பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - கானா பிரபா 3

ஆகாச வாணியும் விவித் பாரதியும்....!
- கானா பிரபா


என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது".
முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல் தான் அது. 16 வருடங்கள் கழிந்தும் என் ஞாபகமூலையின் ஓரமாய் ரீங்காரமிடும் பாடலாக இன்றும் இருக்கின்றந்து. இன்றைய கணக்கில் பினலெக்ஸ் பைப்புக்கள் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கின்றதோ என்னவோ தெரியவில்லை, ஆனால் ஆண்டாண்டு கடந்தும் இந்த வர்த்தக விளம்பரம் மட்டும் என் மனசில் பசையாக ஒட்டிக்கொண்டு விட்டது.


தொண்ணூறுகளில் பிரேமதாச சிறீலங்கா அதிபராக வந்து, வழக்கம் போல ஓவ்வொரு ஆட்சியாளரும் புதிதாக ஆட்சிக்கு வரும் போது செய்யும் ஒப்புக்குச் சமாதானப் பேச்சுவார்த்தைத் தேனிலவை முடித்து வைத்த, யுத்தமேகங்கள் கருக்கட்டிய காலம் அது.



சுன்னாகம் மின் வழங்கியிலிருந்து கொஞ்சக்காலம் சுழற்சி முறையில் மின்சாரம் கிடைத்தது. பின், வழக்கம் போல் அரசின் திறமையான போர் உபாயம் மூலம் தமது அரசுடமைகளையே அழித்துத் திருப்திப்பட்ட வகையறாக்குள் சுன்னாகம் மின் நிலையமும் விமானக்குண்டு வீச்சில் காவுகொள்ளப்பட்டது. மின்சாரம் போனதும் பதிலீடாகாக் கிடைத்தது கடைகளில் பதுங்கியிருந்த எவரெடி (eveready) பற்றறிகள் தான். அந்தக்காலகட்டத்தில் எமது உறவினர் பெரும் வர்த்தகராக இருந்த புண்ணியத்தில் எனது பங்குக்கும் சில பெரிய சைஸ் பற்றறிகளும் சில பென் ரோச் (AA SIZE) பற்றறிகளும் கிடைத்தன. அன்றைய காலகட்டத்தில் என் பள்ளிப்பருவப் பொழுதுபோக்காக கதைபடிப்பதும் பாட்டுக்கேட்பதும் இரு கண்களாக இருந்தன ( ஏன் இப்ப மட்டும் என்ன குறைச்சலே??)


மின்சாரம் இல்லாத அந்தக் காலப்பகுதியில் பாட்டுக் கேட்பதற்கு, எனக்குக் கிடைத்த அந்த பற்றறிகள் தான் உபயோகமாக இருந்தன. ஆனால் எங்கள் வீட்டில் இருந்த வானொலிப் பெட்டியோ 6 பெரிய சைஸ் பற்றறிகளை விழுங்கினால் தான் பாடுவேன் என்று அடம்பிடித்தது. கையிருப்பில் இருந்தவறைத் திணித்து " நீ பாடினால் போதும் சாமி" என்று என் மனசைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.


அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் ஈ.பீ.டீ.பீ காரன்கள் " மக்களின் குரல்" என்ற ஒரு நிகழ்ச்சி செய்துகொண்டு சிறீலங்கா அரசின் சில்லறைத்தனமான பொய்பிரச்சாரங்களைச் செய்துவந்தது என் போன்ற வானொலிப்பிரியர்களுக்கு விசனததை ஏற்படுத்தி இலங்கை வானொலிப் பக்கம் எமது காது போகாமல் பார்த்துக்கொண்டது. லங்கா புவத் லங்கா புழுவத் என்று பெருமையாக அழைக்கப்பட்ட காலமது. இலங்கை வானொலியைப் புறக்கணித்த எனக்குச் செவிக்குணவு படைத்தது சென்னை வானொலி.


சென்னை வானொலியில் இரவு ஏழுமணிக்கு வரும் விவசாய நிகழ்ச்சியில் கூட எனக்கு அப்போது ஈர்ப்பிருந்தது. பாமர ஜனங்களுக்குப் புரியும் வகையில் மொட்டைக்கருப்பன் உள்ளிட்ட அரிசி ஜாதிகளையும், பூச்சி கொல்லி மருந்துகளைப் பாவிக்கும் விதத்தையும் குறு நாடங்களாகவும் ஓரங்க வானொலி நாடகங்களாகவும் படைப்பார்கள். எனக்கு எவ்வளவு தூரம் இது உபயோகமாக இருந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாட்டின் மூலாதாரமான விவசாயப் பெருமக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெருஞ்சேவை செய்திருக்கும் என்பதை அதன் படைப்பாற்றலை இப்போது அசை போடும்போதும் உணர்கின்றேன்.


என் பள்ளிகூட நாட்களில் காலை பள்ளிக்குப் போக முன் 7.33 இற்கு வரும் தென்கச்சி சுவாமிநாதனின் "இன்று ஒரு தகவல்" கேட்பதற்காக விறுவிறெனக் குளித்து முடித்துச் சீருடை அணிந்து காலை ஆகாரமும் உண்டு காத்திருப்பேன்.சுவாமிநாதனும் வழக்கம் போல் ஒரு அறிவுரை சார்ந்த கதையையும் , நடைமுறை யதார்த்தத்தில் வரும் நகைச்சுவைத் துணுக்கையும் பொருத்தமாக இணைத்துப் படக்கென தன் ஸ்டைலில் நிறுத்தும் போது வானொலியின் வாயை என் கைகள் மூட, கால்கள் ஏஷியா சைக்கில் மேல் தாவிப்போகும்.


சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வரும் ஏனென்றால் பகலிலும் விசேடமாகப் பாடல் கேட்கலாமே என்பது தான். காலை 9 மணிக்கு புதுச்சேரி வானொலி நிலையத்திற்கு அலைவரிசை பிடித்தால் போதும் திரை கானம் என்ற பெயரில் முத்தான திரையிசைப்பாடல்கள் வந்து விழும். வானொலிப் பெட்டி என் படிப்பு மேசையில் இருக்கும். அதற்கு அருகில் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமாக என் தலையைச் சாய்த்துவைத்திருக்கமுடியுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக மேசையில் என் தலை கவிழ்ந்திருக்கப் பாடல் கேட்பது என் வழக்கம்.


"உவன் ஒரு இடமும் உலாத்தாமல் வீட்டில இருக்கிறதே போதும்" என்ற நிம்மதியில் குசினிக்குள் (சமையலறை) என் அம்மா.

"புதுச்சேரி வானொலி நிலையம் , திரையிசைப்பாடல்களில் அடுத்துவருவது, ஈரமான ரோஜாவே படத்திலிருந்து இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாட்டியது" …..என் காதை இன்னும் உன்னிப்பாய்த் தீட்டிக்கொண்டு பாடலைக் கேட்க ஆயத்தமாவேன். மனோ " அதோ மேக ஊர்வலம் " பாடலைப் பாடிக்கொண்டிருக்கச் சரணத்தில் "ஆ" என்ற ஹம்மிங்கை சுனந்தா ஆலாபனை செய்ய, குசினிக்குள் ஈரவிறகோடு போராடும் அம்மா எட்டிவந்து " சோக்கான பாட்டு" என்று சொல்லிவிட்டு மறைவார்.


ஞாயிற்றுக்கிழமை கோயிலடிப்பக்கம் இருந்தாலென்ன, சுதா வீட்டுப்பக்கம் யார்ட் விளையாட்டு விளையாடினால் என்ன அந்த இடத்தை விட்டு என்னை நகர்த்தி என் வீட்டு வானொலிப் பக்கம் வரவைப்பது மாலை 4 மணிக்கு வரும் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம். இந்த நேயர்விருப்பம் நிகழ்ச்சிக்கு அடிக்கடி பாடல் கேட்கும் நேயர் பட்டியல் எனக்கும் பாடமாய் ஆகும் அளவிற்கு வந்த நாட்கள் அவை. எமக்கும் பிடித்த பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், திரையில் பார்க்கவும் முடியாத அன்றைய யுத்தகாலத்தில் , இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையின் கடைகோடியில் இருக்கும் சகோதரனோ, சகோதரியோ நான் விரும்பிக்கேட்க விரும்பிய பாடலைத் தாமும் கேட்க அது ஒலிபரப்பாக, அந்த எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சிச் தருணங்கள் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. அடிக்கடி அன்று பாடல் கேட்கும் சென்னை நேயர்கள்

லல்லு, சத்யா, ரேவதி, நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்? இன்னும் சென்னையிலா? இன்னும் அந்த உங்கள் விருப்பம் இன்னும் வருகின்றதா? அதில் இன்னும் பாடல் கேட்கின்றீர்களா என்று கேட்க எனக்கு அல்ப ஆசை.


இன்று வரை என்னை இளையராஜாவின் இசைமோகத்திலிருந்து விலகிவிடாமல் பார்த்துக்கொண்டதில் சென்னை வானொலிக்கும் முக்கிய பங்கு பெற்றிருக்கிறது. தேன் கிண்ணம், நேயர்விருப்பம், திரை இசை, திரை கானம் என்று எத்தனையோ த்லைப்பிட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் வந்தாலும் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர, சில சமயம் அதுவுமில்லாமல் எல்லாமே ராசாவின் ராக ராஜ்ஜியம் தான். மனோஜ் கியானின் இசையில் இணைந்த கைகளில் வரும் " அந்தி நேரத் தென்றல் காற்று, சந்திர போஸின் இசையில் பெண் புத்தி முன் புத்தி படத்தில் வரும் " கொலுசே கொலுசே" பாடல், தேவாவின் இசையில் வைகாசி பொறந்தாச்சு படத்திலிருந்து "சின்னப்பொண்ணுதான்"

போன்ற விதிவிலக்குகள் தவிர, பச்ச மலப்பூவு (கிழக்கு வாசல்), இரண்டும் ஒன்றோடு ( பணக்காரன்), ஈரமான ரோஜாவே படத்தின் அனைத்துப்பாடல்களும், தானா வந்த சந்தனமே (ஊரு விட்டு ஊர் வந்து) என்று ஒவ்வொரு நேயர்விருப்பத்திலும் ராஜா தான் ஹீரோ.


நான் வீட்டில் வானொலி கேட்ட காலத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திண்டுக்கல் வானொலி நிலையம். 92 ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் யதேச்சையாக வானொலியின் அலைவரிசை முள்ளு விலகியபோது கேட்டது அந்த திண்டுக்கல் வானொலி நிலையப் பண்பலை வரிசையின் பரீட்சார்த்த ஒலிபரப்பு. என் அண்ணன் கொழும்பிலிருந்து கொண்டுவந்து பெட்டிக்குள் வைத்திருந்த வாக்மென்னுக்குள் (Walkemen) என்னிடம் அடைக்கலம் புகுந்த மற்றைய பென்ரோச் வகை பற்றறிகளைப் பொருத்திச் சைக்கிளில் போகும் போதும், சிவலிங்க மாமா வீட்டுத் திண்ணையில் இருந்த மாலைப் பொழுதுகளும் திண்டுக்கல் வானொலி நிலையத்தின் துல்லியமான பரீட்சார்த்த ஒலிபரப்பின் பாடல்களே கதியென்று இருந்தேன். எங்களூரில் வாக்மென்னின் வாசனை பிடிபடாத காலமது. என் பாட்டுக்குப் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சுப்பையா குஞ்சியப்பு

" உவனுக்கென்ன காதில குறைபாடோ ?" (செவிட்டு மெஷின்?) என்று எட்டிப் பார்த்துப் போவார்.

தேவாவின் இசையில் "சோலையம்மா" படப்பாடல்கள் முழுவதையும் மூச்சுக்கு முன்னூறு தரம் ஒலிபரப்பி என் சாபத்தை வாங்கினாலும், ராஜாவின் இசையில் பாண்டி நாட்டுத் தங்கத்தில் வரும் " உன் மனசில பாட்டுத்தான் இருக்குது" போட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் திண்டுக்கல்லுக்காரர்கள்.


இடைக்கிடை வந்து போக்குக் காட்டியும், சீன மற்றும் மற்றைய மொழி அலைவரிசை வகையறாக்குள் சிக்கிப் பாடல் பாதி இரைச்சல் பாதியாக வந்து போன தூத்துக்குடி வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு வளர்ந்த காலம் அது. பாடசாலைகளும் ஒழுங்காக இயங்காமல் , நிலைமை சீர்கெட்ட காலத்தில் வந்த "எங்கிருந்தோ வந்தான்"……. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ" என்று மனதுக்குள் நன்றி போட வைத்த நண்பர்கள் இந்த வானொலிகள்.


"நிர்மா... நிர்மா வாஷிங் பெளடர் நிர்மா", "சொட்டு நீலம் டோய்.... ரீகல் சொட்டு நீலம் டோய்", "அஞ்சால் அலுப்பு மருந்து" இத்தியாதி விளம்பரங்களுக்க்குள் வந்து போகும் வானொலி நிகழ்ச்சிகள். "ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது" என்றவாறே சரோஜ் நாராயணஸ்வாமி வந்து போவார்.


விறுவிறுவெனப் படித்து முடித்து சாப்பாட்டு இடைவேளைக்காக நான் தேர்ந்தெடுப்பது இரவு 8 மணியை. அப்போது தான் ஹிந்தி நிகழ்ச்சிகள் முடிந்து தேன் கிண்ணத்தோடு வரும் "விவித் பாரதியின் வர்த்தக சேவை". புத்தம் புதுப் படங்களின் விளம்பரங்களை அரை நிமிடத்துக்குள்ளோ ஒரு நிமிடத்துக்குள்ளோ இலாவகமாக அடக்கிச் செய்யும் அந்த அறிவிப்பாளர்களின் திறமை வெகுசிறப்பானது. வைகாசி பொறந்தாச்சு பட வெற்றி பல புதிய அறிமுகங்களைத் தமிழ்த்திரைக்குக் கொண்டுவந்ததை விவித் பாரதியைக் கேட்டதன் மூலம் ஊகித்துக்கொண்டேன். ஆத்தா உன் கோவிலிலே, தாயம்மா, வசந்த காலப்பறவை, மதுமதி போன்ற விவித்பாரதியின் பட விளம்பரங்கள் நீளும்.

அன்றைய காலகட்டத்துப் படங்களின் இசையமைப்பாளர்களையும் பாடல்களையும், கூகுள் போன்ற உலாவிகள் துணையின்றி என் ஞாபக ப்ளொப்பியில் இருந்து அவ்வப்போது எடுக்க விவித் பாரதிதான் கைகொடுத்தது. விவித் பாரதியின் வர்த்தகசேவை இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.



சிறு புல்லாங்குழல் ஓசை நெருடலோடு இலேசான சிரிப்புடன் எஸ்.பி.பி பாடும் "மண்ணில் இந்தக் காதல் இன்றி" என்ற பாதி வரியோடு வசந்த் இன் "கேளடி கண்மணி" பட விளம்பரம் வரும் போது இந்தப் பாடலை நான் முழுமையாகக் கேட்கும் காலம் எப்போது என்று மனசுக்குள் ஏக்கம் வரும்.

அதையும் மீறி, குலவை ஒலியைப் பெண்கள் இசைக்க,

"குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே " என்று சொர்ணலதா பாடவும், ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இன்

" என் ராசாவின் மனசிலே" என்று சனமற்ற குரலில் ஒரு பெண் அறிவிப்பு வந்து இந்தப் பாடலின் மேல் வெறி கொள்ளவைத்தது. ஆனது ஆகட்டும் என்று அடுத்தமுறை கணக்காய் " குயில் பாட்டு ஓ " என்ற பாடல் ஆரம்பிக்கும் தறுவாயில் என் வானொலியின் வாய்க்குள் கிடந்த ஒலிநாடாவில் பதிவு செய்ய விசையை அழுத்தினேன். அங்கு தான் மோசம் போனேன்,சாதாரண வானொலி கேட்பதை விட கசற் பிளேயரைக் கேட்பதற்கு வலு அதிகம் என்பதால் வானொலி என் பற்றறிகளைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது.


சீமெந்துத் தரையில் பற்றறிகளை எறிந்து விட்டு மீண்டும் எடுத்துப் பாவித்தால் அதிகவலு அந்த பற்றறியில் ஏறி வானொலியும் பாடும் என்று பக்கத்து வீட்டு விஞ்ஞானி சுரேஸ் சொன்னான். அப்படியே ஆகட்டும் என்று அதன்படியே செய்து வானொலியின் முதுகில் பற்றறிகளைப் பொருத்தி கசற்றை மீண்டும் போட்டால் " குயில் பாட்டு ஓஓஓ" அப்படியே சுவர்ணலதாவின் குரலை ஓவர்டேக் செய்து கோழி கூவுது படத்தில் அண்ணே அண்ணே பாடிய சாமுவேல் கிறப் பின் குரலாகத் தாவியது. இனிமேல் என் வானொலி கேட்கும் வேலை அவ்வளவு தான் என்று மனமொடிந்து பற்றறிகளை வீசியெறிந்தேன்.


அப்போது புதுமையான மின்பிறப்பாக்கியோடு சித்திமகன் சுதா வந்த கதை இன்னொரு சந்தர்ப்பத்தில்

0 பின்னூட்டங்கள்: