துடுப்புகளற்ற படகு
- ஹரன் பிரசன்னா
அமைதியற்ற நதியொன்றில்
பயணம் செய்து வந்தவன்
படகுகளை தந்துவிட்டுச் சென்றான்
மேலெங்கும் நீர் தெறித்துக் கடக்க
துடுப்புகளை வாங்க மறந்தேன்
நான் பயணத்தில் எதிர்கொண்ட பேரலைகள்
என்னை நனைத்துவிட்டுச் சென்றன
கரை மீள
படகுகளைப் பெற்றுக்கொண்ட புதியவன்
மறக்காமல் துடுப்புகளைக் கேட்டான்
ஆற்றின் ஆரவாரத்தை
துடுப்புகளின்றி எதிர்கொண்டவன் சொன்னேன்,
படகுகளும் அவசியமற்றவை.
குழந்தையின் வீடு
- ஹரன் பிரசன்னா
வீட்டின் கதவைத் திறந்ததும்
ஓடி வந்து கட்டிக்கொள்கிறது குழந்தை
ரத்தம் கேட்டு அலைந்துகொண்டிருந்த
பூனையொன்று ஜன்னல் தாண்டி ஓட
ஒரு மூலையில் பூக்கிறது
அதிமணம் கொண்ட மலர்
குழந்தை
முத்தமிடுகிறது
கழுத்தைக் கட்டிக்கொள்கிறது
காரணமே இன்றி சிரிக்கிறது, குதிக்கிறது.
அதன் நெற்றியை மெல்ல வருடுகிறேன்
குழந்தையையும் படைத்து
மிருகத்தையும் படைத்தவன்
குரூரனாக இருந்தாலும்
ஒரு மிருகம்
ஒரு குழந்தையை
பெற்றுக்கொள்ளுமாறு படைத்தவன்
கடவுளாகத்தான் இருக்கமுடியும்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - 6
மதியம் நவம்பர் 29, 2008
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment