பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 7

நாளை மற்றோரு நாளே - என் நினைவுகள்
- மோகன் தாஸ்


ஜி. நாகராஜன் பற்றி நான் முதலில் படித்தது. சு.ராவின் பிரமிள் பற்றிய நினைவோடையிலாகத்தான் இருக்கும். பின்னர் என் இலக்கிய வட்டம்(அல்லது உள்வட்டம்) பெரிதாக ஜி. நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' நாவல் பற்றி தெரியவந்தது. இந்த முறை பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த பொழுது சட்டென்று மனதைக் கவரும் விதமாக காலச்சுவடு ஸ்டாலில் இருந்த நாகராஜன் முழுத்தொகுப்பையும் வாங்கிவந்திருந்தேன். இது அவர் எழுதிய நாவல், குறுநாவல், சிறுகதைகள், கவிதைகள் முதற்கொண்டு ஜி. நாகராஜன் எழுதிய மொத்தத் தொகுப்பு. முதலில் பிரித்து வைத்து உட்கார்ந்தது, சுந்தர ராமசாமியின் - ஜி. நாகராஜன் பற்றிய நினைவோடை. அதற்கு காரணம் உண்டு, எல்லாம் பிரமிள் பற்றிய நினைவோடை படித்த காரணம் தான் மேலும் ஒரு காரணம் RP ராஜநாயஹம், சுரா ஜி. நாகராஜன் பற்றி எழுதியிருந்தைப் பற்றி சொன்னது. நினைவோடை படிக்க ஆரம்பித்த பொழுது சட்டென்று ஆரம்பமென்றில்லாமல் வானத்திலிருந்து குதித்த மாதிரி இருந்தது, பின்னர் தான் சு.ரா, ஜி. நாகராஜன் பற்றி சொல்லியிருந்த முதல் அரைமணிநேர கேசட் தொலைந்து போனதன் காரணமாக அப்படியிருந்தது என்று தெரியவந்தது. எத்தனைக்கெத்தனை நாசூக்காக சொல்லமுடியுமோ அத்தை நாசூக்காக சொல்லியிருந்தார் சு.ரா., ஜி. நாகராஜன் பற்றி. அப்படித்தான் நான் நினைக்கிறேன். அவ்வளவு தான் அதைப்பற்றி. பொதுவில் சொல்ல முடியாத எழுத்தில் கொண்டு வரமுடியாத கதைகளை பின் காலங்களில் இலக்கியவாதிகள் யாரையாவது சந்திக்கும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் ;).

நாவல் திருவாளத்தான் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ஒரு நாள் கதையை எப்படி நாவலாக எழுதிவிடமுடியும் கேள்வி எனக்கும் சட்டென்று எழுந்தது. ஆனால் வாழ்க்கையில் முன் பின் நகரும் ப்ளாஷ்பேக் உபயோகித்து நாவல் தன் லீலையைத் தொடர்கிறது. இந்த நாவலை நான் படிக்க ஆரம்பிக்கும் முன்பே தமிழின் மிக முக்கியமான நாவலில் ஒன்று என்ற விஷயம் எனக்குத் தெரிந்திருந்தது. எப்படி தமிழில் ஒரேயொரு நாவல் எழுதிய ஜி. நாகராஜனின் இந்த நாவல் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றானது என்கிற ஆச்சர்யம் இயல்பாகவே எழுந்தது. ஜி. நாகராஜன் எழுதியதே நாளை மற்றொரு நாள் என்கிற நாவலும் குறத்தி முடுக்கு என்கிற குறுநாவலும் தான். இதைத்தவிர்த்து சிறுகதைகளும் கொஞ்சம் கவிதைகளும் எழுதியிருந்தாலும். பெரிய அளவில் வந்தது என்றால் இந்த நாவலும் குறத்தி முடுக்கு மட்டும் தான். இந்த நாவலை தமிழில் வெளிவந்த நாவல்களில் உயரிய இடத்தில் வைக்க என் மனது இடம் தராவிட்டாலும் முக்கியமான நாவல்களில் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

காட்சிகளின் அருமையான விவரிப்பையும் உண்மையையே எழுதியிருப்பதைப் போன்ற ஒரு உணர்வையும் நீங்கள் இந்த நாவல் முழுவதுமே உணர முடியும். ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு சட்டென்றூ நகரும் சாமர்த்தியம் அழகாய் கைக்கு வந்திருக்கிறது. நானறிந்த வரையில் நான் படித்த வரையிலும் சரி காமத்தை இத்தனை காதலுடன் உண்மைக்கு ரொம்பவும் நெருக்கமாய்ப் படித்ததது நினைவில் இல்லை. ஆனால் இந்த நாவலின் மூலமாய் ஜி. நாகராஜன் அதுவரை தமிழுக்கு பெரிதும் அறிமுகமாகியில்லாத தமிழகத்தின் இருண்ட பகுதிகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நாவல் எழுதப்பட்ட காலம் அந்த சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது.

"அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகாரமாகவோ தோன்றுகிறது"

தன் மீது பானையை எறிந்துவிட்டு ஓடிப்போன தன் மகனைப்பற்றி நாவலின் கதாநாயகன் நினைக்கும் பொழுது வரும் வரிகள் இவை. ஜி. நாகராஜன் வாழ்க்கையை தொடர்ச்சியாய் அதன் பாணியிலேயே சென்று படித்திருக்கிறார் என்றே எண்ண வைக்கிறது.

கந்தன் ஒரு ரௌடி, மீனாவின் மேல் காதல் கொண்டு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவளை மணந்து கொண்டு பின்னர் அதுவும் சரிவராமல் அவளையே மூலதனமாகப் பயன்படுத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவன். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை இத்தனை தூரம் நெருக்கமாக உணர்ந்து எழுதியிருக்கக்கூடிய சாத்தியம் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இந்த நாவலைப் பற்றி எழுதுவதற்கென்று நிறைய இருந்தாலும் விமர்சனம் என்று எழுதுவதற்காக படிக்கும் பொழுதே சேர்த்து வைத்த குறிப்புத்தாள் கவனச்சிதறலாக காணாமல் போனதால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் சுவாரசியமான நாவலொன்றைப் படிக்கும் திட்டமிருந்தால் நிச்சயம் நாளை மற்றொரு நாளே நாவலை நிச்சயமாகப் படிக்கலாம்.



குடிசைகளுக்கும் சாக்கடை விளிம்புக்கும் இடையே மூன்று அடி இருக்கும். அது நெடுகிலும் சாணமிட்டு மெழுகப்பட்டிருந்தது. கந்தனின் வீட்டையொட்டி, இந்த குறுகிய பகுதியில் ஒரு மூன்றுகல் அடுப்பின் மீது சிறிய பானையில் நீர் காய்ந்து கொண்டிருந்தது. அருகே ஒரு பெரிய பானையில் அரையளவுக்குத் தண்ணீர் இருந்தது.


கந்தன் குடிசைக்குள் நுழைந்தான். மீனா தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.


"துணியை வாங்கிட்டு வந்தாயா?" என்றான் கந்தன்

"உம், பெட்டியுள்ளாற இருக்கு" என்று சொல்லிக் கொண்டே மீணா நிமிர்ந்து நின்றாள். "உம், கூட்டு" என்றான் கந்தன்.


அவள் மீண்டும் குனிந்து பெருக்க ஆரம்பிக்கவும், அவன் அவள் பின்சென்று அவளைப்போலவே வளைந்து அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்தான்.


'உம். விடுங்க.. இப்பெல்லாம் என்ன, இப்படி காலே நேரத்துலே ?" கந்தன் சற்று விலகி நின்று கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டான்.


"அதுவும் கதவு வேறே தெறந்து கிடக்கு " என்று தொடர்ந்தாள் மீனா.


"கதவே வேணா அடச்சிடறேன்.." என்று சொல்லிக்கொண்டே கந்தன் கதவை அடைத்துத் தாளிட்டான்.


"ஆனா வெளிச்சம் இல்லாட்டி எப்படியோ இருக்கு " என்று சொல்லிக் கொண்டு, ஒரு தீக்குச்சியைக் கிழித்து

இரண்டு பொடி மெழுகுவர்த்திகளைக் கண்டுபிடித்து, மற்றுமொரு தீக்குச்சியைக் கிழித்து அவற்றைப் பற்றவைத்தான்.

ஒரு ஒரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவை திருதிருவென்று முழித்தன. ஆடைகளையும் தலைமுடியும் சரி செய்து

கொண்டிருந்த மீனா, "பட்டப் பகல்லே இது என்ன அட்டகாசம்..?" என்றாள்.


'உண்மையை சொல்லட்டுமா ? இன்னைக்குக் காலேலே நம்ம வீட்டு முன்னாலே ரெண்டு நாயிக ஒண்ணையொண்ணு விரட்டிக்கிடு

போச்சி.. " என்று சொல்லிவிட்டு கந்தன் சிரித்தான்.


"ஆமா, ஒடனே நெனப்பு வந்திரிச்சாக்கும்..? அன்னைக்கு ரெண்டு அணில்க, இன்னைக்கு ரெண்டு நாய்க.. " என்று சொல்லிக்கொண்டே

மீனா பாய் ஒன்றை எடுத்து உதறி அறையின் நடுவில் போட்டுவிட்டு அதன்மீது ஒரு தலையணையும் தட்டி போட்டாள். ஒரு மெழுகுவர்த்தி

அணைந்துவிட்டது. அதைப் பற்றவைத்துகொண்டிருந்த கந்தன், "அன்னைக்கு அந்த அணில்க எப்படி ? நாம் எவ்வளவு பக்கல்லே

போய் வேடிக்கை பார்த்தோம். எப்படி இரண்டும் ரொங்கிகி கிடந்திச்சு.. ?" என்று அணில்களை வியந்தான். அவன் அவளருகே

சென்று உட்காரவும் அவள். " நாமும்தான் ரொங்க்கிக் கிடந்திருக்கோம்.." என்று சொல்லிச் சிரித்தாள். அவன் சிரிக்கவில்லை.

அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டான். இருவரும் படுத்தனர்.


"நாய்க செய்யறது அசிங்கமில்லையா.. " என்றாள் அவள்.

"அபூர்வம். ஆனா அதுகளெக் கண்டா எல்லாருக்கும் பொறாமையா இருக்கும் போல.." என்றான் கந்தன்.

"யானைங்களெப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா.." என்று கேட்டாள் மீனா.

"ஆமா.. ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் தேயிலத் தோட்டத்துலே வேலை பார்த்தான். சுத்து

வட்டாரத்திலே யானைங்க வருமாம். போகுமாம். ஒரு நாளைக்கு யானை அலர்ற சத்தம் கேட்டிச்சாம். ....

ஒரு பெண்யானை ரெண்டு தேக்கு மரத்துக்கு ஊடே சிக்கிட்டு அலறிகிடு இருந்த்திருக்கு.. ஒரு ஆண் யானை தும்பிச்சங்கைனாலே

பெண் யானையைப் போட்டு இளுத்துக்கிட்டு இருந்திரிக்கு. ஆளுங்க பக்கத்துலே போகவும் ஆண் யானை அவுங்களே வெரட்டி

அடிச்சிதாம்.. கொஞ்சம் தலையைத் தூக்கிக்க.. முடியை எடுத்து பின்னாடி போட்டுக்க.. "


"அப்புறம்.. ?" என்று கேட்டாள் மீனா.

"ஆளுங்க தூரத்திலே இருந்துகிட்டே வேடிக்கை பாத்திருக்காங்க.. நாள் பூரா ஆண் யானை இளுக்கவும் பெண் யானை

அலறவுமா இருந்திருக்கு.."

"அய்யோ.. மெள்ள.." என்றாள் மீனா.

"சரி. மெள்ளத்தான். கதையை முளுக்க கேக்கலேயே ? அடுத்த நா காலேலேதான் அலறல் நின்னதாம். லைன் ஆளுங்க

என்னேண்ட்டுப் போய்ப் பார்த்திருக்காங்க. .பெண் யானை செத்துகிடந்தது. ஆண் யானையைக் காணேம்."

"கண்றாவி.. " என்றாள் மீனா.

"அப்ப மறந்திடு.. " என்றான் கந்தன்.

"எதெ. "

"யானைகளெ மறந்திடு. அணிகல்களெ நெனெச்சிக்க.."

கந்தன் மீனாவைத் தன் பக்கம் திருப்பி, முகத்தை அவளது மார்பில் புதைத்துக்கொண்டான்.

"ஆமா.. ஒண்ணு கேக்கணூம்ண்ட்டு தோணுது.. " என்றான் கந்தன்.

"என்ன..?"

"நைட்லே அக்கா வூட்டுக்கு கண்டவனெல்லாம் வர்றானே. அப்பவும் ரொங்கிக் கெடந்திருக்கயா..?"

"அக்கா.. வூட்டுக்கு கண்டவங்க எல்லாம் ஒண்ணும் வரதுல்லே, ஏகதேசமா டீஷண்ட்டானவங்கதான் வருவாங்க. அதுவும்

காலேஜு ஸ்டூட்ண்ட்ஸ் வந்தா குஸியா இருக்கும்.."

"எப்படி குஸியா இருக்கும்..?"

அய்யோ கடிக்காதீங்க.. வலிக்குது.." என்று இலேசாய் அலறினாள் மீனா.

"சரி.. சரி. கடிக்கலே.. எப்படி குஷியா இருக்கும்.. " என்று திரும்பிக் கேட்டான் கந்தன்.

"பஸ்ட் டிரிப்பா இருந்தா தொடறதுக்கு முன்னாடி டயர் பஞ்சர் ஆயிடும்.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உம்." என்றான் கந்தன்.

"பழக்கப்பட்ட பசங்க அந்த சினிமாக்காரி மாதிரி இருக்கே. இந்த சினிமாக்காரி மாதிரி இருக்க எம்பாங்க.."

"உம்."

"நாம இரண்டுபேரும் எங்காச்சும் ஒடிலாம்பாங்க செலர், போனவாரம்னு நெனக்கிறேன். ஒரு தம்பி என்ன சொல்லிச்சு தெரியுமா?

"உம்.. என்ன சொல்லிச்சு.."

"என்னெப் பொம்பளேன்னுட்டு நெனச்சிக்கிட்டு நீ ஆம்பிளே மாதிரி நடத்துக்கோனிச்சு.." என்று சொல்லிவிட்டு மீனா சிரித்தாள்.

"உஹ¤ம்.."

"ஒரு வாட்டி ஒரு பெரிய மனுசன் வந்தான். பாத்தாலே பயமா இருந்துச்சு. முரடன் மாதிரி இருந்தான். என் காலே நல்லா சோப்புப்

போட்டுக் களுவிட்டு வரச் சொன்னான். அஞ்சு, பத்து நிமிஷம் என் காலே முத்தமிட்டு அளுதுக்கிட்டே ரூமை விட்டு வெளியே போனான்.

இருந்திட்டுப் போங்கன்னேன்.. 'பைத்தியக்காரத்தனம்'னு சொல்லிட்டு போயிட்டான்."

'அப்படியா..? சரி நல்லாப் படுத்துக்க.." என்றான் கந்தன், மீனாவின் முகத்தை உற்று நோக்கிக்கொண்டே.

"சமயத்திலே அந்தப் போக்கிரியெ கொன்னுப் போடுவோனானு தோனுது.. ஆனா. ஒன்னெத் தந்தானேனிட்டுத்தான் சும்மா இருக்கேன்."

என்றான்.

"அவர் சொந்தத்துல கார் வச்சிருக்காராமே..? "

"அவனுக்கென்ன? காரும் வாங்குவான்; ஏரோப்பிளேனும் வாங்குவான். எங்கிட்ட மட்டும் பத்தாயிரம் தாப்பாப் போட்டிருப்பானா?"


"பத்தாயிரம் இருக்குமா?"

"பின்னே? பதினெட்டு, பத்தொன்பது பெர்ற வீட்டே பத்துக்கு விக்க வச்சான். வீடு வாங்கின பார்ட்டிகிட்டேர்ந்து மூவாயிரமோ, நாலாயிரமோ வாங்கியிருப்பான். எங்கிட்டேர்ந்து வேற கமிஷண்ட்டு ஐந்நூறு வாங்கிட்டான்."


"நீங்க் அப்போ வெவரம் தெரியாதவரு.."

"அம்மாவும் போயிட்டாங்க.."

"சரியா இருக்கா..?"

அவள் தலையை அசைத்தாள்.

"தலையணை வச்சிட்டிருக்கியா ?"

"இல்லே. வேணுமா..?"

"வேண்டாம். சரியாத்தான் இருக்கு.."


சில நிமிடங்களுக்கு இருவரும் அவர்கள் பார்த்து ரசித்திருந்த அணில்கள் போலவே இருக்கின்றனர். இருவரிடத்தும் கட்டுப்பாடான தாள லயித்தோடு கூடிய இயக்கம். அசிங்க உணர்வே இல்லாத பரஷ்பர ஸ்பரிசங்கள். குடிசை பூராவுமே ஒரு வகையான விறைப்பு நிலவுகிறது. இருவர் உள்ளத்துள்ளும் சிறதளவு சிந்தனையும் இல்லை. சில நிமிடங்கள் செல்கின்றன. படிப்படியாக பொழுது விடிவது போல் இருவருள்ளும் தன்னுணர்வு தலையை உயர்த்துகிறது.


கொஞ்சமும் ஒசை ஏற்படுத்தாது கந்தன் எழுகிறான். மீனா கண்களை மூடி படுத்துக்கிடக்கிறாள். அவள் அருகே உட்கார்ந்துகொண்ட அவன் ஒரு சிகரெட்டைப் புகைக்கிறான். பிறகு மெதுவாக எழுந்திருந்து ஒரு அரை டிராயரை மட்டும் அணிந்துகொண்டு, ஒரு சோப்புக்கட்டியையும், ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு குளிக்க வெளியே வரத் தயாராகிறான். அவளிடமிருந்து ஒரு விசும்பல் கிளம்புகிறது. நின்று பார்க்கிறான். மீனாவின் மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் அவள் கன்னங்களை நனைக்கிறது. விம்மல் அழுகையாக மாறுகிறது.


"என்னங்க சந்திரனை தேடிக் கண்டுபிடிக்க வேண்டாங்களா ?" என்று உளறுவதைப்போல் அவள் கேட்கிறாள்.

"நாம் தேடாத இடமா..? " என்கிறான் அவன். "நாலு வருஷமாயிரிச்சே..! "

"உம்.."

"ஒங்களுக்கு சந்திரன் நெனெப்பே வரதில்லையா..?"


கந்தன் பதிலளிக்காது கதவை திறந்துகொண்டு, வெளியே போய்ப் பல் விளக்கிக் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன் குளித்து முடியும்வரை ஒப்பாரி போன்ற அழுகை அவன் காதுகளில் விழுந்துகொண்டிருக்கிறது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 6

கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
- மோகன் தாஸ்
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 5

செம்மீன்

செம்மீன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், என் நினைவுகளை மீட்டிப் பார்த்தால் விவேக்கின் நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் பாடல் வரிகளை நண்பர்களிடம் கேட்க அவர்கள் சொல்லித்தான் முதலில் அறிமுகம் ஆகியிருக்கவேண்டும். "கடலினக்கர போனோரே காணாத கர போனோரே" பாடல் மூலமாய் பின்னர் இன்னொரு படத்தில் மும்தாஜை கரெக்ட் செய்யும் பொழுது பாடும் "மானஸ மரூ". தொடக்கம் இதுதான். பின்னர் சந்திரமுகியில் வரும் பிரபுவின் அத்தை கேரக்டர் தான் செம்மீன் ஷீலா என்று சொல்ல; என்ன தாண்டா சொல்றீங்க செம்மீன் செம்மீன் என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் நெம்பர் 40 ரெட்டைத் தெரு படிக்கும் பொழுது 'பொலிடிகலி கரெக்ட்'(அட இதை விட முடியலை) எழுதிய மூன்று பக்கங்கள் கொஞ்சம் போல் என்னை செம்மீன் படத்தை நோக்கித்தான் திருப்பியிருக்கவேண்டும். நான் யூடியூபில் கடலினக்கர பாடலைக் கேட்டேன், உடன் வேலை செய்யும் மல்லு நண்பர்கள் படத்தைப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள், தகழியின் நாவலைப் பற்றி நான் கேட்கவில்லை ;). இடைப்பட்ட காலத்தில் செம்மீன் நாவலை சுரா மொழிபெயர்த்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஜேஜே, மற்றும் புளியமரம் வந்து கொஞ்சம் பயமுறுத்தியதால் சரின்னு விட்டுவைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் பத்ரி இதைப்பற்றி எழுதியதும் பெங்களூர் புத்தகக்கண்காட்சியில் காலச்சுவடு தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒரு பதிப்பகமும் வராமல் போனதும் நான் செம்மீனை வாங்கி வந்திருந்தேன்.(தோட்டியின் மகனும் தான்).

ப்ராஜக்ட் தன் முடிவை எட்டிய ஒரு வாரக்கடைசியில் கொடுமைக்கென்று ஞாயிறு காலை மின்சாரத்துக்கு தடா போட்டுவிட்ட பெங்களூருக்கு ஒரு ஓ போட்டுவிட்டு செம்மீனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். பொன்னியின் செல்வன் படித்த காலங்களில் மனதில் ஓடி மறைந்தது, பரீக்குட்டியும் கறுத்தம்மாவும் பழனியும் இறந்து போக சோகத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அல்சூர் போய் பானிபூரி சாப்பிட்டு வந்தேன். முன்பெல்லாம் இது போன்ற துக்கங்கள் வாரக்கணக்கில் மனதில் தங்கி நீண்ட ஒரு நடையையோ அல்லது இதை மட்டுமே யோசித்துக் கொண்டு தூங்காமல் வெறுமனே படுத்துக் கொண்டிருக்கும் நிலையையோ தான் உருவாக்கும். இப்பொழுதெல்லாம் ப்ராஜக்ட் பற்றிக் கவலைப்படவே நேரம் பத்தலை, பரீக்குட்டிக்காகவும் கறுத்தம்மாவிற்காகவும் வருத்தப்பட, வருத்தம் மீதமில்லை என்பதால் ஒரு நாளுடன் போனது. பத்ரி பதிவு பற்றி சொன்னேனே முதல் பத்தி மட்டும் படித்துவிட்டு அய் சுரா மொழிபெயர்ப்பு நல்லாயிருக்கும் போலிருக்கே பத்ரி படிச்சு முடிச்சேன்னு சொன்னாரே(அவர் ஜேஜே பற்றியோ புளியமரம் பற்றியோ எழுதி நான் படித்ததில்லை :() அதை ஒரு நல்ல சகுனமாக(ஹிஹி) எடுத்துக் கொண்டு விட்டிருந்தேன், படித்து முடித்ததும் 'நினைவுகளை' எழுத கூகுளை சர்ச்சிய பொழுது வந்து விழுந்த பக்கத்தில் திரும்பவும் பத்ரி தான் முதலில் இருந்தார். மீண்டும் ஒரு முறைப் போய்ப் பார்த்தேன், கதையை சுருக்கமா எழுதியிருக்கார். நாவல் படிக்க விரும்பாதவங்க கதை மட்டும் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் அங்கே படிக்கலாம். எனக்கு அத்தனை ஆக்கப்பூர்வமா(;)) எல்லாம் எழுத வராது.

தடுமாற வைக்காத மொழி, சட்டென்று கடற்கரை ஒன்றிற்கு அருகில் வாரக்கணக்கில் இருந்ததைப் போன்ற உணர்வை 100 பக்கங்களைத் தாண்டும் பொழுது உணரமுடிந்தது. தகழியின் எழுத்தை நல்ல விதமாக சுரா மொழிபெயர்த்திருக்கிறார். நாவல் சட்டென்று தொடங்குகிறது, நாம் உணறும் முன்னால் நாவலின் முடிச்சும் விழுந்து முடிக்கிறது. முதல் மூன்று நான்கு பக்கங்களில் முடிச்சைப் போட்டுவிட்டு கழட்டு கழட்டென்று கழட்டுகிறார் தகழி நாவல் முழுவதும் ஆனால் அந்த அளுப்பு உண்மையில் தட்டுவதில்லை என்பது தான் முக்கியம். செம்பன்குஞ்சு, சக்கி, கறுத்தம்மா, பரீக்குட்டி, பஞ்சமி, பழனி என்று உருவாக்கப்பட்டதும் சட்டென்று மனதில் பதிந்து விடும்படியான விவரணை தேவையான அளவிற்கு.

கறுத்தம்மாவைப் பற்றி - "எத்தனை எடுப்பாக இருக்கிறது அவளுடைய மார்பகம்! கணத்துக்குக் கணம் எத்தனை வளர்ச்சி! பார்வையை அங்கே குவிக்கையில் பரீக்குட்டிக்குத் தன் நரம்புகள் முறுக்கேறுவது போலிருக்கிறது. அந்த உணர்விலிருந்து தான் சிரிப்பு மூண்டதோ! அவள் ஓர் ஒற்றை வேட்டிதான் கட்டியிருந்தாள். அதுவும் மெல்லியதாகவே இருந்தது."

பரீக்குட்டி - "நிஜாரும் மஞ்சள் சொக்காயும் அணிந்து, கழுத்தில் பட்டு உருமாலும் சுற்றி, குஞ்சம் தொங்கும் தொப்பியும் அணிந்து கொண்டு, தன் வாப்பாவின் கையில் தொங்கியவாறு பரீக்குட்டி முதன்முதலில் கடற்கரைக்கு வந்தது கறுத்தம்மாவிற்கு நல்ல ஞாபகம் தான்."

செம்பன்குஞ்சு - "இப்பொழுது செம்பன்குஞ்சு மற்றவர்களின் தோணிகளில் வேலைக்குச் சென்று வருகிறான். அதற்கான கூலியும் பெற்று வருகிறான். முதலில் துடுப்புத் தள்ளும் வேலை பார்த்தான், இப்போது சுக்கான் பிடிப்பவனாக உயர்ந்துவிட்டான் செம்பன்குஞ்சுவுக்கு வாழ்க்கை லட்சியம் ஒன்று உண்டு எனவே கிடைக்கிற காசை வீணாக்கமாட்டான். அவன் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கிறது. எனினும் தோணியும் வலையும் வாங்குவதற்கு அது போதாது"

சக்கி - "சக்கி அந்தப் பருவத்தைக் கடந்து வந்தவள் தான். சக்கி, கறுத்தம்மாவின் பிராயத்தில் இருந்த காலத்திலும் அந்தக் கடற்கரையில் கிட்டங்கிகளும், கிட்டங்கிகளில் சின்ன முதலாளிகளும் இருந்திருக்கலாம். கரையேற்றிப் போட்டிருக்கும் தோணியின் மறைவில் நின்றவாறு சின்ன முதலாளிகள் சக்கியையும் கலகலவென்று வாய்விட்டு சிரிக்கும்படி செய்திருக்கலாம்."

சின்ன சின்ன விவரணைகள் அழுத்தமாக நம் மனதில் பதியச் செய்துவிடும் சாத்தியம் தகழியை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கிறது. சிக்கல் இல்லாத நடை கைவசப்பட்டிருக்கிறது, தகழி வழி சுராவிற்கு. மனிதர்களை அந்த நிலத்தை, அங்கே இருக்கும் பாகுபாடுகளை அவர்களுடைய ஒழுக்கப்பாடுகளை அவர்கள் தாங்கள் கட்டுப்படுவதாய் நினைக்கும் தத்துவப் பேருண்மைகளை சிக்கலில்லாமல் பதியச் செய்துவிடுகிறார் தகழி. ஆனால் எல்லாப்பொழுதுகளில் அதில் உண்மை/உண்மையாக எத்தனை இருக்கக்கூடும் என்பதையும் கதை சொல்லி மூலம் உணர்த்திவிடுகிறார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் பேனாவை எடுத்துக் கொண்டு ஏகதேசமாக தகழி - கதை சொல்லியாகப் - பேசுவதை நாவல் முழுவதும் பார்க்கமுடியும். ஒருமுறை படித்துவிட்டு நாவலைப் பற்றி எழுதலாம் என்று நினைத்து மீண்டும் புரட்டிப் பார்க்கும் பொழுது கண்ணில் படுகிறது. உண்மையில் முதல் முறை படிக்கும் பொழுது இந்த இடையீடு அப்படித் தெரியவில்லை. நாவல் தனக்கான ஒரு கதைசொல்லியைக் கொண்டிருக்காமல் நாவல் எழுதுபவர் அதாவது எழுத்தாளர் கதை சொல்லியாக வரும் இவ்வகை நாவல் கொஞ்சம் அலுப்பூட்டக்கூடும் மற்ற இடங்களில் ஆனால் ஒரு தேர்ந்த கதை சொல்பவரிடம் கதை கேட்ட அனுபவமாக இந்தப் படித்த அனுபவம் இருக்கிறது.

பரீக்குட்டிக்கும் கறுத்தம்மாவிற்கும் இடையில் காதல் எங்கே எப்படி உண்டாகி பரீக்குட்டி கறுத்தம்மாவையே நினைத்து ஏங்கி பாடல் பாடிக்கொண்டு நிற்கும் நிலைமை வந்ததென்பதற்கு பெரிய ப்ளாஷ்பேக் இல்லை. சின்ன வயதில் இருந்து தோழர்கள், வயதாகி இருவரும் பருவம் எய்தியதும் காதல் சாதாரணமாக வரக்கூடியது தான் மறுக்கவில்லை ஆனால் பரீக்குட்டி அளவிற்கான காதல் சாத்தியப்படுமா தெரியவில்லை. ஒருவேளை எதிர்ப்பென்பது இருக்கும் பொழுது இயல்பாய் தோன்றிவிடும் ஈர்ப்பைப் போல் இந்தக் காதல் என்று கொள்ளலாம் தான். கறுத்தம்மாவிற்கு பரீக்குட்டி மேல் இருப்பது காதலா, பாசமா இல்லை முதலாளி பக்தியா என்று பட்டிமண்டபத் தலைப்பொன்று வைக்கலாம், இதில் கறுத்தம்மா பரீக்குட்டி மீது கொஞ்சம் பொஸஸிவ்வாக இருப்பது மட்டும் இல்லையென்றால் நிச்சயமாக காதலுக்கான லிங்க் அறுப்பட்டு இருக்கிறதென்றே சொல்லலாம். நான் கொண்ட காதல் அனுபவங்கள் கூட இப்படித்தான் காரணம் இல்லாமல் சொல்ல முடியாததாய் விளக்க முடியாததாய் பொஸஸிவ்னெஸ் இல்லாததாய் வந்தா வரட்டும் போனா போகட்டும் ரேஞ்ச் வகையறா. இதனால் கூட என்னால் ஆசிரியர் சொல்லவரும் அளவிற்கான காதலைப் பார்க்கமுடியவில்லை. கறுத்தம்மா விஷயம் நாவலாசிரியர் கூட அத்துனை வற்புறுத்துவதில்லை, அவளிடம் பழனியைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கும் பொழுது அவள் தான் இங்கிருந்தால் பரீக்குட்டியுடன் சேர்ந்து கெட்டது செய்துவிடுவோம் என்று பயப்பட்டு முதலாளிக்கு பணம் கொடுப்பதானால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள். பருவ உணர்ச்சி தூண்டியபடி இருவரும் இருப்பதுவும் எங்கே கொஞ்சம் ஆசுபாசமாய் இருந்துவிட்டால் கெட்டது நடந்துவிடும் என்று கறுத்தம்மா முதற்கொண்டு சக்கி வரை நினைப்பதில் பெரிய பொய்யில்லை என்று தான் எனக்குப் படுகிறது. காதல் இல்லாமலா கறுத்தம்மா பரீக்குட்டியுடன் படுத்துவிடும் ஆபத்தைப் பற்றி யோசிக்கிறாள் என்கிற விஷயத்தில் இந்தப் பக்கமிருந்தும் லிங்க் ஓக்கே என்றாலும், அத்தனை வலுவாகயில்லை அதுவும் நாவலே இவர்களின் காதலை மய்யப்படுத்தி எனும் பொழுது.

இந்தக் காதலை விடுத்து நாவல் கட்டமைக்கும் ஒரு களமான கடற்கரைக் கிராமம், அவர்களது வலி சந்தோஷம் துக்கம் பசி எல்லாம் நாம் கூடயிருந்து பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்குகிறது. காலநிலையைப் பொறுத்து மாறும் அவர்களுடைய நிலைமை, மீன் கிடைக்காத காலங்களில் அவர்கள் படும் பாடு - அங்கே வந்து விழும் வட்டிக்குவிடும் கும்பல், அதில் விழுந்து தோணிகளை இழக்கும் அளவிற்கு போய்விடும் காலம். எல்லாம் நாவலில் கதாப்பாத்திரங்களின் மூலம் காட்சியாய் ஓடுகிறது. ச்ச எப்படா செம்பன்குஞ்சு ஒரு தோணி வாங்குவான் என்ற ஏக்கம் நமக்கும் இயல்பாய் வந்துவிடுகிறது. ஆஹா கஷ்டப்பட்ட சக்கி இனிமேல் தோணியில் இருந்து வரும் காசை வைத்து சந்தோஷமா இருப்பாள் என்றும், கறுத்தம்மா சக்கி இருவரும் சேர்ந்து பரீக்குட்டிக்கு அவர்கள் வாங்கியப் பணத்தை தந்துவிடணும் என்றும் அடடா பழனிக்கு இப்படி ஆய்டுச்சே என்றும் கவலைப்படும் வகையில் மனதை ஆர்ப்பரிக்கிறது கட்டமைக்கப்பட்ட கதாப்பாத்திரங்களின் சூட்சமம். பெண்களின் கற்பு நிலையைப் பற்றிய பெருங்கதைகள் உருவாகி, இருந்து, நிலை நிறுத்தப்பட்ட விஷயங்களையும் அதை அப்படியே நம்பி வாழ்ந்து வரும் மக்களையும் நாம் இந்த நாவலில் காண்கிறோம்.

கறுத்தம்மாவின் மீது சந்தேகப்பட்டு பழனியை தங்கள் தோணியில் இருந்து விலக்கிவிடும் நிலையில் தொடர்ச்சியாக இதைப்பற்றி கட்டப்பட்டு வந்த கதைகளும் அவர்களின் நம்பிக்கையின் வீரியமும் நம்முன்னால் விரிகிறது. ஆனால் கதைசொல்லியின் 'இந்த வகையறா நம்பிக்கைகளின்' மீதான எண்ணம் 50:50 ஆகவே நாவம் முழுவதும் கடைசி பக்கங்களைத் தவிர்த்து இருப்பதை காணலாம். கடைசியில் பரீக்குட்டி வந்து கறுத்தம்மாவை சந்தித்து அவர்களின் ஆலிங்கனம் முடிவதும் பழனி சுறா ஒன்றை வேட்டையாட முயன்று அதில் தோற்று இறந்து போவதும். எனக்கு நேரடியாய் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் சொல்லப்படாமல் விட்டிருப்பதாகவே பட்டது முதல் வாசிப்பின் பொழுது. ஆனால் கதையாசிரியரின் மனதில், நிலைநிறுத்தப்பட்டிருந்த கோட்பாடுகள் எப்படியோ ஒரு வழியாய் நமக்குள்ளும் அந்த கோட்பாடுகளைத் திணிக்க வருகின்றனவா என்ற சந்தேகம் வராமலில்லை. கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் கூட இறந்து போய்விடுகிறார்கள், மூவரின் பிணங்களும் கரை சேர்கின்றன. நாவல் முழுவதும் இந்தக் கோட்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கதையாசிரியர் மறுத்து வந்துள்ளதை நாவல் படிப்பவர்கள் உணரமுடியும்.

மோகமுள் யமுனா அளவிற்கு கறுத்தம்மாவை மனதில் நிலைநிறுத்தமுடியாமல் போனதற்கான காரணம் என்னவாகயிருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். யமுனாவைத் தேடியலைய நினைத்த எண்ணம் கறுத்தம்மாவைப் பற்றி நினைக்கும் பொழுது வந்தாலும் அத்தனை வீரியமில்லாமல் இருப்பதற்கான காரணம் என்னவாகயிருக்கமுடியும். நினைத்துப் பார்க்கிறேன், கறுத்தம்மாவினைப் பற்றிய விவரணைகள் குறைவாக உணர்ந்ததாகயிருக்கலாம் தி.ஜா உயர்த்திப் பிடித்ததைப் போலில்லாமல் கறுத்தம்மாவின் பிம்பங்கள் தகழியால் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் அந்தக் கடற்கரைக் கிராமத்தை காணும் ஆவல் மேலெழுகிறது, தகழி எந்தக் கடற்கரையை முன்வைத்து இந்தக் கதையை நகர்த்தினார் அவர் மனதில் உருவாகியிருந்த பரீக்குட்டி கறுத்தம்மா எப்படிப்பட்டவர்கள். இந்தக் கதைக்கு இப்படியொரு முடிவை உத்தேசிக்க காரணம் என்ன என்ற கேள்விகள் எழாமல் இல்லை. நாவல் எழுதப்பட்ட காலத்தை முன்னிறுத்தி ஒரு நல்ல நாவல் என்று சொல்லலாம் தான், சுந்தர ராமசாமியின் மொழிப்பெயர்ப்பு நல்ல பணியைச் செய்திருக்கிறது.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 4

பின்புத்தி உணர மறுத்த உண்மையைப் பற்றிய சில குறிப்புகள்
- மோகன் தாஸ்


பெண்களைப் பற்றிய என் நிலைப்பாடு எப்பொழுதும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. கோ-எஜுகேஷன் பள்ளிகளில் ஆரம்பித்த பெண்களின் மீது உண்டான காரணமேயில்லாத பொறாமையாகட்டும், பெண் என்ற காரணத்தினாலேயே நிறைய இடங்களில் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த சலுகைகளால் வந்த கோபமாகட்டும் அதிக காலம் தாக்குப்பிடிக்கவில்லை. தற்சமயங்களில் அந்நாட்களைப் பற்றிய எண்ணங்கள் புன்னகையை மட்டுமே வரவழைக்கின்றன. கல்லூரிப் பருவம் அவிழ்த்த பல ரகசியங்களில் உடைந்து போன பிறகான மிச்ச சொச்ச நிலைப்பாடுகளும் திருமணத்திற்குப் பிறகு சிதறிப்போனது. கடைசி வரையில் தொற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கான பொதுப்புத்தியைப் பற்றிய சிந்தனைகள் கூட அகிலாவினுடனான இந்த ஆறாண்டுகால மணவாழ்வில் கடற்கரைக்குச் சென்று வந்த பிறகு கண்ணுக்குத் தெரியாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் மணலைப் போல் எங்கோ ஒரு மூளைக்கு தூக்கி எறியப்பட்டிருந்தது. ஆனால் அது தவறோ என்று நான் மறுபரிசீலனை செய்ய நினைக்கும் அளவிற்கு வந்ததற்கும் அகிலாவே முழுக்காரணம்.

ஒரு மாதமாகவே அகிலாவுடைய நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தாலும் பிரச்சனையை நானாக வேட்டிக்குள் விட்டுக்கொள்ள விருப்பமில்லாமல் மௌனமாகவே இருந்தேன். பவானியாவது பரவாயில்லை கொஞ்சம் பெரிய பையன் குந்தவைக்கு இன்னும் இரண்டு வருஷம் கூட ஆகலை, அவளையும் அம்மாவிடம் ரூமில் விட்டுவிட்டு பெட்ரூமிற்கு தனியாக வரத்தொடங்கியிருந்தாள். அம்மாவுமே கூட என்னை தப்பா நினைத்திருக்கலாம்.

தாம்பத்தியத்திற்கான தேவை இல்லையென்று சொல்லாவிட்டாலும் அதற்காக அகிலாவை நச்சுப் பண்ணியது ரொம்பவும் குறைவாகத்தான் இருக்கும். அவளுடைய இயல்பான ஆர்வமும் எங்களுக்கிடையில் இந்த விஷயத்தில் பெரிய ஈகோ பிரச்சனை இல்லாததும் சுலபமான தாம்பத்ய உறவை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சில நாட்களாக அவளை யாரோ இல்லை அவளேயோ கட்டாயப்படுத்துவதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு. இப்படியே போய்க்கொண்டிருந்த ஒரு வாரத்தின் கடைசியில் இரவில் சட்டென்று விழித்தவனுக்கு பக்கத்தில் படுக்கையில் அகிலா தூங்காமல் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து பயந்தே போனேன்.

"ஏம்மா என்னாச்சு தூங்கலையா? அழுதுக்கிட்டிருக்யா என்ன?" என்று கேட்டதும்

"அதெல்லாம் ஒன்றுமில்லை..." என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது அவள் வார்த்தைகளால் திருப்தியடையாமல் அவளை நெருங்கி கன்னத்தை தொட்டுப் பார்க்க அவள் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.

"என்னாடி இது?"

அவளிடம் பதிலில்லை

"உடம்பு வலிக்குதா?" அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் பதிலெதுவும் சொல்லாமல் முறைத்துப் பார்த்தவள் சில நிமிடங்களில் குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள்.

அவளை இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன்

தோளில் முகம் புகைத்தவள்

"உங்களுக்கு இப்பல்லாம் என்னைக்கண்டா பிடிக்கிறதில்லை?" காதுக்குள் குசுகுசுத்தாள். அந்த அறையில் சுவருகளுக்கு கூட கேட்டுவிடாமல் சொல்ல நினைத்திருப்பளோ என்னவோ? அவள் சொன்னது அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். அவளுடைய அழுகை கட்டுப்படுத்த முடியாததாய் ஆனது.

திருமணம் ஆன புதிதில் சண்டை போட்டு இருவரும் பிரிந்திருந்த பொழுதும் அவள் பெரிதாய் அழுததில்லை. நாங்கள் இருவரும் தவறு செய்திருந்தாலும் அவள் அதற்கான தன் பங்கு தண்டனையாய் என்னைப் பிரிந்து இருக்கும் கடும் முடிவை எடுத்திருந்தாள் இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் பொங்குகின்ற காதலோடு தூரத்தில் இருந்து கவனித்தோம். சின்ன ஊடல்தான் அது. அவள் எனக்கானவள் என்றும் என்னைத் தவிர இன்னொருத்தரை அவள் முன் காலத்தில் விரும்பியிருந்தாள் என்ற ஒரு எண்ணம் கூட கோபமாகிய காரணம் அது. என்னைப் பற்றி மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வது எத்தனை தூரம் எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்ததோ அதே அளவு மனவருத்தம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் என்னைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாத பொழுதும் வந்தது. ஆனால் மற்றவர்கள் என்னைச் சரியாக உணர்ந்துகொள்ளக் கூடாது என்பதில் நான் காட்டிய ஆர்வத்தில் சிறிதளவு கூட என்னைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நம்பியவர்களிடம் நான் காட்டவில்லை. ஏனென்றால் அது போலித்தனமாகத்தான் இருக்கமுடியும் என்றே நினைத்தேன். அகிலாவைப் பற்றி தெரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட ப்ரயத்தனத்தைப் போல் அவளும் செய்வாள் என்றே நினைத்தேன்.

அவளுக்குப் பிடித்த சிறுசிறு விஷயங்களைக் கூட கவனித்து ஆனால் கவனிக்காதது போல் நான் செய்துவந்தது அவளுக்குத் தெரிந்தேயிருக்கவேண்டும். அந்தச் சமயங்களில் அவள் மனம் அடையும் பூரிப்பு சிறுநகையாக உதட்டோரத்தில் காட்டிக்கொடுத்துவிடும். உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த சிலர் தொடர்ச்சியாக என்னைத் தவறாகப் புரிந்துகொண்டபொழுது சரி இவ்வளவுதான் இவர்கள் என்று விட்டுவிட்டு நகர்ந்ததைப் போல் என்னால் அகிலாவைக் கடக்க முடியாததற்கும் அவளே தான் காரணம். அவள் நான் மாட்டிக்கொள்ளும் முகமூடிகளைத் தாண்டி என்னைத் தேடுபவளாகயிருந்தாள், பல சமயம் கையும் களவுமாக முகமூடிகள் கழற்றப்பட்டு அவள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஏன் இத்தனை நாடகம் எதற்காக இப்படி ஒளிந்து மறைந்து விளையாடுவது நாமாக நம்மை வெளிக்காட்டினால் என்ன? என்பது போல் நிறைய கேள்விகளுடன் அவள் எப்பொழுது தயாராகயிருப்பாள். எனக்குப் புரிந்திருந்தால் சொல்லித்தானிருப்பேன் ஆனால் உண்மையில் எனக்கே ஏன் அப்படி என்று புரியவில்லை; என்னை நானாகச் சொல்லிக்கொள்ளாமல் மற்றவர்களாய் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எதுவும் மனநோயுடன் சம்மந்தப்பட்டதா என்ற கேள்விமட்டும் தூரத்தில் தொக்கி நிற்கும். ஆனால் வாழ்க்கை இதனால் சுவாரசியமாயிருப்பதாகப் பட்டதெனக்கு. திருமணத்திற்குப் பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அகிலா இந்த விஷயத்தில் என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருந்தாள். அதனால் அவளுடைய சமீபத்திய நடவடிக்கைகள் கோபத்தை வரவழைக்காமல் என்னில் வருத்தத்தையே அதிகம் வரவழைத்தது.

எனக்கும் அவள் என்னிடம் அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை போட்டு உடைத்துவிட்டாள் தேவலை என்றிருந்தது ஆனால் வழமை போல் நல்லதொரு நாளுக்காக நான் காத்திருந்தேன். என் உறக்கம் பெரும்பாலும் நீண்டதாக இடையில் விழிப்பு இல்லாததாக முழுமையானதாகவே இருந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அமைந்த மனைவியின் காரணமாகவும் மாற்றம் எதுவும் இருந்தது கிடையாது; இரவு பாத்ரூம் ஒரு தடவை போய்விட்டு வந்து படுத்தால் காலை ஆறு ஆறரை மணிவரை அசத்திக்கொண்டு வரும் தூக்கத்தின் மீது அகிலாவிற்கே கூட பொறாமை உண்டு. 'போன ஜென்மத்தில் நீங்க புண்ணியம் செஞ்சிருக்கணும் இப்படி தூங்குறதுக்கு' என்று அடிக்கடி சொல்வாள். அன்று உலகதிசயமாய் நான் தூக்கத்தில் இருந்து இடையிலேயே எழ அகிலா அழுது கொண்டிருந்தது தெரிந்தது, நான் எழுந்தது அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது. வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஆனால் சிறிது நாட்களாகவே அவள் என்னிடம் நடத்திக் கொண்டிருந்த நாடகம் கொஞ்சம் அவளைத் தூண்டிப் பார்த்திருக்க வேண்டும். கேவலாகத் தொடர்ந்த அழுகை என் தோள்களில் முடிந்தது. நான் முழுவதுமாய் முடியக் காத்திருந்தேன்.

"என்ன பிரச்சனை உனக்கு?" அவளை அருகில் இழுத்து ஆறுதல்படுத்தியபடி கேட்டேன்.

"உங்களுக்கு என்னைப் பிடிக்கலை!" என் கேள்விக்கான பதில் அதுவா இல்லை ஒரு ஸ்டேட்மென்ட் விடுகிறாளா உண்மையில் புரியவில்லை.

"புரியல..." என்றேன்.

"கொஞ்ச நாளாவே உங்களுக்கு என்னைப் பிடிக்கல, நான் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா சொல்லிடுங்கோ. என்னால உங்களைப் பிரிஞ்சி இருக்கவே முடியாது..." அவளுடைய வார்த்தைகளில் ஒரு தேர்வேயில்லை வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கு உண்மையிலேயே பயங்கரக் குழப்பமாகயிருந்தது.

"என்னாம்மா சொல்ற நீ உண்மையிலயே புரியல. எதைச் சொல்றதுன்னாலும் தெளிவா சொல்லு" என்றேன்.

கொஞ்சம் நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள். மறுபக்கம் திரும்பி,

"உங்களுக்கு இன்னொரு பொண்ணொட தொடர்பிருக்கு!"

கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன், இதுவரையில் என்னைப் பற்றி அகிலா சொன்னதில் மிகப்பெரிய பழி இதுவாகத்தான் இருக்கமுடியும். என் முகமூடிகளைக் கழட்டிவிட்டு என்னையறிந்த ஒருத்தியாய் தான் என்னால் அவளை உணரமுடிந்திருந்தது. அவளை அப்படி என்னைத் தவறாக நினைக்க வைக்கும் படி நான் என்ன செய்திருந்தேன் என்ற யோசனை பெரும்பாலும் பூஜ்ஜியத்தில் முடிவடைந்தது. உண்மையில் என்னால் கண்டுணர முடியாத எல்லைக்கு வெளியே இந்த விஷயங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவளால் அப்படி ஒரு வார்த்தையை எப்படி சொல்ல முடிந்தது என்ன திமிர் இருக்கும் என்ற எண்ணம் பின்னால் வந்த அவள் அப்படி நினைக்கும் படி நான் நடந்து கொண்டிருந்தால் அவள் இதை என்னிடம் சொல்ல எத்தனை சிரமப்பட்டிருப்பாள் என்பதை உணர்ந்ததும் கொஞ்ச காலமாய் எங்களைச் சுற்றி பின்னப்பட்டிருந்த வலை விலகுவதாய் உணரமுடிந்தது. வலையைப் பற்றி புரிந்துகொள்ள முடிந்தாலும் எதனால் அப்படி ஒரு வலை எங்களைச் சூழ்ந்தது என்று புரியாததால் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தேன்.

நான் சூழ்நிலையை வியந்தபடி உட்கார்ந்திருக்க, மெதுவாய் எழுந்து போய் பீரோவைத் திறந்தவள். கைகளில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள், ஏற்கனவே நான் கண்ணாடி வேறு; கண்ணாடி போடாமல் பகல் நேரத்திலேயே எதுவும் தெரியாதென்பதால் எதுவாயிருந்தாலும் அருகில் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு அவள் கொண்டு வந்து காண்பித்த பொருள் மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அவளுடைய தலைமுடிதான் அது.

"இது உங்க சட்டையில் இருந்தது. சத்தியமாய் இது என் முடியில்லை! அப்ப யாரோடது."

வாய் திறக்க முடியாத மௌனத்தால் கட்டப்பட்டவன் போல் அயற்சியடைந்து போய் நான், நிச்சயம் அகிலாவிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி சந்தேகப்படும் அளவிற்கு அகிலா எப்பொழுது ஆனால் என்பது எனக்கு ஆச்சர்யத்தையும் அதே சமயம் மிகுந்த வருத்தத்தையும் வரவழைத்தது. அவளை சமாதானப்படுத்தும் வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை.

"என்ன அகிலா இது! நீயா இப்படி கேக்குற?"

இன்னமும் விசும்பிக் கொண்டுதானிருந்தாள்.

"சொன்னேன்ல இது என் முடி கிடையாது, எம்மேலாணை என் குழந்தைகள் மேல்..." சொல்லவந்தவள் முடிக்காமல் நிறுத்தினாள்.

"சரிடி இது உன்னோடதாவே இல்லாம இருக்கட்டும். அதுக்காக என்னைச் சந்தேகப்படுவதா?" கேள்விக்கு பதில் சொல்லாமல் திரும்பவும் பீரோவிற்கு நடந்தாள். அடுத்து என்ன மேட்டர் என்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தேன். என் ஃபேவரைட் சட்டையுடன் வந்தாள்.

"மோந்து பாருங்க!" சத்தியமாய் அப்படி ஒரு அகிலாவை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை. இந்தக் கணத்தை இப்படியே மறந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இப்படிச் சந்தேகப்படும் தோரணையுடனான அகிலாவின் முகம் என் மனதில் பதிந்துவிடக்கூடாதென்று நினைத்தவனாய் வேறு பக்கம் தலையை திருப்பினேன்.

"ஹ்ம்ம்ம்" என்று அழைத்தவள் கைகளில் திணித்தாள், அனிச்சையாய் நான் சட்டையை முகர்ந்து பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"இது நானோ நீங்களோ உபயோகப்படுத்துற செண்ட் கிடையாது. வேற செண்ட் அதுவும் பொண்ணுங்க உபயோகப்படுத்துறது!"

எனக்கு தலையைச் சுற்றுக் கொண்டு வந்தது, என்னிடம் எதுவும் விளையாடுகிறாளா என்று கூட நினைத்தேன் ஆனால் சில காலமாய் அவள் இருந்த மனநிலை அப்படி இருக்கவே முடியாது என்று சொல்லியதால் என்னதான் பிரச்சனையா இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப சொல்லுங்க என்ன விஷயம் போய்க்கிட்டிருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? இரண்டு குழந்தைகள் பிறந்ததும் கழட்டி விடணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?" அவள் கண்கள் இன்னொரு முறை மழை பொழியக்கூடிய மேகமாய் திரண்டு இருளத் தொடங்கியது.

ஒரு அறை விடலாம் என்று நினைத்தேன் நான், "அகிலா ஸ்டாப் இட். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? லூசாய்ட்டியா நீ?" என்றதும் என் கைகளில் இருந்த சைட்டையைப் பிடுங்கியவள் அதன் பாக்கெட்டில் இருந்து ஒரு பில் எடுத்து என்னிடம் நீட்டினாள். "அப்ப இதுக்கு என்ன சொல்றீங்க. இப்படி ஒரு பட்டுப்புடவை எனக்கோ உங்கம்மாவுக்கோ நீங்க வாங்கலை. அப்ப யாருக்கு வாங்கினது இது."

கைகளில் திணிக்கப்பட்ட பில் ஒரு மாதத்திற்கு முன்னர் நான் 10,000 ரூபாய்க் கொடுத்து பட்டுப்புடவை வாங்கியதாய்ச் சொன்னது ஆமாம் பில் என் பெயரில் தான் இருந்தது. ஆனால் நான் அகிலாவை விட்டுவிட்டு இந்த ஆறுவருடங்களில் பொருட்கள் வாங்கியதில்லை அதுவும் மிக நிச்சயமாய் பட்டுப்புடவை. கடையின் பெயரைப் பார்த்ததும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் என்ன நடந்திருக்க முடியும் என்கிற வழிக்கு என் நினைவுகள் என்னை அழைத்துச் சென்றன. சட்டென்று அனல்மழை பொழிய சூழ்ந்திருந்த மேகம் விலகியதைப் போன்ற உணர்வு. எனக்கு கொஞ்சம் சிரிப்பாய்க் கூட வந்தது என்னால் நடந்திருக்கக்கூடிய அனைத்தையும் ஒருவாறு ஊகிக்க முடிந்ததும்.

அவளை அருகில் அழைத்தேன், நெருங்கி வந்தவளை அருகில் உட்கார வைத்துவிட்டு, மெதுவாய்ச் சிரித்தபடி.

"நான் தோத்துட்டேன் அகிலா, நான் தோத்துட்டேன் அதுவும் உன்னால." சொல்லிக் கொண்டிருந்த என்னை அவள் அழுதபடியே ஆச்சர்யமாய்ப் பார்த்தாள்.

நான் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் என் அலுவல பெண் தோழியொருத்தி, தன் கணவர் மீதிருக்கும் சந்தேகத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது திமிராய் என் மனைவி என்னைச் சந்தேகப்படவே மாட்டாள். நாங்க இரண்டுபேரும் அப்படி இப்படி என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். அவள் அப்படியிருக்கவே முடியாது பெண்கள் என்றால் தங்கள் கணவனைப் பற்றிச் சந்தேகப்படாமல் இருக்கவேமுடியாது என்று சொன்னவள் என்னிடம் அதை நிரூபித்துக் காட்டுவதாய் பெட் கட்டினாள். அவள் தான் இப்படிச் செய்திருக்கவேண்டும் என்று கூறிவிட்டு அவளைப் பார்த்தேன். நம்புவதைப் போல் இல்லாததால் சட்டென்று அவளை தொலைபேசியில் அழைத்தேன், நடு இரவு தான் ஆனால் வேறு வழியில்லை அகிலா சந்தேகப்படுவதை விடவும் எனக்குப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்று நினைத்தேன்.

நடு இரவு தொலைபேசி அழைப்பை எடுத்தவளிடம் என்றுமில்லாத அளவிற்கு புன்னகை மறுமுனையில் கேட்டது.

"என் பெண்டாட்டி சந்தேகப்பட்டுட்டா நான் தோத்துட்டேன் நீயே பேசு!" என்று சொல்லி அகிலாவிடம் கொடுத்தேன். திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த அகிலா பேசமாட்டேன் என்று சொல்லி நழுவ நினைத்த பொழுதும் அவளிடம் சாமர்த்தியமாய் திணித்தேவிட்டேன்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள், இவள் இந்தப் பக்கம் சிரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு அதைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது. மாதக்கணக்கில் அவள் முகத்தில் சிரிப்பையே நான் பார்த்ததில்லை. இவள் இந்தப் பக்கம் பேசும் வார்த்தைகளை வைத்து அவள் அந்தப்பக்கம் சொல்லும் விஷயத்தை ஊகிக்க முயன்று கொண்டிருந்தேன்.

"ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னுமில்லை உண்மையில் சந்தேகமெல்லாம் படலை சும்மா கேட்டுக்கிட்டிருந்தேன் அவர் உளருறார்." என்று சொல்லிவிட்டு என்னை நோக்கி புன்னகைத்தவாறு.

"சரிங்க ஒன்றும் பிரச்சனையில்லை" என்று சொல்லி வைத்தாள். வேகமாய் என்னிடம் வந்தவள் என் நெஞ்சில் குத்தியபடி.

"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல, ச்ச கடைசியில் இப்படி ஆய்டுச்சே!" என்று ரொம்பவும் வருத்தப்பட்டாள். அந்த ஒரு மாதமாய் அவளிடம் இருந்த முகம் இல்லை இது, அவளால் நடிக்க முடியாது எனக்கு நன்றாய்த் தெரியும். உண்மையிலேயே தன் புருஷனை இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டதாய் வருத்தப்பட்டதாகவே தெரிந்தது.

"அந்தம்மா சொல்லுது நான் பார்த்த இந்த மூணு விஷயம் இருக்கில்லையா இது மாதிரி நிறைய ட்ரை பண்ணினாங்களாம். பாருங்க நான் கடைசியில் இந்த மூணு விஷயத்தில் விழுந்துட்டேன். அந்தம்மா சொன்னிச்சு நான் முன்ன பண்ணினதுக்கு விழுந்துடுவேன்னு நினைச்சாங்களாம், ஆனால் முடி விஷயம் எல்லாத்தையும் விழ வைச்சிடும்னு தெரியும்னு சொன்னாங்க. நானும் அந்த முடி விஷயத்தில் ஆரம்பிச்சி தான் மத்த இரண்டையும் கண்டுபிடிச்சேன். சாரிங்க. உங்களை அப்படி நினைச்சிருக்கக்கூடாது தப்புதான்." உண்மையில் வருத்தப்பட்டாள்.

நான், "ஏய் இங்கப்பாரு என்னா சும்மா வருத்தப்பட்டேன்னு சொல்லி சரிபண்ணிடலாம்னு பார்க்கறியா! அதெல்லாம் சரிப்படாது இதுக்கு சரியான உபகாரம் செய்தாகணும். நான் மூணாவது ஒரு ப்ராடக்ட் தயார்ப்பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..." என்றபடி ஆரம்பிக்க,

"ஆளைப்பாரு இந்தியாவுக்கு இரண்டே பெரும் பாரம் மூணாவதாம்ல. கனவு காணுறதை விட்டுட்டு மரியாதையாத் தூங்கப்பாருங்க நாளைக்கு ஆபீஸ் போகணும்ல" கண்டிப்புடன் சொல்லியபடி எழுந்து வந்து உட்கார்ந்திருந்த என் 'பெரிய' நெற்றியில் முத்தமொன்று வைத்தாள் பழைய 'ஹவில்தார்' மனைவி அகிலா.

PS: ரப் நே பனா தி ஜோடி படம் பார்த்துவிட்டு வந்து படம் பற்றிய நினைவுகளை எழுதியதும் சட்டென்று இதைப் போன்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதிய ஞாபகம் இருந்ததால் தேடிப்பார்த்தேன். அகிலா ப்ராஞ்செய்ஸ்க்காக எழுதி முடிக்கப்படாமலும் பதிவிடப்படாமலும் இருந்த இந்தக் கதையை பண்புடனுக்காக இப்பொழுது அனுப்பி வைக்கிறேன்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 3

ரப் நே பனா தி ஜோடி
- மோகன் தாஸ்

ரப் நே பனா தி ஜோடிக்கு அர்த்தம் மிகச்சரியாக கடவுள் உருவாக்கிய தம்பதிகளா என்று சொல்லமுடியாவிட்டாலும் சொல்லவரும் கருத்தென்னவோ அதுவாகத்தான் இருக்க முடியும். ஷாருக்கானிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்தேனா என்று சொல்லத் தெரியவில்லை. நான் இன்னமும் கூட 'ஓம் சாந்தி ஓம்' பார்க்கலை, 'கபி அல்விதா நா கெஹ்னா' பார்த்ததோட சரி. என் ப்ராஜக்ட் ஒருவாறு முடிந்திருக்க காலையில் சர்வரின் மதர் போர்ட், ஹார்ட் டிஸ்க் எல்லாம் ஒட்டுமொத்தமாய் படுத்துக் கொள்ள இணையம் இல்லாவிட்டால் உலகமே இல்லாததாகிவிடும் எங்கள் சூழ்நிலையில் சட்டென்று சினிமாவிற்கு செல்வதென்று முடிவெடுத்ததும் ஓடிக்கொண்டிருக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர் 3' அல்லது 'ரப் நே பனா தி ஜோடி' இரண்டில் ஒன்றென்று யோசித்து ரப் நே பனா தி ஜோடிக்கு சென்றிருந்தோம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை, இந்தப் படத்தைப் பற்றி படித்த இரண்டு வரிகள் என்றால் நாராயணன் எழுதிய இரண்டு டிவிட்டுகளாகத்தான் இருக்கும். கதை சொல்லும் எண்ணம் கிடையாதென்றாலும், அங்கங்கே முடிச்சுகள் அவிழ வாய்ப்புள்ளது என்பதால் படம் பார்க்க தீர்மானித்துள்ள மக்கள் மாப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம்.

பெரிய அளவில் முடிச்சுகள் எதுவும் இல்லைதான் படத்தில், சாதாரணமான கதை, உள்ளுணர்வுகளுக்காக மட்டும் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோஷயம் தான். ஹெவி வைட் சண்டைக்காட்சி இல்லையென்று சொல்லலாம் என்றால்; சுமோ வீரனுடன் ஷாருக்கான் மோதும் காட்சி வந்து மனதை அலைக்கழிக்கிறது அது நகைச்சுவைக்காக என்றாலும் கூட. படத்தினுடைய பெரிய லாஜிக்கல் ஓட்டை மீசை எடுத்த ஷாருக்கானைக் கூட தெரியாமல் விழிக்கும் அவர் மனைவி. ஆனால் இதையும் அவர்கள் இருவருக்குமான பழக்கம் வெறும் டிபன்பாக்ஸ் காலையில் செய்து தருவதிலும் சினிமா தியேட்டரில் சினிமா பார்ப்பதிலும் என்பதால் விட்டுவிடலாமா என்றால் அங்கேயும் என் மனது உதைக்கிறது. கூட வசிக்கும் ஒருவனை அவன் மீசையை எடுத்துவிட்டால் கொஞ்சம் ஃபேன்ஸியா டிரெஸ்ஸிங்க் செய்தால் தெரியாமலா போய்விடும் என்றால் அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட் வேறு வந்து டிஸ்டர்ப் செய்கிறது.

சிம்பிளான லைன், திருமண நாளன்று காதலித்த மாப்பிள்ளை இறந்துவிடுவதால் தன் ஆசிரியரின் மகளின் திருமணத்திற்குச் சென்ற ஷாருக்கானுக்கு அவர் மகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இதில் பார்த்ததும் காதல் கொஞ்சம் சகிக்கலை என்றாலும் சட்டென்று உள்மனம் 'மச்சி அந்த ஃபிகரைப் பார்த்ததும் உன் மனசு பதறுச்சே அதுதான் லவ்' என்று சொல்லித் தொலைப்பதால் பார்த்ததும் காதல் சாத்தியம் என்று நானும் உணர்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் ;). எனக்கு சினிமா பார்த்துவிட்டு வந்துவிடும் fate ஷாருக்கானுக்கு அந்த ஃபிகரை கல்யாணம் செய்து கொண்டு அமிர்தசரஸிற்கு அழைத்துவரும் fate. என்னது 'நான்' fateஐ நம்புகிறேனா என்ற கேள்விக்கு நான் கொண்டுவர நினைத்த மெல்லிய நகைச்சுவை உணர்விற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். 'நான்' என்பது எங்கேயும் பெரிய பிரச்சனை தான், அதை மறைத்துவிட்டு நடமாடுவது பல சமயங்களில் நாம் என்னத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை தன்னாலே எழுப்பி தூங்க விடாமல் செய்துவிடும். இந்தப் படத்திலும் அப்படி ஒரு 'நான்' பிரச்சனை தான்.

கல்யாணம் செய்து கொண்டு வந்த அனுஷ்கா சர்மா பழைய காதலன் நினைவில் உருகிக் கொண்டிருக்க, திடீர்க்கல்யாணம் என்றாலும் காதல் கல்யாணம் செய்துகொண்ட ஷாருக் - தன் சுய பச்சாதாபத்தில் நெளிந்து கொண்டிருக்க கதைக்கு வருகிறார் அன்பு அண்ணன் வினய் பத்தக். எங்கடா கடைசியில் 'அட்டு' படத்துக்கு வந்திட்டோம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது களேபரம் செய்தது போல் உள்நுழையும் வினய்யின் கதாப்பாத்திரம் அழவேண்டிய இடத்தில் அழுது சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து படத்தை நகர்த்தியிருக்கிறது. இவர் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் படத்தை பார்த்த சோட்டுக்கு வீட்டிற்குப் போனமா வாங்கிவந்திருக்கும் நாவலில் இன்னொன்றை முடித்தோமா என்று நீண்டிருப்பேன். கட்டிப் போட்ட கதாப்பாத்திரம் வினய் பத்தக், என்றாலும் ஷாருக்கின் கதாப்பாத்திரம் - அந்த மீசை சமாச்சாரத்தை மட்டும் கொஞ்சம் மறந்துவிட்டு - பார்த்தால் செய்திருக்கும் சாகசம் சாதாரணமானுது இல்லை தான். அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜுடன் விக்ரம் வசனம் பேசுவார், மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டரில் வந்துவந்து போகும் விஷயத்தில் பிரம்மாதப் படுத்தியிருப்பார். அப்புறம் நம்ம அனுஷ்கா சர்மா - சொல்லவும் வேண்டுமா அங்கங்கே க்ளவேஜ் காண்பிக்கிறார் அழகாய் சிரிக்கிறார் பப்ளியாய் இருக்கிறார்.(இதென்ன வரவர எல்லா சினிமா ஹீரோயின்களையும் சைட் அடிக்க தொடங்கியிருக்கிறேன் என்று தெரியவில்லை. சர்தாரினியா நச்சுன்னு இருக்கா!)

க்ளைமாக்ஸில் வரும் அந்தப் பகுதி போன்று ஷாருக்கானுக்கு பாதி படம் முழுக்க திறமை காட்டும் வேலை. நன்றாகச் செய்திருக்கிறார், இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். கொஞ்சம் முதுமை தட்டிய உணர்வு மீசை இல்லாத மாதவன் ச்ச ஷாருக்கானிடமும் கூட வருகிறது. நல்ல நடிப்புக்காரன் என்பது அழகாய்த் தெரிகிறது சோகத்திலிருந்து சந்தோஷத்திற்கும் உற்சாகத்திலிருந்து துக்கத்திற்குமாய் அவர் transformation நன்றாய் வந்திருக்கிறது. மீசை இல்லாத ஷாருக்கான் 18 வயது அனுஷ்காவுடன் டான்ஸ் ஆடும் பொழுது அத்தனை விகாரமாய் இல்லை என்று தான் சொல்வேன், இங்கே இதை எழுதும் பொழுது நம் தமிழ்நாட்டு ரசினிகாந்த் விசயகாந்த்கள் நினைவில் வந்து போகிறார்கள் தான்.

தன் மனைவியை பிரமிப்பூட்ட வினய்யுடன் சேர்ந்து ஷாருக் செய்யும் நாடகம் சட்டென்று நீண்டு ராஜ் என்கிற ரோலாக நீளும் பொழுது எழும் சந்தேகம் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் பெயரைச் சொல்வதால் விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது. கடவுள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா உலகில். சாதாரணனாக அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டவனாக ஷாருக்கான், அசாதாரணமானவனாக அனுஷ்கா 'ரொம்பவும் போர்' அடிப்பதால் போகும் நடனக் குழுவில் இணைந்து கொள்ளும் நண்பன் என்று நீள்கிறது கதை. இங்கே தான் முக்கியமான டிவிஸ்ட். கொஞ்சம் கொஞ்சமாய் தன் உள்ளிருக்கும் இன்னொரு பர்ஸனாலிட்டியான 'ராஜ்' ஆக ஷாருக்கான் அனுஷ்காவை கவர்ந்துவிடும் பொழுது வரும் பிரச்சனை தான் முன் சொன்ன அந்த 'நான்' பிரச்சனை. அனுஷ்கா காதலிப்பது அசாதாரணமான ஷாருக்கானைத் தான், உண்மையில் அவளை மிகவும் விரும்பும் - அந்த விருப்பத்திற்காகவே - சாதாரணனில் இருந்து அசாதாரணனாக மாறும் ஷாருக்கானை இல்லை என்பது அவனை கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடுகிறது. இங்கே இந்த 'நான்' பிரச்சனையை இயக்குநர் சரியாகக் கையாண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவனால் தன் இன்னொரு முகத்தை அவளுக்காய் மாற்றிக் கொண்ட முகத்தைக் காட்டி அவளை தன் வசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் தான் மாற்றியதாய் காட்டிக் கொண்டிருக்கும் ஒன்று உண்மையில் தான் இல்லை என்று ஹீரோ நம்புவதும் அதனால் ஏற்படும் அழுத்தங்களும் தான் என்னளவில் இந்த சாதாரண படத்தை கொஞ்சம் அசாதாரணப் படமாக ஆக்குகிறது. தமிழ் சினிமாவிற்கு(பாலிவுட் சினிமாதான் பார்த்தது நான் மறுக்கலை) தெரிந்த க்ளைமாக்ஸ் தான், நாலைந்து பாட்டுகள் இருக்கு. கஜோல், பிபாஷா, ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி ஆடும் ஆட்டம் வேறு உண்டு. ஷாருக்கான் கொஞ்சம் காண்ட்ரவர்ஸியான ரோல்களை செய்துவருகிறார், 'கபி அல்விதா நா கெஹ்னா' ஒரு உதாரணம் இது ஒன்று. அதற்குப் பாராட்டுக்கள். கடவுளைப் பற்றி படத்தில் வரும் வசனங்களை 'இறை மறுப்பாளன்' என்றாலும் கூட அப்படியில்லாத மக்களுக்கு அது எப்படி உணர்த்தப்படும் என்று உணர்ந்து ரசித்தேன். இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே... என்று புலம்பும் ஒரு சாதாரணனின் கதையைப் போல். என் காதலைக் காதலியைக் கடவுள் காண்பித்துக் கொடுப்பார் என்று நம்பும் இந்தப்படம், Mr. and Mrs. Iyer படங்களைத் தொட்டுச் செல்வதாக நான் உணர்கிறேன். இறை மறுப்பாளனாய் அனுஷ்கா, மீசை இல்லை ஷாருக்கானுடன் தில்லி சென்றிருந்தாள் சந்தோஷப்பட்டிருப்பேன், அனுஷ்கா கடைசியில் உண்மையான காதலை கடவுள் மூலமாய் கண்டடைவதால் மட்டுமில்லாமல்.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 1

விருட்சங்கள்
- சுகிர்த்தராணி


பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க்கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காமநெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்துமாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
இப்போது புகையின் வடிவம் கொண்டு
ஒப்பனைகள் ஏதுமற்ற தெருக்கலைஞனைப் போல
கச்சையின் முன்புற வார் அவிழ்க்கிறாய்
பாலூட்டியவைகளை ருசித்தவாறே
அவற்றின் பெயர்சொல்லவும் வெட்கிக்கிறாய்
என் மார்பின் இசைக்கவையை
போரின் கொலைக்கரமாய் நீட்டுகிறேன்
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகு காலமாயிற்று.

பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - அறிமுகம்

சுகிர்தராணி - அறிமுகம்




"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்", "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. சுகிர்தராணியின் கவிதைகள் பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் பெருங்குரலெழுப்புகின்றன. தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கும், கலகத்துக்குமான பாதையை உண்டாக்குபவை.

தமிழில் எம்ஃபில் பட்டம் பெற்றவர், வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். பண்புடன் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காய் அவரின் அனுமதியுடன் இரவு மிருகம் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இடுகிறோம்.

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 2

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser God
- மோகன் தாஸ்




வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான் என்றாலும் இன்னும் அதன் முடிச்சுகளில் இருந்து விலகிவிடவில்லை என்பதால் ரசிக்க பறக்க முடிந்தது. பொன்னியின் செல்வனின் மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்குமான உரையாடல், பயணிகள் கவனிக்கவும்-ல் ஜார்ஜினாவிற்கும் சத்தியநாராயணாவிற்குமான உரையாடல், என் பெயர் ராமசேஷனில் வரும் ராமசேஷன் - பிரேமா, ராமசேஷன் - மாலா உரையாடல்கள் என்று உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் இருந்து கூட அந்த உணர்வு சில சமயங்களில் வருவதுண்டு, இதை வேண்டுமானால் pleasure of text என்று சொல்லலாம்.

Children of a lesser god திரைப்படத்தின் கதை சுலபமானது, கவிதை போன்றது. மனதைப் பற்றியதாயும் உள்ளுணர்வுகளைப் பற்றியதாயும் சுயத்தைப் பற்றியதாயும் திரைக்கதை விரிகிறது. சுயத்தை இழக்க விரும்பாத ஒரு காது கேட்க இயலாத பெண்ணைப் பற்றியதும், அந்தப் பெண் இழக்கப்போவதாய் நினைப்பது சுயமே இல்லை; அவள் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயத்தின் விளைவாய் அவள் வாழ்க்கைக்கான இன்னொரு சாளரம் திறக்கப்போகிறது என்றும் தீவிரமாய் நம்பும் ஒரு ஆணைப் பற்றியதுமானது இக்கதை. மொழி படத்தில் நான் இல்லாததாய் உணர்ந்தது என்னவென்று இந்தப் படம் பார்த்ததும் புரிந்து கொண்டேன். ராதாமோகனின் 'மொழி' படத்திற்கான உந்துதல் இந்தப் படத்திலிருந்து கிடைத்திருக்கும் என்றே நினைக்க வைக்கிறது இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், இல்லாமலும் இருக்கலாம். ஏகப்பட்ட ஒற்றுமைகள் இரண்டு படத்திற்கும் இடையில், அது இங்கே தேவையில்லாதது நிறுத்திக் கொள்கிறேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டேன், don't tell me she(heroine) can actually hear and speak என்று, கடைசியில் அது உண்மையாகி அந்தப் பெண்ணால் உண்மையிலேயே கேட்க முடியாதென்று தெரிந்த பொழுது வருத்தமாகயிருந்தது. அற்புதமான டேலண்ட், இந்தப் படத்திற்காக Marlee Matlinக்கு சிறந்த நடிகைக்கான அக்காதமி அவார்ட் கிடைத்திருக்கிறது. William Hurtற்கு சிறந்த நடிகருக்கான அக்காதமி ஏன் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் உண்டு என்றாலும் சந்தோஷமாகயிருந்தது.

ஹீரோ காதுகேளாதோர் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பேசக் கற்றுத் தருவதற்காக வருகிறார். அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஹீரோயினை அவர் முதன் முதலில் சந்திக்கும் இடத்திலேயே அவளுடைய கோபத்தின் காரணமாய் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் ஒரு விருப்பம் வந்து விடுகிறது. ஆனால் பின்னர் ஹீரோயின் "she is one of the brightest students we ever had" என்ற அறிமுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அந்தப் பள்ளியில் சுத்தம் செய்யும் பெண்ணாய் வேலை செய்யும் விஷயம் தெரிந்ததும் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயலும் ஹீரோவுக்கு அவளுடைய பிரச்சனை புரியவருகிறது. அதன் பின்னர் அந்தப் பிரச்சனையை ஹீரோ எப்படித் தீர்த்து வைக்க முயல்கிறார், முடிந்ததா என்பது தான் கதை.

அந்தப் பிரச்சனை மிக முக்கியமானதாக இருப்பதுவும், ஏனோ தானோவென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அந்தப் பிரச்சனையை அணுகாமல் இருப்பதுவும் தான் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்திருப்பதற்கான காரணங்கள். ஹீரோயினின் பிரச்சனை எல்லோரும் அவளையே 'லிப் ரீடிங்' கற்றுக் கொள்ளச் சொல்வதும், பேச முயற்சி செய்யச் சொல்வதும் தான். ஏன் மற்றவர்கள் 'Sign language' கற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் கோபம். இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை ஹீரோவின் வேலையே காது கேளாத மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது தான். ஹீரோவுக்கு 'Sign language' தெரியுமென்றாலும் அத்தனை வேகம் கிடையாது, ஆனால் அதை விட பெரிய பிரச்சனை ஹீரோயினை தொடர்ந்து பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தான்.

இப்படி ஹீரோயினை பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதில் தொடங்கும் ஒன்று, பின்னர் காதலாக மாறி அவர்களை சேர்ந்து வாழும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ஹீரோ, ஹீரோயினை பேசச் சொல்வது அவளுக்கு அவள் சுயத்தை இழப்பதைப் போன்று தோன்றுவதால் இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஹீரோயினின் இளமைப் பருவத்தில் அவளுடன் பழக நினைத்த ஆண்கள் எல்லோரும் ஒரு உரையாடலை/தொடக்கத்தைக் கூட அவளிடம் செய்யாமல் நேரடியாய் உடலுறவையே நினைத்தது அவளை இன்னும் கோபத்தில் கொண்டு போய் மேலும் அவளைத் தனிமைப் படுத்தியிருப்பது ஹீரோவிற்கு புரியவருகிறது. அவளை 'அவள் எப்படி இருக்கிறாளோ' அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதாடுவதில் இருக்கும் உண்மை ஹீரோவிற்குப் புரிந்தாலும் பேச முடியாததும், 'உதடுகளைப் படிக்க' முடியாததும் அவளைத் தனிமைப் படுத்துகிறது என்று நினைப்பதால் ஹீரோ தொடர்ச்சியாக அவளை அவள் விரும்பாததை செய்யச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.

கடைசியில் ஹீரோவும் சரி ஹீரோயினும் சரி தங்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் இணைய படம் சுபம்.

ஹீரோயின் மார்லி மாட்லின் இயற்கையிலேயே காது கேட்க முடியாதவர் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு அருமையாக ஒன்றிப் போய்விடுகிறார், படத்தின் ஆரம்பப் பகுதி முழுவதும் கோபக்காரராக வந்துவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டே வந்துவிட்டு இடையில் ஒரு முறை சிரிக்கும் பொழுதுதான் தெரிகிறது எத்தனை அழகாய் இருக்கிறது அவருடைய புன்னகை என்று. எனக்கென்னமோ கையில் பூனைக் குட்டியுடன் ஹீரோவிற்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கும் பொழுது அவர் சிரிப்பது விகல்ப்பமில்லாமல் வந்திருப்பதாகப் படுகிறது. அழகான பெண், கோபப்படும் பொழுதும், சிரிக்கும் பொழுதும், ஒவ்வொரு முறையும் 'Sign' செய்யாமல் ஹீரோ பேச முயலும் பொழுதும் தன் தலையைத் திருப்பி அவர் உதட்டை படிக்காமல் இருக்கும் பொழுதும், உணர்ந்து செய்திருக்கிறார். காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது எனக்கு.

ஹீரோவாக வில்லியம் ஹர்ட், மாட்லின் போலில்லாமல் படத்திற்காக 'Sign language' கற்றுக் கொண்டிருப்பாராயிருக்கும். அவர் எப்படி இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ஆச்சர்யமே வருகிறது ஒவ்வொரு முறையும் அவருடைய கதாப்பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது. அவருக்கு எதிரில் நடிப்பவர்கள் செய்யும் 'Sign'ஐ தனக்குத் தானே சொல்லிக் கொண்டும் தன்னுடைய வசனங்களை 'Sign'உடன் பேசிக் கொண்டும் நடிப்பது பெரிய விஷயம். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இப்படிச் செய்யும் பொழுது அவர் கஷ்டப்படுகிறார் என்பது போன்றோ, அவர் நடிக்கிறார் என்பது போன்றோ தெரியாமல் இருப்பது. அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. மாட்லின் உடைய கோபத்தைப் பார்த்து சிரிப்பது, அவள் சுயத்தின் மீது காரணத்தைச் சொல்லி தனிமைப் படுத்திக் கொள்ளும் பொழுது வருத்தப் படுவது, துரத்தி துரத்தி அவளைப் பேசச் சொல்வது, பின்னர் இருவரும் பிரிந்து வாழும் சமயத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே இருப்பது என தன் பங்கிற்கு படம் காண்பித்திருக்கிறார் மனிதர்.

இதைத்தவிர்த்தும் மற்ற காது கேளாத மக்களை நம்மிடையே பள்ளி மாணவர்களின் வழியாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர் Randa Haines, எனக்கு இந்தப் படம் பார்த்ததில் இருந்து Sing language கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகயிருக்கிறது அதை ஆசையாய் முடித்துக் கொள்ளாமல் எதுவும் சீரியஸாய் செய்யவேண்டி இந்தப் பேச்சை இங்கே முடித்துக் கொள்கிறேன்.

வசனங்கள் அத்தனையும் அருமை என்று சொல்லலாம், எல்லா வசனங்களுமே ரொம்ப 'ஷார்ப்'. Broadwayயில் நாடகமாக வந்து கொண்டிருந்ததை படமாக எடுத்ததால் அவர்களுக்கு இந்த வரம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நான் கதை எழுதும் பொழுதெல்லாம் மெல்லிய நகைச்சுவை இருப்பது போலவே கதை எழுதி வந்திருக்கிறேன், எனக்கு இந்த மெல்லிய நகைச்சுவையின் மீது காதல் உண்டு. ஆனால் முழுநீள நகைச்சுவையின் மீதல்ல, நான் இதுவரை முழுநீள நகைச்சுவையாய் எதுவும் எழுதிய நினைவு இல்லை. எனக்கு இந்தப் படம் பிடித்திருந்ததற்கான இன்னொரு முக்கியக் காரணம் இதன் வசனங்கள்.

கடற்கரையில் ஹீரோ, ஹீரோயினியிடம் முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, "Hey you want to play stand up sit down again" விற்கு பதில் சொல்லாமல் ஆனால் அந்தக் கேள்வி எழுப்பிய உணர்வால் மனதால் சிரித்து அதன் எதிரொளிப்பு சிறியதாய் முகத்தில் தெரிய, ஹீரோ சொல்லும் "Ohh careful, you almost smiled"ல் கடுப்பாகி முறைக்க ஹீரோ மீண்டும் சொல்லும், "Ahh Thats the girl, Thats Sarah Norman we all know and love" வசனம் காட்சியை கேரக்ட்டரைசேஷனை சிறிய வசனங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்ன தந்திரம் பிடித்திருந்தது.

ஹோட்டலில் ஒன்றில் ஆர்டர் எடுக்க வரும் சர்வர், ஹீரோயின் ஹீரோவிடம் Sign languageல் பேசுவதைப் பார்த்து அதிசமயாகப் பார்க்க அதற்கு ஹீரோயின் சர்வர் தன்னை முட்டாளாகப் பார்க்கிறான் என்று சொல்ல, ஹீரோ "He doesnt think you stupid, he thinks you a deaf." என்று சொல்லும் பதிலில் திருப்தியடையாமல் ஹீரோயின் மீண்டும், காதுகேட்கும் மக்கள் தங்களை(காது கேளாதவர்களை) முட்டாளாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல, ஹீரோ சொல்லும், "Only stupid hearing people thinks that deaf people are stupid" என்ற பதிலில் ஹீரோயின் கண்களில் தெரியும் நன்றியுணர்ச்சி ஒரு கவிதை. எனக்குத் தெரிந்து அவளுக்கான காதல் இங்கே தொடங்குவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஹீரோயின் தான் டான்ஸ் ஆட விரும்புவதாகச் சொல்லும் காட்சியில், ஹீரோ கேட்கும், "Can you feel it?"ற்கான பதிலாய் ஹீரோயின் முகத்தை அசைத்து ஆமென்று சொல்லிவிட்டு சைகையில் "vibrations…" "…through my nose" என்று சொல்லி ஹீரோவை நக்கல் செய்வது.

ஹீரோவை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றுவிட்டு அவள் மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக ஆடிக் கொண்டிருக்க ஹீரோ அவள் நகர்தலில் மயங்கி நின்று கொண்டிருக்க, அவள் தனியாய் ஆடும் சூழ்நிலையை ஒப்பு/ஏற்றுக் கொள்ளும் அந்தப் பாடல் முடிந்து ஜோடியாய் ஆடும் பாடல் வந்ததும்; அதிர்வு இல்லாததால் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு எல்லோரும் ஜோடியாய் ஆடத் தொடங்கியதை அறிந்து கொண்டு ஹீரோவைப் பார்க்கும் பொழுது ஹீரோ முகத்தில் 'இப்ப என்ன செய்வ' என்பதைப் போன்ற உணர்ச்சி ஒரு ஹைக்கூ கவிதை.

தொடர்ச்சியாய் அறை ஒன்றில் ஹீரோயின் ஹீரோவிடம் தான் ஏன் பேசவிரும்பவில்லை என்பதற்கு தன்னுடன் படுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் பின்னால் அலைந்த பையன்கள் பற்றியும் அவர்கள் ஒரு கோக் வாங்கிக் கொடுத்து தன்னுடன் பேசவிரும்பாமல் தன்னுடன் படுப்பதையே குறியாக வைத்திருந்ததைச் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி ஹீரோவும் அப்படித்தான் நினைப்பதாகச் சொல்லி அவனைக் கோபப்படுத்தும் காட்சி ரொம்பவும் இறுக்கமானது அதன் வசனங்களும் அப்படியே.

ஹீரோயினை தன் வீட்டிற்கு அழைக்கும் காட்சியில் ஹீரோ கேட்கும் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, நீ என்றும் குழந்தைகள் என்றும் சொல்லிவிட்டு பின்னர் காது கேளாத குழந்தைகள் என்று சொல்ல ஹீரோ, நான் எனக்கு காதுகேளாத குழந்தை வேண்டும் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துவிட்டு ஆனால் அப்படி இருந்தால் அதில் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லும் வசனம்.

தனக்காய் ஹீரோ பேசுவது பிடிக்காமல் சண்டை போட ஆரம்பிக்கும் ஹீரோயின், தன்னை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்ற நினைப்பதும் தனக்காய் பேச ஆரம்பிப்பதும் பிரச்சனையாய் மாறுவதைச் சொல்லிவிட்டு.

"Until you let me being an I where you are, you can never come inside my silence and know me and I wont let myself know you. Until that time we cant be like joined."

என்ற வசனத்தோடு இந்த வசனக் கதையை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தை நான் இஞ்ச் பை இஞ்ச் ஆக ரசித்துப் பார்த்ததன் விளைவு என்னால் எதையுமே விடமுடியவில்லை. கடைசியில் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அதில் உறைந்திருந்த சுயத்தை ஹீரோ எப்படி உணர்ந்தான் என்பது தான் Children of a lesser god படத்தின் கதை. அற்புதமான படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்லலாம்.

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 7

விடியற்பொழுதின் தோழமை - குல்சார் கவிதை மொழிபெயர்ப்பு
- சித்தார்த்


http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/230a18ea8faaf0fa/acb1b79ca129c166?lnk=gst&q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+#acb1b79ca129c166

இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில் எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும்
செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது
போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில்
சிக்கியவை குல்சாரின் மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அம்மூன்று கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி...


குல்சார் கவிதைகள்


அரவமின்றி வருகிறாய், சொல்லாது செல்கிறாய்
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
தோட்டத்தில், சில பொழுதுகளில்....
புளியமரம்
காற்றினில் அசைகையில்,
கல் சுவற்களின் மேல்
தெறிக்கும் நிழற்ப்புள்ளிகள்
உறிஞ்சப்படுகின்றன,
காய்ந்த நிலத்தின் மேல்
தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளைப் போல.
தோட்டத்தில், ஞாயிறொளி நிதானமாக விம்முகிறது.


மூடிய அறைகளில்...
விளக்கொளி துடிக்கையில்,
பரந்த நிழலொன்று எனை உண்ணத்துவங்குகிறது, ஒவ்வொரு கவளமாய்.
தூரத்திருந்து
கண்கள் எனையே பார்த்தபடி உள்ளன.
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
நாளின் அனேக சமயங்களில் எண்ணத்தில் இருக்கிறாய்.


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


***


வருக

திடீரென
கோவமாய் அறையுள் நுழைந்த காற்று
புயலொன்றை கட்டவிழ்த்து விட்டது
திரைச்சீலைகள் படபடத்தன
மேஜை மேல் கண்ணாடிக்கோப்பைகள் பறத்தப்பட்டன
பக்கங்கள் விதிர்விதிர்க்க, ஒரு புத்தகம் அவசரமாய் தன் முகம் மூடியது
மைபுட்டி பாய்ந்து
வெற்றுத்தாள்களில் வண்ணத்தோரணங்களிட்டது
சுவற்றுச்சித்திரங்கள் ஆச்சரியத்தில்
உனை காணவென எம்பிப் பார்த்தன


மீண்டும் இப்படி
வா


என் அறையை
மூழ்கடி


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


****


மன்னித்துவிடு, சோனா


மன்னித்துவிடு, சோனா.
இம்மழையினில்
என் வரிகளின் நிலப்பரப்பினூடே
பயணிப்பது
உனக்கு அசௌகர்யமாய் இருக்கலாம்.
இங்கு பருவம் பாராது பெய்யும் மழை.
என் கவிதைகளின் குறுக்குச்சந்துகள் பெரும்பாலும் ஈரமாகவேயுள்ளன.
குழிகளில் அனேகம் சமயங்களில் நீர் சேர்ந்து கிடக்கிறது.
இங்கு தடுக்கி விழுந்தால்
உன் கால் சுளுக்கிக்கொள்ளலாம், ஜாக்கிரதை.


மன்னித்துவிடு. எனினும்....
உன் அசௌகர்யத்திற்கு காரணம்
என் வரிகளில் வெளிச்சம் சற்று மங்கலாக இருப்பது தான்.
நீ கடக்கையில்
புலப்படாது கிடக்கின்றன
வாயிற்படியின் கற்கள்
நான் அடிக்கடி இடித்து கால்நகம் பெயர்த்துக்கொள்வேன் இதில்
குறுக்குச்சாலையில் நிற்கும் தெருவிளக்கு
யுகங்களாய், எறியாமல் நிற்கிறது.
நீ அசௌகர்யப்பட்டுள்ளாய்.
மன்னித்துவிடு. இதயத்திலிருந்து கேட்கிறேன், மன்னித்துவிடு.


ஆங்கில மூலம் :
http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index....


தமிழில் : சித்தார்த். வெ

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன்தாஸ் - 1

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு

இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் 'அடல்ஸ் ஒன்லி' விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.

ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.

மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு "எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை." சீரங்கத்தம்மா போல், "அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா" இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.

"... தினசரியில் 'சர்ச்சில் கவலைக்கிடம்' என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் 'சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே' என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது..." புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.

முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.

"...எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி..."

பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,

"...இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், 'இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்' என்று யாராவது பேச ஆரம்பித்தால், 'சரிதான் உட்காருடா' என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்..."

எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், 'புலிநகக்கொன்றை' போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் 'நாவல்'களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் 'புளியமரத்தின் கதை'யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் 'இருள்வ மௌத்திகம்' ரமேஷ் - ப்ரேமின் 'சொல் என்றொரு சொல்' முதலானவற்றோடு ஒப்பிட்டே.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் 'கிரேஸி' மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக 'கிழக்கு' இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது 'கிழக்கு' உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா 'ரெட்டைத் தெரு' என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்

எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.