பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 5

அந்த காலத்தில …
அது ஒரு நயா பைசா காலம்…
- தருமி


இப்போ எந்த ஊராயிருந்தாலும், நாட்டு வாழைப்பழம் என்ன விலையிருக்கும்..? ஒரு பழம் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றரைக்குள் இருக்கும். சின்னப் பையனா இருந்தபோது வீட்டில் ஒரு அணா கொடுத்து பழம் வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க; அப்பவே விலையும் சொல்லி விட்டுடுவாங்க: 'அணாவுக்கு நாலும்'பான்; அஞ்சு கேளு'. அதே மாதிரி கடைக்காரர் நாலு சொல்லுவார்; அஞ்சு அப்டின்னு சொன்ன உடனே 'பிச்சுக்கோ' என்பார். அந்த ரேட்ல ஒரு ரூபாய்க்கு 80 பழம்; அதாவது ரூபாய்க்கு 16 அணா; ஒரு அணாவுக்கு நான்கு காலணா; நாலணான்னா கால்ரூபாய்…இப்படியே போகும். அந்த வாய்ப்பாடு இப்ப எதுக்கு? காலணாவில் இரண்டு டைப்: ஒன்று பெரிய வட்டக் காசு, இப்ப உள்ள ரூபாய் சைஸைவிட பெருசா இருக்கும்; இன்னொண்ணு ஓட்டைக் காலணா. சுண்டு விரல்ல மாட்டிக்கலாம். நல்லா வாய்ப்பாடு எல்லாம் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி அரை, கால்,அரைக்கால்,வீசம்…அப்புறம் எங்க காலத்துக்கு முந்தி என்னமோ தம்பிடி கணக்கெல்லாம் சொல்லுவாங்க.. இப்பல்லாம் tables அப்டின்னு சொல்றீங்களே அந்த வாய்ப்பாடெல்லாம் அப்ப நாங்க நல்லா மனப்பாடமா படிக்கணும். அது என்ன கணக்குன்னே தெரியாது. ஒவ்வொரு வாய்ப்பாடும் 16 வரை படிக்கணும்; ஏன் 15 வரை மட்டும் இல்ல அல்லது 20 வரை இருக்கக்கூடாதுன்னு தெரியலை. அதுக்கும் ரூபாய்க்கு 16 அணா என்கிறதுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ? அப்படித்தான் இருக்கணும்.


சரி..சரி.. நாங்க படிச்ச வாய்ப்பாட்டைப் பற்றி எங்களுக்கு என்னென்னனு கேக்றீங்களா? அது சரிதான். ஆனாலும் பாருங்க அப்படிப் படிச்ச அந்த வாய்ப்பாடுகள் நம்ம நாட்டையே எவ்வளவு உசத்திச்சு தெரியுமா? house mate மாதிரி ஒரு சைனாக்கார நண்பரோடு 100 நாள் அமெரிக்காவில இருந்தப்போ, இரண்டு பேரும் சேர்ந்து கடை, கண்ணிக்கு (இந்த "கண்ணி"ன்ற வார்த்தைக்கு யாராவடது அர்த்தம் சொல்லுங்களேன்.)போவோம். அப்போவெல்லாம் இரண்டு பழக்கம் இரண்டு பேருக்குமே. எதை எடுத்தாலும் make எங்கேன்னு பார்ப்போம். நூற்றுக்கு 90 சைனாவாக இருக்கும்; ரொம்ப பெருமையா என்னைப் பார்ப்பார். பிறகு அவரவர் ஊர் காசுக்கு வேல்யூ போட்டுப் பார்ப்போம். நம்ம ஊரு காசுக்கு குத்து மதிப்பா 50-ஆல் பெருக்கிச் சொல்வேன்; அப்ப டாலருக்கு 47-48 ரூபாய்னு ஞாபகம். அவர் ஊர் காசுக்கு 8-ஆல் பெருக்கணும். மனக்கணக்குதான் நமக்கு அத்து படியாச்சே; டக்கு டக்குன்னு சொல்லிடுவேன். ஷாவோ - அதுதான் நம்ம சைனா நண்பர் பேரு - நம்ம சைனா நண்பருக்கு ஒரே ஆச்சரியமா போகும். ஒரு தடவை 58 டாலருக்கு அவரு காசுல எவ்வளவுன்னு கணக்குப் பண்ண அவரு மண்டையை உடச்சிக்கிட்டடு இருந்தார்; நான் போனதும் சட்டுன்னு 448-ன்னு சொன்னேன். 56 X 8 -இதை மனக்கணக்கா சொன்னதும் மனுஷன் அசந்திட்டார். எப்படி இப்படி டக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டார். முதல்ல 50 X 8 ஆல பெருக்கிட்டு, பிறகு 6 X 8 பெருக்கி அதைக் கூட்டிக்கவேண்டியதுதானேன்னு சொன்னேன். தலைவருக்கு ஒண்ணும் புரியலைன்னு தெரிஞ்சுது. அதுக்குத்தான இது வச்சிருக்கோம்ல அப்டின்னுட்டு கால்குலேட்டரை எடுத்து தட்ட ஆரம்பிச்சார். ஆனா, உடனே என்ன சொன்னார் தெரியுமா? 'இதுனாலதான் நீங்க சாஃப்ட்வேர்ல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க' அப்டின்னார். (software ஆளுகளே, உங்க மரியாதையை எவ்வளவு ஏத்தி உட்டுட்டு வந்திருக்கேன்; பாத்தீங்களா?) இப்ப அணா கணக்கில இருக்கிற நல்ல விஷயம் தெரியுதா?


இப்படி இல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்தப்போ அப்பா ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து இந்த காலணா, அரையணா, எல்லாம் போய்ட்டு நயா பைசா வரப்போகுதுன்னாங்க. கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் எல்லாம் இருக்குமானு கேட்டேன். அதெல்லாம் இருக்கும்;ஆனா மற்ற காசு எல்லாம் மாறும்னாங்க. அஞ்சு வாழைப்பழம் வாங்கணும்னா என்ன பண்ணணும் அப்டின்னேன். ஆறு நயா பைசா கொடுக்கணும்னாங்க. அப்போ ஒரு அணாவிற்கு 6 பைசான்னா, ஒரு ரூபாய்க்கு 6 X 16 = 96 பைசாதான் அப்டின்னா, ரூபாய்க்கு 96 பைசாவா அப்டின்னு 'டாண்'ணு கேட்டேன்.(எப்படி நம்ம வாய்ப்பாடு அறிவு?) இல்ல 100 பைசா அப்டின்னாங்க. அந்த நாலு பைசா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்பா சொன்னது ஒண்ணுமே புரியலை.


அரை ரூபாய்க்கு 50 பைசா; கால் ரூபாய்க்கு 25 பைசா வரை சரியா கணக்கு வந்தது. அதுக்குப் பிறகு கணக்கு ரொம்பவே உதைச்சுது. இரண்டணாவிற்கு எத்தனை பைசா என்று கேட்டேன். அப்போ இரண்டு இரண்டணா சேர்ந்தா ஒரு கால் ரூபாய். அப்பா வசமா மாட்டிக்கிட்டாங்க. 12 பைசாவா, 13 பைசாவா? சரி அது போகுது; நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 19 பைசா கேக்கணுமா, இல்லை 18 பைசாவா? அப்பா ரொம்ப பொறுமையா இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்; பிறகு எல்லாமே நயா பைசாவிலதான் இருக்கும்னாங்க. ஆனா, கால், அரை ரூபாய் எல்லாம் இருக்கும்னாங்க. அதுவரை சில கஷ்டம் இருக்கும்னாங்க. எனக்குப் பிடிபடலை. ரூபாய் இருக்கும்; அதிலும் கால், அரை ரூபாய் இருக்கும். ஆனால், மீதியெல்லாம் பைசாவில் இருக்கும். இது எப்படி? அப்ப எப்படி சாமான்கள் வாங்கிறதுன்னு கேட்டேன். கொஞ்ச நாளைக்கு அணாவிலும், நயா பைசாவிலும் இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் எல்லாமே நயா பைசாவாக மாறிடும்னு சொன்னாங்க.


நாளும் நெருங்கி வந்திச்சு. google இந்த மாற்றம் 1957-ல் நடந்ததாகச்சொல்கிறது. அப்டின்னா அப்போ என் வயசு 12-13. அன்னைக்கி நயாபைசா புழக்கத்துக்கு வர்ரதாகச் சொன்னாங்க. எல்லாருமே, பெரியவங்க சின்னவங்கன்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தோம். வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளிதான் போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. காலையிலேயே பெரிய க்யூ ஆரம்பிச்சிருச்சி. நானும் மதியம் வரிசையில் போய் நின்றேன். கையில் இரண்டணா. இரண்டு போஸ்ட் கார்டு மட்டும் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். வரிசையில் நின்று ஏதாவது ஒப்புக்கு ஒரு கார்டோ கவரோ வாங்கிட்டு மீதி சில்லறையோடு வரும் ஆட்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் - அந்தச் சில்லறைக் காசுகளைப் பார்க்க. அடேயப்பா, ஏதோ இந்தக் காலத்தில் படையப்பா படத்தில முதல் நாள் டிக்கெட் கிடைத்த 'பக்தன்' போல சில்லறை கிடைத்தவர்கள் இருந்தார்கள். நானும் என் டர்னுக்கு காத்திருந்து, கையில் சில்லறையுடன் வீடு வந்தேன். பள பளன்னு சதுர அஞ்சு பைசா, வளைவுகளோட இரண்டு பைசா,சின்னதா அழகா பள பளன்னு ஒரு பைசா என சில்லறை. பாக்க பாக்க ஆசையா இருந்திச்சு.


அப்புறம் கொஞ்ச நாள் ரொம்பவே குழப்பம்தான். அப்போதான் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்பு மரியாதை இருந்திச்சே. நாளாக நாளாக இந்த ஒரு பைசாவெல்லாம் இல்லாமலேயே போயிருச்சி; அடுத்து அஞ்சு, பத்து பைசாக்களுக்கு மரியாதை இல்லாம போயிருச்சி. பொதுவாகவே பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடறது எனக்குப் பிடிக்காது. ரொம்ப பாவமான ஆளுகளுக்கு கொஞ்சம் கூடவே போடலாம்; மற்றபடி எல்லோருக்கும் போடறது கிடையாது. உறவினர் ஒருவரோடு வெளியூர் சென்றிருந்த போது அவர் ஒரு 25 பைசாவைப் பிச்சையாகப் போட, அந்தப் பிச்சைக்காரன் உறவினரைக் கன்னா பின்னாவென்று பேச, எல்லோரும் ஏதோ நாங்கள் அந்தப் பிச்சைக்கரானிடமிருந்து எதையோ திருடிவிட்டது போல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி ஆச்சுது 25 பைசா நிலைமை. இப்போவெல்லாம், கால் ரூபாய், அரை ரூபாய் எல்லாமே காணாம போயிருச்சி.


இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, 'இன்னும் 40 பைசா கொடு' என்று கேட்கவும் முடியாமல், விட்டுட்டுப் போகவும் முடியாமல் இருப்பது இன்றைய பிரச்சனை!

1 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் said...

அரையணாவிற்கு நிலக்கடலை ஒரு பெரிய பொட்டலம்.

அது ஐந்து பைசா ஆனபோது ஒரு பொட்டலம் மிக்சர் கிடைத்தது.
பத்தணாவுக்கு அதாவது அறுபத்தைந்து பைசாவா அறுபத்திரண்டு பைசாவா நினைவு இல்லை. நாற்காலியில் உட்கார்ந்து சினிமா பார்க்கலாம்:)
தருமி சார் நானே ஓவரா பழசையே நினைப்பேன். உங்க பதிவுகள் இன்னும் ஒரு சுழலிலேயே இறக்கிவிடும் போலிருக்கிறது.:)