பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 2

அளம்

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/ffed8600743beba7/712f79bd81d252c7?lnk=gst&q=%E0%AE%85%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D#712f79bd81d252c7

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள் என்பவர்களின் இலக்கிய எல்லையாக இதுவரை நான் கருதியது அவள் விகடன், கண்மணி, பாக்கெட்நாவல் போன்றவைதான். குடும்ப உறவுகளை விட்டால் வேறெதுவும் எழுத தெரியாத உப்புசப்பில்லாத கதைகளின் உற்பத்தியாளர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப சிவசங்கரி அனுராதாரமணன் போன்ற எழுத்தாளர்களின் வாசிப்பில் உணர்ந்ததுதான்.ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கு ஒரு தனி அடையாளம், எழுத்து நடை இருப்பதை உணர்வது போல அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரே நடையிலிருப்பதை உணரலாம். தொழில் ரீதியாக நாவல்களை எழுதுகிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். எழுத்து என்பது ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும் என்ற நாஞ்சில் நாடனின் வார்த்தைகளை நம்புகிறேன்.

என்றாவது ஒருநாள் இக்குறைகளை தீர்ப்பது போல நம் பெண்கள் படைப்புகள் இருக்கலாம் என்று உள்ளுக்குள் எண்ணியிருந்தேன். அதற்கு தீனி போடுவது போல அமைந்த வாசிப்புதான் தமிழ்ச்செல்வியின் அளம். அளம் என்பது உப்பளத்தை குறிப்பது. முதலில் குழம்பிப்போனேன். என் வட்டாரத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத வார்த்தை இது.


"மாணிக்கம்", "அளம்", "கீதாரி", "கற்றாழை" என நாண்கு நாவல்களை தமிழுக்கு அளித்திருக்கும் சு.தமிழ்ச்செல்வி சமகால பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இவரது "மாணிக்கம்" நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றது. இவரது படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள் தேட வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை திரும்பாத நிலையில் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் சுந்தராம்பாள் எனும் எளிய தாயின் போர்க்குணத்தை காவியத்தன்மையுடன் விவரிக்கும் கதைதான் "அளம்" வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது,
சுந்தராம்பாள் என்ற தாய் வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் என்ற தனது மூன்று மகள்களை தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்க என்னென்ன சிரமப் படுகிறாள் என்பதுதான் மொத்தக்கதையும். பொதுவாகவே கதையின் உரையாடல்கள் அம்மண்ணின் பேச்சு வழக்கில் அமைவதுதான் பெரும்பாலாக கதைகளின் வெற்றி. அவ்வகையில் இந்நாவல் பூச்சுகளில்லாத அசல் கிராமத்து மண்ணின் வாசம்.

நாள் நட்சத்திரம் பார்த்து நமக்கு என்னதான் பெயர் வைத்திருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள் அதைப்போல இந்நாவலின் முக்கிய பாத்திரமான சுந்தராம்பாளின் மகள்களை பெரியங்கச்சி, நடுத்தங்கச்சி, சின்னங்கச்சி என்றே கதை முழுக்க இந்த பாத்திரங்கள் அழைக்கப்படுகின்றன. "ம்பாள்" என்றே எல்லா பெயர்களும் முடிவதால் வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதை தவிர்க்கவே இந்த உத்தி என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே அர்த்தம். கவனமான வாசிப்பிலும் முதலில் பெயர்க்குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

"மோரயப்பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி தள்ளிகிட்டு நிக்கி சனியங்" என்று பெற்றவனே மகளின் மீது எந்நேரமும் வெறுப்பை உமிழ்கிறான். இப்படி நாவல்முழுக்க அம்மண்ணின் பேச்சு வழக்கே நிறைந்திருப்பதால் வாசிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் அதுதான் இந்நாவலின் ஜீவன்.

ஒருவேளைக்கும் போகாத சுந்தராம்பாளின் கணவன் சுப்பையாவின் வாழ்க்கையில் கப்பல்கார ராமையாபிள்ளை என்பவர் சுந்தராம்பாளின் குடும்ப சிக்கலை எண்ணி சிங்கப்பூர் அழைத்து செல்கிறார். அங்கு சென்று சுப்பையன் காணாமல் போகிறான். கடைசிவரை அவன் ஊருக்கே திரும்பவில்லை. கப்பல்கார ராமையா ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் தன் கணவன் பற்றிய தகவல் அறிய செல்லும்போது நமக்கே எரிச்சலாக இருக்கும்.

இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம் ஆனால் கருவாச்சி காவியம் சினிமாத்தனமானது. ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. எல்லாமே சுவாரசியங்களுக்காக திணிக்கப்பட்ட சம்பவங்களின் கோர்வையாக கருவாச்சி காட்சியளிப்பாள். சுந்தராம்பாளின் வாழ்க்கைப் பாதையில் துன்பங்களும், வருத்தங்களும் ஏராளமாக இருந்தாலும் எதுவுமே திணிக்கப்பட்டது போல தோன்றவில்லை.

புயலும், புயலுக்கு பின் வரும் வறுமையும் ஒவ்வொருமுறை விதைக்கும்போதும் இயற்கைக்கு பறிகொடுக்கும் சோகம் கதையாக இருந்தாலும் மனசு வேதனைப்பட வைக்கிறது. நாவல் முழுக்க ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தாலும் ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையில் மணமுடித்துக்கொடுத்த மூத்த பெண் வடிவாம்பாளின் மணவாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்துவிட வாழாவெட்டியாக வீட்டிற்கு வருகிறாள். இரண்டாவது மகளும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு கணவனால் துரத்தப்பட்டு வீட்டுக்கு வருகிறாள். ஒரே வீட்டில் மூன்று திருமணமான வாழாவெட்டிகளால் கடைசிப்பெண்ணான அஞ்சம்பாளுக்கு வரன் அமைவதில் சிக்கல். அவளுக்கும் பூச்சிக்கும் மட்டுமே தெரிந்த நிறைவேறாத அந்த காதல் அழகு. காதல் என்ற வார்த்தையைக் கூட உபயோகப்படுத்தவில்லை.

இக்கதையை வாசிக்கும் நேரத்தில் உங்களது எண்ணங்களும் சற்று பின்னோக்கி அந்தக்கால கிராமமான கோயில்தாழ்விற்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது போன்று உணர்வீர்கள். அழுத்தமான கதையை விரும்புவோர் தாராளமாக ஒருமுறை வாசிக்கலாம்.
நூலின் பெயர்: அளம் ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி மருதா பதிப்பகம் விலை இந்திய ரூபாய் 100.
வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி அய்யனாருக்கு கொடுத்த ஆசிப்புக்கும் நன்றி.

உமா கதிர்

0 பின்னூட்டங்கள்: