பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 7

மரணமில்லா வாழ்வு வையகத்தில் உண்டா?


- மதுமிதா





மரணமில்லா பெரு வாழ்வு வாழும் உயிரினம் உள்ளதா உலகில்?


ஆமாம்.பொய்யில்லை.உண்மை.உள்ளது.



உலக உயிரினங்களின் இயற்கை நியதி எது?


ஜனனம்,வாழ்க்கை,மரணம்.



எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான விதி இது.



எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன,வாழ்கின்றன,மடிகின்றன.



மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் எப்போதும் மரணத்தை நோக்கியே செல்கிறது.மரணத்திற்கு முன் சந்ததிகள் வடிவில் வாழ இனப்பெருக்கம் இயல்பாய் நிகழ்கிறது.மரணம் நிச்சயம் என்பது மனிதர்கள் அறிந்தது. எனவே தான் சில மனிதர்கள் வாழ்வு முடியும் முன்பே நன்மை செய்து புண்ணியம் சேர்க்க நினைக்கின்றனர்.எனினும் சில மனிதர்கள் இருப்பது சில காலம் எப்படியேனும் வாழலாம் என்று பிறருக்கு துன்பம் சேர்க்கும் தீமையை மனமறிந்து செய்து விடுகின்றனர்.



மார்க்கண்டேயன் போல் மரணம் வென்றவர்கள் யாரேனும் இன்னும் இங்கே இருக்கின்றனரா?மரணம் இல்லையென்றால் இவ்வுலகம் தாங்காது.மரணத்திற்கு ஏழை,பணக்காரன்,ஜாதி,மத பேதம்,தலைவன்,தொண்டன்,படித்தவன்,படிக்காதவன்,அறிவாளி,முட்டாள்,கலைகளில் தேர்ந்தவன்,மூடன் என வேறுபாடு எதுவும் தெரியாது.



மரணம் என்பது இருப்பதாலேயே உலகம் நன்மை,தீமைகளை சரி செய்து சமச்சீராய் இயங்கிக்கொண்டிருக்கிறது.மரணம் இல்லையென்றால் கல்லறை,சமாதி,சுடுகாடு எதுவும் இருக்காது.(சுடுகாட்டு ஊழல் தோன்றியிருக்காது.)



இட பிரச்சினை காரணமாக எளிதாக கையில் கிடைக்கும் அஸ்தி அளிக்கும் எலக்ட்ரிக் சுடுகாடும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது.





தாஜ்மஹால், எகிப்து பிரமிட் எதுவும் இல்லாது போயிருக்கும்.



சரி விஷயத்திற்கு வருவோம்.


மரணமில்லா வாழ்வு வையகத்தில் உண்டா?


ஆமாங்க.ஆமாம்.


மரணமில்லா வாழ்வு இருக்கிறது.புருடா இல்லை.


உண்மையா?


ஆமாம்.



மரணம் என்பதே இல்லாது கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினம் உலகில் உள்ளது.அப்படி சாகாமலிருக்கும் வழியிருந்தால்,நாமும் அந்த உயிரினம் போல் மரணமில்லாமல்,என்றுமே சாகாமல் இருக்க இயலாதா?



முடியாது. இயற்கை நமக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை.



அப்படியென்றால் அந்த உயிரினம் எது?


அமீபா



சாவே இல்லாமல் வாழ்ந்துவரும் உயிரினங்களில் ஒன்று ஒரு செல் உயிரினமான 'அமீபா'வேறு சில ஆரம்பகால உயிரினங்களும் இருக்கின்றன.



ஆனால் அவை தோன்றியது முதல் இன்று வரை சாகவில்லை என்று எப்படி கூற முடியும்?
அமீபா இனப்பெருக்கம் செய்யும் தன்மையைக் கொண்டு இப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. புரோட்டோஸோவா பிரிவைச் சேர்ந்த உயிரினங்கள் இப்படியே பிரிகின்றன.மரணமில்லா வாழ்வு வாழ்கின்றன.அவைகள் பொய்க்கால்கள் மூலமாக இடம் பெயர்கின்றன.



அமீபாக்களின் இனப்பெருக்கம் மிகவும் எளிமையானது.ஒரு அமீபா ஓரளவு வளர்ந்ததும்,சரியான பருவத்திற்கு வந்தவுடன்,இரண்டாகப் பிரிந்து இரண்டு அமீபாக்களாகிவிடுகின்றன.



ஒரு உடல் இரண்டு உடல்களாகின்றன.இரு உடல்களாகின்றது என்கையில்,இரு உயிர்களாகப் பிரிந்து விடுகிறது. இங்கே எதுவும் சாகவில்லை!



அமீபா இரண்டாகப் பிரிவதற்கு அதன் உடலுக்கு வெளியே இருந்து யாருடைய உதவியும் தேவையில்லை.உடலுக்கு உள்ளே ஏற்படும் உந்துசக்தியே போதுமானது.முதலில் இருந்த அமீபா தானே தனியாக இருந்து எந்த குழந்தை அமீபாவையும் ஈன்றெடுக்கவில்லை.முதல் அமீபா தாய் என்றால் இரண்டாகப் பிரிகையில் இரண்டு தாய்களாகவே இருக்கின்றன.
எப்படி பிரிகின்றன என்பதை


இங்கே பாருங்கள்


சூடோபோடியா எனும் பொய்க்கால்களையும் காணலாம்.



அமீபாக்களில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை.ஆம் பால் வேறுபாடு இல்லை.அதுமட்டுமல்ல அமீபாக்களுக்கு வயது ஏறுவதும் இல்லை.அதற்கு மாறாக ஒவொரு தடவை பிரியும் போதும் இளமையடைந்து விடுகிறது.முதுமை என்ற பேச்சுக்கே இடமில்லை.



ஆம்


மாறாத இளமை.


மீண்டும் மீண்டும் இளமை.


ஓராண்டு ஈராண்டுகளல்ல. பத்தாண்டு நூறாண்டுகளல்ல.


ஆயிரம் லட்சம் ஆண்டுகளுமல்ல.கோடிக்கணக்கான ஆண்டுகள் குன்றா இளமை.



[பூமியில் ஆரம்பகால உயிர்கள் தோன்றி 100 கோடி ஆண்டுகளாகின்றன என்று விஞ்ஞானிகள் கதிரியக்க கருவிகளைக் கொண்டு கணக்கிட்டிருக்கின்றனர்.] அமீபாக்கள் முதுமையடைய மறுக்கின்றன. இளமையாக இருப்பதற்காகவே இரண்டாகப் பிரிகின்றன என்றாலும் தவறில்லை.உயிரியல் உண்மையும் அதுவே. (உயிர் வாழ்வதற்கு சாதகமான சூழ்நிலை இல்லாமல் அகால மரணமடைவது என்பதில் அமீபாக்களும் விதிவிலக்கல்ல. இயற்கையின் சீற்றங்களால் ஏற்படும் மடிவுகளை இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.)



முதுமையடைந்து, உடல் ஓய்ந்து, தள்ளாடி மடியும் இயற்கை மரணம் அமீபாவுக்கு இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்கையில் 100 கோடி ஆண்டுகளுக்குமேலான மரணமில்லா பெருவாழ்வு அமீபாக்களுடையது.இரண்டிரண்டாக பிரிந்து பிரிந்து சென்று கொண்டே இருக்கும் தொடர்ந்த உயிர்ப்பிரவாஹம் மட்டுமே இங்கிருக்கிறது.



சரிதானே?

0 பின்னூட்டங்கள்: