கடைசி விருந்து
- சுகிர்த்தராணி
விதைகளற்ற பழுத்த கனி ஒன்று
என்னிடம் தரப்பட்டது
நீலவெளிச்சப் பின்னணியில் அதைப்பற்றிய
ரகஸியங்கள் என் காதில் ஓதப்பட்டதும்
முகத்தை எப்படி வைத்துக்கொள்வ தென்று
எனக்கு தெரியவில்லை
உன் நா வறட்சி அடையும்போது
வித விதமான சாறு பிழிந்து தரவேண்டுமாம்
பட்டாம்பூச்சியின் தாவலைப் போல
பிழிவதும் குடிப்பதும்
ஆரம்பத்தில்ல் கலையாக இருந்தது
பின்பு உறங்கும் வேளையில் கூட
உன் வாய் சாறு நிரம்பியதாகவும்
உனதொருகை குவளையை
இறுக்கியதாகவும் விளங்கின
காலாவதியான சுரங்கத்தின் உட்குடைவாய்
கனியின் பகுதிகள் பொலிவிழந்த பின்னும்
குடிப்பதற்குக் கேட்கின்றாய்
என்மீது உருண்ட திரண்ட
உன் பிரியத்தையே பிழிந்து தருகின்றேன்
அது விஷச்சாறாகவும் இருக்கலாம்.
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 2
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 1
விருட்சங்கள்
- சுகிர்த்தராணி
பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க்கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காமநெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்துமாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
இப்போது புகையின் வடிவம் கொண்டு
ஒப்பனைகள் ஏதுமற்ற தெருக்கலைஞனைப் போல
கச்சையின் முன்புற வார் அவிழ்க்கிறாய்
பாலூட்டியவைகளை ருசித்தவாறே
அவற்றின் பெயர்சொல்லவும் வெட்கிக்கிறாய்
என் மார்பின் இசைக்கவையை
போரின் கொலைக்கரமாய் நீட்டுகிறேன்
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகு காலமாயிற்று.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 7
கணக்குப் பாடமும் கணையாழிக் கவிதையும்
- சுரேஷ் கண்ணன்
செப்.2005 கணையாழி இதழில் பிரசுரமாகியிருந்த ஒரு கவிதை என் பழைய நினைவலைகளை உசுப்பி விட்டது. (நினைவலைகள் அடங்கிய பதிவுகளை வெறுப்பவர்கள் - அதாவது வீட்டில் கொசுவர்த்தி சுருள் கூட பயன்படுத்தாமல் பதிலாக மேட் பயன்படுத்துபவர்கள் - உடனடியாக இதிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
'கணக்கு என்றால் ஆமணக்கு' என்கிறார் பாரதி. இந்த விஷயத்தாலேயே பாரதியை மிக நெருக்கமாக என்னால் உணர முடிந்தது. தமிழே எனக்கு எப்போதும் விருப்ப பாடம். தங்கள் மகன்களை குமாஸ்தா வேலைக்கு தயார்படுத்தும் அந்தக் கால பெற்றோர்கள் உருவேற்றியதாலும் ஸ்டைலாக பேசுவதால் ஏற்படும் மதிப்பாலும ஆங்கிலத்தில் ஒரளவு விருப்பம் ஏற்பட்டு படிக்க முடிந்தது. வரலாறு மற்றும் புவியியலை எல்லாம் நான் அப்போது ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதோ, இப்போது இணையத்தில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேனே, அதை மாதிரியே எதை எழுதி வைத்தாலும் மதிப்பெண்கள் வந்துவிடும். (எங்கள் சரித்திர ஆசிரியர் மார்க் போடுவதில் தரித்திரமாக இல்லாமல், என்ன எழுதியிருக்கின்றது என்பதை பார்க்காமலேயே, கோலி விளையாடும் சிறுவர்கள் மாதிரி விடை எத்தனை ஜாண் நீளத்திற்கு நீண்டிருக்கிறதோ அத்தனை மதிப்பெண்கள் வழங்கி 'சரித்திர' சாதனை புரிவார்.)
ஆனால்.... இந்த கணக்குப் பாடம்தான் என்னை ஜென்மப் பகைவன் மாதிரி எல்லா வகுப்பிலும் துரத்திக் கொண்டே வந்தது. கணக்கு வகுப்பு என்றால் நிஜமாகவே எனக்கு ஜீரம் வந்துவிடும். அதுவும் இந்த 'அல்ஜீப்ராவை' கண்டுபிடித்தவனை எங்கு கண்டாலும் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக அப்போது தயாராயிருந்தேன். பெண் பிள்ளைகளை துரத்திக் கொண்டும் போகும் செயல் கூட 'கணக்குப் பண்ணுவது' என்கிற பரிபாஷையில் அழைக்கப்பட்டதனாலேயே அந்த காரியம் கூட எனக்குப் பிடித்தமில்லாத ஒன்றாக இருந்தது.
()
இப்பவும் இருக்கிற பிராட்வே தியேட்டரின் (இங்குதான் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் என்கிற திரைப்படம் மூன்றரை வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது) எதிரேயுள்ள புனித கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியில் அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய வெள்ளைப் பாவாடையை போட்டுக் கொண்டு எப்படி கால் தடுக்காமல் நடக்கிறார்கள் என்று நான் வியக்கிற பாதர்மார்களும், காலை வெயிலில் பிரேயருக்கு நிற்கிற போது எங்கள் மேல் வெயில் படாமல் தடுத்தருள் புரிந்த பரந்து விரிந்த பாதாம் மரமும் (இந்த மரத்திலிருந்து விழும் பாதாம்காய்களை கல்லால் உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை சாப்பிடுவோம். சமீபத்தில் அந்தவழி போனபோது இந்த மரம் வெட்டப்பட்டு பிரேயர் ஹால் வெளிச்சமாய் இருந்ததை பார்த்த போது என்னுள் எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விளக்க தெரியவில்லை) தாமதமாக வந்தால் பி.டி வாத்தியார் மூன்று ரவுண்டு மூச்சிரைக்க ஓட வைக்கிற பிரம்மாண்டமான விளையாட்டு மைதானமும் இடைவேளைகளில் வெளியே போகமுடியாதபடி வாட்ச்மேன் லாசர் பூட்டிவைத்துவிட கதவு கம்பி இடைவெளியில் வாங்கின உப்பு தூவின மாங்காய் துண்டுகளும், எலந்தம் பழங்களும் அங்கேதான் அறிமுகமானது.
நான் பொதுவாக எப்போதுமே பார்டரில் பாஸ் பண்ணுகிற ஆள். பின்பெஞ்சில் மேளம் தட்டிக் கொண்டு ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்குமே, அதைச் சார்ந்தவன். 'நன்றாக படிக்கிற பசங்களை' எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கிண்டல் செய்து மட்டம் தட்டுவோம். அவர்கள் இதையெல்லாம் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருப்பார்கள். நான் அந்த வயதில் மிகவும் பூஞ்சையாக இருப்பேன். இந்த காரணத்திற்காகவே சக மாணவர்களால் மிகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கேன். "பின்னால கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா சர்ட்டை இன் பண்றே". இந்தக் குறையை மறைத்துக் கொள்வதற்காகவே வேண்டுமென்றே படிக்காத மாணவர்களிடம் சேர்ந்து கலாட்டா செய்து கொண்டிருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது.
ஆனால் தமிழில் மட்டும் எப்போதும் 70 அல்லது 80 எடுத்துவிடுவேன். இதனாலேயே படிக்கிற மாணவர்கள் என்னை 'இவன் பழுதா பாம்பா' என்று தீர்மானிக்க முடியாமலிருந்தார்கள். ஒரு முறை தமிழில் உயர்ந்த பட்சமாக 93 எடுத்துவிட என்னை ஆப்ரிக்க தேசத்திலிருந்து வந்தவன் போல் விநோதமாகப் பார்த்தார்கள். ஆனால் இந்த கணக்குப்பாடம்தான்... அது என்னை விரோதியாக பார்த்ததோ அல்லது நான் அதை விரோதியாக பார்த்தேனோ தெரியவில்லை. எப்போதும் வாய்க்கா, வரப்பு தகராறுதான். நிற்க.
()
இந்த இடத்தில் நிறுத்தி எங்கள் கணக்கு வாத்தியார் அமல்தாஸைப் பற்றி கூற வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். இவர் வாய்விட்டு சிரித்த கணங்கள் அபூர்வமானவை. மதப்போதகர் தினகரனின் குரலை குளோனிங் செய்தது போல் அதே குரலில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார். நானும் அதே மாதிரியே நண்பர்களிடையே ஒரு முறை வயிற்றை முக்கி பேச முயன்றதில் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தததால் அதை தொடரவில்லை. மிக மெல்லிதான ஒரு பிரம்பு வைத்திருப்பார். பிரம்பு மெலிதாக இருந்தாலும் வயாகரா சாப்பிட்ட மாதிரி அதன் வீர்யம் பெரிது. கையில் அடி வாங்கி கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு வலி கியாரண்டி.
கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தீடீரென்று நிறுத்தி சரியாக என்னைக் குறிவைத்து எழுப்பி "இதோட பார்முலா சொல்லு" என்பார் நம்பியார் குரலில். அந்த பார்முலாவோ உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் தேடிய பார்முலாவை விட கடினமானதாக இருக்கும். நான் "ஏ ஸ்கொயர் ப்ளஸ்.... " என்று ஏதோ மழுப்ப முயல கையை விறைப்பாக நீட்டச் சொல்லி சுளீரென்று பிரம்படி விழும். இதனாலேயே கணக்கையும் அந்த வாத்திராரையும் மிகவும் பிடிக்காமல் போய்விட்டது. 'கணக்கில் மட்டும்தான் பூஜ்ஜியம் வாங்க முடியாது. அவ்வளவு எளிதானது' இது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். ஆனால் இந்த விஷயத்தை அவ்வப்போது சாதித்து அவரை மிகவும் எரிச்சலூட்டுவேன். படிக்கிற மாணவர்கள் அல்ஜீப்ராவை ஏதோ மாற்றான் மனைவியுடன் சல்லாபிப்பது போல் சுவாரஸ்யமாக போட்டுக் கொண்டிருக்க, நான் அவர்களை எரிச்சலோடும் லேசான பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருப்பேன். அல்ஜீப்ரா என்கிற விஷயம் அல்கொய்தா போல் என்னை மிரட்டிக் கொண்டிருந்த காலமது.
()
இப்போது கூட யாராவது பேச்சு வாக்கில் "போடுங்களேன். 1 ஸ்கொயர் ·பீட் ஆயிரத்து ஐநூறுன்னா.... 435 ஸ்கொயர் ·பீட் எவ்வளவு ஆகுது? என்னும் போது என் கைகள் தன்னிச்சையாக கால்குலேட்டரை தேடும். அவரோ "இதுக்கு எதுக்குங்க கால்குலேட்டர். நானூறு இன்டு ஆயிரத்து ஐநூறு.. ஆறு லட்சம் ரூபா.. இல்லியா. அப்புறம் 35 இன்டு .. என்னா கரெக்டுதானே... என்று நானும் ஏதோ அந்த கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது என்னை சரிபார்த்துக் கொண்டிருக்க, நான் மையமாக சிரித்துக் கொண்டே "ஆமா ஆமா" என்று அவர் சொல்லும் விடையை எந்தவித நிபந்தனையுமின்றி அப்படியே ஒப்புக் கொள்வேன். இப்போது ஆறாங்கிளாஸ் படிக்கும் பக்கத்து வீட்டு பையனின் கணக்குப் புத்தகத்தை சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தலை லேசாக 'கிர்..ரென்றது. அப்போதைய கணக்குகளே பரவாயில்லை போல. எண்களும் நானும் ஆடிக் கொண்டிருக்கும் இந்த மல்யுத்தம் எப்போது சமாதானத்திற்கு வருமென்று தெரியவில்லை.
()
என்னுள் இவ்வளவு நினைவலைகளை எழுப்பிய அந்த கவிதையை இப்போது பார்ப்போம்.
என் கணக்குப் புத்தகம்
======================
- சிறீ.நான்.மணிகண்டன்
சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.
புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.
(நன்றி : கணையாழி - செப் 2005)
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, கவிதைகள், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - 2
அசரீரி ஓவியம்
- கூத்தலிங்கம்
கவிதைக்கான அழகும் நளினமுமான
சொல் தேடி
வார்த்தைகளின் அம்பாரங்களை
கலைத்தபோது
எழுதப்படாத
என் வெள்ளைத் தாளிதழ் விளிம்பில்
பறந்து வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சி
குழந்தை உள்நுழையும் ஓசையில்
திடுக்குற்று
சட்டெனப் பறந்து வெளி போந்தது
மேசைவிளக்கு ஒளிநீட்சி
கிடத்தியிருந்த
நீங்கா நீள் நிழலொன்று
சிறகசைத்துக் கொண்டிருந்தது
கவிதைக்காய்
தலைப்பிடப்பட்ட அடிக்கோட்டின் கீழே
--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - 1
பெருங்காதலின் பொன்நிற கரையில்
- கூத்தலிங்கம்
உதயமான
ஒற்றை நிலவை முத்தமிட
ஆயிரம் உதடுகளாக மலர்ந்து
உதிர்கிறது விரிகடல்
மெல்லிய காமத்தின் விழைவை
சூடியிருக்கிறது
நீல மாலை வானம்
காற்றசைப்பில்
கிளை பிரிந்த சிறு பூவாக
கடவுளிடமிருந்து
நழுவிச் சிந்திய ஒரு துளி விந்து
நிறைவுறா அவாவின் தகிப்பில்
அலைமோதுகிறது பெருங்கடலாக
அதன் கரைகளில் அமர்ந்து காதலிக்கிறார்கள்
மனிதர்கள்
பதிவு செய்தது : பண்புடன் at 1 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 1
உரையாடிகள்
- ஜமாலன்
புழுக்கம் தாங்கவில்லை என
சன்னல்களை திறக்க திறக்க
திரைகளில் அடர்கிறது
பல மூச்சுக் காற்றுகள்..
காற்றின் வாசனைகளால்
காதலிகளை அறிவதற்கு
கற்க வேண்டியுள்ளது நிறைய..
நெற்றிவகிடிலிருந்து உன்னை
இரண்டாக கிழிக்கத் துவங்கிய
எலிப்பல்லின் கூர் முனைப்பட்டு
கதறுகிறது உனது உதடுகள்.
உறவுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல என்றேன்
உணர்வுக்கு அது அவசியமில்லை என்றாய்
விரைப்புடனும்
வியர்வையுடனும்
எத்தனை நாளைக்கு?
பேச்சில் மைதூனம் என்றாலும்
அதுவும்
பேரின்பம்தானே என்றான்
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.
****************************
வார்த்தைகள்
- ஜமாலன்
திரையின் நீர்மப் படிகப் பரப்பில்
சிதறிக்கிடப்பவை
உரையாடல்களல்ல.
கலைத்தலுக்கும்
கலவிக்கும்..
எஞ்சிய..
வார்த்தைகளால் கீறப்பட்ட
வலிகளின் பிசுபிசுப்பு.
நகல் உடல்களில்..
காமம் -
காவித்திரியும்
மின்பரப்பில் கீறப்பட்ட
முற்றுப்பெறா தாகங்கள்.
படபடக்கும் வேதனைகள்
படமெடுக்கும் தருணத்திற்காக
சொற்களுக்குள் நாகமென
சுருண்டிருக்கிறது.
மின்னுணர் வெளியில் நடக்கும்
மின்னுடல்கள் ஆட்டத்தில்
உணரவோ? உரைக்கவோ?
ஒன்றுமில்லை..
இந்த போதையின் எக்களிப்பு
தோல்வியின் இதம்தரும்..
தொல்மனதின் களிப்பிற்காக
என்றான்...
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 18
இளைப்பாறும் நேரத்திலாவது
- ஷைலஜா
வாழ்க்கைத்துணையாகத்தான்
வரவில்லை
வழித்துணையாகவாவது
வந்துவிடு
இளைப்பாறும் நேரத்திலாவது
இனியவாழ்வு என்ன என்பதைக்
காணவேண்டும்
தாயின் இடுப்பைநனைக்கும்
சின்னகுழந்தையின்
ஈரத்துணிமாதிரி
உன் நினைவுகள்
சிறுவாட்டில்
சேர்த்துவைத்த
சில்லறைகளாய்
பழகியபொழுதின்
புன்னகைகள்
மனச்செடியில்தினமும்
வளர்ந்து
உன் அருகாமையில்
மலரத்துடிக்கும்
நேச அரும்புகள்
காற்றுவயலில்
அறுவடைக்குக்
காத்திருக்கும்
கவிதைப்பயிர்கள்
இளைப்பாறும் நேரத்திலாவது
இனியதுணையாக வந்துவிடு!
பதிவு செய்தது : பண்புடன் at 2 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 7
இருக்கை
- ஹரன் பிரசன்னா
எனக்கு முன்னுள்ள இருக்கையில்
முதலில் ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்ந்தது
பின்பு ஒரு பெருநோய்க்காரன் வந்தமர்ந்தான்
ஒரு விபசாரி வந்தமர்ந்தாள்
யோகி போல் வேடமணிந்த
சிறு குழந்தை ஒன்றமர்ந்தது
யாருமற்ற பெருவெளியில்
தனித்திருக்கும்
அவ்விருக்கையில்
நான் சென்று அமர்ந்தபோது
என் வெளியேறுதலுக்காகக்
காத்திருக்கிறது பெருங்கூட்டம்
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 17
புரட்சித் திருமணம்
- மோ. கணேசன்
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...
மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!
மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!
சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?
மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?
அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!
சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!
இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!
சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...
--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 6
துடுப்புகளற்ற படகு
- ஹரன் பிரசன்னா
அமைதியற்ற நதியொன்றில்
பயணம் செய்து வந்தவன்
படகுகளை தந்துவிட்டுச் சென்றான்
மேலெங்கும் நீர் தெறித்துக் கடக்க
துடுப்புகளை வாங்க மறந்தேன்
நான் பயணத்தில் எதிர்கொண்ட பேரலைகள்
என்னை நனைத்துவிட்டுச் சென்றன
கரை மீள
படகுகளைப் பெற்றுக்கொண்ட புதியவன்
மறக்காமல் துடுப்புகளைக் கேட்டான்
ஆற்றின் ஆரவாரத்தை
துடுப்புகளின்றி எதிர்கொண்டவன் சொன்னேன்,
படகுகளும் அவசியமற்றவை.
குழந்தையின் வீடு
- ஹரன் பிரசன்னா
வீட்டின் கதவைத் திறந்ததும்
ஓடி வந்து கட்டிக்கொள்கிறது குழந்தை
ரத்தம் கேட்டு அலைந்துகொண்டிருந்த
பூனையொன்று ஜன்னல் தாண்டி ஓட
ஒரு மூலையில் பூக்கிறது
அதிமணம் கொண்ட மலர்
குழந்தை
முத்தமிடுகிறது
கழுத்தைக் கட்டிக்கொள்கிறது
காரணமே இன்றி சிரிக்கிறது, குதிக்கிறது.
அதன் நெற்றியை மெல்ல வருடுகிறேன்
குழந்தையையும் படைத்து
மிருகத்தையும் படைத்தவன்
குரூரனாக இருந்தாலும்
ஒரு மிருகம்
ஒரு குழந்தையை
பெற்றுக்கொள்ளுமாறு படைத்தவன்
கடவுளாகத்தான் இருக்கமுடியும்
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 16
மீட்சி
- ஷைலஜா
உறவினர்களிடம்
பேசும்போதெல்லாம்
ஊர்பேர்தெரியாதவர்களிடம்
பேசுவதாய்
உணர்கிறேன்
உன்னிடம் பேசும்போதோ
புதுப்புது உறவுகளைக்
காண்கிறேன்
இசையாய்நிறைகிறது
உன் காலடி ஓசை
தாலாட்டாய் நினைத்தே
உறங்கிவிடுகிறேன்
ஒவ்வொருநாளும்
உன் மௌனத்தில்
காலம் கரைகிறது
மீட்டுத்தர வருவாயா
விரைந்து?
தனிமைவீட்டில்
ஞாபகங்களே
வாசற்கோலங்கள்
உன் பார்வைக்குள்
அகப்பட்டுக்கொண்டபோதே
சிறைபிடித்துப்போனாய்!
விடுதலைவேண்டாம்
கூண்டுக்கிளிவாழ்க்கை
குதூகலமானதுதான்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 15
அன்று அயோத்தி... இன்று அமர்நாத்...
- மோகனன்
அன்று...
அண்ணன் தம்பிகளாய்
வாழ்ந்த நம்மை
அந்நியர்களாக்கியது
அந்த அயோத்தி....
ஐயோ... தீ..!
இன்றோ...
அமர்நாத்..
அங்கு அமருவதற்கு கூட
அடுத்தவனிடம்
அனுமதி கோரும்
அவல நிலை..!
உயிரற்ற பொருள்களுக்காக
விலை மதிப்பற்ற பல
மனித உயிர்கள்
இனியும் பலியாக வேண்டுமா..?
மதி கெட்ட மனிதா...
மதங்கள் உங்களை
நெறிமுறைப்படுத்தவே..!
பலரின் குரல்வளைகளை
நெறிப்பதற்காக அல்ல..!
மதங்களை மறந்து
மனிதங்களை வளர்த்துப்பார்..!
அப்பொழுது புரியும்
மனிதத்தின் மகத்துவம்..!
அமைதிப் பூங்காவாய்
இருந்த நம் தேசத்தை
அய்யோத்தியின் பெயரால்
அமர்நாத்தின் பெயரால்
மதநெருப்பைக் கொண்டு
மீண்டும் ஐயோ... 'தீ'... யாக்கிவிடாதே..!
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 13
பெண் சிசுவின் கேள்வி
- மோகனன்
அம்மா... நீ உணர்ச்சிகளுக்கு
அடிமையாகாதே..?
அப்படி அடிமையானதால்
கருவாகி உருவாகி விட்டேன்
உன் கருவறையில்
பெண் சிசுவாய்...
என்னால் அப்பனை
அறியமுடியாது - ஆனால்
உன்னை நானறிவேன்
கருவறையில் மட்டும்...
பிறந்தது பெண் சிசு
என்பதால்
கல்லெறிவது போல்
என்னையும் முள்வேலியில்
எறிந்து விட்டாயே...
ஏனம்மா..?
பெண்ணாகப் பிறந்து விட்டால்
பொன், பொருளுடன்
ஆடவனிடம் தரவேண்டும்
என்ற சமூக கட்டிற்கு
பயந்துவிட்டாயா..?
இல்லை... தவறான முறைதனில்
தப்புத் தப்பாய் நீ செய்த
திரைமறைவு காரியங்கள்
உன்னை வெளிச்சத்தில்
கொண்டு வந்துவிட்டதே
என்ற வேதனையா..?
நான் செய்த பாவமென்ன...
நீ சிற்றின்பம் அடைய
நானன்றோ பெருந்துன்பத்திற்கு
ஆளாகியிருக்கிறேன்...
அரசுதான்
உன்போன்றோர்க்கு
ஆயிரம் முறை சொல்கிறதே
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள்
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள் என்று
அப்படி நீ செய்யாததால்
என்னையல்லவா
இன்று பாதுகாக்காமல்
கொல்லுகின்றாய்..?
இனியேனும் நீ இதுபோன்ற
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
அப்படி நீ அடிமையானதால்
இன்று என் உயிர்
மெல்ல மெல்ல ஊமையாகிக்
கொண்டிருக்கிறது
முள்வேலிகளின் பிடியில்...
இனியேனும் நீ
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
என் போன்றோர்
இந்த பாவ பூமியை
பார்க்காத பாக்கியமாவது
கிட்டும்...
(நீயன்றோ உத்தமத் தாய்)
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 12
இனிய கணங்கள்
- ஷைலஜா
இனிய கணங்கள்
எத்தனை விலை?
வாங்கக்காத்திருக்கிறேன்
வாழ்வுப்பாலையில்
நடந்துநடந்து
வண்ணங்களையெல்லாம்
இழந்துவிட்டேன்
வாழ்க்கை இத்தனை வறட்சியானதென்று
அறிந்திருந்தால்
பயணத்தையே
தொடங்கி இருக்கமாட்டேன்
பாலைமணலில்
பதிந்து நடக்கும்போது
தடுக்கி விழும் கணங்களிலெல்லாம்
துணையைத்தேடி
தவித்துப்போகிறேன்
துணையாருமில்லை
தோள்கொடுக்கவாவது
இனியகணங்கள் எனக்குக்
கிடைக்குமா?
இனிய சிலகணங்கள் போதும்
நீண்டுவிடவேண்டாம் அதுவும்
இனியகணங்களுக்கு
ஈடில்லாவிலையோ?
என்னால் வாங்க இயலுமோ?
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 9
முன்வைக்கப்படும் கேள்விகளை...
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
எதிர்ப்படும் கேள்விகளுக்கான நம்
எதிர்வினைகள் என்னென்ன?
மற்றொரு கேள்வியை
மறுமொழியாய் தருவது.
கேள்விகளின் தரம் பற்றிய
கேள்விகளை முன்வைப்பது.
கிண்டல்கள் கேலிகள் என்று
கேள்விகளையே கேள்விக்கு உள்ளாக்குவது.
மௌனமான முகங்களால் கேள்விகளை
முற்றிலும் நிராகரிக்க முயல்வது.
வேறுவழியின்றி வெளிப்படும் நம்
விடைகளிலும் விளங்கத் தெரிவது
முன்வைக்கப்படும் கேள்விகளை யாரும்
முழுதாய் வாங்கிக்கொள்வதில்லை.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 7
என் சொத்து
- விசாலம்
என் தாயின் முந்தானை
இதோ இந்தப் பெட்டியில் ,
இதுதான் என் கோயில்
இதுவே என் தெய்வம்
குழந்தைப் பருவம்,
பல முறை கக்கல் .
அம்மாவின் புடவையில் .
முகம் சுளிக்காமல்
துடைத்தது அந்தக் கை
இரண்டு வயது பாலகன் ,
மழையில் நனைந்தேன்
வந்தன தும்மல்கள்,
மூக்கொழுகி நின்றேன்
கைக்கொடுத்தது
அம்மாவின் முந்தானை
அன்பாக துடைத்து .
கடும் சுரம் வந்தது ,
இடுப்பில் அள்ளிக்கொண்டாள்
ஓடினாள் டாக்டரிடம்
நடுவில் வாந்தி எடுத்தேன் ,
தன் தலைப்பில் ஏந்தினாள்
முகத்தில் சுளிப்பில்லை
அதில் ஒரு சலிப்புமில்லை
கிரிக்கெட் மேட்ச்சில்
செயித்து வந்தேன் ,
பெருமையுடன் பார்த்தாள்
வியர்வை ஒழுக நின்றேன் ,
ஒத்தி எடுத்தாள்,
தன் முந்தானையால் .
என் திருமணம் ஆனது
எனக்குச் செய்ததை அவள்,
தன் பேரனுக்குச் செய்தாள் ,,
அவள் முகம் சுளுக்காமல் .
இன்று அவள் இல்லை .
நைந்துப் போன் புடவையில்
அவளை நான் பார்க்கிறேன் .
என்ன தியாகம் ! என்ன அன்பு !
கோடிக்கோடி கொடுத்தாலும்
அம்மாவை வாங்க முடியுமா?
அவள் இடத்தை நிரப்ப முடியுமா ?
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 6
குழந்தையின் உறவுகள்
- மோகனன்
அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...
அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!
இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!
(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை 27.03.2005 -ல் எழுதியது)
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நாக. இளங்கோவன் 2
தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...
குன்றி ரண்டு குறுகி மெல்ல
ஒன்றை ஒன்று ஒத்திக் கொள்ளும்
கொல்லி வனத்துக் கூட்டைச் சுற்றி
மல்லி நிறமா லையிடுமீ ரருவி!
தென்றலொடு சந்தமிடும் சாதித் தேக்கமரம்
கொன்றையொடு கைகுலுக்கிக் கூடவரும் மூங்கிலுடன்
சந்தனத்தை முத்தமிட தவமியற்றும் மருதமரம்,
எந்தவத்தோர் இளைப்பாறும் முக்கனிபெய் முதுமரங்கள்!
இத்துனையும் காவலென் கொந்தமலர்த் தோட்டத்தில்;
அத்துனையும் அசைந்தாடும், அவளோடு நான்வந்தால்!
வகிடிட்ட வாடாமல்லி வரப்பிட்டே னவள்நடக்க,
முகிலையும் வாவென்பே னவளுக்குக் குடைபிடிக்க!;
சுற்றிநின்ற சூரியகாந்தி சூரியனை வேவுபார்க்க,
முற்றிவிட்ட மல்லிகையோ முத்தமிடு மவளுக்கு!
பச்சைஇக் கிளிகளையேப் பயிரிட்டு, அவர்மேல்
இச்சைகொள சேர்த்தனவோ வெள்ளைநிறக் கொண்டைகள்?,
மெச்சிஎனைக் கொண்டாள் கண்டாள் தூய
துச்சமது இல்லாதத் தும்பைச் செடிகளைத்தான்!
மெல்லிடைதான் காட்டி மெல்லவேக் குனிந்தனள்
சொல்லியதால், தும்பைகள் சிந்தினவே தூமலர்கள்!
சின்னஞ்சி றுமலர்கள் சிந்தலையேத் தங்கிய
சின்னவ ளங்கைதான் சிவந்ததையே நானறியேன்!
ஒருதும்பை ஓட்டைக்குள் மறுதும்பை செருகியவள்
இருதும்பை மாலைகளை ஒருநாழியில் கோர்த்திட்டு
ஒருதும்பை மாலைதனை என்றனுக்கு சூட்டிவிட்டு
மறுதும்பை மாலைக்கென் மங்கையவள் குனிந்தாளே!
மங்கையை மணந்ததால் கோவித்த கொழுஞ்சிப்பூ
எங்கையை இழுத்திட்டு இருநொடிகள் தானழுக,
தன்கையை தவளவிட்டு அதனழுகை வடியவிட்டாள்
அங்கையை பற்றுதற் காசையுடன் நானெருங்க,
துள்ளியோடி னளேதொட்டாற் சினுங்கித் தோட்டத்துள்!
இருகாணி மொத்தத்தில் என்சினுங்கித் தோட்டம்!
ஒருமானின் வெருக்கனவே ஓடினாள் குறுக்காக
ஒருகையில் பாவாடை, மறுகையில் மாராப்பு,
வருவேனா வெனப்பார்க்கும் கெண்டைகளின் பரபரப்பு!
"விண்நீலம் மறைத்திடவே விரைகின்ற மேகம்போல்
என்தோட்டம் சினுங்கியதே அவள்சென்ற பாதையெலாம்!!"
என்னவொரு காட்சியிது என்றேநான் களித்திருக்க,
சின்னவளின் சீறடியில் கோவிக்கும் கொலுசோசை!!
இதுகாறும் கேட்கலையே இப்பொழுது எப்படியே,
அதுதேடி நானெருங்கி அப்படியே திகைத்தேன்!
விரைந்தோடிப் போகையிலும் ஒலிக்காத மெல்லியலாள்
"சினுங்கிகள் சினுங்கையிலே சீண்டினவா மவள்கொலுசை!!"
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 5
அது
- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை, இலங்கை
அவர்கள் வரட்டும்
எது கொண்டோ உடைத்துப் போன
ஓர் ஆழ்துயர் மனதை
எப்படிச் சரிப்படுத்துகிறார்களென
வேடிக்கை பார்க்கலாம்
அது ஒரு பெண் மனது
பால்யம் முதலாய்ப் பலர் சேர்ந்து
பருவங்கள் தோறும் பல எல்லைகளையும்
அணைகளையும் வளையங்களையுமிட்டு
இன்னும் பல இடர்களை ஒன்றாய்ப் பின்னி
இறுக இறுகச் சேர்த்துக் கட்டிய மனது
முன்பும் அது சிதைந்தது
சிறுகச் சிறுகச் சிதைந்து வருகையில்
திரும்பவும் வந்து பெருந்துயரொன்று கொண்டு
அவர்கள் அதனை மீளச் செப்பனிட்டார்கள்
காலத்திற்கு என்ன தெரியும் - அவளது
கண்ணீர் பிசைந்து
அவர்கள் சீர்படுத்தப் படுத்த
மீண்டும் சிதிலமாகவே செய்தது
இப்பொழுதைப் போல
அவர்களும் வந்தனர்
ஓட்டைகள் வழியே நழுவிய துயர்களை
நினைவுகள் கொண்டு மீள அடைத்தனர்
மறதியில் உதிர்ந்து காணாமல் போனவற்றை
மீளப் பெறமுடியாமல் போக
அவதூறுகள் கொண்டும், கடுஞ்சொற்கள் கொண்டும்
அவளுக்கு வலிக்க வலிக்க
மகிழ்வோடும் அலுப்பில்லாமலும்
இதயம் நிறைந்த குரூரத்தோடும் மீளவும் மெருகேற்றினர்
அவர்கள் பார்வையில் இக்கணத்தில்
அழகு பெற்றதாகி விட்டது அது
அது ஒரு பெண்மனது
ஆம் அவள் ஒரு பெண்
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், போட்டிக்கு வந்த படைப்புகள்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - செந்தமிழ் மாரி - 2
மறுதலிப்பு
- செந்தமிழ் மாரி
கடலைக் குடிக்கும் தாபத்தோடு
காத்திருந்தது வானம்
சிரம் தாழ்ந்து
இதழ் தொடுகையில்
இடறும் நரன்களாகின
மீன்கள்
மீன்கள் இட்ட கண்ணீரே கடல் -
என நினைத்து
தம் இச்சையை
நீலவெளியில் அடைத்துக்கொள்கிறது வானம்!
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்