காகமும் ஊர்க்குருவியும் - மனுசங்கடா? நாங்க மனுசங்கடா?
- ஜமாலன்
மதுரை உத்தப்புரத்தில் தலித்துகளையும் உயர் சாதியையும் பிரிக்க உயர் சாதி கட்டிய சுவர் முதல் சமீபத்தில் நடந்த சென்னை அம்பேத்கர் சட்டக்க்லலூரி மேதால்கள் வரை தீ்டாமை என்கிற மனிதவிரோத செயல் சாதிய ஆதிக்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருவதையே காணமுடிகிறது. தீண்டாமை நிலவுடமை செறிந்துள்ள தஞ்சையில் மட்டுமல்ல மதுரை நெல்லை என்று தமிழகம் ஏன் இந்தியாவெங்கும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது. தலித்துகள் முகத்தில் விழிப்பதுக்கூட பாவம் என்று மனுவாதத்தையும் தாண்டிய கொடுமை இது. மீண்டும் மீண்டும் தலித் மக்களை மனிதர்களாக மதிக்காத உயர்சாதி திமிரும், அவர்களுக்கு கர்மப்பலன் கூறி சொர்க்கத்திற்கு இடம் போட்டு வைக்கும் மனுவாதத்தின் அடிப்படையும் அதனை கட்டிக்காக்கும் இந்துத்துவா வியாதிகளும், இந்த சாதிய புனித உடலை காப்பதில் தீவிரமாய் உள்ள பார்ப்பனிய கருத்தியலும் இந்திய சமூக அடிப்படையாக கட்டமைக்கப் பட்டுள்ளதை தெளிவுபடுத்துவதாக உள்ளன.
1950-ல் இந்திய அரசு தீண்டாமை என்பதை சட்டவிரோதமாக அறிவித்தது. 58 ஆண்டுகள் ஆகியும் நிலமை தனது மனச்சுவற்றின் ஒரு புறவடிவக் குறியீடாக சுவரெழுப்பி வெளிப்படுத்துவதும், தான் படிக்கும் கல்லூரியின் பெயரை உச்சரிப்பதற்க கூட தயாரற்ற சாதியத் திமிரை வெளிப்படுத்தும் கோர வடிவத்தை எடுத்துள்ளது. பார்ப்பனிய மன்னராட்சிக் காலங்களில்கூட இத்தகைய நடைமுறைகள் இருந்ததாக வரலாற்றில் படித்ததில்லை. இன்று தீண்டாமை என்பது மறைமுகமாக பல வடிவங்களை எடுத்துள்ளது. ஒரு காலத்தில் "தீண்டத்தகாதவர்கள்" எச்சில் துப்பி நிலத்தை "தீட்டாக" ஆக்கிவிடக்கூடாது என கழுத்தில் கலயத்தை கட்டியும், பெண்கள் மேற்சட்டை அணிவதை தடைசெய்தும் பல வன்கொடுமைகளை நேரடியாக செய்துவந்த உயர்சாதியினர் இன்று 80-ற்கும் மேலான பல நடைமுறைகளை கையாளத் துவங்கியுள்ளனர். அவற்றின் உச்சகட்ட வடிவமே 500-மீட்டர் நீளமுள்ள இந்த தீண்டாமைப் பெருஞ்சுவர். சாதியத்தின் ஆணிவேராக விளங்கும் இந்த தீண்டாமை எனகிற வன்கொடுமையின் ஒரு அகங்கார வெளிப்பாடு இது.
ஆலன் டாண்டிஸ் என்கிற மானுடவியல் ஆய்வாளர் இத்தீண்டாமைக் குறித்து இந்திய நாட்டப் புறக்கதைகளின் அடிப்படையாகக் கொண்டு பிராய்டிய அடிப்படையில் ஆய்வு ஒன்றை செய்துள்ளார் தனது "Two Tales of Crow and Sparrow:A Freudian Folkloristic Essay on Caste and untouchability" என்கிற நூலில். அதில் "சாதியும், தீண்டாமையின் மூலம் மனித உடலினுள் உள்ளது" என்கிறார். தலையில் (வாயில்) பிறந்த பார்ப்பனர்கள் உயர்சாதி என்பது வாய் என்கிற உயிர்ப்புடன் சேர்ந்த புனிதக் குறியீடாகவும், காலில் பிறந்தவர்கள் தூய்மையற்ற நிலத்துடன் இணைவதால் சாவு மற்றும் குதம் மற்றும் மலத்துடன் இணைந்த தூய்மையற்றதாகவும் குறியிடப்பட்டுள்ள ஒரு மனப்படிவு ஆகும் என்கிறார். அவர் காகம் மற்றும் ஊர்க்குருவி பற்றிய காஷ்மிர் முதல் கன்யாக்குமரி வரை நிலவி வரும் இரண்டு நாட்டார் வாய்மொழிக் கதைகளை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மானுடவியல் மற்றும் நாட்டுப்புறக்கதை ஆய்வியல் அடிப்படையில் செய்து வாசித்துக் காட்டியுள்ளார். இங்கு இதனை சுட்ட நேர்ந்தது வாய்மொழி மற்றும் குதவழி பண்புகள் (anal and oral traits) என்பது பிராய்டியம் முன்வைக்கும் மிகமுக்கிய குழந்தமை உளவியல் கருத்தாக்கங்கள் ஆகும். கால்வழியாக பிறந்தவர்களை தீண்டத்தகாதவர்களாகவும் முகம்வழியாகப் பிறந்தவர்களை உயர்ந்தவர்களாகவும் குறியிடும் மதவாதப் பிரதிகளை நாட்டார் கதையடிப்படையில் மீள்வாசிப்பது ஒரு முக்கிய கருதுகோளாகும். தீண்டாமை என்பது மலம் என்கிற "அசிங்கத்துடன்" அதாவது தூய்மையற்றதானதாகவும் அதனால் அது புணிதமற்றதாகவும் ஆழ்மனதில் கட்டமைக்கப்பட்டவையே இந்த நாட்டார்கதைகள்.
தலைப்பில் உள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்பது கவிஞர் இன்குலாப் அவர்களால் கீழ்வென்மணியில் 47 தலித்துகளை உயிருடன் கொழுத்திய நிலவுடமை பயங்கரத்தினை கண்டு கொதித்து எழுதப்பட்ட பாடலின் தலைப்பு. அப்பாடல் 80-களில் தமிழக நக்சல்பாரி மற்றும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் மந்திரப்பாடலாக இருந்தது. அப்பாடலை பாடி பல இரவுகள் எங்கள் மாணவர் சங்க கலைக்குழு பல கிராமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது. அப்பொழுது நேரடி அனுபவங்களாக கிடைத்த தீண்டாமைக் கொடுமைகள் எண்ணற்றவை.
ஒரத்தநாடு பகுதிகளில் 85-ல் எனது மாணவப் பருவத்தில் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் எங்களது மாணவர் சங்கம் சார்பாக 10 முதல் 15 நாட்களுக்கு village campaign என்கிற கிராம பிரச்சாரத்திற்கு போவோம். அந்த வருடம் ஒரத்தநாட்டு தோழர்களின் ஏற்பாடால்.. நாங்கள் பாப்பாநாடு, கண்ணந்தங்குடி துவங்கி மேலையூர் கீழையூர் ஆம்லாப்பட்டு (எனது நினைவு சரியாக இருந்தால்.. களப்பால் குப்புவின் சமாதி உள்ள அக்கிராமத்தில் அவரது சமாதி முன்பு வீரவணக்கப் பாடல்கள் பாடியுள்ளோம்.) என சுற்றி பிரச்சாரம் செய்திருக்கிறோம். பெரும்பாலும் தங்குவது தலித் தோழர்கள் வீட்டில் அல்லது பொது இடமான கோவில் சமூகக் கூடங்களில். சாப்பாடு கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நபராக அழைத்துச் சென்ற உங்கள் வீட்டில் உள்ளதை சாப்பிடத் தாருங்கள் என பார்க்க வந்தவர்களிடம் அறிவித்து விடுவோம். அவர்களும் நாங்கள் 10 முதல் 15 பேர்கள் என்பதால் ஒவ்வொருவராக அழைத்துச் சென்று விடுவார்கள். இரவு விளக்கு கம்பங்களில் அல்லது அரிக்கேன் விளக்கின் ஒளியில் அரசியல் வகுப்புகள், பட்டி மன்றம் நடத்துவோம்.
ஒருமுறை ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யப்போகும்போது (எங்கள் தோழர்களில் பெரும்பாலும் தலித்துகள் என்றாலும் தலித்தல்லாதோரும் இருந்தனார்.)அங்கிருந்த இடைநிலைச்சாதியினர் ஊருக்குள் எங்களை விடாமல் வாயிலிலேயே வழிமறித்து விட்டனர். எங்களை அழைத்த தோழர் அவர் அந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணம் தலித்தகளிடம் தங்கி அவர்களுக்கு ஆதரவாக கூலிப்பிரச்சனையில் நாங்கள் பிரச்சாரம் செய்ததே. அன்று அங்கு பல பகுதிகளில் இரட்டைக் குவளைமுறை இருந்ததை தோழர்கள் அழைத்துப் போய் காட்டியுள்ளார்கள். ஒவ்வொருநாள் மாலையிலும் ஒரு கிராமம் விட்டு மற்றறொரு கிராமத்திற்கு பயணம். நடந்துதான். பாப்பாநாட்டிலிருந்து கண்ணந்தங்குடிக்கும். கண்ணந்தங்கடியிலிருந்து மேலையூர் இப்படி. பல கிராம பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால், சாதியம் என்பது கீழைத் தஞ்சை பகுதியில் அதிலும் கள்ளர்கள் மற்றம் தலித் முரண்கள் நிறைந்தே காணப்படுவதை அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக எங்களை சாப்பிட அழைத்தச் செல்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான். சாதி தெரியாத எங்களை அழைத்துச் செல்ல அந்த இடைநிலை சாதியினருக்கு மனம் ஒப்பவில்லை போலும்.
தீண்டாமை ஒரு பாவச்செயல் என்றார் காந்தி. அதனை புனிதமான செயலாக பாவிக்கின்றன இன்றைய சாதிகள். தெல்லஸ்-கொத்தாரி கூறும் "becoming minor' (சிறுபான்மையாக இருத்தல்) என்பதைப்போல "becoming untouchable" (தீண்டத்தகாதவராக இருத்தல்) என்பதை விடுதலைக்கான வாழ்நிலையாக மாற்றி, உயர் சாதியினரை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி அவர்களின் இருத்தலையும் மாற்ற வேண்டும் போலிருக்கிறது. லெனின் கூறியதுபோல " அரசியல் என்பது இரத்தம் சிந்தும் யுத்தம்"-தான் போலிருக்கிறது. எவன் ஒருவன் தன்னைத் "தீண்டத்தகாதவனாக" உணர்கிறானோ அவனே இன்றைய சாதிகளை எதிர்த்து போரிடமுடியும் என்று தோன்றுகிறது. அதனால்தான் காந்தி தன்னை ஒரு சூத்திரனாக அறிவித்துக் கொண்டார் போலிருக்கிறது.
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 7
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 6
திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம் - சில குறிப்புகள்
- ஜமாலன்
1. திருமண முறைகளைப் பொறுத்தவரை இன்றைய மதங்களுக்கு முன்பே அல்லது மதங்கள் இயற்கை தெய்வ வழிபாடாக இருந்த காலங்களில் உருவானவை. இனக்குழுக்களுக்கிடையிலான இம்முறை மதங்களின் திருமறை(ரை)கள் (வேதம் மற்ற பிறமத திருமறைகள்) மூலம் ஒழுங்குப் படுத்திக் கொள்ளப்பட்டன பின்னால். திருமண சடங்குகளை ஒழுங்குப்படுத்துதல் என்பது சமூகத்தின் இயக்கம் கொள்ளும் ஆண் மற்றும் பெண் உடல்களை ஒழுங்குப்படுத்துவதாகும். வேறுவார்த்தைகளில் சொன்னால் இனக்குழு உடல்களை ஆண் மற்றம் பெண் என்கிற பாலின (gender) உடல்களாக கட்டமைத்தது மதங்களே. எனவே இவ்வுடல்கள் இயங்குவதற்கான வெளிகளையும் முறைமைகளையும் வகுத்து அளித்தன மதங்கள்.
2. முக்கியமான கேள்வி ஏன் திருமணமுறை உருவானது அது மனித குலத்திற்கு என்ன தேவையை நிறைவு செய்கிறது? அடிப்படையில் இரு இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று ஊடு கலக்க பரிமாறிக் கொள்ளுதலே திருமண முறையாக உருவெடுத்தது. இதனை மாணுடவியலில் "பரிசுப் பொருள் பரிமாற்றம்" என்பார்கள். இனக்குழுச் சமூகத்தில் உடல்களே அவர்களது உரிமைக்குரிய சொத்தாக பாவிக்கப்பட்டதால் உடல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இரண்டு குழுக்களும் நெருக்கமாக ஒன்று கலக்க முடியும். ஒரு இனக்குழுக்குள் உள்ள உடல்களை அக்குழுக்களே திருமணம் செய்துகொண்டால் பரிமாற்றுவதற்கான தனி உடல்கள் இல்லாத நிலை உருவாகிவிடும் என்பதால் குழுவுக்கள் திருமணம் என்பது தடை செய்யப்பட்டது. இதனையே taboo என மாணுடவியல் குறிக்கிறது.
3. குறிப்பான இந்தியச் சூழலுக்கு வருவோம். இந்தியாவில் புத்தமத எழுச்சிக்குப் பிறகு பிராமண வைதீக மதமானது தனது வர்ண தர்மத்தை சாதிய தர்மமாக மாற்றுகிறது. அதாவது தனது தலைமைக்கு கீழ் பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு பொது அமைப்பை (இன்று கூறப்படும் இந்து மதம்) உருவாக்குகிறது. ஜாதி என்கிற சொல் புத்தர் காலத்தில் இனக்குழுவைத்தான் குறித்தது. அதாவது புத்தரின் சாக்கிய குலம் என்பது சாக்கிய ஜாதி என்றே பண்டைய புத்த மற்றும் சமஸ்கிருத பிரதிகளில் குறிக்கப்படுகிறது. தனித்த குழுக்கள் ஒரு பொதுவான அமைப்பிற்குள் அதாவது வைதீக பிரமாண மத அமைப்பிற்குள் வந்தபோது அக்குழுக்களது தனித்த அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ளவும் தனது பிராமண வர்ணத்தை காக்கவும் அகமண முறையை பின்பற்றும்படி மணு தர்மம் விதிமுறைகளை வகுத்தது. அகமணமுறை என்பது ஒரு குழு அல்லது ஒரு சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் முறை. மேலே இனக்குழுக்கள் உருவான காலத்தில் நடந்த பிறமணமுறை மணுதர்மத்தால் தடை செய்யப்படுகிறது. இதுவே சாதிகளின் தோற்றமாக மாறுகிறது என்பதுடன் சாதிகளி்ன அழயாத் தன்மையும் காக்கப்படுகிறது இன்றுவரை. சாதிகளின் வாழ்வு என்பது இத்திருமணமுறைகளில்தான் செறிந்துள்ளது.
4. அடுத்து உறவுமுறை திருமணத்திற்கு வருவோம். உறவுமுறை திருமணம் என்பது அகமண முறைக்குள்ளேயே சொத்தையும் வர்க்க அந்தஸ்தையும் காப்பதற்கான ஏற்பாடாகும். அத்தை மகளை மணப்பதும் சித்தப்பா/பெரியப்பா மகளை மணப்பதும் இருவேறுபட்ட சொத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் உருவானவை.
5. இனக்கழு உருவாக்கத்தின் முதல் அமைப்பு தாய்வழிச் சமுகம் ஆகும். தாய்வழிச் சமூகத்தின் மையமாக ஒரு தாய் இருக்கிறாள். (இவ்வகை தாய்களாக உருவானவைதான் மாரியம்மா, காளியம்மா என்கிற கிராம தாய் தெய்வங்கள்.) தாய்தான் இந்த குழுவின் மையம் (அத்தகைய குழுக்கள்தான் இன்று சாதிகளாக உருவெடுத்துள்ளன.) அவளே அக்குழவை காக்கும் தெய்வம். தந்தை என்கிற உறவுமுறை இக்குழுவில் கிடையாது. தந்தையின் இடம் தாய்மாமனால் நிறைவு செய்யப்படுகிறது. எனவே தாய்மாமனை திருமணம் செய்துகொள்வது தாய்வழிச் சமூகத்தி்ல் தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் தந்தையின் ஸ்தானத்தில் தாய்மாமன் சீர் என்பது சகோதரியின் பிள்ளகைளுக்கு வழுங்கும் சொத்தாகும். அது தாய்மாமனின் உரிமையாக இன்றுவரை தொடர்கிறது.
6. தாய்வழிச் சமுகத்திலிருந்து தந்தையை மையமாகக் கொண்ட சமூகங்கள் அதாவது தந்தைவழிச் சமூகங்கள் உருவானபோது தாயும் பெண்களும் உரிமையற்ற சொத்துகளாக மாற்றப்பட்டனர். பெண் உடல் ஆணிய துய்ப்புக்களமாகவும் வாரிசைப் பெற்றுத்தரும் தனிச்சொத்தை காக்கும் ஒரு எந்திரமாகவும் மாற்றப்பட்டது. எனவே தனது சொத்தைக் காக்க சகோதரன் சகோதரி பிள்ளைகளை மணக்கிற உறவுமுறை திருமணத்தை உருவாக்கினர். சொத்தை குடும்பத்தின் தந்தையாகிய மூத்தவன் கீழ் வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடு இது. இம்முறையில் பெண் பரிமாற்றுப் பண்டமாக அதாவது சொத்தாக பாவிக்கப்படுகிறாள். அதற்கு பகரமாக பெண்ணிற்கு பரிசப்பணம் தரும் முறை உருவானது. இன்றுவரை எல்லாமத திருமண சடங்குகளிலும் பரிசப்பணம் என்பது அடிப்படையாக உள்ளது. இஸ்லாமில் இதனை மகர் என்பார்கள்.
7. தாய்வழிச் சமூகங்களின் எச்சங்களை கொண்ட குழுக்களில் அல்லது சாதிகளில் ஆணை பரிமாற்றுப் பொருளாக பாவிக்கின்றன. அதாவது தனிச்சொத்தாக. இங்கு குடும்பச் சொத்து தாயின் குழுவை விட்டு போகாமல் தடுக்கப்படுகிறது. இம்முறை தமிழகத்திலும் ஈழத்திலும் "மருமக்கள் வழி மான்மியம்" என்பதாகவும் கேரள நாயர்களில் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஆண்கள்தான் திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டோடு செல்லும் வழக்கம் உள்ளது. இம்முறையானது தந்தைவழிச் சமுகத்தில் ஆண் பெண் வீட்டிற்கு போவதற்க பதிலாக பெண் வீட்டாரிடம் வரதட்சிணையாக பணம் பெறும் முறையாக சுருங்கி ஆணாதிக்கமாக நடைமுறையில் உள்ளது.
ஆக, திருமணமுறைகள் என்பது உடலை ஒடுக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ஆன மதங்களின் வழியாக ஆதிக்கம் செய்யப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். குடும்பம் என்கிற கட்டமைப்புகள் இத்தொழில்நுட்பத்தின் வழியாக செயல்படும் எந்திரமாகும். இவ்வெந்திரத்தில் அரைபடும் மூலப்பொருளாக இருப்பது பெண் உடல்களே. அதனால்தான் பெரியார் திருமணங்களே பெண் அடிமைத்தனத்தின் மூலம் என்றார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அதன் உண்மையான காதல் அடிப்படையில் கட்டுப்பாடற்ற சமூகத்தில்தான் சாத்தியம். தற்பொழுது காதல் என்பது நிர்பந்தம் அடிப்படையிலானது. விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வதைவிட நிர்பந்தத்தின் அடிப்படையில் வாழ்தல் என்பதே பெரும்பாலான திருமணங்களின் விளைவாக இருக்கிறது. இதுவே திருமணம் ஏற்படுத்தும் மணோவியல் வன்முறையாக உள்ளது.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 5
பாலினமாதல், சொர்க்கம், நிறம், கனவு, விளையாட்டு
- ஈரானிய திரைப் படங்களை முன்வைத்து
- ஜமாலன் (20-03-2008)
ஈரானியக் கலைப்படங்களில் (இப்படி பிரிப்பதில் உடன்பாடில்லை என்றாலும்) சில்ரன்ஸ் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ், ஆப்பிள், பாரன் மற்றும் அம்மாவின் விருந்தினன் ஆகிய இப்படங்களில் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவற்றில் முக்கிய பாத்திரங்கள் சிறுவர்கள் அல்லது சிறுமியர்கள். ஈரானியப் படங்கள் அழுத்தமாக வாழ்வை அதன் அவலத்தைச் சொல்லக் கூடியவை. ஈரானிய கலாச்சாரத் தனித் தன்மைகளையும் உலகு பற்றிய மனிதார்த்த சிந்தனைகளையும் உள்ளடக்கியவை. இப்படங்கள் குறித்த பரவலாக்கத்திற்கும் ஏற்படத்தப்படும் விழிப்புணர்விற்கும் உலக அரசியல் போக்குகளுடன் உள்ள உறவு பிறிதொரு ஆய்விற்கு உரியது.
குறிப்பாக பாரன் சவுதி அரேபியாவில் உள்ள ஆப்கானிகளின் அனுபவத்துடன் ஒப்பிடவைத்த ஒன்று. ஆப்கானிய ஆண்கள் அகதியாக கார் கழுவுதல் துவங்கி செருப்பு தைப்பது வரையும், பெண்கள் சாலைகளில் பிளாஸ்டிக் பூ விற்பது, சிறுவர்கள் சூயிங்-கம் விற்பது என பார்க்கவே மனம் சங்கடப்படும் காட்சிகள் அவை. சில ஆப்கானியர்கள் கார்பெட் கடைகள் மற்றும் உணவுச்சாலைகள் வைத்து நடத்திய போதிலும் பரவலாக அவர்களது நிலை என்பது பாரனில் வரும் அடையாள அட்டை இல்லாமல் பணிபுரியும் "நித்தியக் கண்டம் நீண்ட ஆயுசு" சிக்கலுடன் உறவு கொண்டதே. அமேரிக்க ரஷியப் பனிப்போரின் கோர முகத்தை அவர்களது கண்களில் வழியும் சோகம் சொல்லிக் கொண்டே இருக்கும். போதைப் பொருளாதாரத்தாலும், போர் பதற்றங்களாலும் அரைப் பைத்தியநிலைக்கு ஆளான ஆப்கானியர்கள் ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியலின் கொடூரத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பாரன் படம் போர் பற்றி நேரடியாக சொல்லாவிட்டாலும் போரின் வன்முறையை நமக்கு அற்புதமாக உணர்த்தி விடுகிறது. அதாவது போர் ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகள் அதாவது எல்லைகடந்து வாழும் அகதிகளின் பிரச்சனை என்பது இதன் பின்புலம்.
பாரன் போரின் விளைவுடன் பாலினமாதல் என்கிற அரசியல் பிரச்சனையையும் முன்வைக்கும் ஒருபடம். அதேபோல் ஆப்கானியப் படமான "ஒஸாமா"-வும். இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை குடும்பத்தை காக்க ஆப்கானிய சிறுமிகள் ஆண்வேடமிட்டு வேலைக்கு செல்வது. ஏகாதிபத்திய வேட்டைக் காடுகளாக்கப்பட்ட காபுல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பற்றிய கதைகள். போர் நிகழும் காலங்களைவிட முடிந்தபிறகான காலங்களில் ஏற்படுத்தம் பாதிப்புகள்தான் அதிகம். பாரனில் ஆப்கான் எல்லையைத் தாண்டி ஈரானில் பணிபுரியும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் ஆப்கானிய சிறுமி, ஒஸாமாவில் அதே போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிற்குள்ளேயே பணிபுரியும் ஆப்கானிய சிறுமி. இரண்டுமே இஸ்லாமிய நாட்டில் அதன் சமூகப் பின்னணியில் நடைபெறுகிறது.
இவை இரண்டிற்கும் இத்தாலிய இயக்குநர் பியார் பாவ்லோ பசோலினியின் "1001 அரேபிய இரவுகளி"-ல் வரும் ஒரு கிளைக்கதையான "நூருல்தீன் ஜமாரூத் கதை"-க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அக்கதையில் ஜமாரூத் ஒரு அழகான அறிவுள்ள அடிமை. "அரேபிய இரவுகளி"-ல் வரும் ஆண்களைவிட பெண்கள் அறிவாற்றலும் சாமர்த்தியமும் மிகுந்தவர்கள். பெண்ணரசியல் பேசும் கதைகள் அவை என்று கூறலாம். நூருல்தீன் என்கிற வேலையற்ற இளைஞன் மீதான கவர்ச்சிக் காரணமாக ஜமாரூத் தனது சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தை தந்து தன்னையே ஏலத்தில் எடுக்கச் சொல்வாள். அந்த அடிமையின் அறிவாற்றலால் அவள் எஜமானன் அவள் விரும்பும் நபருக்கே தன்னை விற்றுக்கொள்ளும் உரிமையைக் கொடுத்திருப்பான். அவ்வூரின் வயதான செல்வந்தனிடம் ஏலத்தில் போக விரும்பாமல் நூருல்தீன் வழியாக தன்னை அவள் விடுதலை செய்துகொள்வாள். அந்த செல்வந்தனுக்கு நீலநிறக் கண்கொண்ட ஒரு "கிறித்துவ" வேலையாள் (கதையில் இப்படித்தான் குறிக்கப்படுகிறது) இருப்பான். அவன் அவளை கடத்திச் சென்றுவிட, அவள் தப்பிச்செல்ல... ஆண்வேடமணிந்து அவள் ஒரு நகரை நோக்கிச் செல்ல, நகர்வாயிலில் காத்திருக்கும் அந்நகர் மக்கள் அவளை முடிசூட்டி அரசனாக ஆக்கிவிடுவார்கள். காரணம் அந்த நகரின் மன்னன் இறந்துவிட அந்நாட்டு வழக்கப்படி யார் வெளியிலிருந்து நகருக்கு முதலில் வருகிறார்களோ அவர்களே அந்த நாட்டின் இளவரசியையும் மணந்து அரசனாக வேண்டு்ம். ஆண் வேடமணிந்த ஜமாரூத் அரசனாகி இளவரசியை மணப்பாள். பெண்ணை ஆண் வேடமிட்ட பெண் மணந்து கொள்வது என்பதாக கதைபோகும்.
இதனை பாலியல் புனைவு நுட்பத்துடன் அருமையான ஒரு செவ்வியல் படமாக எடுத்திருக்கிறார். இத்தாலிய இயக்கநர் பியார் பாவ்லோ பசோலினி உடலரசியல் பற்றிய பல நுட்பமான கருத்தாக்கங்களைக் கொண்ட படங்களை எடுத்துள்ளவர். ஆக, இந்தக் கதையும் பாலினமாதல் அரசியலுடன் உறவுகொண்ட ஒருகதை. இந்த 3 கதைகளிலும் பெண் ஆண் உடையில் வந்து ஆணாக வாழ்கிறார்கள் தனது இருத்தலுக்காக. இது எல்லாம் இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள்தான் நடைபெறுகிறது என்பது முக்கியம். பாத்திமா மெர்னசி என்கிற மொராக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணியலாளர் கூறும் கருத்துடன் இதனை ஒப்பு நோக்கலாம். இஸ்லாமிய அல்லத அரேபியக் கலாச்சாரத்தி்ல் பெண் குறித்த ஒரு பேரச்சம் உள்ளது என்கிறார் இவ்வாய்வாளர். இதன் ஒருவிளைவே பெண்ணை ஒடுக்கும் பல நுட்பங்கள் இம்மதங்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
The Color of Paradise 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது. சினமாவிற்கும் நாவலுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் அக உலகை முன்வைப்பதில் உள்ள பிரச்சனைதான். நாவல் அக உலகை குரல்கள் அல்லது விவரணைகள் வழியாக சொல்லிவிடக்கூடிய சாத்தியங்களைக் கொண்டது. சினிமாவில் அப்படி எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பழைய பாலசந்தர் படங்களில் வரும் சூத்ரதாரி போனறு துருத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை பயன்படுத்துவது யதார்த்த சினிமாவிற்கு பொருந்தாது. இயக்குநர் தனது காட்சி அமைப்புகள் வழியேதான் இதனை உணர்த்த முடியும். அவற்றின் குறிப்புபொருள் தொல்காப்பியத் தமிழில் "இறைச்சி" அல்லது பானினியத்தின் 'த்வனிப்'பொருள் முக்கியமானது. இதழியலில் ஒரு பாலபாடம் உண்டு. யானை நடந்தால் செய்தி இல்லை, விழுந்தால்தான் செய்தி என்பது. வாழ்க்கையை அப்படியே காட்டுவது கலையாகிவிடாது. வாழ்க்கையின் நுட்பமான கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவதும் அதனை கட்டுடைப்பதுமே தற்போதைய கலையின் முக்கிய பணியாக உள்ளது. அவ்வாறு சொர்க்கம் என்கிற மதங்கள் முன்வைக்கும் பெரும்புனைவை கட்டுடைக்க முயலும் ஒரு படமே கலர் ஆஃப் பேரடைஸ்.
இப்படம் முன்வைக்கும் ஒரு முக்கிய கேள்வி மதங்கள் குறிப்பாக இஸ்லாம் முன்வைக்கும் சொர்க்கம் என்பது குறித்த வர்ணனைகளில் உள்ள சிக்கலை கேள்விக்கு உட்படுத்துகிறது. இப்பூமியில் கண் தெரியாத ஒருவனுக்கு வண்ணமயமான சொர்க்கத்தின் வர்ணத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும், கண் தெரியாத ஒருவருக்கு நிறம் என்பது குறித்து என்ன உணர்வு அல்லது படிமம் இருக்கும். அதாவது கண் தெரியாத ஒருவன் தனது கனவை விளக்குவதாகக் கொள்வோம் அதில் நிறம் பற்றிய என்ன உணர்வை அவன் வெளிப்படுத்துவான். கனவுக்கு நிறம் உண்டா?என்கிற வாதம் ஒன்று உள்ளது. இதனை அடிப்படை படிமமாகக் கொண்டு ல.ச.ரா. என்கிற எழுத்தாளார் பச்சைக்கனவு என்கிற கதையை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் படித்தது கதை நினைவில் இல்லை. கதையின் கரு கனவின் நிறம் என்ன? கருப்பு வெள்ளையா? வண்ணமா? உங்கள் கனவின் நிறம் என்ன?
இப்படத்தில் நான் புரிந்து கொண்டது இதுதான். சொர்க்கத்தில் மதுவும் கூரிய கண்களுடைய (ஈருல்-ஹைன்) பெண்களும், எண்ணற்ற பெண்களை அனுபவிப்பதற்கான கட்டற்ற ஆற்றலும் உண்டு என்பதாக சொர்க்கம் பற்றிய ஒரு மிகப்பெரிய புனைவு இஸ்லாத்தில் உள்ளது. (பெண்ணுக்கு எண்ணற்ற ஆண்கள் சொர்க்கத்தில் உண்டா? என்கிற இஸ்லாமிய பெண்ணியலாளரின் பாத்திமா மொ்னஸியின் கேள்வி ஒன்றும் உள்ளது.) பரவலாக இந்த "உன்னதம்" பற்றிய புனைவு எல்லா மத சொர்க்கங்களிலும் உண்டு. இங்கு உள்ள பிரச்சனை இங்கு அதனை அனுபவிக்காதவனுக்கு சொர்க்கத்தில் அது கிடைப்பதன் மூலம் அதனை எப்படி அனுபவமாக உணரமுடியும் என்பதுதான். இதனை நிறத்தின் மூலம் விளக்க முயல்கிறது இப்படம்.
ஒரு கண்பார்வையற்றவனுக்கு வண்ணமயமான சொர்க்கம் என்ன அர்த்தத்தை அல்லது அழகை தரமுடியும். இதில் நிறம் என்பது ஒரு குறியீடு. அது அடைய முடியாததின் குறியீடு. இச்சமூகத்தில் வறுமை என்பது நிறம் உணர முடியாதவாறு ஒரு மக்கள் கூட்டத்தை பிறதொரு மக்கள் கூட்டம் வைத்திருக்கும் ஒரு குருட்டு நிலைதான். ஒருவன் கண்பார்வையற்றவனாக இருப்பதற்கு கடவுளை காரணம் காட்டலாம். ஆனால் ஏழையாக இருப்பதற்கு இந்த சமூக அமைப்பே காரணம். இந்த இரண்டும் பயனிக்கும் ஒரு தளம்தான் காட்சிகளாக விரிகிறது படத்தில் முகமதும் அவனது தந்தையுமாக.
கடவுளுக்கு பிரியமான நெருக்கமான கண்பார்வையற்றவனைக்கூட இந்த லெளகீக உலகில் வைத்துக் கொள்ள அவனது தந்தைக்கு பொருளாதாரம் தேவைப்படுகிறது. ஒருவன் இறைவனால் பார்வை பறிக்கப்பட்டவன் மற்றவனோ புதிய கடவுளான பணமில்லாததால் குருடாக்கப்பட்டவன். இருவருக்குமே சொர்க்கம் என்பது நிறமற்றதுதான். இவ்வுலகில் குருடாக இருத்தல் என்பது மதங்களின் அறங்களைப் பின்பற்றிச் செல்வதுதான். இந்த அறங்களை பின்பற்றியவன் சுவர்க்கத்தில் தரப்படும் கட்டற்ற திறந்த உலகில் எதை அனுபிவிக்க முடியும் என்பதுதான் இப்படம் எழுப்பும் கேள்வி. இப்படத்தில் அருவியல் தவறி விழுந்துவிடும் மகனை காப்பாற்ற முடியாமை என்பது ஒருவகையில் கடவுளுக்கு தரப்படும் பலிச்சடங்குதான். அம்மகனின் இறப்பை நிகழ்த்துவது அவனது உள்மன வேட்கையே.
சுவர்க்கம் பற்றி மற்றொரு கேள்வியுடன் வந்த இவரது முந்தைய படமான "சில்ரன்ஸ் ஆப் ஹெவன்" படத்தில் உலகமயமாதல், நுகர்வு வெறி மற்றும் வெற்றி்க்கொள்ளும் வேட்கை என்கிற நுட்பமான அரசியல் விமர்சனங்கள் உண்டு. வெற்றி என்பது என்ன? மனிதகுலத்தின் வெற்றி குறித்து வெறியை, வேட்கையை நுட்பமாக விமர்சிக்கும் அப்படம் தனது தளத்தை உலகமயமாக்கல் வரை விரித்து சொல்லக்கூடிய அரசிலைக் கொண்டிருக்கிறது. போட்டி என்றால் என்ன? போட்டி எப்படி பார்வையாளனை சார்பு நிலை எடுத்து ஆட்ட விதிகளுக்குள் இழுத்து விடுகிறது என்கிற பலவற்றைப் பேசிய படம். விளையாட்டின் விதி வெற்றிக்கான உந்துதலே தவிர வெற்றியடைந்தே தீர்வேன் என்கிற வெறி அல்ல. காரணம் வெற்றி என்பது ஏற்படுத்தும் மகிழ்வு என்பது மதிப்பு மிக்கதாக கட்டமைக்கப்பட்ட சமூக விதியால் வருவதே.
இப்படத்தில் தனது தங்கை ஷீ-வை தொலைத்துவிட்ட ஒரு அண்ணன் அவளுக்கு ஷீ வாங்கித் தருவதற்காக ஒரு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வான். அப்போட்டியல் அவன் கலந்துகொள்ள காரணமே அதில் இரண்டாவது பரிசாக உள்ள ஷீ தான். கடுமையான பயிற்சிக்குப் பிறகு அப்போட்டியல் ஓடும்போது மிகவும் சுயகட்டுப்பாட்டுன் முதலாவதாக வரக்கூடாது என்பதற்காகவும் இரண்டாவதாக வருவதற்காகவும் தனது ஒட்டத்தை கட்டுப்படுத்தி ஓடுவான். அவன் ஒவ்வொருமுறை பின் தங்கும்போதும் அவனது தங்கையின் முகம் நினைவில் வர ஓடுவான். இறுதியில் அவன் பின் தங்கிவிடும் நிலையில் அவனது பள்ளியைச் செர்ந்தவர்களின் ஆர்ப்பாட்டம் அவனையும் தொற்றிக்கொண்டு தன்னையறியாமல் முதலில் ஓடிவந்து மயங்கிவிடுவான். மயக்கமடைந்த அவன் விழித்தவுடன் முதலில் கேட்பது தான் இரண்டாவதுதானே என்பதுதான். அவன் முதலாவதாக வந்ததற்கு பாராட்டுகள் நடக்கும். அவனைத் தூக்கி கொண்டாடுவார்கள். அவன் முதலாதாக வந்ததையே வெறுத்து அந்த வெற்றி அவனுக்கு அர்த்தமற்றதாகி தங்கையிடம் மன்னிப்பு கேட்பான். அவளும் ஷீ இல்லாமல் வெற்றிக்கோப்பையுடன் வந்த அவனை முகச்சுழிப்புடன் பார்த்துவிட்டு அகலுவால். கால்களின் கொப்பளங்களின் வலி ஷீ கிடைக்காத வேதனை குணிந்த தலையுடன் அவனை உட்கார வைத்தவிட்டதுடன் முடியும்படம், திரையைவிட்டு நமது அக உலகிற்குள் ஓடத்துவங்கிவிடுகிறது. இறுதிக் காட்சியில் அவர்களது தந்தை குழந்தைகளுக்கு ஷீ வாங்கி வருவது என்பார்வையில் அதிகப்படியான ஒரு காட்சியே.
இதுதான் குழந்தைகளின் சுவர்க்கம். இந்த உலகில் கிடைக்காத சொர்க்கம் வேறு உலகில் கிடைப்பதால் பயன் என்ன? இதில் அவனது வெற்றி மறுஉலகிற்கான குறியீட்டைக் கொண்டுவிடுகிறது. இங்கு வறுமை உனக்கு, கடவுளிடமோ சொர்க்கம் என்கிற விதிவாதம் இங்கு கேள்விக் குறியாகிறது. "ஏழைகளின் சிரிப்பில் இறைவன்" என்கிற ஏமாற்று வேலைதான் அவனுக்கு கிடைத்த வெற்றி என்பது. அவனுக்கு தேவை வெற்றியல்ல வாழ்க்கை. தனது தங்கையுடன் கூடிக்களிப்பதற்கான வாழ்க்கை. அதை அந்த போட்டி தரவில்லை. உலகம் மகிழ அவனுக்க கிடைத்தது வெற்றிவீரன் என்கிற பட்டம். அது சொர்க்கமல்ல அந்த குழந்தைகளுக்கு.
இதுதான் உண்மையான விளையாட்டு. இப்படம் இன்றைய அனைத்த வெற்றி, வெறி, ஏன் போர், தன்முனைப்பு அத்தனையும் கேள்விக்குட்படுத்தம் ஒரு படம். இங்கு வெற்றி என்பதை எப்படி அளவிடுவது? தனக்கு மகிழ்வை தராத வெற்றியின் பொருள் என்ன? இக்கேள்வியை நாம் இன்று நட்சத்திர விளையாட்டாக தொலைக்காட்சிகள் மற்றும் ஊடக உலகத்தால் மாற்றப்பட்டுள்ள கிரிக்கெட்டை முன்வைத்து கேட்பது அவசியமான ஒரு அரசியல் நடவடிக்கை ஆகும். 50 டாலர் தினப்படியில் கவாஸ்கர் காலத்தில் விளையாடப்பட்டுக் கொண்டிருந்த கிரிக்கெட், இன்றைய டெண்டல்கர் காலத்தில் மில்லியன் கணக்கில் வருமானம் உள்ள ஒன்றாக மாறியுள்ளதற்கு யார் காரணம்? கிரிகெட்டில் கிடைக்கும் வெற்றி என்பது எது? அது யாருக்கு சாதகாமானது? அதில் யார் பயனடைகிறார்கள்? அதுதரும் மகழ்வின் எச்சமாக நமது மன அமைப்பில் கட்டப்படும் அரசியல் எது? என்பதும் இதனுடன் தொடர்புடைய கேள்விகள்தான்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - 1
பெருங்காதலின் பொன்நிற கரையில்
- கூத்தலிங்கம்
உதயமான
ஒற்றை நிலவை முத்தமிட
ஆயிரம் உதடுகளாக மலர்ந்து
உதிர்கிறது விரிகடல்
மெல்லிய காமத்தின் விழைவை
சூடியிருக்கிறது
நீல மாலை வானம்
காற்றசைப்பில்
கிளை பிரிந்த சிறு பூவாக
கடவுளிடமிருந்து
நழுவிச் சிந்திய ஒரு துளி விந்து
நிறைவுறா அவாவின் தகிப்பில்
அலைமோதுகிறது பெருங்கடலாக
அதன் கரைகளில் அமர்ந்து காதலிக்கிறார்கள்
மனிதர்கள்
பதிவு செய்தது : பண்புடன் at 1 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 4
பிறகான - நவீனத்துவமும் நவினத்தவத்தின் பிறகும் - பேரண்டபட்சிகளின் கதைகூறல்கள் : பகுதி - 3
-ஜமாலன்
தொகுப்பாக, அமைப்பியல்வாதம் ஒரு ஆய்வுமுறை. அது எல்லாவற்றையும் ஆய்வதற்கான அடிப்படைகளை பேசுகிறது. அது தத்துவமோ? மொழியியலொ? அல்லது அறிவியலோ அல்ல. பிறகான-நவீனத்துவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். செவ்வியல் காலம், நவீன காலம் போன்றவற்றை எந்த வகையில் சேர்ப்போமோ அந்த வகைதான் பிறகான-நவீனத்துவமும். நவீனத்துவம் என்றால் என்ன? என்பது புரிந்தால்தான் பிறகான-நவீனத்துவம் எங்கு இதனை உடைக்கிறது என்பது புரியும். அதைதான் மனிதமுதல்வாதம் குறித்த முந்தைய குறிப்புகள் விளக்குகிறது.
நவீனத்துவத்தின் சிந்தனையை 5 வகையாக பிரிக்கலாம்.
1. Humanism (மனிதேநேயவாதம்)
2. Individualism (தனிமனிதவாதம்)
3. Rationalism (பகுத்தறிவுவாதம்)
4. Secular Moralism (மதச்சார்பற்ற அறத்தத்துவம்)
5. Progressive History or progress. (வரலாற்றின் முன்னொக்கிய வளர்ச்சி)
இந்த 5-ற்குள் எல்லாவித கோட்பாடுகள் இஸங்கள் நடைமுறைகளை அடக்கி விடலாம். இந்த 5-யும் பிறகான-நவீனத்துவம் மறுத்து, இதன் மையமாக உள்ள மனிதமுதல்வாதத்தை சிதைக்கிறது. மனிதனின் மையமான ஆத்மா அல்லது self என்கிற ஒன்றை தன்னிலை என்பதாகவும் அதன் உருவாக்கம் அதன் மையமற்ற தன்மை என்பதாக விளக்கிச் செல்கிறது. பிறகான-நவீனத்துவம் பிறகான-அமைப்பியலின் பல்துறைச் சார்ந்த அறிதல்களைக் கொண்டது. அதனை விளக்கப் புகுவது என்பது ஒரு தனித் திட்டமாகும் (a seperate project).
பிறகான-நவீனத்துவம் மொத்தத்துவ (totality) சிந்தனைகளை மறுக்கிறது. ஒழுங்கமைப்புகளை மறுக்கிறது. உலகம் முழுவதற்குமான சிந்தனைகளை மொத்தத்துவத்தை கொண்ட எல்லாவற்றையும் பெருங்கதையாடல் என்றும், அதற்கு பதிலாக சிறுகதையாடல்களை அதாவது small practice, local events ஆகியவற்றைக் கொண்டதாக கட்டமைக்க வேண்டும் என்கிறது. இவை விவாதத்திற்கு உரியவை. இதனை நாவல் சிறுகதை என்கிற பெரிய சிறிய என்கிற அளவடிப் படையில் புரிந்துக் கொள்ளக்கூடாது.
உதாரணமாக, மனிதனின் மையமாக ஆத்மா என்பதை இதுவரையிலான தத்துவங்கள் சொல்லி வந்துள்ளன. தகர்ப்பமைப்பு இந்த சொல்லாடலின் முரணை முன் கொண்டு வருகிறது. அதாவது, ஆத்மா என்பது உடலை ஒடுக்கி உள்ளிருத்துகிறது. அல்லது ஆத்மா பற்றிய பேச்சு உடல்பற்றிய பேச்சை மறுத்தே உருவாகுகிறது. தனது தீவிர தர்க்கத்தால் இம்முரணை தலைகீழாக்கி ஆத்மா என்பதை உடல் பற்றிய பேச்சின் மூலம் தகர்க்கிறது. இப்படியாக, மனிதனின் மையமாக கருதிவந்த ஆத்மா சிதைக்கப்படுகிறது. இவ்வாறு மையம் அழக்கப்பட்ட மனித நிலையே பிறகான-நவீனத்துவ நிலையாக முன்வைக்கப்படுகிறது. முக்தி, மோச்சம், ஆன்மீக விடுதலை, சொர்க்கம், நரகம் என்பதை பிறகான-நவீனத்துவ வார்த்தையில் கூறினால் பெருங்கதையாடல் எனலாம். கணந்தோறும் வாழ்வதே பிறகான- நவீனத்துவம். இப்படி முக்தி என்று முற்றம் துறந்து (சொர்ணமாலிகா துவங்கி கோவில் பூட்டுவரை துறப்பதல்ல) இறதி நாளிற்காகவோ மற்றோரு உலகிற்காகவோ அல்லது மறுமைக்காவோ வாழ்வதல்ல.
மற்றொரு முக்கிய முரணியக்கமான எழுத்து மற்றும் பேச்சு என்கிற நிலைகளை எடுத்துக் கொள்வோம். எழுதப்படாத தத்துவங்கள் என்று எதுவும் இல்லை. எழுத்து என்பது பேச்சு என்கிற ஒலிமையவாதத்திலிருந்து விடுபட்டதுதான். உதாரணமாக ஒரு தத்தவஞானி பேசுவதை அல்லது பேசியதை பிறிதொருவர் எழுதி தொகுப்பதாகக் கொள்வோம். அப்படி தொகுக்கும்போது, அவர் பேசியதை அப்படியே தொகுக்க முடியாது. காரணம், பேசும் தன்னிலை வேறு, எழுதும் தன்னிலை வேறு. எழுதும் தன்னிலையானது அதன் வரலாற்றுச் சூழலில் அது புரிந்து கொண்டவிதமாகவே அதனை எழுதும். அல்லது அதை வாசிக்கும் தன்னிலை தனது வரலாற்றுச் சூழலில் தான் புரிந்துகொண்டவிதமாகவே அதனை அர்த்தப்படுத்தும். பேச்சு உடனடித்தன்மை வாய்ந்தது. எழுத்து வரலாற்றின் இயக்கத்தைக் கொண்டது. உதாரணமாக இராமயணம். விசாயரின் ராமாயணத்தை நாம் வாசிப்பதில்லை. தற்கால மொழிக்குள் உள்ள அர்த்தமாக்கம் அமைப்பில்தான் அதனை வாசிக்கிறோம். இராமயணப் பிரதியை நமக்கானதாக நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.
பிறகான-நவினத்துவம் குருவி-மண்டைகளின் அறிவுஜீவித்தனம் என்பதாக தமிழக இலக்கியச் சூழலில் பரப்பப்பட்டு வருகிறது. எந்த ஒரு தத்துவமும், சிந்தனைகளும், கொட்பாடுகளும் எல்லா மக்களுக்கும் புரியவேண்டும் என்பது ஒரு மாயையைதான். மக்கள் செயலூக்கமிக்கவர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், தத்துவம் அவர்களை சென்றடைய வேண்டும் என்றால், அது வகுப்புகள்மூலமோ அல்லது ஒரு கல்வித் திட்டத்தின் மூலமோ அல்லது ஒரு இயக்கத்தின் மூலமோ கோடிக்கான மக்களுக்கு புரியவைப்பதால் நடைபெறுவதி்ல்லை. பேச்சு வழக்கில் உருவாகும் பொதுபுத்தி வழியாகவே அல்லது மொழியின் வழியாகவே சென்றடைகிறது. "நிலையாமை" என்பது ஒரு மதவாதக் கருத்தாக்கம். அதனை மக்களுக்கு யாரும் விளக்கியதில்லை. ஆனால் பண்ணெடுங்கால மொழியின் வழியாக அது மக்களை வந்தடைந்துள்ளது. அவர்களது வாழ்தளத்தில் ஏற்படும் நெருக்கடிகள் வழியாகவும், வாழ்தலுக்கான போராட்டத்தின் வழியாகவும் அவற்றை புரிந்தேற்கிறார்கள். இதைதான் மார்க்ஸ் தத்துவம் மக்களை சென்றடைந்தால் பெளதீக சக்தியாக உருவெடுக்கிறது என்றார்.
எளிமையாக சொல்வதென்றால்.. இயல்பாக உள்ளதாக நம்பப்படும் எந்த ஒன்றும் இயல்பானது அல்ல என்பதுதான் அடிப்படை. உதாரணமாக பாலினம் (gendar) என்பது ஒரு மொழியியல் கட்டுமானம் என்பதை எனது பதிவு ஒன்றில் விளக்கியுள்ளேன். மொழி குறித்த வாசிப்பே இவற்றை முழுமையாக புரிந்துகொள்ள உதவும். மொழியில்லாமல் இந்த உலகை நாம் புரிந்துகொள்ள வேறு ஏதெனும் வழி இருக்கிறதா? என்பதை யோசித்தால் இதன் தர்க்கம் பிடிபடும். மொழிக்குள் வராத எந்த பொருளையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. பார்க்காத ஒன்றை எப்படி கற்பனை செய்ய முடியாதோ? அப்படித்தான். மொழியில் இல்லாத ஒன்றைப்பற்றி நம்மால் சிந்திக்கவோ பேசவோ முடியாது. உலகின் இருப்பிற்கு மொழி அவசியம். இந்த மொழியை புரிந்துகொள்ள இலக்கணம் அவசியம். இலக்கணம் மொழி குறித்த ஒரு ஒழுங்கமைவு. ஆகவே இந்த உலகமும் ஒரு ஒழுங்கமைப்பாக நமக்கு தெரிகிறது. இலக்கணம் தெரியாத பாமர மனிதனும் வாக்கிய அமைப்பை இலக்கண முறைப்படி பேசாவிட்டால், அவனை மனப்பிறழ்ச்சியாளனாகவே இச்சமூகம் கருதும்.
இறுதியாக, தற்சமயம் பிறகான-நவினத்துவமும், பின்-நவீனத்தவமும் செத்து விட்டதாக அறிவிப்புகளும் நூட்களும் வருகின்றன. உருவான சிந்தனை எதுவும் சாவதி்ல்லை. தவிரவும், இவை சாவதில் நமக்கு ஒன்றும் பெரிய இழப்பொ பாலூற்றி 16 கொண்டாடும் நிலையோ இல்லை. ஆனால், இப்படி கூறுபவர்கள் எதனை நிரூபிக்க முயலுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதற்கான அரசியல்தான் பிரச்சனைக்குரியது. பின் அமைப்பியலை (பிறகான-நவீனத்தவ கோட்பாடு என்கிற அர்தத்தில்) தாண்டிச் செல்லக்கூடிய தெல்லஸ்-கொத்தாரி என்கிற இரு பிரஞ்சு சிந்தனையாளர்களின் கொட்பாடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மொழியின் அடிப்படையான உருவக அமைப்புகளையே மாற்றி, அடுத்த தளத்திற்கு எடுத்த செல்கிறார்கள். ஆக, நமது சூழலில் நாம் இன்னும் இந்த விவாத தளத்தைவிட்டு நகரவில்லை. காரணம், பழக்கப்படுத்தப்பட்ட தளத்தை தாண்ட முடியாத ஒரு மனநிலையும், நாம் நம்பும் கருத்தியலுமே. அதனால்தான் இந்த அறிமுகக் குறிப்புகள் எனது முந்தைய விவாதக் குறிப்பகளில் இருந்து தொகுக்ககப்படுகிறது. இவை புரிந்தால்தான் அடுத்த கட்ட சிந்தனைகளும் புரியும் என்பதால்.
"வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்.
என்மகன் -
தீப்பெட்டி சேகரிக்கறான்."
- விகரமாதித்யன்.
தனது முயற்சியல் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மண்டை வெடிக்கும் மரணபயத்துடன் தனது தோளில் வேதாளத்தை தூக்கித் திரிந்தபடி அது சொல்லும் கதையைக் கேட்கத் துவங்கினான். தனது கழுத்திற்கு நேராக நீட்டப்பட்ட வாளுடன் தனது சாவைத் தள்ளிப்போட 1001-அரேபியக் கதைகளை சொல்லத் துவங்கினாள் ஷகர்சாதி. இப்படியாக எத்தனையோ கதையாடல்கள் சாவிற்கு எதிரான சாட்சிகளாக இவ்வுலகு பற்றி விவரித்தன... அவற்றில் ஒரு கதையாடலே பிறகான-நவீனத்துவம் அல்லது பொதுவாக குழப்பத்துடன் அழைக்கப்படும் பின்நவீனத்துவம் என்பதாக....
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 3
தகர்ப்பமைப்பும் அமைப்பின் தகர்ப்பும் - பேரண்டபட்சிகளின் கதைகூறல்கள் : பகுதி - 2
- ஜமாலன்
பிறகான-நவீனத்துவம் குறித்து சுருக்கமாக விளக்க முனைவதால், பல வார்த்தைகளை புதிய அர்த்தங்களில் முந்தைய பகுதியில் விளக்கப்படவில்லை. அதற்காக அவற்றிற்கு பழகிய அர்தங்களை பயன்படுத்த முடியாது. உதாரணமாக கோட்பாடு என்பதை நாம் ஒரு மையத்துவ சிந்தனை போன்று புரிந்து கொள்கிறோம். கோட்பாடு என்பது இயல்பானதாக மக்கள் விளங்கிக் கொண்டிருக்கும் பொதுபுத்தியை கேள்விக்குட்படுத்தி, அது இயல்பற்றதுதான், வரலாற்றில் கட்டமைக்கப்பட்டதுதான் என்பதை அம்பலப்படுத்தி மற்றொரு புதிய ஒழுங்கை முன்வைப்பது. (இவ்வறையறையில் எல்லா சித்தாங்கள், தத்துவங்கள், இஸங்களையும் பொறுத்திக் கொள்ளலாம்.) அவ்வொழுங்குகள் மக்களிடம் புழக்கத்திற்கு வந்தபின் நாளடைவில் அதுவே இயல்பானதாக மாறி தனது கட்டமைவு வரலாற்றை மறைத்துவிடும். உண்மையில் இப்படி மறைவாக இயங்கும் கட்டமைப்புகளை உடைத்து வெளிப்படுததுவதுதான் தகர்ப்பமைப்பு ஆய்வுமுறை. அதற்கு மொழி என்பது ஒரு கட்டுமானம் என்கிற அடிப்படையிலிருந்து துவங்குகிறது.
தெரிதா தகர்ப்பமைப்பு வாதமும் தகர்பபமைப்பிற்கு உட்பட்டதே என்பதை ஏற்றுக் கொண்டே உள்ளார். (மார்க்ஸ்கூட் மார்கஸியம் தேவையற்ற ஒரு சமூகமே தேவை என்கிறார்.) இதன்பொருள் மதங்களின் புனிதமறைகளும், சரொஜாதேவி (தெரியாதவர்கள் பிறகான -நவீனத்துவத்தை படிப்பதே பயனற்றது. :)) கதைகளும் மொழிக்கட்டுமானங்களே. அதனால் சரோஜதேவி தாழ்ந்தது, புனிதமறை உயர்ந்தது என்பது அதிகாரம். சரோஜாதேவி ஒருவகைக் கதைக்கூறல் என்றால் புனிதமறைகள் பிறிதொருவகைக் கதைக்கூறல்களே. புனிதமறைகளை உண்மையாகவும். சரோஜாதேவியை கதைகளாகவும் கருதுவது நமக்குள் இயங்கும் கருத்தியலின் செயல்பாடே. "என்னை பின்பற்றுங்கள்" என்கிற இறைவாக்கும், "அந்த உடலின் அம்மணம் என்னை கிளர்ச்சியுறச் செய்தது" என்கிற சரோஜாதேவியின் வாக்கும் அடிப்படையில் மொழியால் உருவாக்கப்படுவதுதான். அவற்றினை புனிதமானதாகவும் புனிதமற்றதாகவும் புரிந்துகொள்வது சமூக மதிப்பீடுகள் சார்ந்ததே. இந்த மதிப்பீடுகள்தான் ஆளும் கருத்தியல் அடிப்படையில் தீர்மாணமாகிறது. ஆக, இந்த புனிதக் கட்டமைப்புகள உடைத்தெறிவோம் என்கிற புரட்சிகர நிலைப்பாடே தகர்ப்பமைப்பு.
இன்று நம் பழக்கத்தில் இயல்பானதாக உள்ள ஆண், பெண் பாலின வேறுபாடு தொடங்கி தேசியம், குடிமகன், வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் இப்படித்தான் ஒரு வரலாற்று கட்டமைவுகள் என்பதை பிறகான-அமைப்பியல் அம்பலப்படுத்துகிறது. (எனது மற்றொரு பதிவில் பாலினக் கட்டுமானம் (gendor construction) பற்றியும் பாலியல் கட்டுமானம் (sexual constructions) பற்றியும் விளக்கியுள்ளேன்.) இப்படி பழகிய வழக்கங்கள் நவீன தொன்மமாக கருதி அதனை எதிர்க்கும் அல்லது அவற்றில் இருந்து விலகும் நிலையை பிறகான-நவீனத்துவம் எடுக்கிறது. இதன் எதிர்விளைவாக உருவாகும் அரசியல் நிலைபாடுகளே இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதங்கள். (மேலதிக விளக்கம் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து ஒரு விரிவான கட்டுரை எனது நூலில் மற்றும் பதிவில் உள்ளதால், அதனை விடுகிறேன் இங்கு.)
குறிப்பாக இதுவரையிலான சிந்தனைகள் மனிதனை மையமாக கொண்டு வெளிவந்தவை என்பதால் மனித மனத்தில் உட்செறிக்கப்பட்ட வன்முறை என்பது ஏதோ ஒரு வடிவில் சமூகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அதனால் மனிதமுதல்வாத அல்லது மனிதமையவாத சிந்தனைகளுக்கு பதிலாக உள்ளார்ந்துள்ள-அமைப்புகளை சிதைத்து மையமிழக்கச் செய்யும் ஒரு இயக்க நிலையிலான சிந்தனையே தேவை என்ற நிலையிலும், அதுவே ஒரு ஒழுங்குமுறையாக மாறிவிடாத இயக்கநிலையில் இருப்பதான சிந்தனையாகவுமே தகர்ப்பமைப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அதாவது மனிதன் என்பதை ஒரு சொல்லாடலாகவும் வரலாற்று கட்டமைப்பாகவும் அல்லது ஒரு பிரதியாகவும் பார்க்கிறது. (இங்கு சொல்லாடல், வரலாற்று கட்டமைப்பு மற்றும் பிரதி ஆகிய சொற்கள் பிறகான-அமைப்பியல்வாதிகளின் புதிய அர்ததங்களில் பிரயோகிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைக்கவும்.) இதனை பிறகான-நவீனத்துவம் தனது ஆய்விற்கான முறையியலாக பயன்படுத்துகிறது.
தெளிவாகச் சொன்னால், பிறகான-நவீனத்தவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல் என்கிறார் பிரடெரிக் ஜேம்சன். அதாவது முதலாளித்தவத்தின் ஒரு குறிப்பிட்ட வகையான பண்பாட்டு உருவாக்கமே நவீனத்துவம் மற்றம் பிறகான-நவீனத்துவம் என்பது. இங்கு மார்க்சீயம் முன்வைக்கும் சமூகம் என்கிற கட்டமைப்பு பற்றிய புரிதல் அவசியம். சமூகம் என்பது பொருளியல் அடித்தளம் மற்றம் பண்பாடு உள்ளிட்ட இதர அமைப்புகளைக் கொண்ட மேற்கட்டுமானம் என்கிற அமைப்பைக் கொண்டது. அதாவது பொருளியல் அடித்தளத்தின் மேல்தான் எந்த ஒருபண்பாட்டு அமைப்பும் நிற்கமுடியும். அல்லது பண்பாட்டு அமைப்பு என்பது பொருளியல் அடித்தளத்தால்தான் உருவாக்கப்படுகிறது. முதலாளியம் 3 முக்கிய கட்டங்களில் தனது குறிப்பான பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டது.
1. சந்தை முதலாளியம் (market capitalism) - 18 துவங்கி 19-ஆம் நூற்றாண்டு இறுதிவரை - இக்காலகட்டத்தில் உருவான தொழில் நுட்பங்கள் அதாவது நீராவி எஞ்சின் போன்ற எந்திரங்கள் அதற்கான அழகியலாக உருவாக்கிக் கொண்டதே யதார்த்தவாதம். இதனை செவ்வியல் காலம் - classical age (before 18-th centuary) என்பார்கள்.
2. எதேச்சதிகார முதலாளியம் (monopoly capitaliam)-இது 19-ஆம் நூற்றாண்டின் இறதியிலிருந்து இரண்டாம் உலகப்போர்வரை- இது மின் மற்றும் மின்காந்த ஆற்றல் சார்ந்த தொழிற்நுட்பச் சாதனங்களை உருவாக்கியது. இது நவீனகாலம் modern age (after french revelotion - birth for renaisence என்கிற modernism காலமாகும்.
3. பண்ணாட்டு அல்லது நுகர்வு முதலாளியம் (multinational or consumer capitalism) - இது தற்காலம். இது மின்னணுவியல் மற்றும் உட்கருவியல் (eloctronics and nuclear technology) சார்ந்த தொழில்நுட்ப காலகட்டம். இதுவே பிறகான-நவீன காலம்-postmodern age (current period - starts with failure of 1968 students revolution in France).
இவையெல்லாம் ஐரோப்பிய சிந்தனை என்று நாம் ஜல்லியடிக்க முடியாது. காரணம், வெள்ளையர் ஆதிக்கம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவானதற்கு பிறகு உலகம் என்பது ஒரு பொதுமைப்படுத்தலுக்கு வந்துவிட்டது. அதனை உலகமயமாக்கல் என்பது தீவிரப்படுத்திவிட்டது. உலகச் சிந்தனைகளின் பாதிப்புகள் இல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் இல்லை. அதிலும் குறிப்பாக கணிப்பொறி யுகத்தில் அறிவு என்பது மிகச்சாதரணமாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு கடைவிரிப்பாக கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடையும் நிலையை அடைந்துள்ளது. அறிவின் தன்மை அதை அடையும் முறை ஆகியவை முற்றிலும் மாறியிருப்பதை உணரலாம். பிறகான-நவீனத்துவம் என்பது கனிப்பொறிக் காலக்கட்டத்தின் ஒரு கொட்பாட்டு வர்ணனை என்றுகூடக் கூறலாம்.
இன்றைய பின்காலனீயச் சூழலில் அமேரிக்க-ஐரோப்பிய மேலாண்மை என்பது பண்பாட்டு ஏகாதிபத்தியமாகவும், மறைமுகமாக உலக நிதிமூலதன அமைப்புகள் (IMF, World Bank and WTO, டங்கல் மற்றும் காட் ஒப்பந்தங்கள்) மூலமும் உலகை ஆண்டு வருகிறது. உலகெங்கிலும் தேசிய இனப்போராட்டங்கள், மத அடிப்படைவாதங்கள், சூழலியல் போராட்டங்கள், உலக பயங்கரவாதம் (Global Terrarisam) போன்றவற்றை இவை வளர்த்து வருகின்றன. இந்த உலகச் சூழலை எதிர்கொள்வதற்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வையோ தத்துவமோ இல்லை என்பதுடன் அப்படி ஒன்று சாத்தியமே இல்லை என்கிறது பிறகான-நவீனத்துவம். காரணம், நீட்ஷே கூறியதுபோல "நாம் கடவுளை கைவிட முடியும் என்று தோன்றவில்லை. காரணம் நாம் இன்னும் இலக்கணத்தை கைவிடவில்லை." கடவுள் இற்ந்துவிட்டார் என்று அறிவித்த நீட்ஷேதான் இதனையும் கூறினார். இலக்கணம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட மொழி. அதைதான் பெரியார் கறைபடிந்த மொழி என்றார். ஆக. இன்றைக்கான இலக்கண அமைதிகளாக கட்டமைக்கப்பட்ட உலகை அதன் கட்டமைப்பை புரிந்துகொள்வதே பிறகான-நவினத்துவத்தின் முயற்சி ஆகும்.
மனித குலத்தின் அதீத வளர்ச்சி தனது ஆதிக்க வெறியால் மிருகங்களைவிட கேவலமான இரண்டு உலக யுத்தங்களை நடத்தி மனிதகுலத்தை அழித்து ஓய்ந்தது. இனி மனிதகுலம் தழைப்பதற்கான மகிழ்வுடன் வன்முறையற்று வாழ்வதற்கான எந்த ஒரு அடிப்படை தர்க்கமும் இல்லை என்கிற சூழல். மனித விடுதலை பேசிய அனைத்து தத்துவங்களாலும் இப்பேரழிவுகளை தடுக்க முடியவில்லை. மனிதன் நம்பிக்கை கொள்வதற்கான எந்த மையமும் இல்லை. இதையே பிறகான-நவீனத்துவ சூழல் என்கிறோம். இதன்பொருள் பிறகான-நவீனத்துவாதி என்கிற நிலைப்பாட்டை யாரும் எடுக்கமுடியாது என்பதுதான். காரணம், பிறகான-நவீனத்துவம் என்பது ஒரு சமூகவடிவம். இதில் தனது தன்னிலையை மையமற்றதாக வைத்துக் கோள்ளும் தந்திரங்களை கண்டடைந்தவர்களே பிறகான-நவீனத்துவவாதிகள். இதில்தான் மனப்பிறழ்ச்சியாளர்கள் துவங்கி சித்தர்கள்வரை அடங்குகிறார்கள். மற்றபடி அழகியல்ரீதியான சோதனை முயற்சிகளில் ஈடுபடும் பிரதியில் செயல்பாடுகள் என்பது பின்-நவீனத்துவ நிலையே ஆகும். இது பிறகான-நவினத்துவ சமூக அமைப்பினை புரிந்து கொள்வதற்கான ஒரு மனத்தயாரிப்பு எனலாம்.
இந்த பிறகான-நவீனத்துவ சூழலை மார்க்சிய விமர்சகர்கள் ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட விளைவாக பார்க்கிறார்கள். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு போருடன், அதனை அழித்து ஒழிப்பதின் மூலமே சாத்தியம் என்கிறார்கள். ஆனால், பிறகான-நவீனத்துவ ஆதரவாளர்கள் மார்க்சியமும் ஒரு பெருங்கதையாடல் என்று அதன் முறைமைகளையும் மறுக்கிறார்கள். பிறகான-நவீனத்துவத்தை மார்க்சியத்திற்குள் வைத்து புரிந்து கொண்டு தங்களது உரையாடலை நடத்தும் மார்க்சிய அறிஞர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பிறகான-மார்கியர்கள் (post-marxist) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி நாம் விளக்கியவுடன் எழும் கேள்வி அப்போ இந்த விளக்கம் எல்லாமே ஒரு மையம்தானே. அதாவது "மையம் இல்லை என்கிற மையம்" என்பதாக. ஒன்றை விளக்கிவிட்டாலே அது மையம் உள்ள சிந்தனை என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது. அப்படி என்றால், மையமற்ற சிந்தனை என்பதை மொழியால் விளக்க முடியாததாகத்தான் இருக்கும். அப்படி ஒன்று சாத்தியமே இல்லை. மொழி என்பது ஒரு மனித உறுப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நினைவிழி மனம் என்பது மொழியால் அல்லது மொழிபோல கட்டமைக்கப் பட்டுள்ளது. (இங்கு நினைவிலி மனம் என்றால் என்ன என்பது குறித்து விரிவான புரிதல் அவசியம்.) வேறுவிதமாக கூறினால், நினைவிலி என்பதே மொழிதான். அல்லது மொழி நினைவிலியாக உள்ளது. அதனால் பேசப்படும் மொழி பேசாத மொழியால்தான் கட்டமைக்கப்படுகிறது. அல்லது பேச்சு என்பது நமது தன்னிலையின் தேர்வுப்பரப்பின் அடிப்படையில் பலவற்றை தேர்விலிருந்து விலக்கியே உருவாகுகிறது. இதைதான் பேசாப்பொருளை பேசுதல் என்பார்கள். பெருங்கதையாடல்களுக்கான காலம் மறைந்து விட்டதை அறிவிப்பதே பிறகான-நவீனத்துவ காலகட்டம் என்றால் மிகையாகாது.
ஆனால் இக்கருத்தை மறுக்கிறார் பிரடெரிக் ஜேம்சன் என்கிற மார்க்சியவாதி. பெருங்கதையாடல்கள் மறைவதில்லை, அவை மறைவாக இயக்கம் கொள்கின்றன என்றும் இம்மறைவியக்கத்தை அரசியல் நினைவிலி என்கிறார். சான்றாக, மார்க்சியம் என்பது பெருங்கதையாடல் என்றும் இன்று பெருங்கதையாடலுக்கான காலம் ஒழிந்துவிட்டது என்றும் கூறும்போது சுற்றிவளைத்து மார்க்சியம் காலவதியாகிவிட்டது என்பதுபோன்ற கருத்துநிலையே முன்வைக்கப்படுவதை அவதானிக்கலாம். ஆனால், மார்க்சியம் ஒரு அரசியல் நினைவிலியாக மாறிவிட்டது எனும்போது.. இன்றைக்கான அரசியல் என்பது மார்க்சியத்துடன் ஒரு உரையாடலை செயவதாகவும், மார்க்சியம் அந்த அரசியலை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கட்டுப்படுத்தும் ஒன்றாக சமூகத்தின் மொழி சார்ந்த நினைவில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே பொருள்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 2
பின்-நவீனத்தவமும் பிறகான - நவீனத்துவமும் - பேரண்டபட்சிகளின் கதைகூறல்கள் : பகுதி-1
- ஜமாலன்
மரத்தின் கீழ் உறங்கிய மதுராபுரி மன்னனுக்கு பட்ஷிகள் பாஷைகள் தெரியும் என்ற அறியாததால் அண்டரண்ட பட்சிகள் கூறத் துவங்கின... இவ்வாறாக... "கதைகள்தான் உலகை படைக்கின்றன". இன்று நாம்கானும் உலகு பல கதைகளால் புனையப்பட்டது. நெற்றைய உலகை வரலாறு என்கிற கருவிகொண்டு புனைவாக நினைவில் கொள்வதும், இன்றைய உலகை அதன் தொடர்ச்சியான உண்மையாக கொள்வதும் வாசிப்பினை நம்பி மயக்கமுறும் மனதின் வெளிப்பாடே. தனது வேர்களை தேடித்தேடி வீழம் மனித உடல்கள் இப்படியாக பல கதைகளின் புனைவுகளில் வாழ்ந்து சலித்து வருகிறது. வேதாளங்களின் புதிர்கதைகளால் உயிர் வாழ்ந்த விக்ரமாதித்தன்போல.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மண்டை வெடிக்கும் மரணபயத்துடன் தனது தோளில் வேதாளத்தை தூக்கித் திரிந்தபடி அது சொல்லும் கதையைக் கேட்கத் துவங்கினான். தனது கழுத்திற்கு நேராக நீட்டப்பட்ட வாளுடன் தனது சாவைத் தள்ளிப்போட 1001-அரேபியக் கதைகளை சொல்லத் துவங்கினாள் ஷகர்சாதி. இப்படியாக எத்தனையோ கதையாடல்கள் சாவிற்கு எதிரான சாட்சிகளாக இவ்வுலகு பற்றி விவரித்தன... அவற்றில் ஒரு கதையாடலே பிறகான-நவீனத்தவம் அல்லது பொதுவாக குழப்பத்துடன் அழைக்கப்படும் பின்நவீனத்துவம் என்பது.
முதலில் Postmodernism என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொல்லே தமிழில் உத்தர-நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்ற சொல்லால் பரவலாகக் குறிக்கப்படுகிறது. Postmodernity என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழிலும் இதே சொல்லே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டும் ஒரேபொருளைத் தரும் அல்லது பயன்படுத்தப்படும் சொற்கள் அல்ல. Postmodernism என்கிற சொல் Modernism எனப்படும் நவீனத்திலிருந்து கிளைத்து அதை மறுத்து உருவான பண்பாட்டுத்தளத்தின் அழகியல் செயல்பாட்டை குறிக்கும் சொல். அதாவது கலை, இலக்கியம் உள்ளிட்ட அழகியல் செயல்பாடுகளாக உருவான நவீனத்துவத்திலிருந்து அதை மறுத்து கிளைத்ததே Postmodernism என்கிற பின்-நவீனத்துவம். இது அழகியல் செயல்பாடுகளைக் குறிக்கும் ஒருசொல். Modernity என்பது நவீனக்காலத்தை குறிக்கும் சொல். இது ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதனை மறுத்து உருவானதே Postmodernity என்பது. ஒரு வேறுபாட்டிற்காக இதனை தமிழில் பிறகான-நவீனத்தவம் என்கிற சொல்லால் இங்கு நான் குறிக்கிறேன். அதாவது பின்-நவினத்துவம் என்பது அழகியல்கள் சார்ந்ததாகவும் பிறகான-நவினத்துவம் என்பது கோட்பாடுகள் சார்ந்ததாகவும் புரிந்துக்கொண்டு பயன்படுத்தப்படுகிறது.
பிறாகன-நவீனத்துவம் என்பது ஒரு சித்தாந்தமோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. அது ஒரு மையமிழந்த சமுகம் பற்றிய வர்ணணையே. பிறகான-நவீனத்துவம் என்பது ஒரு ஆய்வுமுறையும் அல்ல. அதற்கென கோட்பாட்டு பார்வை இருந்தால் மட்டுமே அதனை ஆய்வுமுறையாக பயன்படுத்த முடியும். பிறகான-நவீனத்துவத்தின் கோட்பாட்டு பார்வையாக ஒரு வசதிக்காக "இன்றைய உலகு "நவீனகாலம்" உருவாக்கிய பல நவீனதொன்மங்களால் கட்டப்பட்டுள்ளது" என்பதைச் சொல்லலாம். இதன்பொருள் 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டில் துவங்கிய நவீனகாலம் கண்டு அறிவித்ததே இன்றைய 'உலகு' எனலாம். அதற்கு முன்பு இருந்தது பல குடிகளின் சமூகங்களே தவிர அனைவருக்குமான "ஒரு உலகு" என்பது இல்லை. அதாவது சிதறுண்ட பல நிலங்களின் வசிப்பிடக் குடிகளும் பல்வேறு பிரபஞ்சம் மற்றும் உலகு பற்றிய பார்வைகளால் தங்களை ஒரு தனித்த உடல்களாக அல்லது உயிரிகளாக உணர்ந்திருந்தனரே தவிர இந்திய மனிதன் அல்லது இந்திய உடல் என்பதையும் ஐரோப்பிய மனிதன் அல்லது ஐரோப்பிய உடல் என்பதையும் ஒரே மனித உடலாக கருதியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால் நவீனத்திற்கு முந்தைய சமூகத்தில் உலகமோ அல்லது மனிதனோ இல்லை என்பதை உலகு மற்றும் மனிதன் என்கிற கருத்தாக்கம் இல்லை என்பதாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்கிற கணியன் புங்குன்றனாரின் கூற்றை நாம் இன்று உலகு தழுவியதாக புரிந்து கொள்கிறோம். காரணம் உலகு பற்றிய நமது புரிதலி்ல் உள்ள நவின சொல்லாடலால் கட்டப்பட்ட அறிவே அதற்கு காரணம். நாம் புரிந்து கொள்ளும் சங்ககாலம் என்பது நமது அறிதலில் உள்ள சங்ககாலமே தவிர.. அன்று வாழந்த சங்ககால மக்கள் பற்றியது அல்ல. அது நமக்கு தேவையும் இல்லை. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது நாம் "உண்மையாக" நம்பி உள்ளவை "உண்மைகள்" அல்ல. அது ஒரு வரலாற்றுரீதியான புனைவை அடிப்படையாகக் கொண்டதே. அல்லது அது ஒரு எடுத்துரைப்பு அல்லது கதைகூறல் (narration) எனலாம்.
எனவே, பிறகான-நவீனத்துவம் என்பது இவ்வாறக "உண்மைகள" உருவாக்கும் அல்லது "உண்மை"களைத் தேடும் "உண்மைத்தேடி மற்றும் உண்மை" சார்ந்த தத்தவங்களை மறுக்கிறது. அதனால் அது எந்த ஒரு மையமான கோட்பாட்டையும் மறுக்கிறது. இப்படி மறுப்பதால் ஒரு முறைப்படுத்தப்பட்ட ஆய்வுமுறையையும். உலக்கபார்வையையும் மறுக்கிறது. உதாரணமாக பெரியாரியம். அது பிரதியை பகுத்தறிவு அடிப்படையில் அலசும் ஒரு ஆய்வுமுறையை நமக்குத் தருகிறது. மார்க்சியம் - பிரதியை சமூகத்தின் வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்யச் சொல்கிறது. அமைப்பியல்- பிரதியின் உள் இயங்கும் பல அமைப்பு மையங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுமுறை. அதாவது, மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்காரியம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் ஒரு அமைப்பு ஒழுங்காக கருதி பிரதிக்குள் அப்பார்வைகள் எப்படி அமைவுருகின்றன என்பதை ஆய்வு செய்வதே அமைப்பியலாகும்.
அமைப்பியல்வாதம் உலகலாவிய அனைத்து சிந்தனை முறைகளிலும் உள்ள அமைப்பை கண்டு அறிவித்தது. அதாவது எந்த ஒன்றையும் ஒரு அமைப்பிற்குள் வைத்துதான் மனித மனம் புரிந்து கொள்ள முடியும். அர்த்தம் என்பது அமைப்பிற்குள் அமையும் உறவின் வழியாகவே உருவாகுகிறது என்கிறது அமைப்பியல். இவ்வுறவு வித்தியாசங்களின் வழியே கட்டமைக்கப்படுகிறது. சான்றாக, மரம் என்பது மரம் அல்லாத பிற பொருட்களின் உடன் உருவாகும் வித்தியாசத்தால்தான் அர்த்தமாகிறது. ஒருபொருளை குறிக்க மற்றொருபொருள் இருப்பதால்தான் அவசியமாகிறது. முதல்பொருளிலிருந்து உருவாகும் வித்தியாசமே இரண்டாவது பொருளை தனித்துவமானதாக ஆக்குகிறது. ஒரு பொருள் பிற பொருளுடன் கொள்ளும் வித்தியாசத்தால்தான் அர்த்தம் உள்தாக ஆகிறது. இந்த "பிறராதல்" என்பதையே லக்கான் ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கிறார்.
அதாவது மரம் என்பது செடி அல்ல, சட்டை அல்ல, போன்ற இன்னபிற உலகலாவிய அனைத்து பொருட்களுடன் இல்லை என்கிற எதிர்மறை உறவைக் கொள்வதன் மூலமே மரமாக குறிக்கப்படுகிறது. அல்லது மரம் என்பது மற்ற பொருட்களுடன் கொள்ளும் வித்தியாசமான உறவில்தான் அதனை தனித்து நம்மால் உணரமுடியும். இச்சொல்லின் அர்த்தம் இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் அது அமையும் அமைப்பிற்குள்தான் அர்த்தமாகிறது. அதாவது இச்சொல் மரம் என்கிற மரத்தை குறிக்கும் அதே வேளையில் மரச்சாமான்கள் செய்யும் மூலப்பொருள் துவங்கி, இலக்கிய குறியீடுகளில் "மரமாய் நின்றான்" என்பதான எண்ணற்ற அர்த்த சாத்தியங்களையும் கொண்டது. அடிப்படையில் மரம் என்பது ஒரு குறியாக உள்ளது. இது மனித மூளையில் நிகழும் குறித்தல் என்கிற செயல்பாடால் அர்த்தமாகிறது.
ஆக, மொழியியல் வழியாக உருவான இச்சிந்தனை மனித மூளை என்கிற அமைப்பில், மொழி ஒரு பிரத்யேக செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது அல்லது மொழி என்பது மூளையின் ஒரு உருப்பமைவாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டியது. ஐம்புலன்களைப்போல மொழி என்பதை ஆறாவது புலனாக கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து. மொழி என்பது மூளையின் ஒரு பிரத்யேகச் செயல்பாடாக அல்லது மூளையின் ஒரு பகுதியாக உள்ளது என்கிறார் சாம்ஷ்கி. இச்சிந்தனை முறைகளுக்கு மொழியியல் கொள்கை அதுவும் சசூர் என்கிற ஸ்வீடிஸ் மொழியியலாளரால் முன்வைக்கப்பட்ட அமைப்பு மொழியியலே அடிப்படை. ஆக, அமைப்பியம் எல்லாவற்றிற்கும் அமைப்பு என்கிற ஒரு மையத்தை கண்டு அறிவித்தது.
பிறகான-அமைப்பியம் என்பது அமைப்பியம் முன்வைத்து உலகலாவிய அமைப்புகள் என்பதன்மீதான விமர்சனமாகத் துவங்கி... இவ்வமைப்புகள் அதிகாரத்தின் மையமாக இருப்பதாக அறிவித்தன. இம்மையங்களை சிதைப்பது, அழிப்பது அல்லது மறுப்பது என்பதன் வாயிலாக மையமற்ற சிந்தனையை முன்வைத்தன. இம் மையமற்ற சிந்தனை பல அறிவுத் துறைகளிலும் கிளைத்து பரவியது. அக்கிளைகள் அதிகாரம் பற்றிய சொல்லாடல் ஆய்வாக பூஃககோவிடமும், அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் பற்றிய ஆய்வாக லக்கானிடமும், சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு (deconstruction என்பதற்கு இத்தனை வார்த்தைகள் தமிழில் ஏன் என்றால் அதன் ஆய்வு முறையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்தான்) என்பதாக தெரிதாவிடமும், வாசகமைய விமர்சனமுறையாக ரோலான் பார்த்திடமும் கிளைத்தன. மார்க்சிய அடிப்படையில் அமைப்பியலை பின் அமைப்பியல் தளத்திற்கு நகர்த்தியவர் பூஃக்கொவின் பேராசியராக இருந்த லூயி அல்தூஸர் ஆவர்.
அதாவது, சிதைவாக்கம் என்பது ஒரு பிரதிக்குள் மையமாக இயங்கும் ஒரு முரணில் ஆதிக்கம் வகிக்கும் ஒருகூறு பிறிதொரு கூறை வெளிப்படுத்தாமல் அதாவது பிரசன்னப்படுத்தாமல் ஒடுக்கிவைக்கும். ஆதிக்க கூறை தலைகீழாக்குவதன் மூலம் ஓடுக்கப்பட்ட கூறுக்கான வெளியை திறந்துவிடுவது. இது பிரதியின் மையமான அர்த்தத்தை பிரச்சனைப்படுத்திவிடும். அதாவது பிரதி தனது மைய அர்தத்தை இழந்துவிடும். பிரதியை சிதைத்து மறு ஆக்கம் செய்வதுதான் சிதைவாக்கம் அல்லது தகர்ப்பமைப்பு என்பது. எளிமையான ஒரு உதாரணமாக எனது புரிதலைத் தருகிறேன். "இந்தியா என்பது ஒரு தேசியம்" என்கிற வாக்கியத்தில் உள்ள "ஒரு தேசியம்"என்பது "பல தேசியம்" என்கிற சொல்லின் மேல்தான் நிற்கிறது. இந்த ஒரு தேசியம் என்கிற அமைப்பிற்குள் பல தேசியங்கள் இருப்பதை இச்சொல்லானது மறைக்கிறது அல்லது மறுக்கிறது. உண்மையில் பல தேசியங்கள் இருப்பதால்தான் இந்த ஒரு தேசியம் என்கிற சொல்லாக்கமே வருகிறது. ஆக, இந்த வாக்கியம் ஒரு தேசியத்தை முன்மொழியும் போக்கில் அதற்குள் உள்ள பல தேசியத்தை மறமுகமாக வழிமொழிவதாக மாறுகிறது. இந்த வாக்கியத்தின் உண்மையான பொருள் இந்தியா என்பது பல தேசியங்களைக் கொண்டது ஆனால் இதை சொல்பவர் அதை மறுத்து தனது அரசியல் கூற்றாக இதனை முன்வைக்கிறார் என்பதால் இந்த வாக்கியம் உண்மையை சொல்வதில்லை மாறாக ஒரு உண்மையை கட்டமுனைகிறது. இந்த உண்மையை தகர்ப்பதன் மூலம் அல்லது கட்டவிழ்ப்பதன்மூலம் அதன் எதிர்நிலைகளை முன்வைக்க முடியும். இது எளிமையான உதாரணம். பண்டைய தத்துவங்கள் மதங்களின் பிரதிகளை இந்த முறையில் கட்டுடைப்பதன்மூலம் அதற்கு எதிர்நிலையான ஒரு அமைப்பை வெளிக்கொண்டுவர முடியும் என்பதே தகர்ப்பமைப்பின் அல்லது சிதைவாக்கத்தின் அடிப்படை எனலாம்.
பிரதி என்றவுடன் எழுதப்பட்ட இலக்கியவகைமை மட்டுமல்ல. எல்லாமே பிரதிதான் என்பதுவே பின் அமைப்பியலின் நிலைப்பாடு. மனிதன் என்கிற கருத்தாக்கம்கூடஒரு பிரதிதான் என்கிறார் பூஃக்கோ. மனிதன் என்பது கூட 19ஆம் நூற்றாண்டு என்கிற செவ்வியல்கால கண்டுபிடிப்பு என்கிறார். இதன்பொருள் செவ்வியல் காலம் என்கிற 19-ஆம்நூற்றாண்டிற்கு முன்பு மனிதன் என்கிற பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் இல்லை. அதற்கு பகரமாக மனித உடல்களை குறிக்கும் பல சொல்லாடல்கள் இருந்தன. உதாரணமாக அடிமை, ஆண்டான் அல்லது சாதிய அடையாளப் பெயர் இன்னபிற...
மனிதன் என்பவனது உடலில் அவனது தன்னிலை (சஃப்ஜெக்ட்) எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒரு உடலானது ஆதிக்கத்தை ஏற்கும் அல்லது எதிர்க்கும் உடலாக எப்படி கட்டமைகிறது? அதன் தன்னிலை உருவாக்கச் செயல்பாடுகள் எப்படி இயக்கமடைகின்றன? என்பதை லக்கான் பிராய்டியத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கிறார். இவரின் கூற்றப்படி மனித உடலின் ஆழ்மனம் என்பது ஒரு மொழியைப்போல கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் சிந்திப்பதும் அல்லது உணர்வுதும் ஒரு மொழியில் நிகழ்வாக அல்லது ஒரு உள் பேச்சாக நமக்குள் நடைபெறுவதை நாம் அனுபவபூர்வமாக உணரமுடியும்.
இப் பிறகான-அமைப்பியலின் முறையியலை அதாவது மையமிழப்பை அல்லது மையமழிப்பை பிறகான-நவீனத்துவ விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை முன் கொண்டு வருகிறார்கள். பிறகான-நவீனத்துவ படைப்புகள் இம்மையமிழந்த சமூக அவலம் பற்றிய விவரணைகளை வெளிக் கொண்டுவருகிறது.
இதுவரையிலான மனிதனை உய்விக்க வந்ததாகக் கூறிக் கொண்ட தத்துவங்கள் துவங்கி மனிதவிடுதலைக் குறித்து நவீன உலகில் கதைத்த இஸங்கள்வரை எல்லாம் மனித நிலைபாடுகள் குறித்த பொதுவான மையங்களைக் கொண்டு பேசப்பட்ட கதையாடல்களே. இக்கதையாடல்களை பெருங்கதையாடல்கள் என்கிறார்கள் பிறகான-நவீனத்துவவாதிகள். இனி சாத்தியமானது இம் மையமிழந்த மனிதனின் அல்லது இவ்வுலகின் சிறுகதையாடல்களே என்கிறார்கள். இதன் நீட்சி இனி ஆதிக்கத்திற்கு எதிரான உலகலாவிய பெரும் போராட்டங்கள் புரட்சிகள் சாத்தியமில்லை localized போராட்டங்களே அல்லது கலகங்களே சாத்தியம் என்பதாகும். பெருங்கதையாடல்கள் உருவாக்கும் புரட்சி அல்லது சமூக மாற்றங்கள் மீண்டும் ஒரு அதிகார மையமாக மாறி மனிதகுலத்திற்கு பெரும் அழிவைக் கொண்டுவரும் என்பதே.
மார்க்சியரான சமீர் அமீன் போன்றவர்கள் பிறகான-நவீனத்துவம் என்பது உலக நிதிமூலதனக்குவியல் மற்றும் உலகமயமாக்கலின் விளைவால் வெளிப்படும் ஒரு கோட்பாடே. இது இயல்பிலேயே எதிர்புரட்சி தன்மை வாய்ந்தது என்கிறார்கள். உலகை நவீனத்தொன்மம் என்கிற புனைவடிப்படையில் பார்க்கும் பிறகான-நவீனத்திற்கும் இந்திய சங்கர அத்வைத மாயாவாதத்திற்கும் குவாண்டம் எநத்திரவியலின் ஹைஷன்பஃர்க் நிச்சயமின்மைக் கோட்பாட்டிற்கும் (uncertinity principal) இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை அறியமுடியும். இதனை இதன் கொண்டு எப்படி பார்ப்பது என்பது அவரவர்கண் விடப்படுகிறது. நிற்க.
இக்குறிப்புகள் எளிமை கருதி சுருக்கமாக கூறப்பட்டவை, விரிவாக பேச இதில் எண்ணற்ற விஷயங்கள் இருப்பதாகக் கூறியபடி தனது கதைகளை கூறி முடித்த அண்டரண்ட பட்சி... பேரண்டமும் வியாபிக்கும் தனது இறக்கைகளை விரித்தபடி பறக்கத் துவங்கியது. கனவுபோலவே இதனைக் கேட்ட மதுராபுரி மன்னன் பரக்க பரக்க விழித்தபடி எழுந்து அமர்ந்தான, இதனைப் படிக்கும் ஒரு வாசகனைப்போல...
ரொம்ப தலைசுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல...
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - அறிமுகம்
கூத்தலிங்கம் - அறிமுகம்
குழந்தைகளுக்கு கதைச்சொல்லல் என்கிற நிகழ்வுக்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் உள்ள படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக பங்காற்றியவர். குழந்தைகளுக்கான அயல் தேசத்து நாட்டுப்புற கதைகள் மொழிபெயர்த்து புத்தகமாக வெளி வந்திருக்கிறது. புதிய பார்வை இதழின் இணையாசிரியராக பங்காற்றியவர். இலக்கிய உலகில் சிறுகதை, கவிதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என பல முகங்களின் சொந்தக்காரர்.
தற்போது குமுதம் நிறுவனத்தின் தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றி வருபவர்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - 1
உரையாடிகள்
- ஜமாலன்
புழுக்கம் தாங்கவில்லை என
சன்னல்களை திறக்க திறக்க
திரைகளில் அடர்கிறது
பல மூச்சுக் காற்றுகள்..
காற்றின் வாசனைகளால்
காதலிகளை அறிவதற்கு
கற்க வேண்டியுள்ளது நிறைய..
நெற்றிவகிடிலிருந்து உன்னை
இரண்டாக கிழிக்கத் துவங்கிய
எலிப்பல்லின் கூர் முனைப்பட்டு
கதறுகிறது உனது உதடுகள்.
உறவுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல என்றேன்
உணர்வுக்கு அது அவசியமில்லை என்றாய்
விரைப்புடனும்
வியர்வையுடனும்
எத்தனை நாளைக்கு?
பேச்சில் மைதூனம் என்றாலும்
அதுவும்
பேரின்பம்தானே என்றான்
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.
****************************
வார்த்தைகள்
- ஜமாலன்
திரையின் நீர்மப் படிகப் பரப்பில்
சிதறிக்கிடப்பவை
உரையாடல்களல்ல.
கலைத்தலுக்கும்
கலவிக்கும்..
எஞ்சிய..
வார்த்தைகளால் கீறப்பட்ட
வலிகளின் பிசுபிசுப்பு.
நகல் உடல்களில்..
காமம் -
காவித்திரியும்
மின்பரப்பில் கீறப்பட்ட
முற்றுப்பெறா தாகங்கள்.
படபடக்கும் வேதனைகள்
படமெடுக்கும் தருணத்திற்காக
சொற்களுக்குள் நாகமென
சுருண்டிருக்கிறது.
மின்னுணர் வெளியில் நடக்கும்
மின்னுடல்கள் ஆட்டத்தில்
உணரவோ? உரைக்கவோ?
ஒன்றுமில்லை..
இந்த போதையின் எக்களிப்பு
தோல்வியின் இதம்தரும்..
தொல்மனதின் களிப்பிற்காக
என்றான்...
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - அறிமுகம்
ஜமாலன் - அறிமுகம்
ஜமாலன் புனைபெயர்தான். இயற்பெயர் ஜாகிர் உசேன். சொந்தஊர் குடந்தை அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்கிற பேரூராட்சி. படித்தது முது அறிவியல் இயற்பியல் (M.Sc. Physics). காதலித்தது இயற்பியலை, கட்டிக்கொண்டது கணிப்பொறியை, எப்பொழுதும் கள்ளக்காதல் இலக்கியத்துடன்தான். விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதுதான் கனவு, மெய்ப்பட்டதோ கணிப்பொறி குமாஸ்தா? அதுவும் அரேபியா எனும் அந்நிய மண்ணில். அரேபியாவில் தோல்வியான 16-வது ஆண்டு. 10-ஆண்டுகள் "தனிமையின் இசை", துணையற்ற உடல் வாதைகள் எழுத்துக்களாய் கொப்பளித்த காலங்கள். கடந்த 6-ஆண்டுகளாக குடும்பத்துடன் கும்மிதான், உப்பு, பருப்பு என. கஷ்டப்பட்டும் உழைக்கவில்லை, இஷ்டப்பட்டும் உழைக்கவில்லை, வாழ்க்கையை நஷ்டப்பட்டுதான் உழைக்கிறேன். சொல்வதற்கு ஒன்றுமில்லை, சுவாசிக்கிறேன் என்பதைத்தவிர, யாரோ எழுதிய கவிதை வரிகள்.
80-களுக்குப் பிறகான சிறுபத்திரிக்கை உலகுடன் தொடர்பு. நடத்திய பத்திரிக்கைகள் 9-ஆம் வகுப்பில் தேனி கையெழுத்துப் பத்திரிக்கை - சக ஆசிரியை காதலியனாதால் 2-வது இதழில் நின்றுபோனது, +2ல் திசைகள் கையெழுத்துப்பத்திரிக்கை, கல்லூரி முதலாம் ஆண்டில் ஜனகனமன உருட்டச்சிதழ், 2-ஆம் ஆண்டில் விடிவு அச்சிதழ், காதலிக்கு கல்யாணகுமார் பாணியில் அச்சதைப்போட்டுவிட்டு, தாடி வளர்த்து, வேறொரு பெண்ணை காதிலித்து கல்யாணம் செய்து கொண்டு சவுதி வந்த பிறகு காலக்குறியில் தொடர்ந்து எழுத்துப்பணி. அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை தொகுத்து நண்பன் காலக்குறி ஆசிரியர் கான் தொகுத்து "மொழியும் நிலமும்" என்கிற நூலாக 2003-ல் வெளியிட்டான். மார்க்சிய அரசியலில் நம்பிக்கை உண்டு. புதிய சிந்தனைத் துறைகளான பின்காலனீயம், அமைப்பியல், பின்-அமைப்பியல் மற்றும் பின்-நவீனத்தும் ஆகியவற்றை குறித்த படிப்பும் அறிந்து கொள்வதற்கான ஆர்வமும். அவற்றை மார்க்சீய எல்லைக்குள் கொண்டுவந்து புரிந்துகொள்ள முயல்வதும். இந்திய தத்துவஞானத்தில் ஈடுபாடு உண்டு. எதிர்காலத் திட்டம் உடலரசியல் குறித்த ஒரு முழுமையான நூல் எழுதுவது.
என்னைக்குறித்து நானே சொல்வது என்பது என்னைக்குறித்து பிறர் என்ன எண்ண வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடே. ஆக, இவ்வறிமுகம் என்னைப் பற்றியதல்ல, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்கிற எனது ஆசையே. ஏனென்றால் சுயம் என்று ஒன்று இல்லை. சுயம் என்பது பிறறால் அல்லது மற்றமையால் கட்டப்படுவதால், எனது சுயம் என்பது மற்றமையான உங்களால் கட்டமைக்கப்படுவதே. அத்தகைய முயற்சியே இவ்வறிமுகம்.
பொதுவாக, வாசகர்களைக் கவரக்கூடியதல்ல எனது எழுத்துமுறை என்றாலும் ஒருசிலரது வாசிப்பையாவது இவை பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது
பதிவு செய்தது : பண்புடன் at 1 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்