Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 6

கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
- மோகன் தாஸ்
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 4

பின்புத்தி உணர மறுத்த உண்மையைப் பற்றிய சில குறிப்புகள்
- மோகன் தாஸ்


பெண்களைப் பற்றிய என் நிலைப்பாடு எப்பொழுதும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. கோ-எஜுகேஷன் பள்ளிகளில் ஆரம்பித்த பெண்களின் மீது உண்டான காரணமேயில்லாத பொறாமையாகட்டும், பெண் என்ற காரணத்தினாலேயே நிறைய இடங்களில் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த சலுகைகளால் வந்த கோபமாகட்டும் அதிக காலம் தாக்குப்பிடிக்கவில்லை. தற்சமயங்களில் அந்நாட்களைப் பற்றிய எண்ணங்கள் புன்னகையை மட்டுமே வரவழைக்கின்றன. கல்லூரிப் பருவம் அவிழ்த்த பல ரகசியங்களில் உடைந்து போன பிறகான மிச்ச சொச்ச நிலைப்பாடுகளும் திருமணத்திற்குப் பிறகு சிதறிப்போனது. கடைசி வரையில் தொற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கான பொதுப்புத்தியைப் பற்றிய சிந்தனைகள் கூட அகிலாவினுடனான இந்த ஆறாண்டுகால மணவாழ்வில் கடற்கரைக்குச் சென்று வந்த பிறகு கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் மணலைப் போல் எங்கோ ஒரு மூளைக்கு தூக்கி எறியப்பட்டிருந்தது. ஆனால் அது தவறோ என்று நான் மறுபரிசீலனை செய்ய நினைக்கும் அளவிற்கு வந்ததற்கும் அகிலாவே முழுக்காரணம்.

ஒரு மாதமாகவே அகிலாவுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தாலும் பிரச்சனையை நானாக வேட்டிக்குள் விட்டுக்கொள்ள விருப்பமில்லாமல் மௌனமாகவே இருந்தேன். பவானியாவது பரவாயில்லை கொஞ்சம் பெரிய பையன் குந்தவைக்கு இன்னும் இரண்டு வருஷம் கூட ஆகலை, அவளையும் அம்மாவிடம் ரூமில் விட்டுவிட்டு பெட்ரூமிற்கு தனியாக வரத்தொடங்கியிருந்தாள். அம்மாவுமே கூட என்னை தப்பா நினைத்திருக்கலாம்.

தாம்பத்தியத்திற்கான தேவை இல்லையென்று சொல்லாவிட்டாலும் அதற்காக அகிலாவை நச்சுப் பண்ணியது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அவளுடைய இயல்பான ஆர்வமும் எங்களுக்கிடையில் இந்த விஷயத்தில் பெரிய ஈகோ பிரச்சனை இல்லாததும் சுலபமான தாம்பத்ய உறவை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சில நாட்களாக அவளை யாரோ இல்லை அவளேயோ கட்டாயப்படுத்துவதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு. இப்படியே போய்க்கொண்டிருந்த ஒரு வாரத்தின் கடைசியில் இரவில் சட்டென்று விழித்தவனுக்கு பக்கத்தில் படுக்கையில் அகிலா தூங்காமல் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து பயந்தே போனேன்.

"ஏம்மா என்னாச்சு தூங்கலையா? அழுதுக்கிட்டிருக்யா என்ன?" என்று கேட்டதும்

"அதெல்லாம் ஒன்றுமில்லை..." என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது அவள் வார்த்தைகளால் திருப்தியடையாமல் அவளை நெருங்கி கன்னத்தை தொட்டுப் பார்க்க அவள் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.

"என்னாடி இது?"

அவளிடம் பதிலில்லை

"உடம்பு வலிக்குதா?" அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் பதிலெதுவும் சொல்லாமல் முறைத்துப் பார்த்தவள் சில நிமிடங்களில் குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்.

அவளை இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன்

தோளில் முகம் புகைத்தவள்

"உங்களுக்கு இப்பல்லாம் என்னைக்கண்டா பிடிக்கிறதில்லை?" காதுக்குள் குசுகுசுத்தாள். அந்த அறையில் சுவருகளுக்கு கூட கேட்டுவிடாமல் சொல்ல நினைத்திருப்பளோ என்னவோ? அவள் சொன்னது அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். அவளுடைய அழுகை கட்டுப்படுத்த முடியாததாய் ஆனது.

திருமணம் ஆன புதிதில் சண்டை போட்டு இருவரும் பிரிந்திருந்த பொழுதும் அவள் பெரிதாய் அழுததில்லை. நாங்கள் இருவரும் தவறு செய்திருந்தாலும் அவள் அதற்கான தன் பங்கு தண்டனையாய் என்னைப் பிரிந்து இருக்கும் கடும் முடிவை எடுத்திருந்தாள் இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் பொங்குகின்ற காதலோடு தூரத்தில் இருந்து கவனித்தோம். சின்ன ஊடல்தான் அது. அவள் எனக்கானவள் என்றும் என்னைத் தவிர இன்னொருத்தரை அவள் முன் காலத்தில் விரும்பியிருந்தாள் என்ற ஒரு எண்ணம் கூட கோபமாகிய காரணம் அது. என்னைப் பற்றி மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வது எத்தனை தூரம் எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்ததோ அதே அளவு மனவருத்தம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் என்னைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாத பொழுதும் வந்தது. ஆனால் மற்றவர்கள் என்னைச் சரியாக உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதில் நான் காட்டிய ஆர்வத்தில் சிறிதளவு கூட என்னைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நம்பியவர்களிடம் நான் காட்டவில்லை. ஏனென்றால் அது போலித்தனமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தேன். அகிலாவைப் பற்றி தெரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட ப்ரயத்தனத்தைப் போல் அவளும் செய்வாள் என்றே நினைத்தேன்.

அவளுக்குப் பிடித்த சிறுசிறு விஷயங்களைக் கூட கவனித்து ஆனால் கவனிக்காதது போல் நான் செய்துவந்தது அவளுக்குத் தெரிந்தேயிருக்கவேண்டும். அந்தச் சமயங்களில் அவள் மனம் அடையும் பூரிப்பு சிறுநகையாக உதட்டோரத்தில் காட்டிக்கொடுத்துவிடும். உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த சிலர் தொடர்ச்சியாக என்னைத் தவறாகப் புரிந்துகொண்டபொழுது சரி இவ்வளவுதான் இவர்கள் என்று விட்டுவிட்டு நகர்ந்ததைப் போல் என்னால் அகிலாவைக் கடக்க முடியாததற்கும் அவளே தான் காரணம். அவள் நான் மாட்டிக்கொள்ளும் முகமூடிகளைத் தாண்டி என்னைத் தேடுபவளாகயிருந்தாள், பல சமயம் கையும் களவுமாக முகமூடிகள் கழற்றப்பட்டு அவள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஏன் இத்தனை நாடகம் எதற்காக இப்படி ஒளிந்து மறைந்து விளையாடுவது நாமாக நம்மை வெளிக்காட்டினால் என்ன? என்பது போல் நிறைய கேள்விகளுடன் அவள் எப்பொழுது தயாராகயிருப்பாள். எனக்குப் புரிந்திருந்தால் சொல்லித்தானிருப்பேன் ஆனால் உண்மையில் எனக்கே ஏன் அப்படி என்று புரியவில்லை; என்னை நானாகச் சொல்லிக்கொள்ளாமல் மற்றவர்களாய் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எதுவும் மனநோயுடன் சம்மந்தப்பட்டதா என்ற கேள்விமட்டும் தூரத்தில் தொக்கி நிற்கும். ஆனால் வாழ்க்கை இதனால் சுவாரசியமாயிருப்பதாகப் பட்டதெனக்கு. திருமணத்திற்குப் பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அகிலா இந்த விஷயத்தில் என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருந்தாள். அதனால் அவளுடைய சமீபத்திய நடவடிக்கைகள் கோபத்தை வரவழைக்காமல் என்னில் வருத்தத்தையே அதிகம் வரவழைத்தது.

எனக்கும் அவள் என்னிடம் அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை போட்டு உடைத்துவிட்டாள் தேவலை என்றிருந்தது ஆனால் வழமை போல் நல்லதொரு நாளுக்காக நான் காத்திருந்தேன். என் உறக்கம் பெரும்பாலும் நீண்டதாக இடையில் விழிப்பு இல்லாததாக முழுமையானதாகவே இருந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அமைந்த மனைவியின் காரணமாகவும் மாற்றம் எதுவும் இருந்தது கிடையாது; இரவு பாத்ரூம் ஒரு தடவை போய்விட்டு வந்து படுத்தால் காலை ஆறு ஆறரை மணிவரை அசத்திக்கொண்டு வரும் தூக்கத்தின் மீது அகிலாவிற்கே கூட பொறாமை உண்டு. 'போன ஜென்மத்தில் நீங்க புண்ணியம் செஞ்சிருக்கணும் இப்படி தூங்குறதுக்கு' என்று அடிக்கடி சொல்வாள். அன்று உலகதிசயமாய் நான் தூக்கத்தில் இருந்து இடையிலேயே எழ அகிலா அழுது கொண்டிருந்தது தெரிந்தது, நான் எழுந்தது அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது. வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஆனால் சிறிது நாட்களாகவே அவள் என்னிடம் நடத்திக் கொண்டிருந்த நாடகம் கொஞ்சம் அவளைத் தூண்டிப் பார்த்திருக்க வேண்டும். கேவலாகத் தொடர்ந்த அழுகை என் தோள்களில் முடிந்தது. நான் முழுவதுமாய் முடியக் காத்திருந்தேன்.

"என்ன பிரச்சனை உனக்கு?" அவளை அருகில் இழுத்து ஆறுதல்படுத்தியபடி கேட்டேன்.

"உங்களுக்கு என்னைப் பிடிக்கலை!" என் கேள்விக்கான பதில் அதுவா இல்லை ஒரு ஸ்டேட்மென்ட் விடுகிறாளா உண்மையில் புரியவில்லை.

"புரியல..." என்றேன்.

"கொஞ்ச நாளாவே உங்களுக்கு என்னைப் பிடிக்கல, நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா சொல்லிடுங்கோ. என்னால உங்களைப் பிரிஞ்சி இருக்கவே முடியாது..." அவளுடைய வார்த்தைகளில் ஒரு தேர்வேயில்லை வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு உண்மையிலேயே பயங்கரக் குழப்பமாகயிருந்தது.

"என்னாம்மா சொல்ற நீ உண்மையிலயே புரியல. எதைச் சொல்றதுன்னாலும் தெளிவா சொல்லு" என்றேன்.

கொஞ்சம் நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள். மறுபக்கம் திரும்பி,

"உங்களுக்கு இன்னொரு பொண்ணொட தொடர்பிருக்கு!"

கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன், இதுவரையில் என்னைப் பற்றி அகிலா சொன்னதில் மிகப்பெரிய பழி இதுவாகத்தான் இருக்கமுடியும். என் முகமூடிகளைக் கழட்டிவிட்டு என்னையறிந்த ஒருத்தியாய் தான் என்னால் அவளை உணரமுடிந்திருந்தது. அவளை அப்படி என்னைத் தவறாக நினைக்க வைக்கும் படி நான் என்ன செய்திருந்தேன் என்ற யோசனை பெரும்பாலும் பூஜ்ஜியத்தில் முடிவடைந்தது. உண்மையில் என்னால் கண்டுணர முடியாத எல்லைக்கு வெளியே இந்த விஷயங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளால் அப்படி ஒரு வார்த்தையை எப்படி சொல்ல முடிந்தது என்ன திமிர் இருக்கும் என்ற எண்ணம் பின்னால் வந்த அவள் அப்படி நினைக்கும் படி நான் நடந்து கொண்டிருந்தால் அவள் இதை என்னிடம் சொல்ல எத்தனை சிரமப்பட்டிருப்பாள் என்பதை உணர்ந்ததும் கொஞ்ச காலமாய் எங்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்த வலை விலகுவதாய் உணரமுடிந்தது. வலையைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தாலும் எதனால் அப்படி ஒரு வலை எங்களைச் சூழ்ந்தது என்று புரியாததால் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தேன்.

நான் சூழ்நிலையை வியந்தபடி உட்கார்ந்திருக்க, மெதுவாய் எழுந்து போய் பீரோவைத் திறந்தவள். கைகளில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள், ஏற்கனவே நான் கண்ணாடி வேறு; கண்ணாடி போடாமல் பகல் நேரத்திலேயே எதுவும் தெரியாதென்பதால் எதுவாயிருந்தாலும் அருகில் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு அவள் கொண்டு வந்து காண்பித்த பொருள் மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அவளுடைய தலைமுடிதான் அது.

"இது உங்க சட்டையில் இருந்தது. சத்தியமாய் இது என் முடியில்லை! அப்ப யாரோடது."

வாய் திறக்க முடியாத மௌனத்தால் கட்டப்பட்டவன் போல் அயற்சியடைந்து போய் நான், நிச்சயம் அகிலாவிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி சந்தேகப்படும் அளவிற்கு அகிலா எப்பொழுது ஆனால் என்பது எனக்கு ஆச்சர்யத்தையும் அதே சமயம் மிகுந்த வருத்தத்தையும் வரவழைத்தது. அவளை சமாதானப்படுத்தும் வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை.

"என்ன அகிலா இது! நீயா இப்படி கேக்குற?"

இன்னமும் விசும்பிக் கொண்டுதானிருந்தாள்.

"சொன்னேன்ல இது என் முடி கிடையாது, எம்மேலாணை என் குழந்தைகள் மேல்..." சொல்லவந்தவள் முடிக்காமல் நிறுத்தினாள்.

"சரிடி இது உன்னோடதாவே இல்லாம இருக்கட்டும். அதுக்காக என்னைச் சந்தேகப்படுவதா?" கேள்விக்கு பதில் சொல்லாமல் திரும்பவும் பீரோவிற்கு நடந்தாள். அடுத்து என்ன மேட்டர் என்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன். என் ஃபேவரைட் சட்டையுடன் வந்தாள்.

"மோந்து பாருங்க!" சத்தியமாய் அப்படி ஒரு அகிலாவை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. இந்தக் கணத்தை இப்படியே மறந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படிச் சந்தேகப்படும் தோரணையுடனான அகிலாவின் முகம் என் மனதில் பதிந்துவிடக்கூடாதென்று நினைத்தவனாய் வேறு பக்கம் தலையை திருப்பினேன்.

"ஹ்ம்ம்ம்" என்று அழைத்தவள் கைகளில் திணித்தாள், அனிச்சையாய் நான் சட்டையை முகர்ந்து பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"இது நானோ நீங்களோ உபயோகப்படுத்துற செண்ட் கிடையாது. வேற செண்ட் அதுவும் பொண்ணுங்க உபயோகப்படுத்துறது!"

எனக்கு தலையைச் சுற்றுக் கொண்டு வந்தது, என்னிடம் எதுவும் விளையாடுகிறாளா என்று கூட நினைத்தேன் ஆனால் சில காலமாய் அவள் இருந்த மனநிலை அப்படி இருக்கவே முடியாது என்று சொல்லியதால் என்னதான் பிரச்சனையா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப சொல்லுங்க என்ன விஷயம் போய்க்கிட்டிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? இரண்டு குழந்தைகள் பிறந்ததும் கழட்டி விடணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?" அவள் கண்கள் இன்னொரு முறை மழை பொழியக்கூடிய மேகமாய் திரண்டு இருளத் தொடங்கியது.

ஒரு அறை விடலாம் என்று நினைத்தேன் நான், "அகிலா ஸ்டாப் இட். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? லூசாய்ட்டியா நீ?" என்றதும் என் கைகளில் இருந்த சைட்டையைப் பிடுங்கியவள் அதன் பாக்கெட்டில் இருந்து ஒரு பில் எடுத்து என்னிடம் நீட்டினாள். "அப்ப இதுக்கு என்ன சொல்றீங்க. இப்படி ஒரு பட்டுப்புடவை எனக்கோ உங்கம்மாவுக்கோ நீங்க வாங்கலை. அப்ப யாருக்கு வாங்கினது இது."

கைகளில் திணிக்கப்பட்ட பில் ஒரு மாதத்திற்கு முன்னர் நான் 10,000 ரூபாய்க் கொடுத்து பட்டுப்புடவை வாங்கியதாய்ச் சொன்னது ஆமாம் பில் என் பெயரில் தான் இருந்தது. ஆனால் நான் அகிலாவை விட்டுவிட்டு இந்த ஆறுவருடங்களில் பொருட்கள் வாங்கியதில்லை அதுவும் மிக நிச்சயமாய் பட்டுப்புடவை. கடையின் பெயரைப் பார்த்ததும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் என்ன நடந்திருக்க முடியும் என்கிற வழிக்கு என் நினைவுகள் என்னை அழைத்துச் சென்றன. சட்டென்று அனல்மழை பொழிய சூழ்ந்திருந்த மேகம் விலகியதைப் போன்ற உணர்வு. எனக்கு கொஞ்சம் சிரிப்பாய்க் கூட வந்தது என்னால் நடந்திருக்கக்கூடிய அனைத்தையும் ஒருவாறு ஊகிக்க முடிந்ததும்.

அவளை அருகில் அழைத்தேன், நெருங்கி வந்தவளை அருகில் உட்கார வைத்துவிட்டு, மெதுவாய்ச் சிரித்தபடி.

"நான் தோத்துட்டேன் அகிலா, நான் தோத்துட்டேன் அதுவும் உன்னால." சொல்லிக் கொண்டிருந்த என்னை அவள் அழுதபடியே ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

நான் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் என் அலுவல பெண் தோழியொருத்தி, தன் கணவர் மீதிருக்கும் சந்தேகத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது திமிராய் என் மனைவி என்னைச் சந்தேகப்படவே மாட்டாள். நாங்க இரண்டுபேரும் அப்படி இப்படி என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். அவள் அப்படியிருக்கவே முடியாது பெண்கள் என்றால் தங்கள் கணவனைப் பற்றிச் சந்தேகப்படாமல் இருக்கவேமுடியாது என்று சொன்னவள் என்னிடம் அதை நிரூபித்துக் காட்டுவதாய் பெட் கட்டினாள். அவள் தான் இப்படிச் செய்திருக்கவேண்டும் என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தேன். நம்புவதைப் போல் இல்லாததால் சட்டென்று அவளை தொலைபேசியில் அழைத்தேன், நடு இரவு தான் ஆனால் வேறு வழியில்லை அகிலா சந்தேகப்படுவதை விடவும் எனக்குப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்று நினைத்தேன்.

நடு இரவு தொலைபேசி அழைப்பை எடுத்தவளிடம் என்றுமில்லாத அளவிற்கு புன்னகை மறுமுனையில் கேட்டது.

"என் பெண்டாட்டி சந்தேகப்பட்டுட்டா நான் தோத்துட்டேன் நீயே பேசு!" என்று சொல்லி அகிலாவிடம் கொடுத்தேன். திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த அகிலா பேசமாட்டேன் என்று சொல்லி நழுவ நினைத்த பொழுதும் அவளிடம் சாமர்த்தியமாய் திணித்தேவிட்டேன்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், இவள் இந்தப் பக்கம் சிரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு அதைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது. மாதக்கணக்கில் அவள் முகத்தில் சிரிப்பையே நான் பார்த்ததில்லை. இவள் இந்தப் பக்கம் பேசும் வார்த்தைகளை வைத்து அவள் அந்தப்பக்கம் சொல்லும் விஷயத்தை ஊகிக்க முயன்று கொண்டிருந்தேன்.

"ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னுமில்லை உண்மையில் சந்தேகமெல்லாம் படலை சும்மா கேட்டுக்கிட்டிருந்தேன் அவர் உளருறார்." என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி புன்னகைத்தவாறு.

"சரிங்க ஒன்றும் பிரச்சனையில்லை" என்று சொல்லி வைத்தாள். வேகமாய் என்னிடம் வந்தவள் என் நெஞ்சில் குத்தியபடி.

"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல, ச்ச கடைசியில் இப்படி ஆய்டுச்சே!" என்று ரொம்பவும் வருத்தப்பட்டாள். அந்த ஒரு மாதமாய் அவளிடம் இருந்த முகம் இல்லை இது, அவளால் நடிக்க முடியாது எனக்கு நன்றாய்த் தெரியும். உண்மையிலேயே தன் புருஷனை இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டதாய் வருத்தப்பட்டதாகவே தெரிந்தது.

"அந்தம்மா சொல்லுது நான் பார்த்த இந்த மூணு விஷயம் இருக்கில்லையா இது மாதிரி நிறைய ட்ரை பண்ணினாங்களாம். பாருங்க நான் கடைசியில் இந்த மூணு விஷயத்தில் விழுந்துட்டேன். அந்தம்மா சொன்னிச்சு நான் முன்ன பண்ணினதுக்கு விழுந்துடுவேன்னு நினைச்சாங்களாம், ஆனால் முடி விஷயம் எல்லாத்தையும் விழ வைச்சிடும்னு தெரியும்னு சொன்னாங்க. நானும் அந்த முடி விஷயத்தில் ஆரம்பிச்சி தான் மத்த இரண்டையும் கண்டுபிடிச்சேன். சாரிங்க. உங்களை அப்படி நினைச்சிருக்கக்கூடாது தப்புதான்." உண்மையில் வருத்தப்பட்டாள்.

நான், "ஏய் இங்கப்பாரு என்னா சும்மா வருத்தப்பட்டேன்னு சொல்லி சரிபண்ணிடலாம்னு பார்க்கறியா! அதெல்லாம் சரிப்படாது இதுக்கு சரியான உபகாரம் செய்தாகணும். நான் மூணாவது ஒரு ப்ராடக்ட் தயார்ப்பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..." என்றபடி ஆரம்பிக்க,

"ஆளைப்பாரு இந்தியாவுக்கு இரண்டே பெரும் பாரம் மூணாவதாம்ல. கனவு காணுறதை விட்டுட்டு மரியாதையாத் தூங்கப்பாருங்க நாளைக்கு ஆபீஸ் போகணும்ல" கண்டிப்புடன் சொல்லியபடி எழுந்து வந்து உட்கார்ந்திருந்த என் 'பெரிய' நெற்றியில் முத்தமொன்று வைத்தாள் பழைய 'ஹவில்தார்' மனைவி அகிலா.

PS: ரப் நே பனா தி ஜோடி படம் பார்த்துவிட்டு வந்து படம் பற்றிய நினைவுகளை எழுதியதும் சட்டென்று இதைப் போன்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதிய ஞாபகம் இருந்ததால் தேடிப்பார்த்தேன். அகிலா ப்ராஞ்செய்ஸ்க்காக எழுதி முடிக்கப்படாமலும் பதிவிடப்படாமலும் இருந்த இந்தக் கதையை பண்புடனுக்காக இப்பொழுது அனுப்பி வைக்கிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - பாவண்ணன்

வாழ்வைத் தேடி
- பாவண்ணன்


பிதுக்கித் தள்ளப்பட்ட வேப்பங்கொட்டையைப்போல நிரம்பி வழிந்த பேருந்திலிருந்து இறங்கத் தொடங்கிய கூட்டம் என்னையும் வெளியே தள்ளியது. ஆனால் புத்தகங்களும் சாப்பாட்டுப்பெட்டியும் தண்ணீர்ப்புட்டியும் கொண்ட என் தோள்பை மீட்டெடுக்கமுடியாதபடி படிக்கட்டில் நின்றிருந்த இருவருடைய இடுப்புக்குநடுவில் அகப்பட்டுக்கொண்டதால் நிம்மதியாக மூச்சுவிடமுடியவில்லை. பை பை என்று நான் போட்ட சத்தத்தை அந்தச் சந்தடியில் யாரும் பொருட்படுத்தவில்லை. அதற்குள் புதிய பிரயாணிகள் ஏறத்தொடங்கிவிட்டார்கள். "பள்ளிக்கூடப் பையன்மாதிரி ஏன்யா பையத் தூக்கிகிட்டு வந்து உயிர வாங்கறிங்க?" என்று மேல்படிக்கட்டில் நின்றிருந்தவர் என்னைப் பார்த்து சத்தம் போட்டார். ஆனாலும் எனக்காக மெனக்கிட்டு இருவருடைய இடுப்புகளையும் சற்றே விலக்கி என்னுடைய பையை உருவிக்கொள்ள உதவி செய்தார். கிளம்பிவிட்ட வண்டியில் அவருடைய முகத்தைப் பார்த்து அவசரமாக "ரொம்ப தேங்க்ஸ்" என்றேன். "ஒன் தேங்ஸ கொண்டும்போயி ஒடப்புல போடு போ" என்று சலித்தபடி முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். அந்த நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.

இப்படியுமா ஆட்கள் இருப்பார்கள் என்று மனத்துக்குள் நினைத்தபடி சோர்வாக நடக்கத் தொடங்கிய நேரத்தில் யாரோ பக்கத்தில் வந்து "ஆப்கோ ஹிந்தி மாலும் சார்?" என்று கேட்பதை உணர்ந்தேன். சோர்வின் காரணமாக அச்சொற்களை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என் மனம். பேருந்து நிறுத்தத்திலிருந்து உணவுக்கடைவரைக்கும் சிறிது தொலைவு நடந்த பிறகுதான் அந்தக் கேள்வியை முழுஅளவில் உள்வாங்கியது மனம். திரும்பிப் பார்த்தேன். இலைகள் உதிர்ந்த ஒரு குச்சிமரத்தைப்போல அவர் இன்னும் அங்கேயே நின்றிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். என்னிடம் கேட்ட அதே கேள்வியை தன்னைக் கடந்து செல்லும் அனைவரிடமும் அவர் முன்வைத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் எலும்பும்தோலுமான தோற்றத்தில் ஒரு பெண்ணும் அவளது கையைப் பிடித்தபடி தலைகலைந்த முன்று சிறுமிகளும் ஒடுங்கி நின்றிருந்தார்கள். ஒரு கணம் வான்கோ வரைந்த உருளைக்கிழங்கை உண்ணும் சுரங்கத்தொழிலாளிகள் ஓவியம் நினைவில் வந்துபோனது.

மீண்டும் அவரருகே சென்று "என்ன கேட்டிங்க?" என்று இந்தியில் கேட்டேன். என்னுடைய இந்தி உரையாடலால் அவர் முகத்தில் ஒருவித நிம்மதி படர்வதை அருகில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பேழைக் குழல்விளக்கின் வெளிச்சத்தில் பார்க்கமுடிந்தது. "உங்களுக்கு இந்தி தெரியுமான்னு கேட்டேன் சார்" என்றார். "சொல்லுங்க, என்ன விஷயம்?" என்று நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தேன். எதுவும் பேசாமல் ஒரு கணம் தலைகுனிந்து நின்றார் அவர். விரலை உயர்த்தி கண்களைத் துடைத்துக்கொண்டார். மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் என் முகத்தைப் பார்த்தார்.

"மும்பையிலேருந்து காலையிலதான் வந்தோம் சார். தெரிஞ்சவங்கன்னு சொல்லிக்க யாரும் இல்ல. பாவம் புள்ளைங்க, நேத்திலேருந்து பட்டினி. உங்களால முடிஞ்ச உதவி செஞ்சா புண்ணியமா இருக்கும்."

இறைஞ்சும் அந்தக் குரலில் தொனித்த வருத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவருக்கருகே நின்றிருந்த சிறுமிகளின் முகங்களில் பசி தெரிந்தது. என் குறிப்பேட்டுக்குள் மடித்துவைத்திருந்த இருபது ரூபாய் தாளொன்றை எடுத்து அவரிடம் தந்தேன். "ரொம்ப நன்றி சார்" என்றபடி அவர் அதை வாங்கி தன் மனைவியிடம் தந்தார் அவர். மனைவி அந்தப் பணத்துடன் அருகில் இருந்த உணவுக்கடைக்குள் குழந்தைகளை அவசரமாக அழைத்துச் சென்றார். கீழே இருந்த மூட்டைமுடிச்சுகளுக்குக் காவலாக அவர் அங்கேயே நின்றார்.

"தெரிஞ்சவங்க யாருமே இல்லன்னு சொல்றிங்க. அப்பறம் ஏன் பெங்களூருக்கு வந்திங்க?"
"நானாக எந்த முடிவும் எடுக்கலை சார். எல்லாம் விதிவிட்ட வழி" அவர் கண்கள் சிறிதுநேரம் இருண்ட வானைநோக்கி நிமிர்ந்தன. பெருமூச்சு வாங்கியபடி பிறகு என்னைப் பார்த்தார்.
"எங்களுக்கு சொந்த ஊரு பிகார் பக்கத்துல சார். அங்க பொழைக்கறதுக்கு எந்த வழியும் கெடையாது சார். வாரத்துக்கு ஒருநாளு ரெண்டுநாளுதான் கூலிவேல கெடைக்கும். அத வச்சிகிட்டு என்ன செய்யமுடியும் சொல்லுங்க? அம்மா அப்பா பொண்டாட்டி புள்ளைங்கன்னு எல்லாரயும் எப்படி பாத்துக்கமுடியும்? பாதிநாள் பட்டினி. பாதிநாள் அரவயிறு, கால்வயிறு. இப்பிடியே காலத்த ஓட்டனோம். அம்மா அப்பா ரொம்ப வயசானங்க சார். அவுங்கள கூட்டிகிட்டு எங்கயும் வெளியூர் போவமுடியாது. அவுங்களுக்காகத்தான் அங்கயே ஒட்டிகிட்டு இருந்தோம். ஒருவழியா கடவுள்கிட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னால அவுங்களும் போய் சேந்தாங்க. ஒரு வழியா நாங்களும் மூட்டமுடிச்சோட மும்பைபக்கம் போனோம். ஏற்கனவே எங்க பக்கத்து ஆளுங்க கொஞ்சம் பேரு அங்க கட்டடவேல செஞ்சி பொழைச்சிகிட்டிருந்தாங்க. எப்படியோ அவுங்களோட சேர்ந்து நாங்களும் ஒட்டிகிட்டோம். ரெண்டு வருஷமா எந்த பிரச்சனயும் இல்லாம வாழ்க்கை ஓடிச்சி."

தொடர்ந்து அவரால் பேசமுடியவில்லை. கண்களைத் திருப்பி உணவு விடுதிக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்தார். ஒரு தட்டில் இருந்த உணவை மூன்று சிறுமிகளும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த அம்மா பக்கத்தில் நின்றுகொண்டிருந்தனர். பசிவேகத்தில் அந்தச் சிறுமிகள் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனக்கு அப்போதுதான் உறைத்தது. நான் கொடுத்த பணத்தில் அந்த ஒரு சாப்பாட்டுமட்டுமே அவரால் வாங்க முடிந்திருக்கும். உடனே அந்த அம்மாவை நெருங்கி இன்னுமொரு இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை எடுத்துச் சென்று இன்னுமொரு தட்டில் சாப்பாடு வாங்கிவந்தாள் அந்த அம்மா. சிறுமிகள் காலியான தட்டை நகர்த்திவிட்டு அந்தத் தட்டிலிருந்து உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

"உங்க பேரு?" மறுபடியும் அந்த பீகார்க்காரரை நெருங்கிக் கேட்டேன்.

"ரகுவீர் சார்."

"மும்பை வேலையில ஏதாவது பிரச்சனையா? எதுக்காக ஏன் மும்பையவிட்டு வந்திங்க?"
"பிகார்க்காரன கண்டா அங்க யாருக்குமே புடிக்கலை சார். வேண்டா வெறுப்பா ஏதோ தெருநாய பாக்கறமாதிரி பாக்க ஆரம்பச்சிட்டாங்க சார். பிகாரும் இந்தியாவுலதான இருக்குது சார்? அப்பறம் ஏன் சார் எதிரிய பாக்கறமாதிரி பாக்கறாங்க? அசாம்ல பொழைக்க போன ஆளுங்கள கும்பல்கும்பலா சுட்டு தள்ளறாங்க. காஷ்மீர்ல உயிரோடயே வச்சி கொளுத்திட்டாங்க. தில்லியில வேறமாதிரி கத. வேல நடக்கறவரைக்கும் எல்லாருக்கும் பிகார்க்காரன் வேணும். வேல முடிஞ்சிடுச்சின்னா ஓடுடா பிகாரி ஒங்க ஊருக்குன்னு விரட்டறாங்க. நாய வெரட்டறமாதிரி வெரட்டிட்டே இருக்காங்க. மும்பையில புதுசா மகாராஷ்டிர நவநிர்மாண் சபான்னு புதுசா ஒன்னு கௌம்பியிருக்குது சார். தேடித்தேடி அடிச்சி வெரட்டறாங்க. மும்பை செல்வத்த பிகார்க்காரன் சுரண்டி எடுத்துக்கினு போயிடறானாம். இப்பிடி பேசிப்பேசியே எல்லார் மூளையும் கெடுத்து வச்சிட்டாங்க சார். அஞ்சிக்கும் பத்துக்கும் கூலிவேல செய்யறவனபோயி சுரண்டல்காரன்னு நாக்கு கூசாம சொல்றாங்க. மேடையில பேசறாங்க. பத்திரிகையில எழுதறாங்க. அத நம்பறதுக்கு ஆயிரம் பேரு காத்திருக்காங்க சார் அந்த ஊருல. அதான் சார் கொடுமை. "

"அதனாலதான் ஊரவிட்டு வந்திட்டிங்களா?"

"வேற என்ன சார் செய்யமுடியும்? கூலிகாரங்களுக்கு கைகால்தானே சார் மூலதனம். அடிக்க வர்ர ஆளுங்க கைய கால முரிச்சிட்டான்னா காலம் பூரா ஊனமா அலயணுமே சார். கைகால் நல்லா இருந்தாதானே உலகத்துல ஏதாவது ஒரு மூலையில எந்த வேலையையாவது செஞ்சி பொழைச்சிக்கலாம். பத்து நாளா எல்லாரும் கும்பல்கும்பலா ஊரவிட்டு போயிட்டே இருக்காங்க. "
"பிகாருக்கேவா?"

"அங்க என்ன சார் இருக்குது பொழைக்கறதுக்கு? மாடுகன்னு மேய்க்கலாம். அவ்வளவுதான். அதவிட்டா வேற எந்த வழியும் இல்ல. மழ இல்ல, பயிர் பச்ச இல்லன்னா அதகூட எங்க கொண்டுபோயி மேய்க்கறது? அதனால அப்படியே போபால், அகமதாபாத், ஜெய்ப்பூர்னு ரயில் கெடைச்ச ஊருக்கு போறாங்க. நாங்களும் அப்படித்தான். வந்து நின்ன நேரத்துக்கு இந்த ஊரு வண்டிதான் கௌம்ப தயாரா இருந்திச்சி. எங்க போவுதுங்க இந்த ரயில்னு பக்கத்துல இருந்தவருகிட்ட கேட்டன். பெங்களூர்னு சொன்னாரு. சரின்னு ஏறி உக்காந்துட்டோம். அப்ப கையில கொஞ்சம் பணம் வச்சிருந்தேன் சார். இங்க வந்த பிறகு, எறங்கற சமயத்துல போலீஸ்காரங்க மடக்கி புடுங்கிகிட்டாங்க. எல்லா ஊருலயும் போலிஸ்காரங்க ஒரேமாதிரிதான் சார் இருக்கறாங்க. இரக்கமே இல்லாத பாறைங்க சார். இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் இவுங்க செய்ற பாவம் தீராது சார்."

ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும் உணவுக்கடையிலிருந்து வெளியே வந்தார்கள். துணிமூட்டையிலிருந்து ஒரு பெரிய பாட்டிலை எடுத்துக்கொண்டு மறுபடியும் கடைக்குள் சென்ற ரகுவீரின் மனைவி அதை நிரப்பிக்கொண்டு வந்தாள்.

"நீங்க ரெண்டுபேரும் எதுவுமே சாப்பிடலையே?" இன்னும் கொஞ்சம் பணம் தரலாம் என பைக்குள் கையை விட்டேன். ரகுவீர் அவசரமாக என்னைத் தடுத்துவிட்டார்.
"வேணாம் சார். கொழந்தைங்க பசியால சுருண்டுசுருண்டு படுக்கறத பாக்கமுடியாம இருந்திச்சி. அந்த நெருப்ப அணச்சிங்களே, அதுவே போதும் சார். எங்களபத்தி கவல இல்ல சார். இதெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்கு பழகினதுதான் சார்."

"அதுக்காக வேணுமின்னே பட்டினி கெடக்கணுமா? சும்மா அரவயித்துக்காவது சாப்புடுங்க. இன்னொரு சாப்பாடு வாங்கிக் குடுக்கறதால எனக்கு ஒன்னும் நஷ்டம் வராது."
"பரவாயில்லை சார். இதுவே நீங்க செஞ்ச பெரிய உபகாரம். "

"இங்க பக்கத்துலதான் எங்க வீடு. அப்படி வந்தாலும் பரவாயில்லை. "

"இருக்கட்டும் சார், உங்களுக்கு பெரிய மனசு. இங்க பக்கத்துல கட்டடவேல எங்கயாவது நடக்குதுங்களா? உங்களுக்குத் தெரிஞ்சா அதமட்டும் சொல்லுங்களேன். "

நான் சிறிதுநேரம் யோசித்தேன். இந்திரா நகரின் தெருக்களும் வீடுகளும் என் மனத்துக்குள் நகர்ந்தன. எந்த இடத்திலும் புதிய கட்டுமானப் பணிகளைப் பார்த்த நினைவில்லை.

"அந்த மாதிரி வேலைங்களெல்லாம் இங்க எப்பவோ முடிஞ்சிபோச்சி ரகுவீர். பெங்களூரு இதத்தாண்டி இருபது கிலோமீட்டர் தூரம் வளந்துடிச்சி. இப்ப வேகவேகமா வளர்ந்துகிட்டு வர்ர இடம் மாரதஹள்ளி, காகதாஸபுர, ஒயிட்பீல்டு அந்தப் பக்கம்தான். அங்க போனிங்கன்னா எதாவது கெடைக்கலாம்."

"மாரதஹள்ளி எந்த பக்கம் இருக்குது? "

"கிழக்கு பக்கம்தான். ஆனா நடந்துலாம் போகமுடியாது ரகுவீர். ரொம்ப தூரம் போவணும். பஸ்தான் சரி. இப்படியே நேரா போனிங்கன்னா ட்ரினிடி சர்ச்னு ஒரு சர்ச் தெரியும். அந்த சர்க்கிள்பக்கத்துல நில்லுங்க . 333ன்னு ஒரு சர்வீஸ் வரும். அதுல போனா சீக்கிரமா போயி சேர்ந்துரலாம். அங்க யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?"

"யாராச்சிம் ஒருத்தவங்க ரெண்டுபேருங்க இருந்தாலும் இருப்பாங்க. கண்டுபுடிச்சிட்டா அப்படியே அவுங்ககூட சேர்ந்துக்கலாம். பசியாறதுக்கு ஏதோ ஒரு வழி, என்ன சொல்றிங்க? "

பேசிக்கொண்டே நிறுத்தத்தை ஒட்டியிருந்த மரத்தடியில் இருட்டில் மூட்டைமுடிச்சுகளைக் கொண்டுபோய் வைத்தான் ரகுவீர். ரகுவீரின் மனைவி மூட்டையைப் பிரித்து ஒரு சாக்கை எடுத்து தரையில் விரித்தாள். குழந்தைகள் அவள் தரையில் விரித்த சாக்கில் மெதுவாகப் படுத்தார்கள். ரகுவீரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டைநோக்கி நடக்கத் தொடங்கினேன். அவர் உரையாடலை மனம் மறுபடியும் அசைபோட்டது.

வீட்டுக்குள் அடியெடுத்துவைத்ததுமே ரகுவீரைப்பற்றிய தகவலை அமுதாவிடம் சொன்னேன். அமுதாவுக்கும் அது துயரம் தரும் செய்தியாக இருந்தது. ஆனால் பிகார் மக்கள் மும்பையைவிட்டு வெளியேற்றப்படும் செய்தி அமுதாவுக்குத் தெரிந்ததாக இருந்தது. "தாக்கரேவோ போக்கரேவோ யாரோ ஒரு ஆளுதான் எல்லாரயும் மும்பையவிட்டு கௌம்பிப்போங்கன்னு கட்சி கட்டறாராமே. ஒரு வாரமா டிவியில இதத்தானே செய்தியா காட்டறாங்க. அவுங்கவுங்க ஊருல அந்தந்த ஊருக்காரங்கதான் இருக்கணும்னு மும்பைக்காரனப்போல ஒவ்வொருத்தவங்களும் ஆரம்பிச்சாங்கன்னா, உலகத்த ஒரு ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷம் பின்னாலதான் உருட்டிஉடணும்" அமுதாவின் பேச்சில் வெளிப்பட்ட சலிப்பும் சீற்றமும் அந்த நேரத்தில் என் மனச்சுமையைப் பெரிதும் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருந்தன.
மறுநாள் காலை அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் ரகுவீரின் நினைவுதான் முதலில் வந்தது. ரகுவீரின் மனைவியும் சிறுமிகளும்மட்டுமே காணப்பட்டார்கள். அவ்வளவாக வெயில் இல்லையென்றாலும் முந்தானையால் தலையை முழுதாக மூடியிருந்தார் ரகுவீரின் மனைவி.

"ரகுவீர எங்க காணோம்?" நேற்று பேசிய உரிமையில் அவரிடம் நேரிடையாகவே கேட்டேன். அவருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது.

"இதோ வரேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க."

"மாரதஹள்ளிக்கா?"

"அங்கதான்னு நெனைக்கறேன்."

"புள்ளைங்க எதாச்சிம் சாப்பிட்டாங்களா?" சிறுமிகள் என்பக்கமாக திரும்பிப் பார்த்தார்கள். அவர் பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவருடைய மௌனமே பெரிய பதிலாக இருந்தது. இருப்பவர்களிலேயே மூத்தவளாகக் காணப்பட்ட சிறுமியை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த உணவுக்கடைக்குச் சென்றேன். நான்கு பேருக்கும் இட்லிகளைப் பொட்டலங்களாகக் கட்டி வாங்கி அவளிடம் தந்தேன். அதற்குள் என்னுடைய பேருந்து வந்துவிட்டது. அவசரமாக ஓடி பேருந்துக்குள் ஏறிக்கொண்டேன்.

காவல்துறையைச் சேர்ந்த ஒரு மும்பை அதிகாரி கூறியதாக செய்தித்தாளில் படித்த செய்தியை நினைத்துக்கொண்டேன். பிகார்க்காரர்களை வெளியேறிச் செல்லுமாறு அச்சுறுத்தும் சக்திகளை தனக்கு அடையாளம் தெரியுமென்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்னார். உடனே ஒரு பத்திரிகைக்காரர் அப்படியென்றால் அவர்களை நீங்கள் ஏன் கைது செய்யக்கூடாது என்று அவசரமாகக் கேட்கிறார். அதன்மூலம் அவர்கள் உடனடியாகப் பிரபலமடையக்கூடும். அந்தப் பிரபலம் வேண்டித்தானே அவர்கள் அதைச் செய்கிறார்கள். நம் கைது நடவடிக்கை அவர்கள் கேட்பதை நாமாகவே வலியச் சென்று வழங்குவதைப் போல மாறிவிடும் என்று பதில் சொன்னார் அதிகாரி. பலர் அடிபட்டுள்ளார்கள், பலருடைய இருப்பிடங்கள் சூறையாடப்பட்டுவிட்டன. பலர் மருத்துவமைனையில் உள்ளார்கள். இன்னும் பலர் நம் கண்முன்னாலேயே மூட்டைமுடிச்சுகளோடு வெளியேறிக்கொண்டுள்ளார்கள். இவ்வளவு நடக்கும்போதுகூட கைது செய்யாமல் தர்க்கம் பேசிக்கொண்டிருப்பது நியாயமா சார் என்று விடாமல் பத்திரிகைக்காரரும் ஆதங்கத்தோடு கேட்டார். காவல் துறை அதிகாரி எல்லா மாநில அதிகாரிகளையும்போல ஒரு எழுத்துகூட மாறாமல் காவல் துறை தன்னுடைய கடமையைக் கட்டாயம் செய்யும். மக்களுக்கு அச்சம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நேர்காணலை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

மும்பையில் இந்த வெளியேற்றம் நடப்பதால் பத்திரிகைகளில் இது தலைப்புச்செய்தியில் இடம்பெற்றுள்ளது. செய்தியில் இடம்பெறாத வெளியேற்றங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட செயல்கள் நடைபெறுகின்றன. மாற்றுமாநில உழைப்பாளிகளை எதிரிகளாக உருவகித்துக் கட்டமைக்கிற உள்ளூர் அரசியல்காரர்களை யாராலும் தடுக்கமுடியவில்லை. எப்படியோ அவர்களும் தன்னைச்சுற்றி ஆயிரம் பேரை திரட்டிவைத்துக்கொண்டுள்ளார்கள். அவர்களுடைய தன்னல நோக்கங்களையும் விரோதப்போக்கையும் அம்பலப்படுத்தி மக்களை சகோதரஉணர்வுடன் வாழத் தூண்டும் சக்திகளை சமூகத்தில் காண்பது மிகவும் அபூர்வமாக உள்ளது. தம் குரலே அடிமட்டத்து மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் குரல் என்று சொல்லி ஊடகங்களை நம்பவைக்க அவர்கள் முயற்சி செய்யும்போது, அதைத் தவறு என்று முளையிலேயே சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாராக இல்லை. மீண்டும்மீண்டும் அவர்களை மையப்படுத்தி மையப்படுத்தி ஊடகங்களே அவர்களை வளர்க்கின்றன. இந்தியாவின் எல்லாப் பெருநகரங்களிலும் இப்படிப்பட்ட அதிகார சக்திகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருவது மிகப்பெரிய ஆபத்தின் அடையாளம்.

பகல்முழுதும் இப்படிப்பட்ட செய்திகளை துண்டுதுண்டாக மனத்தில் அசைபோட்டபடி இருந்தேன். சகோதர உணர்வை நாம் இழக்கும்போது இப்படிப்பட்ட வெறுப்புக்கான விதை மனத்தில் ஆழமாக விழுந்துவிடுகிறது. தன்னைவிட தன் சகோதரனுக்கு இறைவன் நெருக்கமாக இருக்கிறான் என்ற சீற்றத்தில் சகோதரனைக் கல்லால் தாக்குகிறவனைப்பற்றிய சித்திரம் இடம்பெறும் பைபிள் கதையை மனம் நினைத்துக்கொண்டது. தன்னலம் என்னும் நச்சுமரம் வேரூன்றி வளர்வதற்கான இடமாக மனிதமனம் மாறும்போது விரும்பத்தகாத விளைவுகளே காலமெல்லாம் நிகழ்கின்றன.

வீட்டுக்குத் திரும்பும்போது ஏழரையைத் தாண்டிவிட்டது நேரம். அந்த நேரத்திலும் பேருந்தில் ஏகப்பட்ட கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம்போல பிதுக்கப்பட்ட நிலையிலேயே நிறுத்தத்தில் இறங்கினேன். ஒருகணம் ஆடைகளையும் காலணிகளையும் சரிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தபோது ரகுவீரின் நினைவு வந்தது. காலையில் ரகுவீரின் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தேன். காணவில்லை. அந்த இடத்தில் யாரோ ஒரு வயசாளி நின்று புகைபிடித்துக்கொண்டிருந்தார். எங்கே போயிருக்கக்கூடும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். பசியால் துவண்டிருந்த அந்தச் சிறுமிகளின் முகங்கள் ஒருகணம் நினைவிலெழுந்தன. சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு எப்படியாவது அவர்களாகவே மாரதஹள்ளியைக் கண்டுபிடித்து போயிருப்பார்கள் என்றும் யாராவது அவர்களுடைய ஊர்க்காரர்களே அங்கே தென்பட்டு, அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கவேண்டும் என்றும் நானே பதிலும் சொல்லிக்கொண்டேன். அந்தப் பதில்தான் சற்றே மனத்துக்கு ஆறுதலாக இருந்தது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 5

மூன்று பேர்
- ஹரன் பிரசன்னா



இந்தக் கதையை (கதையா, கட்டுரையா, கட்டுரைத் தன்மை அற்ற வெறும் அறிவியலா என்பது பற்றி போகப்போக நிறைய சொல்லியிருக்கிறேன், பொறுமை) மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பிக்கிறேன் என்பது எனக்கே புரிகிறது. சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் எதுவுமே அபத்தம் என்பது என் கருத்து. என்றாலும் இப்போது அப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல நாவல்களின் தொடக்கமும், சிறுகதைகளின் தொடக்கமும் இப்படி அபத்தங்களுடன் ஆரம்பித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன். இன்றைய அறிவியல் உலகத்தில் – அறிவியல் வந்துவிட்டது, இனி யாரும் இதில் அறிவியல் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது எனச் சொல்லிவைக்கிறேன். ஆனால் இது அறிவியல் புதினமா அறிவியல் நிகழ்வா எனத் தொடங்கக்கூடும். இவர்கள் எதில்தான் தலையிடாமல் இருந்தார்கள்? ஒரு அறிவியல் கட்டுரை எழுதும் ஒருவனுக்கு இந்நாட்டில் நிகழும் அநீதியைப் பற்றிச் சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது. இத்தனைக்கும், இது அறிவியல் யுகம்! சரி, நான் இதை ஒரு நிகழ்வாகச் சொல்கிறேன் எனவும் நீங்கள் அதை புனைவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்பு, வெகு முன்பு ஊமைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், ஒருவர் திரையின் முன்னே தோன்றி கதையை விவரிப்பாராம். (என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தைப் போட்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், அநீதி செய்யும் ஜூனியர்களுக்கு நான் இளப்பமா என்ன?) நம் மரபு பழைய எந்த ஒன்றையும் நிராகரிக்கக்கூடாது என்கிற கருத்தாக்கம் அடர்வு பெறுகிற சூழலில் நான் அதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது – அபத்தங்கள் இருக்கமுடியாது (-ஐ ஆரம்பித்து –ஐ முடித்துவிட்டேன். நான் சில கட்டுரைகளில் இதைத் தவிர்த்திருக்கிறேன். கட்டுரை எடிட்டர் கடுமையாகக் கோபப்படுவார். இந்த அறிவியல் கட்டுரையில் (பிராக்கெட்டுக்குள் பிராக்கெட், :) ஸ்மைலியும் உண்டு, ஏனென்றால் அறிவியல் உலகமல்லவா!) அறிவியல் புனைகதையில், அறிவியலில், அறிவியல் கட்டுரையில் (சே, ஏதோ ஒரு எழவில், Hereafter 'அறிவியல் கட்டுரை/கதை' will be referred as 'எழவு') எடிட்டருக்குக் கோபப்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பிராக்கெட் முடிக்கப்படாத, - முடிக்கப்படாத கோபங்கள் இருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது பிராக்கெட்டை ஏற்கெனவே முடித்துவிட்டேன், முதல் பிராக்கெட்டை முடித்துவிடுகிறேன்) என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் நாம் அந்த அபத்த மரபை மட்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக்கொண்டே இருந்தோம்.

என் பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். என்னால் ஒரு விஷயத்தை ஒரு விஷயமாக மட்டும் சொல்லமுடியாது. அது முதல் பிரச்சினை. (இரண்டாவது பிரச்சினை என்ன என்பதை, முதல் பிரச்சினை தீர்ந்த பின்னர் சொல்கிறேன்.) இதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். அக்காலங்களில் திண்ணைப் பேச்சு என்று ஒன்று உண்டு என்று சொல்வார்கள். அதுவே பின்னர் மின்னஞ்சல் பேச்சாகப் பரிமாணம் பெற்றது. அந்த திண்ணைப் பேச்சின் எச்சமே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் பேசுவதால் எனக்கு வயதாகிவிட்டது என்றும், அறிவியல் பற்றிப் பேசுவதால் விஞ்ஞானி என்றும் நீங்கள் யூகித்திருக்கலாம். நாந்தான் சொன்னேனே, அறிவியல் உலகில் ஏன் அபத்தங்கள் இருக்கக்கூடாது என்று.

அக்காலங்களில் பாட்டிக் கதை என்று சொல்வார்கள். நானும் என் பணிக்காலத்தில் நடந்த ஒரு கதையையே உங்களிடம் சொல்லப்போகிறேன். இதுவரை சொன்னது ஒரு முன் தயாரிப்பு. உடலுறவில் முத்தம், தடவுதல் போன்ற முன் தயாரிப்பைப் போன்றதே இதுவும். பாட்டிக் கதையில் எடுத்த எடுப்பில் ஒருவர் கதைக்குள் செல்வதில்லை. 'ஒரு ஊர்ல ஒரு' என்கிற பிரயோகம் பன்னெடுங்கலாமாக இருந்தது என்று வாசித்திருக்கிறேன். அது வெறும் 'ஒரு ஊர்ல ஒரு' இல்லை. ஒரு முன் தயாரிப்பு. நான் மரபை மீட்டெடுக்கிறேன். இந்த 'எழவிலும்' நீங்கள் அதை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


நம் பழங்காலத்துத் திரைப்படங்கள் ஆரம்பிக்கும்போது ஒருவித மங்கல இசை வருமே, அது போன்ற ஒரு மங்கல இசையை நினைத்துக்கொள்ளுங்கள். நான் அந்த மூன்று பேரையும் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

ஒருவன் பெயர் வினோத். இன்னொருவன் பெயர் ஜீவன். மூன்றாமவன் பெயர் கண்ணையன். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) முன்பு வெளிவந்த தமிழ் தினசரிகளில் இப்படி வந்ததை நீங்கள் இந்நேரம் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும்.) இந்த மூவரால்தான் பிரச்சினை.

விஷயம் சின்ன விஷயம்தான் என்றார் மேத்யூ. அவர்தான் தலைமை விஞ்ஞானி. நிரலியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பார் என்றார். ஒன்றும் புரியவில்லையா? முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென பிரச்சினைக்குள் செல்லும் வழக்கம் செத்துவிட்ட இன்றைய யுகத்தில், அதையும் ஒரு மரபெனக் கருதி புதுப்பிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.


நான் நிரலியை முழுக்கப் பரிசோதித்தேன். துல்லியமாக இருந்தது. பிரச்சினைகளே இல்லை. மேத்யூவிடம் சொன்னேன். 'தாயோளி' என்றார். அவர்தான் எனக்கு இதுபோன்ற பழம் தெறிகளைக் கற்றுக்கொடுத்தது. அவர் சொல்லச் சொல்லத்தான் பழம் வார்த்தைகளையும், பழம் பழக்க வழக்கங்களையும் பற்றி தேடத் துவங்கினேன். இதனாலேயே என் கட்டுரைகள் பெருமளவில் கவனிக்கப்பட்டன. மரபு ரீதியான விஷயங்கள் இன்றைய நிலையில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், நான் அவற்றை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, அவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமாகவே அதை வாசித்தவர்கள் கண்டடைந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் மரபை மீட்டுவதன்மூலம் நான் அவர்களை மிக எளிதில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படித்தான் மேத்யூவைப் பின்னுக்குத் தள்ளி, எடிட்டரின் திட்டோடு, அதிக ராயல்டியையும் பெறத் தொடங்கினேன்.


மீண்டும் மூன்று பேர் பிரச்சினை. 'நல்லா பாத்தியா' என்றார் மேத்யூ. தவறுகள் இருந்தால் அதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார் மேத்யூ என்பது எனக்குத் தெரியும். நான் நிரலிகளைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், அதில் தவறுகள் இல்லையென. இருந்தாலும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். என் மூளை எல்லாவற்றையும் உபயோகித்தேன். ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. அந்த மூன்று பேரும் அப்படித்தான் இருந்தார்கள். எப்படி? முன்பு கொசு என்கிற ஒரு உயிரினம் இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதை விரட்ட ஒரு கொசுவர்த்தி என்கிற ஒரு விஷயமும் இருந்தது. அதற்கு சுருள் சுருளான ஒரு வடிவமும் இருந்தது. அதைப் போன்ற ஒரு சுருள் வடிவத்தைப் பின்னோக்கிய நினைவுக்கு ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதி பழைய படங்களில். அதைக் கிண்டல் செய்து, அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த கொசுவர்த்திச் சுருளைச் சுற்றிக் காண்பிப்பார்கள். (எப்படி நான் ஆரம்பித்த இடத்திற்கு வரப்போகிறேன் என்பது எனக்கே குழப்புகிறது!) அப்படி நீங்கள் ஒரு கொசுவர்த்தியையும் அது உங்கள் கண்முன் சுற்றுவதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆம், உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப்போகிறேன்.


மிக வெற்றிகரமான விழாவாக அதை அறிவித்தார் மேத்யூ. மனிதனை ரோபோவாக மாற்றிக் காண்பித்ததில் உள்ள தடைகளையெல்லாம் எளிதாகக் கடந்ததற்காக அவருக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. (பாரத் ரத்னாவின் பெயரை இந்திய ரத்னா என்று மாற்றி, மரபை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக மீண்டும் அதை பாரத் ரத்னா என்று மாற்றினார்கள். இதுவரை இது தெரியாதவர்கள் அவர்களது பொது அறிவைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். உபரித் தகவல், திண்ணைப் பேச்சு இப்படித்தான் பொதுஅறிவில் ஆரம்பிக்கும்!) அன்றிரவு நடந்த பார்ட்டியில் சில சந்தேகங்களை நான் கிளப்பினேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. இந்த சந்தேகங்களுக்காக நிறைய முறை பாராட்டியிருக்கிறார் மேத்யூ. அதைவிட அதற்காகத் திட்டியுமிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


நான் கேட்ட சந்தேகம் மிக எளியது. இந்த ரோபோவாக மாறிய மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் மேத்யூ. ஏனென்றால் நிரலியில் அவை ஒன்றுக்கொன்று எதிரியாக உணரும் நிரலி சேர்க்கப்படவில்லை என்றார். எங்கும் அன்பு, எங்கும் சகோதரத்துவம், எங்கும் அமைதி என்று (தொப்பை குலுங்க, பிரெஞ்சு தாடி விரிய கண்ணாடியின் வழியே காணும் கண்களுடன் சிரித்தார் மேத்யூ என்று எழுதியிருப்பார் சுஜாதா என்னும் ஓர் எழுத்தாளர். அவரே தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. 2000மாவது வருடங்களில் நிறைய எழுதி தள்ளியிருக்கிறார். அறிவியல் கதைகளின் முன்னோடி. அவர் செய்த அபத்தங்கள் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது உங்களுக்கு இன்னொன்று புரிந்திருக்கும், அபத்தத்தில் தொடரும் எதுவும் அபத்தத்திலேயே முடியவேண்டியதில்லை என.) அலுங்காமல் குலுங்கால் சிரித்தார் மேத்யூ. ஏனென்றால் அவருக்குத் தொப்பை இல்லை, பிரெஞ்சு தாடி இல்லை. (இலக்கிய வகை காவியம் ஆகவேண்டுமென்றால் அறுசுவை இருக்கவேண்டும் என்கிற தியரி நீண்ட நாளாக இருந்தது. அதை அடியொட்டி இப்போது உங்களுக்கு நகைச்சுவையை வழங்கிவிட்டதாக நம்புகிறேன். மீதி ஐந்து சுவைகளை இக்கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை எழுதப்போகும் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ தருவார். பொறுத்திருங்கள்.)



திடீரென மேத்யூ சொன்னார், 'நாம் மோத வைத்துப் பார்த்தால்தான் என்ன?' என்று. மீண்டும் முன்பொரு காலத்தில் என்று சொல்வதற்கு வருந்துகிறேன். என் 'எழவு' எதிரியான அநீதியாளர் ஜூனியர் மேத்யூ நான் எத்தனை முறை மரபு என்றும், முன்பொரு காலத்தில் என்றும் எழுதியிருக்கிறேன் என புள்ளி விவரங்களோடு வரக்கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. (இந்த வரி வரவில்லை என்றால் என் கட்டுரையில் சுரத்தே இல்லை என்று அர்த்தம் என்று எடிட்டர் அடிக்கடிச் சொல்லுவார்.)



சோதனை தொடங்கியது. முதலில் ஒரு நிரலியைச் சேர்த்தோம். மூன்று பேரில் ஒருவனைப் பணக்காரனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் படைத்தோம். மூன்றாமவனை பிச்சைக்காரனாக்கினோம். மூவருக்கும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான வரையறையை அளித்தோம். அவர்களின் கீழ்க்கோப எல்லையை குறைத்தோம். மூவரையும் இரவு ஒரே அறையில் அடைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் 'ரணகளம் ரத்தபூமியாக' மாறும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. உள்ளே பார்த்தபோது மூவரும் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறக்க நேரத்திற்கு முன்பாகச் சண்டை வந்திருக்கவேண்டும் என்பது எங்கள் நிரலியின் வரையறை. மேத்யூ மெல்ல நெற்றியைச் சுருக்கினார். சுருக்கங்கள் வழியே மெல்ல வியர்வை வழிந்து, பிரெஞ்சு தாடி இல்லாத அவரது ஒற்றை நாடியின் வழியே வழிந்து நெஞ்சில் சொட்டியது. மேத்யூ யோசித்தார், யோசித்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்.



மீண்டும் நிரலிகளையெல்லாம் என்னென்னவோ மாற்றினார். துப்பாக்கி, வெடிகுண்டு என எல்லாம் கொடுத்து ஒருவரை ஒருவர் பார்த்தாலே சுடவும், குண்டு எறியவும் நிரலி எழுதினார். ம்ஹூம். ஒன்றும் உதவவில்லை. மூவரும் இயல்பாகப் பேசிக்கொண்டார்கள். தூக்க நேரத்தில் சரியாக உறங்கத் தொடங்கினார்கள். சண்டை மட்டும் இல்லை.


மூன்று மனிதர்களும் இயல்பிலேயே ஆண்கள்தானா எனச் சோதித்தார். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஆணாக மாறிய பெண்ணாக இருந்தால், அதற்கான கூடுதல் நிரலியைச் சேர்க்க நினைத்திருப்பார் போல. ஆனால் இந்த நிரலி தேவையற்றது என்று ஏற்கெனவே நிராகரிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் யோசித்தார். இந்த நேரத்தில் ஒரு பழமொழி சொல்வதில், மரபை மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி எனக்கு. :) பசிச்சவன் பழங்கணக்கப் பார்த்தானாம்.


மூவருமே பிறப்பிலேயே ஆண்கள்தான் என்பதும் ஊர்ஜிதம் ஆயிற்று. அதற்கு மேலும் நெற்றியைச் சுருக்க வழியில்லை என்பதை மேத்யூ உணர்ந்துகொண்டு, வேறொரு மேனரிசமாக கன்னத்தில் கைவைத்துக்கொண்டார். இதை சரி பார்க்காமல் அவர் வாங்கிய பாரத் ரத்னாவைத் திரும்பக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருப்பார் என நினைக்கிறேன்.


இங்கே கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாருங்கள். இப்போது மேத்யூ நான் கண்டுபிடித்த பதிலை ஒட்டி பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அதில் அவர் எதிர்கொண்ட தகவல்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. 'இதை கவனிக்காம நாம நிரலி எழுதினதே தப்பு' என்று அவர் புலம்பியிருக்கவேண்டும். இன்றைக்கு மேத்யூ இல்லாத நிலையில், ஒன்றுமே தெரியாமல் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ என்னை எதிர்த்துக்கொண்டிருக்கிற வேளையில், இக்கட்டுரை என்னை பாரத் ரத்னாவாக்கும் என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.



மேத்யூ நெற்றியைச் சுருக்காமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நான் பழம் இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சில கல்வெட்டுக்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயம் எனக்குள் பிடிபட, கிட்டத்தட்ட மூன்று பேரையும் நோக்கி ஓடினேன். மேத்யூ நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் மூவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு அவர்களின் நிரலியை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த விஷயம் அதில் இல்லை. அந்த மூவரின் பூர்வத் தகவல்களைச் சேகரித்தேன். நான் நினைத்தது சரியாக இருந்தது.


மேத்யூவிடம் சொன்னேன். 'உங்கள் பாரத் ரத்னாவிற்குப் பிரச்சினை இல்லை.'


'அப்படியா?'


'ஆம், 'சண்டை போடு' என்கிற பழைய நிரலியுடன், ஒரே ஒரு நிரலியை மட்டும் சேர்க்கிறேன், என்னாகிறது பாருங்கள்' என்றேன். மூவரின் நிரல்களிலும் ஒரேஒரு நிரலியை மட்டும் சேர்த்தேன். அவர்கள் அந்த வரையறையை ஏற்றுக்கொள்ளச் செய்தேன். ஒரு அறைக்குள் அடைத்தோம். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, அடிதடி சத்தம். சரியான சண்டை. நாங்கள் நிரலியில் சேர்க்காத கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகிறதோ என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்தது.


மேத்யூ ஆச்சரியம் பொங்க, 'என்ன செய்தாய்' என்றார்.


'நீங்கள் ஜாதியை மறந்துவிட்டீர்கள். அவர்கள் மூவரும் ஒரே ஜாதி. அதை மாற்றினேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதி என்று வைத்தேன். பிரச்சினை தீர்ந்தது' என்றேன்.


இதை மரபின் மீட்சியாகப் பார்க்கவேண்டுமா, அல்லது தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டுமா எனத் தெரியாமல் மீண்டும் நெற்றியைச் சுருக்கிய மேத்யூவின் முகம் என் கண்முன்னே இன்னும் இருக்கிறது.


ஜூனியர் மேத்யூவிற்கு இதை சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஜாதியைச் சேர்ந்த மூன்று பேரை உன் நிரலியால் சண்டையிட வை, நான் என் சொத்தையெல்லாம் உனக்கு எழுதி வைக்கிறேன். சவாலுக்குத் தயாரா சின்ன பையா?



-- சீவன், 24-11-2108


(பின்குறிப்பு: ஏய் எடிட்டர், இக்கட்டுரையில் ஏதேனும் கைவைத்தால், சில புதிய தெறிகளை உனக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன். கவனம்.)

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 4

பூனையின் உயிர்த்தெழுதல்
- ஹரன் பிரசன்னா


எத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.

ஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.

முதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.

ஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.

ஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.

ஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து 'புஸி பாஸ் பாஸ்' என்று அழைத்தேன். சத்தமே இல்லை. இடையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், 'பூனை செத்துக் கிடக்குது.'

என் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் 'என்னாச்சுப்பா' என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு 'செத்துப்போச்சா' என்றான். என் மனைவி உடனே 'சாகலை. நாளைக்கு வரும்' என்று சொல்லி வைத்தாள்.

மறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் 'அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே' என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், 'பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை' என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் 'ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத' என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.

பின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.

லோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவே இல்லை.

வீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.

நான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், 'வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.' அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். 'அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க' என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். 'பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.' 'எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு' என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

பூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென்றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.

வீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். 'எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.

பூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் 'பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்' எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - 1

தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது
- வா. மு.கோமு


" தோழர் விருப்பப்படி அவர் இறந்த பிறகு பிரேதத்தை அவரது உற்ற நண்பர்கள் நீளவாக்கில் இரண்டு குழி வெட்டி தோழரை இரண்டாகப்பிளந்து இரண்டு குழிகளிலும் அடக்கம் செய்து விட்டார்கள். காற்று சூழ்ந்திருக்கிறது , மதியத்தில் டைனோசர்கள் புற்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன."

ஈரோடு பாரதி புத்தகாலயத்தில் புதியதாக ஏதாவது நாவலோ , சிறுகதைக்கொத்துக்களோ கிடைக்குமா என்று நான் தேடிக்கொண்டிருந்த சமயம்தான் என்று நினைக்கிறேன் அல்லது அப்படி தோணுகிறதோ என்னவோ , கடைக் கல்லாவின் முன் அமர்ந்திருந்த அதிகை நீண்ட நேரமாகவே என்னிடம் ஏன் ஒரே ஒரு கவிதை தொகுப்போடு கவிதை எழுதுவதை நிப்பாட்டிப் போட்டீனீர்கள்? என்று வினவ சென்னிமலை தோழர் ஒரு கணம் மனதில் பளீரென மின்னலிட்டு மறைந்தார்.

கவிதை நாயகிக்கு தொன்னூறுகளில் நிறையப்பேர் ஆடை அணிகலன் பூட்டி அழகுப் பார்த்த நேரத்தில் , கவிதைகளில் இருந்த ஆடை அணிகலன்களை களைந்து , கவிதை தன்னளவில் நிர்வாணமாகவே இருக்கட்டும் என எழுத ஆரம்பித்தவன் நான்.., பத்து , பனிரெண்டு வருடங்களாக எழுதியவற்றுள் இருபத்தி இரண்டு கவிதைகளை மட்டும் வாய்ப்பாடு சைசில் புத்தகமாக 2003 ல் கொண்டு வந்த சமயம் சென்னிமலை தோழருக்கு ஆசையுடன் முதல் பிரதியை நீட்டினேன். சமர்ப்பணம் யாருக்கு? புத்தகத்தோழர் ரகுவிற்கா? பேஸ் பேஸ்.., எல்லாஞ் செரி அவுரு ஈங்கூர்ல இருக்கிற மாதிரின்னா கொண்டி நீட்டி பாக்கச் சொல்லிட்டு , அப்புடியே சரக்கு வாங்கிட்டு வரச்சொன்னம்னா .., மளார்ன்னு சந்தோசத்துல ஏற்பாடு பண்ணுவாப்ல..., ஆளு வெளியில்ல இருக்குது! செரி முதல் கவிதை ஆஹா .., ஆஹா ரெண்டாவது மூனாவது த்தூக் கருமம் புடிச்ச எழவு எனச் சொல்லி புத்தகத்தை வீட்டு வாசலில் எறிந்தார் , இருந்தும் மளாரென ஓடிச்சென்று லுங்கியைத் தூக்கிவிட்டு உட்கார்ந்தார் வாசலில். அன்றோடு கவிதை எழுதுவதை நிப்பாட்டி விட்டேன் என்று அதிகை எழில்நிலவனுக்கு விளக்கிய சமயம் டெலிபோன் அழைக்கவே, அதிகை அதை எடுத்து காதில் வைத்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் எனது கைப்பேசியும் அழைக்கவே எடுத்து வணக்கம் என்றேன். எதிர்முனை வணக்கம் கிடக்கு கழுதை.., என்றார் நண்பர். சொல்லுங்க .., டவர் குறைவான இடத்துல இருப்பீங்க போலிருக்கு.., இருக்கிற எடமாப் பாத்து நின்னு பேசுங்க என்னுது ரிலையன்ஸாப் போச்சி.., டவுன்லதான் நிக்கேன்.., டவர் இருக்குது அப்பறம் போயிடுது.., ஒரே கூத்து இந்த டப்பிய வெச்சுட்டு.., ஹாங் இப்பக் கேக்குது சொல்லுங்க என்றேன். நண்பர் விசயத்தை சுருக்கமாக கூறக்கூற அதிர்ச்சியில் சிலையாய் நின்று போனேன். திருப்பூர்க்கும் , கூலிப்பாளையத்துக்கும் இடையில் பேசஞ்சர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது , பெட்டி விட்டு பெட்டி தாவுகையில் கை பேலன்ஸ் தவறி விழுந்து நொடியில் தோழர் இறந்து விட்டாராம். ரயில்வே போலிஸ் பாடியை போஸ்ட்மார்ட்டம் செய்து தைத்து சென்னிமலை அனுப்பி விட்டதாம். விசயம் அறிந்ததும் தோழர் தொடர்பான பதினேழு வருட நினைவுகள் சரமாரியாக என்னுள் பெருக்கெடுத்து ஓடின.

கைப்போனில் கதைச்சது யார் உங்களது பெட்டையா? என்றார் அதிகை. நான் மண்டையை இருபுறமும் ஆட்டி மறுத்து விட்டு மண்டையைப் பிடித்தபடி நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். தோழர் என்கிற மனிதரின் மறைவு பற்றிய செய்தியை அதிகைக்கு சொன்னதும் " தோழர் என்றால் ஆமிக்காரரோ? என்றார். ஒரு சில கவிதைகளையும், சிறுகதைகளையும், ஒரே ஒரு நாவலை மட்டுமே தமிழ் இலக்கியத்திற்கு தந்தவரை இலக்கிய உலகு எப்படிக்கேட்க வேண்டுமோ அப்படியே அச்சு அசல் கேட்டார், " ஒரு ரீ சாப்பிடுவோம் " என்றவரிடம் மறுப்பை உதிர்த்து விட்டு கடையை விட்டு கிளம்பினேன்.

தோழரை நேரில் சந்தித்து உரையாடிய எல்லா சந்தர்ப்பங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன, அவை பொக்கிஷங்களாக மனதில் பதுங்கி இருக்கின்றன. கடைசியான சந்திப்புகளில் தோழரின் மனம் சற்று பிறழ்ந்து இருப்பதை அடுத்தவர்கள் தெரியப்படுத்தியிருந்தாலும் இந்த மண்டைக்குள் வெறும் மசாலா மட்டுமே இருப்பதால் அப்படி தோன்றவில்லை.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் முதன் முறையாக ஈங்கூர் ரகுதான் என்னை சென்னிமலை சென்று தோழரைப் பார்த்து வருவோம் வாருங்கள் என்று அழைத்துப் போனார். முதன் முறையாக சென்னிமலை சென்றதும் அப்போதுதான்.

வீட்டில் அம்மாவிடம் சென்னிமலை செல்கிறேன் என்றதும்.., " இப்போதான் நல்ல புத்தி வந்திருக்கு என்றது. நல்ல புத்திக்கும் சென்னிமலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் ஏன்? என்றேன். சாமி கும்பிடத்தானே என்றதும் விளங்கியது. நீங்கள் வேண்டுமானால் உங்கள் நண்பரிடம் திருப்பதி போகிறேன் என்று சொல்லுங்கள் மொட்டை போடவா? என்பார்கள் அதுப்போலத்தான் இதுவும்.

கூட்டிப்போன நண்பர் ரகு இப்போது லக்னோவில் மாட்டுப்பண்ணை வைத்திருக்கிறார். மதிய சாப்பாட்டுக்கு பள்ளியில் இன்னமும் மணியடிக்கவில்லை, நேரம் இருக்கும் போல என்று காகங்கள் வேப்பையிலிருந்து பறந்து போகும் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர், இப்போது ஏதாவது எழுதுகிறிர்களா? என்று கேட்டால், ஏதுங்க அதுக்கெல்லாம் இப்போ நேரம்? கவிதை எழுதீட்டு இருந்தா ஊட்ல சோத்துக்கு குஞ்சி மணிய வாயில வெச்சிக்க வேண்டீதுதான் என்கிறார். சரிப்போயிச்சாட்டாது வாசிக்கிற பழக்கமாச்சிம் உண்டா? என்றால், வெலை என்னங்க ஒவ்வொண்ணும் ஒரு மாட்டுக்கன்னுக்குட்டி வெலை சொல்றான்.., அந்த காசுக்கு நாலு தீவனம் வாங்கி மாடுகளுக்குப் போட்டா அதுக தின்னாலாச்சும் ரெண்டு படி பாலு சேத்திக்கொடுக்கும் என்பார். நல்ல வேளை இப்பெல்லாம் யாரு கவிதை எழுதிட்டு இருக்காங்க செஞ்சிட்டு இருக்காங்க.., அப்படின்னெல்லாம் சொல்லவில்லை.

சென்னிமலை வண்டிப்பேட்டையில் இறங்கியதும் நண்பர் குமரன் சிலையைக் காண்பித்தார். அதை ஒரு பிரம்மாண்டத்தை பார்ப்பதைப்போலவோ , போராட்ட தியாகியைப் பார்ப்பது போன்ற உணர்வுடனோ அப்போது குமரனை பார்க்கவில்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். கொடியை குமரன் காத்தது திருப்பூரில். சிலைக்கு பின்புறத்தில் துணிக்கடை,டீக்கடை
ஓட்டல் என்று இருந்தன. மற்றபடி நிறுத்தத்தில் பேரூந்து வருகைக்கு காத்து நின்றிருந்தவர்கள்
என சொற்ப கூட்டமே இருந்தது. நண்பர் திருப்பூரில் "ஓஷோ பேசன்ஸ்" என்ற பெயரில் சங்கீதா தியேட்டரை ஒட்டி மாடியில் கம்பெனி வைத்திருக்கையில் கட்டிங் மாஸ்ட்டராக தோழர் இவரிடம் நான்கு வருடங்கள் பணிபுரிந்தவர் என்பதால் ஏற்கனவே தோழர் வீட்டுக்குபலமுறை வந்து போனவர்தான்.

உத்துக்குளி சாலையில் என்னை மேடேற்றி கூட்டு வந்தவர் " பிராந்திக்கடை" கண்டதும் என்னைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு கடைக்குச் சென்றார். மூன்று கோட்டர் பாட்டில்கள் வாங்கி இடுப்பில் இரண்டையும், சைடு பாக்கெட்டில் ஒன்றையும் செருவிக்கொண்டு மறுபடி ஒரு முறை கண் சிமிட்டி விட்டு நடக்க ஆரம்பித்தவர் பின்னால் நடந்தேன். " இது எதுக்குங்க மணி பத்தரைதானே இருக்கும்? என்றேன். " நீங்க வேற.., நேரங்காலமெல்லாம் தோழருக்கு கெடையாது. அதும்மில்லாம சரக்கோடதான் அவுரு ஊட்டு வாசப்படியயே நாம மிதிக்கோனும், அப்படி போவலின்னா, இங்கெதுக்கு அப்புறம் என்னைப்பாக்க பஸ் ஏறி வரனும்? உங்கூட்டிலயே பொட்டாட்ட சிவனேன்னு கவுந்து படுத்துக் கெடக்க வேண்டீதுதான.., எனக்குனு வாச்சதுக ஒன்னு கூட சுத்தமில்லே என்றுதான் பேசுவாராம். ஒரு மனிதன் சீக்கிரம் சுடுகாடு அனுப்புவதற்கான ஏற்பாட்டோடு செல்வதாகத்தான் பட்டது அப்போது

"புடுங்கிக் கத்தை
கட்டிப் போடலாம்னுதான்
வர்றோம்
ஒன்னத்தீம் புடுங்க முடியாமயே
அடுத்தவன் வாயைப்
பாத்துட்டே போயிடறோம்". - வாழ்க்கை ( தோழர் 1993)

மாரியம்மன் கோவிலையொட்டி விஸ்தாரமான சந்து ஒன்று தெற்கே பிரிந்தது. மேற்குப் புறமாக புளியமரங்கள் நெட்டுக்கு நின்றிருந்தன. அந்த வீதியில் நண்பரும் நானும் செல்கையில் " கடக் கடக்" என்ற ஒலி ஒவ்வொரு வீட்டினுள்ளிருந்தும் கேட்டபடி இருந்தது. அவர்களெல்லாம் வீட்டுனுள்ளேயே கைத்தறி நெய்து கொண்டிருந்தார்கள் கொஞ்ச தூரம் வந்ததும் ஒரு வீட்டின் படலை உள்புறமாக தள்ளி நண்பர் உள் செல்ல நானும் சென்று படலை பழையபடி சாத்தினேன். வீட்டின் முன்புறம் பந்தக்காலில் சங்கிலியோடு கருத்த புஷ்டியான நாய் கட்டப்பட்டிருந்தது.

படலை நீக்கி உள்நுழைந்த சமயம் படுத்திருந்த அது விருட்டென எழுந்து எங்களை நோக்கி துடைச் சதையை கவ்வி இழுத்து விடுவது போலப் பாய்ந்து குரைத்து வந்தது. சங்கிலியின் தூரம் குறைவாக இருக்கவே கோபத்துடன் குரைத்து சங்கிலியை வேறு ஒரு கடி கடித்து உதறியது. எனக்கு நாய் என்றால் சிறு வயதிலிருந்தே பயம்தான். ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம் நாய்க்கடிப்பட்டு தொப்புள் சுற்றிலும் பத்து ஊசி போட்ட ஞாபகம் கருநாய்களைக்
கண்டால் ஞாபகமாகிவிடும்.

- டேய் மணி கம்முனிருக்க மாட்டே.., பன்னாட்டு சாஸ்த்தியாப் போச்சாட்ட இருக்குதே, ஊட்டுக்கு ஒருத்தரையுமே வர வுடமாட்டியா? " சத்தமிட்டபடி வெற்று மேலோடு லுங்கியை உதறிக்கட்டியபடி தோழர் வீட்டினுள்ளிருந்து வந்தார். ரகு கொஞ்சம் ஒதுங்கி , " வாயில்லாச் சீவனப்போட்டு கட்டி வெச்சு வளர்க்கிறீங்களே.., நாயமா தோழர்" என்றார்.

- நீங்க வேற அவுத்துட்ட சடுதிக்கி கெடையில் நிக்குதிங்றீங்களா? துரூவா பீக்காட்டுக்கு ஓடி வயித்த ரப்பீட்டு ஓடியாந்து ரோட்டும் பேர்லேயே நின்னுக்கும். போற வார வண்டிகள முடுக்கீட்டு மேக்கைக்கும் கிழக்கைக்கும் ஓடீட்டு என்ன ரவுசுங்றீங்க.

- நாயி ஜம்முனு இருக்குது வாலை வெட்டீட்டீங்ளே.., மொண்ணை வால் நாயின்னு ஆயிப்போச்சுங்களே.

- அது எங்கப்பன் பண்ண வேலை, வாலு சு?ண்டுக்குதுன்னு முன்னீல வெச்சு இது சிறுசா இருக்கப்பவே தறிச்சுப் போட்டாப்ல, வாலு சுருண்ட நாயிதான் ஊட்டுக்கு ஆகாதாம்ல. இதுக்கு கொசுவர்த்தி சுருள் கணக்கா மூணு சுத்து சுருள் இருந்துச்சு. அது கெடந்து சாட்டாது வாங்க உள்ளார. டீ வெக்கிலாம்னா ஊட்ல சனமே இல்ல. தலை ஏனோ வலிக்குதுடான்னு
எங்கம்மா சித்த முந்தித்தான் திண்ணைல நீட்டி கெடந்திச்சு. மளார்ன்னு நூலு போட டெக்சுக்கு போயிடுச்சு . சரி நாம வெக்கலாம்னா டீத்தூள் டப்பா எங்க கெடக்கோ .., சக்கரை டப்பாவுல இருக்கோ என்னமோ.., சரீங்க ரகு கூட ஆரவோ கூட்டிட்டு வந்திருக்கீங்களே .., பெரிய்ய எழுத்தாளரா? ஆடு திருடுன கொரவானாட்ட இருக்குற முழிய மாத்தச் சொல்லுங்க
நக்சலைட்டுனு புடிச்சிக்கொண்டி உள்ளார வெச்சு நிமித்தீருவான், அப்பறம் பஞ்சாயத்துக்கு நாமதான் படியேறனும், உக்கோருங்க இப்டி ஷோபாவுல. என்ன விஷயம்? எப்படி போயிக்கிட்டிருக்கு?


- பேசிட்டு இருக்கதான் வந்தோம் தோழர்.., மேற்படி வாங்கியாந்திருக்கேன், கொறிச்சுக்க ஏதாச்சிம் முறுக்கு, மிச்சர் ஊட்ல இருக்கா?


- இங்கென்ன மசுரா இருக்குது., வெறுஞ்சோறும் , டவரால துளி பண்ணக்கீரைய வணக்கி வச்சதுதான்.., வாரதுதான் வாரீங்க ஒரு நேந்தர்ஞ் சிப்ஸோ. வறுக்கியோ வாங்கியாந்திருந்தா பரக் பரக்குன்னு கொறிச்சிட்டே நாயம் போட்டு நொக்கு வாங்கியிருக்கலாம், சித்த சடவா இருக்குதுன்னு நீட்டி உட்டு இப்பத்தான் உழுந்தேன் பாயில.

இப்படி தொட்டதுக்கெல்லாம் எகத்தாளம் பேசும் மனிதனை வாழ்வில் முதலாகப் பார்த்த கணம் கொஞ்சம் அதிர்ச்சியாக எனக்கு இருந்ததுதான் என்றாலும், தோழருக்காக அவரின் நட்பை வேண்டி என் பங்கிற்கு வெளியே கடைத்தெருவிற்கு வந்து எதிர்ப்பட்ட கடை ஒன்றில் குச்சிக்கெழங்கு சிப்ஸ், நேந்தரஞ் சிப்ஸ், செவ்வாழை
ஆறு பழம் என வாங்கி ஓடி வந்தேன்.

உள்ளே அவர்கள் தரையில் பாய் விரித்து அமர்ந்து முதல் ரவுண்டை ஆரம்பித்திருந்தார்கள். நண்பர் தனது பேண்டை உருவி ஷோபாமீது போட்டு தோழரின் லுங்கி ஒன்றை அணிந்து கால்நீட்டி அமர்ந்திருந்தார். மூட்டாத லுங்கியை சுத்துப் போட்டு சொருவி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

- அந்த சுவத்துல மூனாவது சுவிட்சை தட்டி விடுங்க நண்பரே.., மேல காத்தாடி
சுத்தட்டும்.. உள்ளே நுழைந்த என்னிடம் தோழர் பீடி புகையும் விரலில் நீட்டி சொன்னார். நான் சுவிட்சைப் போட்ட சமயம் மின்சாரம் இல்லை போல.

என்ன ஒரு அட்டூழியம் பாருங்க ரகு,, ஒரு காத்தாடி கூட நமக்கு சதி பண்ணுது . மனுசன் நிம்மதியா இருக்குற நேரமே குடிக்கிர நேரம்தான், சரி வந்தா காத்தாடி சுத்தட்டும்.., நீங்க சரக்கு அடிப்பீங்களா நண்பரே! இதென்ன வாய்க்குள்ளார என்னேரமும் போண்டா கெடக்கறாப்பல உம்முனு இருக்கீங்க? கூச்சப்படாம ஒக்காருங்க. அதுகளை எல்லாம் நேர்ல பாத்துருக்கீங்ளா? என்றபடி தோழர் இரண்டு கைகளையும் நீட்டி பந்து பிடிப்பது போல பிடித்து உருட்டிக் காட்டினார்.
என்ன நண்பரே! புடிச்சு கசக்கிப் பாத்திருக்கீங்ளா? டியூப்லைட்டா இருப்பீங்க போலிருக்கே,, உங்களுக்கு எந்த ஊரு ?

ஈரோடு என்றேன்.

நண்பரே ஈரோடுங்கறது சரி ., ஈரோட்ல எந்த ஏரியா? ஏரியான்னு ஒன்னு இருக்கும்ல.

சூரம்பட்டில

சூரம்பட்டிலயா? அங்க பசக இருக்காங்க எதுனா பிரச்சனைன்ன என் கையில சொல்லுங்க, தட்டி லேப்பறதுக்கு அவிகளே போதும், துளி ஊத்திக்குங்க என்றவர் மூன்றாவது சில்வர் தம்ளரில் பாதி அளவு சரக்கு ஊற்றி , தண்ணீர் கலந்து எடுத்து நீட்டினார். ஒன்றுமே சொல்லாமல் வாங்கி வாயில் அன்னாந்து ஊற்றிக்கொண்டேன்.

அட நண்பரே, வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லியிர்ருந்தீங்னா மடக்குனு நானே ஊத்தியிருப்பேன்.., அது சரி நாங்க பொழங்கற சாதிதான் வாயை ஒட்டியே குடியுங்க.., அன்னாந்து இனி ஊத்துனீங்னா எனக்கு கேவலம். சரி உடுங்க.., ஏனுங்க ரகு நண்பர் என்ன எழுதிட்டு இருக்காரு.., கேட்டாவுது சொல்லுங்க.., ரொம்ப கூச்சப்படறாப்ல..என்றதும் உள்ளே துளி சரக்கு இறங்கி விட்ட வேகத்தில் , சிறுகதைகள் எழுதுவதையும் எப்போதாவது கவிதை எழுதுவதையும் தோழரிடம் கூறினேன்.

சிறுகதை எழுதிறீங்ளா? அடக்கொடுமையே .. அதுல நீங்க எழுதுறதுக்கு என்னத்த உட்டு வெச்சாப்ல அந்த புதுமைப்பித்தன் ? அதான் இந்தாங்கடான்னு எழுதி வச்சிட்டு போயிச் சேந்தூட்டப்லையே! இப்போது நண்பர்தான் எனக்கு உதவியாய் பேச்சை வளர்த்தார். அப்படி எப்படிங்க தோழர் நீங்க சொல்லலாம்! அது ஒரு காலக்கட்டம்தானே.

சரி சொல்லப்படாது தான் , சொன்னாத்தானே நான் தோழர். பேச்சு மட்டும் இல்லீன்னா நான் டுபுக்கு டோங்கிர் தோழர் ஆயிடுவேன். கதையின்னா ஒருத்தர் எழுதுனாப்லையே அஸ்வகோஷோ முட்டக்கோஷோ ஒருத்தரு.., புற்றில் உறையும் பாம்புகள் அதான்.., எழுதுனா அது மாதிரி ஒன்ன எழுதீட்டு அவராட்டவெ கதை எழுதுறத நீங்க நிப்பாட்டிக்கணும் நண்பரே.

அதுகள எல்லாம் தாண்டின எழுத்து என்னோடதுன்னு ஒரு நெனப்பு எனக்குள்ளார எப்பயும் ஓடிட்டே இருக்குங்க தோழர்.

ரகு இந்த நண்பர் ஒரு வாட்டியாவது எப்பாச்சிம் ஜெயிச்சுட்டு சாவட்டும் என்ன ஒரு நம்பிக்கை ஒலி ,ஒளி பாருங்க.., உங்க வாழ்க்கைய நீங்க தகிரீமா எழுதுங்க நண்பரே. பிரச்சனை வந்தா இந்த தோழர் முன்னாடி நிப்பான், நான் பாத்துக்கிறேன், இன்னொரு பெக் ஊத்திக்குங்க,, பத்தாம் நெம்பர் பீடி ஒன்னு பத்த வெச்சு ஊதுங்க என்றவர் என் முன் பீடிக்கட்டையும், தீப்பெட்டியையும் நீட்ட மறுக்காமல் வாங்கி பற்ற வைத்து ஊதினேன்.

நண்பரே நாம இப்போ மசமசப்புல இருக்கம், பழம் எடுத்து புட்டுச்சாப்பிடுங்க . வெறும் சரக்கவே உள்ளார ஊத்துனீங்கன்னா கொடலு நாசமாப் போயி உங்களை நம்பீட்டு இருக்குற இலக்கியத்தை ஏமாத்திட்டு கெளம்பீடுவீங்க. குடிச்சா பரவாயில்ல.., வகுறு ரொம்ப சாப்பிடுங்க. உங்க கவிதையில ஒன்னு நீட்டமா இல்லாம பொட்டிக் கவிதை ஒன்னு சொல்லுங்க.., கேப்போம் வெக்கப்படாம பாட்டா வேணாலும் பாடுங்க, ரகு கூட்டிட்டி வந்திருக்கார்னா நீங்க பெரிய்ய ஆளாத்தான் இருக்கோனும்

" எல்லாம் உணர்ந்தவன் சொல்லிப்போனான்
எல்லாம் பொய் என்று - ஏனென்று கேட்க
நானாக உணர வேண்டுமாம். "

அடங் கொக்க மக்கா.., நீங்க மீறுன பொயட் நண்பரே, வெளையாட்டுக்கு சொல்லுலே .., என்ன பயங்கரம், " என தோழர் சொல்ல, ரகு என்னிடம் திரும்பினார் " தோழரே, பாராட்டிட்டாப்ல , நீங்க இனிமே தைரியமா எழுதலாம் . ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்ற மாதிரிதான்", என்றார்.

முதன் முதலாக ஒரு தாதா ரேஞ்சிக்கு இருக்கும் படைப்பாளியிடம் பாராட்டு பத்திரம் வாங்கவா நான் இங்கு வந்தது? கோவையில் எண்பதுகளின் கடைசியில் சுற்றிக் கொண்டிருந்த போது இதைத்தானே செய்துகொண்டு இருந்தேன். தெருச் சண்டையில் கலந்து மிதி வாங்கி , மிதி கொடுத்து ஒளிந்து ஒளிந்து திரிந்தவன் தானே, இந்த தோழரும் பயம் பீறிட எங்காவது ஓடி ஒளிந்திருப்பாரா? சோற்றுக்கு வழியில்லாமல் ஈரத்துணியை வயித்துக்கு கட்டிக்கொண்டு இரவையும் பகலையும் கழித்திருப்பாரா?

தோழர் நீங்க என்னை தட்டிக்கொடுக்கனும் , பாராட்டனும் , மேலும் எழுதத்தூண்டனும்னு உங்களை பார்க்க வரலை அதுமில்லாம உங்க வீட்டில மருந்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லை . புதுமைப்பித்தனை நீங்க வாசீத்தே இருக்க முடியாது" என்று உறுதியாக சொன்னேன். அதே சமயம் மின்சாரம் வந்து மேலே காத்தாடி சுழல ஆரம்பித்தது. தோழர் இரண்டு கால்களையும் விரித்து சுழலும் காத்தாடியையும் அண்ணாந்து ஒரு முறை பார்த்துப் பேசினார்.
நான் புதுமைப்பித்தனை படிச்சதில்லை, பாரதிய படிச்சதில்லை மார்க்சியமும் படிச்சதில்லை.., படிச்சேதான் ஆகோனுங்ற அவசியமும் எனக்கு இல்லை . எல்லாம் கேள்வி அறிவுதான். பத்து இடத்துல பத்து பேர் பேசியதை வெச்சுத்தான் நான் உறுதியா பேசுவேன். முடிஞ்ச மட்டிலும் தமிழ் இலக்கியத்தை யார்கிட்ட வேணாலும் காப்பாத்தச் சொல்லுவேன். சரி நண்பரே , நான் ஏதோ இலக்கியம்னு நெனச்சுட்டு எப்பாச்சிம் எழுதுறவன். என்னை சந்திக்க ஏன் வந்தீங்க ?

பார்த்து பேசீட்டு , கொஞ்சம் சரக்கு ஊத்தீட்டு கொண்டாட்டமா இருந்துட்டு போகலாம்னு தான் ரகு கூட்டி வந்தார். அதானே.., கொண்டாட்டத்துக்குத்தானே இப்ப ஊத்திக்கிட்டம்.., பத்தலை அப்படின்னா மறுக்காவும் வாங்கியாந்து குடிப்பம். என்ன இப்ப ? சரி நண்பரே எந்த நேரத்துல எழுதுவீங்க.., நானெல்லாம் தோணறப்ப எழுதுறதுதான்.. சில எழுத்தாளர்கள் டீயைக்குடிச்சிட்டே எழுதுறாங்களாம்.., சிலரு பாட்டுப்போட்டு கேட்டுட்டு , சிலரு தண்ணிய போட்டுட்டு.., இப்ப போன வாரம் கேள்விபட்டேன்.., ஒரு எழுத்தாளரு தன்னோட மனைவிய துணிகளை அவுக்கச்சொல்லி ரூம்ல அதுக்கும் இதுக்கும் நடக்கச்சொல்லீட்டு மூடு கெளம்பி எழுதுவாராமா.., நீங்க நகத்தை கொறிச்சுட்டே எழுதுவீங்களாட்ட இருக்குது.., ஒரு விரல்லயும் நகத்தைக் காணமே! பயங்கரமா எழுதுறேண்ட்டு விரலைத் தின்னு போடாதீங்க..

இந்த முதல் சந்திப்பை இத்தனை வருடம் கழிந்தும் நான் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு காரணம் என்று எதுவுமில்லை. ஏற்கனவே தோழர் பற்றியான குறிப்புகளை கவிதாசரண் மற்றும் சுகன் இதழ்களில் அவ்வப்போது வருடத்திற்கு ஒரு முறையேனும் அவரது மனப்பிறழ்வுகளையும் வாழ்க்கை மீதான ஆர்வத்தையும் முடிந்த அளவு பதிவு செய்திருக்கிறேன். இந்த படைப்புகளை என் வாயிலாகவே தோழர் கண்ணுற்றபோது " எதுக்கு இந்த வேண்டாத வேலை .., என்ன கொன்னே போட்டீயே என்னமோ பண்ணு .. ஆமா இப்படி குறிப்புகளா கதை எழுதுறீயே படிக்கறவிய என்னதான் சொல்றாக? யாருக்கு என்ன புரியப்போவுது. எனக்கே ஒன்னும் புரியல.. சின்னப்பொடுசு கொஞ்சம் லேட்டா ஊடு போனா என்ன சொல்லுது தெரியுமா? யம்மோவ அப்பன் சென்னிமலையிலேயே மல்லு குடிச்சுட்டு , இசியத் தின்னுட்டு வந்திடுச்சு.., அப்பன் சோத்தை எனக்குப் போடு" அப்பிடுங்குது . சரக்கடிச்சா கண்ணு இப்ப செவந்து கோவப்பழமாட்ட மின்னுதா மளார்னு கண்டுபுடிச்சுக்குது..,

அது பேசறதுக்கு நீ எழுதுறது எவ்வளவோ பரவாயில்ல போ" என்றார்.

மூத்த எழுத்தாளர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மறு நிமிசத்திலிருந்து பேரிதழ்கள் அவரது நினைவுகளை பலரிடம் எழுதி வாங்கிப் பெற்று மலர் வெளியிட்டு அஞ்சலி செய்கிறது, முன்பெல்லாம் ஏது இப்படி? சிற்றிதழ்கள் ஒரு கட்டம் கட்டி பெருந்தகையின் மறைவுக்கு அஞ்சலி என்று போட்டு விடுவார்கள். வந்து கொண்டிருந்த இதழ்களில் ஏதேனும் ஒன்று மட்டும் ரூபாய் 200 லிருந்து 300 க்குள் அன்னாரது புகைப்படம் ஒன்றை ப்ளாக் செய்து இதழின் முகப்பில் பதிந்திருக்கும்.இன்று அப்படி இல்லைதான். ஒரே எழுத்தாளரே எல்லா பேரிதழ்களிலும் இறந்த பெருந்தகை பற்றி வகை வகையாய் எழுதி வெளிவந்திருக்கும் . கிராமத்திலேயே சுற்றுவதால் இதற்கெல்லாம் பைசா வாங்கிக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

இப்படியான நினைவோடை என்று எனக்கு எழுதுவதாக இருந்தால் ஒரு கிங்க்பிசர் பீருக்காவுது வகைச்சல் பண்ணீட்டு எழுது , பீரை வாங்கி ஒடச்சு மூனு மூடிய நெலத்துல ஊத்தீட்டு அப்புறமா நீ ஏத்திக்க. ஆர், சண்முகசுந்தரத்தோட எழுத்து நம்ம மண்ணு எழுத்துதான், இன்னமும் அவரை பேசீட்டு இருக்காங்கள்ள, அது மாதிரி நீ செத்துட்டாலும் பத்து வருசத்துக்காவுது பேசுற மாதிரி ஒரு எழுத்து எழுதீட்டு செத்துப் போயிரு . கொள்கே, கோட்பாடு,இயம்னு யாரு பொறத்தாண்டியும் நீ போயிட்டீன்னா உன்னோட நீ என்ன நினைக்கிறியோ அதான் அங்க இருக்கனும் . ஒரு கோட்பாட்டாளர் எழுதினா உன்னோட வாசகர்கள் அதை எளிமையா கண்டுபுடிச்சி காறித்துப்பிடுவாங்க.., கவனமா இருக்கனும் குறிப்புகள்

1. தனியாக நடக்கும் போது எஸ்.பி,பியின் பாடல்களில் ஏதேனுமொன்றை பாடியபடி செல்வதும்,குழந்தைகளின் செய்கைகளை நின்று நிதானித்து பார்த்து
ரசிப்பதும், காற்றில் விரலால் " உலகம் " என்று எழுதிப்பார்ப்பதும் இவரது பழக்கங்கள். சுந்தர ராமசாமி இப்படி செய்வார் என்று ஜெயமோகன் உயிர்மையில்
எழுதியிருந்தார். காற்றில் " அ" போடுவது அவர் வழக்கமென்று,

2. சாருவின் கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் என்னிடம் கேட்டு வாங்கி எடுத்துச் சென்று வாசித்தவர் பின்னர் கூறுகையில் " இவுருக்கு தான்
சொல்றது தான் பெருசு.. கேட்டுக்கோ" அப்புடிங்ற நெனப்பு உள்ளுக்குள்ளார இருக்கு. இளையராஜாவை இவுருக்கு புடிக்காம போனது விளங்கலை,
மிகப்பெருசை சிறுசா சொல்றதும், ஒன்னுமில்லாததை ஊதிப்பெருசாக்கி காட்டறதுமே இவரு வேலையாட்ட இருக்கு. வாரா வாரம் ஒவ்வொரு கோனல் பக்கமா
படிச்ச திருப்தியா இருக்கும்னு நெனைக்கேன். ஒட்டுக்கா , ஓரேமுட்டா படிக்கறப்ப எரிச்ச வருது.

3. தோழருக்கு மிக பிடித்தமான திரைப்படம் " இம்சை அரசன் 23 ம் புலிகேசி" " புறாவுக்காக போரா? என்ன அக்கப் போராக இருக்கிறது ? யாரங்கே
யாரடா அங்கே.., என்கிற வசனங்களை நண்பர்கள் மத்தியில் கூறி சிரிப்பில் ஆழ்த்தியவர். என்னிடம் தனித்து அவர் கூறியது.., " எம்பட சின்ன பொடுசு
இன்னும் என்னைப்பார்த்து கேட்கும் .., " அங்கே என்ன தெரிகிறது?

4. தோழருடன் கடைசியாக சென்னிமலை அண்ணமார் திரையரங்கில் பார்த்த படம் சிவாஜி. இடைவேளை சமயத்தில் இருவரும் வெளியே சிகரெட் ஊதியபடி நின்றிருந்த
சமயம் ரசிகர் ஒருவர் சைசாக தோழரை நெருங்கி சன்னமாகப் பேசினார். அவர் கையிலும் சிகரென் புகைந்தபடி இருந்தது. " ஏனுங் ரஜினி சார் மொளகா திங்கறாரே
.., கிட்டக்காட்டறப்போ ரெண்டு மூனு மொளகா நெசமாலுந்தின்னுருப்பாருங்கல், அப்புறம் மொளகா மாதிரி முட்டாயி செஞ்சு தின்னிருப்பாப்ல அப்புடித்தானுங்?
என்றபோதும் தோழர் என் முகம் பார்த்து " முடியில" என்றபோது அவரது காது வழியாகவும் சிகரெட் புகை வந்தது.

5. நீ எப்பாச்சிம் இதை எழுது என தோழர் என்னிடம் சில சந்தர்ப்பங்களில் சிலவற்றை சொல்வார். இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஒன்று ஞாபகம் வருகிறது.
தோழரின் நண்பர் தலையில் உருமாலைக் கட்டு கட்டிக்கொண்டு பீடி கையில் புகைய தன் பசுமாட்டை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார், " ஏங்க மாம்ஸ் மட்ட மத்தியானத்துல
மாட்டை இழுத்துட்டு போறீங்க..? என்று தோழர் வினவ " ஒன்னுமில்ல தோழர் மாட்டை பிங் பாக் பண்ண கூட்டிட்டு போறேன்" என்றிருக்கிறார்.( சினைக்கு காளையிடம் கூட்டிச்செல்வது) மற்றொரு நண்பர் தோழரிடம் புலம்பியது, :" என்ன நிம்மிதிய கலியாணம் பண்டி நானு கண்டேன் தோழர்.., இவளுங்கள பிங்பாங்க் திங்கட் கிழமை பண்ணனும்னா இந்த வாரம் திங்கக்கெழமைல இருந்து நைசு பண்ட வேண்டி இருக்குது என்னா ஒரு கேவலப் பொழப்பு பாருங்க " .

6. கடைசியான சந்திப்புகளில் , " மொகுடு முட்டீட்டுது , மொகுடி முட்டீட்டுது கெளம்பித்தான் ஆவோனுமாட்ட இருக்குது பொழப்பத் தேடி. " அப்படின்னு சொல்லிக்கொண்டேயிருந்தார்.
( கடன் எச்சாயிட்டுது)

7. டீ சாப்பிடும் போதெல்லாம் வறுக்கு ஒன்னு இருந்தா கொறிச்சுட்டே குடிக்கலாம் எனக்கூறி விட்டு என்னைப்பார்த்து சிரிப்பவர். வறுக்கிப்பிரியர், தோழருடன் பியர் அருந்தும் போது
அவர் கூறுவது இன்னம் காதில் ஒலிக்கிறது. " எட்டு வருசத்துக்கு முன்னால உங்க அப்பன் செத்தப்ப மறு வாரமே இன்னொரு எழவுக்கு உன் ஊடு வரனும்னுதான் நண்பர்கள் பேசினோம்.
நோவுல நீயும் போயிடுவே அப்படின்னு.., கடவுளு கெட்டிக்காரரு , உன்னைய பொழக்க வெச்சி பீரு குடிக்கவாவது உட்டு வெச்சிருக்காரு".

8. " மணல் கடிகை" ன்னு ஒரு புத்தகம் திருப்பூரை சுத்தி எழுதப்பட்டிருக்கு அப்புடின்னியே குடுத்திருந்தா படிச்சிருப்பன்ல . " என்ற தோழருக்கு " படிக்க கொடுத்தவரு அவசரம்னு வாங்கிட்டாரு அதுல திருப்பூரை பத்தி நாம புதுசா தெரிஞ்சிக்கிற அளவுக்கு ஒன்னுமில்ல தோழர் என்றேன். " இல்ல சொன்னியேன்னு கேட்டேன்" என்றவருக்கு கொடுத்திருந்தால் ஏடாகூடமாய் நடந்திருக்க வாய்ப்பு இருந்ததை சொல்லவில்லை, கடைசியா அவர் படித்த நாவல் இலக்குமி குமரனின் " அக ஒட்டு" , மோசமில்லை என்று ஒரே வரியில் கூறி கொடுத்துச்சென்றார். ஜே ஜே சில குறிப்புகள் படித்தவர் அதில் அநுபந்தம் 2ல் ஜேஜேயின் புத்தகங்கள், கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள், சந்நியாசிகள், நூல் நிலையங்களின் ஜன்னல்கள் இதெல்லாம் வந்திடுச்சா? வந்திருந்தா குடேன் படிக்க என்றார்.

9. தோழர் மறைவுக்குப் பிறகு பதினைந்தாம் நாள் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றிருந்த சமயம் அவரது துணைவியார் ஒரு துண்டுக்காகிததை கொண்டு வந்து என்னிடம் நீட்டினார். இந்த
நினைவுக்குறிப்பை எழுதும் இச்சமயத்தில் பத்திரப்படுத்தியிருந்த தாளை எடுத்து விரித்தேன், அவசரத்தில் அடித்து அடித்து எழுதிய கவிதை அது. எதை சொல்ல வர இதை எழுதினார் என்று தெரியவில்லை.

தோழரின் வெளி வராத இந்தக் கவிதையை நீங்களும் பாருங்களேன். எப்போதும் வந்து போகும் சின்னான் என்று தலைப்பிட்டிருக்கிறார் தோழர்.

சின்னான் தளவாய்பாளையத்துக்காரன்
எல்லா வீடுகளுக்கும் சென்று போய் வருவான்
இட்ட பணி அனைத்தும் முகம் சுணங்காமல்
செய்பவனுக்கு, அடுத்த வீட்டு சமாச்சாரங்களை
அடுத்தடுத்த வீடுகளுக்கு பறப்பி விடத்தெரியாது.
முசை பிடித்த நாயொன்றின் கடிபட்டு
தொப்புள் சுற்றி ஊசி போட்டவன்
ஒரு மாத இடைவேளைக்குப் பின் எனைக்
காண வந்தவன், முட்டுச்சேலை உள்ளதா
துவைத்துப் போட்டுப் போகிறேன் என்று !
அப்படிப்பட்ட பணி எதையும் அவனுக்கு
நான் இதுவரை கொடுத்ததுமில்லை.
ஏதோ ஞாவத்தில் தவறாக கேட்டுவிட்டேன்
என்றவன் நாய்களை கொல்வது
எளிதான காரியம் என்றான்.
பூனையாகட்டும் முயலாகட்டும் கழுத்தை
கையில் பிடித்து இறுக்கினாலே போதுமானது
என்ன கால்களால் கொஞ்சம் பிறாண்டும் என்றான்,
நாய்களை மரத்தில் கட்டி வைத்து
குண்டாந்தடியில் மண்டையில் ஒரு போடு
போட்டால் போதும் மரித்துவிடும் என்றான்
ஏன் இந்த கொலை வெறி என்றேன்.
நாய்கள் நம்மை கடிப்பதும்
நாம் நாய்களை கொல்வதும் வழக்கமாக
நடப்பதுதானே என்றவன்
குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டு
வாங்கி குடித்து, நாத்து நடும் வேலை
இருப்பதாய்க் கூறி விடைபெற்றான்.


(" தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது" சிறுகதை உயிர் எழுத்து வெளியீடாக வந்திருக்கும் தவளைகள் குதிக்கும் வயிறு தொகுதிக்காக புதிதாக எழுதி சேர்க்கப்பட்டது.)

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 10

வள்ளிக்கிழவி (சிறுகதை)
- மோகனன்


காலை வேளையில் அன்னவயல் கிராமம் வயல் வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. கதிரவனின் வசம் பார்த்து கருமமே கண்ணாக வேலை செய்ய கிளம்பியவர்களில் வள்ளிக் கிழவியும் ஒருத்தி...

வள்ளிக் கிழவி என்றால் அக்கிராமத்தில் தெரியாதவர்கள் இருக்காது. சிறு குழந்தைகளுக்கும் கூட அவளைத் தெரியும். அவளது குடும்ப பாரம்பரியம் அப்படி. காலம் செய்த கோலம்.. கணவனை இழந்து தம் இரு மகன்களுக்காக வாழ்கிறாள்...

ஐம்பதைத் தாண்டிய வயது. தனது இரு மகன்களுக்காக உழைத்து...உழைத்து சளைக்காத முகம். அவள் கைரேகையைப்போல் அவள் முகத்திலும் சுருக்க ரேகைகள் ஓடியிருந்தது. அவள் கால் வெடிப்புகள் அவள் பட்ட துன்பங்களை கதை கதையாக சொல்லும். அவளுக்கு சொந்தமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த நெற்பயிர்களில் இன்று களை பறித்தாக வேண்டும்.

அவளுக்கு சொந்தமான வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் மனம் அங்கு ஒரு நிலையில் இல்லை... 'காஷ்மீர் பகுதியெங்கும் பதற்றம்' என எட்டு மணி செய்தி கேட்டதிலிருந்து மனது அடித்துக் கொண்டது. மூத்த மகன் மோகனனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன பண்ணிட்டிருக்கானோ... எப்படி இருக்கானோ... அவனிடமிருந்து ஒரு தகவலும் வரலயே... ம்ஹூம்... ' என்ற பெருமூச்சுடன் களத்துமேட்டிலிருந்து வயலுக்குள் இறங்கினாள்.

மோகனன், இந்திய ராணுவத்தின் இளஞ்சிங்கங்களில் ஒருவன். தாய்ப்பற்றை மனதிற்குள் வைத்து பூட்டிவிட்டு, தாய்நாட்டின் மீது பற்று வைத்து இராணுவத்திற்கு சென்றவன். தாய்நாட்டிற்கு உழைத்தாலும் பெற்ற தாயை மறந்து விடுவானா என்ன... மாதா மாதம் அவனிடமிருந்து பணமும், கடிதமும் வரும். அக்கடிதம்தான் அவளுக்கிருக்கும் பெரும் ஆறுதல்...

இளையவன் செல்வம். கல்லூரியில் இளங்கலை படிப்பில் இறுதியாண்டு மாணவனாக பயின்று கொண்டிருக்கிறான். இன்று ஏதோ ''என்.சி.சி ஷ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா...'' என்றுவிட்டு சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டான்.

நானெல்லாம் படிச்சிருந்தாதானே இதெல்லாம் தெரியும். நம்ம அப்பந்தான் நம்மளை வீட்டை விட்டே வெளியவே அனுப்பலியே..என சிந்தித்துக் கொண்டே களையெடுத்துக் கொண்டிருந்தவளை தபால்காரர் பரமசிவம் குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

''வள்ளியம்மா... உன் பெரிய மகன்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு...''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் முகத்தில் இருந்த சுருக்கங்கள், சட்டென்று மறைந்து மகிழ்ச்சிக்கு வழிவிட்டது. அவள் முகம் பரவசத்தில் பிரகாசித்தது. 'ராணுவத்துக்கு போயி 5 வருசமாச்சு... மாசத்துக்கு ஒரு கடுதாசி போடுவான்... எப்பவாச்சும் கோன் பண்ணுவான்... என்ன இந்த மாசம் ரெண்டாவது கடுதாசி அனுப்பியிருக்கான்...ஊருக்கு வரேன்னு சொல்லியிருக்கானோ....' என நினைத்தபடியே களத்துமேடேறினாள்.

''தபால்காரரே அதை கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...'' என்றாள்.

அவரும் கடிதத்தை பிரித்தார். உள்ளே மோகனனின் கையெழுத்து ஆற்றுப் பிரவாகமாக நேர்த்தியாக ஓடியிருந்தது... உடன் படிக்கலானார்...

''அன்புள்ள அம்மாவிற்கு...

தாய்நாட்டைக் காக்கும் இராணுவ வீரன் மோகனன் எழுதிக் கொள்வது... இதுவரை உன் மகன் என்றுதான் எழுதி வந்திருக்கிறேன். இன்று இப்படி எழுதுவதற்கும் அர்த்தமிருக்கிறதம்மா... என்னை, இத்தேசத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து விட்டேன். அதான் அப்படி எழுதியிருக்கிறேன்...

உன் முகம் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டது. உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அது முடியாது.
எப்படி அம்மா இருக்கிற... தம்பி எப்படி இருக்கான்... அம்மா நாங்களிருவரும் உன் முகம் மட்டுமே அறிந்தோம். அப்பா நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே இறந்து விட்டதால்... நீ எங்களை வளர்க்க, நீ பட்ட துன்பங்களை நானறிவேன்...

இதோ நாங்கள் வளர்ந்து விட்டோம். அம்மா... நீ எனக்கு நிலாச் சோறு ஊட்டிய தருணங்கள்... சிறு வயதில் நானும் தம்பியும் நமது கிராமத்தில் போட்ட ஆட்டங்கள், ஏரியில் மீன் பிடித்தது என என் நினைவுகள் என்னுள் வந்து, வந்து செல்கிறது. தீபாவளியன்று பொம்மை துப்பாக்கிக்காக நானும் தம்பியும் போட்ட சண்டையை இன்னமும் நினைத்து மகிழ்கிறேன்.

பொம்மை துப்பாக்கியை கையில் பிடித்தவன் இன்று உண்மையான துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறேன். இதோ எனது சரித்திரம் ஆரம்பித்து விட்டதம்மா... நான் பிறந்த பிறப்பின் பயனை இனிதான் அடையப் போகிறேன். நீ கொடுத்த தாய்ப்பாலுக்கு வேலை வந்து விட்டது. நம் தேசத்தின் நலன் காக்கும் வேளை வந்துவிட்டது.

கார்கில் போர் எனக்கு கடுகளவாக தெரிகிறது இன்று. ஏனெனில் அதைவிடப் பெரிய போருக்கு உன் மகன்... இல்லை... இந்த பாரதத்தாயின் மகன் கிளம்பப் போகிறான்.

இந்திய மண்ணையும், காற்றையும் சுவாசித்த எனக்கு, எதிரி நாட்டின் சுவாசத்தை அழிக்க ஆணை வந்துவிட்டது. இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி இந்த புலி பாய்ந்து செல்லப் போகிறது.

நான் பெற்ற பயிற்சியின் முழு பலமும் இங்கே பரிசோதிக்கப்படும். இதுவரை அப்பகுதிக்கு சென்ற 10 கமாண்டோ படையினரில் இருவர் மட்டுமே மீண்டிருக்கின்றனர். இதே எனது படை... இதற்கு நான்தான் தலைவன்...

தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதம்... தாக்க வேண்டிய இடம்... உள்பட அனைத்தும் வந்துவிட்டது. நம் நாட்டின் எதிரிகள் காலனை சந்திக்கும் நாள் மட்டும் இன்னும் குறிக்கப்படவில்லை. விரைவில் அதுவும் குறிக்கப்பட்டு விடும். தகவல் கிடைத்ததும் வில்லிலிருந்து புறப்படும் அம்பெனப் புறப்பட்டுவிடுவோம்...

கடைசியாக உன்னிடம் நான் போனில் பேசியபோது, ''எப்பய்யா... ஊருக்கு வருவ.. அம்மாவை பாக்க வரமாட்டியா... அம்மா ஞாபகம் இல்லியா..?'' என்று நீ உன் அடிவயிற்றிலிருந்து உச்சரித்த வார்த்தைகள் மட்டும் என் மனதை கீறிக் கொண்டிருக்கிறதம்மா...

எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால், அதற்கு அடையாளமாக நட்சத்திரங்களை கொடுப்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால்... வீரமரணம் அடைந்தாலும் நட்சத்திரங்காளாய் ஒளிவீசுவோம் என்பதைக் காட்டத்தான் அம்மா. என்னை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது சுயநலமாகி விடும்.

நான் சென்று, வெற்றியுடன் திரும்புவேன். அப்படி ஒரு வேளை திரும்பவில்லையெனில் கவலைப்படாதே... என் மனதில் நீக்கமற நிறைந்திருப்பது நீயும், எனது தேசமும்தான்...

அன்னவயலிற்கு நான் அனுப்பும் கடைசி கடிதம் இதுவாகக் கூட இருக்கலாம். கடைசி காலத்தில் பெற்ற தாய்க்கு வேண்டிய பணிகளை செய்யவேண்டியவனாயிற்றே... என கலங்காதே. அப்பணியை நம் பாரத தாய்க்கு செய்து கொண்டிருக்கிறேன்.

எதிரிகளை அழிப்பதில் எமனாக செல்கிறேன். ஒருவேளை நான் இறந்தால் என்னைப் போல் பலர் இத்தேசத்திற்காக பிறப்பார்கள்.. கவலை வேண்டாம் அம்மா..

கடைசியாக உன்னிடம் வேண்டுவது, ''தம் தேசத்திற்கு துடிப்பான இளைஞர்கள் தேவை. இக்கடிதம் கண்டவுடன் தம்பி செல்வத்தையும் இராணுவத்திற்கு அனுப்பு.. ஏனென்றால் எங்களைப் போன்ற பிள்ளைகளால்தான் நம் பாரதத்தாய் நிம்மதியாக வாழமுடியும். கண்கலங்காமல் இதை நிறைவேற்றம்மா...

சென்று, வென்று வருகிறேன். வாழ்க பாரதம்..!

இப்படிக்கு
உன் மகன்
மோகனன்"

கடிதத்தை படித்து முடித்தவுடன், பரமசிவத்தின் கண் கலங்கியிருந்தது. வள்ளிக்கிழவியின் முகத்தைப் பார்த்தார். அவள் கண்ணில் இருந்து ஆறாய் ஓடிய கண்ணீர் சட்டென்று நின்றது. அக்கண்ணில் தீர்க்க சிந்தனையின் சாயல் 'இளையவன் செல்வம் வந்ததும், அவனையும் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்'.

(09.07.2002 அன்று, எனது சொந்த ஊரான ஆத்தூரில் இருந்தபோது எழுதிய சிறுகதை)

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 8

ஈரம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக் கொண்டு களைந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை முழுதும் ஒரு பூனையின் மென்மயிரென அவிந்து கொண்டிருந்த நெல்லின் மணம் பரவிவிட்டிருந்தது. செல்லாயி அந்தப் பானையின் மூடியைத் தூக்கி நீர்மட்டம் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் முற்றாக அவிந்துவிடும். பின்னர் முற்றத்தில் பரத்திவிட்டு உடுப்புக் கழுவப் போகலாம்.

குடிசையின் ஒரு மூலையில் கயிற்று ஊஞ்சலில் தொங்கவிட்டிருந்த ஓலைப்பாயொன்றை எடுத்தாள். முற்றத்தில் வெயிலின் அடர்த்தி அதிகமாக இருந்த ஒரு இடத்தைப் பார்த்து பாயினை விரித்தாள். வெயில் தரையை விட்டு அவள் விரித்த பாயில் படுத்துக் கொண்ட சமயம் உள்ளே போய் நெற்பானையைத் துணியால் பிடித்துத் தூக்கமுடியாமல் தூக்கி வந்து பாயருகில் வைத்தாள். பெரும் அகப்பை கொண்டு நெல்லை அள்ளி அள்ளி பாயில் பரப்பத் தொடங்கினாள்.

வயல் வேலைக்கு ஒரு கூலியாகச் செல்லும் அவளுக்குக் கிடைத்த கூலிதான் இந்த ஒரு கூடை நெல். அவித்து, குத்திப் புடைத்து வைத்துக் கொண்டால் அவளுக்கும் விறகு வெட்டியான அவள் கணவனுக்கும் ஒரு மாத வயிற்றுப்பாட்டுக்குப் போதும். நாற்று நட, கதிரறுக்க எனச் சுற்றுவட்டாரத்தில் எங்கு வயல்வேலை நடந்தாலும் செல்லாயிக்கு அழைப்பிருந்தது. அவளது கைநேர்த்தியும், சுறுசுறுப்பும் அவளுக்கு நல்லபெயர் வாங்கிக் கொடுத்திருந்தது. வாங்கும் கூலிக்கு வஞ்சனை செய்யாமல் அவளும் உடல்பாடுபட்டு உழைத்தபடி இருந்தாள். குழந்தை பிறந்த பிறகு கூட இரண்டு மாதங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாள். பிறகு வயல்வெளி நிழல் மரங்களில் தொட்டில் கட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு அவள் தன்பாட்டுக்கு வேலை செய்தாள்.

வெயில் தன் ஆதிக்கத்தை இப்பொழுது நெல்லின் மேல் பரப்பத் தொடங்கியது. சூடாகப் பரத்தப்பட்டிருந்த நெல்லின் மேலிருந்து இலேசாகப் புகை கிளம்பியது. முழுவதுமாகப் பரத்தி முடித்தபின் எழுந்து நின்று ஒருமுறை முழுவதுமாகப் பார்த்தாள். ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்ற குடிசையருகில் வந்து எட்டி நின்று ஓலைக் கூரையின் பாக்குமரக் கம்புகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்த உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை எடுத்துவந்து நெற்பாயின் நான்கு மூலைகளிலும் நடுவிலும் வைத்தாள். இனிக் காக்கை,குருவிகள் அண்டாது எனத் திருப்தியாக உள்ளே சென்றாள். அவளது ஆறுமாதக் குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆறுதலாக நேற்று இரவு தண்ணீர் ஊற்றிவைத்திருந்த எஞ்சிய பழஞ்சோற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டாள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை ஊறுகாய் என எடுத்துவைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

முருகையன் கீழ்த் தோட்டத்தில் இப்பொழுது விறகுவெட்டிக் கொண்டிருப்பான் என எண்ணிக் கொண்டாள். அவளது குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எப்பாடு பட்டாவது பணம் கொஞ்சம் சேர்த்தெடுத்து , பக்கத்துப் பெரிய கோயிலுக்குத் தூக்கிப் போய் மொட்டையடித்துக் காதுகுத்தி ஒரு நல்லபெயராக வைக்கவேண்டுமென நேற்றிரவும் அவள் முருகையனிடம் சொல்லியிருந்தாள். அவனும் அதனை உத்தேசித்தே பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

சாப்பிட்டு முடித்து, கழுவவேண்டிய அழுக்குத் துணிகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம் தொட்டிலில் இருந்த குழந்தை காலை உதைத்துச் சிணுங்க ஆரம்பித்தது. துணிகளை அப்படியே போட்டுவிட்டுக் குழந்தையருகில் வந்து சத்தமாக செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள். பழகிய குரலைக் கேட்டதும் குழந்தை புன்னகைத்தது. எடுத்து முத்தமிட்டுப் பால்கொடுத்தாள். ஒரு பழந்துணியை நிலத்தில் விரித்து குழந்தையைப் படுக்கவைத்தாள். வயிறு நிறைந்த திருப்தியில் அக்குடிசையின் ஓலைக் கூரை பார்த்துத் தனியாகக் கதைத்துக் கொண்டிருந்த அதன் வெற்றுக் கால்களுக்குக் கொலுசு வாங்கிப் போடவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

குழந்தையின் அழுக்குத் துணிகளும், அவளதும் அவனதும் அழுக்குத் துணிகளுமாகச் சேகரித்ததற்கு மத்தியில் சவர்க்காரத்தையும் வைத்து மூட்டையாகக் கட்டினாள். ஒற்றையடிப் பாதையில் இறங்கி மேட்டில் ஏறி மீண்டும் இரண்டு பள்ளங்கள் இறங்கி நடந்தால் சிற்றோடை வரும். அவளுக்கு வேலைக்கு அழைப்பில்லாத நாட்களில் துணிகளையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு துவைத்து வரப் போவது அவளது வழமை. ஓடைக் கரை மருதமரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டி, குழந்தையின் வயிற்றை நிரப்பித் தூங்கவிட்டாளானால் ஈரக் காற்றுக்கும், பெருமரத்தின் நிழலுக்குமான சுகம் கண்டு குழந்தை எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் நிம்மதியாக உறங்கும். எல்லாத் துணிகளையும் கழுவிவிட்டு, அவளும் குளித்து, குழந்தையையும் குளிப்பாட்டியெடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருவாள்.

முற்றத்துக்கு வந்துபார்த்தாள். வெயில் நெல்லைப் பரிகசித்தபடி ஆவியாக்கிக் கொண்டிருந்தது. மேகக் கருமூட்டம் சூரியனைச் சில நேரங்களில் ஒளித்துவைத்தபடி அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. மழை வருமோ? போனமுறை அப்படித்தான். அடித்த வெயிலை நம்பி நெல் அவித்து முற்றத்தில் பரத்திவிட்டு, பக்கத்துக் கிராமத்து சின்னாச்சிக் கிழவியின் சாவுவீட்டுக்குப் போயிருந்த போது பேய்மழை பிடித்துக் கொண்டது. அவசரமாக ஓடிவரவும் முடியாது. மழை நின்ற பின்னால் வந்து பார்த்தால் முற்றத்தில் ஓடிய வெள்ள நீருக்குப் பாயில் நெல் இருந்த சான்றுக்காகச் சில நெல்மணிகள் மட்டுமே எஞ்சியிருந்தது. பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. எல்லாம் ஒரு பொழுது மழையில் வீணாகிப் போனதில் பெருஞ்சோகம் அப்பியது அவளில். முருகையன்தான் 'விடு புள்ள, நமக்குக் கொடுப்பினை இல்ல..அவ்ளோதான்' என்று ஆறுதல் சொன்னான்.

கடும் சூட்டோடு அடித்த வெயில் இப்போதைக்கு மழை வராது என்ற எண்ணத்தை அவளில் ஊன்றியது. உள்ளே போய் குழந்தைக்கு ஓடைக் கரையில் தொட்டில் கட்டவென வைத்திருந்த பழஞ்சேலையால் மூட்டையைச் சுற்றியெடுத்து குடிசைக்கு வெளியே கொண்டுவந்து வைத்தாள். குடிசையின் கொல்லைக் கதவை மூடிவிட்டு, குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். வெளிக்கதவுக்கான பூட்டினையெடுத்துக் கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினாள். துணிமூட்டையை எடுத்துத் தலையில் வைத்தவள் திரும்பவும் பரத்தியிருந்த நெல்லை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

மேடு ஏறிப் பள்ளங்கள் இறங்கிவந்தவளுக்கு மூச்சு வாங்கியது. ஓடைக்கரை சலவைக் கல்லில் துணிகளை வைத்தவள் சலசலத்து ஓடும் ஓடையை ஒரு முறை கண்களால் மேய்ந்தாள். ஓடையில் இவளைத் தவிர யாரையும் காணவில்லை.தெளிந்த நீர். மழை பெய்தால் மட்டும் கலங்கிய நீராகி வெள்ளக் காடாகிவிடும். போன வருஷம் அடை மழை வந்தபோது இந்த மருத மரம் கூடப் பாதிவரை மூழ்கியதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.

துணிமூட்டையைச் சுற்றியிருந்த தொட்டில் சேலையைத் தனியாக எடுத்தாள். மருத மரத்தின் அண்டிய ஒரு கிளைக்குச் சேலையின் ஒரு முனையை எறிந்தவள் வாகாகத் தொட்டிலைக் கட்டிவிட்டாள். ஒரு கல்லில் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்தாள். குடித்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் சொருக ஆரம்பித்தது குழந்தைக்கு. அப்படியே அள்ளியெடுத்தவள் அதன் நெற்றியில் மெலிதாக முத்தமிட்டாள். பின்னர் கட்டிய தொட்டிலில் படுக்கவைத்து கொஞ்சநேரம் ஆட்டிவிட்டாள்.

உடுத்திருந்த சேலையோடு ஓடையில் இறங்கினாள். முழங்கால் வரை நனைத்து ஓடிய தண்ணீரில் நின்றுகொண்டு ஒவ்வொரு துணியாக அலச ஆரம்பித்தாள். ஓடை மணலும், நழுவிய நீரும் காலடியில் குறுகுறுத்தது. சிறு மீன் குஞ்சுகள் காலுக்குக் கூச்சம் தந்தபடி கவ்வத் தொடங்கின. குளித்து முடித்துப் போய் மீன் வாங்கிவந்து முருகையன் வரும் போது சுடுசோற்றோடு மணக்க மணக்க மீன் கறி சமைத்து வைக்கவேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

வானம் கருக்கத் தொடங்கியது. அண்ணாந்து பார்த்தவளின் நெற்றியில் மழையின் முதல் துளி விழுந்தது. ஐயோ இன்றைக்கும் மழையா ? ஓடைக் கரைக்கு ஏறியவள் தூறல் வலுக்க முன்னர் குடிசைக்கு ஓடத் தொடங்கினாள். அவளது பல நாள் உழைப்பு. ஒரு மாத உணவு. மூச்சு வாங்க ஓடி வந்தவள் சிறு தூறலில் நனைந்திருந்த நெற்பாயின் நான்கு மூலைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து குடிசைத் திண்ணை வரை இழுத்துவந்தாள். இடுப்பில் கட்டியிருந்த சாவியை எடுத்து பூட்டினை விடுவித்துக் குடிசையைத் திறந்து நெற்பாயினை உள்ளே வைத்த பொழுது மழை வலுத்தது.

இப்பொழுது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அரும்பாடு பட்டுச் சேர்த்து, அவித்துக் காயவைத்த நெல்லை பெரும் மழையிலிருந்து காப்பாற்றியாகிவிட்டது .நிம்மதிப் பெருமூச்சு விட்டவளின் கண்களுக்கு குடிசைக்குள்ளிருந்த வெற்றுத் தொட்டில் கண்ணில் பட்டது. 'ஐயோ என் குழந்தை' எனப்பதறியவாறு குடிசையையும் பூட்டாமல் பெரும் மழையில் நனைந்தவாறு திரும்பவும் ஓடைக்கரைக்கு ஓடத் தொடங்கினாள்.

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 4

நிழல்மனங்கள் - சிறுகதை
- ஷைலஜா


நடுநிசியில் போன் 'க்ரீங்க்ரீங்' என்றது. படுக்கையை ஒட்டிய டீபாயில் அது இருந்ததால் தூக்கம் கலைந்து சுதாரித்து ராமதுரை எழுந்துபோய் ரிசீவரை எடுப்பதற்குள், அந்த அறையின் அமைதியைக் கிழிப்பது போல பலமுறை ஒலித்தது.
"ஹலோ?' என்றான் தூக்கக்கலக்கக் குரலுடனேயே, ஒருகை ரிசீவரைப்பிடித்தாலும் இன்னொரு கை சுவற்றில் சுவிட்சைத் தட்டியது. அறையில் வெளிச்சம் பரவியது.

"அதிகம் பேச நேரமில்ல..சொல்லிவை உன் தர்மபத்தினிகிட்ட,. இது மாதிரி எங்களை பத்திரிகையில கன்னாபின்னான்னு எழுதிக்கிட்டே போனா கூடிய சீக்கிரம் உன் பொண்டாட்டி கழுத்தை நடு ரோட்ல சீவிப்போட்டுடுவோம்னு? சொர்ணாம்பாபேட்டை ரவுடிங்ககிட்டயே சவால் விடுறாளா பிரபல பத்திரிகை நிருபர் வர்ஷா ராமதுரை? ஹ ..அது நடக்காதுன்னு சொல்லத்தான் உன் வீட்டு நம்பரை தேடிக்கண்டுபிடிச்சி போன் செய்யுறேன்,.ஆம்மா.."

அதட்டலாய் கூறிவிட்டு எதிர்முனை இணைப்பை துண்டிக்கவும் ராமதுரை,"ஹலோஹலோ யாரது,,யார் நீங்க?" என்று கேட்டுவிட்டு எரிச்சலாய் ரிசீவரைக்கீழே வைத்தான்.

ராமதுரை எதிர்பார்த்ததுதான். என்றாவது ஒருநாள் இப்படி மிரட்டல் வருமென்று சில்நாட்களாகவே ராமதுரை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தான் இப்போது அவன் பயந்ததுபோலவே ஆகிவிட்டது. சட்டென படுக்கையில் வர்ஷாவைத்தேடினான். அங்கு அவள் இல்லை.சுவர்கடிகாரத்தைப் பார்த்தான். மணி, பன்னிரண்டைத் தாண்டி இருந்தது.

'இன்னுமா வர்ஷா வரவில்லை?' தனக்குள் கேட்டுக்கொண்டவன்
படுக்கையில் தலையணைக்குகீழே இருந்த செல்போனை எடுத்தான்.

எண்களை அழுத்திவிட்டுக்காதில் வைத்துக்காத்திருந்தான்
திரும்பத்திரும்ப ;சுவிச்டு ஆஃப்' என்றே தகவல் வந்தது.

'புல்ஷிட்' என்று கத்தினான்.

திரும்ப வந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்.

டில்லியில்மாலை ஐந்துமணிக்குப்பிடித்திருக்க வேண்டிய விமானம் ரத்தாகிவிடவும், இரவு பதினோருமணிக்கே அடுத்த விமானத்தில் டிக்கட் கிடைத்து அதில் பயணம் செய்துகொண்டிருந்தாள் வர்ஷா. தாமதத்தை ராமதுரைக்கு போனில் தகவல் கொடுக்க நினைத்தும், இடைவிடாத பத்திரிகைக்காரர்களின் போன் அழைப்புகளில் அது இயலாமல் போய்விட்டது.

சென்னை வந்ததும் விமான நிலையத்திலிருந்து வாடகைக்காரில் ஏறும் முன்பு போன் செய்தாள், விவரம் கூறியவளுக்கு
"ம்"என்றுமுறைப்பாய் பதில் வந்தது.

அதுகோபம் என்று வர்ஷாவிற்கும் புரிந்தது. கல்யாணமாகிஐந்துவருடப்பழக்கத்தில் அவள் ராமதுரையை நிறையப்புரிந்து கொண்டிருந்தாள்.
பெண்பார்க்க வந்தபோதே தனிமையில் சந்தித்து தனக்குப் பத்திரிகைத் துறையில் மிகவும் ஆர்வம் என்பதால் ஜர்னலிசம் படித்ததாயும் பத்திரிகை நிருபராய் வேலைபார்ப்பதாகவும் வர்ஷா கூறியபோது ராமதுரை உடனேயே,"வாவ்!" என்றான்.

தொடர்ந்து," இந்தகாலத்துப்பெண்கள் சாஃப்ட்வேர்துறையில் ஆர்வமாய் இருக்கும்போது நீ மட்டும் இப்படி பத்திரிகைத்துறையில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பது எனக்கு எவ்வளோ பெருமையாய் இருக்கு தெரியுமா? ரியலி ஐ லை இட்"என்று புகழ்ந்தான்.

ஒரு உணர்ச்சிகரமான நேரத்தில் வெளிப்பட்ட உணர்ச்சிகரமான பேச்சு தான் மனதினின்று வந்ததல்ல அது என்பதை கல்யாணமான ஒரேவருஷத்தில் வர்ஷா புரிந்துகொண்டாள்.

வர்ஷாவின் திறமையை தன் வியாபாரத்தில் புகுத்திக்கொள்ள ராமதுரை விரும்பினான். ஆனால்வர்ஷா ," ராம்! உ ங்களோட வியாபாரத்துக்கு என்னைப்போல உள்ள பெண்களின் மூளைக்கு வேலை இல்லை…பிசினஸ் பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை சார்ந்தது.அதில் யுத்தி ஆதிக்கம் செய்யும் புத்தி அல்ல.ஆனா நான் பார்க்கும் பத்திரிகை நிருபர் வேலைல சாலஞ்ச் அதிகம்.

புதுப் புது கோணங்களில் எங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு இங்க உண்டு. செய்யும் தொழிலில் திறமைதான் இங்கே செல்வம்.
அந்த செல்வத்தை நான் பணி செய்யும் இடம் மதிக்கிறது எனக்கு அதுபோதும் " என்பாள்.

"வர்ஷா! உன் திறமையை கட்டின புருஷனுக்காக செலவழிக்கலாம் ஆனால் நீ செய்வதில்லை"

"நிரந்தரமாய் நீங்க ஒரு வியாபாரம் செய்யறீங்களா?உங்க குறிக்கோள் எ ப்படியாவது மல்டிமில்லினியர் ஆகணும். மார்பிளில்பிசினசிலிருந்து மணல் லாரிபிசினஸ்வரை எத்தனைவிதமான பிசினஸ் எல்லாம் செய்து பார்த்து ஏமாந்து இருக்கீங்க? உங்க பணத்தாசைக்கு என் தாய்மையை பலியாக்கிட்டீங்க…பணம் சேருகிறவரைக்கும் இந்தவீட்டில் மழலைசத்தம்கேட்கக்கூடாதுன்னு கட்டளை போட்டுருக்கீங்க.. நீங்க சொல்றதுக்கெல்லாம் நானும் தலைஆட்டிட்டு தான் இருக்கேன் இன்னும் என்னை என்ன செய்யச்சொல்றீங்க?"

"நீமட்டும் தோள் கொடுக்கறேன்னு சொல்லு இப்போவே புது பிசினஸ் ஒண்ணு தொடங்கிடறேன் வர்ஷா?'

"ஐயாம் சாரி ராம்! என் லட்சியம் இந்த பத்திரிகைநிருபர் தொழிலில் நல்ல பெயர் எடுப்பது.இதில் எனக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது இதை இழக்க நான் விரும்பவில்லை"

வர்ஷாவின் பிடிவாதம் ராமதுரைக்கு சமீபகாலமாக மிகவும் எரிச்சலை உண்டுபண்னுவதை அவளும் கவனித்துதான் வருகிறாள்.

கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவில் நுழைத்து திறந்து உள்ளே போனாள் வர்ஷா.

ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான் ராமதுரை.

வியப்புடன்,"தூங்கலயா ராம்?' என்று கேட்டாள் வர்ஷா.

களைப்போடு சமையலற சென்று ஃப்ரிட்ஜினின்றும் பால் கவரை எடுத்துப்பிரித்துப்பாத்திரத்தில் கொட்டினாள்.காஸ் அடுப்பை பற்றவைத்து பாலைக்காய்ச்சி கொஞ்சமாய் சக்கரை சேர்த்து டம்ளரில் ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்," சூடா பால் குடிக்கிறீங்களா?" என்று கேட்டாள்.

"ஆமா …நானே கொதிச்சிட்டு இருக்கேன் இதுல சூடா பாலு வேற ஒரு கேடாக்கும்?"

கடுப்போடு சொன்னவன் அந்த மிரட்டல் போன் அழைப்பை விவரித்துவிட்டு," வர்ஷா!இந்த வேலையை நீ விட்டுத்தொலையேன்..பாதுகாப்பே இல்லாத வேலை! நேரம் காலம் கிடையாது.இதெல்லாம் பெண்களுக்கு ஏற்றதே இல்ல"என்றான்.

வர்ஷா பாலின் கடைசி சொட்டின் சக்கரை இனிப்பை நாவில் சுவைத்தபடி," ராம்! இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா? இதெல்லாம் குரைக்கிற நாய்கள், கடிக்காது கண்டிப்பாய்" என்று சொல்லி சிரித்தாள்.

"இவ்வளோ ரிஸ்க் எடுத்துஎதுக்கு இந்த உத்தியோகம்னு போனதடவை இங்க வந்த என் அப்பாகூட முணு முணுத்தாரு தெரியுமா?"

"உங்கம்மாவும்'இந்தவீட்லஎப்போதான் குழந்தை ஒண்ணு தவழப்போகுதோ?'ன்னுமுணு முணுத்தாங்க அதுவும் கேட்டுதா உங்களுக்கு ராம்?"

"வர்ஷா! உன் வேலை பத்தி பேசறப்போ குழந்தைவிஷயத்தை இங்க கொண்டு வராதே...இன்னும் மூணுவருஷத்துக்கு குழந்தை பேச்சேவரக்கூடாது இங்க. பணம்சேர்க்கணும் முதல்ல…அதுக்குவழிதேடிட்டு இருக்கேன் நான்"

ராமதுரைக்கு அவனைச்சுற்றித்தான் உலகம். அதுவும் ஒரு குறுகிய வட்டம் தான். சமூக அக்கறை என்பதே இல்லாதவன்.பணம் ஒன்றே குறிக்கோள். பங்களா கார் பண்ணைவீடு காபி எஸ்டேட் என்று தகுதிக்கு மீறிய கனவுகள். கனவு நனவாகிறவரைக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவன் கொள்கை.ஆரம்பத்தில் வர்ஷாவும் அவன் போக்கின்படி நடந்துகொள்ள நினைத்தாள் ஆனால் திரும்பத்திரும்ப வீடு பணி என்று ஒரே வட்டத்தில் சுழலும் ஒரேமாதிரியான வாழ்க்கையில் குழந்தையின் வரவு புத்துணர்ச்சியைக்கொடுக்கும் என்று நம்பினாள்.

வர்ஷா மௌனமாக இருக்கவும்," ஹலோ…மாத்திரையெல்லாம் ஒழுங்கா போட்டுக்கறேதானே? உன் வேலை மும்முரத்துல இப்படி வீட்டுக்கு மறந்து போய் நடு நிசிலவர்ர மாதிரி மாத்திரையையும் மறந்து தொலைக்கப்போறே?அதான் கேக்கறேன்"என்றான்.

"ராம்! அஞ்சு வருஷம் ஆச்சு…எனக்கும் வயசு முப்பது முடியப்போகுது..முதல் பிரசவம் முப்பது வயதுக்குள்ள நடந்தா சிக்கல் அதிகம் இருக்காதாம்… சின்ன வயசுல குழந்தைகளைப் பெத்துட்டா வயசான காலத்துல நிம்மதியா இருக்கலாம் ஆல்ரெடி நாம லேட் பண்ணிட்டோம்னு மனசு குறுகுறுக்குது பல நேரங்களில்…"

"என்னாச்சு உனக்கு? சராசரி குடும்பப்பெண் மாதிரி இன்னிக்கு டயலாக் விடறே?"

"நானும் சராசரி குடும்பபெண் தானே? பத்திரிகை நிருபர் வேலை என் தொழில் அவ்வளவுதான்.ராம்! பெண்மையின் நிறைவே தாய்மையில் தான். அந்த இனிய தருணம் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாதது!"

"லுக்வர்ஷா! விபரீதமாய் பேசாதே… இதெல்லாம் படிப்பறிவு இல்லாத பெண்கள் பேசும் பேச்சு"

"என் அம்மா படிக்கவில்லை பாட்டி படிக்கவில்லைதான் ஆனா ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் நினைவு கூறும் வகையில் வாழ்ந்தவர்கள். இந்த வாழ்க்கைப்பண்பையும் நெறியையும் எந்தப்பல்கலைக்கழகமும் அவர்களுக்குக் கற்றுத்தரவில்லை. அன்பு பண்பு பாசம் எல்லாமே படிப்பறிவு இல்லாதவர்களின் நடைமுறை வாழ்க்கையில் அதிகம் உண்டு.அவர்களை பரிகாசம் செய்யவேண்டாம்"

"்குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ரொம்ப செலவு செய்ய வேண்டி இருக்கு வர்ஷா..நம்ம காலம் மாதிரி இல்ல..படிப்புக்கு நோட் நோட்டா எடுத்து வைக்கணும்.அதிலும் பொண்ணு பொறந்தா அவ்வளோதான்….தலைல துண்டுதான்…தெரியாமயா இன்னமும் உசுலம்பட்டி மாதிரி இடங்களில் கள்ளிப்பால் கொடுத்து பெண்சிசுவைக் கொலை செய்யறாங்க எல்லாம் காரணமாத்தான்!"

ராமதுரை இப்படி எகத்தாளமாய் சொல்லவும் வர்ஷா புயலென சீறி நிமிர்ந்தாள் அதுவரை அவளிடம் குடிகொண்டிருந்த சாந்தம் மறைந்து, சட்டென கண் சிவந்துபோனது.உதடுகள் துடித்தன.

"பெண்குழந்தைகளைக் கேவலமாய்பேசும் உங்களை மாதிரி ஆண்கள் இருப்பதால் தான் இப்போ எங்க இனமே குறைஞ்சிட்டு வருது. பல குடும்பங்களில் இப்போதெல்லாம் பையன் ஜாதகங்களை வைத்துக்கொண்டு பெண்ணுக்குப்பேயாய் அலையறாங்களாம்.. இன்னும் கொஞ்ச நாள்ள பெண் இல்லாத பூமியாய் மாறினாலும் ஆச்சரியமில்லை. தாய் நாடு ,தாய் மொழின்னு சொல்லிட்டு பெண்களை நாய் மாதிரி நடத்தும் சில ஆண்களுக்கு புத்தி வந்தாதான் நாடு உருப்படும்."

"என்னடி என்னை நாய்ங்கறியா?" என்று கேட்டு வர்ஷாவின் கன்னத்தில் பளீரென அறைந்தான் ராமதுரை.

இதை சற்றும் எதிர்பார்க்காத வர்ஷா,அரண்டு போய் அப்படியே உட்கார்ந்துவிட்டாள் .
ராமதுரை உஷ்ணப்பார்வையோடு தூங்கப்போனான்.

சோபாவிலேயேசுருண்டுபடுத்துவிட்ட வர்ஷா அடிவாங்கிய அதிர்ச்சியில்அன்று 'அந்த' மாத்திரையை சாப்பிடவும் மறந்து போனாள்.
அதன் விளைவு அடுத்தமாதமே தெரிந்துவிட்டது.

ராமதுரைஅடித்த நாளிலிருந்து அவனோடு அதிகம் பேசாதிருந்த வர்ஷா,அன்று அந்த 'நல்ல செய்தி'யை அவனுக்குச் சொல்ல விரும்பினாள்
வீட்டிற்கு ஓடிவந்து ,"ராம் ..நான் கன்சீவ் ஆகி இருக்கேன்" என்றதும் பதறிப்போனான் ராமதுரை.

அவளருகில் வந்து வயிற்றில்கைவைத்தபடி,"இதைஅழிச்சிடு உடனே அபார்ஷன் செய்துகொள் ப்ளீஸ் ..ஏன்னாநான் புது பிசினஸ் ஆரம்பிக்கபோறேன் அதுக்கு பணம் நிறையவேணும்.. நீ கர்ப்பமாயிட்டா வேலைக்குப்போகமாட்டேன்னு முன்னமே சொல்லி இருக்கே..உன் வருமானமும் இந்தக்குழந்தையின் வரவால் போயிடும்.என் கனவும் நிறைவேறாது ப்ளீஸ் வர்ஷா இதைக் கலைச்சிடு .. தெரியாமநடந்த விபத்தா இதை நினைச்சி மறந்து இனி கவனமாய் இருக்கலாம் என்ன?' என்றான் கெஞ்சினான்.

அருகாமையில் அந்தமுகத்தில் தெரிந்த கோழைத்தனமும், குயுக்தி கொண்டபார்வையும், வர்ஷாவை மனம் உடைய வைத்தன.
வெறுப்பில் நெஞ்சு விம்மியது,"அடச்சே..உங்களுக்கு பணம் சம்பாதித்துப்போடவும் படுக்கை சுகத்துக்கும் தான் என்னைக்கல்யானம் பண்ணிக்கிடீங்களா? நானும் ரொம்ப பொறுமையாய் பல காலம் உங்களோடு எல்லாகாரியங்களுக்கும் துணையா இருந்தேன். நீங்க கைநீட்டி அடிச்சதையெல்லாம் கூட தாங்கிட்டு இருந்தேன்.. ஆ னா இப்போ வயிற்றுசிசுவை அழிக்கச்சொல்லும் உங்க கொடுமையான மனசு கண்டு என் ரத்தமே கொதிக்குது ..ச்சே..நீங்களல்லாம் ஒரு மனுஷனா?"

வர்ஷா வேகமாய் அறைக்குச்சென்றவள் கையில் பெட்டியோடு மறுபடி ஹாலிற்கு வந்தபோது ராமதுரை இவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு யாரிடமோ போனில் பிசினஸ் விவகாரத்தை உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.

வர்ஷா பெட்டியோடு வாசலுக்கு வரவும், சட்டென ஒரு போலீஸ் ஜிப் வந்து அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

வர்ஷா தயங்கி நிற்கையில் அதனின்றும் கிழே இறங்கிய இன்ஸ்பெக்டர் அவளிடம்," இது ராமதுரைவீடுதானேம்மா?' என்று கேட்டார்.

"ஆமாம்..நீ..ங்..க…?" தயக்கமாய் இழுத்தபடி கேட்டாள் வர்ஷா,

"அவரைக்கைது பண்ண வந்திருக்கோம்… வெளிநாட்டுக்கு விசா வாங்கித்தரேன்னு தன் பார்ட்னரோடு பலலட்சம் ரூபாய்களை பலபேரிடம்வாங்கி அப்பாவி மக்களை நல்லா ஏமாற்றி இருக்காரு இந்த அயோக்கியன்ராமதுரை.அவனோட பார்ட்னரை முதல்ல பிடிச்சி உள்ளதள்ளிட்டோம்..இப்போ இந்த ஆளைப்பிடிக்க வந்துருக்கோம்…ஆமா நீங்க யாரு?"

"நா..நானும் ராமதுரையால ஏமாற்றப்பட்ட பொண்ணு தாங்க.."

"இந்த காலத்துல படிச்ச பொண்ணுங்களும் இப்படி ஏமாந்துடறாங்க பாருங்க.."

இன்ஸ்பெக்டர் அருகிலிருந்த போலீஸ்காரரிடம் இப்படிச் சொல்லியபடியே வீட்டிற்குள் நுழையும்போது வர்ஷா ஒருக்கணம் அப்படியே அதிர்ந்து நின்றவள், அடுத்த கணமே தெருவில் இறங்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.