பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 4

அந்த காலத்தில …
என் முதல் (போன்) காதல்

- தருமி

இது நடந்தது என் 14-15 வயசில. அந்தா இந்தான்னு 50 வருஷம் ஆகிப் போச்சு. அதுவரை நான் பார்த்த சிவாஜி படத்திலெல்லாம் ஒரு கருப்பு போனை கைல தூக்கிக் கிட்டே அவர் ஸ்டைலா நடந்துகிட்டே பேசுறதப் பாத்து அட்லீஸ்ட் நம்மளும் என்னைக்காவது ஒரே ஒரு போன்கால் செய்ய மாட்டோமான்னு ஒரு ஆசை வந்துகிட்டே இருந்துச்சு. போனை காதில வச்சுக்கிட்டு, ஸ்டைலா '..ஆங்... சொல்லுங்க.. சரி..ஓகே.. செஞ்சுடுவோம்' அப்டின்னெல்லாம் பேசணும்னு ஆசையா இருந்திச்சு. அப்படியெல்லாமா அப்பாட்ட சொல்ல முடியும்? பொத்தாம் பொதுவா அப்பாட்ட போன் பேசுறது பத்தி பேசி வச்சேன். 'ஆகட்டும்; பார்க்கலாம்'னு சொன்னாங்க. அப்பல்லாம் அப்பாமார்கள் அப்படி சொல்றதுதான் ஸ்டைல். ஏன்னா, அப்படித்தான் கர்மவீரர் சொல்லுவார். ஆனா அவர் அப்படி சொல்லிட்டு செஞ்சுருவார். ஆனா எங்க அப்பா நான் கேக்கிறதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

நயினா ஸ்கூல் வாத்தியாரா? அப்போவெல்லாம் மக்குப் பசங்கதான் ட்யூஷன் படிக்க வருவாங்க.. அதில் ஒரு பையன் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். நான் 9வது படிக்கும்போது அவன் அப்பாகிட்ட படிச்சான். எங்க பக்கத்துத் தெருதான். தெற்கு வெளி வீதியில அவங்க வீடு. பெருசா இருக்கும். வீட்டுப் படிகூட அவ்ளோ உசரம். நாங்க இருந்ததோ ஒரு ஒண்டுக் குடித்தனம். மூணு குடித்தனத்தோடு இருப்போம். எங்க வீட்டு போர்ஷனுக்குள்ள வர்ரதுக்கே தனித்திறமை வேணும். கிணற்றடி, அதச் சுத்தி எப்பவும் கட்டி நிக்கிற தண்ணி இதையெல்லாம் டாட்ஜ் செஞ்சு வந்தாதான் புழச்சாங்க. நடுவில பாசியில வழுக்கி விழ ஏகப்பட்ட சான்ஸ். நிறைய பேர் 'சர்ருன்னு' வழுக்கி விழுந்து வச்சத பார்க்கணுமே... புதுசா வர்ரவங்களை நான் வீட்ல இருக்கிறப்போவெல்லாம் usherer வேல பார்த்து காப்பாத்திருவேன்.. இல்லாட்டி அவங்க தலைவிதிப்படி நடக்கிறதுதான்..

அப்பத்தான் இந்தப் பையன், நம்ம ஜூனியர் - பேரு நவநீத கிருஷ்ணன் - வந்து சேர்ந்தான். ஒரு நாள் அப்பாவுக்கு நான் போன் பேசணும்னு சொன்னது ஞாபகத்துக்கு வர, நம்ம நவநீதன்கிட்ட 'டேய், ஜார்ஜை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் ஒரு போன் பண்ண வையேண்டா' அப்டின்னாங்க. அவனும் சரின்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். அந்த உசரப் படிக்கட்டைப் பார்த்ததுமே மிரண்டு போய்ட்டேன். வீட்டுக்குள்ள போனா, அது பாட்டுக்கு நீளமா போய்க்கிட்டே இருந்துச்சு. ரொம்பவே அசந்துட்டேன். வீட்டுக்கு நடுவில சோபா அது இதுன்னு இருந்திச்சு. உடம்பு எதிலயும் படாம பாத்துக்கிட்டேன். பணக்காரத்தனத்தைப் பார்த்தா அப்ப இருந்தே ஒரு தயக்கம்; இன்னும் கூட இருக்கு. ஒரு நாற்காலி பக்கத்தில ஒரு மேஜை மேல பள பளன்னு கருப்ப்ப்பா டெலிபோன் உக்காந்திருச்சு. நீங்கல்லாம் நிறைய பேரு பாத்திருக்க மாட்டீங்க.. அதில டயல் ஒண்ணும் இருக்காது. டயல் இருக்கிற இடத்துல ஒரு ஒத்த ரூபாய் சைஸ்ல ஒரு வட்டம்.. அதில அந்த போன் நம்பர் எழுதியிருக்கும். அப்போல்லாம் மூணு டிஜிட்தான் என்று ஞாபகம்.

நவநீதன் போனக் காமிச்சி, 'ம்ம்..போன் பண்ணு' அப்டின்னான். இப்படி சொன்னா நான் என்ன பண்ண முடியும்? என்ன செய்யணும் ஏது செய்யணும்னு எனக்கு என்ன தெரியும். 'இல்ல.. வேணாம்; நான் பண்ணலை' அப்டின்னேன். சரி நான் ரயில்வே என்கொயரிக்கு போட்டுத் தர்ரேன். ஏதாவது பேசு அப்டின்னான். அப்போவெல்லாம் டைரக்ட் ட்யலிங் கிடையாது. என்கொயரிக்குப் போன் செஞ்சு, அங்க நாம யார்ட்ட போன் பேசணும்னு சொன்னா அவங்க கனெக்ட் பண்ணுவாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியும்.

அவனே என்கொயரிக்கு போன் போட்டு, ரயில்வே என்கொயரி அப்டின்னான். உடனே என்கிட்ட கொடுத்தான். நான் கையில வாங்கியதுமே ஹலோ..ஹலோ அப்டின்னேன். 'கொஞ்சம் பொறு; கனெக்க்ஷன் கிடச்ச பிறகு பேசு' அப்டின்னான். சரின்னு காதில வச்சிக்கிட்டு, என் கவனத்தையெல்லாம் அந்த இடது காதில தேக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருந்தேன். என்னமோ சத்தமெல்லாம் கேட்டது மாதிரி இருந்திச்சி. திடீர்னு காதில 'ஹலோ'ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சி. நாம ரொம்ப மரியாதைக்காரங்க இல்லியா ... அதனால நானும் திருப்பி 'ஹலோ' அப்டின்னேன். அந்தப் பக்கம் இருந்து மறுபடி 'ஹலோ' அப்டின்னு சத்தம் வந்திச்சி. நாம மரியாதை கொடுக்கிறதை நிறுத்தலாமோ ... அதனால நானும் மறுபடியும் 'ஹலோ' அப்டின்னு சொன்னேன். 'டொக்' அப்டின்னு சத்தம் வந்திச்சி. பேய்முழி முழிச்சிக்கிட்டு, இருந்தாலும் போனை காதில இருந்து எடுக்காம அப்டியே உறஞ்சு போய் நின்னுக்கிட்டே இருந்தேன். இனிம ஒருவேளை மறுபடி பேசுவாங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஒண்ணையுமே காணோம்.


என் முழியைப் பாத்து நவநீதன் என் கையில இருந்து போனை வாங்கி காதில வச்சுப் பாத்துட்டு 'கட்' பண்ணிட்டாங்க. ஹலோன்னு சொன்னா நீ உடனே ஏதாவது ட்ரெயின் எப்போ வரும்னு கேக்க வேண்டியதுதானே அப்டின்னான். 'அடப்பாவி, இதையெல்லாம் மொதல்லே சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதா; இப்போ சொல்றியே' அப்டின்னு நினச்சுக்கிட்டேன். வேற யார்ட்டயாவது பேசுறியான்னு கேட்டான். 'யார்ட்டயாவது பேசணும்னுதான் ஆசையா இருக்கு; ஆனா யார்ட்ட பேசுறதுன்னு தெரியலையே..' அப்டின்னு மனசுக்குள்ள ஓடுன டயலாக்கை அவனிட்ட எப்படி சொல்றது? அதெல்லாம் வேண்டாம்னுட்டு போன் பண்ற ஆசைய மூட்ட கட்டி வச்சிட்டு வந்ததுதான் என் முதல் போன் காதல்.

அதுக்குப் பிறகு 80-களின் ஆரம்பத்தில் ஒரு நண்பன் தனக்குக் கிடைத்த தொலைபேசி இணைப்பை அவனுக்கு வேண்டாமென்பதால் நீ வாங்கிக் கொள்கிறாயா என்று கேட்டபோது 'போன் வச்சிக்கிற அளவுக்கு நானெல்லாம் பெரிய ஆள் இல்லை; அதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். அதன்பின் தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்துவிட்டு ஆறு ஆண்டுகள் காத்திருந்த பின் 90-களின் நடுவில் வீட்டுக்கு போன் வந்தபோது … அடேயப்பா! என்ன சந்தோஷம்; எல்லோரையும் அழைத்து விருந்து போடாத குறைதான்!


ஆனால், இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...

0 பின்னூட்டங்கள்: