பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன்தாஸ் - அறிமுகம்

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் சிறப்புடன் சென்று கொண்டிருக்கும் பண்புடன் குழுமத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்தைக் கேட்டார் ஆசிப். சின்னதென்ன சுயசொறிதல் என் வழக்கம் தானே, பெரிசாவே செஞ்சித்தர்றேன் என்றூ சொல்லியிருந்தேன். என் சுயசொறிதல் இப்ப,

ஆசிப்பிற்கு எப்பொழுதுமே என் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டென்று நினைத்து வந்திருக்கிறேன், அது உண்மையாகத்தான் இருக்க முடியும் போலிருக்கிறது. கடந்த நான்கைந்து மாதங்களில் நான் அவரிடம் செய்தது போல் ஒன்றை மற்றவர்களிடம் செய்திருந்தால் குறைந்தபட்சம் நானாய் வந்து பேசினால் பேசுவோம் என்று அளவிலாவது விட்டு விலகியிருப்பார்கள். ஆனால் ஆசிப் அந்த குறைந்தபட்ச வருத்தத்தைக் கூட தரவில்லை. ஆனாலும் ஆசிப் கேட்டும் எதையும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு அதை விட பெரியதாய் இருக்கும் என்று உணர்ந்திருப்பாராயிருக்கும். ப்ராஜக்ட் ஓரளவிற்கு முடிந்து கடைசி கட்ட டெஸ்டிங் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஆசிப் பண்புடன் ஆண்டுவிழாவிற்காக எழுதணும் என்று கேட்டதும் மறுக்க முடியவில்லை.

எனக்கும் ஆசிப்பிற்குமான பழக்கம் தொடங்கியது மரத்தடியில் என்று சொல்லலாம், அத்தனை நல்லவிதமாக இல்லை தான். ஆசிப்பிற்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. நான் எழுதிய கதையொன்றிற்கும் தனிப்பட்ட முறையில் எனக்குமாக, ஆதரவாக சிவா அண்ணன் மடல் தட்டிக் கொண்டிருந்த பொழுது எங்கிருந்தோ விழுந்த ஆசிப்பின் நக்கல் மடல் கொஞ்சம் என்னிடம் கோபத்தைக் கொண்டுவந்தது. நான் இப்பொழுதும் நினைத்துக் கொள்வதுண்டு என் கிறுத்துறுவ புத்தி சீண்ட நான் ஆசிப்பிற்கு பதில் மடல் எழுதாமல் போன விஷயத்தைப் பற்றி. என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்குக் கூட அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். பின்னர் என் ignorance ன் விளிம்பில் ஆசிப் இருந்தார். ஆனால் சத்தமில்லாமல் நீண்ட உறக்கத்தில் இருந்த மரத்தடிக் கதவை அப்பொழுதெல்லாம் கதையெழுதி தட்டிக் கொண்டிருப்பதுண்டு. ஆனால் கதவு திறந்த கதைகிடையாது. கதைவைத் திறக்க சில சமயம் ஹைக்கூ எல்லாம் கூட எழுதியிருக்கிறேன். :) அப்படி ஒரு கதவு தட்டலில் ஆசிப்பின் பதில் வந்தது. என்னைப் போல் உங்கள் கதைகளை இன்னும் நிறைய பேர் தொடர்ந்து கொண்டிருப்பார்கள் கவலைப்படாமல் எழுதுங்கள் என்று.

எனக்கு உண்மையில் ஆசிப் கவனித்தாரா? மற்றவர்கள் கவனித்தார்களா என்ற கவலை இப்பொழுது இல்லை ஆனால் அது தந்த உற்சாகம் மெல்ல ஒழிந்து கொண்டிருந்த மரத்தடியில் இருந்து நான் வெளியேறி பதிவுகளில் கால் பதிக்க உதவியது. இதைப் பற்றி நான் இதற்கு முன் எழுதிய நினைவில்லை, எழுதாமல் விட்டதனால் உண்மையில்லை என்ற அர்த்தமும் இல்லை. பின்னர் நாங்கள் பதிவுகளில் அடித்த லூட்டி சாட்டிங்கில் பேசிக்கொண்ட அரசியல்கள் நேரில் சந்தித்துப் பேசிய விஷயங்கள் என நாங்கள் நண்பர்கள். ஒருவாறு என்னை என் பைத்தியக்காரத்தனங்களுடன் ஒப்புக்கொண்ட நல்ல நண்பர் ஆசிப். அவருடைய நகைச்சுவை உணர்வைப்பற்றியும் மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் பழக்கம் பற்றியும் நான் சொல்ல ஒன்றும் புதிதாக ஒன்றும் இல்லை. இந்த micro blogging காலத்திலும் ஒரு குழுமத்தை அதுவும் வெற்றிகரமாக நடத்தி வருவது அத்தனை சுலபமானது கிடையாது தான். பண்புடன் குழுமம் இன்னும் செழிக்க வேண்டுமென்றும் என்னைப் போன்ற இன்னும் பலரை ஆசிப்பும் பண்புடன் குழுமமும் வெளிக்கொண்டு வரும் என்றும் முழு மனதாக விரும்புகிறேன்.

நான் செப்புப்பட்டயம் என்ற பதிவொன்றில் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். உலக சினிமா, தமிழ் இலக்கியம், நாவல் சிறுகதை ஆகியவற்றில் விருப்பம் உண்டு. ஒரு வாரத்திற்கு எழுதித் தரச்சொல்லிக் கேட்டிருக்கிறார். நிச்சயம் என்னால் முடிந்த அளவிற்குச் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: