Showing posts with label பண்புடன் மீள்பதிவுகள். Show all posts
Showing posts with label பண்புடன் மீள்பதிவுகள். Show all posts

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 7

விடியற்பொழுதின் தோழமை - குல்சார் கவிதை மொழிபெயர்ப்பு
- சித்தார்த்


http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/230a18ea8faaf0fa/acb1b79ca129c166?lnk=gst&q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+#acb1b79ca129c166

இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில் எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும்
செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது
போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில்
சிக்கியவை குல்சாரின் மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அம்மூன்று கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி...


குல்சார் கவிதைகள்


அரவமின்றி வருகிறாய், சொல்லாது செல்கிறாய்
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
தோட்டத்தில், சில பொழுதுகளில்....
புளியமரம்
காற்றினில் அசைகையில்,
கல் சுவற்களின் மேல்
தெறிக்கும் நிழற்ப்புள்ளிகள்
உறிஞ்சப்படுகின்றன,
காய்ந்த நிலத்தின் மேல்
தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளைப் போல.
தோட்டத்தில், ஞாயிறொளி நிதானமாக விம்முகிறது.


மூடிய அறைகளில்...
விளக்கொளி துடிக்கையில்,
பரந்த நிழலொன்று எனை உண்ணத்துவங்குகிறது, ஒவ்வொரு கவளமாய்.
தூரத்திருந்து
கண்கள் எனையே பார்த்தபடி உள்ளன.
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
நாளின் அனேக சமயங்களில் எண்ணத்தில் இருக்கிறாய்.


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


***


வருக

திடீரென
கோவமாய் அறையுள் நுழைந்த காற்று
புயலொன்றை கட்டவிழ்த்து விட்டது
திரைச்சீலைகள் படபடத்தன
மேஜை மேல் கண்ணாடிக்கோப்பைகள் பறத்தப்பட்டன
பக்கங்கள் விதிர்விதிர்க்க, ஒரு புத்தகம் அவசரமாய் தன் முகம் மூடியது
மைபுட்டி பாய்ந்து
வெற்றுத்தாள்களில் வண்ணத்தோரணங்களிட்டது
சுவற்றுச்சித்திரங்கள் ஆச்சரியத்தில்
உனை காணவென எம்பிப் பார்த்தன


மீண்டும் இப்படி
வா


என் அறையை
மூழ்கடி


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


****


மன்னித்துவிடு, சோனா


மன்னித்துவிடு, சோனா.
இம்மழையினில்
என் வரிகளின் நிலப்பரப்பினூடே
பயணிப்பது
உனக்கு அசௌகர்யமாய் இருக்கலாம்.
இங்கு பருவம் பாராது பெய்யும் மழை.
என் கவிதைகளின் குறுக்குச்சந்துகள் பெரும்பாலும் ஈரமாகவேயுள்ளன.
குழிகளில் அனேகம் சமயங்களில் நீர் சேர்ந்து கிடக்கிறது.
இங்கு தடுக்கி விழுந்தால்
உன் கால் சுளுக்கிக்கொள்ளலாம், ஜாக்கிரதை.


மன்னித்துவிடு. எனினும்....
உன் அசௌகர்யத்திற்கு காரணம்
என் வரிகளில் வெளிச்சம் சற்று மங்கலாக இருப்பது தான்.
நீ கடக்கையில்
புலப்படாது கிடக்கின்றன
வாயிற்படியின் கற்கள்
நான் அடிக்கடி இடித்து கால்நகம் பெயர்த்துக்கொள்வேன் இதில்
குறுக்குச்சாலையில் நிற்கும் தெருவிளக்கு
யுகங்களாய், எறியாமல் நிற்கிறது.
நீ அசௌகர்யப்பட்டுள்ளாய்.
மன்னித்துவிடு. இதயத்திலிருந்து கேட்கிறேன், மன்னித்துவிடு.


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


தமிழில் : சித்தார்த். வெ

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 6

வித்யா,ரோஸ் மற்றும் பக்கத்து வீட்டு திருநங்கை..
- அனிதா

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/b036f7e083b22f92/fa2d309df7eba461?lnk=gst&q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87+#fa2d309df7eba461

திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே
திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு
தெரிந்ததெல்லாம் அவர்கள் வடநாட்டு ரயில்களில் பிச்சை எடுப்பார்கள் என்றும்,
விபச்சாரம் செய்வார்கள் என்றும், கூவாகத்தில் திருவிழா நடத்துவார்கள் என்றும்
தான். அந்த செய்திகள் கூட இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை போலவோ குட்டை பாவாடை
அழகியின் நடுபக்க புகைப்படம் போலவோ வெறும் ஆர்வம் ஈர்ப்பவை. வலியறியாதவை.


போன மாதம் பெங்களூருவின் பிரதான சிக்னல் அருகே ஒரு திருநங்கை ஒரு காய்கறி
விற்பவளுடன் வெகு சகஜமாக பேசுவதை பார்த்தேன். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து,
சாயங்காலத்தில் ஊர் கதை பேசும் இரெண்டு பெண்களை போல அத்தனை இயல்பாக
பேசிக்கொண்டிருந்தார்கள். அவளும் ஊர் கதை பேசியிருக்க கூடும். விலைவாசிப்பற்றி
பேசியிருக்கக்கூடும். அரசியல் கூட பேசியிருக்கலாம்.


வித்யாவின் வலைப்பூவை எனக்கு சில மாதங்களுக்கு முன்பு யாரோ காட்டியபோது கூட
"இதை எழுதறது ஒரு அரவாணி" என்றார்கள். திருநங்கை எழுதுவதாலேயே கவனம் பெற்றது
அந்த வலைப்பூ. இன்று அவருக்கு பெரிதாய் உதவமுடியாவிடினும் அவரை சக
வலைப்பதிவராக, கருணை கண்ணோட்டம் தவிர்த்து இயல்பாய் ஏற்றுக்கொண்டிருக்கிறாகள்.
வலைப்பூ எழுதுபவர்கள் மத்தியிலும் புத்தகம் படிப்பவர்கள் மத்தியிலும்
வித்யாவால் இன்று அரவாணிகள் குறித்தான பார்வை ஆரோக்கியமாக மாறியிருப்பது உண்மை.
ஆனால் சமூகத்தில் இந்த வெளிச்சம் பரவிய இடங்கள் மிக மிக குறைவு.


திருநங்கைகளைப் பற்றி அதிகம் பரவ வேண்டிய இடங்கள் நம் குடும்பங்களும், நாளைய
மன்னர்கள் எனக் கூறப்படும் இளைஞர் சமுதாயத்திலும் தான். சீரியலிலும்,
கணினித்துறையிலும் கால் சென்டர்களிலும் முடங்கி கிடக்கும் இவர்களில் நிறைய
பேருக்கு நேரமிருப்பதில்லை, இருந்தாலும் படிக்கும் வழக்கமில்லை, படித்தாலும்
ஆங்கில மர்ம நாவல்களிலும் வார பத்திரிக்கை விட்டுகளிலும் தேங்கி விடுகிறார்கள்.
வாழ மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இவர்களைபோன்றவர்கள் மத்தியில்
திருநங்கைகள் பற்றிய பார்வைகளை மாற்றுவது மிகவும் தேவையான, அதே நேரம் மிக
கடினமான வேலையாகிறது.


வெளிச்சம் பரப்பும் மகிழ்ச்சியான அதிரடியான நிகழ்ச்சியாக துவங்கியிருக்கிறது
"இப்படிக்கு ரோஸ்". அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார் -
இது இங்கலிஷ் கூட பேசுதே என்று. அவள் பேசுவதும் தன்னை முன்னிறுத்தும் விதமும்
நான் வேற்று கிரகவாசி இல்லை, உங்களில் ஒருத்தி என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
தள்ளி நின்றே இத்தனை நாளும் இவர்களை பார்த்தவர்களுக்கு வரும் சந்தேகங்களும்
ஆச்சர்யங்களும் இருக்கத் தான் செய்யும்.. இருக்கட்டும். இது ஆரம்பம் தான்.


இந்த நிகழ்ச்சியில் அரவாணிகளின் கவலைகளை பகிர்ந்துக்கொள்வதில்லை. மாறாக, ரோஸ்
என்ற திருநங்கை சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களையும் விவாதிக்கிறாள், நேருக்கு
நேராய் கேள்விகள் கேட்கிறாள். ஆசுவாசபடுத்துகிறாள், நம்பிக்கையூட்டுகிறாள்.
சாவகாசமாக ஒரு திருநங்கையை பார்ப்பது, அவள் குரலை கேட்பது, அவளை உற்று
நோக்குவது என போதுமான அறிமுகங்கள் கிடைக்கின்றன. அவர்களை சாதாரண மனிதர்களாக
பார்க்க பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தடைகள் களைந்து மெல்ல
வெளிவருகிறார்கள். அந்த திருநங்கையின் மீதிருந்து கவனம் அகன்று அவள் பேசும்
விஷயத்திற்கு மெல்ல நகரத்துவங்கியிருப்பதை நிகழ்ச்சியை பார்க்கும் பலரும்
உணர்ந்திருப்பார்கள்.


நமக்கு நடக்காது என்ற மனோபாவம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான் மனத்தடைகளுக்கு
காரணம். மனத்தடைகளால் விளையும் குழப்பமும், குழப்பத்தால் பயம் விளைவதும்,
பயத்தால் திருநங்கைகளை வீட்டிலிருந்து புறக்கணிப்பதும் நிகழ்கிறது. வித்யாவின்
வீட்டாரோ ரோஸின் வீட்டாரோ அவர்களின் வளர்ச்சியிலும் துணிச்சலிலும் எத்தனை
பூரித்துபோவார்களென தெரியவில்லை.


ஒரு திருநங்கை உருவாகிறாளென அறிந்துக்கொள்வது அத்தனை கடினமல்ல. உடல்ரீதியான,
மனரீதியான குழப்பங்களால் நம் குழந்தை தனிமைபடுமேயானால் சில நாள் கவனம் குவித்து
கண்காணிக்கலாம். ஒரு பெண் பருவத்திற்கு வரும்போது பயப்படாதேம்மா இது ஒன்றும்
இல்லை சரியாகிடும் என்று சாதாரணமாக கவுன்ஸிலிங் செய்வதில்லையா?
பெற்றோருக்கு தெரியவில்லையெனில் திருநங்கையாக மாறுபவர்களுக்கென நிறைய
கவுன்சலிங் வழங்கபடுகிறது. இங்கு முதலில் நடக்க வேண்டியது பயம் களைதல்,
பெற்றோருக்கும், குழந்தைக்கும். பல வருடங்களாக தன்னை ஒரு பாலோடு இணைத்து
யோசித்த குழந்தைக்கு பால் மாறும்போது மிகுந்த பாதுகாப்பும், நம்பிக்கையும்
தேவையாயிருக்கும். மருத்துவரீதியாக குழந்தைக்கு என்னன்ன வேண்டுமோ செய்யலாம்.
விபத்தில் அடிபட்டு உயிருக்கு ஒரு குழந்தை போராடுமேயானால் எத்தனை செலவு
செய்தும் காப்பாற்றுவதில்லையா?


திருநங்கைகள் உருவாவதை தடுக்கமுடியாவிடினும் அவர்களை ஒரு குடும்பத்திலிருந்து
விலக்காமல் ஏற்றுக்கொள்வோமென்றால் அதுவே அவர்கள் வாழ்வை சீராக்குவதற்கான முதல்
முயற்சி. இப்பொழுது கணிணித்துறையில் எங்கும் ஜாதி பார்ப்பதில்லை. பாலின
பேதங்கள் இல்லை. ஆரோக்கியமாகவும் விரிவாயும் சிந்தித்தோமென்றால், திருநங்கைகளை
பக்கத்து கேபினிலோ, ரயிலுக்கு நம் முன்னே பயணசீட்டு எடுத்துக்கொண்டோ, கட்சி
ஊர்வலங்களிலோ, மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலோ குடும்பத்துடனோ நண்பர்களுடனோ
உறுத்தாமல் பார்க்க முடியலாம். காலம் மாறும்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 5

தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்
- நந்தா


http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/6ef72f87eaf41bfc/b4b3ec78c1cd3017?lnk=gst&q=%E0%AE%AE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#b4b3ec78c1cd3017

மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு
பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும்,
விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள
"நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்" இந்த கட்டுரை இதற்கான மறு
பார்வையை எழுதச் சொல்லி எனக்குள் தூண்டியிருக்கிறது.

இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா ஒரு மோசமான சூழலால்
கட்டுண்டிருக்கிறது. இந்த, இந்த அபத்தங்கள் இப்போது ஆரம்பித்தது என்று
குறிப்பிட்டுச் சொல்லுபடியாய் இல்லாமல், தொன்று தொட்டு நெடுங்காலமாய்
இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. மறைமுகமாய் தமிழ் சினிமா, கலாச்சாரம்
என்ற சொல்லாடலை உபயோகப்படுத்தி, மெல்ல மக்களிடையே ஏற்படுத்தி
வைத்திருக்கும் கருத்தியல்களையும், அல்பத்தனமான உணர்ச்சிகளையும், இவை
எவற்றையும் விட, விகாரமாய் நிறுவி வைத்திருக்கும் கட்டமைப்புகளையும் நாம்
மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறோம். சொல்லப்போனால் இதுவே
வெகு தாமதம் தான். "Any how,It's better late than never".

யமுனா ராஜேந்திரனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பல
விஷயங்களைக் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ள வேண்டியவைதான். அது தமிழ் சினிமா
குறித்தான சரியான சொல்லாடல்கள் இல்லை எனும் கவலை, உலக சினிமா என்பதற்கு
தமிழ் சினிமா அறிவு ஜீவிகளின் புரிதல், திரைப்பட விழாக்களின் பின்னாலான,
வர்த்தக நோக்கம், திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின்
பின்னே நிலவும் அரசியல், என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.
இது குறித்தான அவரது புரிதல்களை அவர் வெளிப்படுத்தும் போது சினிமாவை
நேசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும், மேலதிகமாய் ஒரு கவலை ஏற்படும் என்பது
உண்மையே.

ஆனால் இவரது இந்த கட்டுரையில் ஒரு சில இடங்களில் மட்டும் நாம் முரண்பட
வேண்டி இருக்கிறது. "தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான
தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை." என்று ஆரம்பித்து, இன்று ஒரு
சிலரால் "தீவிர விமர்சகர்கள்" என்று கொண்டாடப்படுபவர்கள் மீதான இவரது
காட்டமான விமர்சனங்களைக் குறித்து பேசும் போது நாம் சற்றே மாறுபட
வேண்டியுள்ளது. அதற்குக் காரணங்களும் உள்ளது.

தமிழ் சினிமாவின் தற்போதைய அறுவறுப்பான சூழ்நிலைக்கு ஓர் முக்கிய காரணம்
சரியான விமர்சன சூழல் இல்லாததும் கூட. இன்றும் எங்கள் ஊர்களில் திரை
விமர்சனம் என்பது, சன் டீவியின் விமர்சனமாகவோ, குமுதம் அல்லது ஆ.வியின்
விமர்சனமாகவோ மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. சற்றே முன்னேறிய
அல்லது கணிணி வல்லுநர்களுக்கு மேலதிக வாய்ப்பாக இணையத்தில் ஆங்காங்கு
எழுதப்படும் பதிவுகள் மற்றும் ஏதேனும் பொழுது போக்குத் தளங்களின்
விமர்சனங்கள் (இதற்கும் ஆ.வி டைப் விமர்சனத்திற்கும் அதிக
வித்தியாசமில்லை) கிடைக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு வெகு ஜன ஊடகங்களில் எழுதப்படும் திரை
விமர்சனங்கள், பல்வேறு அரசியல்களினடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன.
குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குநர் அல்லது கதாநாயகன்,
போன்றவர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊடகத்திற்குமிடையேயான
நட்புறவினடிப்படையிலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. உனக்கும்
வேண்டாம், எனக்கும் வேண்டாம் 100 க்கு 40 மார்க் போடறேன் எடுத்துக்கோ
என்ற தொனியில் எழுதப்படும் இத்தகைய விமர்சனங்களில் நிறைந்துள்ளப்
போலித்தனங்களைப் பார்க்கையில் ஒரு வித ரௌத்ரம் ஏற்படுகிறது.

அறந்தை நாராயணன் போன்றோ ஏற்படுத்திக் கொடுத்த விமர்சன சூழல், சமீப
காலங்களில்தான் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. சாரு, அ.ராமசாமி, எஸ்.ரா,
யமுனா, ப.திருநாவுக்கரசு, விஸ்வாமித்ரன், தியோடார் பாஸ்கரன்,வெங்கட்
சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, காஞ்சனை சீனிவாசன், பாமரன்,
பிஸ்மி,போன்ற விமர்சகர்களும், திலகவதி, செழியன் போன்றோரின் உலக சினிமா
பற்றிய நூல்களும் கொஞ்சமேனும் வாசகர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.
இவர்கள் ஒவ்வொருவரும் மார்க்சிய சார்பு, திராவிட சார்பு,அழகியல்
விரும்புபவர்கள், விளிம்பு நிலை பார்வையாளர்கள்,என ஒவ்வொரு தளங்களில்
இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களே. தான் சார்ந்த அரசியல்
சித்தாந்தங்கள் இவர்களது விமர்சனங்களிலும் எட்டிப்பார்த்துக்
கொண்டுதானிருகிறது.

அது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பராசக்தி குறித்த திராவிட பார்வையாகட்டும்,
அல்லது யமுனாவின் மார்க்சிய பார்வைகளாகட்டும் ஒவ்வொருவரும் தனது சார்பு
நிலையை வெளிப்படையாகவே தெரிவித்து கட்டுரைகளும், விமர்சனங்களும், எழுதிக்
கொண்டிருப்பவர்களே. இங்கே நெருடலே யமுனா இடது சாரி விமர்சனச் செயல்பாட்டை
ஒட்டு மொத்தமாய் முன் நிறுத்தி, பிற அரசியல் சார்புகளையும், காலச்சுவடு
எழுத்தாளர்கள் என்று சொல்லி தியோடார், அ.ராமசாமி போன்றவர்களயும், இன்ன
பிற காரணங்களுக்காக எஸ்.ரா, சாரு போன்றவர்களையும் எளிதில் புறம்
தள்ளுவதுதான்.

நிற்க. கருத்தியல் அடிப்படையில் இந்த விமர்சகர்கள் அனைவரும், எல்லா
படங்களுக்கும், வெகு ஜனநாயகமான, முன் மதிப்பீடுகளற்ற, நடு நிலை
விமர்சனங்கள் தான் எழுதி இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வர வில்லை.
இந்த விமர்சகர்களின் ஒரு சில விமர்சங்களில் நிலவும் தேவையில்லாத
காட்டமும், காட்சி ஊடகம் என்பதை மறந்து வெறுமனே தான் சார்ந்த அரசியல்
சார்பை முன்னிறுத்தி, வெறுப்பினை உமிழும் சில சந்தர்ப்பங்களையும் நாம்
அறிந்துதான் இருக்கின்றோம். இது யமுனாவிர்கும் பொருந்தும்.

தமிழ் சினிமா இப்போதிருக்கும் நிலையில், இவர்கள் செய்யும் சிறு சிறு
பிழைகளை புறம் தள்ளி, இவர்களனைவரிடமிருந்தும், மேலதிகமாய் இன்னும் அதி
தீவிர செயல்பாடுகளை வேண்டி நிற்கும் சூழ்நிலையில் நாம் நிற்கின்றோம்.
ஏனெனில் இப்போது (என்னைப் பொறுத்தவரை) நம் முன் விரவி நிற்கும் முக்கியப்
பிரச்சினை விமர்சனங்கள் எத்தகைய தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்பதே
அல்ல. அதை விட பூதாகரமாய் தமிழ் சினிமாவின் அவலங்களும், அறுவறுப்புகளும்
நம் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன தமிழ் சினிமா
சூழல் கட்டமைத்து விட்டது?? இதெல்லாம் சும்மா அளவுக்கதிகமாய்
மதிப்பீடுகளைக் குறைத்து கூறும் ஒரு முயற்சி என்று எவரேனும் சொல்லலாம்.
ஆனால் இப்படியாய் நாம் கூறுவதற்கும் ஆதாரங்களாய் சில இருக்கத்தான்
செய்கின்றன.

நடிகைகள் அல்லது சதை வியாபாரிகள்:

தமிழ் சினிமாவில் நடிகைகளை வெறும் நுகர்வுப்பண்டமாக மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வருவதை என்னால் ஒரு உச்சக்கட்ட அறுவறுப்பான ஒன்றாகவே
பார்க்க முடிகிறது. பெண்ணியம் குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்களும்
கேள்விகளும் எழுப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது உச்சகட்ட
பாக்கியமாய்,"கதாநாயகனிடம் திட்டுக்களோ, அடியோ அல்லது இலவசமாய் தமிழ்
கலாச்சரம் பற்றிய உபதேசங்களையும் வாங்கிக் கொண்டு, அவனது காலைச் சுற்றிக்
கிடப்பதே" தனது லட்சியமாய் கொண்டு வாழும் அழகு பொம்மைகளையே கதாநாயகிகள்
என்று தமிழ் சினிமா சூழல் நமக்கு ஒரு புனைவை ஏற்படுத்தி இருக்கின்றது.
சத்யராஜ், சிம்பு,தனுஷ்,விஜய்,சரத்குமார் போன்ற கதாநாயகர்களின் பல
திரைப்படங்களில் நாயகிகள் ஏதாவது ஒரு பாட்டில், நாயகனின் காலைச் சுற்றிக்
கட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். இதை மதிக்காத ஓர் தோரணையில் நாயகன்
படு அலட்சியமாய், எங்கேயோ பார்த்த படி காலை விரித்த படி நின்றுக்
கொண்டிருப்பான். இந்த இடத்தில் நாயகி தனது நடிப்புத் திறமைக்கு விடப்பட்ட
சவாலாய் கருதிக் கொண்டு எவ்வளவுக்கெவ்வளவு விரகதாபத்தை தனது முகத்தில்
காட்ட வேண்டுமோ அவ்வளவு தூரம் முயற்சித்து நடித்திருப்பார். மிஞ்சி
மிஞ்சிப் போனால் அவருக்கு அந்த படத்தில் இதை விட சிறந்த ஓர் நடிப்புத்
திறமையை வெளிப்படுத்தும் ஓர் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

"உங்களுக்கெல்லாம் அம்மான்னு ஒரு ஸ்தானம் இல்லைன்னா மரியாதையே இருக்காது"
என்று தனது காதலியைப் பார்த்து விஜய் ஒரு வசனத்தை பேசியிருப்பார். அப்படி
கோபப்பட்டு கேவலமாய் நினைக்கும் எந்த ஒரு பெண்ணையும் தனது காதலியாய்
அல்லது மனைவியாய் ஏற்றுக் கொள்ள ஓர் அடிமட்ட மடையன் கூட நினைக்க
மாட்டான். ஆனால் தான் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு பெண்ணிடம் இது
போன்று பல முறைகள் அந்த படத்தில் விளாசியிருப்பார். இந்த வசனம்
சொல்லப்பட்ட போது, தியேட்டரில் இருந்த பெரும்பாலான கல்லூரி மாணவன்களும்
மூச்சு விடாமல் ஆரவாரம் செய்தார்கள். தனது டார்கெட் ஆடியன்ஸை
திருப்திப்படுத்தும் பொருட்டு தனது பெரும்பாலான படங்களில் இது போன்ற ஒரு
சில சீன்களை தொடர்ச்சியாய் கையாண்டுக் கொண்டிருக்கிறார் விஜய். அவர்
நடித்த சிவகாசி படம் இதற்கு இன்னொரு உதாரணம். எல்லாரும் கூடியிருக்கும்
ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு பெண்ணை Humiliate செய்வது என்பது சத்தியமாய்
ஒரு பொறுக்கித் தனமான செயலே.எந்த ஒரு சுய மரியாதையுள்ள பெண்ணும், தன்னை
அசிங்கப்படுத்தும் அப்படி ஒருவனை விரோதியாய்தான் பார்ப்பாளேயொழிய அவனுடன்
கட்டிப் புரண்டு, காதல் செய்ய நினைக்க மாட்டாள்.

ஆனால் தமிழ் சினிமா நமக்கு சுய மரியாதையுள்ள மற்றும் படித்த பெண்களை
கர்வக்காரிகளாகவும், அகம்பாவம் மிக்கவர்களாகவும், ஏழைகளையும்,
முதியவர்களை மதிக்காத திமிர் பிடித்தவளாகவுமே நமக்கு அடையாளப்படுத்தி
வருகிறது. பாலிவுட்டுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு சிறந்ததாய் தற்போது
விளங்குவது நம் கோலிவுட்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்
சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில், "அய்யா நம்ம சின்னம்மா பட்டணத்துல
படிப்பை முடிச்சுட்டு நாளைக்கு வர்றாங்களாம்" என்று சொல்லும் ஓர் ஒற்றை
வரியைத் தொடர்ந்து தொடங்கும் கதாநாயகியின் அறிமுகம். அவரது அறிமுக
காட்சியில் ஒன்று அவர் ஏதேனும் ஒரு சிறுமியையோ, அல்லது ஓர் முதியவரையோ
கோபம் கொண்டு அறைவாள் அல்லது தனது காரை அரை நொடி கூட பிரேக் போடத்
தயங்குபவளாய் ஏதேனும் ஓர் கோழியையோ, ஆட்டையோ சாகடித்துச் செல்லும், ஓர்
அற்ப பிறவியாகவே காட்டி வருகிறது.

இப்போ எல்லாம் எங்கய்யா இப்படி படம் எடுக்கிறாங்க? அது எல்லாம் இப்போ
இல்லை என்று கூற நினைப்பவர்க்கு நான் சொல்ல வருவது இதுதான். படித்த
அல்லது தான் சார்ந்த துறையில் திறமை மிக்கவர்களாய் இருக்கும் பெண்களை
இவ்வாறு கர்வக்காரிகளாகவும் அல்லது ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் ஓர்
அகம்பாவக்காரிகளாவும் காட்டிக் காட்டியே தமிழ் சினிமா மக்களின் மனதில்
விதைத்த நஞ்சுக்கள் ஏராளம். வெகு நிச்சயமாய் இது பெண்கள் குறித்தான ஓர்
மறைவான கட்டமைவு ஏற்பட காரணமாய் இருந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் ஒரே ஒரு
வித்தியாசம்தான். வில்லன் "உன்னை கற்பழிக்கிறேன்" என்று சொல்லி
கற்பழிப்பான். கதாநாயகன் "உன்னைக் காதலிக்கிறேன்" என்று சொல்லி
கற்பழிப்பான். அவ்வளவே. உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவும் கொண்டுச்
செல்லப்பட வேண்டும் என்று சொல்லி அதனடிப்படையில் நிகழ்த்தப்படவேண்டிய புற
மாற்றங்களாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களில் முக்கியமானவை, 2 1/2 மணி
நேரச் சினிமா என்பதிலிருந்து மாற்றுதல், காட்சிகளை இடைவேளைக்கு முன்,
பின் என்று பிரிக்காமல், இடைவேளையற்ற சினிமாவாக மாற்றுதல், பாடல்களற்ற
சினிமாவை உருவாக்குதல் என்று பல்வேறு விஷயங்களை விமர்சகர்கள்
முன்வைக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சிகளில்லா சினிமாவை எவர் ஏற்றுக்
கொள்ளக்கூடும். தனக்கு பிடித்த நாயகியின் பல்வேறு தாபங்களையும், கணவனின்
முன் மனைவி கூட செய்ய யோசிக்கும் உடல் அசைவுகளயும், க்ளோசப் ஷாட்டில்
நாயகியின் அங்கங்களையும், காதல் விளையாட்டுகளையும் பார்த்து
கிளர்ச்சியுறும் கூட்டமாய், ஒரு சமூகத்தையே, தமிழ் சினிமா மாற்றி
வைத்திருக்கும் இந்த சூழலில், பாடல்களில்லாமல் திரைப்படங்களா????
"போங்கடா போய் பொழப்பைப் பாருங்கடா" என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கோபம்
கொள்ளக்கூடும்.

தமிழ் சினிமா, தனது ரசிகர்களுக்கு செய்த ஒரு பெரும் தொண்டு, அவர்களை
"விசிலடிச்சான் குஞ்சுகளாக" மாற்றி வைத்திருப்பதுதான். சந்திரமுகி
திரைப்படத்தில், ரஜினியைப் பார்த்து, நயன்தாரா "இப்போ பேசாம போ…. போ"
என்று ஒருமையில் பேசுவார். இந்த காட்சி வரும் போது தியேட்டரில் பாதி
பேருக்கு மேல் "ஏய்ய்ய்ய்ய்" என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். தனது
ரசிகர்களின் உச்ச கட்ட ரசனையை தெரிந்துதானோ என்னவோ, அவர்களை சமரசம்
செய்ய, ரஜினியும், நயனைப் பார்த்து அடுத்த காட்சியில் "போடி" என்று
சொல்லி விட்டுப் போவார். அதன் பின்பே எங்கள் ரசிகர்கள் தலைவர் பழி
வாங்கிட்டார் என்ற அல்ப உணர்ச்சியுடன் சமாதானமடைவார்கள். தமிழ் சினிமா
கட்டமைத்த இத்தகைய ரசனையான சூழலிற்கு வெகு நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.

தாலி, கற்பு,கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ் சினிமா பெண்களுக்கும்,
கதாநாயகிகளுக்கும் மட்டும் என்று கட்டமைத்திருக்கும் விதிகள் ஏராளம்.
தாலி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், பாதி இயக்குநர்கள் திரைப்படங்களே
எடுத்திருக்க முடியாது. இவர்கள் தாலியை வைத்து இன்னும் பம்பரம் விடாதது
மட்டும்தான் பாக்கி. நாயகி தனது தாலியை அவிழ்த்தெறியும் போது, அடிக்கின்ற
கடல் அலைகள் நின்று விடுகின்றது, கூடு திரும்பும் பறவைகள் பறப்பதை
நிறுத்தி விடுகின்றன, "அய்யோ ஒரு கோபத்தில் நான் தாலியை அவிழ்த்தெறிந்து
விட்டேனே" என்ற எண்ணத்தில் நாயகி கதறி அழுகின்றாள்….டேய் என்னதாண்டா
பிரசினை உங்களுக்கு?? நீங்க எல்லாம் நார்மலாவே படம் எடுக்க மாட்டீங்களா
என்று நாம் கதற வேண்டியதாயிருக்கிறது. நாயகியின் தொப்புளை வைத்து என்ன
என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்தது போல், தாலியை வைத்து எப்படி
எப்படி எல்லாம் செண்டிமெண்டுகளை உருவாக்கலாம் என்று இவர்கள் யோசித்து
வைத்திருந்திருக்கிறார்கள். அதன் உச்ச கட்டமாக குஷ்பூ ஒரு படத்தில்
தாலியால் ஒருவனை கொலையும் செய்கிறார்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கற்பழிப்பு என்பதற்கான
தண்டனையாய் நம் தமிழ் சினிமா கிராம பஞ்சாயத்துக்கள் வழங்கி வந்த
தீர்ப்பு, "கெடுத்தவன் பொண்ணைக் கட்டிக்கணும்". ஒரு பொண்ணை நமக்கு
பிடிச்சுப் போச்சுன்னா, அவளுக்காக அலைய வேண்டிய தேவையில்லை. காதல் கடிதம்
எழுதி, அவள் வரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
"உன்னைத் தவிர வேறொரு பொண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்" என்று வசனம்
பேசத் தேவையில்லை. ஏன் அவளுக்கு ஒரு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கக் கூட
தேவையில்லை. வேறு என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள், அவளைக் கெடுத்துடலாம்.
அது எப்படி அவ்வளவு சாதாரண விஷயமா? அவள் தனியே இருக்க வேண்டுமே அதற்கு
என்கிறீர்களா?? அடப் போங்க சார், கல்லூரி லைப்ரரி, ஊர் ஆத்தங்கரை,
சவுக்குத் தோப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது? அங்கே தாராளமாய் துரத்திப்
பிடித்துக் கற்பழித்துக் கொள்ளலாம். சுடுகாட்டுல கூட ஒண்ணு ரெண்டு பேரை
நீங்க பார்த்து விட முடியும். எங்கள் ஊர் தமிழ் சினிமாக்களில் வரும்
இத்தகைய இடங்களில் மட்டும் நாய் கூட கண்ணில் படாது. இங்க இன்னொரு
விஷயமும் இருக்கு, அந்த பொண்ணை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னீங்கன்னா ஊரே
ஒண்ணு கூடி அருவாளைத் தூக்கிட்டு வந்து உங்க காதலை எதிர்க்கும். மாறா
அவளைக் கற்பழிச்சுட்டேன் என்று சொல்லி விட்டீர்களானால், ஊரே ஒண்ணு கூடி
இருவரையும் சேர்த்து வைத்து விடும்.

கற்பழிப்பு என்ற சொல்லாடலின் மூலம் தமிழ் சினிமா தமிழ் பெண்களுக்கு ஒரு
மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ள்ளது. கற்பு கெட்டுப்
போச்சுன்னா அவ தற்கொலை செஞ்சுக்கணும். வீரம் வெளைஞ்ச மண்ணு படத்தில
விஜயகாந்த் "என் தங்கச்சி எவனாலோயோ கெடுக்கப்பட்டான்னு ஊர்
சொல்லக்கூடாதுடா" என்று சொல்லி வில்லனை அடித்து கெடுத்து, சாகடிக்கப்பட்ட
தனது தங்கையின் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லுவார். இந்த காட்சி
காட்டப்பட்ட போது, விஜயகாந்த், பார்வையாளர்கள், தியேட்டர் ஆப்பரேட்டர்,
தியேட்டருக்கு வெளியே, விளக்குக் கம்பத்தில் காலைத் தூக்கி சிறுந்ர்
கழித்துக் கொண்டிருந்த நாய் என எல்லாருமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்.

சரி இப்போ எல்லாம் இது போன்ற படங்கள் முற்றிலுமாய் குறைந்து விட்டனவே.
தமிழ் சினிமா ஒன்றும் அவ்வளவு மோசமான சூழலில் இல்லை. இது எல்லாம் உங்களை
மாதிரி, மசாலா படங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் பேசும் உளறல் என்று
எவரேனும் சொல்லலாம். காட்சியமைப்புகள்தான் மாறியிருக்கின்றனவே தவிர,
கட்டமைப்புகள் மாற வில்லை. இன்றும் ஹரி, பேரரசு பட நாயகர்களால், தமிழ்
பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என்று ஆரம்பித்து, நாயகியிடம்
அறிவுரை கூறும் வசனங்கள் இடம் பெறத்தான் செய்கின்றன. இதைச் சொல்ல ஆண்
என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் கதாநாயகனுக்கு. வேறெதுவும்
தேவையில்லை.

பெண்ணின் உடலை மையமாய் வைத்து விவாதங்களும், வன்முறையும், கலாச்சார
மாற்றங்களும் இங்கே தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்ணின்
உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு அவலம்
தொடர்ச்சியாய் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
உடலரசியலினடிப்படையில் இதைப் பார்க்கும் போது இதன் பின்னே நிலவும்
நுண்ணரசியலும், அவை நிறுவ முயல்வதும் நமக்கு புலப்படும். தன்னுடைய உடலை,
அங்கங்களை (exhibitionism) வெளிக்காட்டி ஒரு ஆணை தன் கட்டுப்பாட்டில்
கொண்டு வர முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், பெண் மறைமுகமாய், தன்னுடைய
உடல் கூறுகளை வெளிச் சொல்லி, "ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த, அவளது
உடலடிப்படையில் மேற்கொள்ளும் தீண்டல்களே போதும்" எனும் கட்டமைவை தமிழ்
சினிமா மறைமுகமாய் ஏற்படுத்தி இருக்கின்றது. அப்படி இல்லா விட்டால்,
நம்மால், நாயகியை நாயகன் உடலளவில் அசிங்கப்படுத்தும் காட்சிகளைப்
பார்த்து சுரணையில்லாமல் ரசித்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கப்புறம் நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கையை
சொல்லி விடுங்கள் பார்க்கலாம். இதன் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான
ஆதிக்க உணர்வுகளை, உடல் ரீதியான தமிழ் சினிமாவின் அவலத்தை எவரேனும்
புரிந்துக் கொள்ள மறுக்கிறோம் என்றால், நாமும் நமது சுய தேவைகளுக்காக
பெண்களை உபயோகப் படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று கருதும், ஓர்
அப்பட்டமான ஆதிக்கவாதிதான் என்றுதான் அர்த்தப் படுத்தத் தோன்றுகிறது
எனககு.

நமீதா,ஸ்ரேயா, மாளாவிகா, மும்தாஜ், ரம்யா, வேதிகா போன்ற இததகைய
கதாநாயகிகளைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வே வருகிறது. இன்னும்
ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இவர்கள் தமிழ் சினிமாவில் நாயகிகள்
என்று சொல்லிக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கலாம். திரைப்படம் சார்ந்த
விழாக்களில் முடியும் வரை குறைவான ஆடைகளை அணிந்துக் கொண்டுப் போய்,
கேமெராக்களை தன் பக்கம் திருப்புமாறு செய்யலாம். நடு நடுவே
அருவிக்கரையிலோ அல்லது வயல் வரப்பிலோ (எந்த இடமாய் இருந்தால் என்ன),
முழுதாய் வேட்டி சட்டையையோ, பேண்ட் சட்டையையோ அணிந்த நாயகனுடன்
பிகினியுடன் "எந்த மரத்துக் கட்டை நீ" என்பது போன்ற வரிகளுடன்
ஆரம்பிக்கும் பாடலுக்கு சிரித்த படியே நடனமாடலாம். உன்னை பார்த்து
பார்த்து சலித்து விட்டது என்று தமிழ் ரசிகர்கள் இன்னொரு கதாநாயகியிடம்
மையல் கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில், தெலுங்குப்படத்திற்கோ அல்லது
ஏதேனும் ஒரு தொழிலதிபரையோ பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம்.

இத்தனை வருடம் லைம் லைட்டிலேயே இருந்துக் கொண்டு திடீரென்று ஒரு வீடும்,
காரும் ஷாப்பிங்கும், சமையலறை வேலைகளும் மட்டுமே தனது உலகமாய்
மாறிப்போனதனலான உளவியல் மாற்றங்களை நாயகி சரிவர புரிந்துக் கொண்டால்,
அவருடைய மண வாழ்க்கையாவது நிம்மதியாயிருக்கும். இல்லையெனில் குடும்ப நல
கோர்ட்டுகளில் ஒரு வழக்கை அதிகப்படுத்தி இன்னும் சில நாள் மீடியாக்களின்
காமெராக்களில் வலம் வரலாம். பின்பு அக்கா வேடம், சின்னத்திரை நாயகி வேடம்
என்று தனது வாழ்க்கையை ஒரு முற்றுப் பெறா பயணமாகவே முடித்துக் கொள்ளலாம்.
ஆண்டுக்கு குறைந்தது மூன்று கதா நாயகிகளாவது தற்கொலை செய்து கொள்வதன்
பின்னாலான உளவியல் மற்றும் உடல் சார் பிரச்சினைகளை ஏனோ தமிழ் சினிமா
புறக்கணித்தே வந்துக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம், "எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்"
என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க
உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

பி.கு: சினிமா விமர்சகர்கள் குறித்தான காட்டமான பார்வைக்கு மறுமொழியாய்
ஆரம்பித்த இந்த கட்டுரை நாயகிகளின் அபலைத்தனத்தில் வந்து
முடிந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிரம்பி இருக்கும் அபத்தங்களின்
ஆரம்பம்தான் இது.இன்னும் இதைத்தாண்டி விமர்சகர்களின் பல்வேறு சார்பு
நிலைப்பாடு குறித்தும், பெண்கள் பிரச்சினைகளைத் தவிர்த்து, பொது
வெளியில் தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கும் வேறு சில அற்பத்தனங்கள்
குறித்தும், கலாச்சார மற்றும் பாசிச உணர்வுகள் குறித்தும் தொடர்ச்சியாய்
அடுத்த பகுதியில் பேசுவோம்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 4

கவிஞர் சிவரமணி - கவிதைகளும் அறிமுகமும்
- அய்யனார்


http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/590a964fcfa0b1a6/47dceedbeaf6c87f?lnk=gst&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF#47dceedbeaf6c87f

நட்சத்திரங்கள் இறந்துபோனவனின் கண்களைப் போல இருக்கின்றன என்ற கவிஞர்
சிவரமணியைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?ஆனந்தவிகடனில் சில
வருடங்களுக்கு முன்பு இவரது கவிதை ஒன்றினைப் படித்தேன்.சிவரமணி என்கிற பெயர்
மறந்துபோய் கவிதை மட்டும் மனதில் ஒட்டிக்கொண்டது. யுத்தகால இரவொன்றின்
நெருக்குதல் எமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிறது.... என்பதாய்
தொடங்கும்.அந்தக் கவிதையை அப்போதைய என் வாழ்வோடு தொடர்பு படுத்திக் கொண்டு
பார்த்துக்கொண்டதால் அது அப்படியே மனதில் தங்கிவிட்டது.சேரனின் உயிர் கொல்லும்
வார்த்தைகளை நேற்றுப் படித்துக்கொண்டிருந்த போது கவிஞர் சிவரமணி தற்கொலை செய்து
கொண்டதை தெரிந்து கொள்ள முடிந்தது.அத்தோடு தற்கொலைக்கு முன் தன் கவிதைகளை
எரித்து விட்டதாயும் நண்பர்களிடமிருந்த சில கவிதைகள் மட்டும்
எஞ்சியிருப்பதாயும் சேரன் எழுதியிருந்தார் பின் நண்பர் டிசே மூலம் சிவரமணி
கவிதைகள் சிலவற்றை இணையத்தில் பெற முடிந்தது..அவற்றுள் சில

முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர் .

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன் .

--சி. சிவரமணி.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 3

நான் பார்த்து ரசித்த சில படங்களைப் பற்றி....

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/fab3259527e7f0a6

பாலு மகேந்திராவின் - யாத்ரா....
****
மனதை விட்டு நீங்க மறுக்கும் திரைப்படங்கள் அவ்வப்பொழுது வந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களைத் தந்தவைகளுள் மலையாளத் திரையுலகும் அடங்கும். மொழிகளைத் தாண்டியும் கலைகள் படைக்கும் முனைப்புடைய கலைஞர்களை அது எப்பொழுதும் வரவேற்றிருக்கிறது. அமோல் பலேகர், கமலஹாசன், சலீல் சௌத்ரி, நௌசத், பாலுமகேந்திரா என பலரையும் அது கவர்ந்திழுத்திருக்கிறது. கிடைத்தது மிக அற்புதமான படைப்புகள் சில. பரிட்சார்த்தமான முயற்சிகளும் அங்கு அதிகம். மனித உறவுகளின் நுட்பத்தை அது அலசி ஆராயும் விதம் அம்மாநிலத்திற்கு வெளியே கொச்சைப்படுத்தப்பட்டாலும், மலையாளத் திரையுலகம் முன் வைத்த கதைக் களங்கள், இந்தியத் திரை உலகில் ஒரு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. ஆனால், அம்மாதிரியான திரைப்படங்களுக்கு, ஒரு மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவைத் தருகிறார்கள் என்றால், அது அம்மக்களின் சிறப்பு என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் யாத்ரா ஒரு முக்கியமான படைப்பு என்றே சொல்ல வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும், ஒரு புத்துணர்ச்சியும், மனிதநேயத்தைக் கொஞ்சமேனும் சிந்திக்கவும் செய்யும் ஒரு நல்ல படைப்பு.

ஒரு காதல் கதையை எப்படி ஒரு கவிதை போல் மென்மையாகவும், அதே சமயம் அந்தக் காதல் நிகழும் தளம் - காலம் எப்படி கொடூரமாக ஒரு நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை அழுத்தமாகவும் தெரிவிக்கின்றது. காலத்தைக் கடந்து ஒரு படைப்பு நிலைத்து நிற்க வேண்டுமானால், கதை நிகழ் காலத்தை அது வலுவாக படம்பிடித்துக் காட்ட வேண்டும்.

85ல் வந்த இந்த திரைப்படம், இன்றளவும் நம் நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால், அது மிகையல்ல. இன்றும் போலிஸ் ராஜ்ஜியத்தில் தான் வாழ்கிறோம். ஒவ்வொரு சமயத்தில் ஒரு உத்தியைக் கையிலெடுத்துக் கொள்கிறது – காவல் துறை – தன் இருப்பை நிலைநாட்ட, அன்று கம்யூனிஸ சித்தாந்தவாதிகளுடன் பிரச்சினை. இப்பொழுது தீவிரவாதம். நாளை என்னவோ…?

உன்னி என்னும் உன்னிகிருஷ்ணன். ஒரு அநாதை. ஒரு வன அதிகாரியாக பணி. புதிதாக வந்த இடத்தில் துளசியைச் சந்திக்கிறான். அவளுக்கு ஒரு தந்தை உண்டு. மனைவியை இழந்து அந்த துக்கத்தில் குடிக்கும் பழக்கம் உள்ள தந்தை. துளசி அந்த மலைச்சாரலில் நடை பயிலும் தென்றலைப் போன்றவள். 'ஓணக்கோல்' பிடித்து சிலையாய் நிற்கும் கிருஷ்ணன் தான் பேசுவதை நிச்சயமாய் கேட்பான் என்று நம்பிக் கொண்டிருப்பவள். கோயில் திருவிழாவில் இனிமையாகப் பாடி ஆடவும் செய்வாள். சுழலும் விழிகளில் எப்பொழுதும் பாவங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும்.

ரம்மியான மலைக் கிராமச் சூழ்நிலையில், இருவரும் சந்திக்கும் பொழுது, இயல்பாக காதல் மலர்கிறது. அதிலும் உணர்ச்சி மிக்க வசனங்களோ, பாட்டுப்பாடி காதலைக் 'கொண்டாடும்' காட்சிகளோ இல்லாமல், இயல்பான காட்சி நகர்வுகளுக்கிடையில் பேச்சுக்கிடையில் காதல் வெளிப்படுகிறது. இருவரின் அப்பாவித் தனமே இருவரையும் ஒருவர் பால் ஒருவரை ஈர்க்கிறது. சிறு சிறு குறும்பாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது.
தன் திருமணத்தை தன் வாழ்க்கையில் கிடைத்த ஒரே நண்பனுக்கு அறிவிக்கும் பொருட்டு, நகரம் நோக்கி பயணம் போகிறான். அத்துடன் நயவஞ்சமிக்க 'அரசு இயந்திரம்' செயல்படும் எல்லைக்குள்ளும்.

நண்பன் இறந்து போய்விட்டதை தெரிந்து கொண்டு, மீண்டும் தன் ஊருக்குத் திரும்பும் பொருட்டு, நடந்து கொண்டிருந்தவன் ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்குவதற்காக தாமதித்த ஒரு பொழுதில், காவல்துறையின் கண்களில் படுகிறான். கைது செய்யப்படுகிறான். ஒரே குற்றம் – காவல்துறை தேடும் ஒரு தீவிரவாதியை ஒத்திருக்கிறான் தோற்றத்தில். எத்தனை சொல்லியும் கண்டுகொள்ளாத காவல்துறை அவனை 'லாக்-அப்'பில் தள்ள, இங்கிருந்து வெளிப்படுகிறது – காவல்துறையின் 'சலவை செய்யப்பட்ட' மன நிலை. ஒரு கைதியாக இருந்தாலும் அவனுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட மறுக்கிறது. தாகித்தவன் தண்ணீர் கேட்ட பொழுது, ஒரு காக்கி அவனுக்கு மூத்திரம் பெய்து கொடுக்கிறது. அறியாமல் வாயில் விட்டுக் கொண்ட பின்னர், உணர்ந்து, ஆத்திரமடைந்து, தந்தவன் மூஞ்சியில் விட்டெறிய முனையும் பொழுது, அவன் விலகிக் கொள்ள அவனது அதிகாரியின் மூஞ்சியிலே விழுந்து விட, அவனுக்குப் பூசை நடத்த, கதவுகள் திறக்கப்படும் பொழுது, உன்னி தப்பி ஓட காக்கிகளுக்கும் உன்னிக்கும் ஏற்படும் போராட்டத்தில் ஒரு காக்கியைத் தூக்கி வீச, அவன் தலை சுவரில் மோதி மரணம்.

கொலையல்ல. திட்டமிடல் அல்ல. ஆனாலும் ஒரு உயிர் போய்விட்டது. ஆக, உன்னியின் பக்கம் எத்தனை தான் நியாயமிருந்தாலும், சிறை வாசம். கடிதம் மூலம் சிறையில் தான் இருப்பதைத் தெரியப்படுத்துகிறான். சிறை வாழ்க்கையின் அவலங்களின் மீது அடுத்ததாக கவனம் பதிக்கிறது கதை. கைதியாக வருபவனை அலட்சியமாக, அற்பமாக நோக்கும் சிறை பணியாளர்கள். அவர்களது நிர்வாணத்தைக் கூட ஏளனமாகப் பார்க்கும் வக்கிரம். மொட்டை அடித்தல்.

சிறையினுள் பல கைதிகளின் கதை சிறு சிறு காட்சிகளின் மீதாக வெளிப்படுத்தப்படுகிறது. சிறையில் பார்வையாளாராக வரும் பெண்கள் மீதான பாலியியல் துன்புறுத்தல்கள், பார்வையாளாராக அனுமதிக்க மறுக்கும் அவலம், கடிதங்கள் மூலம் நிகழும் உணர்ச்சி பரிவர்த்தனைகள், இரவின் நிசப்தத்தில் எழும் இசையற்ற பாடல்கள், கைதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குடும்ப பின்னணிகள் என்று பல இடங்களில் கண்களைப் பணிக்கச் செய்யும் காட்சிகள். நடுவே தப்பியோட முயற்சிக்கும் கைதிகள் பிடிபட்டு கொடூரமாக தண்டிக்கப்படுதல். அதையும் மீறி, வாழும் துடிப்புடன், தப்பிக்க நினைக்கும் உன்னி – துளசியைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்ற அதீத உணர்ச்சிப் பெருக்கு.. பிடிபட்டு 'லாடம்' கட்டப்படுகிறான். நடுவே துளசியின் தந்தை வந்து போகிறார். துளசியின் பரிதாப நிலையை எடுத்துச் சொல்கிறார். உன்னி துளசிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். யாரையாவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. துளசியிடமிருந்து வரும் கடிதத்தை வாசிக்க மறுக்கிறான். ஒரு முழுதான சிறைவாசத்தை அனுபவித்து வெளி வருகிறான்.

சிறையிலிருந்து விடுபடும் நாள் வருவதை தெரிந்து துளசிக்கு கடிதம் எழுதுகிறான். இன்னமும் தனக்காகக் காத்திருந்தால், எப்பொழுதும் சந்திக்கும் அந்த ஒற்றை மரத்தடியில், ஒரு தீபத்தை ஏற்றி வைக்கவும். அவளுக்காக இறங்கி வருவதாய். இல்லையென்றால் அவளது நல்வாழ்க்கைக்காக ஒரு பிரார்த்தனையுடன், பேருந்தை விட்டு இறங்கி தொந்தரவு தராமல், தன் பிரயாணத்தைத் தொடர்வதாய்.

இந்த 'யாத்ரா' தொடருமா? இல்லை இத்துடன் முடிவுக்கு வருமா?

தன் பயணத்தில் நடக்கிறான். எவரும் அவனுக்கு வாகனங்களில் இடம் மறுக்க, ஒரு பள்ளிச்சுற்றுலா பேருதில் இடம் கிடைக்கிறது. இதுதான் படத்தின் முதல் காட்சி. இறுதிக் காட்சியும் இதே. பயணத்தில் அவன் சொல்லிய கதையில், அனைவரும் கலந்து, இறுதியில் துளசி அங்கு தீபத்துடன் நிற்க வேண்டுமே என்ற பிரார்த்தனையுடன் அனைவரும் பேருந்தின் சன்னல் வழியாக துடிக்கும் இதயத்துடன் காத்திருக்க…

துளசி நிற்கிறாள் – பெருகும் அன்புடன். ஆம். அவள் நிற்கிறாள் – ஒரு தீபத்துடன் அல்ல. ஆயிரமாயிரம் தீபங்களுடன். பிரகாசமாக. உன்னி இறங்கிக் கொள்ள, பள்ளிச் சிறுவர்களின் பயணம் தொடர்கிறது யாத்ரா பாடலுடன்.

நடித்தவர்களில் மனதைத் தொட்டவர்களின் பட்டியல் நீளம். உன்னியாக நடித்த மம்மூட்டி, துளசியாக ஷோபனா, பாலுமகேந்திராவின் காமிரா, இளையராஜாவின் இசை. அதிலும் பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த மலைச்சரிவு கிராமத்தை ஒளிப்பதிவு செய்திருப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஏனென்றால், காமிரா என்பது ஒரு கண் என்ற அளவிற்கே மக்கள் அறிந்து வைத்திருந்த பொழுது, அதிலிருந்து எத்தனை வகையான பார்வைகளை மக்கள் முன் வைக்க முடியும் என்று அற்புதமாக காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியவர் அவர். எல்லோரும், அவரது ஒளிப்பதிவுகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்க, அவரது பார்வைகள் காமிராவையும் தாண்டி, கதைக் களத்தில் விரிந்த பொழுது, சில அற்புத திரைப் படங்கள் கிடைத்தன. (இரண்டு பொண்டாட்டிக் காரன் கதை அவரிடத்தில் ஒரு obsession போல் பின்னர் ஒட்டிக் கொண்டது. அது அவருடைய குற்ற உணர்ச்சியினால் கூட இருக்கலாம்…)

மலைக்கிராமத்தில் புகை மூட்டங்களின் நடுவே விரியும் ஒளி வெள்ளத்தையும், இலைகளின் பசுமையையும், பூக்கள் பூத்து குலுங்குவதையும், இலைகள் பழுத்து சிவப்பதையும் படம் பிடிக்கையிலே நாம் தவறவிடுவது காலம் நகர்ந்து கொண்டிருப்பதை. வெட்ட வெளியில் வெளிச்சம் போடும் கோலத்தைக் காட்டினால், வெளிகளை வெட்டிக் கட்டப்பட்ட உள்புறத்தில், கசிந்து வரும் வெளிச்சம் என்னவோ, பாலுவின் காமிராவிற்காக மட்டுமே தாங்கள் அங்கு வருவதாக சொல்வது போலிருக்கின்றது.

வெளிச்சம், இருட்டு, வண்ணம் இந்த மூன்றினால் மட்டுமே காமிராவினால் பேச முடியும் என்னும் பொழுது, அதை குறித்து ஒரு புரிதல், அறிதல் இருந்தால் மட்டுமே அவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியும் ஒரு கலைஞனால். ஒரு சிறந்த திரைக்கதையும், அதை காமிராவின் மொழியில் சொல்லும் திறன் பெற்ற ஒரு கலைஞன் இருக்கும் பொழுது, அது நடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு இதை விட ஒரு நல்ல தளம் வேண்டுமா என்ன? இத்தனைக்கும் மம்மூட்டி அப்பொழுது ஒரு பெரிய நடிகர் கூட கிடையாது. அப்பொழுது தான் ஓடுடைத்து வெளியான சிறு பறவை போல் நடிப்புலகில் காலடி எடுத்து வைத்த நேரம். பறப்பதற்குச் சொல்லித் தர ஒரு அற்புத கலைஞன் கிடைத்த பொழுது, அதை மிகையற்ற தன் நடிப்பினால், எளிதாகக் கையாண்டிருக்கிறார். அது போன்றே, துளசியாக வரும் ஷோபனா. நாட்டியத்தில் பரிச்சியமுள்ள அவருக்கு விழி அசைவுகளும், உடல்வாகும் வெகுவாக ஒத்துழைக்கிறது. இவர்களுடன் இளையராஜாவின் இசையும் கூட்டணி அமைத்துக் கொள்கிறது.

இந்தக் கூட்டணியில், யாத்ரா ஒரு நதியாக, கரையுடைக்கும் பெருவெள்ளமாக இன்றி, அமைதியாக அமிழ்ந்து நீச்சலடிக்கத் தூண்டும் மென்மையுடன் பயணிக்கிறது.

படம் முடிந்து நீண்ட நேரமாகியும் துளசியும், உன்னியும் மனம் விட்டு நீங்க மறுக்கிறார்கள். காதலின் ஆழத்தைப் பார் – எங்கள் போல், உங்களால் ஒருவருக்கு ஒருவராகக் காத்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே…

நண்பன்

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 2

அளம்

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/ffed8600743beba7/712f79bd81d252c7?lnk=gst&q=%E0%AE%85%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D#712f79bd81d252c7

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள் என்பவர்களின் இலக்கிய எல்லையாக இதுவரை நான் கருதியது அவள் விகடன், கண்மணி, பாக்கெட்நாவல் போன்றவைதான். குடும்ப உறவுகளை விட்டால் வேறெதுவும் எழுத தெரியாத உப்புசப்பில்லாத கதைகளின் உற்பத்தியாளர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப சிவசங்கரி அனுராதாரமணன் போன்ற எழுத்தாளர்களின் வாசிப்பில் உணர்ந்ததுதான்.ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கு ஒரு தனி அடையாளம், எழுத்து நடை இருப்பதை உணர்வது போல அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரே நடையிலிருப்பதை உணரலாம். தொழில் ரீதியாக நாவல்களை எழுதுகிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். எழுத்து என்பது ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும் என்ற நாஞ்சில் நாடனின் வார்த்தைகளை நம்புகிறேன்.

என்றாவது ஒருநாள் இக்குறைகளை தீர்ப்பது போல நம் பெண்கள் படைப்புகள் இருக்கலாம் என்று உள்ளுக்குள் எண்ணியிருந்தேன். அதற்கு தீனி போடுவது போல அமைந்த வாசிப்புதான் தமிழ்ச்செல்வியின் அளம். அளம் என்பது உப்பளத்தை குறிப்பது. முதலில் குழம்பிப்போனேன். என் வட்டாரத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத வார்த்தை இது.


"மாணிக்கம்", "அளம்", "கீதாரி", "கற்றாழை" என நாண்கு நாவல்களை தமிழுக்கு அளித்திருக்கும் சு.தமிழ்ச்செல்வி சமகால பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இவரது "மாணிக்கம்" நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றது. இவரது படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள் தேட வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை திரும்பாத நிலையில் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் சுந்தராம்பாள் எனும் எளிய தாயின் போர்க்குணத்தை காவியத்தன்மையுடன் விவரிக்கும் கதைதான் "அளம்" வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது,
சுந்தராம்பாள் என்ற தாய் வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் என்ற தனது மூன்று மகள்களை தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்க என்னென்ன சிரமப் படுகிறாள் என்பதுதான் மொத்தக்கதையும். பொதுவாகவே கதையின் உரையாடல்கள் அம்மண்ணின் பேச்சு வழக்கில் அமைவதுதான் பெரும்பாலாக கதைகளின் வெற்றி. அவ்வகையில் இந்நாவல் பூச்சுகளில்லாத அசல் கிராமத்து மண்ணின் வாசம்.

நாள் நட்சத்திரம் பார்த்து நமக்கு என்னதான் பெயர் வைத்திருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள் அதைப்போல இந்நாவலின் முக்கிய பாத்திரமான சுந்தராம்பாளின் மகள்களை பெரியங்கச்சி, நடுத்தங்கச்சி, சின்னங்கச்சி என்றே கதை முழுக்க இந்த பாத்திரங்கள் அழைக்கப்படுகின்றன. "ம்பாள்" என்றே எல்லா பெயர்களும் முடிவதால் வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதை தவிர்க்கவே இந்த உத்தி என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே அர்த்தம். கவனமான வாசிப்பிலும் முதலில் பெயர்க்குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

"மோரயப்பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி தள்ளிகிட்டு நிக்கி சனியங்" என்று பெற்றவனே மகளின் மீது எந்நேரமும் வெறுப்பை உமிழ்கிறான். இப்படி நாவல்முழுக்க அம்மண்ணின் பேச்சு வழக்கே நிறைந்திருப்பதால் வாசிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் அதுதான் இந்நாவலின் ஜீவன்.

ஒருவேளைக்கும் போகாத சுந்தராம்பாளின் கணவன் சுப்பையாவின் வாழ்க்கையில் கப்பல்கார ராமையாபிள்ளை என்பவர் சுந்தராம்பாளின் குடும்ப சிக்கலை எண்ணி சிங்கப்பூர் அழைத்து செல்கிறார். அங்கு சென்று சுப்பையன் காணாமல் போகிறான். கடைசிவரை அவன் ஊருக்கே திரும்பவில்லை. கப்பல்கார ராமையா ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் தன் கணவன் பற்றிய தகவல் அறிய செல்லும்போது நமக்கே எரிச்சலாக இருக்கும்.

இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம் ஆனால் கருவாச்சி காவியம் சினிமாத்தனமானது. ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. எல்லாமே சுவாரசியங்களுக்காக திணிக்கப்பட்ட சம்பவங்களின் கோர்வையாக கருவாச்சி காட்சியளிப்பாள். சுந்தராம்பாளின் வாழ்க்கைப் பாதையில் துன்பங்களும், வருத்தங்களும் ஏராளமாக இருந்தாலும் எதுவுமே திணிக்கப்பட்டது போல தோன்றவில்லை.

புயலும், புயலுக்கு பின் வரும் வறுமையும் ஒவ்வொருமுறை விதைக்கும்போதும் இயற்கைக்கு பறிகொடுக்கும் சோகம் கதையாக இருந்தாலும் மனசு வேதனைப்பட வைக்கிறது. நாவல் முழுக்க ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தாலும் ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையில் மணமுடித்துக்கொடுத்த மூத்த பெண் வடிவாம்பாளின் மணவாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்துவிட வாழாவெட்டியாக வீட்டிற்கு வருகிறாள். இரண்டாவது மகளும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு கணவனால் துரத்தப்பட்டு வீட்டுக்கு வருகிறாள். ஒரே வீட்டில் மூன்று திருமணமான வாழாவெட்டிகளால் கடைசிப்பெண்ணான அஞ்சம்பாளுக்கு வரன் அமைவதில் சிக்கல். அவளுக்கும் பூச்சிக்கும் மட்டுமே தெரிந்த நிறைவேறாத அந்த காதல் அழகு. காதல் என்ற வார்த்தையைக் கூட உபயோகப்படுத்தவில்லை.

இக்கதையை வாசிக்கும் நேரத்தில் உங்களது எண்ணங்களும் சற்று பின்னோக்கி அந்தக்கால கிராமமான கோயில்தாழ்விற்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது போன்று உணர்வீர்கள். அழுத்தமான கதையை விரும்புவோர் தாராளமாக ஒருமுறை வாசிக்கலாம்.
நூலின் பெயர்: அளம் ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி மருதா பதிப்பகம் விலை இந்திய ரூபாய் 100.
வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி அய்யனாருக்கு கொடுத்த ஆசிப்புக்கும் நன்றி.

உமா கதிர்

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 1

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/cbf4601201b33d4a/ead950446faad933?lnk=gst&q=%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+#ead950446faad933

நடுநிசியிலெனது தேசம்...!

பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!

குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !

துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !

பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !

தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...

எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!

'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !

அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை