பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - 7

காலநதிக்கரையும் காத்திருப்பும்
- தமிழ்நதி


விதைகள் எல்லாம் முளைப்பதில்லை
விண்மீன் யாவும் ஒளிர்வதில்லை
விடிந்தும் சில நாள் வெளிச்சமில்லை-விழி
கலப்பார் வழிகள் இணைவதில்லை

கால நதிக்கரையோரத்திலே இரு
கால்கள் நனைத்தொரு நாள் நடந்தேன்
ஆழத்திலே ஒரு குரல் கேட்டேன்-மனம்
மீளத் துளிர்த்திட நடை போட்டேன்
(விதைகள் எல்லாம்)

தூர நிலத்தினில் நீயிருந்தாய்-என்
துயரமெல்லாம் உன் தோள் சுமந்தாய்
ஈரவிழியிலே கனவானாய் பின்னோர்
இலையுதிர்காலத்தில் சருகானாய்
(விதைகள் எல்லாம்)

ஆழத்திலே ஓடிடும் நீரானாய்-எந்தன்
அடிமனசுள் நிகழ் போரானாய்
ஊருக்கு உன் முகம் தெரியாது-நம்
உறவெனும் கவிதையும் புரியாது
(விதைகள் எல்லாம்)

ஆயிரம் ஆயிரம் சாத்திரங்கள் -அன்பை
அழித்திட எழுதிய சூத்திரங்கள்
தீயினில் கருகியே போய் விடுமா?-நீ
திரும்பி வரும் ஒரு நாள் வருமா?

0 பின்னூட்டங்கள்: