பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன் தாஸ் - 3

ரப் நே பனா தி ஜோடி
- மோகன் தாஸ்

ரப் நே பனா தி ஜோடிக்கு அர்த்தம் மிகச்சரியாக கடவுள் உருவாக்கிய தம்பதிகளா என்று சொல்லமுடியாவிட்டாலும் சொல்லவரும் கருத்தென்னவோ அதுவாகத்தான் இருக்க முடியும். ஷாருக்கானிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்தேனா என்று சொல்லத் தெரியவில்லை. நான் இன்னமும் கூட 'ஓம் சாந்தி ஓம்' பார்க்கலை, 'கபி அல்விதா நா கெஹ்னா' பார்த்ததோட சரி. என் ப்ராஜக்ட் ஒருவாறு முடிந்திருக்க காலையில் சர்வரின் மதர் போர்ட், ஹார்ட் டிஸ்க் எல்லாம் ஒட்டுமொத்தமாய் படுத்துக் கொள்ள இணையம் இல்லாவிட்டால் உலகமே இல்லாததாகிவிடும் எங்கள் சூழ்நிலையில் சட்டென்று சினிமாவிற்கு செல்வதென்று முடிவெடுத்ததும் ஓடிக்கொண்டிருக்கும் 'டிரான்ஸ்போர்ட்டர் 3' அல்லது 'ரப் நே பனா தி ஜோடி' இரண்டில் ஒன்றென்று யோசித்து ரப் நே பனா தி ஜோடிக்கு சென்றிருந்தோம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை, இந்தப் படத்தைப் பற்றி படித்த இரண்டு வரிகள் என்றால் நாராயணன் எழுதிய இரண்டு டிவிட்டுகளாகத்தான் இருக்கும். கதை சொல்லும் எண்ணம் கிடையாதென்றாலும், அங்கங்கே முடிச்சுகள் அவிழ வாய்ப்புள்ளது என்பதால் படம் பார்க்க தீர்மானித்துள்ள மக்கள் மாப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடலாம்.

பெரிய அளவில் முடிச்சுகள் எதுவும் இல்லைதான் படத்தில், சாதாரணமான கதை, உள்ளுணர்வுகளுக்காக மட்டும் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் என்பதில் கொஞ்சம் சந்தோஷயம் தான். ஹெவி வைட் சண்டைக்காட்சி இல்லையென்று சொல்லலாம் என்றால்; சுமோ வீரனுடன் ஷாருக்கான் மோதும் காட்சி வந்து மனதை அலைக்கழிக்கிறது அது நகைச்சுவைக்காக என்றாலும் கூட. படத்தினுடைய பெரிய லாஜிக்கல் ஓட்டை மீசை எடுத்த ஷாருக்கானைக் கூட தெரியாமல் விழிக்கும் அவர் மனைவி. ஆனால் இதையும் அவர்கள் இருவருக்குமான பழக்கம் வெறும் டிபன்பாக்ஸ் காலையில் செய்து தருவதிலும் சினிமா தியேட்டரில் சினிமா பார்ப்பதிலும் என்பதால் விட்டுவிடலாமா என்றால் அங்கேயும் என் மனது உதைக்கிறது. கூட வசிக்கும் ஒருவனை அவன் மீசையை எடுத்துவிட்டால் கொஞ்சம் ஃபேன்ஸியா டிரெஸ்ஸிங்க் செய்தால் தெரியாமலா போய்விடும் என்றால் அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட் வேறு வந்து டிஸ்டர்ப் செய்கிறது.

சிம்பிளான லைன், திருமண நாளன்று காதலித்த மாப்பிள்ளை இறந்துவிடுவதால் தன் ஆசிரியரின் மகளின் திருமணத்திற்குச் சென்ற ஷாருக்கானுக்கு அவர் மகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். இதில் பார்த்ததும் காதல் கொஞ்சம் சகிக்கலை என்றாலும் சட்டென்று உள்மனம் 'மச்சி அந்த ஃபிகரைப் பார்த்ததும் உன் மனசு பதறுச்சே அதுதான் லவ்' என்று சொல்லித் தொலைப்பதால் பார்த்ததும் காதல் சாத்தியம் என்று நானும் உணர்கிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் ;). எனக்கு சினிமா பார்த்துவிட்டு வந்துவிடும் fate ஷாருக்கானுக்கு அந்த ஃபிகரை கல்யாணம் செய்து கொண்டு அமிர்தசரஸிற்கு அழைத்துவரும் fate. என்னது 'நான்' fateஐ நம்புகிறேனா என்ற கேள்விக்கு நான் கொண்டுவர நினைத்த மெல்லிய நகைச்சுவை உணர்விற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். 'நான்' என்பது எங்கேயும் பெரிய பிரச்சனை தான், அதை மறைத்துவிட்டு நடமாடுவது பல சமயங்களில் நாம் என்னத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியை தன்னாலே எழுப்பி தூங்க விடாமல் செய்துவிடும். இந்தப் படத்திலும் அப்படி ஒரு 'நான்' பிரச்சனை தான்.

கல்யாணம் செய்து கொண்டு வந்த அனுஷ்கா சர்மா பழைய காதலன் நினைவில் உருகிக் கொண்டிருக்க, திடீர்க்கல்யாணம் என்றாலும் காதல் கல்யாணம் செய்துகொண்ட ஷாருக் - தன் சுய பச்சாதாபத்தில் நெளிந்து கொண்டிருக்க கதைக்கு வருகிறார் அன்பு அண்ணன் வினய் பத்தக். எங்கடா கடைசியில் 'அட்டு' படத்துக்கு வந்திட்டோம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது களேபரம் செய்தது போல் உள்நுழையும் வினய்யின் கதாப்பாத்திரம் அழவேண்டிய இடத்தில் அழுது சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து படத்தை நகர்த்தியிருக்கிறது. இவர் மட்டும் இல்லாவிட்டால் இந்தப் படத்தை பார்த்த சோட்டுக்கு வீட்டிற்குப் போனமா வாங்கிவந்திருக்கும் நாவலில் இன்னொன்றை முடித்தோமா என்று நீண்டிருப்பேன். கட்டிப் போட்ட கதாப்பாத்திரம் வினய் பத்தக், என்றாலும் ஷாருக்கின் கதாப்பாத்திரம் - அந்த மீசை சமாச்சாரத்தை மட்டும் கொஞ்சம் மறந்துவிட்டு - பார்த்தால் செய்திருக்கும் சாகசம் சாதாரணமானுது இல்லை தான். அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜுடன் விக்ரம் வசனம் பேசுவார், மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டரில் வந்துவந்து போகும் விஷயத்தில் பிரம்மாதப் படுத்தியிருப்பார். அப்புறம் நம்ம அனுஷ்கா சர்மா - சொல்லவும் வேண்டுமா அங்கங்கே க்ளவேஜ் காண்பிக்கிறார் அழகாய் சிரிக்கிறார் பப்ளியாய் இருக்கிறார்.(இதென்ன வரவர எல்லா சினிமா ஹீரோயின்களையும் சைட் அடிக்க தொடங்கியிருக்கிறேன் என்று தெரியவில்லை. சர்தாரினியா நச்சுன்னு இருக்கா!)

க்ளைமாக்ஸில் வரும் அந்தப் பகுதி போன்று ஷாருக்கானுக்கு பாதி படம் முழுக்க திறமை காட்டும் வேலை. நன்றாகச் செய்திருக்கிறார், இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். கொஞ்சம் முதுமை தட்டிய உணர்வு மீசை இல்லாத மாதவன் ச்ச ஷாருக்கானிடமும் கூட வருகிறது. நல்ல நடிப்புக்காரன் என்பது அழகாய்த் தெரிகிறது சோகத்திலிருந்து சந்தோஷத்திற்கும் உற்சாகத்திலிருந்து துக்கத்திற்குமாய் அவர் transformation நன்றாய் வந்திருக்கிறது. மீசை இல்லாத ஷாருக்கான் 18 வயது அனுஷ்காவுடன் டான்ஸ் ஆடும் பொழுது அத்தனை விகாரமாய் இல்லை என்று தான் சொல்வேன், இங்கே இதை எழுதும் பொழுது நம் தமிழ்நாட்டு ரசினிகாந்த் விசயகாந்த்கள் நினைவில் வந்து போகிறார்கள் தான்.

தன் மனைவியை பிரமிப்பூட்ட வினய்யுடன் சேர்ந்து ஷாருக் செய்யும் நாடகம் சட்டென்று நீண்டு ராஜ் என்கிற ரோலாக நீளும் பொழுது எழும் சந்தேகம் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் பெயரைச் சொல்வதால் விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது. கடவுள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா உலகில். சாதாரணனாக அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டவனாக ஷாருக்கான், அசாதாரணமானவனாக அனுஷ்கா 'ரொம்பவும் போர்' அடிப்பதால் போகும் நடனக் குழுவில் இணைந்து கொள்ளும் நண்பன் என்று நீள்கிறது கதை. இங்கே தான் முக்கியமான டிவிஸ்ட். கொஞ்சம் கொஞ்சமாய் தன் உள்ளிருக்கும் இன்னொரு பர்ஸனாலிட்டியான 'ராஜ்' ஆக ஷாருக்கான் அனுஷ்காவை கவர்ந்துவிடும் பொழுது வரும் பிரச்சனை தான் முன் சொன்ன அந்த 'நான்' பிரச்சனை. அனுஷ்கா காதலிப்பது அசாதாரணமான ஷாருக்கானைத் தான், உண்மையில் அவளை மிகவும் விரும்பும் - அந்த விருப்பத்திற்காகவே - சாதாரணனில் இருந்து அசாதாரணனாக மாறும் ஷாருக்கானை இல்லை என்பது அவனை கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடுகிறது. இங்கே இந்த 'நான்' பிரச்சனையை இயக்குநர் சரியாகக் கையாண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவனால் தன் இன்னொரு முகத்தை அவளுக்காய் மாற்றிக் கொண்ட முகத்தைக் காட்டி அவளை தன் வசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் தான் மாற்றியதாய் காட்டிக் கொண்டிருக்கும் ஒன்று உண்மையில் தான் இல்லை என்று ஹீரோ நம்புவதும் அதனால் ஏற்படும் அழுத்தங்களும் தான் என்னளவில் இந்த சாதாரண படத்தை கொஞ்சம் அசாதாரணப் படமாக ஆக்குகிறது. தமிழ் சினிமாவிற்கு(பாலிவுட் சினிமாதான் பார்த்தது நான் மறுக்கலை) தெரிந்த க்ளைமாக்ஸ் தான், நாலைந்து பாட்டுகள் இருக்கு. கஜோல், பிபாஷா, ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி ஆடும் ஆட்டம் வேறு உண்டு. ஷாருக்கான் கொஞ்சம் காண்ட்ரவர்ஸியான ரோல்களை செய்துவருகிறார், 'கபி அல்விதா நா கெஹ்னா' ஒரு உதாரணம் இது ஒன்று. அதற்குப் பாராட்டுக்கள். கடவுளைப் பற்றி படத்தில் வரும் வசனங்களை 'இறை மறுப்பாளன்' என்றாலும் கூட அப்படியில்லாத மக்களுக்கு அது எப்படி உணர்த்தப்படும் என்று உணர்ந்து ரசித்தேன். இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே... என்று புலம்பும் ஒரு சாதாரணனின் கதையைப் போல். என் காதலைக் காதலியைக் கடவுள் காண்பித்துக் கொடுப்பார் என்று நம்பும் இந்தப்படம், Mr. and Mrs. Iyer படங்களைத் தொட்டுச் செல்வதாக நான் உணர்கிறேன். இறை மறுப்பாளனாய் அனுஷ்கா, மீசை இல்லை ஷாருக்கானுடன் தில்லி சென்றிருந்தாள் சந்தோஷப்பட்டிருப்பேன், அனுஷ்கா கடைசியில் உண்மையான காதலை கடவுள் மூலமாய் கண்டடைவதால் மட்டுமில்லாமல்.

0 பின்னூட்டங்கள்: