பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - அய்யப்ப மாதவன்

கவிஞர் அய்யப்ப மாதவன் - அறிமுகம்

சிவகங்கை மாவட்டம்- நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கவிஞர் மீராவின் 'அன்னம்' பதிப்பகத்தின் மூலம் இலக்கியம் அறிமுகமாகி இலக்கியத்திற்குள் வந்தவர். முதலில் தமிழில் ஹைகூ கவிதைகளால் பாதிப்படைந்து 'தீயின் பிணம்' என்ற முதல் நூலை தான் சொந்த பதிப்பில் 'அன்னம்' பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்.


அதன் பிறகு ' மழைக்குப் பிறகும் மழை' என்ற நூலை 'அகரம்' வெளியீடாக கொண்டுவந்தார். பிறகு நவீன கவிதையின் தாக்கத்திற்குட்பட்டு அதுமாதிரியான கவிதைகள் எழுதத் தொடங்கி, ' நானென்பது வேறொருவன்' என்ற நூலை அகரம் வெளியீடாக கொண்டுவந்தார். இந்த நூல் நவீன தமிழ் கவிதை உலகில் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது. பிறகு வரிசையாக ' நீர்வெளி' என்ற நூல் ' அகரம்' வெளியீடாக வந்தது.


' பிறகொருநாள் கோடை' என்ற கவிதை நூல் அவரின் மொத்த கவிதைகளின் தொகுப்பாகவும் பல புதிதான கவிதைகளுடனும் வெளி வந்தது. இந்த நூல் வந்தபொழுது ' இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் எடுத்து வெளியிட்டார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்சமயம் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக ' எஸ். புல்லட்' என்ற கவிதை நூல் வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


இப்பொழுது சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். மொத்தம் இதுவரை எழுதிய ஏழு கதைகளில் நான்கு கதைகள் வெளியாகிவிட்டன. வருகின்ற சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி அவருடைய சிறுகதை தொகுப்பு ஒன்றும், கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளிவரவிருக்கிறது. இது தவிரவும் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.


இவர் சினிமாத் துறையில் இயக்குனராகும் முயற்சியிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டு அது சார்ந்த திரைக் கதைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

0 பின்னூட்டங்கள்: