பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - அய்யப்ப மாதவன் - 1

மழைக்காலம்
- அய்யப்ப மாதவன்

தூறல் மழை அடைமழை வராத காலத்தில்
சுவரின் சன்னல் வழியே பொட்டுப் பொட்டாய்
சிதறிய போது பசி பொதிந்த உடல்
நிறைந்தது மழையின் ஞாபகங்களாய்
குடையற்ற பொழுதுகளில்
நீர் கரைத்து நீராய் சாலையில் ஓடியிருந்தேன்
சுமை அழுத்திய வருடங்களில்
பொத்து ஒழுகும் வானம்தான் ஆறுதல்
அதன் கண்ணீர் என் கண்ணீர்
ஏன் என்று தெரியாத வயது
வானம் போல் ஒழுகுவது
பிடித்திருந்தது

விரிந்த பொட்டல்களில்
யாருமற்ற ஒரு அநாதைச் சிறுவனாக
தெருக்களில் திரிகையில்
திடீரென உடைத்துக் கொள்ளும் வான்வெளி
இமைகளில் படர்ந்து உள்ளுக்குள்
பட்டாசு கொளுத்திப்போடும்
உடல் பிடித்து நடந்து போகும்
துளிகளுக்குள் மறையும் பொற்காலத்தில்
பொன்பொருள் நிறைந்தவனாவேன்
தின்று திரியும் மனிதக்கூட்டத்தில்
ஒன்றுமறியாச் சிறுவனாய்
ஒரு அபலையாக வெகுளியாக
மழையிடம் சினேகம் வைத்திருந்தேன்
மழை எனக்குள் பெய்வது
மழைக்குள் நான் நுழைவது
சகஜம்.

0 பின்னூட்டங்கள்: