பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - அறிமுகம்

இனிய உறவுகளுக்கு
தீபாவளி நல்வாழ்த்துகள்!!


தீபாவளி என்றால் 'தௌசண்டவாலா' இல்லாமலா?
'தௌசண்டவாலா' என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. கிராமங்களில் சரவெடி என்று சொல்வார்கள். அந்த சரவெடிகளில் சாதாரணமாக 100 அல்லது 200 வெடிகள் மட்டுமே ஒன்றாகக் கோர்த்து இணைக்கப்பட்டிருக்கும். 'தௌசண்ட்வாலாவில் 1000 வெடிகள் ஒன்றாக வெடித்துச் சிதறும். மிகப் பெரும் ஆரவாரமும் உற்சாகமும் பொங்குமிடங்களில் இந்த வெடியை வெடித்துக்கொண்டாடுவது நடைமுறை.

வலையுலகிலும் ஒரு சரவெடி இருக்கிறது - அதன் பெயர்தான் லக்கிலுக்
'நான் சுஜாதாவோ பாலகுமாரனோ இல்லை' என்று தனனைப்பற்றி எளீமையாகச் சொல்லிக் கொள்ளும் லக்கியின் எழுத்துலகம் எளிமையையும் சுவாரஸ்யத்தையும் மட்டுமே முன்னிறுத்திச் செல்வது. வாசகனை விட்டு விலகி நின்று பேசாமல் அவனோடு தோழமையுடன் கதைக்கும் வெகுஜன எழுத்து உத்தியை இலகுவாகக் கையாளும் லக்கிலுக்கை சரவெடிகளின் காலமான தீபாவளியின் போது பண்புடன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இதோ..இனி லக்கிலுக்கின் வார்த்தைகளிலேயே அவரது அறிமுகம்.

லக்கிலுக் - அறிமுகம்!

வணக்கம் தோழர்களே!

'தோழர்' என்று விளிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது. 'அநீதியை கண்டு உனக்கு ஆத்திரம் வருகிறதா? நீயும் என் தோழன்' என்று சேகுவேரா சொன்னாராம். அநீதியை கண்டு உங்களுக்கு ஆத்திரம் வராவிட்டாலும் கூட உங்களையும் தோழர் என்று அழைப்பதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை.

பண்புடன் குழுமம் என்னை தீபாவளிவார நட்சத்திரமாக தேர்ந்தெடுப்பதில் வருத்தம் கொள்கிறேன். காட்சிக்கு நட்சத்திரம் மிகச்சிறியதாக மினுக் மினுக்கென்றிருக்கும். என்னை இவ்வார நிலவாகவோ, சூரியனாகவோ தேர்ந்தெடுத்திருந்தால் மகிழ்ச்சி கொள்வதில் அர்த்தம் இருந்திருக்கும். நிலவும், சூரியனும் உலகத்துக்கு தெரியும் வானை ஆக்கிரமிக்கும் வஸ்துக்கள் என்பதால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.

உள்ளாடை வாங்கக் கூட கடைப்பெண்ணிடம் பேச வெட்கப்படுவேன் என்பதால், அப்பா என்னை அடிக்கடி 'சபக்கோழை' என்று திட்டுவார். இந்த வார்த்தைக்கு சரியான பொருள் எனக்கு தெரியாது. ஆனாலும் புதியதாக அறிமுகமாகிறவர்களிடம் சகஜமாகப் பேச வெட்கப்படுவேன் என்ற அர்த்தத்தில் திட்டுகிறார் என்ற அளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு விபத்தாக இங்கே நான் ஏற்கனவே உறுப்பினர் என்றாலும் இந்தக் குழுமத்தை எனக்குத் தெரியாது. இந்தக் குழுமம் என்றில்லை, எந்த கடிதக்குழுமமும் எனக்கு பரிச்சயமில்லாதது. குழுமம் என்ற வடிவு என்னைக் கவராதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இங்கு யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள் என்றும் தெரியாது. ஆசிப் அண்ணாச்சி, நந்தா, கென், பிரேம்குமார், அண்ணன் என்.சுரேஷ், மோகன் தாஸ் என்று எனக்கு வலையுலகிலும், நேரிலும் அறிமுகமான சிலர் இங்கிருக்கிறீர்கள் என்றளவுக்கு தான் தெரியும். பெரும்பாலானவர்களை தெரியாது என்பதால் புதியதாக என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதில் எனக்கு கொஞ்சம் சங்கோஜம் இருக்கிறது.

எனவே என்னை அறிந்த சில தோழர்களே என்னைப் பற்றிய அறிமுகத்தை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ (கடவுள் நம்பிக்கையைப் போலவே நல்லது கெட்டது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை) மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் மனமகிழ்வேன். இவ்வாரத்தில் முடிந்தவரை என் அறிவுக்குட்பட்ட எனது எழுத்தாற்றலை இங்கே முயற்சித்துப் பார்க்க களம் அமைத்து தந்தவர்களுக்கு நன்றி!

குறிப்பு : இந்த முதல் கடிதத்திலேயே 'எனக்கு', '...றேன்', 'வேன்', 'என்', 'என்னை' என்று ஏகப்பட்ட தனிமனித விளிப்புகள் இருக்கிறதே என்று சலித்துக் கொள்ள வேண்டாம். இன்னமும் 'நான்' என்ற அகந்தையில் இருந்து வெளியே வருமளவுக்கு சித்தனாக 'நான்' மாறிவிடவில்லை என்பதால் குறைகளை பொறுத்தருளவும்.

0 பின்னூட்டங்கள்: