பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மதுமிதா - 3

இயற்கை நின்று கொல்லும்...
- மதுமிதா

1. இனிய உலகின்
இயல்பாகி விட்ட
செயற்கைகளுக்கு
இடையிலும்

இன்னுயிர்களை
இனிதாய் வாழவைக்கும்
இயற்கையே!

இன்சொற்கள்,
இன்முகத்துடன்
இனிய வணக்கங்கள்


2. வெள்ளப் பெருக்கில்
அழிந்திடாத வண்ணம்
உயிர் காத்திட
அணை தேவைதான்.

நீரின் இயல்புப் பாதையை
நாம் மாற்றினால்
நம் வாழ்வின் பாதையை
நீர் மாற்றி விடும்.


3. யார் வைத்தது
எதன் மேல்
என்ற பேதமில்லை
நெருப்புக்கு.
நெருப்புக் குஞ்சு
நம் வசமிருந்தால்
அணைத்துவிடலாம்

இல்லையேல்நம்மை
அணைத்துவிடும்
நெருப்பு


4. மென்மையாய் தாலாட்டி
செடி கொடிகளைத்
தலையசைத்த வண்ணம்
தூங்கச்செய்யும்தென்றல்தான்

வேகமெடுக்கையில்
ஊழிக்காற்றாய் உருவெடுத்து
எதிர்படும் எவற்றையும்
தூள் தூளாக்கி
தூக்கி வீசி
உலகையே உலுக்கியெடுக்கிறது

5. பொறுமையின்
பேருருவம்
பூமி

தோண்டத் தோண்ட
தெவிட்டாது அளிக்கும்
சிறந்த விளைச்சல்

உணவாய்
உலோகமாய்
பொன்னாய்

அணுகுண்டாய் சோதனை வெடிக்க
பூகம்பமாய் குலுங்குகிறாள்
அன்னை


6. நிமித்தம்
நித்தம் சொல்கிறது

வானம் அள்ளித்தரும்
வசந்தங்களை
பருவமாற்றங்களை,
வளம் அளிக்கும் பெருமழையை!

இயற்கையின் பாதையை
நாம் மாற்ற
நம் பாதையை
இயற்கை மாற்றிவிடும்.

இரசாயன மழையாய் பொழியும்
மழையின்றி வறட்சியளிக்கும்.

0 பின்னூட்டங்கள்: