபத்தி நாலுமணி நேர பொட்டிக்கடை ஒன்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகிறது. எந்த நேரத்திலும் டீ, சமோசா, சிகரெட், பாக்கு தாராளமாக கிடைக்கிறது.
வேளச்சேரி விஜயநகரில் ஆட்டோக்காரர்களை தவிர்த்து யாரையுமே காணோம். போலிஸ் விழிப்பாக இருக்க வேண்டிய ஜங்ஷன் அது. வேளச்சேரி மேம்பாலத்தில் முன்பெல்லாம் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும், (அறிந்தும் அறியாமலும், வேட்டையாடு விளையாடு, பரட்டை (எ) அழகுசுந்தரம் etc.) இரவுகளில் பரபரப்பாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் இயங்க ஆரம்பித்தப் பிறகு சினிமாக்காரர்கள் ஏனோ அந்த மேம்பாலத்திடம் பாராமுகம் காட்டுகிறார்கள்.
மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சுடுகாட்டுக்கு அருகே இருக்கும் சொறி நாய்கள் எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் அனாயசமாக ஓடுகின்றன. டூவீலர்காரர்கள் சிகாகோ பேண்டோடு வீட்டுக்கு போகவேண்டியிருக்கிறது. ஒன்றரை மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். சென்னை மாநகர, புறநகர காவலர்களிடம் மாணிக்சந்த் உதவியால் தப்பினாலும் வீட்டில் மாட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகம். திக்கற்றவர்களுக்கு கொய்யா இலையே துணை. வீட்டிற்கொரு கொய்யா மரம் வளர்ப்போம்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, சமூகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 1
ஆணாதிக்கம்!
- லக்கிலுக்
'ஆணாதிக்கம்' என்ற சொல் பயன்படுத்த எளியதாக இருக்கிறது. யாரையாவது திட்டவேண்டுமானால் என்னைப் போன்ற விளிம்புநிலைவாதிகள் (இப்படி ஒரு சொல் இருக்கிறதா?) சென்னைப் பாஷையில் திட்டப்பட வேண்டியவனின் அம்மாவை திட்டிவிடுவோம். அறிவுஜீவிகள் வட்டாரத்திலோ 'அவன் ஒரு ஆணாதிக்கவாதி' என்று சொன்னால் போதும். திட்டப்பட்டவரின் தரம் பாதாளத்துக்கு கீழே போய்விடும்.
பெண்களை மலரென்றும், நிலவென்றும் வர்ணிப்பவனெல்லாம் ஆணாதிக்கவாதியென்றால் உலகின் ஒரு கவிஞனும் இந்த பட்டியலில் இருந்து தப்பிக்க முடியாது. சங்ககால புலவனிடமெல்லாம் சண்டைபோட வேண்டிவரும். விமனைசர் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய ஒரு சொல் இருக்கிறது. காணும் பெண்களிடமெல்லாம் காமம் கொள்ளுபவனை சொல்லுவார்கள். அவன் ஆணாதிக்கவாதியா? விவாதம் செய்தால் அவன் கூட பெண்களை ஆராதிப்பவன் என்று விவாதிக்க முடியும். இரண்டு மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டவர்களை ஆணாதிக்கவாதி என்று சொல்லலாமா? ம்ஹூம்.. இரண்டு மூன்று பெண்களுக்கு வாழ்வு கொடுத்தவர் என்றும் சொல்லலாம்.
ஆணாதிக்கவாதிகள் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் பெண்ணியவாதிகளா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பெண்ணியவாதிகள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது பெருங்கொடுமை. எனக்குத் தெரிந்த பெண்ணியவாதிகள் பலரும் வரதட்சணைக்கு எதிராக குமுதத்தில் கதை எழுதுகிறார்கள். நான்கைந்து பேராக சேர்ந்துக் கொண்டு சேரிக்குழந்தைகளுக்கு முடிவெட்டுகிறார்கள். மங்கையர் மலரிலும், அவள் விகடனிலும் சமையல் குறிப்பு வரைகிறார்கள். ஆண்களை விலங்குகளாக சித்தரித்து ஓவியக்கண்காட்சி நடத்துகிறார்கள். அவ்வப்போது கூடி காபியோடு, ஜாங்கிரி சாப்பிட்டு ஆணாதிக்கத்தை ஒழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். மாதர்சங்கங்களில் 'ஆண்கள் ஒழிக!' முழக்கமிட்டுவிட்டு மாமனாருக்கு மாத்திரை கொடுக்க ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். யாரெல்லாம் பெண்ணியவாதிகள் என்பதிலேயே எனக்கு குழப்பம் இருக்கிறது.
பாருங்கள், ஆணாதிக்கம் - பெண்ணியம் போன்ற சொற்களுக்கு சரியான பொருள்கூட தெரியாத நானெல்லாம் இதைப்பற்றி எழுதிக் கிழிக்க வேண்டியிருக்கிறது, அதையும் நீங்கள் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்? காலத்தின் கோலம்.
தேவ அடியாள் - தெய்வங்களுக்கு அடியாள் என்று வியாக்கியானம் சொன்னார்கள். தாசி இனத்தைச் சேர்ந்தப் பெண்களை நம் சமூகத்தில் இவ்வார்த்தைகளில் அழைத்தார்கள். இது பின்னர் கொச்சையாக 'தேவடியா' ஆக்கப்பட்டது. ஊர்ப் பண்ணையார்கள், கோயில் அர்ச்சகர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்களின் காமப்பசியை போக்க வற்புறுத்தப்பட்டவர்கள் தெய்வங்களுக்கு அடியார்களாம். தமிழில் ஒருவனை மிகத்தரக்குறைவாக திட்டுவதென்றால் 'தேவடியா மகனே!' என்று திட்டுகிறார்கள். தமிழ்சமூகத்தின் அப்பட்டமான ஆணாதிக்கத்துக்கு இது தக்க உதாரணம். திட்டவேண்டியவனை கூட திட்டாமல் அவனது தாயை திட்டச்சொல்லி நம்மை மொழி வற்புறுத்துகிறது. பல பேருக்கு முந்தி விரித்தவளின் மகனே என்பது அச்சொல்லுக்கு சரியான பொருள். தேவடியா என்ற சொல் பெண்பாலை இழிவுபடுத்துகிறதே? இதற்கு இணையாக ஆண்பாலில் திட்ட ஏதாவது சொல்லிருக்கிறதா? ஒரு மொழியே ஆணாதிக்கத்தை வற்புறுத்துகிறது என்றால் அந்த மொழியைப் பேசும் சமூகம் எவ்வளவு கீழ்த்தரமானதாக இருக்க வேண்டும்? பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதில் என்ன தவறு?
சரி, மற்ற மொழிகளில் இதுபோன்ற குறைபாடுகள் இல்லையா? உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் 'Bastard' என்ற சொல்லும் இருக்கிறதே என்று எதிர்வினைக்காக யாராவது கேட்கலாம். Bastard என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் 'The illegitimate offspring of unmarried parents' என்ற பொருளைத் தருகிறது. தேவடியா மகனுக்கும், Bastardக்கும் இடையில் இருக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறதா? Bastard என்ற சொல் திட்டப்படுபவனின் தாயை மட்டுமன்றி, தந்தையையும் சேர்த்து குறிக்கிறது இல்லையா? உடனே யாராவது Bitch என்ற சொல்லை நினைவுறுத்தலாம். Bitch என்ற சொல்லுக்கும் Female of any member of the dog family என்றே பொருள் இருக்கிறது. அதாவது பெண்ணை திட்டமட்டும் இச்சொல்லை பயன்படுத்தலாம். நாயே என்று திட்டுகிறோம் இல்லையா? பெண்ணை நாய் என்று திட்ட Bitch என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம் தமிழைவிட உயர்ந்தது என்று சொல்லுவதற்காக இந்த உதாரணங்களை இங்கே பட்டியலிடவில்லை. ஆங்கிலம் பேசி வளர்ந்த சமூகம் திட்டுவதில் கூட ஆண்-பெண் சமநிலையை கடைப்பிடித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே நம் நோக்கம்.
நம் சமூகமும், மொழியும் ஆணாதிக்கவாதிகளாகவே நம்மை வளர்த்தெடுத்து வருகிறது. இங்கே 'நம்மை' என்று சொல்லுவது பெண்களையும் சேர்த்தே. பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக தான் வளருகிறார்கள், வாழ்கிறார்கள். தங்கள் தந்தைக்கும், கணவனுக்கும், மகனுக்கும் வக்காலத்து வாங்கியே காலத்தை ஓட்டுகிறார்கள். அம்மாவை, தங்கையை, மகளை கேவலப்படுத்துகிறார்கள். 'ஆம்பளைப்புள்ள மாதிரி என்னடி ஆட்டம்?' என்று மகளை மிரட்டுபவர்கள் அம்மாக்கள் தான். குழந்தை பிறந்தால் 'பொட்டப்புள்ள பொறந்திருக்கு' என்று வருத்தத்தோடு பேசிக்கொள்ளுபவர்கள் வீட்டில் இருக்கும் கிழவிகள் தான். 'பொட்ட' என்ற பெண்பால் சொல் கூட ஆண் ஒருவனை கேவலப்படுத்தச் சொல்லப்படும் சொல்லாக மாறிவிட்டது. என்ன கொடுமை பாருங்கள். இக்கட்டுரையில் அடிக்கடி 'திட்டுவது' பற்றியே பேசிக்கொண்டிருப்பது ஏன் என்று நீங்கள் கேட்கக்கூடும். திட்டுவது மாதிரியான லுச்சா மேட்டரில் கூட இவ்வளவு ஆணாதிக்கம் இருக்கிறதென்றால், மற்ற விஷயங்களில் எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பதற்காகத் தான் இவ்வளவு மெனக்கெடுகிறேன்.
கணவனை இழந்தவளை விதவை என்கிறோம். விதவைக்கு ஆண் பாலென்ன? மனைவியை இழந்தவனை என்ன சொல்லி கூப்பிடுவது? அடப்பாவிகளா.. ஆண்களுக்கு இதில் கூடவா சலுகை தருவீர்கள்? கணவனை இழந்தவள் பொட்டு வைக்கக்கூடாது, பூவைக்கக் கூடாது, சிங்காரித்துக் கொள்ளக்கூடாது. மறுமணமா? அதைப்பற்றி நினைத்தாலே அடுத்த ஜென்மத்தில் சோறு கூட கிடைக்காது. மனைவியை இழந்தவனோ எப்போதும் போல இருக்கலாம், தன் குழந்தைக்கொரு தாய் தேவையென்று இன்னொருவளை கட்டிக் கொள்ளலாம். அவளை சல்லாபித்துக் கொள்ளலாம். இங்கே பிறந்த ஒவ்வொருவரும் "த்தூ.." என்று மல்லாக்கப் படுத்துக் கொண்டு, எச்சிலைக் கூட்டி, கொத்தாக காறியுமிழுங்கள். நம் முகத்திலேயே எச்சில் தெறிக்கட்டும்.
பராசக்தி சிவாஜி மாதிரி பத்தி பத்தியாக பேசுகிறாயே, நீ மட்டும் பெண்ணியவாதியா என்று யாராவது கேட்பீர்கள். இல்லை. குறைந்தபட்சம் நான் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை மட்டுமாவது உணர்ந்திருக்கிறேன். நான் ஒரு மொள்ளமாறியாக, முடிச்சவிக்கியாக வாழ்கிறேன் என்றால் 'நான் ஒரு மொள்ளமாறி, முடிச்சவிக்கி' என்பதை உணர்ந்திட வேண்டும். என் அப்பாவுக்கு இந்த உணர்தல் கூட இருந்ததில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கை இயல்பானது, சமமானது என்று தீவிரமாக நம்பியே செத்துப்போனார். என் தலைமுறையில் சிலர் ஓரளவுக்கு 'நாம் ஆணாதிக்கவாதிகள்' என்றாவது உணர்ந்திருக்கிறோம். பெண்களும் கூட தாங்கள் ஆணாதிக்கவாதிகளாக வளர்த்தெடுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால் மட்டும் பெண்ணியவாதியாகி விட முடியாது. அடுத்தடுத்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாகவாவது மேம்பட்டு இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளிலோ, இரண்டாயிரம் ஆண்டுகளிலோ தமிழ் குமுகாயம் ஆண் - பெண் சமநிலையை அடைந்துவிடும் என்று ஆணித்தரமாக நம்புவோம்.
பதிவு செய்தது : பண்புடன் at 2 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, சமூகம், வார நட்சத்திரம்