பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 6

தேசியக் கொடி விவகாரத்தில் தம் இன ஆதிக்கத்தை நிலை நாட்டிய சேனநாயகா அரசு சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்கும் கீழ்த்தரமான குடியுரிமைச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தச் சட்டம் சோல்பெரி கமிஷனின் அடிப்படையில் வாக்குரிமைமை பெற்றிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்த வாக்குரிமையும், தேர்தலில் நிற்கும் உரிமையையும் நிராகரித்தது. ஆறு வருடத்திற்கு முன்னர் இந்திய வம்சாவ்ழைத் தொழிலாளர்கள் இலங்கையை விட்டுப் போகக் கூடாது என்று மன்றாடிய அதே சிலோனில் அந்தத் தொழிலாளர்கள் அந்நியர் ஆயினர்.



தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். அமைச்சரவையில் அங்கம் வகித்த சுந்தரலிங்கம் மசோதாவுக்கு அரசில் அங்கம் வகிக்கிற காரணத்தால் ஆதரித்து வாக்களித்தார். ஆனால் அது தொடர்பான விவாதத்தில் கலந்த்துகொள்ளவில்லை. தமிழ் காங்கிரஸ் சார்பில் S.J.V. செல்வநாயகம் மசோதாவை எதிர்த்துப் பேசினார். சேனநாயகா மலையகத் தமிழர்களுக்கு இழைக்கும் அநீதி என்று முறையிட்டார். தற்போது பூர்வீகத் தமிழர்களை அவர் நேரடியாகத் தாக்கவில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சிங்கள ஆதிக்கத்தை சிலோனின் அதிகரித்து பூர்வீகத் தமிழர்களை மறைமுகமாகப் பாதிக்கும் சட்டமென்று சாடினார்.



மிகவும் உணர்ச்சிசப்பட்ட நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி, "இப்போது நீங்கள் தமிழர்களில் பலவீனமான பிரிவினரை அடிக்கிறீர்கள், மலை நாட்டுத் தோட்டங்களில் குளிரில் நடுங்கியபடி அல்லலுற்று உங்கள் செல்வத்தைப் பெருக்கும் அப்பாவிகளை அடிக்கிறீர்கள். உங்களது அடுத்த இலக்கு நாங்கள்தான். எங்களை அடிக்கும் போது எங்கள் நிலைப்பாடு என்னவென்பதை அப்போது தெரிந்துகொள்வீர்கள். மொழி சம்மந்தமான அடுத்த சட்ட மசோதா வரும் போது அது தெரியும்" என்று கதறி அழுதார்.



யூத மக்களின் குடியுரிமையை ஹிட்லர் பறித்த போது உலகின் எல்லாம் நாகரீக தேசங்களும் அதைக் கண்டித்தன. ஜெர்மனியின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தனக்கிருப்பதாக ஹிட்லர் சொன்னார். இந்த நாட்டின் இன விகிதாச்சாரத்தைத் தீர்மானிக்க எத்தனிக்கும் முயற்சி, அதற்கான இந்தச் சட்டம் எல்லாமே சரியானதா என்ற கேள்வியைக் கருத்தில் நிறுத்த வேண்டுமென்று செனட்டர் நடேசன் வாதிட்டார்.



மசோதா மீதான் இரண்டாம் சுற்று விவாதம் நடந்துகொண்டிருந்த போது வவுனியா தொகுதி சுயேட்சை வேட்பாளரும், அமைச்சருமாகிய சுந்தரலிங்கம் வெளிநடப்புச் செய்தார். சேனநாயகா அதற்கு விளக்கம் கேட்டார். ஆனால் சுந்தரலிங்கமோ விளக்கம் தராமல் மந்திரி பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். (இந்த சுந்தரலிங்கத்திடம்தான் சோல்பெரி பின்னொரு நாளில் தமிழர்களுக்கென்று தனி மாநிலத்தை அரசியல் யாப்பில் பரிந்துரைக்காமல் விட்டது தன் தவறென்று குறிப்பிட்டார்) ஆனால் ஜனநாயம் என்பது எண்ணிக்கை விளையாட்டு. பெரும்பான்மை சிங்களர்களை உள்ளடக்கிய சிலோன் நாடாளுமன்றம் சிரமமில்லாமல் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. விடுதலையின் போது மூன்றில் ஒரு பங்கு என்றிருந்த தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒன்று என்று குறையும் அளவுக்கு அதன் பாதிப்பு இருந்தது.



மலையகத் தமிழரின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது இந்தியாவில் பெரும் கண்டனத்தைச் சம்பாதித்து. 1949 இல் சிலோனின் 61 சதவீத ஏற்றுமதி வருவாயை தேயிலை சாகுபடி ஈட்டித் தந்தது. அதற்குக் காரணமாக இருப்பது மலையகத் தமிழர்கள். அவர்களுக்குப் பெரும் அநீதி இழைத்த போது கண்டனம் எழுவது நியாயமானதே. எனவே எதையாவது செய்து அந்தக் கண்டனத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்திய-பாகிஸ்தான் குடியுரிமைச் சட்ட மசோதா விவாதத்திற்கு வைக்கப்பட்டது. முந்தைய சட்டத்தைப் போலவே இந்தச் சட்டத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. "இந்தியக் குடியுரிமைச் சட்டமல்ல; இது இந்தியரை வெளியேற்றும் சட்டம்" என ஹிந்து பத்திரிக்கை குற்றம் சாட்டியது. எதற்காக?



இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் குடியுரிமை பெறுவதற்கு சில தகுதிகளை இந்தச் சட்டம் நிர்ப்பந்தித்தது. திருமணமானவர்கள் தொடர்ச்சியாக ஏழு வருடமும், மணமாகாதவர்கள் தொடர்ச்சியாக பத்து வருடமும் இலங்கையில் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 8,50,000 பேரில் 1,45,000 பேருக்கு மட்டும் சிலோன் அரசு குடியுரிமை வழங்கியது. ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட பிற மக்களின் விண்ணப்பத்தை நிராகரித்து அந்தரத்தில் விட்டது. அதுவும் அந்த விண்ணப்பப் படிவங்கள் 1962 வரை ஓசையில்லாமல் உறங்கிய பிறகு இந்த அவலம் நிகழ்ந்தது.



ஜி.ஜி.பொன்னம்பலம் மலையகத் தமிழரின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய கயமைத்தனத்தால் வெகுண்டெழுந்த SJV செல்வநாயம் 1949 டிசம்பர் மாதம், "இன்றைக்கு அவர்களுக்கு (மலையகத் தமிழர்களுக்கு) நடப்பது நாளைக்கு நமக்கு நடக்கும்" என்று கூறி தமிழரசுக் கட்சி என்ற பெயரில் தனி அரசியல் இயக்கம் கண்டார்.



போது சிலோனின் கவர்னர் ஜெனரலாக சோல்பெரி பிரபு இருந்தார். சிலோன் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்திருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு மேலே இங்கிலாந்து மகராணியின் சார்பில் பெயரளவில் இயங்குவது கவர்னர் ஜெனரலின் வேலை. அந்தப் பதவியில் இருந்த சோல்பெரி யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தார். அவரைக் கண்டித்து தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவித்தது.



சோல்பெரி வரையறுத்த, 'சிலோனில் ஒரே ஒரு அரசாங்கம், அதனிடம் மட்டுமே எல்லாக் காலத்திலும் குவிந்திருக்கும் அதிகாரம்' என்ற அரசியல் கட்டமைப்பு எப்போதுமே பெரும்பான்மைச் சிங்களர்களை ஆட்சியில் அமர்த்தும். அது ஒரு போதும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிறைவேற்றாது என்று செல்வா உணர்ந்திருந்தார். எனவே கட்சியின் தொடக்க மாநாட்டில் இந்தியாவில் உள்ளது போல - மத்திய அரசாங்கம் ஒன்றும், மாநில அரசாங்கங்களும் உள்ளடங்கிய - சமஷ்டி (ஆங்கிலத்தில் ஃபெடரல்) அமைப்பை உருவாக்கி தமிழர் வாழும் பகுதிகளை சுய நிர்வாகம் செய்யப் போராடுவதே கட்சியின் நோக்கம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் காரணத்தினால் தமிழில் தமிழரசுக் கட்சி என்றழைக்கப்பட்ட இக்கட்சி ஆங்கிலத்தில் ஃபெடரல் பார்ட்டி என்றழைக்கப்பட்டது.



ஃபெடரல் அமைப்பை அவர் கோரியதற்கு முக்கியமான காரணம், தமிழர் வாழும் பகுதியின் நிலங்களில் சிங்களப் பெரும்பான்மை அரசு சிங்களர்களைக் குடியமர்த்தி அந்தப் பிரதேசங்களில் இன விகிதாச்சாரத்தையே மாற்றி வந்ததாகும். மாநில அரசு என்ற ஒன்றிருந்தால் தன் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியங்களை அதுவே பராமரிக்கும். உதாரணமாக கேரளாவின் தரிசு நிலங்களை குஜராத்தி மக்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுக்கும் அதிகாரத்தை டெல்லியில் ஒரு குஜராத்தி பிரதமராக வந்தாலும் இந்தியாவின் ஃபெடரல் அமைப்பு தருவதில்லை. ஆலப்புழா என்ற மலையாளப் பெயர் கொண்ட ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு குஜராத்தி மொழியில் எதாவது ஒரு பெயர் வைத்து குஜராத்திகளைக் குடியமர்த்தி காலப் போக்கில் கேரளாவின் இன விகிதாச்சாரத்தில் குஜராத்திகளின் எண்ணிக்கையைக் கூட்டி, குரஜாத்திகள் குவிந்திருக்கும் கேரளப் பகுதியைத் தனி மாவட்டங்களாகவும், சட்ட மன்றத் தொகுதிகளாகவும் பிரித்து கேரள சட்டசபையில் குரஜாத்திகளை உள்ளே நுழைத்து, அதன் பிறகு கேரளா மலையாளிகளின் பூர்வீக இருப்பிடம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று வாதிட்டால் அது எவ்வளவு அநியாயமாக இருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள். சிங்கள அதிகார வர்க்கம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களை நிகழ்த்திக்காட்டுவதற்கென்றே அவதரித்திருந்தது.



சேனநாயகா ஆட்சியில் 1956 இன் போது சிங்களர் பெரும்பான்மையாக உள்ள Walawe பள்ளத்தாக்கில் நீர்ப் பாசனத் திட்டம் நிறவேற்றச் சொல்லி கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றினால் Empilipitiya and Ambalantota முதலிய சிங்களப் பகுதிகள் புதிய குடியமர்வுகளை உள்வாங்கும். அதை சேனநாயகா விரும்பவில்லை. சிங்களவர்களை கிழக்க்குப் பிராந்தியத்தில் குடியமர்த்தும் ஹிட்லரின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 'தேசத் தந்தை' என்று சிங்கள மக்களால் போற்றப்படும் D.S.சேனநாயகா உண்மையில் இனப் பிரச்சினையின் முக்கியக் காரணமாகிய நில ஆக்கிரமிப்புத் திட்டத்தின் தந்தையாகவே திகழ்கிறார்.



கிழக்குப் பிராந்தியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இடம் பெயருமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். சிலோன் படிப்பளை ஆறு 'கால் ஓயாவாக' (Gal Oya) மாறி தமிழர்களில் இடத்தில் சிங்களர்களைக் கொணர்ந்து அமர்த்தியது. மக்களும், மக்களின் பூர்வீகமான இடங்களுமே சிறுபான்மை இனத்தின் பாதுகாப்பிற்கு ஆதாரமான தூண்கள் என்று கருதிய செல்வநாயம் ஏற்கனவே மலையகத் தமிழர்களின் வாக்குரிமையும், குடியுரிமையும் பறிபோன போது மக்கள் மீதான தாக்குதலில் சிறுபான்மை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் தமிழர் சார்பாகப் பேசும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கண் முன்னே தேய்வதைக் கண்டு அஞ்சினார். மேலும் கால் ஓயா மற்றும் கந்தளைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் குடியேற்றம் துரிதமான போது தமிழரின் பாரம்பரிய நிலப் பரப்பும் தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டார். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற செல்வநாயகம் சுவர் இடிபடுவதைத் தடுக்கத் துணிந்தார். ஆனால், இந்தக் குடியேற்றம் காலப் போக்கில் அதிகமானதே ஒழிய குறைந்த பாடில்லை.



Gal oya திட்டத்தின் மீழ் 1,20,000 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன் வசதி பெற்றது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் அங்கே குடியேறின. அதே நேரம் வெறும் 900 தமிழ்க் குடும்பங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு குடியேறிய தமிழர்கள் 1956 கலவரத்தின் போது விரட்டியடிக்கப்பட்டனர். பிறகு அமைதி திரும்பிய போது தங்கள் நிலங்களுக்கு மீண்டும் வந்து பயிரிட்டனர். ஆனால், அது வெகு நாள் நீடிக்கவில்லை. 1958 கலவரத்தின் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். பல பேரு திரும்பவே இல்லை. திரும்பி வந்து பார்த்தவர்கள் தமக்கென்று ஒதுக்கிய நிலத்தில் சிங்களர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். இத்தகைய இனச் சுத்திகரிப்பிற்குத் தெளிவாகத் திட்டமிட்ட சேனநாயகாவை தேசத் தந்தை என்று சொல்லித்தானே ஆக வேண்டும். நிராதரவாக நின்ற தமிழர்கள் வேறென்ன செய்ய, சிலோன் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து சிங்களத் தலைமை கருணை காட்டாதா என்று ஏங்கி எதிர்பார்ப்பதைத் தவிர?

0 பின்னூட்டங்கள்: