பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 1

ஆணாதிக்கம்!
- லக்கிலுக்


'ஆணாதிக்கம்' என்ற சொல் பயன்படுத்த எளியதாக இருக்கிறது. யாரையாவது திட்டவேண்டுமானால் என்னைப் போன்ற விளிம்புநிலைவாதிகள் (இப்படி ஒரு சொல் இருக்கிறதா?) சென்னைப் பாஷையில் திட்டப்பட வேண்டியவனின் அம்மாவை திட்டிவிடுவோம். அறிவுஜீவிகள் வட்டாரத்திலோ 'அவன் ஒரு ஆணாதிக்கவாதி' என்று சொன்னால் போதும். திட்டப்பட்டவரின் தரம் பாதாளத்துக்கு கீழே போய்விடும்.

பெண்களை மலரென்றும், நிலவென்றும் வர்ணிப்பவனெல்லாம் ஆணாதிக்கவாதியென்றால் உலகின் ஒரு கவிஞனும் இந்த பட்டியலில் இருந்து தப்பிக்க முடியாது. சங்ககால புலவனிடமெல்லாம் சண்டைபோட வேண்டிவரும். விமனைசர் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய ஒரு சொல் இருக்கிறது. காணும் பெண்களிடமெல்லாம் காமம் கொள்ளுபவனை சொல்லுவார்கள். அவன் ஆணாதிக்கவாதியா? விவாதம் செய்தால் அவன் கூட பெண்களை ஆராதிப்பவன் என்று விவாதிக்க முடியும். இரண்டு மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டவர்களை ஆணாதிக்கவாதி என்று சொல்லலாமா? ம்ஹூம்.. இரண்டு மூன்று பெண்களுக்கு வாழ்வு கொடுத்தவர் என்றும் சொல்லலாம்.

ஆணாதிக்கவாதிகள் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் பெண்ணியவாதிகளா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பெண்ணியவாதிகள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது பெருங்கொடுமை. எனக்குத் தெரிந்த பெண்ணியவாதிகள் பலரும் வரதட்சணைக்கு எதிராக குமுதத்தில் கதை எழுதுகிறார்கள். நான்கைந்து பேராக சேர்ந்துக் கொண்டு சேரிக்குழந்தைகளுக்கு முடிவெட்டுகிறார்கள். மங்கையர் மலரிலும், அவள் விகடனிலும் சமையல் குறிப்பு வரைகிறார்கள். ஆண்களை விலங்குகளாக சித்தரித்து ஓவியக்கண்காட்சி நடத்துகிறார்கள். அவ்வப்போது கூடி காபியோடு, ஜாங்கிரி சாப்பிட்டு ஆணாதிக்கத்தை ஒழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். மாதர்சங்கங்களில் 'ஆண்கள் ஒழிக!' முழக்கமிட்டுவிட்டு மாமனாருக்கு மாத்திரை கொடுக்க ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். யாரெல்லாம் பெண்ணியவாதிகள் என்பதிலேயே எனக்கு குழப்பம் இருக்கிறது.

பாருங்கள், ஆணாதிக்கம் - பெண்ணியம் போன்ற சொற்களுக்கு சரியான பொருள்கூட தெரியாத நானெல்லாம் இதைப்பற்றி எழுதிக் கிழிக்க வேண்டியிருக்கிறது, அதையும் நீங்கள் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்? காலத்தின் கோலம்.

தேவ அடியாள் - தெய்வங்களுக்கு அடியாள் என்று வியாக்கியானம் சொன்னார்கள். தாசி இனத்தைச் சேர்ந்தப் பெண்களை நம் சமூகத்தில் இவ்வார்த்தைகளில் அழைத்தார்கள். இது பின்னர் கொச்சையாக 'தேவடியா' ஆக்கப்பட்டது. ஊர்ப் பண்ணையார்கள், கோயில் அர்ச்சகர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்களின் காமப்பசியை போக்க வற்புறுத்தப்பட்டவர்கள் தெய்வங்களுக்கு அடியார்களாம். தமிழில் ஒருவனை மிகத்தரக்குறைவாக திட்டுவதென்றால் 'தேவடியா மகனே!' என்று திட்டுகிறார்கள். தமிழ்சமூகத்தின் அப்பட்டமான ஆணாதிக்கத்துக்கு இது தக்க உதாரணம். திட்டவேண்டியவனை கூட திட்டாமல் அவனது தாயை திட்டச்சொல்லி நம்மை மொழி வற்புறுத்துகிறது. பல பேருக்கு முந்தி விரித்தவளின் மகனே என்பது அச்சொல்லுக்கு சரியான பொருள். தேவடியா என்ற சொல் பெண்பாலை இழிவுபடுத்துகிறதே? இதற்கு இணையாக ஆண்பாலில் திட்ட ஏதாவது சொல்லிருக்கிறதா? ஒரு மொழியே ஆணாதிக்கத்தை வற்புறுத்துகிறது என்றால் அந்த மொழியைப் பேசும் சமூகம் எவ்வளவு கீழ்த்தரமானதாக இருக்க வேண்டும்? பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதில் என்ன தவறு?

சரி, மற்ற மொழிகளில் இதுபோன்ற குறைபாடுகள் இல்லையா? உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் 'Bastard' என்ற சொல்லும் இருக்கிறதே என்று எதிர்வினைக்காக யாராவது கேட்கலாம். Bastard என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் 'The illegitimate offspring of unmarried parents' என்ற பொருளைத் தருகிறது. தேவடியா மகனுக்கும், Bastardக்கும் இடையில் இருக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறதா? Bastard என்ற சொல் திட்டப்படுபவனின் தாயை மட்டுமன்றி, தந்தையையும் சேர்த்து குறிக்கிறது இல்லையா? உடனே யாராவது Bitch என்ற சொல்லை நினைவுறுத்தலாம். Bitch என்ற சொல்லுக்கும் Female of any member of the dog family என்றே பொருள் இருக்கிறது. அதாவது பெண்ணை திட்டமட்டும் இச்சொல்லை பயன்படுத்தலாம். நாயே என்று திட்டுகிறோம் இல்லையா? பெண்ணை நாய் என்று திட்ட Bitch என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம் தமிழைவிட உயர்ந்தது என்று சொல்லுவதற்காக இந்த உதாரணங்களை இங்கே பட்டியலிடவில்லை. ஆங்கிலம் பேசி வளர்ந்த சமூகம் திட்டுவதில் கூட ஆண்-பெண் சமநிலையை கடைப்பிடித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே நம் நோக்கம்.

நம் சமூகமும், மொழியும் ஆணாதிக்கவாதிகளாகவே நம்மை வளர்த்தெடுத்து வருகிறது. இங்கே 'நம்மை' என்று சொல்லுவது பெண்களையும் சேர்த்தே. பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக தான் வளருகிறார்கள், வாழ்கிறார்கள். தங்கள் தந்தைக்கும், கணவனுக்கும், மகனுக்கும் வக்காலத்து வாங்கியே காலத்தை ஓட்டுகிறார்கள். அம்மாவை, தங்கையை, மகளை கேவலப்படுத்துகிறார்கள். 'ஆம்பளைப்புள்ள மாதிரி என்னடி ஆட்டம்?' என்று மகளை மிரட்டுபவர்கள் அம்மாக்கள் தான். குழந்தை பிறந்தால் 'பொட்டப்புள்ள பொறந்திருக்கு' என்று வருத்தத்தோடு பேசிக்கொள்ளுபவர்கள் வீட்டில் இருக்கும் கிழவிகள் தான். 'பொட்ட' என்ற பெண்பால் சொல் கூட ஆண் ஒருவனை கேவலப்படுத்தச் சொல்லப்படும் சொல்லாக மாறிவிட்டது. என்ன கொடுமை பாருங்கள். இக்கட்டுரையில் அடிக்கடி 'திட்டுவது' பற்றியே பேசிக்கொண்டிருப்பது ஏன் என்று நீங்கள் கேட்கக்கூடும். திட்டுவது மாதிரியான லுச்சா மேட்டரில் கூட இவ்வளவு ஆணாதிக்கம் இருக்கிறதென்றால், மற்ற விஷயங்களில் எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பதற்காகத் தான் இவ்வளவு மெனக்கெடுகிறேன்.

கணவனை இழந்தவளை விதவை என்கிறோம். விதவைக்கு ஆண் பாலென்ன? மனைவியை இழந்தவனை என்ன சொல்லி கூப்பிடுவது? அடப்பாவிகளா.. ஆண்களுக்கு இதில் கூடவா சலுகை தருவீர்கள்? கணவனை இழந்தவள் பொட்டு வைக்கக்கூடாது, பூவைக்கக் கூடாது, சிங்காரித்துக் கொள்ளக்கூடாது. மறுமணமா? அதைப்பற்றி நினைத்தாலே அடுத்த ஜென்மத்தில் சோறு கூட கிடைக்காது. மனைவியை இழந்தவனோ எப்போதும் போல இருக்கலாம், தன் குழந்தைக்கொரு தாய் தேவையென்று இன்னொருவளை கட்டிக் கொள்ளலாம். அவளை சல்லாபித்துக் கொள்ளலாம். இங்கே பிறந்த ஒவ்வொருவரும் "த்தூ.." என்று மல்லாக்கப் படுத்துக் கொண்டு, எச்சிலைக் கூட்டி, கொத்தாக காறியுமிழுங்கள். நம் முகத்திலேயே எச்சில் தெறிக்கட்டும்.

பராசக்தி சிவாஜி மாதிரி பத்தி பத்தியாக பேசுகிறாயே, நீ மட்டும் பெண்ணியவாதியா என்று யாராவது கேட்பீர்கள். இல்லை. குறைந்தபட்சம் நான் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை மட்டுமாவது உணர்ந்திருக்கிறேன். நான் ஒரு மொள்ளமாறியாக, முடிச்சவிக்கியாக வாழ்கிறேன் என்றால் 'நான் ஒரு மொள்ளமாறி, முடிச்சவிக்கி' என்பதை உணர்ந்திட வேண்டும். என் அப்பாவுக்கு இந்த உணர்தல் கூட இருந்ததில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கை இயல்பானது, சமமானது என்று தீவிரமாக நம்பியே செத்துப்போனார். என் தலைமுறையில் சிலர் ஓரளவுக்கு 'நாம் ஆணாதிக்கவாதிகள்' என்றாவது உணர்ந்திருக்கிறோம். பெண்களும் கூட தாங்கள் ஆணாதிக்கவாதிகளாக வளர்த்தெடுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால் மட்டும் பெண்ணியவாதியாகி விட முடியாது. அடுத்தடுத்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாகவாவது மேம்பட்டு இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளிலோ, இரண்டாயிரம் ஆண்டுகளிலோ தமிழ் குமுகாயம் ஆண் - பெண் சமநிலையை அடைந்துவிடும் என்று ஆணித்தரமாக நம்புவோம்.

2 பின்னூட்டங்கள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்ல கட்டுரை லக்கி லுக்.

நல்லதந்தி said...

அற்புதமான கட்டுரை!.இதுதான் லக்கி!.