பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நாக. இளங்கோவன் - 7

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை (பகுதி - 3)
- நாக. இளங்கோவன்


நாம் செய்ய வேண்டியதென்ன?

நாமெல்லாம் எழுந்து போய் இரயில் மறியல் செய்யப் போகிறோமா?
நாமெல்லாம் பட்டினிப் போராட்டம் செய்ய வேண்டுமா?
நாமெல்லாம் தார்ச்சட்டியைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாகச்
சென்று தமிழ் அல்லாதவைகளை அழிக்க வேண்டுமா?
அதெல்லாம் எதுவும் தேவையில்லை.
1) பிழைப்பிற்காக கற்ற கல்வி ஆங்கிலம்.
பிழைப்பதும் ஆங்கிலத்தால்தான். ஆனால் அந்த ஆங்கிலத்தை
அலுவலகத்தோடு வைத்துக் கொள்ள நம்மால் முடியாதா?

2) அலுவகம் சார்ந்த பணிகளில் தமிழுக்கு எதிர்காலத்தில்
இடம் முழுக்க இருக்கும் என்றாலும், தற்காலத்திலே
முடியாத சூழல் தனியார் துறைகளிலும் வெளிநாடுகளிலும் இருந்தாலும்
தனிப்பட்ட எழுத்துக்களை தமிழில் எழுத முடியாதா?

3) நமது நண்பர்கள், உறவுகளிடம் தமிழில் பேச முடியாதா?

4) நம்மால் செய்ய முடிந்த இவற்றை நாம் செய்யாததற்கு
அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்க்க வேண்டுமா?
நமக்கு நேர்மை வேண்டாமா?

5) மிடையங்கள் தமிழைக் கொலை செய்கின்றன என்பதால்
நாமும் கொலை செய்ய வேண்டுமா?

6) எந்தத் தொலைக்காட்சிகளோ கேடு கெட்ட
தமிழைப் பேசினால் நமக்கென்ன? நாம் என்ன அந்தத் தொலைக்காட்சியோடு திரும்பப் பேசுகிறோமா?
இல்லையே!!

அப்புறம் ஏன் அதைத் தடைக்கல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

7) எழுத்தாளர்கள் எல்லாம் செய்யும் கலப்புத் தவறுகளை, கவிஞர்கள் செய்யும் தவறுகளை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

8) தமிழ் பேச சில பேருக்கு நாணமாக இருக்கிறது இன்றையச் சூழலில்.
அந்த நாணத்தை அவர்கள் போக்கிக் கொள்வது எளிது.

9) கலப்புத் தமிழுக்கு ஞாயம் கற்பிக்கிற ஆள்களையும், ஆங்கிலம் சரளமாகப் பேசுபவர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.
அவர்களிடம் சேக்சுபியரைக் கொண்டு கொடுங்கள். தாகூரைக் கொண்டுபோய்க் கொடுங்கள். தவிப்பார்கள் படிப்பதற்கே!
அவ்வளவு ஏன் கணித்துறையிலே இருக்கிற சில பகட்டுப் பேர்வழிகளிடம் கொண்டு போய் சி.யே.டேட் நூலைக் கொடுங்கள்! பூச்சின் நூலைக் கொடுங்கள்! எத்தனை பேரால் வேகமாகப் படிக்க முடிகிறது பாருங்கள்? வேடிக்கையாக இருக்கும்.

ஆங்கிலத்திலும் அடிப்படைப் புலமை இல்லாமல், தமிழிலும் அடிப்படை இல்லாமல் ஒரு வித பித்துக்குளித்தனத்தில் இந்தக் குமுகம் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் மாறுவதற்கும், உணருவதற்கும் தக்க வேளை தற்காலமே!
அதைத்தான் போரற்ற குமுக நிலையும், முன்னேறிய கல்வி நிலையும்
காட்டுகின்றன.

"தமிழ் என்ன செய்தது என்று கேட்காதே!
தமிழுக்கு என்ன செய்தோம்? என்று எண்ணிப்பார்"
விடையாக, நல்ல தமிழ் எழுதினேன் என்று உள்ளம்
சொல்லுமானால் அதுவே உயர்ந்த தமிழ்ப்பணி. அதுவே
தேவையான பணியும் கூட"

0 பின்னூட்டங்கள்: