பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - ஆதவன் தீட்சண்யா - 2

மதியம் அக்டோபர் 21, 2008

கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்
- ஆதவன் தீட்சண்யா


வா மகனே வா
வந்தாயே இப்பவாவது துணிஞ்சு
உள்ளே வர எனக்குத்தான் தடை
வெளியே வந்து பார்க்க உனக்கென்ன கேடு?

கோபம் நியாயந்தான் ஆனா
அவங்க கட்டுக்காவலை மீறி எப்படி நான் வரமுடியும்?
நாம சந்திச்சிடக்கூடாதுன்னு தான்
உள்ளே வெளியேன்னு பிரிச்சு வச்சிருக்கானுங்க

பிரிச்சு வைக்கிறதுதானே அவனுங்க குணம்
உம்புத்தி எங்கே பீ திங்கப்போச்சு
எம்புள்ளைங்களப் பாக்கறதைத் தடுக்க
உனக்கென்னடா அதிகாரம்னு
உதைச்சி வீசிட்டு வரவேண்டியதுதானே

தூபப் புகையில கண்ணவிஞ்சு
மந்திர இரைச்சல்ல காதடைஞ்சு
ஊதுபத்தி நெடியில மூர்ச்சையாகி
உன் கால்பட்ட கணத்தில்தான் மீண்டெழுந்தேன்
இனி இங்கே வேண்டாம் எனக் கிளம்பினார் அவனோடு

இப்போதெல்லாம் கடவுள்
கோயில்பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை
தன்பெயரால் நடந்த குற்றங்களுக்கு கழுவாயாய்
மோளமடிக்கவும் முட்டுத்துணி அலசவும்
மாடறுக்கவும் மயானங்காக்கவும் மலமள்ளவும்
நியமம் தவறாமல் போய்க்கொண்டிருக்கிறார்
இன்னமும் கோயிலில் கேட்கிற காண்டாமணிச்சத்தம்
யாருக்காகவென்று குழம்பியபடி.

0 பின்னூட்டங்கள்: