பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 1

தொடர்பு எல்லைக்கும் அப்பால்...!
- எம்.ரிஷான் ஷெரீப்
மாவனல்லை, இலங்கை.



தனிமை
ஓர் ஆலமரத்தைப் போலப்
பெருநிழல் தந்துகொண்டிருந்தவேளை
நீயழைத்தாய்
கைபேசியின் கண்ணாடிச்சதுரம்
மின்னி மின்னி உன் பெயருரைத்தது
ஏதோ ஒரு பாடலின் இசையை
நினைவுருத்திச் சோரும் தருணம்
மனச்சலனங்களேதுமற்று
உன் குரலை அனுமதித்தேன்

மிகுந்த ஆதூரமும் அன்பும் வழியும் குரலில்
எப்படியிருக்கிறாய் அன்பேயென்றாய்

உன்னையும்
தனிமையெனும் பெரும்பட்சி
கொத்திக் கொண்டிருந்தவேளையது ;
உன் சதையில் வலிக்கத் தொடங்கிய கணம்
என் நினைவு கிளர்ந்திருக்க வேண்டும் !

இந்தத் தனிமையும் பேய்ப் பொறுமையும்
நீ தந்து சென்றதுதானே
நான் பதிலுரைக்க
என்ன எஞ்சியிருக்கிறதின்னும் ?

இப்போதைய
எனதெழுத்துக்கள் மட்டும் பாவம்
என் துயரத்தின் சுமைகளைச்
சுமந்தவாறு நாற்திசைகளிலும்
அலைந்து கொண்டேயிருக்கின்றன

எழுத்துக்களும் சோரும் காலம்,
உன் தொடர்பு எல்லைக்குமப்பால்
பாலைநிலம் தாண்டி- எனதான தேசம்
பாதங்களைச் சேர்க்குமென்
தூய இல்லத்தில் நானிருப்பேன்

அன்றுன் குளிர்காய்தலுக்கும்,
தவிக்கும் தாகத்திற்கும்
ஆதியின் மூலமறுக்கும்
அத்தனை சந்தோஷங்களுக்கும்
என்ன செய்யப் போகிறாய் ?

0 பின்னூட்டங்கள்: